Search This Blog

Monday, April 28, 2014

தங்க நகைச் சீட்டு லாபமா?

தங்கத்தின் விலை ஏறினாலும் இறங்கினாலும் தங்கம் வாங்கும் ஆர்வம் மக்களிடம் குறைந்ததாகத் தெரியவில்லை. எப்படியாவது அடுத்த வருஷத்துக்குள் இரண்டு வளையல் அல்லது ஒரு செயினையாவது வாங்கிவிடவேண்டும் என்று துடிக்கிறார்கள் நம் வீட்டில் உள்ள பெண்கள். ஆனால், தங்கத்தின் விலை இப்போது அதிகமாக இருப்பதால், மொத்தமாக பணம் தந்து வாங்கக்கூடிய நிலையில் பலரும் இல்லை. மக்களின் இந்த  நிலையை சரியாக புரிந்துகொண்ட நகைக் கடைகள் நகைச் சீட்டு போன்ற எளிய திட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்களை தங்கள் பக்கம் சுண்டி இழுக்கின்றன.
 
இன்றைய நிலையில் சிறிய, பெரிய நகைக் கடைகள் என்கிற வித்தியாசம் இல்லாமல் எல்லா கடைகளும் நகைச் சீட்டுகளை நடத்தி வருகின்றன. இந்த நகைச் சீட்டு திட்டங்களோடு கவர்ச்சிகரமான இலவசங்களையும் அளித்து வருகின்றன.

ரொக்கமாக பணம் தந்து தங்கநகை வாங்க முடியாதவர்களுக்கு இந்த சீட்டு திட்டங்களே பெரும் வரப்பிரசாதமாக உள்ளன. ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் கொஞ்சமாக பணம் செலுத்துவதன் மூலம் குறைந்தளவு வருமானம் உள்ளவர்களும் இந்த நகைச் சீட்டுத் திட்டங்கள் மூலம் சில பவுன் நகைகளையாவது வாங்க முடிகிறது.  

நகைச் சீட்டு கட்டுவதில் இப்படி பல சாதகமான விஷயங்கள் இருந்தாலும், இதில் சேர்ந்து நகை வாங்குவதால் லாபமா அல்லது நஷ்டமா என்கிற கேள்வியை யாரும் கேட்பதே இல்லை.

நகைச் சீட்டில் சேரும்போது என்னென்ன விஷயங்களை அவசியம் கவனிக்க வேண்டும் என்று இப்போது பார்ப்போம்.

 
இன்றைக்கு பலவிதமான நகைச் சீட்டுத் திட்டங்களை நகைக் கடைகள் நடத்தி வருகின்றன. ஒவ்வொரு மாதமும் நம்முடைய பட்ஜெட்டுக்குத் தோதான அளவில் பணத்தைக் கட்டி, ஆண்டு முடிவில் தங்கநகை பெறலாம் என்பது ஒருவகை. இப்படி வாங்கும் நகைக்கு செய்கூலி, சேதாரம் பெரும்பாலும் கிடையாது. சில கடைகளில் 1 சதவிகிதம் வாட் வரியையும் தள்ளுபடி செய்கிறார்கள். சில கடைகளில் நீங்கள் செலுத்தும் ஒரு மாத தவணை தொகைக்கு இணையான மாத தவணை தொகையைப் போனஸாக வழங்குகிறார்கள். செலுத்திய தொகையோடு போனஸ் தொகையும்  சேர்த்து தங்கநகை வாங்கிக்கொள்ளலாம். ஆனால், இந்தத் திட்டத்தில் செய்கூலி சேதாரம் உண்டு.
 
சில கடைகளில் குலுக்கல் திட்டமும் வைத்திருக்கிறார்கள். சில கடைகள் கடந்த ஆண்டு திடீரென தங்கம் விலை இறங்கியபோது ஒரு புதிய திட்டத்தை அறிவித்தன. மாதாமாதம் கட்டிய தொகைக்கு ஈடான தங்கம், கிராம் கணக்கில் வரவு வைக்கப்பட்டு சீட்டு முதிர்வின்போது மொத்தம் சேர்ந்துள்ள கிராம் அளவுக்கு தங்க நகையை சேதாரம் இல்லாமல் வாங்கிக் கொள்ளலாம் அல்லது கட்டிய மொத்த தொகைக்கு சேதாரத்துடன் தங்க நகை (முதிர்வு தேதி விலையில்) வாங்கிக்கொள்ளலாம்.

இந்தத் திட்டங்கள் பெரும்பாலும் 15 மாத கால அளவில் இருக்கும். அதேபோல, இடையில் பணம் செலுத்துவதை நிறுத்தினால் செலுத்திய தொகையின் மதிப்புக்கு தங்கமாக வாங்கிக் கொள்ளலாம். இப்படி வாங்கும் நகைக்கு செய்கூலி சேதாரம் இருக்கும். பணமாக வாங்க முடியாது. சீட்டு முதிர்வு அடையும்போது குறிப்பிட்ட சதவிகிதம் வரைதான் சேதாரத்தில் கழிவு இருக்கும். அதற்குமேல் சேதாரம் உள்ள நகையை வாங்கும்போது, வித்தியாசப்படும் சேதாரத்தை நீங்கள் கொடுக்க வேண்டும். அதாவது, நீங்கள் 25 சதவிகிதம் சேதாரம் உள்ள நகையைத் தேர்வு செய்து வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், சீட்டில் அதிகபட்சம் 18 சதவிகிதம் சேதாரத்துக்கு பணம் வாங்கமாட்டார்கள். மீதமுள்ள 7 சதவிகித சேதாரத்துக்கு நீங்கள் கட்டாயம் பணம் செலுத்த வேண்டும். நீங்கள் தங்க காயின் அல்லது சேதாரம் குறைந்த நகைகளை வாங்கும்போது உங்களுக்கு நஷ்டம் ஏற்படும்.

 
நகைச் சீட்டு திட்டத்தில் மாதந்தோறும் கட்டும் தொகைக்கு தங்கமாக வரவு வைக்கப்படும் திட்டத்துக்கும் (சேதாரம் கிடையாது என்றால்) வங்கியில் ரெக்கரிங் டெபாசிட் செய்வதற்கும் ஒப்பீடு செய்யப்பட்ட அட்டவணை முன் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. சேதாரக் கழிவுடன் கூடிய 15 மாத சீட்டு திட்டத்தில் கடந்த 2012 டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து 2014 பிப்ரவரி 1 மாதம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் தங்க நகைச் சீட்டு.

கட்டியிருக்கிறீர்கள் என வைத்துக்கொண்டால், உங்கள் பெயரில் சுமார் 10.32 கிராம் தங்கம் சேர்த்திருக்கும் (மாதம் முதல் தேதி விலைப்படி). முதிர்வின்போது 10.32 கிராமின் மதிப்பு (10.32X2800) 28,896 ரூபாய் ஆகும்.

நீங்கள் நகைச் சீட்டில் மொத்தமாகச் செலுத்திய தொகை 30 ஆயிரம் ஆகும். நீங்கள் சீட்டு முதிர்வின்போது 18 சதவிகிதம் சேதாரம் உள்ள நகை வாங்கினீர்கள் எனில் (28,896X18/100) 5201 ரூபாய் ஆகும். ஆக (28896+ 5201) 34,097 மதிப்புள்ள நகையை 30,000 கட்டி வாங்கியிருப்பீர்கள். ஆக 30 ஆயிரம் ரூபாய்க்கு 4,097 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். அதுவும் அவர்கள் கொடுக்கும் அதிகபட்ச சேதாரக் கழிவில் நகை வாங்கினால்தான் கூடுதல் லாபம் கிடைக்கும். அதே குறைந்த அளவு சேதாரம் உள்ள நகையை வாங்கினால் லாபம் குறைவதற்கான வாய்ப்புள்ளது.

அதே பணத்தை மாதம் 2 ஆயிரம் வீதம் ஆர்.டி.யில் போட்டால், 15 மாதங்களுக்குபின் 9 சதவிகித வட்டி என்றால் 31,851 ரூபாய் சேர்ந்திருக்கும். இடையில் எடுத்தால் 4 சதவிகித வட்டியாவது கிடைக்கும். இதுவே, தங்க நகைச் சீட்டில் இடையில் நிறுத்தினால் எந்த சலுகையும் கிடைக்காது. அதாவது, 5 மாதம் சீட்டு கட்டியபிறகு இடையில் நிறுத்தினால் உங்களுக்கு (5X2000) 10 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கான நகை மட்டுமே கிடைக்கும். இதற்கு சேதாரமும் உண்டு. எனவே நகை கட்டாயம் தேவை என்பவர்களும், மொத்தமாக பணத்தைக் கொடுத்து நகை வாங்க முடியாதவர்களுக்கு நகைச் சேமிப்பு திட்டங்கள் ஓரளவுக்கு பயனுள்ளதாக இருக்கும். கடையின் பாரம்பரியத்தையும் நம்பகத்தன்மையையும் கணக்கில்கொள்வது அவசியம்.  

 
 இரா.ரூபாவதி

No comments:

Post a Comment