Search This Blog

Thursday, February 28, 2013

செரினா வில்லியம்ஸ்!

தன் துறையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிப்பது எவ்வளவு கஷ்டமோ, அதைவிடக் கஷ்டம் அந்த இடத்தைத் தக்கவைப்பது. நிகழ்காலத்தில் அதற்குச் சரியான உதாரணம்... டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ்! டென்னிஸ் ரேங்கிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து, அதை இழந்து, மீண்டும் அதை எட்டிப் பிடித்திருக்கும் செரினாவின் போராட்டக் கதை... அத்தனை வலி. போராடுபவர்களுக்கான வழி!  

 முதலில் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்... செரினாவின் தந்தை ரிச்சர்ட் ஒரு டென்னிஸ் பைத்தியம். தனது மகள்கள் புகழ்பெற்ற டென்னிஸ் பிளேயர்கள் ஆக வேண்டும் என்று முடிவெடுத் தவர், செரினா மற்றும் அவரது அக்கா வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் சிறுமிகளாக இருக்கும் போதே அவர்களிடம் குட்டி டென்னிஸ் பேட்டைக் கொடுத்துவிட்டார். ஆனால், சகோதரி கள் பயிற்சிக்குச் சென்ற இடத்தில், ஆப்பிரிக்க வழிவந்த அமெரிக்கர்கள் என்பதால், நிறத்தாலும் இனத்தாலும் சக வீரர்களால் அவமானத்துக்கு ஆளானார்கள். அதனால், ரிச்சர்ட் தானே தன் மகள்களுக்கு டென்னிஸ் கற்றுக்கொடுத்தார். இதனால் தன் குழந்தைப் பருவத்தின் இயல்பான சந்தோஷங்களைப் பறிகொடுத்து, எந்நேரமும் பயிற்சி என்றே கஷ்டப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு வெற்றியின்போதும் செரினா தவறாமல் சொல்லும் வார்த்தைகள்... 'ஐ லவ் மை டாட்!’


செரினா எந்த அளவுக்கு வெற்றியைத் தீவிரமாகத் துரத்தினாரோ, அதே அளவுக்கு வலிகளும் காயங்களும் அவரைத் துரத்தின. 1995-ம் ஆண்டு முதன்முறையாக சர்வதேச டென்னிஸ் அறிமுகம்ஆகும்போது செரினாவின் வயது 13 தான்.

முதல் சுற்றிலேயே தோல்வி. விரக்தியில் டென்னிஸ் கோர்ட்டை விட்டு வெளியேறியவர், ஒரு வருடம் சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ள வில்லை. முழுதாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு, கடும் பயிற்சி மற்றும் முயற்சிக்குப் பின் 1997-ல் டென்னிஸ் தர வரிசைப் பட்டியலில் 304-ம் இடம் பிடித்தார். அப்போது ஏழாவது ரேங்க்கில் இருந்த மேரி பியர்ஸையும், நான்காவது இடத்தில் இருந்த மோனிகா செலஸையும் செரினா அடித்துத் துவம்சம் செய்ய, 'யார் இந்தப் பொண்ணு?’ என்று டென்னிஸ் அரங்கின் கவனத்தை ஈர்த்தார். தொடர் வெற்றிகளின் காரணமாக வருடக் கடைசியிலேயே செரினா ரேங்க் 99-க்கு உயர்ந்தது.

செரினாவின் பலம் அவரது சர்வீஸ். கிட்டத்தட்ட கறுப்புக் குதிரை மாதிரி இருக்கும் செரினாவின் ஒவ்வொரு சர்வீஸும் மணிக்கு 208 கி.மீ. வேகத்தில் பறக்கும். மற்ற எந்தப் பெண் வீராங்கனைகளிடமும் இல்லாத அஸ்திரம் இது. சர்வீஸ் வேகத்தோடு வியூக விவேகங்களும் கூட்டணிவைக்க, முதல் நிலை வீராங்கனை மார்டினா ஹிங்கிஸைத் தோற்கடித்து முதல் கிராண்ட் ஸ்லாம் வெற்றி, அமெரிக்க ஓப்பன் சாம்பியன் என அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் இரண்டே வருடங்களில் டாப் 5 ரேங்குக்குள் வந்தார். ஆனால், அந்த  வருடமே தோல்விகளும் அவரைத் துரத்தின. ஓய்வு இல்லாத தொடர் பயிற்சி அவருக்குக் கால் வலியைப் பரிசாகத் தந்தது. 2000, 2001 முழுக்க செரினா மருத்துவமனைக்கும் வீட்டுக்கும்தான் அலைந்துகொண்டுஇருந்தார். கால் வலி, தசை நார் கிழிந்தது, இடுப்பு வலி எனப் போட்டிகளின்போதே கோட்டில் சுருண்டு விழும் செரினாவை டென்னிஸ் உலகம் கவலையோடு கவனித்துப் பின் மறந்தேவிட்டது.

2010-ல் காலில் கண்ணாடி கிழித்து 18 தையல்கள் போடப்பட்டன. 2011-ல் நுரையீரலில் ரத்தக் கட்டிகள் உருவாகின. ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை குறைந்துபோய் மரணப் படுக்கைக்கே சென்று மீண்டுவந்தார். 2013 ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓப்பனில்  காலிறுதிக்கு முன்னேறினார். கால் மூட்டு வலி பாடாய்ப்படுத்த, மருத்துவர்கள் சகிதம்தான் மைதானத்துக்குள்  அடியெடுத்துவைத்தார். ஆனால், சிறிது நேரத்திலேயே வலி வேலையைக் காட்டியது. ஆனாலும், மனம் தளராமல் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் ஆடிவிட்டுத்தான் டென்னிஸ் கோர்ட்டைவிட்டு வெளியே வந்தார். அந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலும் அது
செரினாவின் மன உறுதியைக் காட்டியது. இத்தனை பிரச்னைகளுக்கு நடுவிலும் 30 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள், 46 ஒற்றையர் பிரிவு பட்டங்கள், 4 ஒலிம்பிக் தங்கம் என 10,590 புள்ளிகளோடு செரினா மீண்டும் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை என்ற இடத்தைப் பிடித்திருக்கிறார்.  

''எனக்கு டென்னிஸ் மட்டுமே தெரியும். வலிகளைத் தாண்டி நான் டென்னிஸைக் காதலிக்கிறேன். வீல் சேரில் தூக்கிச் செல்லும் நிலைமை வந்தாலும், டென்னிஸ் கோர்ட்டை விட்டு வெளியேற மாட்டேன். இது இப்போது மட்டுமல்ல; எப்போதும் என் நினைவில் இருப்பது. இந்த எண்ணமே என்னை வெற்றியை நோக்கி உந்துகிறது!'' - இது செரினாவின் ஸ்டேட்மென்ட்.
அதுதான் செரினா!

No comments:

Post a Comment