Search This Blog

Monday, March 28, 2016

மோடியின் பார்வை நடுத்தர மக்கள் மீது படுமா?

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததற்கு முக்கிய காரணம், இந்தியா முழுக்க உள்ள நடுத்தர வர்க்கத்து மக்கள்தான். காங்கிரஸ் ஆட்சியில் ஏகத்துக்கும் அதிகரித்த விலைவாசி உயர்வுடன், கணக்கு வழக்கில்லாமல் நடந்த ஊழல்களால் மனம் வெறுத்துப் போனார்கள். காங்கிரஸை ஒழித்துவிட்டு, மோடியைக் கொண்டு வந்தார்கள்.

ஆனால், ஆட்சி மாறியதால் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கை மாறிவிடவில்லை. மோடியின் இந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை பெரிய அளவில் உயராமல் இருந்திருக்கலாம். சில பொருட்களின் விலை குறையக்கூட செய்திருக்கலாம். எனினும், கல்வி மற்றும் மருத்துவத்துக்காக செய்ய வேண்டிய செலவுகள் அனைத்துமே தாறுமாறாக ஏறியிருப்பது மனதை வருத்தும் நிஜம்.

இன்றைக்கு சென்னை போன்ற பெரிய நகரங்களை ஒட்டி இருக்கிற சில பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்புக்கான கட்டணமே ரூ.1 லட்சத்துக்கு மேல். சாதாரண பள்ளிகளில்கூட ரூ40,000 கட்டணம் வசூலிக்கிறார்கள். எல்.கே.ஜி.க்கே இப்படி எனில், கல்லூரிப் படிப்பை சொல்ல வேண்டியதில்லை. கலைக் கல்லூரியில் ஒரு பட்டப்படிப்பை படித்து முடிக்க வேண்டுமெனில், குறைந்தது ரூ.4 லட்சமாவது செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இதுவே பொறியியல் கல்லூரி எனில், 6 முதல் 8 லட்ச ரூபாய்க்கு மேல் ஆகிவிடுகிறது. 20 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ள இன்ஜினீயரிங் கல்லூரியில் ‘மேனேஜ்மென்ட் கோட்டா’வில் சீட் வாங்க ரூ.10 லட்சம் நன்கொடையாக கட்ட வேண்டியிருக்கிறது.  


கல்விக்கு இப்படி எனில், மருத்துவத்துக்கு ஆகும் செலவு அதிர  வைக்கிறது. ஹார்ட் அட்டாக் என்று அறுவை சிகிச்சை செய்து 3.50 லட்சம் ரூபாய் பில் போட்டால், எந்த நடுத்தர வர்க்கத்து மனிதனால் கட்ட முடியும்? அறுவை சிகிச்சைகூட வேண்டாம், சாதாரண நோய்களுக்கு தொடர்ந்து சாப்பிடும் மருந்துகளே மாதத்துக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆகிவிடுகிறதே! எதிர்காலத்துக்கென எதுவும் சேர்த்து வைக்காத சாதாரண மனிதர்கள் இந்தச் செலவுகளை எப்படித்தான் சமாளிப்பார்கள்?

இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் சிக்கி சின்னாபின்னமாகிறார்கள் நடுத்தர வர்க்கத்தினர். இவர்களின் சிக்கலைத் தீர்க்க பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, நடுத்தர மக்கள் மலை போல நம்பியிருக்கும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியைக் குறைக்கிறார். மோடியின் ஆட்சி இப்படியே இருக்குமெனில், விரைவில் நடக்கவிருக்கும் ஐந்து மாநிலத் தேர்தல்களில் மட்டுமல்ல, அடுத்த சில ஆண்டுகளில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலிலும் மக்களின் ஆதரவை பா.ஜ.க. பெற முடியாது என்பது நிச்சயம்!

- ஆசிரியர்.

No comments:

Post a Comment