Search This Blog

Sunday, February 07, 2016

ஆராய்ச்சி!


கடலிலே மூழ்கி உயிரிழந்தார்கள் என்ற செய்தியை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆனால் ஜோர்டான் நாட்டில், ‘மரணக் கடல்’ என்றழைக்கப்படும் சாக்கடலில் குதிப்பவர்கள் மூழ்கி இறக்கவே மாட்டார்கள். இது எப்படிச் சாத்தியம்? ஒரு சின்னப் பரிசோதனையை வீட்டிலேயே செய்தால் இதற்கான விடையைக் கண்டு பிடித்துவிடலாம்.

பரிசோதனைக்குத் தேவையான பொருட்கள்: முட்டை, கண்ணாடி டம்ளர், உப்பு, தண்ணீர் மற்றும் ஸ்பூன்.

செமுறை: ஒரு கண்ணாடி டம்ளரில் பாதி அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். முட்டையை டம்ளரில் இருக்கும் தண்ணீரில் மெதுவாகப் போடுங்கள். நீரில் அடியில் முட்டை தங்கிவிடும்.

அதே முட்டையை மிதக்க வைக்கவும் முடியும். முயன்று பார்ப்போமா?

டம்ளரில் இருக்கும் முட்டையை எடுத்து விடுங்கள். இப்போது டம்ளரில் உள்ள தண்ணீரில் நான்கு அல்லது ஐந்து ஸ்பூன் உப்பைச் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். முட்டையை அந்த நீரில் மெதுவாகப் போடுங்கள். இப்போது முட்டை நீரில் மிதப்பதைப் பார்க்கலாம்.

முட்டை இப்போது மட்டும் ஏன் மிதக்கிறது? காரணத்தைப் பார்ப்போமா?

சாதாரணத் தண்ணீரில் முட்டையைப் போட்டபோது முட்டையின் அடர்த்தி(density), நீரின் அடர்த்தியை விட அதிகமானதாக இருந்தது. எனவே முட்டை மூழ்கி விட்டது. அடுத்தது உப்புக் கரைசலில் போட்டபோது, முட்டையின் அடர்த்தியைவிடக் கரைசலின் அடர்த்தி அதிகமாக இருந்ததால் முட்டை மிதக்க ஆரம்பித்து விட்டது. அதாவது ஒரு திடப்பொருள் திரவத்தில் மிதக்கிறதா அல்லது மூழ்குகிறதா என்பது அந்தப்திடப் பொருள், மற்றும் திரவத்தின் அடர்த்தியைப் பொருத் திருக்கிறது! பரிசோதனை இன்னும் முடியவில்லை. இப்போது முட்டையை வெளியே எடுத்துவிட்டுக் கரைசல் இருக்கும் டம்ளரில் கரைசலுக்கு மேலே சுத்தமான தண்ணீரை ஊற்றி நிரப்புங்கள். முட்டையை மீண்டும் அந்த நீரில் மெதுவாக இடுங்கள். முட்டை மூழ்குமா? மிதக்குமா?

முட்டை நீர்ப் பரப்பின் மேலேயும் மிதக்காது. டம்ளரில் அடியிலும் இருக்காது. மாறாகக் கரைசலும் புதிதாக ஊற்றப்பட்ட நீரும் சந்திக்கும் இடத்தில் நிற்கும். இதற்கு என்ன காரணம்? அடர்த்தி மிகுந்த உப்புக் கரைசல் முட்டையை மேலே தள்ளுகிறது. அடர்த்தி குறைந்த நீரோ முட்டையைக் கீழே அழுத்துகிறது. எனவேதான் முட்டை நடுவில் நிற்கிறது!

இப்போது முட்டையை வெளியே எடுத்துவிடுங்கள். கரண்டியால் டம்ளரில் உள்ள கரைசலை நன்கு கலக்குங்கள். மீண்டும் அதில் முட்டையைப் போடுங்கள். என்ன நடக்கிறது என்பதை நீங்களே பாருங்கள்!

No comments:

Post a Comment