ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசாவுக்கு முன்பு டெலிகாம் அமைச்சராக இருந்த  தயாநிதிக்கும் தொடர்பும் பங்கும் இருக்கிறதா என்பது தான் இனி அடுத்த கட்ட  விசாரணை.   எந்த அடிப்படையில் ராசாவும் கனிமொழியும் சரத் ரெட்டியும் பல்வாவும்  சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்களோ, அதே அடிப்படையில் தயாநிதி மாறனும்  குற்றம்சாட்டப்பட்டு  கைது செய்யப்படுவதற்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என்கிறது தெஹல்கா  இதழ். 
தெஹல்காவின் பல முக்கியமான புலனாய்வுக் கட்டுரைகளை எழுதியவரான அஷிஷ்  கேத்தனும் ராமன் கிர்பாலும் இப்போது ஸ்பெக்ட்ரம் ஊழலில் தயாநிதி மாறன்  தொடர்பை  வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தெஹல்கா சொல்வது என்ன என்று பார்ப்போம்.  தயாநிதி மாறன் மே 2004 முதல் மே 2007 வரை டெலிகாம் அமைச்சராக இருந்தார்.  அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரன் நடத்தும்  ஏர்செல்  கம்பெனி  இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த தொடர்பு சேவை  லைசன்சுகளுக்கு விண்ணப்பித்தது.  ஆனால் ஒவ்வொரு விண்ணப்பத்தின் மீதும்  தயாநிதியின் அமைச்சகம்  கேள்விகளை எழுப்பியது. ஏர்செல் பதில் தந்து கொண்டே இருந்தது. ஆனால்  லைசன்ஸ் வழங்கப்படவே இல்லை. 
இரண்டாண்டுகள் இப்படியே நீடித்த நிலைமை திடீரென மாறியது. சிவசங்கரன் தன்  கம்பெனியில் 74 சதவிகிதப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ்  கம்பெனிக்கு, சுமார்  7800 கோடி ரூபாய்களுக்கு விற்றார். மேக்சிஸ் கம்பெனியின் அதிபர் இலங்கைத்  தமிழரான ஆனந்தகிருஷ்ணன். இன்னொரு 26 சதவிகிதப் பங்குகளை மாறன்  குடும்பத்துக்கு  நெருக்கமான  சென்னை அப்போலோ மருத்துவமனை டாக்டர் பிரதாப் ரெட்டியின்  குடும்பத்தினர் வெறும் 34 கோடிக்கு வாங்கினர்.   அக்டோபர் 2005ல் ஏர்செல்லை வாங்க விரும்புவதாக ஆனந்தகிருஷ்ணன்,  சிவசங்கரனிடம் தெரிவித்தார். அடுத்த இரண்டே மாதங்களில் டிசம்பர் 14 அன்று  தயாநிதியின்  அமைச்சகம் லைசன்சுகளுக்கான புதிய விதி முறைகளை அறிவித்தது.  டிசம்பர் 30ந்  தேதி ஏர்செல்லை மேக்சிஸுக்கு விற்க ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. அடுத்த  மூன்றே  நாட்களில் தயாநிதி மாறனின் அமைச்சகம் புதிய விதிமுறைகளின் கீழ் தகவல்களை  அனுப்பும்படி ஏர்செல்லைக் கேட்டுக் கொண்டது. அடுத்த பதினேழே நாட்களில்  ஏர்செல்  தகவல்களைக் கொடுத்தது. ஜனவரி 12 அன்று மேலும் புது வட்டாரங்களுக்கு லைசன்ஸ்  கேட்டு விண்ணப்பித்தது. 
பிப்ரவரி மாதத்திலிருந்து ஏர்செல்லுக்கு தயாநிதியின் அமைச்சகம் லைசன்சுகளை  வழங்கத் தொடங்கியது.  நவம்பர் மாதத்தில் மொத்தமாக ஏர்செல்லுக்கு 14  வட்டாரங்களுக்கான  லைசன்சுகள் கிடைத்துவிட்டன. மொத்தமாக லைசன்ஸ் கட்டணமாக ஏர்செல் செலுத்திய  தொகை 1399 கோடி 47 லட்சம் ரூபாய்கள். ஆனால் தணிக்கைக் கணக்கீடுப்படி இதனால்   அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 22 ஆயிரம் கோடி ரூபாய்கள்.ஆனந்தகிருஷ்ணன் கைக்கு ஏர்செல் மாறி லைசன்சுகள் கிடைத்த நான்காவது  மாதத்தில், அவரது மேக்சிஸ் குழுமம், தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன்  நடத்தும்  சன் குழுமத்தைச் சேர்ந்த சன் டைரக்ட் டி.வி. கம்பெனியில் 20 சதவிகிதப்  பங்குகளுக்காக 150 மில்லியன் டாலர்கள் ( சுமார் 600 கோடி ரூபாய்கள்)  கொடுத்தது. அடுத்தபடியாக  2008-2009ல்  மேக்சிஸ் குழுமம் சன் குழுமத்தின் எஃப்.எம். வானொலி  கம்பெனியில் சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்தது.
தெஹல்கா மேலும் சொல்லும் மூன்று தகவல்களும் முக்கியமானவை. ஸ்பெக்ட்ரம்  அலைக்கற்றை விலை நிர்ணயிப்பது பற்றி முடிவு எடுக்கும் அதிகாரம்  மத்திய  அமைச்சரவையின்  குழுவிடம் இருந்ததை தயாநிதி மாறன் மாற்றி முழு அதிகாரமும் தமது  அமைச்சகத்திடமே வைத்துக் கொண்டார். இதை நிதி அமைச்சகம் கடுமையாக  ஆட்சேபித்தது.  ஆனால்   பிரதமர் மன்மோகன்சிங் ஒப்புதல் அளித்தார். (இந்த அதிகாரத்தைப்  பயன்படுத்தித்தான் அடுத்து வந்த  ராசாவும் முடிவுகள் எடுக்க முடிந்தது.)  சிவசங்கரன் ஏர்செல்லை நடத்தி வந்தபோது டாடா குழுமத்துடன்  தொழில் ரீதியான  கூட்டு வைத்திருந்தார். டாடாக்களுக்கும் தயாநிதி மாறனுக்கும் இடையே  நல்லுறவு  இருக்கவில்லை. அதற்குக் காரணம் டிஷ் டி.வி. தொழிலில் டாடாவுக்கும் சன்  குழுமத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு நீதிமன்ற வழக்கு வரை சென்றதுதான்.  எனவே  சிவசங்கரனிடம் ஏர்செல் இருந்தவரை தயாநிதி மாறனின் அமைச்சகம் லைசன்சுகளைத்  தரவில்லை. தமக்கு எதிராக அமைச்சகத்தில் யாரோ தொடர்ந்து வேலை செய்வதாக  சிவசங்கரன்  2005ல் புகார் கடிதமே எழுதியிருக்கிறார்.மூன்றாவது தகவல்தான் அரசியல்ரீதியாக முக்கியமானது. உச்ச நீதிமன்றத்தில்  ஸ்பெக்ட்ரம் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ராசா அமைச்சர் பதவியிலிருந்து  விலக வேண்டி  வந்ததும், புதிய அமைச்சராகப் பொறுப்பேற்ற கபில் சிபல், 1998 முதல் 2009  வரை ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் வழங்குவதில் பின்பற்றிய அனைத்து நடை முறைகள் ,  நடவடிக்கைகள்  பற்றியும் விசாரித்து அறிக்கை தரும்படி நீதிபதி சிவராஜ் பாட்டில் கமிஷனை  நியமித்தார். 
அந்த கமிஷனும் அறிக்கையைத் தந்து விட்டது. அந்த அறிக்கையில், ஏர்செல்லுக்கு  லைசன்ஸ் தராமல் விதவிதமான கேள்விகள் கேட்டு வருடக்கணக்காக தயாநிதிமாறனின்  அமைச்சகம் இழுத்தடித்தது சரியல்ல என்று கூறப்பட்டிருக்கிறது. அமைச்சகம்  ஏர்செல்லிடம் கேட்ட விவரங்கள், தேவையற்றவை, பொருத்தமற்றவை, லைசன்ஸ்  விதிமுறைகளுக்குப்  புறம்பானவை என்று நீதிபதி தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்ல; பணம்  தொடர்பான எந்தக் கொள்கை முடிவானாலும் அதுபற்றி நிதி அமைச்சகத்தின் ஒப்புதல்  இல்லாமல்   எந்த அமைச்சகமும் உத்தரவுகள் போடக் கூடாது என்ற மத்திய அரசின் நடத்தை  விதியை தயாநிதி மாறனின் அமைச்சகம் பின்பற்றவே இல்லை என்றும்  கூறியிருக்கிறார்.ராசா அமைச்சராக இருந்தபோது பால்வாவின் ஸ்வான் கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரம்  லைசன்ஸைக் குறைந்த விலைக்குக் கொடுத்தார். லைசன்ஸ் கிடைத்ததும் பால்வா,  தன்னுடைய  வேறு கம்பெனிகள் மூலம் கலைஞர் டி.வி.க்கு 214 கோடி ரூபாய் கடன் கொடுத்தார்.  அது லஞ்சப் பணம்தான் என்பது சி.பி.ஐ.யின் வாதம். அந்த அடிப்படையில்தான்  ராசா,  கனிமொழி, சரத் ரெட்டி, பால்வா எல்லாருமே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.தயாநிதி மாறன் ஆனந்தகிருஷ்ணனின் ஏர்செல்லுக்கு குறைந்த விலையில்  ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் கொடுத்தார். லைசன்ஸ் கிடைத்ததும், ஆனந்தகிருஷ்ணனின்  கம்பெனி தயாநிதி  மாறனின் சகோதரர் நடத்தும் சன் குழுமத்தில் 700 கோடி ரூபாய் முதலீடு  செய்திருக்கிறது. இதுவும் லஞ்சப் பணம்தானே. இது லஞ்சப்பணம் இல்லை,  தற்செயலாக நடந்தது  என்றால் அதே விதி ராசாவுக்கும் பொருந்தும் அல்லவா? தமக்கு சன் குழுமத்தில்  எந்த முதலீடும் இல்லை என்று தயாநிதி மாறன் அறிவித்திருக்கிறார். இதே  வாதப்படி ராசாவுக்கும்  கலைஞர் டி.வி.யில் எந்த முதலீடும் இல்லை.
தெஹல்கா இந்தச் செய்தியை வெளியிட்டதைத் தொடர்ந்து ஆங்கில டி.வி. சேனல்கள்  எல்லாம் தொடர்ந்து இதை எழுப்பி வருகின்றன. பி.ஜே.பியும் இடதுசாரிக்  கட்சிகளும்  தயாநிதி மாறனும் பிரதமரும் விளக்கம் தரவேண்டுமென்று கோரியுள்ளன.  ஸ்பெக்ட்ரம் பற்றி விசாரித்துவரும் பாராளுமன்றக் கூட்டுக் குழுவின் விசாரணை  வரம்புக்குள் இது வரும்;   மேற்கொண்டு கருத்து சொல்ல முடியாது என்று காங்கிரஸ் சொல்லிவிட்டது.  உச்ச நீதிமன்றத்தின் முன்பு ஸ்பெக்ட்ரம் தொடர்பாக வழக்கறிஞர் பிரஷாந்த்  பூஷண் தொடுத்த பொதுநல வழக்கின் அடிப்படையில்தான் இதுவரை விசாரணை கைதுகள்  எல்லாம்  நடந்துள்ளன. புதிதாக தெஹல்கா வெளியிட்டுள்ள தகவல்கள் அடிப்படையிலும்  சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று பூஷண் இன்னொரு மனு இந்த வாரம் தாக்கல்  செய்யவிருக்கிறார்.  எனவே ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடுத்து தயாநிதி மாறனும் உட்படுவாரா மாட்டாரா  என்பது இனி உச்ச நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்துத்தான் இருக்கிறது.
தெஹல்கா ஆசிரியருடன் ஒரு சந்திப்பு!
தயாநிதி மாறன் ஏர்செல் விவகாரம் பற்றி தெஹல்காவில் எழுதியிருக்கும்  தெஹல்காவின் புலனாய்வுப் பிரிவு ஆசிரியர் அஷிஷ் கேத்தன் வேறு ஒரு கட்டுரை  தொடர்பான  புலனாய்வுக்காக மே 31 அன்று சென்னைக்கு வந்து என்னைச் சந்தித்தார். 
தெஹல்கா எனக்குப் பிரியமான இதழ். அது ஓர் அசாதாரணமான இதழ். பத்து  வருடங்களுக்கு முன்னால் இணைய இதழாக ஆரம்பித்தபோது பி.ஜே.பி. ஆட்சியில்  ஜார்ஜ்  பெர்னாண்டஸ் ராணுவ அமைச்சராக இருந்த சமயத்தில், ராணுவத்துக்கு அதிநவீன  பைனாகுலர்கள் வாங்குவதில் நடந்த ஊழலை அம்பலப்படுத்தியது. பி.ஜே.பி செயலாளர்  பங்காரு  லட்சுமண் லஞ்சப் பணம் வாங்குவதை ரகசிய வீடியோவில் படமெடுத்து வெளியிட்டது.  அவர் பதவி இழந்தார். பெர்னாண்டஸ் ராஜினாமா செய்தார். தெஹல்காவை  பாகிஸ்தானின்  கைக்கூலிகள் என்று அவதூறு செய்தார்கள். வீடியோ மோசடி என்றார்கள். ஆனால்  கடைசியில் வீடியோ மெய்யானது என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.  பி.ஜே.பி.  அரசு தெஹல்கா இணைய இதழை நடத்த முதலீடு செய்த கம்பெனிகள் மீதெல்லாம்  வரித்துறை ரெய்டு நடத்தி அவற்றை முடக்கி தெஹல்கா இணையத்தை மூடவைத்தது. 
தெஹல்கா குழுவினர் சோர்ந்து விடாமல் மறுபடியும் 2003ல் அதை அச்சில் வார  இதழாகக் கொண்டு வந்தனர். இதற்காக இந்தியா முழுவதும் பல துறைகளில் இருக்கும்  பிரபலங்களிடம் இருந்து ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் நன்கொடையாக மொத்தம்  சுமார் நான்கு கோடி ரூபாய் வரை திரட்டினார்கள். இப்படி ஒரு பத்திரிகை  தொடங்கி நடத்துவது  இதுவே முதல்முறை. அஷிஷ், லக்னோவைச் சேர்ந்த 35 வயது இளைஞர்.  தெஹல்காவுக்காக இதுவரை அவர்  செய்திருக்கக்கூடிய புலனாய்வுகள் பிரமிப்பானவை. அமெரிக்காவுடன் அணு சக்தி   ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகள் மன்மோகன் ஆட்சிக்கு ஆதரவைத் திரும்பப்  பெற்றதும் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாராளுமன்றத்துக்@க கட்டுக்  கட்டாக பணம் கொண்டு   வந்து காட்டி ரகளை ஏற்பட்டது நினைவிருக்கலாம். அந்த விவகாரத்தில் மூன்று  பி.ஜே.பி. எம்.பி.கள் தாமாகவே காங்கிரஸ் தரப்பை அணுகி பணம் வாங்கிக் கொண்டு  ஓட்டுப்   போடத் தயார் என்று முன்வந்ததை அஷிஷ் அவர்களுடன் பேட்டிகளின் மூலம்  அம்பலப்படுத்தினார். அதில் சமாஜ்வாடி கட்சி அமர்சிங்குக்கு இருந்த  தொடர்பையும்   வெளிப்படுத்தினார்.
அதற்கு முன் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களில் பங்கேற்ற  தீவிர இந்துத்துவா ஊழியர்களைப் பேட்டி எடுத்து அவர்களின் பின்னணி,  அவர்களுக்கும் மோடி  அரசின் சில அமைச்சர்களுக்கும் இருந்த தொடர்பு ஆகியவற்றை  அம்பலப்படுத்தினார். அவர்கள் மீது இப்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள்  போடப்பட்டுள்ளன. இந்த புலனாய்வுக்காக,  அஷிஷ்  வேறு பெயரில் தானே ஓர் இந்துத்துவ வெறியராக நடித்து ஆறு மாத காலம்  குஜராத்தின் பல பகுதிகளில் தங்கியிருந்து ஒலி/ஒளிப் பதிவுகள் மூலம் பலரை   அம்பலப்படுத்தினார்.மேலகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட இந்துத்துவ தீவிரவாதி சுவாமி  அசீமானந்தாவின் 42 பக்க ஒப்புதல் வாக்குமூலத்தை வெளிப்படுத்தியதும்  அஷிஷ்தான்.
ஏர்செல்-தயாநிதி மாறன்-சன் குழுமம் விவகாரம் பற்றி அஷிஷ் உறுதியாக  இருக்கிறார். “நாங்கள் எழுதிய அத்தனையும் ஏற்கெனவே ஆவணங்களாக இருக்கும்  தகவல்கள்தான்.  அவற்றின் அடிப்படையில் மேற்கொண்டு விசாரிக்க வேண்டியது சி.பி.ஐ.யின்  பொறுப்பு. நிச்சயம் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் அடுத்து எடுத்துச்  செல்லும் என்று நாங்கள்  உறுதியாக நம்புகிறோம். இதுவரை தெஹல்கா வெளியிட்ட எந்தப் புலனாய்வுக்   கட்டுரையிலும் நாங்கள் தவறு செய்தோம் என்று காட்டப்படவில்லை. சரியென்றே   நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என்கிறார் அஷிஷ். 





 
 
No comments:
Post a Comment