ஆவலுடன் பார்த்து ரசித்த ஐபிஎல்-4 போட்டிகள் முடிந்து விட்ட நிலையில்,தற்பொழுது கவனத்தை கவர்ந்து கொண்டிருப்பது ஃபிரெஞ்சு ஓபன். விளையாட்டரங்கில் டென்னிஸ்  போட்டிகளில் விம்பிள்டன் போட்டிக்கு அடுத்த இடத்தை இது பெறுகிறது. மற்ற  ஆடுகளங்கள் புல் தரையில் இருக்கும். ஆனால், பிரெஞ்சு ஓபன் மட்டும் களிமண்  தரையில் நடத்தப்படுகின்றது. இது, இப்போட்டியின் சிறப்பு அம்சமாகும். இந்த  ஆட்டக்களங்களில் ஆடுவது கொஞ்சம் கடினமானதும் கூட..
ஒவ்வொரு ஆண்டும் பிரெஞ்சு ஓபன் போட்டியின் மூலம்தான் டென்னிஸ் சீஸனே தொடங்கும். 'கிராண்ட்  ஸ்லாம்’ எனப்படும் சிறப்பு மிக்க விம்பிள்டன், அமெரிக்க  ஓபன்,  ஆஸ்திரேலியன் ஓபன் ஆகிய மற்ற மூன்று போட்டிகள் இதனை அடுத்தே  நடைபெறும். இதன் ஆடுகளம் கடினமான களிமண் தளம். பந்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தும்.  இதனால், ஆட்டம் சுவாரசியமாகவும் நீண்ட நேரமும் நடைபெறும். ஆட்டக்காரர்கள்  பல ஐந்து செட் ஆட வேண்டி வரும். அதனால், நல்ல ஸ்டாமினா இருக்கும்  ஆட்டக்காரர்கள் மட்டுமே இந்தக் களத்தில் தாக்கு பிடிக்க முடியும். 
இதனால், மற்ற 'க்ராண்ட் ஸ்லாம்’ போட்டிகளில் திறமையாக ஆடி வெற்றிகளைப் பெற்றிருக்கும்...  ஜான் மெக்கென்ரோ, ஸ்டெபான் எட்பர்க், போரிஸ் பெக்கர், மார்ட்டினா ஹிங்கிஸ்  போன்ற பிரபலங்கள் ஃபிரெஞ்சு ஓபன் கோப்பையை வென்றதில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.சர்வீஸ் மற்றும் வாலி முறையில் ஆட்டம் ஆடப்பட்டு, ஆட்ட நேரம்  நீடித்துக்கொண்டே போவதால் பார்வையாளர்களுக்கு விறுவிறுப்பைக் கொடுக்கும்.
இந்த ஃபிரெஞ்சு ஓபன் போட்டிகள் 1891 முதல் நடத்தப்பட்டு வருகின்றன. 1928  -ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை ரோலண்ட் க்ராஸ் அரங்கில் நடைபெற்று  வருகின்றது.கடந்த ஆண்டு ஆடவரில் ரஃபேல் நடாலும், மகளிரில் ஃப்ரான்செஸ்கா ஷியவோனும் இக் கோப்பையை வென்றிருக்கிறார்கள். இந்த முறையும்  ஆடவரில் ரஃபேல் நாடல்  இறுதி போட்டிக்கு முன்னேறி  உள்ளார். தற்பொழுது தல ரோஜெர் அடி கொண்டு உள்ளார்.. ரஃபேல் நாடல், ரோஜெர் 2011  இறுதி போட்டியில் விளையாடுவார்கள் என எதிர்பார்கிறேன்..
கிறிஸ்டோபர் ஹென்றி கெய்ல் 
31 வயதான இவர், பிறந்தது கரீபியன் கடலில் அமைந்துள்ள ஜமைக்கா தீவில்.  பிரைன் லாராவுக்கு பிறகு மேற்கிந்திய தீவுக்கு கிடைத்த அதிரடி மன்னன்.  பேட்டிங் தவிர, பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராகவும் ஜொலிக்கிறார்.
கெய்ல், தனது 19-வது வயதில் ஜமைக்கா அணியின் முதல் தர போட்டிகளில்  அறிமுகமானார். அடுத்த 11-வது மாதத்திலேயே சர்வதேச ஒருநாள் போட்டியில்  பங்கேற்றார். அவரது முதல் சர்வதேச ஒருநாள் போட்டி இந்தியாவுடன்தான். ஆனால்,  அதில் அவருக்கு சோகம்தான் காத்திருந்தது. நான்காவது ஆட்டக்காரராக  இறங்கியவரை ஒரே ஒரு ரன்னில் ராபின் சிங் வெளியே அனுப்பினார். அடுத்த இரு  போட்டிகளிலும் 15, 7 ரன்களில் ஆட்டம் இழந்தார். இப்படியாக, அதிரடி மன்னரின்  தொடக்கம், மிக மெதுவாகத்தான் இருந்தது.  டெஸ்ட் போட்டிகளிலும் இதே  கதைதான். 2001-ல் ஜிம்பாப்வே அணியுடன் நடந்த ஒரு டெஸ்ட் போட்டிதான்  அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதில் 175 ரன்களை குவித்து, ஆட்ட  நாயகன் விருதைப் பெற்றார்.
அதன் பிறகு கிடுகிடுவென முன்னேற்றம். டெஸ்ட், ஒருநாள், டிவென்ட்டி 20 என  எல்லா போட்டிகளிலும் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி, மட்டையை சுழற்ற  ஆரம்பித்தார். விவியன் ரிச்சர்ட்ஸ், பிரைன் லாராவுக்கு அடுத்து ஓர் ஆண்டில்  ஆயிரம் ரன்கள் எடுத்த மேற்கிந்திய வீரர் என்ற பெயர் பெற்றார். 2010 ஆம்  ஆண்டில் இலங்கையுடன் ஆட்டம் இழக்காமல் 333 ரன்கள் எடுத்து, டெஸ்ட்  போட்டிகளில் திகில் கிளப்பினார். அந்த 333 என்ற எண்ணையே தனது டி ஷர்ட்  எண்ணாக மாற்றிக் கொண்டார்.
ஒருநாள் போட்டிகளிலும் சாதனை தொடர்ந்தது. மூன்று முறைக்கு மேல் 150 ரன்  எடுத்த ஐந்து வீரர்களில் ஒருவரானார். டிவென்ட்டி-20 போட்டிகளையும்  விட்டுவைக்கவில்லை. 2007 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை டிவென்ட்டி-20  போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 117 ரன்களை எடுத்தார். சர்வதேச  டிவென்ட்டி-20 போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெயரை  பெற்றார்.அது மட்டுமா?  உலகக்  கோப்பை டிவென்ட்டி-20 போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி, கடைசி வரை  களத்தில் இருந்த முதல் வீரர் என்ற பெயரை பெற்றவரும் இவரே. இந்த சாதனையை  செய்தது 2009 ஆம் ஆண்டு நடந்த டிவென்ட்டி-20 உலகக் கோப்பை போட்டியில்.இப்போது ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் சார்பாக இறங்கி, எல்லோரின்  கவனத்தையும் தன் பக்கம் திருப்பிவிட்டார் கெய்ல். அதிக ரன்கள் எடுக்கும்  வீரர்களுக்கான ஆரஞ்ச் தொப்பியை சச்சின், வல்தாட்டி, சேவாக் என நமது இந்திய  வீரர்கள் மாற்றி மாற்றி பெருமையாக போட்டுக் கொண்டு இருந்தார்கள். சில  போட்டிகளுக்குப் பிறகு லேட்டாக வந்து மட்டையைப் பிடித்தார் கெய்ல்.  சதங்கள், அரை சதங்கள் என வரிசையாக விளாசியவர், தொப்பியை தனக்கு  சொந்தமாக்கிக் கொண்டார்.
 இப்படி சாதனைகள் நிறைய இருந்தாலும் சில குறைகளும் உண்டு. பிரைன் லாரா,  சச்சின் போன்று நிலையான வெற்றிகளை கெய்ல் சந்தித்ததில்லை. தொடர்ந்து 10  போட்டிகளில் அதிரடியாய் ஆடுவார். பிறகு, வரிசையாக சொதப்புவார்.  கேப்டனாகவும் இருப்பார். பிறகு, ஆடும் லெவன் அணியில் இருந்தே  நீக்கப்படுவார். சர்ச்சையான முறையில் பேசுவது, தேர்வுக் குழுவையே  விமர்சிப்பது என்று மைதானத்துக்கும் வெளியேயும் கெய்ல் அதிரடிதான்.  ஆயினும், கிரிக்கெட் உலகில் டெஸ்ட், ஒருநாள், டிவெண்ட்டி-20 எதுவாக  இருந்தாலும் களத்தில் இறங்கினால், எதிர் அணியினருக்கு வில்லனாகி விடுவார்  என்ற பெயரை ஏற்படுத்திவிட்டார்!








No comments:
Post a Comment