''தனக்கு அதிகாரம் இல்லை என்று யாரோ சொன் னதைக்
கெட்டியாகப் பிடித்துக்கொண்டு காலம் கடத்தாமல்... தூக்குத் தண்டனை
விதிக்கப்பட்டு உள்ள மூவரையும் காப்பாற்ற ஜெயலலிதா முன்வர வேண்டும்!'' என
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கூறி இருக்கிறார்! இவ்வாறு கூறியதோடு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தியாகு, புலவர்
கலியபெருமாள் ஆகியோ ரின் தண்டனைகளை தான் குறைத்ததுபற்றியும்
குறிப்பிட்டிருக்கிறார். யார் யாருக்கு இவர் தூக்குத் தண்டனைகளைக்
குறைத்தார் என்பது இப்போது கேள்வி அல்ல. 'சாந்தன், முருகன், பேரறிவாளன்
ஆகிய மூவருக்கு தூக்குத் தண்டனையைக் குறைக்க, இவர் அதிகாரத்தில் இருந்தபோது எதுவும் செய்யவில்லையே ஏன்?’ என்பதுதான் இப்போதைய கேள்வி. வழக்கம்போல இந்தக் கேள்விக்குப் பதில் கூறாமல் திசை திருப்பும் முயற்சியில் கருணாநிதி ஈடுபடுகிறார்.
26 தமிழர்கள் உயிர்காப்புக் குழுவின் தலைவராக இருந்து, இவர்களின் வழக்கை
உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து 22 பேரின் உயிர்களைக்
காப்பாற்றுவதற்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவன் என்கிற முறையில், சில
உண்மைகளை எடுத்துக் கூற விரும்புகிறேன்.உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், 19 பேரைக் குற்ற மற்றவர்கள் என விடுதலை
செய்தது. ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய மூவருக்கும் ஆயுள்
தண்டனை விதித்தது. நளினி, முருகன், சாந்தன், பேரறி வாளன் ஆகியோரின் மரண
தண்டனையை உறுதி செய்தது.விடுதலை செய்யப்பட்ட 19 பேரையும் உடன் அழைத்துக்கொண்டு, தமிழகம் முழுவதும்
மரண தண்டனைக்கு எதிரான பேரணிகளை 22.6.99 முதல் 7.7.99 வரை நடத்துவது என
முடிவு செய்தோம். அதற்கு இணங்க எங்கள் பேரணியைத் தொடங்கியபோது, அப்போது
முதலமைச்சராக இருந்த கருணாநிதி தடை விதித்தார். மரண தண்டனைக்கு, தான்
எதிரானவன் என இப்போது கூறுபவர், அன்று மரண தண்டனை ஒழிப்புப் பிரசாரத்துக்கே
தடைவிதித்தார்.
இந்தத் தடையை எதிர்த்து உடனடியாக நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்
தாக்கல் செய்தோம். அதன்பேரில், இந்தத் தடை செல்லாது என்றும், எங்கள்
பிரசாரப் பயணத்துக்கு உடனடியாக அனுமதி வழங்கும் படி 30.6.99-ல் ஆணை
பிறப்பித்தது நீதிமன்றம். அதன்படி, தமிழகம் முழுவதும் மரண தண்டனை ஒழிப்பு
இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தினோம். 'ராஜீவ் கொலையாளிகள் எனக் குற்றம்
சாட்டப்பட்டு, கீழ் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் குற்ற
மற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டது எப்படி? குற்றம் சாட்டப்பட்டவர்கள்
சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் படாமல் போயிருந்தால்
இந்த 22 பேரும் அல்லவா மரண தண்டனைக்கு உள்ளாகி உயிர் இழந்திருப்பார்கள்?
அப்படியானால், இந்த நீதி பிழைபட்ட நீதி அல்லவா?’ என மக்கள் கேட்டனர்.
17.10.99 அன்று ஆளுநராக இருந்த செல்வி ஃபாத்திமா பீவி அவர்களிடம் நால்வரின்
கருணை மனுவை அளித்தோம். ஆனால், அவர் 10 நாட்களில் 27.10.99 அன்று
இம்மனுக்களை தள்ளுபடி செய்தார். உடனடியாக, கொச்சியில் இருந்த உச்ச நீதிமன்ற
முன்னாள் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களிடம் தொலைபேசி மூலம் இந்த
விவரத்தைத் தெரிவித்தேன். அவரும், மற்றொரு நீதிபதியும் ஒன்றாக உட்கார்ந்து,
உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே ஒரு தீர்ப்பு அளித்திருப்பதாகவும், அந்தத்
தீர்ப்பின் அடிப் படையில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
செய்யும்படியும் ஆலோசனை கூறினார். இப்போது நீதியரசராக உள்ளவரும், அன்று
மூத்த வழக்கறிஞருமாகத் திகழ்ந்தவருமான கே.சந்துரு அவர்கள், எங்கள் மனுவின்
மீது உயர் நீதி மன்றத்தில் வாதாடும்போது, 'அரசியல் சட்டப்படி கருணை
மனுக்கள் மீது ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது, அமைச்சரவையின்
பரிந்துரை எதுவோ... அதன்படி நடந்துகொள்ள வேண்டியதுதான் அவருடைய கடமை’ எனக்
குறிப்பிட்டார்.அரசுத் தரப்பு வழக்கறிஞர், 'இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து
இதுவரை 200-க்கும் மேற்பட்ட மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களை
ஆளுநர்களும், குடியரசுத் தலைவர்களும் தன்னிச்சையாகப் பரிசீலனை செய்து
முடிவு எடுத்து இருக்கிறார்களே தவிர, அமைச்சரவைகளின் பரிந்துரைகளைக் கேட்டு
முடிவு செய்யவில்லை’ என வாதாடினார்.
''இதுவரை நீங்கள் அரசியல் சட்டத்தை மீறி செயல்பட்டிருக்கலாம். ஆனால்,
இனிமேல் அவ்வாறு செய்ய அனுமதிக்கக் கூடாது என்பது தான் எங்கள் மனுவின்
அடிப்படையாகும்’ என எங்கள் வழக்கறிஞர் கே.சந்துரு புரிந்த வாதத்தை
ஏற்றுக்கொண்டு நீதியரசர் கே.கோவிந்தராசன் அவர்கள், 25.11.99 அன்று வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த பின்வரும் தீர்ப்பினை அளித்தார். 'அரசியல்
சட்டத்தின் 161-வது பிரிவின்படி அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று ஆளுநர்
கருணை மனுக்களின் மீது முடிவு எடுக்கவில்லை. எனவே, மனுக்களைத் தள்ளுபடி
செய்து அவர் பிறப்பித்த ஆணை சட்டப்படி செல்லாதது ஆகும். எனவே, அந்த ஆணை
ரத்து செய்யப்படுகிறது.’சுதந்திர இந்திய வரலாற்றில் முதன் முறையாக இத்தகைய சிறப்பு மிக்க தீர்ப்பு
வழங்கப்பட்டு, கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்கும் அதிகாரம்
அமைச்சரவைகளுக்கு உண்டு என்பது நிலைநாட்டப்பட்டது. தமிழ்நாட்டுக்கு மட்டும்
அல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும், இந்த உரிமையை உயர்
நீதிமன்றத்தின் மூலம் நாங்கள் பெற்றுக்கொடுத்தோம். இந்தியா சுதந்திரம்
பெற்ற பிறகு, 52 ஆண்டுகாலமாக ஆளுநர்களும், குடியரசுத் தலைவர்களும்
அமைச்சரவையின் ஆலோசனைகளைப் பெறாமல் செயல்பட்டு வந்ததற்கு இந்தத் தீர்ப்பு
முற்றுப்புள்ளி வைத்தது. நான்கு தமிழர்கள் தொடர் பான இந்த வழக்கில்,
இத்தகைய சிறப்பான தீர்ப்பைப் பெற்று அமைச்சரவையின் அதிகாரத்தை மீட்டு,
அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களிடம் ஒப்படைத்தோம்.
அத்துடன் நாங்கள் நிற்கவில்லை. 30.11.99 அன்று சென்னையில்
பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட பெரும் பேரணியை நடத்தி, 15 லட்சத்துக்கும்
மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்ட கருணை மனுக்களை அன்றைய முதலமைச்சர்
கருணாநிதி அவர்களிடம் நேரில் சந்தித்து அளித்தோம். ஆனாலும், இன்று மரண
தண்டனைக்கு எதிராக நீட்டி முழக்குபவர், அவர் கையில் அதிகாரம் இருந்தும்,
அதைச் செய்வதற்கு முன்வரவில்லை.நால்வரில் நளினிக்கு மட்டும் கருணை காட்ட அமைச்சரவை பரிந்துரை
செய்வதற்கும், மற்ற மூவரின் கருணை மனுக்களை ஏற்க மறுப்பதற்கும் இவரே
காரணமாக இருந்தார். நளினிக்கு இவர் கருணை காட்டியதில் பின்னணி உண்டு.
முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்களின் மருமகளும், மனித உரிமை
ஆர்வலருமான மோகினி கிரி அம்மையாரை சந்தித்து இந்த நால்வரின் மரண தண்டனை
தொடர்பாக நான் பேசினேன். அதன் விளைவாக அவர் வேலூர் சிறையில் இந்த
நால்வரையும் சந்தித்துப் பேசினார். அதிலும், படித்த பெண்ணான நளினியின்
சந்திப்பு, அவர் உள்ளத்தை மிகவும் தொட்டது. திருமதி சோனியா காந்தி
அவர்களிடம் நளினி குறித்து அவர் பேசி, அதன் விளைவாக சோனியா காந்தி,
நளினிக்குக் கருணை காட்டும்படி குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதினார்.சோனியா கருணை காட்டியதால்தான் நளினிக்கு கருணை காட்ட கருணாநிதி முடிவு
எடுத்தார். அடுத்து, இந்த மூவரின் சார்பில் குடியரசுத் தலைவருக்கு கருணை
மனுக்களை அனுப்பி வைத்தோம். மேலும், எங்கள் குழுவின் சார்பில் டெல்லிக்குச்
சென்று வைகோ அவர்களின் உதவியுடன், பிரதமர் வாஜ்பாய் உட்பட மத்திய
அமைச்சர்கள் பலரையும் சந்தித்து முறையிட்டோம்.
சட்டத் துறையின் அமைச்சர் ராம்ஜெத்மலானியை சந்தித்தபோது அவர் எங்களிடம்,
'ஏன் உங்கள் முதலமைச்சரே இதைச் செய்யலாமே?’ என்று கேட்டார். என்ன
காரணத்தினாலோ அவர் தயங்குவதாக நாங்கள் தெரிவித்தபோது, முதல்வர்
கருணாநிதியிடம் அவரே எங்கள் முன்னிலையில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.'எதற்காகத் தயங்குகிறீர்கள் நான் உங்கள் பக்கம் இருக்கிறேன். தைரியமாகச்
செய்யுங்கள்’ என்று ஜெத்மலானி கூறினார். ஆனால், கருணாநிதியோ, 'நீங்களே
செய்யுங்கள்’ என்று கூறி பேச்சை முடித்துக் கொண்டார்.ஈராக் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட போதும், பாகிஸ்தானில் மரண தண்டனை
விதிக்கப் பட்ட சரன்தீப் சிங் என்பவரின் தண்டனையைக் குறைக்க வேண்டும்
எனவும் வேண்டுகோள் விடுத்து, தன்னை சிறந்த மனிதநேயராக காட்டிக்கொண்ட
கருணாநிதி, இந்த மூவர் விஷயத்தில் கருணை காட்ட ஆட்சியில் இருந்தபோது இறுதி
வரை முன் வரவே இல்லை.
அண்ணா நூற்றாண்டினை ஒட்டிப் பல்வேறு கொடிய குற்றங்களில் தண்டிக்கப்பட்ட
ஆயுள் தண்டனைக் கைதிகள் உட்பட ஏராளமானவர்களை, 7 ஆண்டுகளில் விடுதலை
செய்தார் கருணாநிதி. மதுரை மாநகராட்சி உறுப்பினராக இருந்த லீலா வதியை
பட்டப்பகலில் படுகொலை செய்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தி.மு.க-வினரை 7
ஆண்டுகளில் விடுதலை செய்ய அவரால் முடிந்தது. ஆனால், ராஜீவ் கொலை வழக்கில்
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, 20 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் வாடும்
ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய மூவரை விடுதலை செய்யக்கூட
கருணாநிதி முன்வரவில்லை. மரண தண்டனை பெற்றவர்களைத்தான் இவர் காப்பாற்ற
முன்வரவில்லை. குறைந்தபட்சம், ஆயுள் தண்டனை பெற்ற இந்த மூவரையாவது விடுதலை
செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. சோனியாவின் அதிருப்திக்கு
ஆளாகிவிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக, ராஜீவ் வழக்கில்
தண்டிக்கப்பட்டவர்களுக்கு இறுதி வரை கருணை காட்ட அவர் முன்வரவில்லை
என்பதுதான் உண்மை.தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, அவர்கள் மூவர் தூக்குத் தண்டனை பிரச்னையில்
கருணாநிதி இடைவிடாமல் சீண்டுவதற்குக் காரணமே, தான் செய்யத் தவறியதை
ஜெயலலிதா செய்து அதன் விளைவாக, தமிழ் உணர்வாளர்கள் அனைவரின் பாராட்டுக்கும்
நன்மதிப்புக்கும் ஆளாகிவிடக் கூடாது என்ற காரணத்தினால் அடிக்கடி அறிக்கை
வெளியிட்டு குட்டையைக் குழப்ப முயற்சி செய்கிறார்!
ஜூனியர் விகடன்
No comments:
Post a Comment