Search This Blog

Wednesday, July 22, 2015

வருமான வரி கணக்குத் தாக்கல்...

கடந்த 2007-ம் ஆண்டுக்குமுன் வருமான வரி ரிட்டர்ன் படிவம் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் மாற்றப்படும். இப்போதெல்லாம் ஆண்டுதோறும் புதுப் படிவம் என்றாகிவிட்டது. கூடவே, படிவங்களில் கூடுதல் விவரங்களைத் தரச்சொல்வதும் புதிய வாடிக்கையாக மாறியிருக்கிறது. 


கடினமான வருமான வரி கணக்குத் தாக்கலை எளிமையாக்கி மூன்று பக்கத்துக்குள் வரி கணக்குத் தாக்கலை முடித்துவிடலாம் என ஜூன் மாதம் மத்திய அரசு அறிவித்தது. மேலும், வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான வழக்கமான கெடு தேதியை ஜூலை 31-லிருந்து ஆகஸ்ட் 31-க்கு நீடித்தது.

வருமான வரி கணக்குத் தாக்கலின்போது குறிப்பிட வேண்டிய விவரங்கள் மற்றும் படிவங்களில் மத்திய அரசு புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. முதலில், வரி கணக்குத் தாக்கல் விவரங்களில் கொண்டுவரப்பட்டிருக்கும் விவரங்களைப் பார்ப்போம்.

வெளிநாடு பயண விவரம்!

வரி கணக்குத் தாக்கல் செய்யும்போது வரிதாரரின் வெளிநாட்டுப் பயணம் குறித்த விவரங்கள், வங்கிக் கணக்கு இருப்புத் தொகை போன்ற வற்றைக் குறிப்பிட வேண்டும் என ஏப்ரலில் மத்திய அரசு சொன்னது.

இதற்கு வரிதாரர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதால், வெளிநாட்டு பயண விவரங்களை வரி கணக்குத் தாக்கல் படிவத்தில் குறிப்பிடத் தேவை இல்லை என மத்திய அரசு ஜூன் மாதத்தில் தெளிவுப்படுத்தியது. இதற்குப் பதிலாக, பாஸ்போர்ட் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதும் என ஜூனில் அறிவித்தது.

வெளிநாட்டில் சொத்து!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐகள்) வரி கணக்குத் தாக்கல் படிவத்தில், கடந்த 2011-12-ம் ஆண்டுக்குமுன் வெளிநாட்டில் சொத்து இருந்தால், அதன் விவரத்தைக் குறிப்பிட வேண்டும் என்று இருந்தது. மதிப்பீடு ஆண்டு 2015-16-ல் அந்த வெளிநாட்டு சொத்து மூலம் ஏதாவது வருமானம் வந்தால் மட்டுமே அதுபற்றி வரி கணக்குப் படிவத்தில் குறிப்பிட்டால் போதும் என்று சலுகை அளிக்கப் பட்டிருக்கிறது.

அதே நேரத்தில், இந்தியர்களுக்கு வெளிநாட்டில் சொத்து இருந்தால், அதன் மூலம் வருமானம் வரவில்லை என்றாலும்கூட, வரி கணக்குப் படிவத்தில் குறிப்பிட வேண்டும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

வங்கிக் கணக்கு விவரங்கள்!

ஏப்ரல் மாதத்தில் வெளியிடப் பட்ட வருமான வரிப் படிவத்தில் மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, (நிதியாண்டு இறுதி) வங்கிக் கணக்குகளில் இருக்கும் தொகையைக் குறிப்பிட வேண்டும் எனச் சொல்லப்பட்டு உள்ளது. இதற்குப் பதிலாக, இப்போது வங்கிக் கணக்கு எண்கள் (சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்கு எண்), ஐஎஃப்எஸ் கோடு எண்ணை படிவத்தில் குறிப்பிட்டால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி, வரி கணக்குத் தாக்கல் படிவங்களில் கொண்டு வரப்பட் டிருக்கும் மாற்றங்களைப் பார்ப்போம்.

வரிக் கணக்குப் படிவங்களில் மாற்றங்கள்!

ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் இருப்பவர்களுக்கு வரி கணக்குத் தாக்கல் செய்வதில், இந்த ஆண்டு சில சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு பிசினஸ் அல்லது நிபுணத்துவ வருமானம் அல்லது மூலதன ஆதாயம் எதுவும் இல்லை என்றால் அவர்கள் புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள ஐடிஆர்2ஏ (ITR2A) படிவத்தைப் பயன்படுத்த வேண்டும். அதில் மூலதன ஆதாயங்கள் (கேப்பிட்டல் கெயின்ஸ்) குறித்து எதுவும் குறிப்பிடத் தேவை இல்லை.

இதுதவிர, ஐடிஆர் 2 (ITR2), ஐடிஆர் 2ஏ (ITR2A) படிவங்களில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இவை மொத்தமே மூன்று பக்கங்களை மட்டுமே கொண்டிருக்கின்றன. இதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்கள் வரிதாரர் எளிதாக நிரப்பக்கூடியதாக இருக்கிறது. இதற்குமுன், இந்தப் படிவங்கள் எல்லாம் 14 பக்கங்களைக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 
‘‘ஐடிஆர் (ITR) 1, 2, 2A, 4S, 3, 4, 5, 6, 7 என்ற படிவங்களில்தான் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வருடம் சில முக்கிய மாற்றத்தோடு, நான்கு ஐடிஆர் 1, 2, 2A மற்றும் 4S படிவங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மாத சம்பளம் மட்டுமே இருக்கிறவர்கள் 4 பக்கங்களைக் கொண்ட ஐடிஆர்1 (சஹாஜ்) படிவத்தில் வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். வணிக வருமானம் கொண்டவர்களுக்கு ஐடிஆர் 4 எஸ் (சுகம்) கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டு (AY 2015-16) ஏழு பக்கங்கள் கொண்ட ஐஆர்டி-2A புதிய ரிட்டர்ன் படிவத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இதை வியாபாரம் அல்லது தொழில் இல்லா வருமானம் மற்றும் மூலதன ஆதாயம் (Capital Gains) இல்லாத நபர்கள் மற்றும் வெளிநாட்டு சொத்து இல்லாதவர்கள் பயன்படுத்தலாம்ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் மூலம் வருமானம் மற்றும் லாட்டரி/ரேஸ் வருமானம் உள்ளவர்கள் இந்தப் படிவத்தை பயன்படுத்த வேண்டும்.

ஆதார் (Aadhar) எண் உள்ளவர்கள், அதை ரிட்டர்ன் படிவத்தில் தெரியப்படுத்தலாம். ஆதார் எண் கட்டாயம் அல்ல. விருப்பம் இருந்தால் ஆதார் எண்ணைத் தெரியப்படுத்தலாம் (ITR 1, 2A, 2, 4S)உங்கள் வீட்டின் பெயர் அல்லது கட்டடத்தின் பெயர் அல்லது கிராமத்தின் பெயரை ரிட்டர்ன் படிவத்தில் (ITR 1, 4S) குறிப்பிட வேண்டும்.


வெளிநாட்டுப் பயணம் ஏதாவது மேற்கொள்ளப்பட்டு இருந்தால், பாஸ்போர்ட் எண்ணை ரிட்டர்ன் படிவத்தில் (ITR 2, 2A) குறிப்பிட வேண்டும்.  உங்கள் வங்கிக் கணக்கு எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இது உங்கள் ரீ-ஃபண்ட் எளிதாக (Re-fund) வருவதற்குப் பயனுள்ளதாக இருக்கும்.

ரிட்டர்ன் படிவத்தில் விவசாய வருமான விவரங்களைத் தெரிவிக்கும்போது, இந்த வருடம் கூடுதல் விவரங்களைச் சொல்ல வேண்டும். மொத்த விவசாய வருமானம், விவசாய செலவுகள், நிகர விவசாய வருமானம் மற்றும் கிரகிக்கப்படாத விவசாய இழப்பு ஆகிய (Unabsorbed Agricultural Loss) நான்கையும் தெரிவிக்க வேண்டும்.

ஐடிஆர் 2 படிவத்தைப் பயன்படுத்தினால் வெளிநாட்டு சொத்து உள்ளது என்று அர்த்தம் எனவே, அதன் விவரத்தை சொல்ல வேண்டும். கூடவே வெளிநாட்டு வங்கிக் கணக்குகள், வெளிநாட்டு அமைப்புகளில் நேரடி மற்றும் மறைமுக முதலீடு, வெளிநாட்டு அசையாச் சொத்து, வெளிநாட்டு இதர வருமானங்கள் போன்றவற்றையும் இந்தப் படிவத்தில் குறிப்பிட வேண்டும்''

‘‘2014-15ம் ஆண்டில் அசையாச் சொத்து விற்று இருந்தால், மூலதன ஆதாய தொகையை (Capital Gains) மூலதன ஆதாயக் கணக்கில் (Capital Gains Account Scheme) ஆகஸ்ட் 31, 2015-க்குள் செலுத்த வேண்டும்".

இ-ஃபைலிங்!

ஆன்லைனில் வரி கணக்குத் தாக்கல் செய்வது?

‘‘ரூ.5 லட்சத்துக்குமேல் ஆண்டு வருமானம் கொண்ட அனைவரும் ஆன்லைன் மூலம் எலெக்ட்ரானிக் முறையில் (இ -ஃபைலிங்) கணக்குத் தாக்கல் செய்வதை வருமான வரித் துறை 2013, மே மாதம் கட்டாயம் ஆக்கியது. வெளிநாட்டிலிருந்து வருமானம் வந்திருந்தால், அவரின் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் இ-ஃபைலிங் முறையில்தான் வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.

இ-ஃபைலிங்கை வரிதாரரே நேரடியாக அரசின் இணையதளம் மூலம் செய்யலாம். ஆடிட்டர்கள் அல்லது அதற்கு என தனியார் இணையதளங் களின் உதவியுடன் மேற்கொள்ள லாம்.  இலவசமாக இ-ஃபைலிங் செய்ய, இந்திய வருமான வரித் துறையின் இணையதளமான https://incometaxindiaefiling.gov.in/ செல்ல வேண்டும்.  புதிதாக இ-ஃபைலிங் செய்கிறீர்கள் என்றால் உங்களின் வருமான வரி நிரந்தர கணக்கு எண் (பான்) மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

ஏற்கெனவே, இ-ஃபைலிங் செய்தவர்கள், யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு மூலம் உள்ளே செல்லலாம்.  ஒருவருக்கு எந்த வகையில் வருமானம் வந்தது என்பதற்கு ஏற்ப  வருமான வரி (ஐடிஆர்) படிவத்தைத் தேர்வு செய்ய வேண்டும். கூடவே, வரி கணக்கைத் தாக்கல் செய்ய உதவும் சாஃப்ட்வேரை டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும். டவுன்லோடு செய்த படிவத்தில் வருமானம் மற்றும் முதலீடு, வரி கட்டிய விவரங்களைச் சரியாக பூர்த்தி செய்து அப்லோடு செய்ய வேண்டும்.

இ-ஃபைலிங் செய்ததற்கு ஆதாரமாக உங்களின் டிஜிட்டல் கையெழுத்து இருந்தால், பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு, ஐடிஆர் படிவம் கம்ப்யூட்டர் திரையில் தோன்றும். டிஜிட்டல் கையெழுத்து இல்லை என்றால் ஐடிஆர் V படிவத்தை பிரின்ட் எடுத்து கையெழுத்துப் போட்டு பெங்களூருவில் உள்ள வருமான வரி மத்திய பரிசீலனை மையத்துக்கு (Income Tax Department - CPC) முகவரிக்கு சாதாரண தபால் அல்லது விரைவு தபால்  மூலம் ஒப்புகை அட்டை இல்லாமல் இணைத்து அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி: Income Tax Department - CPC Post Bag No.1, Electronic City Post Office, Bengaluru, Karnataka - 560100

சந்தேகத்துக்கு அழைக்க: 1800 4250 0025, +91-80-2650 0025 டிஜிட்டல் கையெழுத்து உங்களுக்கு இல்லை என்றால் ஐடிஆர் V படிவத்தை பெங்களுரூவில் உள்ள சிபிசி அலுவலகத்துக்கு மூன்று மாதத்துக்குள் (120 நாள்கள்)அனுப்பி வைக்க வேண்டும். நகல் (ஜெராக்ஸ்) அனுப்பக் கூடாது. ஒரிஜினல்தான் அனுப்ப வேண்டும்.

இது பெங்களூரு சிபிசி அலுவலகத்துக்குச் சென்று சேரவில்லை என்றால், நீங்கள் வரி கணக்குத் தாக்கல் செய்யவில்லை என்று அர்த்தம். எனவே, அனுப்பும் முகவரியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

இ-ஃபைலிங் செய்யும் அளவுக்கு உங்களுக்கு கம்ப்யூட்டர் பரிட்சயம் இல்லை என்றால், ஆடிட்டர்கள் மூலம் இ-ஃபைலிங் செய்ய முடியும். இவர்களைத் தவிர்த்து,  இ-ஃபைலிங் செய்துதர பல வெப்சைட்கள் இருக்கின்றன. அவை கட்டணமாக ரூ.300 தொடங்கி ரூ.1,000 வரை வாங்குகின்றன. இந்தக் கட்டணம் என்பது ஒருவரின் வரிக்கு உட்பட்ட வருமானம், அவரின் இதர வருமானம், மூலதன ஆதாயக் கணக்கு, வீட்டு வாடகை வருமானம் போன்றவற்றைப் பொறுத்துள்ளது.


ஆடிட்டர்கள் மற்றும் இ-ஃபைலிங் செய்துக் கொடுக்கும் நிறுவனங்களிடம் படிவம் 16-ஐ கொடுத்தால், அவர்கள் உங்கள் சார்பாக இ-ஃபைலிங் செய்துவிடுவார்கள். பெங்களூரு வில் உள்ள சிபிசி அலுவலகத்துக்கு அவர்களே ஐடிஆர் V  அனுப்பி வைத்துவிடுவார்கள்.

இந்த இ-ஃபைலிங் செய்ய ஏறக்குறைய 20 நிமிடங்கள் ஆகும். இ-ஃபைலிங் முறையில் வரி கணக்குத் தாக்கல் செய்தால் ரீ-ஃபண்ட் விரைவில் கிடைக் கும்".

‘‘இ-ஃபைலிங் செய்யும்போது இ-வெரிஃபிகேஷன் செய்தால்,  ஐடிஆர் V படிவத்தை பெங்களூருக்கு அனுப்பத் தேவை இல்லை.  இந்த இ-வெரிஃபி கேஷனை வரிதாரர் நெட் பேங்கிங் மூலம் மேற்கொள்ளலாம்.

ஆடிட்டர் இதனை மேற் கொள்ளும்போது, பாதுகாப்புப் பிரச்னைகள் எழ வாய்ப்பு இருக் கிறது. காரணம், வரிதாரர் தன் நெட் பேங்கிங் யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு தரவேண்டி இருக்கும். நெட்பேங்கிங் வசதி இல்லை என்றால், இ-ஃபைலிங் செய்யும்போது எலெக்ட்ரானிக் வெரிஃபிகேஷன் கோடு (Electronic Verification Code) உருவாக்க வேண்டும்.

இந்த கோடு, வரிதாரரின் பதிவு செய்யப்பட்ட இ-மெயில் ஐடி மற்றும் செல்போனுக்கு அனுப்பப்படும். இது, 72 மணி நேரம் செல்லத்தக்கதாக இருக்கும். அதனைக் கொண்டு இ-வெரிஃபிகேஷன் முடித்துவிட லாம். இந்த இ-வெரிஃபிகேஷனை பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது மூலமும் மேற்கொள்ளலாம். ஆனால், பான் எண் வாங்க தரப்பட்டிருந்த விவரமும், ஆதார் கார்டுக்காகத் தரப்பட்ட விவரங்களுக்கும் சரியாகப் பொருந்தி இருக்க வேண்டும். பல பேருக்கு இதில் சிக்கல் இருக்கிறது.


மேலும், இ-வெரிஃபிகேஷன் என்பது ரூ. 5 லட்சம் வருமானத் துக்கு கீழே உள்ளவர்களுக்கு  இ-மெயில் ஐடி மற்றும் செல்போனுக்கு அனுப்படும் கோடு-ஆக இருக்கிறது. இது சுலபமான நடைமுறையாக இருக்கிறது. அதேநேரத்தில், ரூ. 5 லட்சம் வருமானத்துக்கு மேலே உள்ளவர்களுக்கு நெட் பேங்கிங் அல்லது ஆதார் கார்டு மூலம் மட்டுமே இ-வெரிஃபிகேஷன் செய்ய முடியும் என்று இருக்கிறது.  இதில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகம் உள்ளன. அனைத்து வரிதாரர்களுக்கும் இ-மெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் இந்த வெரிஃபிகேஷனை மேற்கொண் டால் நன்றாக இருக்கும்”.

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், இந்தத் தகவல்களை எல்லாம் மனதில் கொண்டு இப்போதே தயாரானால், எந்தக் கஷ்டமும் இல்லாமல் செய்து முடிக்கலாமே!
சி.சரவணன்


போலி ஸ்மார்ட்போன்கள்... ஜாக்கிரதை!

இளைஞர்களின் கையில் இந்தியா என்கிற வாசகம் மறந்து, அனைவரின் கையில் ஸ்மார்ட்போன் என்கிற வாசகமே இன்று ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. புதிது புதிதாய் ஸ்மார்ட்போன்கள் அப்டேட் வெர்ஸன்களுடன் தினம் தினம் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அனைத்து விதமான  ஃப்யூச்சர்களையும் பார்த்து ஸ்மார்ட்போன் வாங்குபவர்களை விட, அதன் செயல்பாடுகளில் ஆர்வமாகி, வெளித் தோற்றம் நன்றாக இருக்கிறதா என்பதை மட்டுமே பார்த்து வாங்குபவர்களே அதிகம்.

இதை தெரிந்துவைத்துக் கொண்டு, ஒரு சிலர் ஸ்மார்ட்போன்களில் ஏமாற்று வேலைகளை அரங்கேற்றியிருக்கிறார்கள். இன்று எல்லாவற்றிலும் கலப்படம், போலி என வந்துவிட்ட நிலையில் தொழில்நுட்பச் சந்தையில் போலி ஸ்மார்ட்போன்களையும் கயவர்கள் களமிறக்கியிருக்கிறார்கள்.

போலி ஸ்மார்ட்போன்களை ஒரு சில ஃப்யூச்சர்களை வைத்து எளிதாக கண்டுபிடித்துவிட முடியும். அவை என்னென்ன என்பதை இனி இங்கே பார்க்கலாம்.
 
ஐஎம்இஐ கவனிக்க!
 
இந்தியாவில் வெளியாகும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் (சாதாரண மொபைல் போன்களிலும் இந்த எண் இருக்கும்) பிரத்யேக அடையாள எண்ணாக கருதப்படும் ஐஎம்இஐ எண் (IMEI) கட்டாயம் இருக்கும்.
 இந்த எண்ணானது ஸ்மாட்போனின் உள்புறம் மற்றும் ஸ்மார்ட்போன் பேக்கிங்க் பாக்ஸின் வெளிப்புறம்  அச்சிடப்பட்டிருக்கும். இந்த எண் இல்லை என்றால் அவை நிச்சயமாக போலி ஸ்மார்ட்போன்களே. அதனால் இந்த ஐஎம்இஐ நம்பர் இல்லாத ஸ்மார்ட்போன்களை ஒருபோதும் வாங்க வேண்டாம்.

 
பிரபலமான கடை; நம்பகத்தன்மையுள்ள வலைதளம்!
 
ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டும் என ஆசைப்படுபவர்கள், பிராண்டட் வகை ஸ்மார்ட்பொன்களையே பரிசீலனை செய்யுங்கள். அதுவும் பிரபல ஸ்மார்ட்போன் கடைகள்,ஃப்ளிப்கார்ட், அமேஸான் போன்ற நம்பகத் தன்மையுள்ள வர்த்தக வலைதளங்களில் மட்டுமே ஸ்மார்ட்போன்களை வாங்குங்கள்.

முன்பின் தெரியாத கடைகளில் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. காரணம், அங்கே போலி ஸ்மார்ட்போன்கள் விற்கப்படலாம். 
 

வடிவமைப்பும், டிஸ்ப்ளேயும்!

 
போலி ஸ்மார்ட்போன்களாக இருந்தால் அதன் வடிவமைப்பு ஒழுங்காக இருக்காது. அதே போல ஒரிஜினல் ஸ்மார்ட்போன்களின் திரைக்கும் (டிஸ்ப்ளே), போலி ஸ்மார்ட்போன்களின் திரைக்கும் அதிக வித்யாசங்கள் இருக்கும்.

போலி ஸ்மார்ட்போன்களின் டிஸ்ப்ளே தெளிவாக இருக்காது, தரம் குறைந்ததாக இருக்கும். இதை வைத்து போலி ஸ்மார்ட்போன்களை எளிதாக இனம் கண்டுகொள்ளலாம்.


இரைச்சலான ஒலி!
 
போலி ஸ்மார்ட்போன்களாக இருந்தால், சீன மொபைல்கள் போல பாடல் சத்தங்கள் மற்றும் ரிங்க்டோன் ஆகியவற்றை இரைச்சலுடன் கொடுக்கும். இதனால் ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது அதிலுள்ள ரிங்டோன்களை ஒலிக்க விட்டு பரிசோதித்து வாங்கவும்.

அதே போல ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது பல செயலிகளை ஒரே நேரத்தில் இயக்கிப் பாருங்கள். போலி ஸ்மார்ட்போனாக இருந்தால் நிச்சயம் ஹேங் ஆகும். அப்போதே அந்த போனை வாங்காமல் தவிர்த்துவிடலாம்.


கேமரா மற்றும் பேட்டரியை பார்க்க!

 
கேமராக்களின் தரத்தை வைத்தும் ஸ்மார்ட்போன்களின் விலை வித்யாசப்படுகிறது. ஆனால் போலி ஸ்மார்ட்களில் அதிக மெகா பிக்ஸல் அளவுக்கு கேமராவின் தன்மை வழங்கப்பட்டிருந்தாலும் அது இரண்டு மெகபிக்ஸல் அளவு தரத்திலேயே இருக்கும். இதையும் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

மேலும், ஸ்மார்ட்போனின் மெமரி அளவை பார்த்தும் போலி ஸ்மார்ட்போன்களை கண்டுபிடித்துவிடலாம்.

ஸ்மார்ட்போனின் இதயமாக இருப்பது பேட்டரிதான். அதனால் ஸ்மார்ட்போன் வாங்கும் போது பேட்டரியின் தன்மையையும் கவனிப்பது அவசியம். போலி ஸ்மார்ட்போன்களாக இருந்தால், அதில் நிச்சயமாக சீன மொபைல்களின் பேட்டரிகளே பொருத்தப்பட்டிருக்கும்.

இனி கவனித்து ஸ்மார்ட்போன்களை வாங்குங்கள்!


செ.கார்த்திகேயன்
 

கேட்ஜெட்ஸ்

பேனாசோனிக் பி55 நோவோ (Panasonic P55 Novo 13)


டிஸ்ப்ளே – 5.30 இன்ச் 720x1280 பிக்ஸல்.
பின்புற கேமரா – 13 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.4 GHz Octo-Core.
ரேம் – 1 GB.
பேட்டரி – 2500 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு கிட்-கேட் 4.4.2
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 8 GB.
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 32GB வரை.

பிளஸ்:

கேமரா.
பிராசஸர்.

மைனஸ்:
பேட்டரி.
ரேம்

விலை: ரூ.9,290

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் லேப்டாப் (Micromax Canvas Laptab)


இதை லேப்டாப்பாகவும் டேப்லெட்டாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
டிஸ்ப்ளே 10.10 இன்ச், 1280x800 பிக்ஸல்.
முன்புற, பின்புற கேமரா 2 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.33GHz Quad-core Intel Atom Z3735F.
இயங்குதளம் – விண்டோஸ் 8.1
இன்டெர்னல் ஸ்டோரேஜ் 32 GB.
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் 64 GB வரை.
ரேம் 2 GB,  பேட்டரி 7700 mAh.

பிளஸ்:

விலை, 3G வசதி உண்டு.

மைனஸ்:

கேமரா,  கீ-போர்டு.

விலை: ரூ.14,999

ஏர் ஸ்ட்ரீம் அப்ளிகேஷன் (AirStream App)


லேப்டாப்/டெஸ்க்டாப்பில் உள்ள பாடல்கள், போட்டோக்கள், வீடியோக்கள் ஆகியவற்றை ஸ்மார்ட் போனில் இந்த அப்ளிகேஷனை வைத்து மேனேஜ் செய்யலாம்.

லேப்டாப்/டெஸ்க்டாப்பில் உள்ள அக்கவுன்ட் மூலம் இந்த அப்ளிகேஷனை லாகின் செய்ய வேண்டும்.

ஃபைல்களை வைஃபை நெட்வொர்க் மூலம் காப்பி செய்துகொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரு இயங்குதளத்திலும் இந்த ஆப்ஸை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.


பிரைன்வேவ்ஸ் ப்ளூ-100 (Brainwavz Blu-100)


இது ஒரு In-Ear ப்ளூ-டூத் இயர்போன்.

கறுப்பு நிறத்தில் உள்ள இந்த இயர்-போன் மூன்று சிலிகான்  டிப்ஸ்களைக் கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களது காதுக்கு ஏற்ப ஒரு சிலிகான் டிப்பை செலக்ட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிளஸ்:
குறைவான எடை.
சிலிகான் டிப்ஸ்.

மைனஸ்:
பேட்டரி.
விலை: ரூ.2,799


ஸோலோ பிளாக் (Xolo Black)


டிஸ்ப்ளே – 5.5 இன்ச் 1080x1920 பிக்ஸல்.
பின்புற கேமரா – 13 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1 GHz Octo-Core.
ரேம் – 2 GB.
பேட்டரி – 3200 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 16 GB.
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 32GB வரை.

பிளஸ்:
பிராசஸர்.

மைனஸ்:
டிசைன்.

விலை: ரூ.12,999

கூகுள் க்ரோம்காஸ்ட் – ஈதர்நெட் அடாப்டர் (Google Chromecast - Ethernet Adapter)

2013-ம் ஆண்டு வெளியிடப்பட்ட க்ரோம்காஸ்ட்டிற்கு கூகுள் நிறுவனம் Ethernet Adapter-யை வெளியிட்டுள்ளது.

$15 என்ற விலையில் விற்கப்படும் இந்த கேட்ஜெட்டை வாடிக்கையாளர்கள் கூகுள் ப்ளே-ஸ்டோரில் வாங்கலாம்.

செ.கிஸோர் பிரசாத் கிரண்

Sunday, July 12, 2015

அரசின் 5 அப்ளிகேஷன்கள்!

நாம் எல்லோரும் இந்தியர்கள் என்று சொல்வதை விட, இனி டிஜிட்டல் இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். அந்த அளவுக்கு இந்தியாவில் டெக்னாலஜியின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இன்று இந்தியர்களில் பெரும்பாலானவர்களின் கையிலும் ஸ்மார்ட்போன். இந்த கையடக்கக் கருவி இணையம் வாயிலாக உலகத்தையே கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிடுகிறது என்பதே நிதர்சணமான உண்மை. 

இன்றைய நிலையில் தனிநபர் முதல் இந்திய அரசாங்கம் வரை எல்லோரும் டிஜிட்டலாக அப்டேட் ஆகிக் கொண்டிருக்கிறார்கள்.   நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவதற்கு மூன்பாகவே தனது பிரசாரத்தை டிஜிட்டலாக ஆரம்பித்தார். ஆட்சியில் அமர்ந்த பிறகும் டிஜிட்டல் என்கிற விஷயத்தில் தன்னையும், தனது செயல்பாடுகளையும் இன்னும் வேகப்படுத்தி வருகிறார். அதில் குறிப்பிடப்படும்படியான விஷயம்தான் டிஜிட்டல் இந்தியா திட்டம். 


இப்படி எண்ணற்ற டிஜிட்டல் விஷயங்களை நமது அரசாங்கம் மேற்கொண்டு வரும் இந்த சமயத்தில், அவர்களின் நடவடிக்கைகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள அரசின் அப்ளிகேஷன்கள் அவசியமாகிறது.

அரசு சார்ந்த வேலைகளை எதுவாக இந்தாலும் நீண்ட வரிசையில் காத்திருந்து அல்லது நீண்ட நாட்கள் பொறுத்திருந்துதான் முடிக்க முடியும் என்கிற நிலையை, பிரதமர் நரேந்திர மோடி மாற்ற முயற்சிக்களை மேற்கொண்டு வருகிறார். 



அரசு துறைச் சார்ந்த சில நிறுவனங்கள் தங்களை டிஜிட்டலாக அப்டேட் செய்து கொண்டு அப்ளிகேஷன்களை வெளியிட்டிருக்கின்றன. ஆனால் அதை நம்மில் எத்தனை பேர் பயன்படுத்துகிறோம் என்பதுதான் இப்போதைய கேள்விக்குறி. இனி அப்படியில்லாமல், நமது ஸ்மார்ட்போன்களுக்குள் இந்த அரசின் அப்ளிகேஷன்களும் இடம்பெற வேண்டும். 


என்னென்ன ஆப்ளிகேஷன்கள் என்பதை இனி பார்க்கலாம்.

மைகவர்ன்மென்ட் (MyGov)

இந்த அப்ளிகேஷனின் மிக முக்கிய நோக்கம் அரசின் திட்டங்களின் இந்திய குடிமக்களை இணைப்பதுதான். இந்த அப்ளிகேஷன் மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனும் அரசின் நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனைகளையும், கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளலாம். 


மத்திய அரசின் நடவடிக்கைகள் அல்லது மற்ற எந்த துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்தும் இதில் கருத்து மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க முடியும். உதாரணத்துக்கு டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்த கருத்து அல்லது ஆலோசனைகளை இதில் பதிவு செய்யலாம். ஒரு செயல் குறித்து விவாதிக்கலாம். 

தற்போதைய நிலையில் இந்த ஆப்ஸை 1,000-5,000 பேர் மட்டுமே டவுன்லோடு செய்திருக்கிறார்கள்.

இன்க்ரெடிபில் இந்தியா (Incredible India )!

நமது நாட்டின் சுற்றுலாத் தளங்களை மேம்படுத்த
சுற்றுலாத் துறை, நடவடிக்கைகள் எடுத்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. வெளிநாட்டினர் நம் நாட்டில் மெற்கொள்ளும் சுற்றுலாவின் மூலம் நம் நாட்டிற்கு வருமானம் அதிகரித்து வருவதால், சுற்றுலாத் துறை கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறது. 

இந்த துறை, சுற்றுலாவுக்குச் செல்லும் உள்நாட்டு பயணிகள் மற்றும் வெளிநாட்டிலிருந்து சுற்றுலாவுக்கு வரும் பயணிகள் பயன்பெரும் வகையில் Incredible !ndia என்கிற அப்ளிகேஷனை வெளியிட்டிருக்கிறது. இந்த அப்ளிகேஷன் மூலம் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா சேவைகளை வழங்குபவர்களின் விவரங்கள், நாடு முழுவதிலுமுள்ள சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள், டிராவல் எஜென்ட்கள் ஏமாற்றுவேலை குறித்த எச்சரிக்கை போன்ற விவரங்களை வழங்குகிறது. 

தற்போதைய நிலையில் இந்த அப்ளிகேஷனை 5,000- 10,000 பேர்     டவுண்லோடு செய்து பயன்படுத்தி வருகிறார்கள். பயன்படுத்துபவர்களில் பலர் நன்றாக இருக்கிறது என்று சொன்னாலும், இன்னும் அப்கிரேடு செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஸ்வச் பாரத் அபியான் (Swachh Bharat Abhiyaan)!

கடந்த 2014-ம் வருடம் அக்டோபர் 2-ம் தேதி ஸ்வச் பாரத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்தார். நம் நாட்டின் சுற்றுச்சூழல் சுத்தமாகவேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். 


இந்த திட்டத்தின் கீழ் இப்போது ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அப்ளிகேஷன் மூலம், கணக்கு ஆரம்பித்து குறிப்பிட்ட ஏரியாவை சுத்தம் செய்ய சவால்களை ஒருவருக்கொருவர் விட்டுக் கொள்ளலாம். 

இந்த ஆப்ளிகேஷனில் ஏரியா தூய்மைக்காக அவரவர்களின் நண்பர்களை அழைக்கவும் முடியும். சுத்தம் செய்ய இருக்கும் ஏரியாவை சுத்தம் செய்வதற்கு முன்பாக புகைப்படம் எடுத்தும், சுத்தம் செய்த பிறகு புகைப்படம் எடுத்தும் இதில் பதிவு செய்யலாம். இந்த ஆப்ஸ் மூலம் ஒரே நேரத்தில் எங்கெல்லாம் ஸ்வச் பாரத் திட்டம் நடைபெறுகிறது என்பதை இணையம் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

சுத்தம் என்பதே நம் நாட்டு மக்களுக்கு பிடிக்காத விஷயமாக இருக்கும் போல, இதுவரை 500-1,000 பேர் மட்டுமே இந்த ஆப்ஸ்களை டவுன்லோடு செய்து பயன்படுத்தி வருகிறார்கள் என்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்.

நரேந்திர மோடி (Narendra Modi)!

நரேந்திர மோடி என்கிற பெயரிலேயே இந்த அப்ளிகேஷன் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆண்டுராய்டு பயனாளர்கள் இந்த ஆப்ஸை டவுண்லோடு செய்து கொள்வதன் மூலம், பிரதமரின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். 


பிரதமரின் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தொடர் குறித்த விவரங்கள், பிரதமர் வானொலியில் பேசும் உரையாடல்கள் (நேரடி ஒலிப்பதிவு உள்பட), நாட்டு நடப்புகள் குறித்த அரசின் வாக்கெடுப்பு விவரங்கள் (இந்த அப்ளிகேஷன் மூலம் அந்த வாக்கெடுப்பில் பங்குபெறவும் முடியும்) ஆகிய அனைத்து விவரங்களையும் அவ்வப்போது தெரிந்துகொள்ள முடியும்.

தற்போதைய நிலையில் இந்த அப்ளிகேஷனை 1,00,000-5,00,000 பேர்     டவுண்லோடு செய்து பயன்படுத்தி வருகிறார்கள். பயன்படுத்தி வருபவர்களில் அதிகமான பேர், இந்த ஆப்ஸின் செயல்பாடுகளுக்கு ஐந்து நட்சத்திர புள்ளிகளை வழங்கியிருக்கிறார்கள்.

வெளிவிவகார பயன்பாட்டு அமைச்சகம் (MEAIndia )!

வெளிவிவகார பயன்பாட்டு அமைச்சகம் MEAindia என்கிற பெயரில் அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்த அப்ளிகேஷன் மூலம் அமைச்சகத்தின் சேவைகள் குறித்தும், அதன் நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்துகொள்ள முடியும்.


அதுமட்டுமில்லாமல், அமைச்சகத்திலிருந்து வெளியிடும் பத்திரிக்கை விவர வெளியீடுகள் (press releases), லோக்சபா நடவடிக்கைகள், டெண்டர் அறிவிப்புகள் மற்றும் பாஸ்போர்ட் சேவைகள் என அனைத்து விவரங்களையும் அவ்வப்போது தெரிந்துகொள்ள முடியும். இந்த ஆப்ஸில் தேவையான விவரங்களை பயனாளர்கள் எடுத்து பயன்படுத்திக் கொள்ளும்படியாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. 

தற்போதைய நிலையில் இந்த அப்ளிகேஷனை 10,000-50,000 பேர்     டவுண்லோடு செய்து பயன்படுத்தி வருகிறார்கள். பயன்படுத்தி வருபவர்களில் அதிகமான பேர், இந்த ஆப்ஸின் செயல்பாடுகளுக்கு ஐந்து நட்சத்திர புள்ளிகளை வழங்கியிருக்கிறார்கள்.மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து அப்ளிகேஷன்களும் கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது.

இந்திய மக்களின் வேலையை எளிமைப் படுத்த இது போன்ற எண்ணற்ற ஆப்ஸ்களை மத்திய அரசாங்கம் மட்டுமல்லாமல், மாநில அரசாங்கங்களும் உருவாக்கி வெளியிட்டால் நன்றாக இருக்கும்தானே!

-செ.கார்த்திகேயன்

4G ஸ்மார்ட் போன்கள்

லெனோவோ K3 நோட் (Lenovo K3 Note)

டிஸ்ப்ளே – 5.5 இன்சஸ் 1080x1920 401 PPI IPS டிஸ்ப்ளே.
பின்புற கேமரா – 13 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.7 GHz Octo-Core.
கிராபிக்ஸ் பிராசஸர் – Mali-T760MP2.
ரேம் – 2GB, டூயல் சிம் வசதி.
பேட்டரி – 3000 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 16 GB.
SD கார்டு – 32 GB வரை.
ஆன்லைனில் மட்டுமே வாங்க முடியும்.
பிளஸ்:  டிஸ்ப்ளே  பிராசஸர்.
மைனஸ்:  எடை.
விலை: ரூ.9,999


யு யுபோரியா (Yu Yuphoria)

டிஸ்ப்ளே – 5 இன்சஸ் 720x1280 294 PPI IPS டிஸ்ப்ளே.
பின்புற கேமரா – 8 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.2 GHz Quad Core.
கிராபிக்ஸ் பிராசஸர் – Adreno 306
ரேம் – 2GB.
பேட்டரி – 2230 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 16 GB.
SD கார்டு – 32 GB வரை.
டூயல் சிம் வசதி.
பிளஸ்:  டிசைன்.  இயங்குதளம்.
மைனஸ்:  டிஸ்ப்ளே.  பேட்டரி
விலை: ரூ.6,999

ஸியோமி ரெட்மி நோட் 4G (Xiaomi Redmi Note 4G)

டிஸ்ப்ளே – 5.5 இன்சஸ் 720x1080 267 PPI IPS டிஸ்ப்ளே.
பின்புற கேமரா – 13 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.6 GHz Quad Core.
கிராபிக்ஸ் பிராசஸர் – Adreno 305.
ரேம் – 2GB.
பேட்டரி – 3100 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு 4.4
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 8 GB.
SD கார்டு – 64 GB வரை.
பிளஸ்:  கேமரா.  பேட்டரி.
மைனஸ்:  எடை
விலை: ரூ.7,999


ஏசஸ் ஜென்போன் 2 ZE550ML (Asus Zenfone 2 ZE550ML)
டிஸ்ப்ளே – 5.5 இன்சஸ் 720x1280 267 PPI IPS டிஸ்ப்ளே.
பின்புற கேமரா – 13 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.8 GHz Quad Core.
கிராபிக்ஸ் பிராசஸர் – Power VR G6430.
ரேம் – 2GB.
பேட்டரி – 3000 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 16 GB.
SD கார்டு – 64 GB வரை.
டூயல் சிம் வசதி.
பிளஸ்:  டிசைன்.  இயங்குதளம்.
மைனஸ்:  கேமரா.
விலை: ரூ.12,999
செ.கிஸோர் பிரசாத் கிரண்

ஆடித் தள்ளுபடியும் ஆன்லைன் தள்ளுபடியும்!

நம் நாட்டில் இ-காமர்ஸின் வளர்ச்சி மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. மென்பொருள் மற்றும் சேவைகள் குறித்த தேசிய அளவிலான அமைப்பு (The National Association of  Software and  Services) இந்தியா வில் இ-காமர்ஸ் தற்போதைய விற்பனையான 30 பில்லியன் டாலரிலிருந்து (இந்திய மதிப்பில் சுமார் 1.90 லட்சம் கோடி ரூபாய்), 300 பில்லியன் டாலரை (சுமார் 19 லட்சம் கோடி ரூபாய்) இன்னும் பதினைந்து ஆண்டுகளில் தொட்டுவிடும் எனத் தனது ஆய்வின் மூலம் கணித்திருக்கிறது. உலகளவில் சீனாவுக்கு அடுத்த படியாக ஆன்லைன் வர்த்தகத் தில் வேகமாக வளர்ந்துவரும் நாடு நம் இந்தியாதான்.


மின் வணிக நுகர்வோர்களின் எண்ணிக்கை 2013-ம் ஆண்டு இரண்டு கோடிக்கும் குறைவாகவே இருந்தது.

ஆனால், இந்த ஆண்டு ஏறக்குறைய ஆறு கோடியை எட்டக்கூடும் என இது சார்ந்த அமைப்புகள் கூறி வருகின்றன. இதே கால அளவில், மாதம் ஒன்றுக்கு 40 லட்சம் ஆர்டர்களைப் பெற்றுவந்த இந்த நிறுவனங்கள், 1.2 கோடி ஆர்டர் களைப்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன காரணம்?

இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு (ஏறக்குறைய 30%) பலக் காரணங்கள். இந்தியாவில் இன்டர்நெட் உபயோகிப்பவர் களின் எண்ணிக்கை தற்சமயம் 20%. இதில் 10 சதவிகிதம் பேர் ஆன்லைன்மூலம் ஷாப்பிங் செய்கிறார்கள். சீனாவைப் பொறுத்தளவில், இன்டர்நெட் உபயோகிப்போரின் எண்ணிக்கை ஏறக்குறைய 50%. அதில் ஆன்லைனில் பொருட்களை வாங்குபவர்கள் 50%.

இந்தியாவின் ஸ்மார்ட் போன் வளர்ச்சி, மொத்த ஜனத்தொகையில் இளைஞர் களின் எண்ணிக்கை (10 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் சுமார் 35.6 கோடி) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர் கள் இந்தத் தொழிலில் பணத்தை வாரியிறைத்துக் கொண்டிருக் கின்றனர்.

எதற்கு வரவேற்பு!

விற்பனை/வருமான ரீதியில் இந்திய மின் வணிகத் துறையைப் பொறுத்தவரை, ‘ஆன்லைன் டிராவல்’தான் (அதாவது, பயணம் சம்பந்தப்பட்ட சேவைகள்) முதலிடம் வகிக்கிறது. அதைத் தொடர்ந்து ரீடெயிலிங் (சில்லறை வணிகம்), நிதி சேவை கள், ஆன்லைன் வரி விளம்பரம் போன்றவை சார்ந்த நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

மின் வணிகம் மூலம் பொருட்களையும், சேவைகளையும் வாங்குவது நாளுக்குநாள் அதிகரித்து வருவதற்கான முக்கியக் காரணம், ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சி. 2014-ம் ஆண்டு ஆன்லைனில் பொருட் களை வாங்கியவர்களில் மொபைல் போன் செயலி மூலம் வாங்கியவர்களின் எண்ணிக்கை 11%. ஆனால், 2017-ம் ஆண்டு இது 25 சதவிகிதத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குவியும் முதலீடு!

ஸ்நாப்டீல், ஃப்ளிப்கார்ட், அமேஸான் போன்ற நிறுவனங் கள் தனது இணையத்தளத்தின் மூலம் விற்பனை செய்யக்கூடிய பொருட்கள் அனைத்தையும் தள்ளுபடி விலையில் வருடம் முழுவதும் விற்பனை செய்வதன் மூலமும், வேகமாக டெலிவரி செய்வதன் மூலமும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான புதிய நுகர் வோர்களைப் பெற்று வருகின்றன. இந்த வளர்ந்துவரும் நுகர்வோர் களின் எண்ணிக்கையைக் காரணமாகக் காட்டி, நிதி நிறுவனங்களிடமிருந்து மேலும் முதலீட்டை இந்த நிறுவனங்கள் பெற்று வருகின்றன.

அப்படிக் கிடைக்கும் முதலீட்டைக் கொண்டு மேலும் தள்ளுபடி அளிக்கத் தங்களுக்குள் போட்டிபோடுகின்றன இந்த இ-காமர்ஸ் நிறுவனங்கள். இப்படிக் கிடைக்கக்கூடிய நிதி திடீரென ஒருநாள் நின்று போய்விட்டால் என்னவாகும்? இதனால்தான் ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்கிற மாதிரி ஐபிஓ வந்துவிடச் சில நிறுவனங்கள் துடியாய்த் துடிக்கின்றன.

கடந்த சில மாதங்களில் பல ஆன்லைன்/மின் வணிக நிறுவனங்கள் பல கோடி ரூபாய் களை முதலீடாகப் பெற்றிருக் கின்றன. அவற்றில் குறிப்பிடத் தக்கது, அர்பன் லேடர் (ஃபர்னிச்சர் விற்பனை செய்யும் ஆன்லைன் கடை) ரூ.493 கோடி, ஷாப்க்ளூஸ் ரூ.746 கோடி, பிக்பாஸ்கெட் ரூ.278 கோடி.

இதுபோல, இந்தியாவின் பெரிய ஆன்லைன் வணிகத் தளங்களான ஃப்ளிப்கார்ட், ஸ்நாப்டீலில் மட்டும் 3 பில்லியன் டாலர்களைப் பன்னாட்டு நிறுவனங்களும், வங்கிகளும் முதலீடு செய்துள்ளன.

ஆன்லைன் வணிகத்தில் டாலர்களைக் கொட்டும் முக்கிய நிறுவனங்கள் ரஷ்யாவைச் சேர்ந்த டிஎஸ்டி குளோபல் (DST Global), அமெரிக்காவைச் சேர்ந்த டைகர் குளோபல் (Tiger Global), ஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட் பேங்க் (Soft Bank), சீனாவைச் சேர்ந்த அலிபாபா போன்றவை.

இவர்கள் செய்த முதலீட்டுக்கு லாபம் கிடைக்குமா என்பது அடுத்தச் சில ஆண்டுகளில் தெரிந்துவிடும். ஒருவேளை ஜெயிக்கவில்லை எனில், 2018-ல் இவர்கள் இந்தத் துறையிலிருந்து வெளியேறத் தொடங்கிவிடு வார்கள் என்பதே இந்தத் துறையைச் சேர்ந்தவர்களின் அனுமானம்.

இ-காமர்ஸ் இன்னோவேஷன்கள்!

அமேஸான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வணிகத்தளங்கள் பின்கோடு அல்லது ஏரியா வாரியாகச் சில சில்லறை வணிகக் கடைகள் அல்லது பெட்ரோல் பங்க்-களைத் தேர்ந்தெடுத்து அங்குப் பொருட்களை டெலிவரி செய்ய, ஆர்டர் செய்தவர்கள் அதன் வழியாக வீட்டுக்கோ அல்லது அலுவலகத்துக்கோ செல்லும்போது எடுத்துக்கொள்ளும் முறையைச் சில நகரங்களில் பரிசோதனை முறையில் செய்யத் தொடங்கி இருக்கின்றன.

பெருநகரங்கள் தவிர்த்து இரண்டாம், மூன்றாம் அடுக்கில் உள்ள சிறுநகரங்களையும், கிராமங்களையும் தங்களது சேவை சென்றடைய 1,54,882 தபால் நிலையங்களை (இதில் கிராமப்புறத்தில் உள்ளவை 89%) கொண்டிருக்கும் ‘இந்திய தபால் துறை’யுடன் கைகோக்க ஆன்லைன் நிறுவனங்கள் போட்டிபோட்டு வருகின்றன. ஸ்நாப்டீல், அமேஸான் போன்றவை ஏற்கெனவே இந்தத் துறையுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன.2014-15-ம் ஆண்டில் ‘கேஷ் ஆன் டெலிவரி’ முறையின் மூலம் ஆன்லைன் நிறுவனங்களின் சார்பில் பொருட்களை டெலிவரி செய்து தபால்துறை வசூலித்தது சுமார் ரூ.500 கோடி!

பிரபலமான மாடர்ன் ரீடெயில் குழுமங்களும், அடிடாஸ் போன்ற விளையாட்டுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் ஆன்லைன் மூலம் தங்களது பொருட்களை விற்க ஆரம்பித்திருக்கின்றன.

 நுகர்வோர்களால் பல காரணங்களினால் திரும்ப அனுப்பப்படும் பொருட்களை அந்தந்த நிறுவனங்களிடமிருந்து (உ-ம் அமேஸான், ஃப்ளிப்கார்ட், மிந்த்ரா போன்றவை) வாங்கி, அந்தப் பொருட்களில் ஏதேனும் குறையிருந்தால், அதைச் சரிசெய்து வாரன்டியுடன், மிகவும் குறைந்த விலையில் விற்பதற்கென்று greendust.com என்கிற இணையதளம் உள்ளது.

சித்தார்த்தன் சுந்தரம்




Sunday, July 05, 2015

4G

டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தை நாடு முழுக்க அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்தத் திட்டத்தின் அடிப்படை அம்சமாக இருக்கிறது 4ஜி தொழில்நுட்பம். நம் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத பல மாற்றங்களைக் கொண்டுவர இருக்கும் இந்த 4ஜி தொழில்நுட்பம்தான், டிஜிட்டல் உலகில் அடுத்தப் புரட்சியைச் செய்யப்போகிறது. 
 
இன்னும் 3ஜி தொழில்நுட்பமே எல்லோரிடமும் முறையாகச் சென்று சேரவில்லை. அதற்குள் 4ஜி நடைமுறைக்கு வந்துவிடப் போகிறதா என்று நீங்கள் வியக்கலாம்.

 இன்றைய உலகம் தொழில் நுட்ப ரீதியாக அதிபயங்கர வேகத்தில் சுழன்று கொண்டி ருப்பதால், அதற்கு ஈடுகொடுக்க 4ஜி போன்ற வேகமான தொழில் நுட்ப வசதிகள் அவசியம் தேவைப்படுகின்றன. கூடிய சீக்கிரத்தில் நம் கையில் தவழ்ந்து நம் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றப்போகிறது 4ஜி தொழில் நுட்பம். 4ஜி ஏற்படுத்தும் அதிரடி மாற்றங்களைப் பார்க்கும்முன், அந்தத் தொழில்நுட்பத்தைப் பற்றி முதலில் தெரிந்து கொள்வோம்.


4ஜி-ன் அவதாரம்!

கடந்த 2002-ம் ஆண்டு 4ஜி-க்கான திட்டங் களைச் சொல்லியிருந்தது சுவிட்சர்லாந்தில் உள்ள ITU-T (ITU - Telecommunication Standardization Sector)  என்ற அமைப்பு. அதன் அடிப்படையில் கடந்த 2005-ம் ஆண்டு தென் கொரியா WiMax தொழில் நுட்பத்துடன் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மற்ற சில நாடுகளும் இந்தச் சேவையினைத் தரத் தொடங்கின. அந்த வரிசையில் இந்தியாவிலுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங் களும் 4ஜி சேவையை  வழங்கத் தீர்மானித்து, அதற்கான தீவிர நடவடிக்கை களை மேற்கொண்டு வந்தன.

4ஜி தொழில் நுட்பமும், பயன்பாடும்!

4ஜி என்பதை 3ஜி-ன் அடுத்த வெர்ஷன் என்று சொல்லலாம். நான்காம் தலைமுறை அலைவரிசை சேவையான இது, 3ஜி-யைவிட 10 மடங்கு அதிகமான தொலைத்தொடர்பு வேகத்துடன் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ரயிலில், காரில் பயணிக்கும்போது 3-ஜி  இணைப்பானது விட்டுவிட்டுக் கிடைக்கும். ஆனால், இந்தப் பிரச்னை 4ஜி-ல் கிடையாது. ஏனெனில் கார், ரயில் போன்ற வற்றில் பயணிக்கும்போது விநாடிக்கு 100 மெகாபிட் அளவில் இணைய இணைப்பைப் பெற முடியும். நடக்கும்போது ஒரு கிகாபிட் அளவுக்குக் கிடைக்கும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங் கள் விளம்பரம் செய்கிறது.

3ஜி போல, 4ஜியும் வயர்லெஸ் மோடமாகவும் செயல்படும். மேலும், வீடியோ காலிங், மொபைல் டி‌வி, மிக வேகமான டேட்டா சர்வீஸ், வாய்ஸ் மற்றும் வீடியோ கான்ஃபரன்ஸிங் போன்ற சேவைகளை 3ஜி சேவை யில் பெற்றதைவிட மிகவும் துல்லியமாகவும், வேகமாகவும் 4ஜி மூலம் பெற முடியும். 4ஜி இணையப் பயன்பாடுகளுக்கு ipv6 (தற்போது நாம் பயன்படுத்து வது ipv4) என்கிற தொழில்நுட்ப முறையைக் கையாளும் விதத்தில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. இதனால் மிக அதிக எண்ணிக்கை யிலான வயர்லெஸ் சேவைகளை நம்மால் பயன்படுத்த முடியும்.

4ஜி சேவைக்கு மிக அதிகத் திறன் வாய்ந்த அட்வான்ஸ்டு ஆன்டெனாக்கள் பயன்படுத்தப் படுகின்றன என்பதால், சிக்னல் கவரேஜ் எந்தவொரு இடையூறும் இல்லாமல் முறையாகக் கிடைக்கும். அதேபோல, 4ஜி சேவையானது முழுவதுமாக IP based Integrated Network என்பதால், இந்தச் சேவை மூலம் பரிமாற்றம் செய்யப்படும் தகவல்கள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்படும்.4ஜியிலும் பலவகையான சேவை முறைகள் உள்ளன. இதில் இந்தியா டிடிடி மற்றும் எல்டிஇ (Time-Division Duplex, Long-Term Evolution) என்ற 4ஜி முறையைப் பயன்படுத்துகிறது. இதனால்  4ஜி-ல் மிகக்  குறைவான விலைக்கு டேட்டா சர்வீஸ்களை நம்மால் பயன்படுத்த முடியும்.

ஆனால், சர்வீஸ் தருகிற ஆபரேட்டரைப் பொறுத்து இந்தக் கட்டணம் கூடவோ, குறையவோ செய்யலாம்.

4ஜி ஸ்மார்ட் போன்கள்!

இந்தியாவில் தற்போது பெரும்பாலான போன்கள் 3G வசதி மட்டுமே கொண்டிருக்கின்றன என்பதால், 4G தொழில்நுட்பத்தைப் பயன் படுத்த எல்டிஇ வசதியுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் சிம் கார்டுகளை வாங்க வேண்டும் என்பது மட்டுமே தற்போதைய குறையாக இருக்கிறது.

இந்தியாவில் 4G-யை பயன் படுத்த எல்டிஇ வசதி உள்ள போனை வாங்க வேண்டும். தற்போதைய நிலையில், ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஐபோன் 5, 6 மற்றும் 6 பிளஸ் மாடல்களில் எல்டிஇ தொழில் நுட்ப வசதி இருக்கிறது.

அதேபோல, ஹெச்டிசி ஒன் எக்ஸ்எல் (HTC One XL), ஹுவாய் அசெண்ட் பி1 எல்டிஇ (Huawei Ascend P1 LTE), சாம்சங் கேலக்ஸி நோட் 2 எல்டிஇ (Samsung Galaxy Note 2 LTE), சாம்சங் கேலக்ஸி எஸ்3 எல்டிஇ (Samsung Galaxy S3 LTE) ஆகிய ஸ்மார்ட் போன்கள் 4ஜி தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்திருக்கின்றன.

நோக்கியா லூமியா 638 மாடல் ரூ.5,399 விலையில் தற்போது கிடைக்கிறது. வருகிற நவம்பரில் வெளியாக இருக்கும் நோக்கியா லூமியா 820 எல்டிஇ (Nokia Lumia 820 LTE) மற்றும் நோக்கியா லூமியா 920 எல்டிஇ (Nokia Lumia 920 LTE) ஆகிய மொபைல்களும் 4ஜி தொழில்நுட்ப வசதியுடன் வெளிவர இருக்கின்றன.

வேகத்தின்  காரணம்!

3ஜி-யைவிட 4ஜி சேவை மிகவும் வேகமாக இருக்க மிக முக்கியக் காரணம், வை-ஃபை, டிஜிட்டல் டிவி, ரேடியோ மற்றும் ஏடிஎஸ்எல் பிராட்பேண்ட்களில் பயன் படுத்தி வரும் ஓஎஃப்டிஎம் (OFDM - Orthogonal Frequency Division Multiplexing) என்கிற வேகமான தொழில்நுட்பத்தைப் பயன் படுத்துவதுதான். இந்தத் தொழில் நுட்பம் நமக்குத் தொடர்ந்து இணையச் சேவையை இடையூறு எதுவுமில்லாமல் வழங்க வழிவகைச் செய்கிறது. அதே போல, எம்ஐஎம்ஓ (MIMO - Multiple input and multiple output) என்கிற தொழில்நுட்பமும் 4ஜி சேவை வேகமாக இயங்குவதற்குக் காரணமாக இருக்கிறது.

4ஜி சேவையானது 100Mbps டவுன்லோடு வேகத்தையும், 50Mbps அப்லோடு வேகத்தையும் தரும் என்று டெலிகாம் நிறுவனங் கள் தெரிவித்திருக்கின்றன. மேலும், டவுன்லோடு மற்றும் அப்லோடு வேகத்தை ஐபோன் 5 கொண்டு சரிபார்த்தபோது, டவுன்லோடு 41Mbps வேகத்துக்குள்ளாகவும், அப்லோடு 14.3mbps வேகத்துக் குள்ளாகவும் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.

இதேபோல, ஹெச்டிசி, சாம்சங்க் ஸ்மார்ட் போன்களைக் கொண்டும் பரிசோதனை செய்ததில் 4ஜி சேவை மிக வேகமாகவும், துல்லியமாவும் செயல்படுவது நிரூபிக்கப்பட்டு உள்ளது. இந்த டவுன்லோடு மற்றும் அப்லோடு வேகத்தை நடைமுறையில் இருக்கும் 3ஜி சேவையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 3ஜி-யில் ஆவதைவிட 4ஜி-யில் மூன்று மடங்கு அதிக வேகத்தில் டவுன்லோடு ஆவதாகவும், 10 மடங்கு அதிக வேகத்தில் அப்லோடு ஆவதாகவும் தொலைத்தொடர்பு நிறுவனங் கள் தெரிவித்துள்ளன.

4ஜி சேவை தரும் நிறுவனங்கள்!

இன்றைய நிலையில் 4ஜி சேவையை அறிமுகம் செய்வதில் ஏர்டெல், ரிலையன்ஸ், ஐடியா செல்லுலார் மற்றும் வீடியோகான் போன்ற இந்தியாவின் மிக முக்கியத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிபோட்டு வருகின்றன. இதில் ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தான் 4ஜி சேவையை முதலில் அறிமுகம் செய்ய வேண்டும் என மும்முரமாகச் செயலாற்றி வருகின்றன.

தற்போதைய நிலையில், டெல்லி, மும்பை, பெங்களூரு, பூனே, கொல்கத்தா, சென்னை மற்றும் சண்டிகர் ஆகிய இடங் களில் 4ஜி தொழில் நுட்பத்திலான பிராட்பேண்ட் வயர்லெஸ் சேவையை பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த நிறுவனம் தற்போது 3ஜி சேவை விலையிலேயே 4ஜி சேவையை வழங்கி இருக்கிறது. இதன் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் 4ஜி போஸ்ட்பெய்டு திட்டங்களைக் குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து 1,500 ரூபாய் வரை செலுத்தி இந்தச்

சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

300 எம்பி (ரூ.100), 1ஜிபி (ரூ.250), 2ஜிபி (ரூ.450), 3ஜிபி (ரூ.650), 4ஜிபி (ரூ.750), 5ஜிபி (ரூ.850), 6ஜிபி (ரூ.950), 8ஜிபி (ரூ.1,250), 10ஜிபி (ரூ.1,500) என்கிற விலையில் 4ஜி சேவையை பார்தி ஏர்டெல் வழங்குகிறது. இதற்கான 4ஜி வயர்லெஸ் மோடம்கள் அல்லது டேட்டா கார்டுகள் வாங்குவது அவசியமாகும்.

வீடியோகான் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்கள் தங்களின் 4ஜி சேவையை இன்னும் சில மாதங்களில் வழங்க இருப்பதாகத் தெரிவித்து இருக்கின்றன. பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங் கள் 4ஜி சேவை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், சகல வசதிகளும், தொழில்நுட்ப சாதனங்களையும் கொண்ட அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இந்த விஷயத்தில் வாய்திறக்கா மலே இருப்பது மர்மமாகவே இருக்கிறது.

 
4ஜி-யின் ஜாம்பவான்! 

நம் நாட்டில் செல்போனைப் பயன்படுத்து வதில் மிகப் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்த ரிலையன்ஸ் நிறுவனம், 4ஜி சேவை வழங்குவ தில் ஜாம்பவானாக இருக்கப் போகிறது. 4ஜி சேவையை இந்தியா முழுக்க அளிப்பதற் காகவே ரிலையன்ஸ் ஜியோ  (Reliance Jio) என்கிற நிறுவனம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டு களில் 4ஜி சேவைக் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்காக 77,000 கோடி ரூபாயை முதலீடு செய்தி ருக்கிறது. அதுமட்டுமின்றி,  இந்தச் சேவையை மும்பை, டெல்லி, குஜராத் எனப் பல இடங்களில் இலவசமாக வழங்கி பரிசோதனை மேற்கொண்டுள்ளது.

மேலும், 4ஜி சேவையை அறிமுகம் செய்த அடுத்த 50 மணி நேரங்களில், 50 லட்சம் வாடிக்கையாளர்களை 4ஜி சேவைக்குள் கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளது. 4ஜி தொழில்நுட்ப நடைமுறைக்குப் பிறகு, இந்த நிறுவனத்தின் மூலதனம் மீதான சராசரி வருமானம் 7% அதிகரித்திருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை மேம்பாட்டுக்காக பெருமளவில் முதலீடு செய் தாலும், மேலதிகமாக தேவைப் படும் தொகைக்கு வங்கிகளிடம் இருந்தும் தனியார் நிறுவனங் களிடம் இருந்தும் கடன் வாங்குகிறது. கொரியா டிரேடு இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷ னிடம் (K-sure) 750 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,750 கோடி) கடன் வாங்கியிருக்கிறது.

சமீபத்தில் நடந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களின் கூட்டத்தில் 4ஜி சேவையை வருகிற டிசம்பர் மாதத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப் போவதாகவும், அதற்கு முன்பாக வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சில மாதங்கள் அவர்கள் 4ஜி சோதனைச் சேவையை மேற்கொள்வார்கள் என்பதையும் தெரிவித்திருக்கிறார் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி.

4ஜி சேவையைப் பயன்படுத்த எல்டிஇ தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட்போன் அவசியம் என்பதால், அந்தவகை ஸ்மார்ட் போன்களையும் 4,000 ரூபாய்க்கு குறைவான விலையில் டிசம்பர் மாதத்துக்குள் விற்பனைக்கு வெளியிடப் போவதாக ரிலையன்ஸ் ஜியோ தெரிவித் துள்ளது.


ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்கள் இதில் வேகமாகக் களமிறங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎஸ் போன்ற டெலிகாம் நிறுவனங்கள் வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருப்பது ஆச்சர்யத்தைத் தருகிறது. இந்த நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவையை விரைவில் வழங்காமல் போனால், பிரச்னை அவர்களுக்குத்தான்.

4ஜி தொழில்நுட்பத்தின் வேகம் உண்மையிலேயே நாம் எதிர்பார்ப்பதைவிட மிக அதிகமானது. அது தரவிருக்கும் புதுவித அனுபவத்தை அனுபவிக்க நாம் எல்லோரும் காத்திருப்போமாக!

செ.கார்த்திகேயன்

4ஜி-யால் இணைந்த அம்பானிகள்!
எட்டு ஆண்டுகளாகப் பிரிந்திருந்த சகோதரர்களான முகேஷ் அம்பானியையும், அனில் அம்பானியையும் இணைத்த பெருமை 4ஜி தொழில் நுட்பத்தையேச் சேரும். முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்துக்கு 4-ஜி சேவையை அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்தே இருவருக்குமான இணைப்பு ஏற்பட்டிருக்கிறது. தற்போது, முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோவும் தான் வழங்க இருக்கும் 4ஜி சேவைக்கான தொழில்நுட்ப கட்டமைப்புகளை அனில் அம்பானிக்குச் சொந்தமான நிறுவனத்தைப் பயன்படுத்தி செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

Saturday, July 04, 2015

சுச்ருஷையும் ஒபீடியன்ஸும்


இங்கேயும் லோக ஜனங்களின் ஜகமத்யத்தை (ஒரே போன்ற சிந்தனையை) காட்டுவதாக ஒன்று பார்க்கிறோம். Obey என்ற வார்த்தையிலிருந்தே Obedience வந்திருப்பதாக எவரும் புரிந்து கொள்ள முடியும். லாடினிலிருந்து வந்த அந்த (ஒபீடியன்ஸ் என்ற) வார்த்தைக்கு ‘கவனமாகக் கேட்டுக் கொள்வது’ என்றே மூலத்தில் அர்த்தம் என்றும் சொல்கிறார்கள். ‘சுச்ருஷை’ என்று ஒன்று நாம் சொல்கிறோம். குரு சுச்ருஷையையே சிஷ்யனுக்குத் தலையாய கடமையாகச் சொல்கிறோம். அதற்கும் நேர் அர்த்தம் ‘கேட்டுக் கொள்கிறது’தான். ஆக, கீழ்ப்படிதல் என்பதற்கு இங்கிலீஷ் வார்த்தையான ஒபீடியன்ஸ், பணிவிடை என்பதற்கு நம் தேசத்து வார்த்தையான சுச்ருஷை ஆகிய இரண்டும் ‘கேட்டுக் கொள்வது’ என்ற ஒரே அர்த்தத்தின் அடியாகத்தான் இருக்கிறது. கீழ்ப்படிவதும் பணிவிடையும் ஒன்றையொன்று இட்டு நிரப்பிக் கொள்கிற விஷயங்கள். இரண்டிற்கும் இரண்டு வேறே பாஷைகளில் ஒரே அர்த்தம். ஏன் அப்படி இருக்கணுமென்றால், ‘கேட்டுக் கொள்வது’ என்றால், என்ன கேட்டுக் கொள்கிறோமோ அந்தப்படியே செய்ய வேண்டும் என்பதுதான் உள்ளர்த்தம். ‘சொன்னதைக் கேளு’, ‘சொன்னபடிக் கேக்கறதில்லே’ என்றெல்லாம் சொல்லும்போது அதுதானே அர்த்தம்? 'Hear'-க்கும் அந்த அர்த்தமுண்டு. பெரியவர்கள் சொன்னபடி நடப்பதுதான் நிஜமான சுச்ருஷையும் ஒபீடியன்ஸும். அதனால்தான் அப்படி வார்த்தைகள் ஏற்பட்டிருக்கின்றன.


தோனி - கேப்டன் குழப்பம்!



2015 உலகக்கோப்பைக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது தோனி டெஸ்ட் அணியில் இருந்து திடீரென ஓய்வுபெற்று பாதியில் ஆடுவதை நிறுத்தினார். அதற்குக் காரணம் அவரது விருப்பத்துக்கு எதிராக பந்துவீச்சு மற்றும் களத் தடுப்பு பயிற்சியாளர்களை நீக்கி, ரவி சாஸ்திரியை அணி இயக்குநராக கிரிக்கெட் வாரியம் நியமித்ததுதான். ஒரு பக்கம் தோனியின் காட்ஃபாதரான ஸ்ரீனிவாசன் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியை இழந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான ஊழல் குற்றச்சாட்டில் தோனியும் லேசாய் சிக்கி இருந்தார்.

இன்னொரு பக்கம் அணிக்குள் விராட் கோலி-சாஸ்திரி அணி வலுவாகிவிட தோனி திக்குமுக்காடிப் போனார். இந்தக் கட்டத்தில் தேர்வாளர்கள் தோனியிடம் அவர் உலகக்கோப்பை முடிந்ததும் ஒருநாள் அணியில் இருந்தும் ஓய்வுபெற வேண்டும் என்று தீர்மானமாகக் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அம்முடிவை தள்ளிப்போட்டபடியே வருகின்றனர். இந்தியா உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடி அரையிறுதிவரை வந்து தோற்றது. ஆனால் அதற்குப்பின் அடுத்த உலகக்கோப்பை வரை இந்தியாவுக்கு தோனி தலைமை தாங்குவாரா என்பது தெளிவில்லை.

இந்தக் குழப்பங்கள் காரணமாய் சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச ஒருநாள் தொடரை இந்திய அணி கேவலமாய் ஆடி இழந்தது. இதற்கு அணியின் ஒற்றுமையின்மையே காரணம் எனக் கூறப்பட்டது. கோலி ஒரு பக்கம் தோனிக்கு எதிராக பூடகமான குற்றச்சாட்டுகளை மீடியாவில் வைத்தார். தோனியின் முன்னாள் பயிற்சியாளர் “இந்திய அணிக்குள் தோனிக்கு எதிராக் குழு அரசியல் நடக்கிறது” என்றார்.

தோனியும் “அணித் தோல்விக்குப் பொறுப்பேற்று தான் பதவி விலகத் தயார்” என்றார். ஒரு பழைய படத்தில் என்.எஸ் கிருஷ்ணனின் வீட்டுக்கு யாரோ ஒரு குழந்தை வந்து அவரை அப்பா என்று அழைக்கும். அவர் குழம்பிக் கொண்டிருக்கையில் நிஜ அப்பா வந்துவிடுவார். இருவரையும் மாறி மாறி பார்த்த குழந்தை சொல்லும்: “ஹை எனக்கு ரெண்டு அப்பா.”

இப்போது இந்திய அணி வீரர்களும் இவ்வாறே தமக்கு யார்தான் தலைவர் எனத் தெரியாமல் குழம்புகிறார்கள். விராட் கோலியை ஆதரித்தால் டெஸ்ட் அணியில் இடம் பெறலாம். தோனி இன்னும் ஒன்றிரண்டு வருடங்களே ஒருநாள் அணியின் தலைவராக இருப்பார் என்பதால் அவரை ஆதரித்தால் அக்காலம்வரை அணியில் இடம் உறுதி. அதனால் அவர்கள் இருவரையும் ஆதரிக்கிறார்கள். இரு குழுவிலும் இருக்கிறார்கள்.

ஒரு பேட்டியில் ரஹானே, கோலியின் தலைமையை மிகவும் புகழ்ந்து பேசிவிட்டு கூடுதலாக “தோனியும் நல்ல கேப்டன்தான்” என்றார். அஷ்வின் ஒரு பேட்டியில் “நான் தோனிக்காக உயிரையும் கொடுப்பேன்” என்று கூறிவிட்டு, “கோலிக்காகவும்தான் கொடுப்பேன்” என்கிறார். இப்படி இப்போது இந்திய அணி வீரர்களுக்கு ரெண்டு அப்பா.

மீடியாவிலும் ரசிகர்கள் மத்தியிலும் தோனி - கோலி இடையே மோதல், பிணக்கு என்று செய்திகள் பரவலாகப் பேசப்பட ஆரம்பித்தவுடன், அப்படி இல்லை என்று மறுப்புகளும் வர ஆரம்பித்திருக்கின்றன. ரவி சாஸ்திரி, “தோனி, விராட் கோலி இடையே எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை,” என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஆனால், அடுத்து நடைபெற இருக்கிற ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்தின்போது ஒரு புது அணி தோனியின் தலைமையில் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. வழக்கமான குழப்பங்களின் தொடர்ச்சியாக இப்போது ரஹானே தலைவராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். ரஹானேவுக்கு ஒருநாள் ஆட்டத்தில் சரியாய் மட்டையாட வருவதில்லை எனக் கூறி தோனி அவரை அணியில் இருந்து சமீபத்தில் நீக்கி இருந்தார்.

ஒரே வாரத்தில் ரஹானே ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்குத் தலைவராக்கப்பட்டவுடன், தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பட்டேலிடம் மீடியா, தோனியின் விமர்சனம் பற்றி கேள்வி கேட்டது. அதற்குப் பதிலளிக்க மறுத்த அவர் “ரஹானேவுக்கு எங்கள் முழு ஆதரவும் உண்டு” என்று பொதுவாகக் கூறினார். ஆனால் என்னதான் அவர் இத்தொடரில் சிறப்பாய் ஆடினாலும் ஆறு மாதங்களுக்குப் பிறகு நடக்கப்போகும் ஒருநாள் தொடரில் தோனியின் தலைமையிலான இந்திய அணியில் ரஹானே இடம் பெறுவது சிரமம்தான். அணியில் இடம் ஸ்திரமில் லாதவர் எப்படி அணித்தலைவராக உறுதியுடன் செயல்பட முடியும்?

வேறு சில அடிப்படையான கேள்விகளும் எழுகின்றன:

1) தோனிக்கு அடுத்த ஆறு மாதங்கள் ஓய்வுள்ள சந்தர்ப்பத்தில் அவர் இத்தொடரில் பங்கேற்றிருக்கலாமே. அவர் ஏன் ஆடவில்லை?

2) தோனியும் கோலியும் ஓய்வுகொள்ளும் பட்சத்தில் ரோஹித் ஷர்மாவை தலைவர் ஆக்கியிருக்கலாமே? அவர் கோலிக்குப் போட்டியாக வந்து விடக்கூடாதே என்கிற பதற்றமா?

3) ஏன் இந்திய அணிக்கு இன்னும் பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை? ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக்குவதற்கு தோனி எதிர்ப்பு தெரிவிக்கிறாரா?

4) ஜிம்பாப்வேவுக்கு செல்லும் இந்திய அணியில் அனுபவம் குறைந்த வீரர்கள் அதிகம் என்பதால் ஒரு பயிற்சியாளர் அவசியம் எனும்போது, ஏன் பயிற்சியாளர் இல்லாமல் அணி செல்கிறது?

5) தேர்வு செய்யப்பட்டுள்ள மாற்று அணியின் சராசரி வயது 30. இவ்வீரர்கள் அடுத்த உலகக் கோப்பையின் போது 34 வயதை எட்டி விடுவார்கள். 35 வயதான ஹர்பஜனும் அணியில் இருக்கிறார். இந்த வயதான வீரர்கள் தான் இந்தியாவின் எதிர் காலமா?

இப்படி பல இடியாப்பச் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி! நடக்கப் போவது என்ன? பொறுத் திருந்து பார்ப்போம்.

ஆர். அபிலாஷ்

Wednesday, July 01, 2015

ஹெல்மெட் - ஏன்... எதற்கு... எப்படி ?

இனிமேல் பைக்கில் கிளம்பும்போது லைசென்ஸ், ஆர்.சி புத்தகம், இன்ஷூரன்ஸ் - இவற்றோடு ஹெல்மெட்டையும் மறக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்த ஹெல்மெட்டை தலையில் மாட்டிய பிறகே, பைக்கை ஸ்டார்ட் செய்யுங்கள். டேங்க்கில் தொடையிடுக்கில் வைத்துக்கொண்டோ, ரியர்வியூ மிரரில் சொருகியபடியோ ஹெல்மெட்டை வைத்துக்கொண்டு பயணிப்பது - சட்டத்தை மட்டுமல்ல; உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஏமாற்றுவதற்குச் சமம்!

‘ஹெல்மெட் இல்லையென்றால் லைசென்ஸ் பறிக்கப்படும்; வாகனம் சீஸ் செய்யப்படும்’ போன்ற கடுமையான சட்ட திட்டத்தையெல்லாம் விட்டுத்தள்ளுங்கள்; ‘ஹெல்மெட் போட்டா காது கேட்கவில்லை... வேர்த்துக் கொட்டுது பாஸ்... முடி போச்சுன்னா மொத்தமும் போச்சு’ என்று ஃபீலிங் டேக்கா விடுபவர்கள் அனைவருக்கும், ஹெல்மெட் விஷயத்தில் ஆப்ஷன் இருக்கிறது.

ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?

எல்லோருக்கும் பொதுவான பயம் இதுதான். தலைவலி, நீர் கோர்த்தல், காது கேட்கவில்லை போன்ற உடல் உபாதைகள் வருவதாகச் சொல்லித்தான் பலர் ஹெல்மெட்டைத் தவிர்க்கின்றனர். ஆனால், இவை எல்லாமே பொய் இல்லை. பல நாள் துவைக்காத அழுக்குச் சட்டை போட்டால், எப்படி நம் உடம்பில் அரிப்பு ஏற்படுமோ, அதுபோலத்தான் ஹெல்மெட்டும். தினசரி துவைத்த காட்டன் கேப் அல்லது கர்ச்சீஃப்பைத் தலையில் கட்டிக்கொண்டு ஹெல்மெட் அணிந்தால், எந்தப் பிரச்னையும் வராது. சேவியர், ஆக்ஸர், வேகா போன்ற பிராண்டுகளில் ஹெல்மெட்டின் உள்பக்கத்தை அகற்றி, துவைத்துப் பயன்படுத்தலாம். துவைத்த இன்டீரியரை வெயிலில் அரை நாள் காயவைத்து அணிந்தால், தலையில் அரிப்பு ஏற்படுவது நிற்பதுடன், முடி உதிர்தலும் தடைப்படும். அகற்ற முடியாத உள்பக்கம் கொண்ட ஹெல்மெட் வாங்குபவர்கள், தினசரி கர்ச்சீப் அல்லது கேப் மாற்ற வேண்டும். மேலும், வாரம் ஒருமுறை ஹெல்மெட்டின் உள்பக்கம் வெயிலில் படுவதுபோல அரை மணி நேரம் வைக்க வேண்டும்.

‘ரொம்ப வேர்க்குதுங்க’ என்று சாக்கு போக்கு சொல்பவர்கள், வென்ட்டிலேஷன் உள்ள ஹெல்மெட்டுகள் பயன்படுத்தலாம். 6 முதல் 8 ஏர் வென்ட்டுகள் உள்ள ஹெல்மெட்டுகள் இப்போது மார்க்கெட்டில் இருக்கின்றன. ஏர் வென்ட் என்றவுடன், குபுகுபுவென காற்று அடிக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாம். உள்ளே வரும் சூடான காற்றை வெளியே தள்ளும் வசதிதான் இது. பைக் ஓட்டும்போது, மறக்காமல் ஹெல்மெட் வென்ட் திறந்திருக்கிறதா என்று கவனியுங்கள். அதேபோல், மழை நேரங்களில் பைக் ஓட்டுபவர்களுக்கும் வசதியான ஹெல்மெட்டுகள் இருக்கின்றன. வேகா, ஸ்டட்ஸ் போன்ற பிராண்டுகளில், ஹெல்மெட்டின் முன் பக்கம் நீண்டுள்ள ஷேட் வழியாக மழை நீர் வடிந்துவிடும் என்பதால், மழை நீர் நேராக வைஸரில் அறைந்து பார்வையை மறைப்பதை இது தவிர்க்கும். இவற்றுக்கு ‘ரெயின் ரெசிஸ்ட் ஹெல்மெட்’ என்று பெயர்.

ஹெல்மெட்டுகளில் எத்தனை வகை உள்ளன?


“உலகம் முழுக்க ஃபுல்ஃபேஸ், ஓப்பன் ஃபேஸ், ஃப்ளிப்-அப், டூயல் பர்பஸ், த்ரீ குவார்ட்டர், மாடுலர், ஹாஃப், மோட்டோகிராஸ் என்று 8 வகைகள் ஹெல்மெட்டில் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் புழக்கத்தில் இருப்பவை நான்கு வகைகள்தான்.

1. ஓப்பன் ஃபேஸ் - அதாவது திறந்த வகை ஹெல்மெட். இதுதான் பேஸிக் மாடல். பெண்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், இதை லேடீஸ் ஹெல்மெட் என்கிறார்கள். ஆனால், இதை ஆண்களும் பயன்படுத்தலாம். வேகமாகப் பயணிக்காத வர்களுக்கு, இது பெஸ்ட். தலைப் பகுதி முழுவதையும் இது பாதுகாத்தாலும், முகத்துக்கு வைஸர் மட்டுமே பாதுகாப்பு.

2. ஃபுல் ஃபேஸ் - பொதுவாக, நாம் அனைவரும் பயன்படுத்தும் ஹெல்மெட் இது. தாடை முதல் தலை முழுவதையும் பாதுகாக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பழைய ஃபுல் ஃபேஸ் மாடலில், ஏர் வென்ட்டுகள் இல்லாமல் இருந்தன. இப்போது வரும் அனைத்து மாடல்களிலும் ஏர் வென்ட்டுகள் இருப்பதால், வியர்க்குமோ என்று பயப்படத் தேவை இல்லை.


3. ஃப்ளிப் அப் - இதுவும் ஃபுல் பேஸ் மாடல்தான். ஆனால், வெயிலில் முகம் வியர்க்கக் கூடாது என்று விரும்புபவர்கள், கீழே உள்ள பட்டனைப் பயன்படுத்தி, தாடைப் பகுதியை மேலே ஏற்றிக்கொள்ளலாம். இது, பார்ப்பதற்கு ஓரளவு ஓப்பன் ஃபேஸ் மாடல் போல இருக்கும். இதிலேயே ஆட்டோ கூலிங் ஆப்ஷனும் உண்டு. அதாவது, வெயிலில் செல்பவர்களுக்கு வைஸர் இல்லாமல், கண்களை மட்டும் கவர் செய்யுமாறு கூலிங் கிளாஸை இறக்கிக்கொள்ளலாம். இரவில் வெளிச்சமாகவும், பகலில் கூலிங்காகவும் இது இருப்பதால், ஓட்டுவதற்கு சுகானுபவமாக இருக்கும். ஆனால், ஆபத்து நேரத்தில் இதில் முழுப் பாதுகாப்பு கிடைக்காது.

4. மோட்டோ கிராஸ் - இதுவும்  ஒரு வகையில் ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்தான். இதில் தாடைப் பகுதிக்கென்று சிறப்புப் பாதுகாப்பு இருக்கும். இதை ‘ஸ்கெலிட்டன் ஹெல்மெட்’ என்றும் சொல்கிறார்கள். பைக் ஓட்டும்போது  கீழே விழ நேர்ந்தால், முகம் தரையில் அடிபட வாய்ப்பு இருக்கிறது. அந்த மாதிரி நேரங்களில், இந்த மோட்டோ கிராஸ் ஹெல்மெட் உங்களுக்கு உற்ற நண்பனாக இருக்கும். முன்பு டர்ட் பைக் ரேஸ்களில்தான் இதைப் பெரிதும் பயன்படுத்தினார்கள். இது, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால், இப்போதைய இளைஞர்களை இது மிகவும் கவரும். இதில், தலைக்கு மேலே சன் ஷேடு இருப்பதால், வெயில் மற்றும் மழை உங்களை நேரடியாகத் தாக்காது!. 

ஹெல்மெட்டுகள் எப்படித் தயாராகின்றன?

இந்தியாவில், முழுக்க முழுக்க பாலி கார்பனேட் கலவையால் ஹெல்மெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அதாவது, பிளாஸ்டிக் மற்றும் தெர்மோகோல் சேர்ந்த கலவைதான் பாலிமர். தரமான ஹெல்மெட்டுகளில் இந்தத் தடிமனான பகுதிக்குக் கீழே 7 அடுக்குகளால் ஆன ஃபைபர் லேயர்கள் இருக்கும். இவை தரையில் மோதும்போது கிடைக்கும் அழுத்தத்தை ஈஸியாக்கும். லைட் வெயிட்டுக்கும், ஃப்ளெக்ஸிபிளிட்டிக்கும் பாலிமர்தான் பெஸ்ட். இதற்கு அடுத்த தரம், ஃபைபர் கிளாஸ் மெட்டீரியல். MT, AGV போன்ற இத்தாலியன் ஹெல்மெட்டுகளில் ஃபைபர் கிளாஸ் பயன்படுத்தப்படுகின்றன. இது, மோதும்போது ஏற்படும் வேகத்தைக் குறைக்கும் தன்மைகொண்டவை. உச்சபட்சமாக, கார்பன் ஃபைபர் மெட்டீரியல் கொண்டு தயாரிக்கப்படும் ஹெல்மெட்டுகள்தான் உலகத் தரம் வாய்ந்தவை. மோட்டோ ஜீபி, ஃபார்முலா-1 போன்ற ரேஸ்களில் பயன்படுத்தப்படும் ஹெல்மெட்டுகள் அனைத்தும் கார்பன் ஃபைபர் கொண்டு தயாரிக்கப்பட்டவை. சில கார்பன் ஃபைபர் ஹெல்மெட்டுகளின் எடை 1.3 கிலோ அளவுதான் இருக்கும். ஆனால், பாதுகாப்பில் இவைதான் பெஸ்ட். நம் நாட்டில் நெக்ஸ், AGV போன்ற கார்பன் ஃபைபர் ஹெல்மெட்டுகள் 28,000 ரூபாய் முதல் கிடைக்கின்றன.

எப்படி வாங்க வேண்டும்?

ஹெல்மெட், நம் தலையோடு மிக இறுக்கமாகவும் இருக்கக் கூடாது; மிகத் தளர்வாகவும் இருக்கக் கூடாது. ஹெல்மெட் போட்டுக்கொண்ட பிறகு, தலையை இட வலமாக அசைத்துப் பாருங்கள். லேசாக நகர்ந்தால், அது உங்களுக்குச் சரியான ஹெல்மெட். அதிகமாக நகர்ந்தால், மிகவும் தளர்வாக இருக்கிறது என்று பொருள். காது கேட்க வேண்டும்; காற்று வர வேண்டும் என நீங்கள் தளர்வாக ஹெல்மெட் அணிந்தால், ஸ்பீடு பிரேக்கர்களில் ஹெல்மெட் திரும்ப வாய்ப்பு உண்டு. அதேபோல், இறுக்கமாகவும் இருக்கக் கூடாது. ஹெல்மெட் அணியும்போது, இரு பக்கமும் உள்ள ஸ்ட்ராப்புகளை நன்கு இழுத்து லாக் செய்ய வேண்டும். இதுதான் ஹெல்மெட் அணிய வேண்டிய சரியான முறை.

ஹெல்மெட் ஏன் அணிய வேண்டும்?

இந்தியாவில் 45 சதவிகித விபத்துகள், ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் விபத்துகளே! தலையில் மட்டும் அடிபட்டு மூளைச் சாவு ஏற்பட்டு வாழ்வை இழப்பவர்களின் நிலை மிகவும் பரிதாபம். ஹெல்மெட் அணிந்து பைக்கில் சிக்னலில் நின்றுகொண்டிருந்த ஒருவர், தலைக்கு மேலே சாய்ந்து விழுந்த மின் கம்பத்தில் இருந்து உயிர் தப்பிய கதையும் உண்டு. எனவே, சாலை விபத்துகளில் மட்டுமின்றி, பொதுவாகவும் நம் அழகான முகம் பாதுகாப்பாக இருக்க ஹெல்மெட் அவசியம்! ஹெல்மெட்டை சுமையாக நினைக்காதீர்கள்; சுகமாக அனுபவியுங்கள்!

தரமான ஹெல்மெட்டை எப்படிக் கண்டுபிடிப்பது

ஹெல்மெட் அணிவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட ஹெல்மெட்டைத் தேர்ந்தெடுப்பது ரொம்ப முக்கியம். காஸ்ட்லியாக வாங்க விரும்புபவர்கள் ஜெர்மன், அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த இம்போர்ட்டட் ஹெல்மெட்டுகள் வாங்கலாம். ஐரோப்பா பிராண்டுகளில் ECE குறியீடு இருக்கும். Economic Commissions for Europe என்பதுதான் இதன் சுருக்கம். இதை கவர்ன்மென்ட் ஆஃப் யுகே வெப்சைட்டில் செக் செய்து கொள்ளலாம். வட, தென் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த ஹெல்மெட்டுகளில் DOT (Department of Transportation) எனும் கோட் நம்பரும் சர்ட்டிஃபிகேட்டும் இருக்கிறதா என்று செக் செய்துகொள்ளுங்கள்.

 நம் ஊர்களில் DOT ஸ்டிக்கர்கள் டூப்ளிகேட்டாகக் கிடைக்கின்றன. ஆனால் ஒரிஜினல் ஹெல்மெட்களில் DOT கோடு, மோல்டு செய்யப்பட்டிருப்பதை வைத்துக் கண்டுபிடிக்கலாம். ஜெர்மன் தயாரிப்பில் SCHNELL என்ற குறியீட்டை வைத்துக் கண்டுபிடிக்கலாம். இதில் கவனமாக இருக்க வேண்டும். இந்தியாவுக்கு ISI முத்திரை. இதிலும் நிறைய போலியான ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவதால், கவனம் தேவை. ISI முத்திரை உண்மைதானா என்பதைக் கண்டறிய, 044-22541442, 22541216 ஆகிய எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அல்லது www.bis.org.in  என்ற இணையதளத்தில், ISI மற்றும் CM/L நம்பரை வைத்துச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.






கேட்ஜெட்ஸ் / GADGETS

நிக்கான் D3300/கேமரா

‘30,000 ரூபாய்க்குள் கிடைக்கும் சூப்பர் பெர்ஃபாமென்ஸ் டிஜிட்டல் SLR கேமரா, நிக்கான் D3300. பவர்ஃபுல் ப்ராசஸர், 24.2 மெகாபிக்ஸல் இமேஜ், 100-12,800 ரேஞ்ச் ISO என டெக்னிக்கலாக செம ஸ்ட்ராங். குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பான படங்களை எடுக்க முடிவது இதன் பளஸ். கேனான் கேமராக்களுக்குப் போட்டியாக, HD வீடியோவும் எடுக்க முடியும். பேட்டரி சார்ஜ், நீண்ட நேரம் நிற்கிறது. 460 கிராம் மட்டுமே எடைகொண்டது என்பதால், செம லைட் வெயிட். 18-55 கிட் லென்ஸோடு கிடைக்கிறது. இதன் LCD ஸ்க்ரீனைத் திருப்ப முடியாது என்பதோடு, பில்ட் இன் ஆட்டோஃபோகஸ் வசதியும் இல்லை என்பது இதன் மைனஸ்.


சோனி எக்ஸ்பீரியா C4/ஸ்மார்ட் போன்

செல்ஃபி ஸ்பெஷல் ஸ்மார்ட்போன், இந்த சோனி எக்ஸ்பீரியா C4. 5.5 இன்ச் ஃபுல்-HD டிஸ்ப்ளே, Bravia Engine 2 டெக்னாலஜி, 64-பிட் 1.7 GHz ஆக்டா-கோர் மீடியாடெக் ப்ராசஸர், மலி கிராஃபிக்ஸ் ப்ராசஸர் என டெக்னாலஜியில் கில்லியாக இருக்கிறது C4. ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் 13 மெகா பிக்ஸல் பின்பக்க கேமரா, 5 மெகா பிக்ஸல் முன்பக்க கேமரா, 25 மிமீ வைடு-ஆங்கிள் லென்ஸ் என போட்டோகிராஃபி ஆர்வலர்களையும் ஈர்க்கிறது இந்த சோனி. 2 GB RAM, 16 GB இன்டர்னல் மெமரி உள்ளது. 2600mAH பேட்டரிதான் என்பதால், சார்ஜரை அவசரத்துக்கு எப்போதும் வைத்திருக்க வேண்டியிருக்கும்.


மைக்ரோசாஃப்ட் வாங்கிய Wunderlist/App

தீபாவளி டிக்கெட் புக்கிங் எப்போது ஆரம்பம்; வீட்டில் கேஸ் எப்போது மாற்றினோம்; எத்தனை தண்ணீர் கேன் வாங்கினோம் என்று நினைவு வைத்துக்கொள்ள, காலண்டரில் குறித்து வைத்துக்கொண்டிருந்த காலம் இப்போது இல்லை. ஸ்மார்ட்போன் ஆப்ஸ்-ல் பிளான் செய்வதுதான் இப்போது ட்ரெண்ட். 13 மில்லியன் பயனீட்டாளர்களைக்கொண்ட Wunderlist-தான் திட்டமிடலுக்கு பெஸ்ட் அப்ளிகேஷன். ரிமைண்டர்கள், மளிகை சாமான் லிஸ்ட், நோட்ஸ் என எக்கச்சக்க வேலைகளை ஒரே ஆப்பில் பதிவேற்றி வைக்கலாம். இதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிவதும் பெரிய ப்ளஸ். மைக்ரோசாஃப்ட் நிறுவனமே  இந்த அப்ளிகேஷனை வாங்கிவிட்டது என்றால், இது எவ்வளவு பெரிய சூப்பர்ஹிட் எனப் பார்த்துக்கொள்ளுங்கள்.

ரிலையன்ஸ் ஜியோ 4G/நியூஸ்

ஸ்மார்ட்போன் மார்க்கெட்டுக்குள் அடி எடுத்துவைக்கிறது ரிலையன்ஸ். வரும் டிசம்பர் மாதத்துக்குள் ஜியோ என்ற பெயரில் 4G நெட்வொர்க்குடன் ஸ்மார்ட்போன்களை விற்பனைக்குக் கொண்டுவருகிறது. இந்த போனின் விலை 4,000 ரூபாய்க்குள் இருக்கும் என்று, ஸ்மார்ட்போன் மார்க்கெட்டையே அதிர வைத்திருக்கிறது ரிலையன்ஸ். மேலும், ரிலையன்ஸ் 4G சேவையின் மாதாந்திரக் கட்டணம் 300 - 500 ரூபாய்க்குள்தான் இருக்கும் என்றும் அறிவித்துள்ளது ரிலையன்ஸ். 2017-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் 100 சதவிகித நெட்வொர்க் கவரேஜ் இருக்கும் என்கிறது ரிலையன்ஸ்.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் P690/ Tab


கேன்வாஸ் டேப் P690 3G டேப்லட்டை 8,999 ரூபாய்க்கு இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது மைக்ரோமேக்ஸ். 1280x800 ரெசல்யூஷன் டேப்லெட்களில் மெகா சைஸ் 8 இன்ச் ஸ்கிரீனைக் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 4.4.4 கிட்கேட் ஆபரேட்டிங் சிஸ்டம் இருந்தாலும், ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் அப்டேட் விரைவில் வந்துவிடுமாம். 1.3 GHz குவாட்-கோர் இன்டெல் Atom பிராசஸர், 1 GB RAM மெமரி, 8 GB இன்டர்னல் ஸ்டோரேஜ், 5 மெகாபிக்ஸல் ரியர் கேமரா, 2 மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா  என பேஸிக்கான டெக் பேக்கேஜையே கொண்டுள்ளது, இந்த கேன்வாஸ் டேப்.

ராஜா ராமமூர்த்தி