Search This Blog

Monday, September 15, 2014

என்ன பயன்? - ஜன் தன்: காப்பீடு + கடன் தரும் திட்டம்

அரசு   மானியம்  பெறுகிறவர்களில் பலருக்கு வங்கிகளில் சேமிப்புக் கணக்கு இல்லை. இதனால்  அந்த மானியம் மக்களுக்குப் போய்ச் சேராமலே இருக்கிறது. எனவே, 7.5 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு ஆரம்பித்துத் தரும் ஜன் தன் யோஜனா திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்தத் திட்டத்தால் என்ன  பயன்?
 
பிரதமர் துவக்கி வைத்த அனைவருக் கும் நிதிச் சேவை திட்டத்தின் கீழ் இதுவரை வங்கிக் கணக்கு இல்லாத வர்கள் வங்கிக் கணக்கை ஆரம்பிக்க முடியும். இதில் ரூபே டெபிட் கார்டு இலவசமாக வழங்கப்படும். இதனுடன் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள விபத்து காப்பீடும் இலவசமாகக் கிடைக்கும். மேலும், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள லைஃப் இன்ஷூரன்ஸ் கவரேஜ் வழங்கப்படுகிறது. சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர் மரணம் அடைந்தால் இந்தத் தொகை கிடைக்கும்.
 
இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு துவங்குபவர்களுக்கு குறைந்தபட்ச இருப்பு தொகை எதுவும் கிடையாது. அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம். அதற்குமேல் இருப்பு வைத்தால், அந்த நபரின் வங்கிக் கணக்கு வழக்கமான வங்கிக் கணக்காக மாறிவிடும்.

 

அனைவருக்கும் வங்கிச் சேவை திட்டத்தின் கீழ் கணக்கு துவங்குபவர் களுக்கு கேஒய்சி (உங்கள் வாடிக்கை யாளர்களை புரிந்து கொள்ளுங்கள்) விதிமுறைகள் எளிமைப்படுத்தப் பட்டுள்ளன. அதாவது, ஆதார் அட்டை மட்டும் இருந்தாலே கணக்கு துவங்க முடியும். அதேபோல வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ரேஷன் கார்டு, கிராம நிர்வாக அதிகாரி யிடம் வாங்கிய சான்று என எதாவது ஒரு சான்று தந்து  வங்கிக் கணக்கு துவங்க முடியும்.இந்தக் கணக்கில் ஃபிளெக்ஸி ஆர்டி துவங்கலாம். வைப்பு நிதி, பண பரிமாற்றம் ஆகியவற்றை செய்துகொள்ள முடியும். ஆனால், ஒரு நாளைக்கு அதிக பட்சம் ரூ.10 ஆயிரத்துக்கு மட்டும்தான் பரிவர்த்தனை செய்ய முடியும். இந்தச் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வங்கிக் கணக்கில் அவர்கள் செய்யும் பரிவர்த்தனைகளின் அடிப்படையில் ரூ.5 ஆயிரம் வரை ஓவர் டிராப்ட்-ஆக (ஓ.டி) கடன் பெற முடியும்.

ஏற்கெனவே வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு துவங்க முடியாது. ஆனால், வேலை காரணமாக இடம் மாறும்போது, அங்குள்ள சேமிப்புக் கணக்கு இருந்தால், அதை இந்த ஊருக்கு மாற்றிக்கொள்ள லாம். அது முடியவில்லையெனில், தற்போது வசிக்கும் முகவரியை அடிப்படையாக வைத்து, இந்தக் கணக்கைத் துவங்கலாம். ஆனால், இப்போது இருக்கும் ஊரில் சேமிப்புக் கணக்கு இருக்கக்கூடாது
 

ஆப்பிள் ஐபோன் 6 & 6+

வருடந்தோறும் செப்டம்பர் 9-ம் தேதி சில புதிய தயாரிப்புகளை வெளியிடுகிற ஆப்பிள் நிறுவனம், இந்த ஆண்டு ஆப்பிள் ஐபோன் 6 மற்றும் 6+ என இரு ஐபோன்களை வெளியிட்டது.

ஐபோன் 6 மற்றும் 6+ ஆகியவற்றுக்கு திரை அளவு முறையே 4.7 இன்ச் மற்றும் 5.5 இன்ச் என்ற அளவில் வடிவமைக்கப் பட்டுள்ளது. அதேபோல், 6.9 mm அடர்த்தியில் ஐபோன் 6 மற்றும் 7.1 mm அடர்த்தியில் ஐபோன் 6+ம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் ரெட்டினா HD டிஸ்ப்ளே 1334x750 (~326 pixels per inch) மற்றும் 1920x1080 (401 pixels per inch) திறனுடன்  உருவாக்கப்பட்டுள்ளது.


வீடியோ பதிவில் ஒரு நொடிக்கு 240 பிரேம் என்ற அளவில் முழு நீள HD வீடியோவை பதிவு செய்யலாம். ஆப்பிள் A8-Dual-core 2 GHz பிராசஸரைக் கொண்டு இயங்கும். மேலும், இதன் இன்டர்னல் மெமரி 16 GB-யில் தொடங்கி, 128 GB என்ற அளவில் வெளியிட்டுள்ளது. இதன் கேமரா  நவீன கேமராக்களில் உள்ள டிஎஸ்எல்ஆர் தொழில்நுட்பத்துக்கு இணையான தரத்தில் புகைப்படங்களைத் தரக்கூடியது. இதில் ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 8ஐ ஆபரேட்டிங் சிஸ்டமாகப் பயன்படுத்தியுள்ளது.

இன்டர்னல் மெமரியைப் பொறுத்து இதன் விலை மாறுபடும். ஐபோன் 6-ன் விலை  ரூ.40,000 - 50,000 என்ற அளவிலும், ஐபோன் 6+ன் விலை ரூ.45,000- 60,000 என்கிற அளவில் இருக்கும் என்கிறார்கள்.  செப்டம்பர் 12-ம் தேதி முதல் விற்பனைக்கான முன்பதிவு உலக அளவில் ஆரம்பமாகிறது. இந்தியாவில் இந்த ஐபோன்கள் வரும் அக்டோபர் 17-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. மற்ற ஐபோன்களைக் காட்டிலும் இவை 84 மடங்கு கிராபிக்ஸ் திறனும், 50 மடங்கு பேட்டரி திறனும் கொண்டதாக இருக்குமாம்.
 

மோகன் பிரபாகரன்

Monday, September 08, 2014

மோட்டோ ஜிக்கு போட்டியாக ஸியோமி ரெட்மி 1S

அதிகமான தொழில்நுட்பம், அகலமான ஸ்கிரீன், துல்லியமான கேமரா மற்றும் குறைந்த விலை, இதுதான் இன்றைய ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்களின் புதிய யுக்தி. அந்த வகையில் சீனாவின் ‘ஸியோமி’ நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டாவது ஸ்மார்ட் போனான ‘ரெட்மி 1S’(Xiaomi Redmi 1S) - ஐ வெளியிடவுள்ளது.

பார்ப்பதற்கு எளிமையாகவும் ரெட் கலர் தீம் லுக்கில் இருக்கும் இந்த ‘ரெட்மி 1S’ 4.7 இன்ச் அகலமான IPS தொடுதிரையைக் கொண்டுள்ளது. இந்த IPS டிஸ்ப்ளே 729x1280 பிக்ஸல்ஸ் (~ 313 pixels per inch) திறனைக் கொண்டுள்ளது. மேலும், இந்தத் தொடுதிரை கீறல்களை சமாளிக்க ‘AGC Dragontrail 2 glass (scratch-proof)' என்ற கண்ணாடியைக் கொண்டுள்ளது.


ரெட்மி 1S 1.6GHz Quadcore Qualcomm Snapdragon 400 MSM8228 மற்றும் Adreno 305 கிராபிக்ஸ் பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது. மேலும், 1GB ரேம்மை கொண்டு இயங்கும் ரெட்மி 1S-ன் இன்டர்னல் மெம்மரி 8GB ஆகும். மேலும், SD கார்டு மூலம் 64GB வரை மெம்மரியை விரிவுபடுத்தலாம். பேட்டரி வசதியைப் பார்க்கும்போதும் ரெட்மி 1S 2000mAH பேட்டரியைக் கொண்டுள்ளது. 8 மெகா பிக்ஸல் LED ப்ளாஷ் வசதியோடு வரும் பின்புற கேமராவையும் 1.6 மெகா பிக்ஸல் முன்புற கேமராவையும் கொண்டுள்ள இந்த ரெட்மி 1S மூலம் முழு நீள HDயில் வீடியோவை  பதிவு செய்யலாம்.

ரெட்மி 1S ஆண்ட்ராய்டு 4.3-ல் இயங்குகிறது. ஸியோமி நிறுவனத்தின் பிரத்யேகமான UI ‘miui’யும் இந்த OSயோடு அடங்கும். ஓஎஸ் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாகவும், பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரெட்மி 1S, 9.9mm அடர்த்தியும் 158g எடையும் கொண்டுள்ளது.

ரெட்மி 1S இந்திய விலையில் Rs. 5,999. ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் மட்டும் பிரத்யேகமாக செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியாகும். ரெட்மி 1S ‘மோட்டோ ஜி’க்கு பலத்த போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
செ.கிஸோர் பிரசாத் கிரண் 

Saturday, September 06, 2014

ஓணம் பண்டிகை

உலகெங்கும் வாழும் மலையாள மக்களால் கொண்டாடப்படும் பாரம்பரிய பண்டிகை ஓணம். ‘காணம் வித்தாவது ஓணம் உண்’ என்பது பழமொழி. பண்டிகை செலவுக்குப் பணம் இல்லாவிட்டாலும் பெண்கள் கழுத்தில் இருக்கும் பொட்டுத் தாலியையாவது விற்று ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டுமாம். இங்கே ‘காணம்’ என்பது மாங் கல்யத்தைக் குறிக்கிறது. அதாவது ஓணப்பண்டிகை எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொண்ட பண்டிகை என்பதற்காக இந்தப் பழமொழி சொல்லப்பட்டுள்ளது. 
மலையாள ஆண்டின் முதல் மாதம் சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதைத்தான் ‘அஸ்தம் தொட்டு பத்தோணம் வரை’ என்பர். இதை கேரளாவின் அறுவடைத் திருநாள் என்றும் அழைப்பர். தமிழ் மாதத்தின் படி ஆவணி மாதம் வரும் அஸ்தம் நட்சத்திரம் முதல் திருவோண நட்சத்திரம் வரை பத்து நாட்கள் ஓணம் கொண்டாடப்படுகிறது.  சங்க காலத்தின் போதே ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வந்துள்ளதாக செய்திகள் உள்ளன. பத்துப்பாட்டில் மதுரைக் காஞ்சியில் பாண்டிய நாட்டு மக்கள் எவ்வாறு ஓணம் கொண்டாடினார்கள் என்பதை மாங்குடி மருதனார் விளக்குகிறார். மகாபலி என்ற மன்னன் கேரளாவை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். தானம், தர்மம் செய்வதில் சிறந்து விளங்கிய மன்னன் மகாபலி ஒரு முறை வேள்வி செய்யும் போது திருமால் மூன்றடி உயரம் கொண்ட வாமன அவதாரத்தில் வந்து மூன்றடி நிலம் கேட்டார். மன்னன் மகாபலியோ ‘தாங்களே அளந்து எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார். முதல் அடியால் பூமி முழுவதையும் அளந்தவர் இரண்டாவது அடியால் விண்ணையும் அளந்தார். மூன்றாவது அடியை நான் எங்கே வைப்பது என்று திருமால் கேட்டதற்கு, மன்னன் மகாபலி தன் தலையைத் தந்தான். மகாபலியின் கொடை குணத்தைக் கண்ட திருமால் மகாபலியை தன் காலால் பூமிக்குள் தள்ளி முக்தி அளித்தார். ‘தன் மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்ட மன்னன் மகா பலி, வருடம் ஒரு முறை இதே நாளில் வந்து தன் நாட்டு மக்கள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ்வதை நான் பார்க்க வேண்டும்’ என்று வரம் கேட்டார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் திருவோணம் அன்று மன்னன் மகாபலி நாட்டு மக்களை காண வருவதாக ஐதிகம். எனவே கேரள மக்கள் ஓணம் திருநாளின் போது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருப்பர். கேரளாவில் ஆனி, ஆடி மாதம் மழைகாலம். எனவே செடிகள் நன்கு வளர்ந்து ஆவணி மாதத்தில் பூக்கள் அதிகமாக பூக்கும் காலம். மன்னன் மகா பலியை வரவேற்கும் பொருட்டு வாசலில் பூக்களால் ஆன கோலம் (அத்தப்பூ கோலம்) வரைந்து வரவேற்கிறார்கள். முதல் நாள் அஸ்தம் நட்சத்திரம் அன்று ஒரு வகை பூக்கள் கொண்டும் இரண்டாம் நாள் இரண்டு வகைப் பூக்கள் கொண்டும் மூன்றாம் நாள் மூன்று வகை பூக்கள் என்று பத்தாம் நாள் பத்து வகை பூக்களால் கோலம் வரைந்து மன்னன் மகாபலியை வரவேற்கிறார்கள். கோலத்தின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
மேலும் பெண்கள் பத்து நாளும் அதிகாலை எழுந்து குளித்து மகாவிஷ்ணுவிற்குப் தினம் ஒரு பாயசம், பொங்கல் செய்து படைத்து வழிபடுவர். அருகிலுள்ள விஷ்ணு கோயிலுக்குச் சென்று வழிபடுவர். பத்து நாளும் விருந்தினர்கள் வந்த வண்ணம் இருப்பர். பத்தாவது நாள் திருவோணத்தன்று எல்லோரும் புத்தாடை அணிவார்கள். உறவினர்களுக்கும் புத்தாடைக் கொடுப்பர் அதை ஓணப்படை என்பர். பெண்கள் ஓணப்புடவை அணிவர். ஜரிகை பார்டர் போட்ட வேட்டி, நேரியலை புடவையாக கட்டுவர். தற்போது முழு புடவையாக உள்ளதையும் வாங்கி கட்டுகிறார்கள். இதை ஓணப்புடவை என்று அழைப்பர். தங்க நகைகளை அணிந்து கோயிலுக்குச் சென்று வருவர். இனிப்பு வகைகள் செய்து உறவினர்கள், நண்பர்களுக்குக் கொடுத்து மகிழ்வர். மேலும் அன்று ‘ஓணசத்யா’ என்ற விருந்து தடபுடலாக நடைபெறும். தலைவாழை இலை போட்டு, இருபத்தோரு வகையான கூட்டு செய்து பரிமாறுவார்கள். இதில், முக்கியமாக அடை பிரதமன், அவியல், எரி சேரி, உப்பேரி, உப்பிலிகறி, தோரன் போன்றவை அடங்கும்.  இளம் பெண்கள் ‘கைக்கொட்டுக்களி’ என்னும் நடனம் ஆடி மகிழ்வர். விஷ்ணு மற்றும் மகாபலி பற்றிய பாடல்கள் இடம் பெறும், இதில் 8, 10, 12.. என்று பெண்கள் இரட்டைப்படையில் சேர்ந்து ஏதேனும் பாடலை தேர்ந்தெடுத்து பயிற்சிசெய்து திருவோணத்தன்று ஆடி மகிழ்வர். அப்போது ஓணப் புடவை அணிந்திருப்பர், அதுபோல் தோட்டத்தில் ஊஞ்சல் கட்டி சிறியவர் முதல் பெரியவர் வரை ஆடி மகிழ்வர். ஆண்கள் கதகளி ஆட்டம், புலிக்களி ஆட்டம், நடைபெறும். இதைப் பார்க்க மக்கள் ஆங்காங்கே கூடுவர். படகுப் போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்படும். கோயில்களில் விஷேச வழிப்பாடுகள் நடைபெறும். யானைகளுக்கு நெற்றிப்பட்டம் கட்டி அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வருவர். கேரள மாநிலமே விழாக் கோலம் பூண்டு ஒளி வெள்ளத்தில் மூழ்கி இருக்கும்.

Friday, September 05, 2014

உறைந்து போகும் கடல்கள்!


பூமியின் தென் துருவம் அண்டார்டிகா கண்டத்தில் அமைந்துள்ளது. அண்டார்டிகா பெரிய நிலப்பகுதி. ஆனால் வட துருவம் கடல் பகுதியில் அமைந்துள்ளது. அங்கு கடல் நீர் உறைந்து பனிக்கட்டியாக இருந்ததால் ஒருசமயம் அமெரிக்கக் கடற்படை வீரர்கள் நின்றபடி போட்டோ எடுத்துக் கொண்டார்கள். வட துருவப் பகுதிக்கு அவர்கள் சென்ற விதமே அலாதியானது. ஸ்கேட் என்னும் அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் (சப்மரீன்) 1959ம் ஆண்டில் வட துருவத்தையொட்டிய கடல் பகுதியில் நீரில் மூழ்கியபடி சென்று கொண்டிருந்தது. வட துருவ முனையை எட்டியதும் அந்த நீர்மூழ்கிக் கப்பலானது அங்கு கடலை மூடியபடி இருந்த உறைபனிக் கட்டியைப் பொத்துக்கொண்டு மேலே வந்தது. கடலை மூடியிருந்த பனிக்கட்டியின் தடிமன் சுமார் 2 அடி அளவுக்கே இருந்ததால் பனிக்கட்டியைப் பொத்துக்கொண்டு மேலே வருவது பெரிய பிரச்னையாக இருக்கவில்லை. பனிக்கட்டியைப் பொத்துக்கொண்டு வட துருவத்துக்குச் சென்ற முதல் நீர்மூழ்கிக் கப்பல் அதுவே. 

இதிலிருந்து ஒன்று தெரிகிறது. கடல் பனிக்கட்டியால் மூடப்பட்டாலும் அந்தப் பனிக்கட்டிக்கு அடியில் கடலானது கடலாகத்தான் இருக்கும். கடலின் மேற்புறம் பனிக்கட்டியால் மூடப்படும்போது அங்கு மேலிருந்து அடிமட்டம் வரை கடல் நீர் உறைந்து போய்விடுவதில்லை. இது இயற்கையில் அதிசயங்களில் ஒன்று. துருவப் பகுதியில் குளிர் நிலைமை பூஜ்ய டிகிரிக்கும் மிகக் குறைவாக இருக்கலாம். ஆனால் கடல் நீரை மூடி நிற்கும் பனிக்கட்டியானது வெளியே நிலவும் குளிர் அடியே இருக்கும் நீரைப் பாதிக்காதபடி தடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.குளிர்காலம் கடுமையாக இருந்தால் அமெரிக்காவின் வடஎல்லையில் உள்ள பெரிய ஏரிகளும் உறைந்து போவதுண்டு. இங்கிலாந்தில் லண்டன் நகரில் தேம்ஸ் நதி உறைந்து போனதுண்டு.ஆர்ட்டிக் பகுதியில் கடல் நீர் உறைந்தாலும் உறைந்த பனிக்கட்டிக்கு அடியில் கடல்வாழ் விலங்குகள் பாதிக்கப்படுவதில்லை. அதேபோல ஆர்ட்டிக் பகுதியில் வாழும் பிரபல துருவக் கரடிகளும் இடம்பெயர்ந்து விடுவதில்லை.துருவக் கரடிகளுக்கு ஒரு வகை சீல்தான் பிரதான உணவு. சீல்கள் பனிக்கட்டிக்கு அடியில் உள்ள நீரில் வாழ்பவை. நீருக்குள் வாழும் மீன்கள் போன்றவை நீரில் உள்ள ஆக்சிஜனை எடுத்துக்கொள்ளும். ஆனால் சீல்கள் அவ்வப்போது நீருக்குள்ளிருந்து வெளியே வந்து காற்றை சுவாசிப்பவை. பெரிய பரப்பளவை பனிக்கட்டி மூடியிருந்தாலும் சீல்கள் தங்களது நகங்களால் உள்ளே இருந்தபடி தலைக்கு மேலே உள்ள பனிக்கட்டியில் ஓட்டை போட்டுவிடும். பனிக்கட்டியில் போட்ட ஓட்டைகள் வழியே அவ்வப்போது தலையை நீட்டி காற்றை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றுவிடும்.சீல்கள் போட்ட ஓட்டைகளுக்கு அருகே துருவக் கரடிகள் காத்துக் கொண்டிருக்கும். சீல்கள் தலை காட்டியதும் ஒரே பாய்ச்சலில் சீல்களைப் பிடிக்க முயற்சி செய்யும். சீல்கள் ஒரு கணம் ஏமாந்தால் துருவக் கரடிகள் அவற்றைக் கவ்வி உணவாக்கிக் கொள்ளும்.

துருவப் பகுதி குறித்து கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் அங்குதான் ஐஸ்பெர்க் எனப்படும் பனிக்கட்டி மலைகள் தோன்றுகின்றன. கிரீன்லாந்து எனப்படும் பெரிய நிலப்பகுதி துருவப் பகுதியில்தான் உள்ளது. கிரீன்லாந்தின் 81 சதவிகிதப் பகுதி பனிக்கட்டியால் மூடப்பட்டது. இந்த வட்டாரத்தில் மேலும் சில தீவுகளும் உள்ளன. இவையும் பனிக்கட்டியால் மூடப்பட்டவை.குளிர் காலத்தில் மேலும் மேலும் பனிக்கட்டிகள் சேருகின்றன. அவ்வித நிலையில் கரையோரமாக உள்ள பனிக்கட்டிப் பாளங்கள் பிதுங்கிக் கொண்டு கடலில் வீழ்ந்து மிதக்க ஆரம்பிக்கின்றன. இயல்பாக இவை தெற்கு நோக்கி அதாவது அட்லாண்டிக் கடலை நோக்கிச் செல்ல முற்படுகின்றன.மிதக்கும் பனிக்கட்டிகள் வடிவில் பிரமாண்டமானவை. இவற்றை மிதக்கும் பனிமலைகள் என்றே கூற வேண்டும். மிகுந்த எடை காரணமாக மிதக்கும் பனி மலைகளின் பெரும்பகுதி கடல் நீரில் மூழ்கியிருக்கும். சிறு பகுதிதான் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். அதாவது பத்தில் ஒரு பங்குதான் கடல் நீருக்கு மேலே நீட்டிக் கொண்டிருக்கும். கப்பல்கள் மீது மிதக்கும் பனி மலைகள் மோத நேர்ந்தால் ஒரு பெரிய குன்று வந்து மோதியது போல கப்பல் மூழ்க வேண்டியதுதான்.உடையவே உடையாது என்று வருணிக்கப்பட்ட டைட்டானிக் கப்பல் மீது மிதக்கும் பனிமலை மோதியபோது அந்தக் கப்பலில் இருந்த பயணிகளில் 1500 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் 1912ம் ஆண்டில் நிகழ்ந்தது. அந்தக் காலத்தில் ராடார் என்ற கருவி கிடையாது. ஆகவே எதிரே மிதக்கும் பனிமலை வந்ததை கப்பல் மாலுமிகளால் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. இப்போதெல்லாம் எல்லா கப்பல்களிலும் ராடார் கருவிகள் உள்ளன. கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் இருந்தாலும் மிதக்கும் பனிமலைகள் இருப்பதை இந்தக் கருவிகள் கண்டுபிடித்துக் கூறிவிடும்.வட அமெரிக்கக் கண்டத்துக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் அட்லாண்டிக் கடலின் வடபகுதியானது கப்பல் போக்குவரத்து அதிகம் உள்ளதாகும். மிதக்கும் பனிமலைகள் எங்காவது தென்படுகின்றனவா என்று வானிலிருந்து கண்காணித்து தகவல் கூறும் ஏற்பாடும் இப்போது உள்ளது.மிதக்கும் பனிமலைகள் மேலும் மேலும் தெற்கு நோக்கி வரும் போது சூரிய வெப்பம் காரணமாக உருகிக் கடல் நீரில் கரைந்து விடும். கடல் நீரில் மிதந்து வந்தாலும் மிதக்கும் பனிமலை முழுவதும் உப்பு இல்லாத நல்ல நீராகும்.அண்டார்டிகா சுற்றியுள்ள கடலிலும் இவ்விதம் கடல் நீர் பனிக்கட்டியால் மூடப்படுகிறது. அங்கும் நிறைய பனிமலைகள் தோன்றுகின்றன. அவை வடக்கு நோக்கி வருகின்றன. ஆனால் அவை நடமாடும் கடல் பகுதிகளில் கப்பல் போக்குவரத்து அதிகமில்லை.

என்.ராமதுரை

சங்கடம் உண்டாகும்போது உதவுவது எது?

 
ஏரண்டகர் என்று ஒரு ரிஷிக்குப் பெயர். ‘ஏரண்டம்’ என்றால் ஆமணக்கு. ஆமணக்குக் கொட்டையிலிருந்துதான் விளக்கெண்ணெய் எடுப்பது. இந்த ரிஷியின் பெயருக்கு ‘விளக்கெண்ணெய் சாமியார்’ என்று அர்த்தம். கேலிப்பெயர் மாதிரி த்வனிக்கிறது. மஹான்கள் தங்களுக்கு ஊரும் பெயரும் சொல்லிக் கொள்ள மாட்டார்கள். அநாமதேயமாகக் கிடப்பார்கள், திரிவார்கள். ஜனங்கள் அவர்களைப் போற்றிப் பட்டம் கொடுத்தாலும் சரி, தூற்றிப் பரி ஹாஸப் பேர் வைத்தாலும் சரி, இரண்டும் அவர்களுக்கு ஒன்றுதான்.
 
ஏரண்டகருக்கு அப்பா, அம்மா வைத்த பெயரென்னவோ யாருக்கும் தெரியாது. ஏரண்டகர் என்பது ஜனங்களாக வைத்த பெயர்தான். அதற்குக் காரணம் உண்டு. கும்பகோணத்துக்கு மேற்கே இரண்டு மைலில் ஸ்வாமி மலைக்குப் போகிற வழியில் கொட்டையூர் என்று ஒரு ஸ்தலம் இருக்கிறது. கொட்டையூர் என்று ஏன் பேர்? எத்தனையோ கொட்டைகள் இருகின்றன. இருந்தாலும் கொட்டை என்று இரண்டுதான் முக்கியமாக சொல்லப்படுகின்றன. ஒன்று ஆத்மார்த்தமானது - ருத்ராக்ஷத்தைக் கொட்டை என்றே சொல்வார்கள். சிவ தீகை்ஷ செய்து கெண்டு ருத்ராக்ஷம் போட்டுக் கொண்டிருப்பவர்களைக் ‘கொட்டைக்கட்டி’ என்பார்கள். இந்தக் கொட்டை மனஸில் சேருகிற அழுக்குகளை எடுப்பது.  

இன்னொரு கொட்டை வயிற்றில் சேருகிற அழுக்குகளை, கெடுதல்களை எடுக்கிற ஆமணக்குக் கொட்டை. முத்துக்கொட்டை, கொட்டை முத்து என்றும் சொல்வார்கள். அதை ஆட்டித்தான் விளக்கெண்ணெய் எடுப்பது. வயிற்று அடைசலைப் போக்குவதோடு இன்னும் பல தினுசிலும் தேஹாரோக்யத்துக்குப் ப்ரயோஜனப்படுவது. வயிறு லேசாகி, தேஹம் ஆரோக்கியமாக இருந்தால்தான மனஸும் லேசாகி ஈச்வரபரமாக நிற்கும். ஆனதால் ஆமணக்கு ஆத்மார்த்தமாகவும் நல்லது செய்வதே. ருசியும் வாஸனையும் ஸஹிக்காவிட்டாலும் ‘நல்ல ருசி, நல்ல வாசனை’ என்று நாம் தின்றதுகளால் ஸங்கடம் உண்டாகும்போது உதவுவது ஆமணக்குத்தான்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

திட்டக் கமிஷனைக் கலைப்பது சரியா?

 
பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்று தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் திட்டக் கமிஷனைக் கலைத்துவிட அரசு முடிவு செய்துவிட்டது என்பதான அறிவிப்பு. அதற்கு அடுத்த நாள் திட்டக் கமிஷனுக்குப் பதிலாக வேறு எந்த மாதிரி அமைப்பை ஏற்படுத்தலாம் என்பது பற்றி பொது மக்களின் கருத்தை வரவேற்பதாக அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டது. திட்டக் கமிஷனுக்கு என்ன வந்தது? 
 
1950-ல் தான் பிரதமர் நேரு திட்டக் கமிஷன் என்ற அமைப்பை உருவாக்கி அதன் நோக்கங்கள் என்ன என்பதையும் அறிவித்தார். இந்தியாவின் முன்னேற்றத்துக்குப் பொருளாதார வளர்ச்சி அவசியம் என்றும் அந்தப் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பெருக்க வேண்டும் என்றும் நேரு தெரிவித்தார். அதன்படி சாலை வசதிகள், போக்குவரத்துத் துறையில் முன்னேற்றம், இந்தியாவிலுள்ள அனைத்துத் துறைமுகங்களிலும் மேம்பாடுகள், தொழில் துறைக்குத் தேவையான மின்சார உற்பத்தியை அதிகப்படுத்துவது, விவசாய அபிவிருத்திக்கு நதிநீரின் வளத்தை முற்றிலுமாகப் பயன்படுத்தத் தேவையான இடங்களில் அணைகள் கட்டுதல் - இந்த மாதிரி பல அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் குறிக்கோளுடன் திட்டங்கள் தீட்டி அந்தத் திட்டங்களை நிறைவேற்றும் பணிகளைத் தொய்வில்லாமல் செயல்படுத்துதல் - இவை திட்டக் கமிஷனின் முக்கியமான பொறுப்புகள். இந்தத் திட்டத்தின்படி பஞ்சாபில் கட்டி முடிக்கப்பட்ட பக்ராநங்கல் அணையைப் பார்த்துவிட்டு நேரு இவைதான் நான் வணங்கும் தெய்வம்" என்று பெருமிதப்பட்டார்.
 
சென்ற 64 ஆண்டுகளில் இதுவரை 12 ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இப்போது 13வது ஐந்தாண்டுத் திட்டத்தின் மத்தியில் நாம் இருக்கிறோம். இந்தத் திட்டக் கமிஷன் உறுப்பினர்களாக கடந்த காலங்களில் பல பொருளாதார வல்லுநர்களும், பொறியாளர்களும், விவசாயத் துறையைப் பற்றி நன்கு அறிந்த பல அறிஞர்களும் இருந்திருக்கிறார்கள்.
 
முன்னாள் பிரதம மந்திரி மன்மோகன் சிங்கும் ஒரு காலகட்டத்தில் திட்டக் கமிஷன் அங்கத்தினராக இருந்தார். திட்டக் கமிஷனின் செயல்பாடுகளில் இதுவரையில் பெரும் குறைகள் இருந்ததாகச் சொல்ல முடியாது. அதற்கு மாறாக திட்டக் கமிஷன் வகுத்த பல முன்னேற்றத் திட்டங்களினால்தான் இந்தியப் பொருளாதார அடிப்படையிலும் தொழில் மற்றும் விவசாய வளர்ச்சியிலும் நல்ல முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது. நாட்டில் மின்சார உற்பத்தி அதிகமாக இருக்கிறது. பல துறைமுகங்கள் நல்ல முறையில் சீர்படுத்தப்பட்டுச் செயல்படுகின்றன. தகவல், தொழில் நுட்பம், சட்டத் துறை நல்ல முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது.இந்த 64 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட 12 ஐந்தாண்டு திட்டங்களுக்கான செலவு செய்யப்பட்ட தொகை சுமார் 200 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம். திட்டங்களை நிறைவேற்றும்போது ஏற்படும் சேதாரங்களைத் தள்ளிவிட்டுப் பார்க்கும் போது நம் நாட்டின் செல்வம் சுமார் 150 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.திட்டக் கமிஷனைக் கலைக்கும் முடிவு சரியான தல்ல. இன்றைய அரசு பழைய ஆட்சியின் ஒரு அம்சம் என்று திட்டக் கமிஷனைக் கருதினால் புதிய அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அதன் அங்கத்தினர்களாக அரசியல்வாதிகள் யாரும் இருக்கக்கூடாது. தொழில்துறையின் முன்னேற்றத்தில் சாதித்தவர்கள், பொருளாதார நிபுணர்கள், வெவ்வேறு துறைகளில் திறன் பெற்ற பொறியாளர்கள், விஞ்ஞானிகள் இப்புதிய அமைப்பில் இடம்பெற வேண்டும். ஐந்து ஆண்டு காலம் என்பதற்குப் பதில் ஒவ்வொரு ஆண்டுக்கான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த வேண்டும். எந்த மாதிரி திட்டங்கள்? அதற்கான மதிப்பு என்ன? எந்தக் காலகட்டத்துக்குள் அவை நிறைவேற்றப்படும் என்பதையெல்லாம் தெளிவாகத் தெரியப்படுத்த வேண்டும். ஆண்டின் இறுதியில் இதைப் பற்றிய ஒரு நிறைவேற்ற அறிக்கை வெளியிட வேண்டும். குறைகள் இருந்தால் அதற்கான காரணங்களைத் தெரியப்படுத்த வேண்டும்.

Wednesday, September 03, 2014

தேவைதானா இந்த ‘ஐஸ் பக்கெட்’?

ஐஸ் பக்கெட் சேலஞ்ச்  இணையதளத்தில் இதுதான் வைரல் ஹிட். அமெரிக்க அதிபர் ஒபாமா தொடங்கி நம் ஊர் ஹன்சிகா, சானியா மிர்ஸா வரை ஆளாளுக்குப் பக்கெட்டும் கையுமாகத் திரிந்தார்கள். ஏன்?
 
ஒரு வாளி நிறைய குளிர்ந்த அல்லது ஐஸ்கட்டி நிறைந்த நீரை எடுத்து, அப்படியே தலையில் கவிழ்க்கவேண்டும். அதை வீடியோவும் எடுத்து சமூக வலைத் தளங்களில் வெளியிடவேண்டும். ''நான் ஊத்தியாச்சு. நீ போட்டிக்கு ரெடியா? டீலா, நோ டீலா?' என்று நண்பர்களிடம் சவால் விட வேண்டும். சவாலை ஏற்றுக் கொண்டவர்கள், வெற்றிகரமாக ஒரு பக்கெட் குளிர்ந்த நீரைத் தலையில் ஊற்றிக்கொண்டு அடுத்தவர்க ளிடம் சவாலை பாஸ் செய்ய வேண்டும். இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு வெற்றிகரமாக பக்கெட்டைக் கவிழ்த்தவர்கள் 'அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்கெலரோசிஸ்’ (ஏ.எல்.எஸ்) என்ற நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு 10 டாலர் நன்கொடையாகத் தர வேண்டும். சவாலை ஏற்காமல் அப்பீட் ஆகிறவர்கள், 100 டாலர் நன்கொடை தரவேண்டும். இதுதான் இந்தப் போட்டியின் விதிமுறை.
 
உலகின், பெரும் பணக்காரர் பில்கேட்ஸ் முதல் நம் ஊர் பாடகி ஸ்ரேயா கோஷல் வரை இந்த சேலஞ்சை வெற்றிகரமாகக் கடந்திருக்கிறார்கள்.

அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்கெலரோசிஸ்
 
'நம் மூளையில் கோடிக்கணக்கான நரம்பு செல்கள் இருக்கின்றன. இதில் மோட்டார் நியூரான் என்பதும் ஒன்று. இது மூளையில் இருந்து முதுகெலும்புத் தண்டுவடம் வழியாக தசைகளைச் சென்றடைகிறது. இந்த செல் கொஞ்சம் கொஞ்சமாகச் செயல் இழந்து அதன் இயக்கத்தை நிறுத்தும் போது உடலின் இயக்கம் பாதித்து, தசைகளை முடக்குகிறது.

இந்த நோயை 1869ல் ஃபிரான்ஸைச் சேர்ந்த ஜோன் மார்ட்டின் சோர்கோட் கண்டறிந்தார். இந்தப் பாதிப்பு ஏற்பட்டால், கைகள், கால்கள் தளர்ச்சியடையும். நடையில் தடுமாற்றம், பேசுவது மற்றும் விழுங்குவதில் சிரமம் ஏற்படும். தலையைக்கூட உயர்த்த முடியாத நிலை ஏற்படும்.

இதில் இரண்டு வகை உள்ளன. மூளையில் 'முகுளம்’ என்ற பகுதியைத் தாக்குவது ஒருவகை. இந்த பாதிப்பு இருந்தால் மூன்று ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழ்வது கடினம். சீனாவின் மாசெதுங்குக்கு இந்த பாதிப்பு இருந்தது. மற்றொன்று முதுகுதண்டு வடத்தைப் பாதிப்பது. இவர்கள் உரிய மருத்துவ வசதி இருந்தால் நீண்ட காலத்துக்கு உயிர் வாழலாம். புகழ்பெற்ற விஞ்ஞா னியான ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு இந்த வகை நோய் இருக்கிறது.

 

இது ஏன் ஏற்படுகிறது என்று கண்டறியப்படவில்லை. ஒரு சிலருக்கு மரபியல் ரீதியாக இந்தப் பாதிப்பு வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மோட்டார் நியூரான் செயல் இழப்பைத் தடுத்து, மீண்டும் ஆரோக்கியமான நிலையை ஏற்படுத்த தற்போதைக்கு மருந்து இல்லை. ஆனால், ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு வரும்போது, நியூரான் செயல் இழப்பைத் தாமதப்படுத்த முடியும்.
இந்தியாவில் இந்த நோய் பாதிப்பு மிகக்குறைவு. பாதிப்பு இல்லை என்றே சொல்லலாம். புற்றுநோய் உள்ளிட்ட மிகப் பெரிய அளவில் உயிர்க் கொல்லிகளுக்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள அதிக அளவில் நிதி கிடைக்கிறது. ஆனால், ஒரு சிலரையே பாதிக்கும் இதுபோன்ற நோய்களைத் தடுக்க மருந்து கண்டுபிடிக்க அந்த அளவுக்கு நிதி கிடைப்பது இல்லை. அதனாலேயே ஐஸ் பக்கெட் போன்று நடத்தி விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டி உள்ளது.


 

Sunday, August 31, 2014

ஹென்றி ஃபோர்டு

எல்லோருக்குமே காரில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், இவருக்கோ எல்லோரும் காரில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை! அப்படிப்பட்ட ஆசைதான் இவர் மிகப் பெரிய கார் நிறுவனத்தை உருவாக்க காரணமாக இருந்தது. ஹென்றி ஃபோர்டு எனும் அந்த மனிதர் இந்தச் சாதனையை செய்வதற்குமுன், தாண்டிவந்த தடைகள் பல ஆயிரம்.

ஹென்றி ஃபோர்டு 1863-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள மிச்சிகனில் பிறந்தார். சிறுவயதில் இவரது தந்தை, பண்ணையில் வேலைக்குச் செல்வது பிடிக்காமல், இவரே ஒரு மோட்டார் கம்பெனியில் வேலைக்குச் சென்றார். மோட்டார் கம்பெனியில் வேலை பார்க்க உனக்குத் தகுதியில்லை என ஃபோர்டை சிறிது காலத்திலேயே அந்த நிர்வாகம் வெளியேற்றியது. அடுத்தடுத்த வாய்ப்புகளும் இவருக்குத் தோல்வியைத்தான் கொடுத்தன. ஆனால், ஃபோர்டுக்கு இயந்திரங்கள் மீதும், மோட்டார்கள் மீதும் இருந்த காதல் குறையவே இல்லை.


ஒரு கண்காட்சியில் பெட்ரோலில் இயங்கும் நீராவி பம்பை பார்த்தார். இதனை ஏன் வாகனங்களில் பொருத்தக்கூடாது என்று யோசித்தார். உதிரிபாகங்கள், பழைய உலோகங்களையும் கொண்டு அவரது வீட்டிலேயே ஒரு வாகனத்தை வடிவமைத்தார். இந்த வாகனத்தை ஓட்டி பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்க, கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்து வீட்டின் சுவற்றை இடித்துத் தள்ளி வேகமாகத் தன் வாகனத்தை இயக்கினார்.

எளியவர்களுக்கும் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் டி மாடல் காரை தயாரித்தார். அமெரிக்காவில் குறைந்த விலையில் கார்களை விற்று, கார் இல்லாதே அமெரிக்கரே இல்லை என்ற நிலையை உருவாக்க முதல் முயற்சியை வெற்றிகரமாக எடுத்தார்.

கார் தயாரிப்பில் அடுத்தடுத்து பலபேர் சேர்ந்து ஒவ்வொரு பகுதியாக இணைக்கும் அதிவேக அசெம்ப்ளி லைன் முறையின் மூலம் பல லட்சம் கார்களை உருவாக்கி சாதித்தார். இதன் மூலம் மற்ற நிறுவனங்களைவிட குறைந்த விலையில், குறைந்த நேரத்தில் கார்களை தயாரித்து அளிக்க முடிந்தது.

கோடி கோடியாக பணத்தை சேர்த் தவர், ஃபோர்டு அறக்கட்டளையை நிறுவி மக்களுக்கு உதவினார். உங்கள் கனவும் விடாமுயற்சியும் பலமாக இருந்தால் ஹென்றி ஃபோர்டு மாதிரி, நீங்களும் தடைகளைத் தாண்டி வரலாற்றில் நிலைத்து நிற்கலாம்!

மோடியின் 100 நாட்கள்!

மோடியின் தலைமையிலான அரசின் 100 நாள் செயல்பாட்டைப் பற்றி இப்போது எல்லோரும் பேசுகிறார்கள். ஓர் அரசாங்கத்தின் செயல்பாடுகள் பற்றி சரியானதொரு முடிவினை எடுக்க 100 நாட்கள் என்பது நிச்சயம் போதாது. மோடி அரசின் செயல்பாடுகள் பற்றி சொல்லப்படுகிற கருத்துகள் அனைத்தும் தனிமனிதர்களின் விருப்பு, வெறுப்பு அடிப்படையிலேயே  அமைந்திருக்கிறது. விருப்பு, வெறுப்புகளைத் தாண்டி மோடி அரசின் செயல்பாட்டை கணிப்பதே இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். 

மோடி பதவியேற்றபின், கடந்த மூன்று மாத காலத்தில், நாட்டின் ஜிடிபி வளர்ச்சி மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. நிதிப் பற்றாக்குறை கணிசமாகக் குறைந்திருக்கிறது. பணவீக்கமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. தொழில் துறை முக்கியஸ்தர்கள் பலரும் இனி வளர்ச்சி நிச்சயம் என்று நம்பிக்கையாக இருக்கிறார்கள்.  இதுநாள் வரை கிடப்பில் கிடந்த பல மசோதாக்களை சட்டமாக மாற்றும் நடவடிக்கைகள் வேகமாக நடக்கின்றன. அதிகார வர்க்கத்துக்கு முன்னுரிமை தருவதன் விளைவாக, அரசியல்வாதிகளின் முக்கியத்துவம் குறைந்திருக்கிறது. அரசு நிர்வாக மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார் மோடி.
 
கடந்த 100 நாட்களில் இப்படி பல நல்ல விஷயங்கள் நடந்திருந்தாலும், நலிந்துகிடக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்த  இவை மட்டுமே போதாது. நாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்த தெளிவான திட்டம் எதையும் இந்த அரசு இதுவரை முன்வைக்கவில்லை. உள்கட்டமைப்புத் துறையில் குறைந்தபட்சமாக செய்துமுடிக்கப்பட வேண்டிய வேலைகள்கூட ஆரம்பித்ததற்கான அறிகுறிகள் தென்படவில்லை. விவசாயத் துறை யில் உற்பத்தி பெருக்குவதாகட்டும், தொழில் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதாகட்டும், அடுத்த ஓராண்டு காலத்திலாவது பெரிய மாற்றம் ஏற்படுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. என்றாலும் இனிவரும் நாட்களிலும் இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள் இப்படியே இருந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. கடந்த ஆட்சியின் மோசமான நிர்வாகத்தினால் சீர்குலைந்துபோன பொருளாதாரத்தை சீர்செய்துவிட்டுதான் மீண்டும் வளர்ச்சியைக் கொண்டுவர வேண்டிய நிர்பந்தம் இந்த அரசாங்கத்துக்கு இருப்பதை மறுக்க முடியாது.

நாட்டை நிச்சயம் முன்னேற்றுவார் என்கிற மக்களின் நம்பிக்கையை மோடி இன்னும் இழந்துவிடவில்லை. ஓர் அரசாங்கம் மக்களின் நம்பிக்கையிலேதான் நடக்கிறது என்று கூறும் மோடி, மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் நம்பிக்கை அவநம்பிக்கையாக மாற வெகுகாலமாகாது என்பதை உணரும் நேரமிது!  

சாம்சங் கேலக்ஸி ஆல்பா!

ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட் போனான     ‘ஐபோன் 6’-ஐ  வரும் செப்டம்பர் முதல் வாரம் வெளியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிைலயில் ஆப்பிளுக்கு கடும் போட்டியைத் தந்துவரும் சாம்சங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் போனான ‘சாம்சங் கேலக்ஸி ஆல்பா'வை (Samsung Galaxy Alpha)’ வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

மெட்டாலிக் லுக்கில் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கும் இந்த ‘கேலக்ஸி ஆல்பா’ 4.7 இன்ச் அகலமான ‘SUPER AMOLED’ தொடுதிரையைக் கொண்டுள்ளது. இந்த ‘SUPER AMOLED’ டிஸ்ப்ளே 720x1280 பிக்சல்ஸ் (~ 312 pixels per inch) திறனைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஆல்பா Octa-core processor (1.3 GHz Cortex-A7 + 1.8GHz Cortex-A15) மற்றும் Exynos 5 Octa 5430 chipset ஆகிய அதிவேக பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது. மேலும், 2GB ரேமை கொண்டு இயங்கும் சாம்சங் கேலக்ஸி ஆல்பாவின் இன்டர்னல் மெமரி 32GB ஆகும். இதுதவிர, ‘Mali-T628MP6’ என்ற கிராபிக்ஸ் பிராசஸரும் சாம்சங் கேலக்ஸி ஆல்பாவில் அடங்கும்.


பேட்டரி வசதியைப் பார்க்கும்போதும் சாம்சங் கேலக்ஸி ஆல்பா 1860mAH பேட்டரியைக் கொண்டுள்ளது. 12 மெகா பிக்ஸல் LED ப்ளாஷ் வசதியோடு வரும் பின்புற கேமராவையும் 2.1 மெகா  பிக்ஸல் முன்புற கேமராவையும் கொண்டுள்ள இந்த சாம்சங் கேலக்ஸி ஆல்பா மூலம் 2160p-ல் வீடியோவை ரிக்கார்டு செய்யலாம்.

சாம்சங் கேலக்ஸி ஆல்பா ஆண்ட்ராய்டு 4.4-ல் இயங்குகிறது. சாம்சங் நிறுவனத்தின் பிரத்யேகமான UI ‘TouchWiz’-ம் இந்த      OS-ல் அடங்கும். இதயத் துடிப்பினை அளவெடுக்கும் ‘Heart-rate monitor’ மற்றும் ‘Finger Print Scanner’ சாம்சங் கேலக்ஸி ஆல்பாவின் சிறப்பம்சங்கள்.

LTE நெட்வொர்க்கில் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ள சாம்சங் கேலக்ஸி ஆல்பா, குறைந்த 6.7mm அடர்த்தியும் 115g எடையும் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஆல்பா சுமார் ரூ.42,000 என்கிற விலையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 செ.கிஸோர் பிரசாத் கிரண்

Saturday, August 30, 2014

அருள்வாக்கு பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு


‘நமஸ்கார மாஹாத்ம்யம்’ ஸவிஸ்தாரமாகச் சொல்லிவிட்டேன். இந்த ‘டாபிக்’ எதற்காக எடுத்துக் கொண்டேனென்றால், வர வர ஜனங்களிடம் விநய குணம், பணிவு, பவ்யம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. அப்படி ரொம்ப வருத்தப்படும்படியாக இன்றைக்கு ஒருத்தர் ஒன்று சொன்னார். அதைப் பற்றியும், அதற்கு மாற்று மருந்து பற்றியும் யோஜனை போயிற்று. அதைத்தான் தெரிவிக்க நினைத்துப் பேசினேன்.
 
என்னவென்றால்: ஸமத்வம், ஸ்வதந்திரம், ஸ்வய மரியாதை என்றெல்லாம் ரொம்பவும் முழக்க ஆரம்பித்த நாளாகவே விநய ஸம்பத்துக்கு ஹானி ஏற்பட ஆரம்பித்து இப்போது ஒரே முரட்டுத்தனத்திலும் அடங்காமையிலும் கொண்டுவிட்டிருக்கிறது. Right, right என்று கிளம்பியதில் ஒரே fight ஆகியிருக்கிறது! ஸமூஹ வாழ்க்கை, பொருளாதாரம் என்று பார்த்தால் இந்தப் புதுக் கொள்கைகளிலும் ஓரளவு ந்யாயம் இல்லாமலில்லை. இதை ஆகே்ஷபிக்காமல் ஒப்புக் கொள்கிறேன். ஆனாலும், எதற்கும் ஒரு அளவு, வரம்பு இல்லையா? அந்த அளவு மீறாமல் வரம்பு கட்டிப் புதுக் கொள்கைகளை அமல்படுத்தினால் எல்லாம் அதனதன் இடத்தில் சீராக இருந்து, இப்போதுள்ள ஓயாத வர்க்கப் போராட்டங்கள் ஓய்ந்து லோகத்தில் சாந்தியும் ஸௌஜன்யமும் ஐக்கியமும் ஏற்படும்.
 
எப்படி அளவுபடுத்துவது, வரம்பு கட்டுவது என்றால் ஸமூஹம் முழுவதிலும் மறுபடி விநயஸம்பத்தை விருத்தி பண்ணுவதால்தான். பொருளாதாரம் மட்டும் ஒரு வாழ்க்கைக்குப் பூர்ணத்வம் தந்துவிடுமா என்ன? ஒரு நாளும் இல்லை. அருளாதாரத்தைப் பிடித்து அதனால் இதை அளவுபடுத்தினால்தான் பூர்ண வாழ்வின் நிறைவு ஏற்படும். அந்த அருளாதாரத்தைப் பிடிக்க வழி விநயந்தான். விநயத்தை வர வழைக்க வழி? அது வேண்டும் என்ற ‘பேஸிக்’ எண்ணத்தோடு பெரியவர்களாக இருக்கப்பட்டவர்களைத் தேடிப் போய் விழுந்து நமஸ்காரம் பண்ணுவதுதான். இந்த க்ரியையே ‘பேஸிக்’காக, பேஸ்மென்டாக அடிமட்டத்தில் இருந்ததைப் பெரிய மாளிகையாக எழுப்பிக் கொடுத்து விடும்.
 
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Thursday, August 28, 2014

கணபதியே சரணம்!

 
'கணபதி வழிபாடு கைமேல் பலன்’ என்பது அவ்வையின் வாக்கு. ஆமாம்! ஒரே ஒரு கணம், கணபதியை மனதால் தியானித்து முறையிட்டால் போதும்; நமது கவலைகள் யாவும் சடுதியில் விலகும். வேண்டியது வேண்டியபடி நிறைவேறும்.
 
நாம் அவரைத் தேடிப் போக வேண்டியது இல்லை. அவரே, நம்மை நாடி வந்து அருளும் பொருட்டு, நாம் இருக்கும்- புழங்கும் இடங்களுக்கு அருகிலேயே... தெருக்கோடியிலும், மரத்தின் அடியிலும், நதிகளின் கரைகளிலுமாகக் கோயில் கொண்டிருக்கிறார்.
 
அவரது அருட்கருணையை விளக்கும் ஞானநூல்கள் சில,  'இன்னின்ன இடங்களில் அருளும் பிள்ளையாரை வழிபட இன்னின்ன பலன்கள் கிடைக்கும்’ என்றும் விவரிக்கின்றன:
 
அரச மரத்தடி விநாயகரை வணங்கினால், குழந்தைப் பேறு வாய்க்கும். வன்னி மரத்தடியில் அருளும் விநாயகரை வழிபட கிரக தோஷங்கள் நீங்கும். ஆலமரத்தடி விநாயகரைத் தரிசித் தால் தீய சக்திகள் விலகியோடும். வேப்ப மரத்தடி விநாயகரை வழி படுவதால் நாள்பட்ட நோய்கள் அகன்று நிம்மதி கிடைக்கும். ஆலயங்களின் கோஷ்டத்தில் அமர்ந்திருக்கும் விநாயக ரூபத்தை வழிபட்டால், சகல தெய்வங்களின் திருவருளும் ஒருங்கே கிடைக் கும் என்கின்றன புராணங்கள். இந்த வரிசையில், ஸ்ரீதோரண விநாயகரை வணங்கி வழிபட்டால், 'ருணம்’ எனும் கடன் தீரும்!
 
யார் இந்த தோரணர்? இவர் எங்கு அமர்ந்து அருள்பாலிப்பார்?!
 
சக்தி தேவியர் தனியாகக் கோயில் கொண்டிருக்கும் திருத் தலங்களில், தோரண வாயிலைப் பார்த்தபடி, அம்பிகைக்கு வலப் புறமாக சந்நிதி கொண்டிருப்பார். ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், மேலிரு கரங்களில் அங்குச- பாசமும், கீழ் இரு கரங்களில் தந்தமும் மோதகமும் ஏந்தியவாறு அருள்வார், ஸ்ரீதோரண கணபதி. ஸ்ரீதோரண கணபதி, தமது கையில் இருக்கும் தந்தத்தைப் பயன்படுத்தி, நமது வாழ்வில் உள்ள ருணம் எனும் கடன்களை தீர்த்து அருள்கிறார் என்று சிவாகம துதிகள் கூறுகின்றன.

சக்தி மேகல்வாசம் சகல கல்யாண மூர்த்திம்
அங்குச பாச ஹஸ்தம் கிரீட மகுட தாத்ரீம்
அஷ்ட லக்ஷ்மீ சகிதம் தோரண கோபுர நேத்ரம்
ருணமோசன கணேசம் நௌமி ஸதா ப்ரசன்னம்!
மூல ஆலயத்திலிருந்து பார்க்கும்போது, இவர் அமர்ந்திருக்கும் இடம் பிரம்ம ஸ்தானமாக அமைவதால், கடனைத் தீர்ப்பதில் இவர் கறாராக இருக்கிறார். 

தாமரை பீடத்தில் அமர்ந்தவராக, அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமிகடாட்சத்தைக் கொடுக்கிறார்!

தோரண கணபதியை வழிபடும்முறை:

மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவ கடன், பித்ரு கடன், மானுட கடன் ஆகிய மூன்று கடன்களை நிச்சயம் சந்தித்தாக வேண்டும்.  இவற்றில் மானுட கடனைத் தீர்க்க, ஸ்ரீதோரண கணபதி வழிபாடு கை கொடுக்கும்.

செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீதோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் தோரண கணபதியை வழிபடலாம். இந்த மூன்று கிழமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து ஆறு வாரங்கள்... குறிப்பிட்ட கிழமைகளில் ஸ்ரீதோரண விநாயகரைத் தரிசித்து, அவருக்கு மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட வேண்டும். அத்துடன் கணபதியின் மேகலை - பத்மபீடம் முன்பு அமர்ந்து, தோரணரின் மூல மந்திரத்தை 12 முறை ஜபித்து, தோப்புக்கரணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐவகைப் பழங்களைப் படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம். இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து, நிம்மதி பிறக்கும்.

ஸ்ரீதோரண கணபதி மந்திரம்:
 
'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலௌம் கம் தோரண கணபதயே
சர்வகார்ய கர்த்தாய ஸகல சித்திகராய ஸர்வஜன வசீகரணாய
ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா.

மேலும், ஆறு ஞாயிற்றுக்கிழமைகள் தோரண கணபதி சந்நிதிக்குச் சென்று, அவருடைய சந்நிதிக்குப் பின்புறம் மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, ஐவகை பழங்கள் படைத்து, பிள்ளையார் துதிப் பாடல்களைப் பாடி, அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதால், வராக் கடன்களும் விரைவில் வசூலாகும்.

கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தில் ஸ்ரீசாரதாம்பாள் சந்நிதியில் காப்பு கணபதியாக அருள்கிறார் ஸ்ரீதோரண கணபதி. தமிழ்நாட்டில் பிள்ளையார்பட்டி, மயிலாடுதுறை, வடதேசத்தில் வாரணாசி ஆகிய தலங்களில் தோரண கணபதி வழிபாடு உண்டு.

சென்னையில் குன்றத்தூர் முருகன் கோயில் (மலைக்கு) அருகில், திருநீர் மலை சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீசக்தி கார்த்தியாயினி ஆலயம். இங்கே கோபுரத்தின் அருகிலுள்ள தோரண வாயிலில் காப்பு தெய்வமாக அருள்கிறார் ஸ்ரீதோரணகணபதி.

இங்கே அம்பிகையைத் தரிசிக்க வரும் பக்தர்கள் ஸ்ரீதோரண கணபதியையும் வழிபட்டு வரம்பெற்றுச் செல்கிறார்கள்.

இந்தக் கோயிலில் மாதம்தோறும் வளர்பிறை சதுர்த்தியில் மாலை 6 மணிக்கு, கடன் நிவாரண ஹோமம் மற்றும் விசேஷ பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெறுகின்றன. சங்கடஹர சதுர்த்தி திருநாட்களில், அன்று மாலை 6 மணியளவில்...வலம்புரிச் சங்கு மூலம் கணபதி பெருமானுக்கு பாலபிஷேகம் நடக்கும். அத்துடன்  விசேஷ மூலமந்திர திரிசதி நாம வழிபாடும் நடைபெறுகிறது. சாதாரண நாட்களிலும் இங்கு வரும் பக்தர்கள் விநாயகர் திருமுன் அமர்ந்து 'பிரசன்ன ஸ்துதி’யை பாராயணம் செய்து வழிபட்டுச் செல்கிறார்கள்.


 

Tuesday, August 26, 2014

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி வருகிறது. இதற்காக, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழகம் சார்பில் 'கணபதி தரிசனம்’ என்ற பெயரில் சென்னை, அண்ணாசாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளில் சில... உங்கள் பார்வைக்காக!

(விலை குறிப்பிடப்படாத சிங்க கணபதி, ஹேரம்ப கணபதி, ஏகரட்சக கணபதி, மும்முக கணபதி, சிருஷ்டி கணபதி உள்ளிட்ட 32 கணபதி சிலைகள் அடங்கியது ஒரு செட். இதன் விலை 5,71,725)

 

5)

Monday, August 25, 2014

சரியான பாத்திரத்தில் தான் சமைக்கிறீர்களா?

தினமும் சாப்பிடும் உணவு, சரிவிகிதத்தில் இருக்கிறதா, சத்தானதா என்று யோசிக்கும் நாம், அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள் சரியானவைதானா என்று யோசிப்பது இல்லை. அவசரகதியில் இதற்கெல்லாம் ஏது நேரம் என்று, சமைக்கவும் சாப்பிடவும் தொடங்குகிறோம். சமையலறையில் குக்கரில் தொடங்கி, கடாய், தவா, பால் பாத்திரம் எனச் நான் ஸ்டிக் பொருட்கள் நிறைந்துகிடக்கின்றன. மண் பானை, இரும்பு, ஈயச்செம்பு, பித்தளை சாமான்களை இனி அருங்காட்சியகத்தில்தான் பார்க்க முடியும் என்ற நிலை.  


 

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் நவீனமான பாத்திரங்களில் ஒளிந்து இருக்கும் ஆபத்துக்கள் என்ன, எந்த வகைப் பாத்திரங்கள் பாதுகாப்பான சமையலுக்குத் தேவை, அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம்?

மண் பாத்திரம் 

மண்பாத்திரங்களில் சமைக்கும்போது உணவின் மீது வெப்பம் மெதுவாக, ஒரே சீராகப் பரவுகிறது. மேலும், மண்பாத்திரங்களில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவியும், காற்றும் உணவில் ஊடுருவி, சரியான முறையில் சமைக்க உதவுகின்றன. இதனால், அதில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த உணவைப்போன்ற தன்மையைப் பெறுகிறது. இதனால், சமைத்த உணவு பல மணி நேரம் வரை கெடாமல் இருக்கும். மண் பாத்திரத்தில் சமைக்கும்போது அதிக எண்ணெய் பயன்படுத்தத் தேவை இல்லை. உணவில் உள்ள  அமிலத்தன்மையைச் சமப்படுத்தும். உப்பு, புளிப்புச் சுவையுள்ள உணவுகளைச் சமைக்கும் போது, தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்தாது.  மண் பாத்திரங்களை, அவ்வப்போது கழுவி வெயிலில் காயவைத்துப் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

இரும்புப் பாத்திரம்
பல காலமாக சமையல் பாத்திரங்கள் செய்யப் பயன்படுத்தப்பட்டு வரும் இரும்பு, சமையலுக்கு ஏற்றது. இதில், சமைக்கும்போது வெப்பம் சீராகப் பரவுவதோடு, நீண்ட நேரம் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ளும். கொஞ்சம் இரும்புச் சத்து உணவோடு கலந்து உடலில் சேரும். ரத்தசோகையைக் குணப்படுத்தும்.  ஆனால், துவர்ப்புச் சுவையுடைய பொருட்களை இரும்புக் கடாயில் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். இரும்பு, துவர்ப்புச் சுவையுடன் வினை புரிந்து உணவுப்பொருள் கருப்பு நிறமாக மாறுவதுடன், சுவையும் வேறுபடும். விரைவில் கெட்டு விடவும் வாய்ப்புகள் அதிகம்.  இரும்புப் பாத்திரத்தில் சமைக்கலாமே தவிர, அதில் நீண்ட நேரம் உணவை வைக்கக் கூடாது. சமைத்து முடித்தவுடன் அதை வேறு பாத்திரத்துக்கு மாற்றிவிடுவது நல்லது.

வெண்கலப் பாத்திரம்
வெண்கலப் பாத்திரத்தில் சமைத்து உண்டால், உடல் சோர்வு நீங்கி, நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருப்பதை உணரலாம். இதில் சமைத்த பொருட்கள் சீக்கிரத்தில் கெட்டுப்போகாது.  ஆனால் வெண்கலப் பாத்திரத்தை சரியாகக் கழுவி, வெயிலில் காய வைத்துதான் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் நாம் அடுத்த முறை சமைக்கும்போது களிம்புப் படலம் உண்டாகி உணவின் தன்மையே நச்சாக மாறிவிடும். இதனால்தான் வெண்கலப் பானையில் வைத்த பொங்கல், சில சமயங்களில் நிறம் மாறிவிடுவதைக் காணலாம்.

செம்புப் பாத்திரம்
செம்புப் பாத்திரத்தில் சமைத்த உணவுக்குப் பித்த நோய், கண் நோய், சூதக நோய், சுவாசக் கோளாறுகள் போன்ற அனைத்தையும் குணமாக்கும் ஆற்றல் உண்டு. செம்புப் பாத்திரத்தில் தண்ணீரை வைத்திருந்தால் அதில் உள்ள நுண்ணுயிரிகள் எல்லாம் நீங்கிவிடும். 

ஈயப் பாத்திரம்
ஈயம், நம் உடலுக்கு உகந்ததல்ல. ஈயப் பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவை உட்கொண்டால் வயிறு தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உண்டு. சளி, இருமல் இருப்பவர்கள் ஈயப் பாத்திரத்தில் சமைத்ததைத் தொடர்ந்து சாப்பிட்டால், வயிறு உப்புசம் ஏற்படலாம். ஈயத்துக்குப் பதிலாக வெள்ளீயப் பாத்திரங்கள் பயன்படுத்தலாம். நாம் காலங்காலமாகப் பயன்படுத்தி வந்த‌ ஈயச்சொம்பு என்பது வெள்ளீயத்தினால் செய்யப்பட்டது. இந்தக் கலவைதான், ஈயச்சொம்பில் சமைக்கும் ரசம் நல்ல மணத்துடன் இருப்பதற்குக் காரணம்.

பீங்கான் பாத்திரம்
பீங்கானும் காலங்காலமாகப் பயன்பாட்டில் இருப்பதுதான். பீங்கான் சமைப்பதற்கு ஏற்றது என்றாலும், பீங்கான் பாத்திரம் உயர்தரத்தில் ஆனதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். காரணம், மலிவு விலை பீங்கான்கள், அவற்றைத் தயாரிக்கத் தேவைப்படும் உயர்ந்தபட்சக் கொதிநிலையில் உருவாக்கப்படுவது இல்லை. இத்தகைய மலிவு விலை பீங்கான்களை, அலங்காரப் பொருட்களாகப் பயன்படுத்தலாம். ஆனால் அதில் சமைத்தால் உணவில் நச்சுத்தன்மை ஏற்படும் அபாயம் இருக்கிறது.

அலுமினியப் பாத்திரம்
ஒவ்வொரு முறையும் அலுமினியப் பாத்திரத்தைக் கழுவும்போது, அதில் கருப்பாக ஒரு கலவை படியும். அலுமினியம்தான் அது.  இந்தக் கலவை உணவில் கலந்து, உடலிலும் சேர்ந்து மூளையில் உள்ள நியூரான்களை அழிக்கும் ஆபத்து ஏற்படலாம். மேலும், தொடர்ந்து பயன்படுத்தும்போது ஆஸ்துமா, காசநோய் போன்ற சுவாசக் கோறுகளும் அல்சர் பாதிப்பும் ஏற்படலாம். அலுமினியம் ஒரு கடின உலோகமாக ((Heavy metal) இருப்பதால்,  அமிலத்தன்மை கொண்ட தக்காளி போன்ற உணவுப் பொருட்களுடன் வினைபுரிந்து, உடலுக்குள் எளிதாகச் சென்று, தசை மற்றும் சிறுநீரகங்களில் படிய ஆரம்பிக்கும். அலுமினியத்தைத் தவிர்க்க முடியாதவர்கள் சமையல் வேலை முடிந்தவுடன் உணவை வேறு பாத்திரத்துக்கு மாற்றி விடுவது நல்லது.

நான் ஸ்டிக் பாத்திரம் 

சமைக்க எளிமையானதாக இருந்தாலும், இதைச் சூடுபடுத்தும்போது வெளிவரும் 'பர்ஃப்ளூரினேட்டட் காம்பவுண்ட்’ (Perfluorinated compounds) என்னும் நச்சுப் பொருள் பல்வேறு விதமான உடல் நலக் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பதைத் தவிர்க்க
முடியாது என்பவர்கள், அதனை மிதமான சூட்டில் சமைப்பது நல்லது. 

டாக்டர் ஆர்.எஸ்.ராமசுவாமி
சென்னை  மத்திய அரசு சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குநர் 







ஐ.டி ரிட்டர்ன்... கெடு தேதி தவறினால்.. என்னென்ன பாதிப்புகள்?

மாதச் சம்பளக்காரர்கள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31. இந்த தேதியை பல்வேறு காரணங் களுக்காகப் பலரும் தவறவிட்டிருப் பார்கள். அவர்கள் இனி வரிக் கணக்குத் தாக்கலை எப்படி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

ஜூலை 31-ம் தேதிக்குள் வரிக் கணக்குத் தாக்கல் செய்யாதவர்கள், 2015 மார்ச் வரை வரிக் கணக்குத் தாக்கல் செய்யலாம். அபராதம் எதுவும் கிடை யாது. இதை ஆங்கிலத்தில் காலதாமதமாக ரிட்டர்ன் தாக்கல் (Belated Return) செய்வது என்பார்கள்.

 பாதிப்புகள் என்னென்ன?

வருமான வரி எதுவும் கட்ட வேண்டும் எனில், மாதத்துக்கு 1% வட்டி கணக்கிட்டு கட்ட வேண்டும்.

ஜூலை 31-ம் தேதிக்குள் வரிக் கணக்குத் தாக்கல் செய்யவில்லை எனில், ரீஃபண்ட் கிடைக்க வேண்டி இருந்தால் தாமதம் ஏற்படும்.


மூலதன ஆதாய இழப்பு மற்றும் வணிக இழப்பு ஏதும் இருந்தால், அதனை அடுத்துவரும் ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்படும்.

உங்கள் வரிக் கணக்கில் ஏதாவது தவறு இருந்தால், அதனை சரிசெய்து மீண்டும் வரிக் கணக்குத் தாக்கல் செய்ய முடியாது.

வெளிநாட்டுக்கு செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்கும்பட்சத்தில், வீட்டுக் கடன் / கார் கடனுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், கடந்த மூன்றாண்டுகளின் வருமான வரிக் கணக்குத் தாக்கல் விவரத்தைக் கேட்பார்கள். எனவே, சரியான நேரத்தில் வரிக் கணக்குத் தாக்கல் செய்திருப்பது அவசியம்.

ஜூலை 31-ம் தேதிக்குப் பிறகு வரிக் கணக்குத் தாக்கல் செய்பவர்கள் மிகவும் கவனத்துடன் வரிக் கணக்கு விவரங் களைத் தாக்கல் செய்ய வேண்டும். காரணம், இதில் ஏதாவது தவறு இருந்தால் சரிசெய்துகொள்ள வாய்ப்புக் கிடையாது.

எனவே, படிவம் 16-ல் உள்ள விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், வரிச் சலுகைக்கான முதலீடு மற்றும் செலவு விவரங்களை மிகச் சரியாக ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவும்.


Sunday, August 24, 2014

க்ளவுட் ஸ்டோரேஜ் சேவைகள்... எங்கேயும், எப்போதும் தீர்வு !

பென்-டிரைவ், மெமரி கார்ட், ஹார்ட்டிஸ்க் போன்றவற்றை நாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் எடுத்து செல்வது கஷ்டமான விஷயம்தான். வங்கியில் நம் சேமிப்புக் கணக்கில் பணம் போட்டு, ஏதாவது ஒரு ஏடிஎம் மூலம் பணம் எடுக்கிற மாதிரி, நம் புகைப்படங்கள், வீடியோகள், ஃபைல்ஸ் போன்றவற்றை நம் ‘க்ளவுட் ஸ்டோரேஜ்’ அக்கவுன்ட்டில் சேமித்துவிட்டு, எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எந்தக் கருவியின் மூலமும் பயன்படுத்திக்கொள்வதுதான் ‘க்ளவுட் ஸ்டோரேஜ் சேவைகள் (Cloud Storage Services)’. சில சிறந்த ‘க்ளவுட் ஸ்டோரேஜ்’ சேவைகளை இனி பார்ப்போம்.
 
1. கூகுள் டிரைவ் (Google Drive)
ஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் பயன்படுத்தும்  சேவை இது. ஜிமெயில் அக்கவுன்ட்டைக் கொண்டு இயங்கும் இந்த க்ளவுட் ஸ்டோரேஜ்ஜில் 15GB வரை இலவசமாகச் சேமிக்கலாம். 100 GB அளவை பயன்படுத்த மாதத்துக்கு 1.99.


2. ட்ராப் பாக்ஸ் (Drop Box)
விண்டோஸ், ஆப்பிளின் ஐ ஓஎஸ், மேக் ஓஎஸ், கூகுளின் ஆண்ட்ராய்ட் போன்ற ஓஎஸ்களைத் தாண்டி லினக்ஸ் மற்றும் ப்ளாக்பெர்ரி ஓஎஸ்களுக்கும் சேவையைத் தரும் ஒரே க்ளவுட் ஸ்டோரேஜ் இது. இலவசமாக, 2GB வரை சேமிக்கலாம். 100GB வரை பயன்படுத்த மாதம் 6 யூரோக்கள் செலவாகும்.

3. மைக்ரோசாஃப்ட் ஒன் டிரைவ் (Microsoft One Drive)

15GB வரை இலவசமாகச் சேமிக்கலாம். மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் சாஃப்ட்வேர் பயன்படுத்துபவர்களுக்கு இது சிறந்த சேவை.

4. பாக்ஸ் (Box)

 இதில்10GB வரை இலவசமாக சேமிக்கலாம். ஆனால், ஒரு ஃபைலின் அளவு 250MB-க்கு மேல் இருக்கக் கூடாது. ஒரு மாதத்துக்கு 7 யூரோக்கள் கொடுத்தால், 100GB வரை சேமித்துக்கொள்ளலாம். அப்போது ஒரு ஃபைலின் அளவு 5GB வரை இருக்கலாம்.

 

Saturday, August 23, 2014

திருப்பதியில் சில அதிசயங்கள்!


திருப்பதியில் நம்மில் சிலருக்குத் தெரியாத அதிசயங்கள், உண்மைகள், நடைமுறைகள் எவ்வளவோ உள்ளன. ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் பல உள்ளன. அவற்றில் சில
* திருப்பதி ஆலயத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சிலா தோரணம் என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறையின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும் இந்த பாறைகளும் ஒரே விதமானது.

* ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக் கற்பூரம் சாத்துகிறார்கள். இந்த பச்சைக் கற்பூரம் ஒரு வகையான ரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒரு வகை அமிலம். இந்த ரசாயனத்தை சாதாரண கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால் சிலா தோரணத்திலுள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப் பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான திருவுருவச் சிலைக்கு 365 நாட்களும் பச்சைக்கற்பூரம் பூசுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை.

* எந்த கருங்கல் சிலையானாலும் எங்காவது ஓர் இடத்தில் சிற்பியின் உளிபட்ட தடம் தெரியும். உலோகச் சிலையானாலும் உலேகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாக இருக்கின்றன.

* ஏழுமலையான் திருவுருவச் சிலை எப்போதும் போல் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3,000 அடி உயரத்தில் உள்ள குளிர் பிரதேசம் அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக நகைகளைக் கழற்றும் போது ஆபரணங்களெல்லாம் சூடாகக் கொதிக்கின்றன.

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல், வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகவே இருக்கின்றன.

திருப்பதி திருக்கோயில் மடப்பள்ளி (சமையல் கட்டு) மிக பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், சித்திரான்னம், வடை முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப் பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

* ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண் சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோயில் கர்ப்பக்கிரக குலசேகரப்படியை தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப் பாத்திரங்கள் எதுவும் குலசேகரப் படியைத் தாண்டிச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண் சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப்பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

* ஏழுமலையான் உடை 21 முழம் நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையைக் கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 500 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தில் ஒருமுறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரத்தைச் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

* உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் 2,000 ரூபாய் கட்டணமாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வஸ்திரங்கள் சாத்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு 10 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

* பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர்வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

* அபிஷேகத்திற்காக ஸ்பெயினிலிருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரீஸ் நகரத்திலிருநது வாசனைத் திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு தங்கத்தாம்பளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும். காலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

* ஐரோப்பாவிலுள்ள ஆம்ஸ்ட்டர்ட்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.

* சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம் தமாலம், கிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

* ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ. 1,000 கோடி. இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடம் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரி நகைகளை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

* ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை; பாதக் கவசம் 3.75 கிலோ. கோயிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூபாய் 100 கோடியாகும். திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

* சிவராத்திரி அன்று கே்ஷத்ரபாலிகர் என்ற உற்சவம் நடைபெறுகிறது - அன்று உற்சவப் பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது. தாளப்பாக்கம் அன்னமயா ஏழுமலையானை பிரம்மாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும் க்தி ஸ்வரூபமாகவும் பாடி அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதி வைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக் கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமயாவும் சம காலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர். மந்திரம், சாஸ்திரம் தெரிந்தவர். நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமலையான் மீது சேஷாசல நாமாவளியைப் பாடியுள்ளார்.

* தினசரி அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்ற ஐதிகம் உள்ளது.

* ஏழுமலையானின் ஸ்தல விருட்சம் புளியமரம்.

* எந்த சாத்விக சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் இரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால், ஏழுமலையான் திருவுருவச் சிலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுத பாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம்முன்னோர்களால் ‘வெறுங்கை வேடன்’ என்று அழைக்கப்பட்டார்.

1781-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33வது பிரிவைச் சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயமடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானப் பிரார்த்தித்து இருக்கிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடனைச் செலுத்தியிருக்கிறார்.

*ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ கர்னல் ஜியோ ஸ்டிரெட்டின் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

* திருப்பதி அலர்மேலுமங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது - செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால் இதை நெய்யும் போது மூன்று வேளையும் குளிப்பார்கள். அவர்கள் மது, புலால் உண்ணமாட்டார்கள் வெள்ளிக் கிழமை அபிஷேகத்திற்கு பரிமள அறையில் வியாழன் இரவு அரைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திற்குச் சேர்க்கப்படுகிறது. வெளி நாடுகளிலிருந்து வாசனைத் திரவியங்களை பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ. 50,00 மதிப்புள்ள வாசனைத் திரவியங்கள் வருகின்றன.

* ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்ணுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது.

* ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்றபடியே இருகைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்தில் விட வேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

* வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்துமுறை நடக்கும். வடகலை சம்பிரதாயத்தில் ‘வேங்கடமெனப் பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம்பெறும். சாத்து முறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழு மலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென்கலை சாத்துமுறை சேவிக்கப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

* கி.பி. 1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதி தாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கிபி. 1764ல் நிஜாம் ஒருவனது தலைமையில் வந்த முஸ்லிம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

* திருவில்லிப்புத்தூர் கோயிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த பூமாலைகள் திருப்பதிக்குக் கொண்டு வரப்பட்டு ஏழுமலையானுக்குச் சாத்தப்படுகிறது.



அருள்வாக்கு - நிலைத்த ஆனந்தம் எது?

மனிதன் மற்ற விலங்குகளைவிட விசேஷ ஞானம் உடையவன் என்று பெருமைப்படுகிறோம். ஆனால், இவன் மட்டும் அவற்றைவிட விசேஷமாக என்ன செய்து விடுகிறான். நாயும், நரியும், கரப்பான் பூச்சிகளும்கூடத்தான் சாப்பிடுகின்றன. சந்ததி விருத்தி செய்கின்றன, சாகிக்கின்றன. பொதுவாக மனிதனும் இதற்குமேல் ஏதும் செய்வதாகக் தெரியவில்லை. அப்பொழுது இவனது விசேஷ ஞானத்தில் பெருமைப்பட என்ன இருக்கிறது? எல்லாவற்றிலும் பெரிய ஞானம், நிலைத்த ஆனந்தத்துக்கு வழிகண்டு கொள்வதுதான். 
மனிதன் இப்படிப்பட்ட நிலைத்த ஆனந்தத்தைப் பெறுகிறானா? யோசித்துப் பார்த்தால் பரம தாத்பரியமானது தெரிவது, இந்த ஞானம், ஆனந்தம், நாம் என்பதெல்லாம் ஒன்றுதான். நாம் உண்மையில் யார் என்பதை உணரும் ஞானம் வரும்போது, நாமே ஞான மயமான ஆனந்தம் என்று கண்டு கொள்வோம்.வெளி வஸ்துக்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தேதான் ஆனந்தம் பிறக்கிறது. நமது உண்மை ஸ்வரூபமான ஆனந்தத்தை நாம் அஞ்ஞானத்தினால் மூடி மறைத்துக் கொண்டிருக்கும் நிலையில்கூட நம்முடையது என்று ஒன்றிடம் சம்பந்தம் வைக்கும் போதுதான் அதிலிருந்து ஆனந்தத்தை அடைகிறோம். அந்தச் சம்பந்தம் போய்விட்டால் ஆனந்தம் போய் விடுகிறது. உதாரணம், சொல்கிறேன். ஒருவனுக்குச் சொந்தமாகக் கொஞ்சம் நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த வயல் என்னுடையது என்பதால், விளைச்சல் அதிகமாகும்போதெல்லாம் அவனுக்கு மனம் குளிருகிறது. ஆனந்தம் உண்டாகிறது. அப்புறம் விளைச்சல் குறையத் தொடங்குகிறது. வயலை வேறு ஒருவனுக்கு விற்று சாஸனம் பண்ணி விடுகிறார். மறுபடி அடுத்த வருஷம் அதே வயலில் ஏகமாக விளைச்சல் கூடியிருக்கிறது. இப்போது அதைப் பார்க்கும்போது இவர் மனம் குளிரவாய் செய்கிறது. அடடா, போன வருஷம் நம் கையில் இருந்தபோது தரிசு மாதிரிப் பொட்டலாக இருந்தது. இப்போது எவனோ ஒருவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறதே என்று வயிற்றெரிச்சல்தான் உண்டாகிறது. எனது என்ற சம்பந்தம் இருந்தமட்டுந்தான் அமோக விளைச்சலில் சந்தோஷம் இருந்தது. பிறகு அதே விளைச்சலில் உணர்ச்சி அடியோடு மாறிவிட்டது.
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Tuesday, August 19, 2014

இறைவனின் நாடகமும் மனிதரின் நாடகமும்!


லோகம் முழுக்க ஒரு நாடகம்; பகவான் கபட நாடக சூத்திரதாரி என்று மகான்கள் சொல்கிறார்கள். சர்வ தேசத்திலும் மகாகீர்த்தி வாய்ந்த நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர். அவர்கூட ஓர் இடத்தில், ‘லோகம் முழுதுமே ஒரு நாடக மேடைதான்; எல்லா ஸ்த்ரீ - புருஷர்களும் அதிலே வரும் நடிகர்கள்தான்’ என்று சொல்கிறார்.

ஸ்வாமி நடத்துகிற இந்தப் பெரிய நாடகத்தில் மநுஷ்யனும் ‘நாடகம்’ என்று ஒரு கலையை உண்டாக்கியிருக்கிறான். அநாதி காலமாக இலக்கியத்தில் இது ஒரு முக்கியமான அங்கமாக இருந்து வந்திருக்கிறது. வேதங்களிலே ஆங்காங்கே சம்பாஷணை ரூபத்தில் இரண்டு பேர் பேசிக் கொள்கிற மாதிரியான மந்திரங்கள் இருக்கின்றன. ஆராய்ச்சிக்காரர்கள் இதுதான் நாடகக் கலையின் தோற்றுவாய் (Origin) என்று சொல்கிறார்கள். தமிழிலும் இயல், இசை, நாடகம் என்று சொல்கிறார்கள். ‘கத்யம்’ (Prose) என்பதை ‘இயல்’, ‘பத்யம்’(Poetry) என்பதை ‘இசை’ என்று சொல்லி, ‘நாடகம்’ என்பதற்கு மட்டும் அதே வார்த்தையையே தமிழிலும் வைத்துக் கொண்டிருக்கிறோம். ‘கூத்து’ என்பதே நாடகத்திற்கான தமிழ் வார்த்தை.

ஸம்ஸ்கிருதத்தில் கவி சிரேஷ்டர்கள் என்று தலை மேல் வைத்துக் கொண்டு கொண்டாடக்கூடிய காளிதாஸன், பவபூதி காலத்திலிருந்து நாடக இலக்கியம் மகோன்னதமாக வளர்ந்திருக்கிறது. காளிதாஸன், பவபூதி இருவருமே கவிகள் (Poets) என்பதைவிடப் பெரிய நாடகாசிரியர்களாக ( Dramatist) இருந்திருக்கிறார்கள். இன்னும் பாஸன், விசாகதத்தன் முதலான பல பேரும் நாடகாசிரியர்களாக இருந்திருக்கிறார்கள்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்