Search This Blog

Friday, February 20, 2015

ஸ்டீவ் ஜாப்

ஆப்பிள்’ என்றவுடன் ஆதாம் - ஏவாள்,  ஐசக் நியூட்டன் ஆகியோர் மட்டுமே நினைவுக்கு வரும் பூகோள வரலாற்றுச் சரித்திரத்தை மாற்றியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். இன்று 'ஆப்பிள்’ என்றால் பழம் என்பதுகூட மறந்து, ஆப்பிள் நிறுவன செல்போனே நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு உலகத்தின் கவனம் கவர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் பிறந்த நாள் பிப்ரவரி 24. அன்றைய தினம் ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் என்ன செய்வார்கள்? வழக்கம்போல பரபரப்பாக வேலைபார்ப்பார்கள். ஏனென்றால், ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரோடு இருந்திருந்தாலும் அதுதான் நடந்திருக்கும். 2011-ல் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்த பிறகு, மூன்றரை வருடங்களை, அவர் இல்லாமலேயே கடந்துவிட்டது ஆப்பிள். முதல் இரண்டு வருடங்கள் சிரமப்பட்டாலும், இப்போது சுதாரித்து 'டிரெண்டிங் ரூட்’ பிடித்து, கேட்ஜெட்ஸ் உலகில் மீண்டும் தன் ஆதிக்கத்தை  நிலைநாட்டிவருகிறது ஆப்பிள். அதற்குக் காரணம், ஆப்பிளை வழிநடத்தும் ஸ்டீவ் ஜாப்ஸின் சிந்தனைகளே. 'மாத்தி யோசி’ என்பதை உலகத் தொழிலதிபர்களின் தாரக மந்திரம் ஆக்கியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். 


நண்பர்களுடன் சேர்ந்து 1,000 டாலர் முதலீட்டில்  கார் ஷெட்டில் வைத்து கணினி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை ஸ்டீவ் ஜாப்ஸ் தொடங்கியபோது, அந்த நிறுவனத்துக்குப் பெயர் எதுவும் இல்லை. தான் போகும் வழியில் இருக்கும் ஆப்பிள் பழத் தோட்டங்கள் நினைவில் வர, தன் நிறுவனத்துக்கு 'ஆப்பிள்’ எனப் பெயர் வைத்தார் ஸ்டீவ். அப்போது  'ஆப்பிள் ரெக்கார்ட்ஸ்’ என்ற ஒரு நிறுவனம் சந்தையில் ஏற்கெனவே இருந்தது. கார் ஷெட்டில் தொடங்கப்பட்ட ஆப்பிள்  நிறுவனத்தைவிட ஆப்பிள் ரெக்கார்ட்ஸ் பல மடங்கு பெரிது. 'எங்கள் நிறுவனத்தின் பெயரை எப்படி உங்கள் நிறுவனத்துக்குச் சூட்டலாம்?’ என ஸ்டீவ் ஜாப்ஸ் குழாம் மீது அது வழக்கு போட்டது. வழக்கை எதிர்கொண்டார் ஸ்டீவ்.' 'ஆப்பிள்’ எனப் பெயர் வைத்தால், டெலிபோன் டைரக்டரியில் என் நிறுவனத்தின் பெயர்தான் முதலில் வரும். டெலிபோன் டைரக்டரியாக இருந்தாலும், என் நிறுவனம்தான் முதலில் இருக்க வேண்டும். அதுவும் போக பசிக்கும்போது சில ஆப்பிள்களை மட்டுமே சாப்பிட்டுப் பசியாறியிருக்கிறேன். அந்த நன்றிக் கடனுக்காகவும் 'ஆப்பிள்’ என்ற பெயரை நான் விட்டுத் தர மாட்டேன்’ என, பல வருடப் போராட்டத்துக்குப் பிறகு 'ஆப்பிள்’ என்ற பெயரையே தன் நிறுவனத்துக்கு என பிரத்யேகமாகப் பெற்றார்.
உலகின் வேறு எந்த கேட்ஜெட்டிலும் இல்லாத புது நவீன வசதிகள், தன் நிறுவனத் தயாரிப்புகளில் இருக்க வேண்டும் என்பதில் எப்போதும் உறுதியாக இருந்தார் ஸ்டீவ். கணினிகள் புழக்கத்துக்கு வந்த புதிதில், பெரும் நிறுவனங்களில் கணினிப் படிப்பு படித்தவர்கள் மட்டுமே அவற்றை இயக்க முடியும் என்ற நிலையே இருந்தது. அந்த சமயம், 'எல்.கே.ஜி படிக்கும் குழந்தைகூட நம் நிறுவன கணினிகளை இயக்கும் அளவுக்கு எளிமையாக இருக்க வேண்டும்’ என அடம்பிடித்து ஆப்பிள் கணினிகளை வடிவமைக்கச் செய்தார் ஸ்டீவ். 'எல்.கே.ஜி குழந்தை கணினியைப் பயன்படுத்த வேண்டும்’ என அதற்கு முன்னர் யாரும் யோசித்திருக்க மாட்டார்கள். அந்த 'மாத்தி யோசி’தான் ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளை சாமான்யர்களிடமும் கொண்டுசேர்த்தது.

ஐ.பி.எம்., ஹெச்.பி., மைக்ரோசாஃப்ட்... போன்ற நிறுவனங்கள் தங்கள் மின்னணுப் பொருட்களின் உள்கட்டமைப்பு பற்றி மட்டுமே யோசித்தனர். ஆனால், ஸ்டீவ் தங்கள் பொருட்களின் சாஃப்ட்வேர், ஹார்டுவேர்... இரண்டுக்கும் சரிசம முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கினார். மென்பொருள் தயாரிக்கவும் வெளிக்கட்டமைப்பைத் தயாரிக்கவும் தனித் தனி குழுக்களை நியமித்திருந்தார் ஸ்டீவ். இதை, 'ஸ்டீவுக்கு ஹார்டுவேர், சாஃப்ட்வேர் என இரண்டு மனைவிகள். ஆனால், அவர்களுக்குள் எப்போதும் யார் சிறந்தவர் என சண்டை வராது’ என்பார்கள் ஆப்பிள் ஊழியர்கள்.

23 வயதில் 10 லட்சம் டாலர், 24 வயதில் 10 கோடி டாலர் என ஸ்டீவ் ஜாப்ஸின் சொத்து அசுரத்தனமாக அதிகரிக்க, அவர் முதலீடு செய்தது 500 டாலர் மற்றும் நிறைய புத்திசாலித்தனம் மட்டுமே. ஆப்பிள் ஐ-போன் அறிமுகமாகி உலகெங்கும் பரபர வரவேற்பு குவித்த புதிதில், 'மற்ற நிறுவனங்கள் 10 வருடங்கள் கழித்து செய்யத் திட்டமிட்டிருந்ததை ஸ்டீவ் இப்போதே செய்துவிட்டார்’ என மீடியா பாராட்டின. அதற்கான மனநிலை குறித்தும் பின்னொரு நாளில் குறிப்பிட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ்... ' 'எல்லா நாளும், இது என் கடைசி நாள் என எண்ணி வாழ்ந்தால், நிச்சயம் ஒருநாள் அது நிஜமாகிப்போகும்’ என சிறுவயதில் நான் படித்த ஒரு வாசகம் என் மனதில் இன்னும் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது. அதனால் என் ஒவ்வொரு நாளையும் வாழ்வின் கடைசிநாளாகவே கருதுவேன். அதுதான், 'பத்து வருடங்கள் கழித்தே இது சாத்தியம் ஆகும்’ என்ற எண்ணத்தை மீறி புதுப் புது தயாரிப்புகளை உருவாக்குவதற்கான உத்வேகத்தை அளித்தது’ என்றார் ஸ்டீவ்.

'ஆப்பிள்’ தன் புதுமைப் பசியை இன்னும் தக்கவைத்திருப் பதற்கு, ஸ்டீவ் ஜாப்ஸின் அந்த வெற்றி ஃபார்முலாவே காரணம்!

No comments:

Post a Comment