Search This Blog

Saturday, October 06, 2012

எனது இந்தியா ( ஆர்தர் காட்டனின் கனவு! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

இந்தியாவை, பிரிட்டிஷ் அரசு இஷ்டம் போல கொள்ளை அடித்தது வரலாற்றின் ஒரு பக்கம் என்றால், மறு பக்கம் பென்னிகுக், ஆர்தர் காட்டன், தாமஸ் மன்றோ, காலின் மெக்கென்சி, எல்லீசன் துரை போன்ற ஆங்கிலேய அதிகாரிகள், மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி இருக்கின்றனர். அவர்களின் சேவை இன்றும் நன்றியோடு நினைவுகூரத் தக்கவை.

'இந்திய நீர்ப்பாசனத் தந்தை’ என அழைக்கப்​படுபவர் ஆர்தர் தாமஸ் காட்டன். ஆந்திராவில் இவருக்கு 3,000-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. பாசனக் கால்வாய்களை உருவாக்கியது, புதிய அணைகளை நிர்மாணம் செய்தது, ஏரி, குளம், கண்மாய் போன்ற நூற்றுக்கணக்கான நீர்நிலைகளை தூர் வாரிப் பராமரித்தது என இவரது தொடர்ச்சியான நீர் மேலாண்மைச் செயல்பாட்டின் காரண​மாக, 10 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்கள் பசுமையான விளைநிலங்களாக மாறி இன்றும் இருக்கின்றன. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆர்தர் தாமஸ் காட்டன், 1830-ம் ஆண்டு மே 15-ம் தேதி பிறந்தவர். இவரது தந்தை ஹென்றி கால்வெலி. பொறியியல் துறையில் ஆர்வம்கொண்ட காட்டன், தனது 16-வது வயதில் ராயல் பொறியியல் படையில் சேர்ந்தார். ஆர்தர் காட்டனின் ஆறு சகோதரர்கள் பிரிட்டிஷ் அரசுப் பணியில் இருந்தனர். ஆகவே, காட்டனும் 1821-ம் ஆண்டு தனது 18-வது வயதில், இங்கிலாந்தில் இருந்து சென்னைக்கு வந்து, சென்னை மாநிலத் தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்தார். அப்போது, அவரது முக்கிய வேலை மதராஸ் ராஜதானியில் உள்ள நீர்நிலைகள் குறித்த ஆதாரத் தகவல்களை சேகரித்து, அளவை மற்றும் வரைபடம் தயார் செய்வது.

 


1822-ம் ஆண்டு தென்மண்டல ஏரி பராமரிப்புத் துறையின் தலைமைப் பொறியாளருக்கு உதவியாளராக காட்டன் நியமிக்கப்பட்டார். அவரது நேரடிக் கண்காணிப்பில் கோவை, மதுரை, திருச்சி, தஞ்சை, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள ஏரி, கண்மாய், குளங்களை பராமரித்து நீர் வினியோகம் செய்யும் பணி காட்டனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நாட்களில் அவர் தனது துறையைச் சேர்ந்த மற்ற பிரிட்டிஷ் அதிகாரிகளைப்போலஅலுவல​கத்​தில் உட்கார்ந்து​கொண்டு வரைபடங்களை வைத்தே திட்ட அறிக்கைகள் தயாரிக்காமல், நேரடியாகக் களத்துக்குச் சென்று ஒவ்வொரு நீர்நிலையின் இயல்​பையும், அதன் தனித்துவத்தையும் ஆராயத் தொடங்​கினார். தமிழகத்தில் நீர்நிலைகளைக் காலம்காலமாகப் பராமரிக்கும் முறையும், நீர் பகிர்வு முறையும் காட்டனுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

ஒரு கோமாளியைப் போல, ஆர்தர் காட்டன் ஏரியின் சகதிக்குள் இறங்கி எதையோ தேடி அலைகிறார் என்று, அவரது உயர் அதிகாரிகள் கேலி செய்தனர். ஆனால், காட்டன் அதைக் கண்டுகொள்ளவில்லை. நேரடியான கள ஆய்வும், விவசாயிகளின் நீர் மேலாண்மைத் திறனும், இந்திய ஆறுகளின் பெருக்கெடுத்து ஓடும் இயல்பும் காட்டனுக்குள் பல புதிய எண்ணங்களை உருவாக்கின. அவர், இந்தியா முழுவதும் உள்ள ஆறுகளை ஒன்றிணைப்பது என்ற கனவை தனக்குள் விதைக்கத் தொடங்கினார். அது மட்டும் சாத்தியமானால், இந்தியா முழுவதும் சரக்குப் போக்குவரத்தை கால்வாய்கள் மூலமே நடத்த முடியும். ரயில் பாதைகள் அமைப்பதைவிட, இது குறைந்த பொருட்செலவில் சாத்தியமாகக்கூடியது. அத்துடன், விவசாயத்தில் இந்தியா முழுமையான தன்னிறைவு பெற்றுவிடும் என்று காட்டன் நினைத்தார். ஆனால், அந்தக் கனவை நன வாக்குவது பெரும் சவால் என்று அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ஆகவே, தனது கனவைச் சாத்தியமாக்கும் வழிமுறைகளை ஒவ்வொன்றாகச் செய்வது என்று முனைப்புடன் செயல்பட ஆரம்பித்தார். ஆனால், எதிர்பாராத விதமாக பிரிட்டிஷ் நிர்வாகம் அவரைப் பணிமாற்றம் செய்தது. 1824-ம் ஆண்டு அவருக்குப் பதவிஉயர்வு அளித்து, பரங்கிமலையில் இருந்த படைக் கட்டடங்களுக்குப் பொறுப்பு அலுவலராக நியமித்தது பிரிட்டிஷ் நிர்வாகம். அதன் பிறகு, முதல் பர்மியப் போரிலும் காட்டன் கலந்துகொண்டார். 1826-ம் ஆண்டு சென்னை திரும்பிய காட்டன், ஏரி பராமரிப்புத் துறையின் மேற்பார்வைப் பொறியாளராகப் பதவி ஏற்றார். அந்தப் பணியின்போது, கல்லணையைப் பார்த்த காட்டன் அது சோழர் காலத்தில் கட்டப்பட்டது என்பதை அறிந்து வியந்தார். அணைக்கு எவ்வாறு கடைக்கால் அமைத்தனர் என்று அறிந்துகொள்ள ஆசைப்பட்டார். காவிரி, பெண்ணாறு ஆகிய ஆறுகளின் முகத்துவாரங்களை வண்டல் மண் அடைத்துவிடாமல் நீர் பாய்வதற்கு வசதியாக. கல்லணையின் கிழக்குப் பகுதியில் ஐந்து மதகுகளைக் கட்டினார் காட்டன்.
 மதகு கட்டுவதற்காக கடைக்கால் அமைப்பதற்காக மணலைத் தோண்டியபோது, மணல் படுகையின் அடியில் அசைந்து கொடுக்காத களிமண் அடுக்குகளில் பெரும் பாறைகளைக் கடைக்காலாகப் பதியவைத்திருப்பதைக் கண்டார். இது, நீர்ப் பாசனத் தொழில்நுட்பத்தின் அரிய சாதனை என்று போற்றிய காட்டன், காலத்தை வென்று நிற்கும் கல்லணையை 'கிராண்ட் டேம்’ என்று கூறினார். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே முக்கொம்பில் மேலணை கட்டப்பட்டதால், காவிரிக்குள் நீர் பாய்வதற்கு வேண்டிய தண்ணீரைத் திருப்பிவிடுவதற்கு வழி ஏற்பட்டது. கொள்ளிடத்தின் கீழே அமைந்த கீழணையின் தண்ணீர், வீணாகக் கடலில் கலக்காமல் வீராணம் ஏரிக்குச் சென்று பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்புள்ள நிலங்களுக்கு தண்ணீர் பாய வழி ஏற்பட்டது. காட்டன் மேற்கொண்ட கட்டுமானப் பணிகளே இதற்கான முக்கியக் காரணம். 

சென்னை துறைமுகத்தில் பாறைகளைக்கொண்டு கடற்கரையின் பாதுகாப்பை உருவாக்கியதும் ஆர்தர் காட்டனே! மேலும், துறைமுகத்துக்குள் நேரடியாகச் சரக்குகளைக் கொண்டுவந்து சேர்க்க ரயில் பாதை ஒன்றையும் காட்டன் அமைத்தார். இந்தப் பணியின்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்படவே, அவர் தற்காலிக ஓய்வுபெற்று ஆஸ்திரேலியா சென்று சில மாதங்கள் தங்கி இருந்தார். அங்கே, எலிசபெத் லியர்மென் என்ற பெண்ணை 1841-ம் ஆண்டு திருணம் செய்துகொண்டார் காட்டன். சென்னை திரும்பியதும் ஆந்திராவில் உள்ள வால்டேரில் ஒரு கிறிஸ்துவத் தேவாலயம் கட்டும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தக் காலத்தில், விசாகப்பட்டினத்தில் பணியாற்றிய ஆங்கிலேய அதிகாரிகளில் பெரும்பான்மையினர் வால்டேரில் குடியிருந்தனர். தேவாலயம் கட்டுவதற்காக வந்த காட்டன், கோதாவரி ஆற்றின் வடி நிலப் பகுதிகளை ஆராயத் தொடங்கினார். அந்த நாட்களில் கோதாவரி மாவட்டம் அடிக்கடி பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது. அதற்கான காரணத்தை ஆராய்ந்து சரிசெய்யும் பொறுப்பு காட்டனுக்கு அளிக்கப்பட்டது. கோதாவரி ஆற்று நீரை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் போனதே பஞ்சத்துக்கான முக்கியக் காரணம் என்பதை அறிந்த காட்டன், கோதாவரி ஆற்றின் குறுக்கே தவளேசுவரத்தில் ஓர் அணையைக் கட்டத் திட்டமிட்டார். அதற்காக அதிக பொருட்செலவின்றி ஒரு திட்டத்தை உருவாக்கினார். ஆனால், பிரிட்டிஷ் உயர் அதிகாரிகள் அவரது திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை.

இந்தியாவில் பஞ்ச நிவாரணப் பணிகளுக்காக 84 மில்லியன் டாலர் செலவிடும் பிரிட்டிஷ் அரசு, நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு வெறும் 20 மில்லியன் மட்டுமே செலவிடுகிறது. தானிய உற்பத்தி பெருகினால்தானே, பஞ்சம் அகலும். ஆகவே, புதிய நீர்ப் பாசனத் திட்டங்கள் இன்றியமையாதவை என்று அதிகாரிகளிடம் போராடி, அதற்கான திட்ட அனுமதியைப் பெற்றார் காட்டன்.

1846-ம் ஆண்டு அணை கட்டும் பணி தொடங்கப்பட்டு, 1852-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. மதராஸ் ராஜதானியின் மிகவும் வறுமையான மாவட்டம் என்று கூறப்பட்ட கோதாவரி, அதன் பிறகு வளம் மிகுந்த மாவட்டமாக விருத்தியானது. அதுபோலவே, 1855-ம் ஆண்டு பெஜவாடாவில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்குத் திட்டமிட்டு அதையும் வெற்றிகரமாக கட்டி முடித்தார். இந்த இரண்டு அணைகளால் ஆந்திராவின் தானியக் களஞ்சியமாக மாறியது கோதாவரி மாவட்டம். அந்த நன்றியை நினைவுகூரும் விதமாக, ஆந்திர மக்கள் ஆர்தர் தாமஸ் காட்டனுக்கு சிலைகள் வைத்து அவரது புகழ் பாடுகின்றனர். கல்லணையில் புதிய மதகுகள் அமைத்ததோடு, பாம்பன் கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து சீராகச் சென்று வருவதற்கான கடல்வழித் திட்டத்தை செயல்படுத்தியதும் காட்டனே. மேட்டூர் அணையும் அவரது கனவுத் திட்டமே, 1835-ம் ஆண்டு அணை கட்டுவதற்கு சம்மதம் பெற ஆர்தர் காட்டன், மைசூருக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால், மைசூர் சமஸ்தானம் அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் முயற்சி தடைபட்டது. பிறகு, 1924-ம் ஆண்டு மைசூர் சமஸ்தானம் சம்மதம் தரவே, இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டேன்லி என்ற பொறியாளர் மூலம் அணை கட்டும் பணி தொடங்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளில் அணை கட்டி முடிக்கப்பட்டது.



No comments:

Post a Comment