Search This Blog

Friday, August 19, 2011

ஒபாமாவின் இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்கு ஒபாமா தயாராவதாகவே அவர்கள் கருதுகிறார்கள். 2007-08 பொருளாதார மந்தநிலைக்குப் பின், பெரிய மீட்பராக அவர்கள் பார்த்த ஒபாமா... இப்போது இல்லை. கடந்த மாத இறுதியில், நாட்டின் கடன் உச்சவரம்பைத் தீர்மானிக்க எதிர்க் கட்சியினருடன் நடத்திய பனிப் போரின் முடிவில், தனக்கு விருப்பம் இல்லாத உடன்பாட்டுக்கு ஒபாமா வந்தபோதே, அவர் மீது அமெரிக்கர்களுக்கு இருந்த மிச்ச நம்பிக்கைகள் சிதைந்துவிட்டன. வரலாற்றிலேயே முதல்முறையாக, சர்வதேசக் கடன் மதிப்பீட்டுத் தரச் சான்று நிறுவனமான 'ஸ்டாண்டர்டு அண்டு புவர்ஸ்’, அமெரிக்க அரசின் கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதியை 'ஏஏஏ’ - மிகவும் பாதுகாப்பானது என்கிற நிலையில் இருந்து, அடுத்த நிலையான 'ஏஏ+ ’-க்குத் தரம் இறக்கிய பின்னர், ஒபாமாவின் பிம்பம் சுக்குநூறாகச் சிதறிவிட்டது. அடுத் தடுத்து, பங்குச் சந்தைகளில் தொடரும் வீழ்ச்சிகள் அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான காலத்தைக் கையாண்ட அதிபராக ஒபாமாவை மாற்றிக்கொண்டு இருக்கின்றன.

கடன்தான் பொருளாதாரம்!


லகுக்கு 'கடன்தான் பொருளாதாரம்’ என்கிற போக்கை அறிமுகப்படுத்தியது அமெரிக்காதான். சந்தைப் பொருளாதாரமே சிறந்தது; மக்களைச் சேமிக்கவைப்பதைவிடவும் அவர்களைச் செலவழிக்கத் தூண்டுவதே சந்தைப் பொருளாதாரத்தின் ஜீவநாடி என்கிற சித்தாந்தத்தை உருவாக்கியதும் அமெரிக்கர்கள்தான். இப்போது அதற்கான விலை கொடுக்கிறார்கள். அமெரிக்காவின் இப்போதைய கடன் 14.3 லட்சம் கோடி டாலர்கள். நாடு திவாலாகிவிடாமல் நெருக்கடியைச் சமாளிக்கத் தன்னுடைய கடன் வரம்பை மேலும் 2 லட்சம் கோடி டாலர்கள் அதிகரிப்பது என்றும் செலவுகளை 3 லட்சம் கோடி டாலர்கள் குறைப்பது என்றும் இப்போது முடிவு எடுத்து இருக்கிறது அமெரிக்கா. செலவுக் குறைப்பு என்கிற வார்த்தையின் மறைமுகப் பொருள், மக்கள் நலத் திட்டங்கள், சலுகைகள், மானியங்கள் ஆகியவற்றில் கைவைப்பதுதான். 

இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்க அமெரிக்காவுக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தன: ஒன்று... வரிகளை உயர்த்தி, வருவாயைப் பெருக்கி செலவுகளைச் சமாளிப்பது. மற்றொன்று, மக்களுக்கான செலவுகளைக் குறைப்பது.முதல் வழி, பெரு நிறுவனங்களை - செல்வந்தர்களைப் பாதிக்கும். இரண்டாவது வழி, சாமானிய மக்களைப் பாதிக்கும். ஒபாமா முதல் வழியைத் தேர்ந்தெடுத்து இருந்தால், அது சரியானதாக இருந்துஇருக்கும். ஆனால், அவரால் அந்த முடிவை எடுக்க முடியவில்லை. அவரால் மட்டும் அல்ல; எந்த அமெரிக்க அதிபராலும் அந்த முடிவை எடுக்க முடியாது. காரணம், அரசியலைப் பின்னிருந்து இயக்கும் சந்தைப் பொருளாதாரம் - பெரு நிறுவன முதலைகள். சந்தைப் பொருளாதாரத்தின் மிகப் பெரிய அபாயம் இது. ஒபாமாவின் வீழ்ச்சி உலகுக்குச் சொல்லும் செய்தி இதுவே!

தொடரும் வீழ்ச்சிகள்


ந்தைப் பொருளாதாரத்தின் அடுத்த அபாயம்... ஒரு நாட்டின் பொருளாதார வீழ்ச்சி அந்த நாட்டுடன் மட்டும் முடிந்துவிடாது. அமெரிக்கா 'ஏஏஏ’ தகுதியை இழந்த அடுத்த ஓரிரு நாட்களில், பிரான்ஸும் அந்தத் தகுதியை இழக்க நேர்ந்தது ஓர் உதாரணம். 

கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக - 2007-08 பொருளாதார மந்தநிலை உட்பட - வெற்றிகரமாகச் சமாளித்த சீனா, இப்போதைய அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியை எப்படிச் சமாளிப்பது என்று தீவிர யோசனையில் இருக்கிறது. அமெரிக்கா வுக்கு அதிக அளவில் கடன் கொடுத்து இருக்கும் நாடுகளில் முதல் இடத்தில் இருக்கிறது சீனா. பிரச்னை அதுவல்ல... சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவிகிதம் ஏற்றுமதியை நம்பித்தான் இருக்கிறது.எப்போதுமே ஏற்றுமதியை நம்பி இருக்கும் நாடுகளின் முதல் நண்பன் அமெரிக்கா. அடுத்து, ஐரோப்பிய நாடுகள். இப்போது அங்கும் நிலைமை சரியில்லை. ஐரோப்பிய நாடுகளின் இன்றைய நிலைக்கு சிறந்த உதாரணம் கிரேக்கம். கிரேக்கத்தின் கடன் தொகை 25 லட்சம் கோடி. அந்த நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிட்டால், ஒன்றரை மடங்கு இது. கிட்டத்தட்ட கிரேக்கம் திவாலாகிவிட்டது. ஆனால், ஐரோப்பிய நாடுகள் கடன் மேல் கடன் கொடுத்து கிரேக்கத்தைக் காப்பாற்றிக்கொண்டு இருக்கின்றன. கிரேக்கம் வீழ்ந்தால், அடுத்த சில நாட்களில் ஸ்பெயினும் போர்ச்சுகலும் வீழும். தொடர்ந்து, அத்தனை ஐரோப்பிய நாடுகளும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கும். 'யூரோ’ மதிப்பை இழக்கும். இவற்றை எல்லாம் தவிர்ப்பதற்காகவே, கிரேக்கத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு இருக்கின்றன ஐரோப்பிய நாடுகள். ஜப்பானோ பூகம்பம் தந்த அடியில் இருந்து இன்னமும் மீளவில்லை. ஆக, உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியில் சரிபாதி மதிப்பைக்கொண்டு இருக்கும் அமெரிக்க - ஐரோப்பிய - ஜப்பானியப் பொருளாதார வீழ்ச்சி பெரும் சமூகப் பிரச்னையாக உருவெடுக்கும் என்று அஞ்சுகிறது சீனா. 

பொருளாதார நிபுணர்களும் இதைத் தான் சொல்கிறார்கள். ''இப்போதைய தலையாய பிரச்னை நாடுகளின் கடன் அல்ல. பரவலான வளர்ச்சி குறைந்துகொண்டே இருக்கிறது. பெரு நிறுவனங்கள், பெரு முதலாளிகள் மட்டும் வளர்கிறார்கள். மக்களின் விரக்தி அதிகமாகிறது!'' என்கின்றனர் அவர்கள். 

லண்டன் ஏன் பற்றி எரிந்தது? 

மீபத்திய லண்டன் கலவரம் இதை உறுதிப்படுத்துகிறது. ஓர் ஆப்பிரிக்க கரீபியன் - கள்ளத் துப்பாக்கி விற்பவன் - சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தொட்டன்ஹாமில் தொடங்கிய கலவரம் பல இடங்களுக்கும் பரவக் காரணம், காவல் துறையினர் மீதான கோபம் மட்டும்தான் என்று யாரும் நம்பவில்லை. கலவரத்தைப் பயன்படுத்தி, மக்கள் கடைகளில் புகுந்து கொள்ளை அடித்தார்கள்; தங்களுக்குப் பிடித்தமான உணவுப் பொருட்களில் தொடங்கி காலணிகள் வரை. யாருக்கும் பயப்படாமல் - முகத்தை மறைத்துக்கொள்ளாமல் - தங்களுக்கு உடைமையானதை எடுத்துச் செல்வதுபோல உரிமையோடு எடுத்துச் சென்றார்கள். வேலைவாய்ப்பு இன்மையும் வறுமையும் சூழ்ந்த ஆப்பிரிக்க நாடுகளின் வெறுப்பையும் அதிருப்தியையும் ஞாபகப்படுத்துகின்றன லண்டன் கலவரங்கள்! 

காத்திருக்கும் அபாயம் 

ந்தியா இப்போது சந்தைப் பொருளாதாரத்தை வேகமாக சுவீகரித்துக்கொண்டு இருக்கிறது. இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 20 சதவிகிதம் ஏற்றுமதியை நம்பி இருக்கிறது. அமெரிக்க நெருக்கடி இந்தியப் பங்குச் சந்தையில் ஒரு வாரத்துக்குள் பல்லாயிரம் கோடிகளை முழுங்கி இருக்கிறது. 75 சதவிகிதப் பங்குகள் வீழ்ந்து இருக்கின்றன. ''நமது பொருளா தாரம் மிகமிக வலுவாக இருக்கிறது!'' என்று மீண்டும் மீண்டும் அறிவித்துக்கொண்டே இருக்கிறார் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. ''சில பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும்!'' என்று சொல்கிறார் பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ராவ். விரக்தியில் இருக்கும் ஏழை இந்தியன், நாளை என்ன செய்வான்? உலகம் காட்டி வரும் உதாரணங்களைப் பாருங்கள்! 

1 comment:

  1. அமெரிக்க பொருளாதர நிலைமையையும்
    அதைச் சார்ந்த பொருளாதார தாக்கங்களையும்
    மிகத் தெளிவாக விளக்கிப் போகும் பதிவு அருமை
    இத்தனை தெளிவாக பிரபல பத்திரிக்கைகள் கூட
    எழுதுவதில்லை
    தரமான பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete