தமிழர்கள் அத்தனை பேரையும் குடி நோயாளிகளாக்க முழுவீச்சில் முடிவு கட்டிவிட்டார்கள்போல!
சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் நட்சத்திர ஹோட்டல் 
பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்து 
உள்ளது. இதன்படி, இனி இரவு முழுவதும் குடிநோயாளிகள் மது குடிக்கலாம். 
'கையில் காசு இருந்தால் குடிக்கலாம். காசு இல்லையா... வழியில் இருக்கும் 
ஏடிஎம் மெஷினை உடைக்கலாம்’ என்று ஆகப்போகிறது நிலைமை!
ஸ்டான்லி மருத்துவமனையின் குடல், இரைப்பைச் சிகிச்சைப் பிரிவுக்குள், மருத்துவமனையைத் தாண்டி யும் எதிரொலித்துக்கொண்டு இருந்தது அந்த நோயாளியின் அலறல். ரத்த வாந்தி... பார்க்கவே பதற்றமாக இருந்தது.
இங்கு வெளி நோயாளிகள் சிகிச்சைப் பிரிவுக்கு வயிறு வீங்கிய 
குடிநோயாளிகள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். இவர்களை 'அசிட்டீஸ்’ 
(Ascites) என்கிறார்கள் மருத்துவர்கள். ஸ்கேன் எடுத்து, வயிற்றில் பெரிய 
ஊசியைச் செருகி, வீச்சம் எடுத்த நீரை வெளியேற்றி, திரும்பவும் தேதி 
குறிப்பிட்டு வரச் சொல்லி அனுப்புகிறார்கள். இவ்வளவுக்கும் இந்த நோயாளிகள் 
குடிப்பழக்கத்தை பல மாதங்களாக நிறுத்தியவர்களாம். ஆனால், ஏற்கெனவே அவர்கள் 
குடித்த குடி... தனது வேலையை காட்டுகிறது. இவர் களுக்கு ஒவ்வொரு நிமிடமும் 
வயிற்றில் சிறிது, சிறிதாக நீர் தேங்கிக்கொண்டே இருக்கும். அது எப்போது 
குணமாகும் என்றும் சொல்ல முடியாது.
குடியினால் வரும் உடல் ரீதியான நோய்களில் கொடுமையானது 'லிவர் 
சிரோஸிஸ்’(Lever cirrhosis). இதுதான் க்ளைமாக்ஸ். குடிநோய்களின் தலைவன் 
இவன். சுமார் 10 ஆண்டுகளாக தினமும் மது அருந்துபவருக்கு கட்டாயம் இந்த நோய்
 வரும் என்கிறார்கள் மருத்துவர்கள். நம் உடலின் வயிற்றுப்பகுதியின் வலது 
பக்கத்தில் சுமார் ஒன்றரைக் கிலோ எடையில் முக்கோண வடிவத்தில் கம்பீரமாக 
அமர்ந்து இருக்கும் உறுப்புதான் கல்லீரல். மூளை மற்றும் இதயத்துக்கு இணையான
 முக்கியத்துவம் பெற்ற உறுப்பு இது. ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?நமது உடலில் இருக்கும் ரத்தத்தைச் சுத்தம் செய்வது கல்லீரல்தான். தவிர, 
தேவையற்ற ஒவ்வாமை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களையும் பிற நச்சுப் 
பொருட்களையும் கல்லீரல்தான் அழித்து, வெளியே துரத்திவிடுகிறது. தவிர, 
காயம்பட்டு ரத்தம் வெளியேறும்போது ரத்தம் உறைவதற்கான புரோட்டீன்களைத் 
தயாரிப்பதும் கல்லீரல்தான். எல்லாவற்றையும்விட நம் உடலுக்குத் தேவையான 
மிகமுக்கியமான நீரை உற்பத்தி செய்வதும் கல்லீரல்தான். பித்த நீரின்றி 
அமையாது உடல். எந்த ஓர் உணவைச் சாப்பிட்டாலும் அதை நொதித்து ஜீரணமாக்க 
இந்தப் பித்தநீர் அவசியம். இதேபோல், உடல்நிலை சரி இல்லை என்றால், ஒருவர் 
உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகளும் ஈரலில்தான் செரிமாணம் ஆகி, அதன் 
பலன்கள் உடலின் இதர பாகங்களைச் சென்று அடையும். ஆண் தன்மை ஹார்மோனான 
'டெஸ்டோரோனை’(Testosterone) உற்பத்தி செய்வதும் கல்லீரலே. மொத்தத்தில் 
உடலில் அது ஒரு முக்கியமான என்ஜின்.
அடிக்கடி மது குடிப்பவர்களுக்கு கல்லீரலில் படிப் படியாக கொழுப்பு செல்கள் 
படியத் தொடங்கும். கல்லீரல் லேசாக வீங்க ஆரம்பிக்கும். இதை ஃபேட்டி லிவர் 
(Fatty liver) என்பார்கள். இந்த நோயின் துரதிர்ஷ்டம், வலி உட்பட பெரியதாக 
எந்த அறிகுறியும் வெளியே தெரியாது. இது லிவர் சிரோசிஸ் நோயின் முதல் 
கட்டம். அதனால், அடிக்கடி குடிப்பவர்கள், தங்களின் வயிறு ஒன்றும் பிரச்னை 
செய்யாமல் நல்ல பிள்ளையாக இருந்தாலும்கூட, ஸ்கேன் எடுத்துப் 
பார்த்துக்கொள்வது அவசியம். குடிநோயாளிகள் இந்தக் கட்டத்தில் சுதாரித்தால் 
ஆச்சு. இல்லை என்றால் அவர்களின் மொத்த வாழ்க்கையும் போச்சு!
சரி, சுதாரிக்காமல் ஒருவர் தொடர்ந்து குடிக்கிறார் என்று 
வைத்துக்கொள்வோம். என்ன ஆகும்? ஏற்கெனவே, இந்தத் தொடரில் சொன்னதுபோல, 60 
மி.லி. மதுவை ஜீரணித்து வெளியேற்ற கல்லீரலுக்கு ஒரு மணி நேரம் ஆகும். 
இதுவே, வீங்கிப்போன கல்லீரல் என்றால், இரண்டு மணி நேரம் ஆகும். அப்படி 
என்றால் ஒரு கணக்குப் போடுங்கள். ஃபேட்டி லிவர் கொண்ட ஒருவர், ஒரு நாளைக்கு
 எட்டு லார்ஜ் மது குடிக்கிறார் என்றால் என்னவாகும்? அதை முழுமையாக 
ஜீரணிக்க நோய்வாய்ப்பட்ட கல்லீரலுக்கு 16 மணி நேரம் ஆகும். இதற்கிடையே 
கல்லீரல், புரோட்டீன், பித்த நீர் உற்பத்தி உட்பட ஏராளமான தனது இதர 
வேலைகளையும் பார்க்க வேண்டும். பாவம், அதை எல்லாம் செய்ய அதற்கு நேரம் 
எங்கே இருக்கிறது? அந்த 16 மணி நேர இடைவெளிக்குள் குடிநோயாளி மீண்டும் 
எட்டு லார்ஜ் மதுவை வயிற்றுக்குள் இறக்கி விடுகிறாரே!
இப்படித் தொடர்ந்து குடிப்பதால், கல்லீரல் மேலும் மேலும் தாக்குதலுக்கு 
உள்ளாகி, காயம்பட்டு அதன் மேற்பகுதி முழுவதும் தழும்பு தழும்பாக, சொத்தை 
சொத்தையாக மாறிவிடும் (படம் பார்க்க). உண்மையில், ஆரோக்கியமான கல்லீரல் 
எப்படி இருக்கும் தெரியுமா? காபி கலரில், வழவழப்பாக... கறி மார்க்கெட்டில் 
நாம் சமைத்து சாப்பிட வாங்கி வரும் ஆட்டு ஈரல்போல பளபளவென இருக்கும்.
இந்தப் பாதிப்பு ஏற்படும் நிலையில் குடிநோயாளி எப்போ துமே களைப்பாக 
உணர்வார். பசி இருக்காது. வயிறு உப்புசமாக இருக்கும். உடல் எடை குறையும். 
எங்கு இருந்து வருகிறது என்று தெரியாமலேயே வயிற்றுக்குள் சுமார் மூன்று 
லிட்டர் முதல் ஐந்து லிட்டர் வரை வீச்சம் எடுத்த தண்ணீர் சுரந்து வயிறு 
குப்பென்று வீங்கிவிடும். ஏன் தண்ணீர் சேர்கிறது என்று தெரியுமா? 
கல்லீரலுக்குள் ரத்தம் புகுந்து புறப்பட்டு வெளியே வந்தால்தான் அது 
சுத்திகரிக்கப்படும். ஆனால், காயம்பட்ட கல்லீரலுக்குள் பாதைகள் அடைபட்டு 
இருப்பதால், ரத்தம் உள்ளே புகுந்து வெளியேறாது. ரத்தத்தில் இருக்கும் 
நச்சுப் பொருட்கள் நச்சுத் தண்ணீராக ஊறல் எடுக்கும்.
இப்படி நீர் தேங்க ஆரம்பித்தவுடன் உடலின் பெரும்பாலான இடங்களில் முடி 
கொட்டிவிடும். டெஸ்டோரோன் ஹார்மோன்கள் சுரக்காமல் ஒருவர் ஆண்தன்மையை 
இழந்துவிடுவார். அப்புறம், 'நான் ஆம்பிளை... குடிப்பேன்’ என்று சவடால்விட 
முடியாது. பார் தகராறில் பாட்டில் குத்து வாங்கினாலோ அல்லது காலில் உடைந்த 
பாட்டில் ஏறினாலோகூட ரத்தம் உறையாமல் ஊற்றிக்கொண்டே இருக்கும். வயிற்றில் 
நீர் சேர்ந்தது போதாமல், கால்களிலும் நீர் சேர்ந்து யானைக்கால் போன்று 
வீங்கிவிடும். நடக்கும்போது எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியிலும் விண்ணென்று 
வலி உயிர் போகும். இந்த நிலையில்தான் மருத்துவர்கள் பெரிய சிரிஞ்சை எடுத்து
 நேராக வயிற்றுக்குள் சொருகி வீச்சம் எடுத்த தண்ணீரை வெளியேற்றுகிறார்கள். 
இதுவே லிவர் சிரோசிஸின் இரண்டாம் கட்டம். இரண்டாம் கட்டத்துக்கே இவ்வளவு 
பயங்கரம்!
இரண்டாம் கட்ட நோய்க்கு தொடர்ந்து சிகிச்சை செய்தாலும்கூட, மருத்துவர் 
உட்பட யாருக்கும் கட்டுப்படாமல் திருட்டுத்தனமாகவோ அடாவடியாகவோ சிலர் மது 
அருந்துவார்கள். மரணப் படுக்கையில் கிடக்கும் கல்லீரலால் மதுவை உள்வாங்க 
முடியாது. மது,  உணவுக் குழாயில் தேங்க ஆரம்பிக்கும். இதன் விளைவு என்ன 
தெரியுமா? மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளர்களின் கால்களைப் பார்த்து 
இருக்கிறீர்களா? நரம்புகள் பின்னிப் பிணைந்து, முடிச்சு போட்டதுபோல 
நெளிநெளியாய் புடைத்துக்கொண்டு இருக்கும். அதுபோலவே, உணவுக் குழாயின் 
உள்சுவரில் ரத்த நாளங்கள் எப்போது வேண்டுமானாலும் வெடித்துத் துப்பத் 
தயாராக இருக்கும் எரிமலையைப் போல் ரத்தச் சிவப்பில் வீங்கிப் புடைத்து 
இருக்கும். இந்த நோயை 'ஈஸோபேஜியல் வெரிசிஸ்’ (Esophageal varices) 
என்பார்கள். இந்த எரிமலை எப்போது எல்லாம் வெடிக்கிறதோ, அப்போது எல்லாம் 
லிட்டர் கணக்கில் ரத்த வாந்தி எடுப்பார்கள். சில சமயம் ரத்த வாந்தி எடுத்த 
அதிர்ச்சியில் மரணம் அடைபவர்களும் உண்டு. இவர்களைக் குணப்படுத்த முடியாது. 
இது, லிவர் சிரோசிஸின் மூன்றாம் கட்டம். இதையும் தாண்டி இன்னொரு கட்டம் 
இருக்கிறது தெரியுமா?
வீரியம் மிகுந்த மஞ்சள் காமாலை நோய் உண்டாகும். கண்கள், முகம், உடல் 
எல்லாம் மஞ்சள் பூசியதுபோல இருக்கும். பொதுவாக நம் உடல் உறுப்புகளில் மூளை 
பாதுகாப்பான இடத்தில் இருக்கிறது. அவ்வளவு சீக்கிரம் நோய் கிருமிகள் 
கபாலத்தை ஊடுருவிச் சென்று அதைத் தாக்க முடியாது. ஆனால், இந்தக் கட்டத்தில்
 உடலில் தேங்கி நிற்கும் நச்சுப் பித்த நீர் மூளைக்கு ஊடுருவிச் 
சென்றுவிடும். இந்த நிலையை மருத்துவத்தில் 'ஹெப்பாடிக் என்ஸிபாலோபதி 
(Hepatic encephalopathy)  என்பார்கள். இந்த நிலையில் குடிநோயாளி கோமா 
நிலைக்குத் தள்ளப்பட்டு மரணம் அடைவார். இதைத்தான் கிராமப் பகுதிகளில் 
'பித்தம் தலைக்கு ஏறி செத்துப் போனான்’ என்பார்கள்!

 
 
மழை காகிதம் என்ற பெயரை வலைப்பூவிற்குச் சூட்டிய காரணம் அறியேன்.ஆனால்,'லிவர் சிரோஸிஸ்’ - குடிநோய்களின் தலைவன் என்று பெயர் சூட்டிய சிந்தனைச் சிற்பியை மனதாரப் போற்றுகின்றேன்.4-வது ஆண்டில் அடிஎடுத்து வைக்கின்ற பாடம் என்னும் மாத இதழின் வெளிப்புற அட்டைப்படத்தை இவர் அவசியம் பார்த்திட வேண்டுகின்றேன். paadam.in ஏனெனில் ஒத்த சிந்தனை உள்ளவர்கள் சேர்ந்து செயல்பட்டால் பின் விளைவுகள் நிச்சயம் நன்றாக இருக்கும். கலைஞர், இராஜாஜி மல்லுக்கட்டிக் கேட்டுக்கொண்டபோதும் மனம் மாறாமல், கடாமார்க் சாராயத்தை அறிமுகப்படுத்தி, அறிமுகமே இல்லாத புதிய தலைமுறைக்கும் குடிப்பழக்கத்தை அறிமுகப் படுத்தி தமிழ்ப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பேணிக் காத்து வரும் பெருந்தன்மையை எப்படி மறக்கமுடியும்? இந்தப் பதிவினை எழுதிய நெஞ்சம் கலைஞரை விட உயர்ந்த உள்ளம் படைத்தவர் என்று போற்றுகின்றேன்.
ReplyDeleteஎனது rssairam.blogspot.com வலைப்பூவிலும் இதனை அப்படியே மீள்பதிவு செய்து விட்டேன், உரிமையுடன்!மேலும் சிலரது பார்வைக்கும் சென்றடையட்டும், என்ற நோக்கத்துடன்! நன்றி நண்பரே!
ReplyDelete