Search This Blog

Monday, February 28, 2011

நமக்கேற்றத் தலைமை எது? - ஞாநி

ஒரு மாநில முதலமைச்சர் காரில் போகிறார். சாலையில் சென்று கொண்டிருக்கும் அவசர உதவி வண்டி ஒன்றின் மீது மோதுவது போல அவர் கார் நெருக்கமாகப் போகிறது. உடனே காவல் துறை அதிகாரி, முதல்வர் காரை நிறுத்தி அபராதச் சீட்டு தருகிறார். கோர்ட்டில் வந்து ஆஜராகி பணத்தைக் கட்டாவிட்டால், சம்மன் அனுப்பப்படும் என்று முதலமைச்சரை எச்சரிக்கிறார்.

முதலமைச்சருக்கு எரிச்சலாக இருக்கிறது. தம் கட்சி ஊழியர்கள் கூட்டத்தில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசி, அந்தக் காவல் துறை அதிகாரி ஒரு இடியட் என்று திட்டுகிறார். கூட்டத்தைப் படம்பிடித்த ஒரு டி.வி.சேனல் இதை ஒளிபரப்பி விடுகிறது. முதலமைச்சருக்குப் பெரும் கண்டனங்கள் குவிகின்றன.

முதல்வர் உடனே காவல் அதிகாரியைச் சந்தித்து தாம் இடியட் என்று கூறியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறார். தாம் செய்தது ஒரு தவறான முன்னுதாரணம். இனி அப்படிச் செய்ய மாட்டேன் என்று சொல்கிறார். கோர்ட்டிலும் போய் அபராதத் தொகையைக் கட்டுகிறார்.


இதெல்லாம் சென்ற வாரம் நிஜ வாழ்க்கையில் நடந்தவை என்றால் நமக்கு நிச்சயம் பிரமிப்பாகவும் நம்ப முடியாமலும் தான் இருக்கும். ஆனால் அத்தனையும் நடந்தன. அமெரிக்காவில் ஒஹையோ மாநிலத்தின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் (அங்கே கவர்னர் என்று பெயர்) ஜான் காசிச், காவல் அதிகாரி ராப் பாரெட்டிடம் மன்னிப்புக் கேட்டிருக் கிறார். அபராதமாக 85 டாலர் கட்டியிருக்கிறார். இதுபோல ஒரு நிகழ்ச்சி எந்த நாளிலாவது நம் ஊரில் நடக்கும் வாய்ப்பு இருக்கிறதா என்று யோசிக்கும்போது ஏக்கமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.

சாதாரண, நடுத்தர வகுப்பினர் மட்டத்திலேயே இருக்கும்  அதிகார மனோநிலையின் பிரம்மாண்ட வடிவங்களாகவே நம் தலைவர்களும் இருக்கிறார்கள். அதிகாரம் செலுத்தினால்தான் நாம் அவர்களை மதிக்கிறோம். பெரும் பதவியில் இருந்துகொண்டு அதிகாரம் செய்யாமல், எளிமையாகவும் இயல்பாகவும் ஒருவர் நடந்துகொண்டால், அவரை இளிச்சவாயனாகக் கருதுகிறோம். நம்முடைய இந்த மனநிலைகளுக்கேற்ற தலைவர்கள்தான் நமக்குக் கிட்டுவார்கள். அதனால்தான் மோசமான ஒரு தலைவருக்குப் பதிலாக நமக்குக் கிடைக்கக்கூடிய மாற்றுத் தலைவர்களும் அதே போல மோசமான தரத்திலேயே இருக்கிறார்கள். 

இந்த அரசியல் எந்த அளவுக்கு நம்மை சீரழித்துவிட்டதென்றால், அண்மையில் ஒரு லயன்ஸ் சங்க மாநாடு நடந்த போது    அதன் பிரமுகர்கள் படம் போட்ட ஃப்ளெக்ஸ் போர்டு கள் ஸ்டாலினுக்கும் திருமா வளவனுக்கும் தெரு நெடுக வைக்கப்படுவது போல் வைக்கப்பட்டன. அரங்கத்தில் வாழ்த்தப்பட்ட பிரமுகருக்கு மலர்க் கிரீடம் சூட்டப்பட்டது. ரத்த தானம், கண் தானம் போன்ற சமூக சேவைகளில் ஈடுபடும் அமைப்புகளும் இதே சீரழிவுக் கலாசாரத்தைப் பின்பற்றக்கூடியவையாக மாற்றப்படுவதுதான் நம் முடைய மோசமான அரசியல்; நம் மீது செலுத்தும் பலமான பாதிப்பின் அடையாளம். 

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கொழும்பு விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்ட செய்தி மட்டுமே நம் கவனத்துக்கு வருகிறது. அவரை இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதித்திருக்க வேண்டும். அவர் அதில் பங்கேற்பதால் யாருக்கும் எந்தத் தீமையும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. தடுத்தது ராஜ பக்‌ஷே அரசின் முட்டாள் தனம் . 

அதே சமயம் கொழும்புவுக்கு விமானம் ஏறும் முன்னால் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சி நம் கவனத்துக்குக் கொண்டு வரப்படுவதில்லை. திருமாவளவன் தன் பாஸ்போர்ட் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னை தொடர்பாக இலங்கை புறப்படுவதற்குச் சில மணி நேரங்கள் முன்னர் சாஸ்திரி பவன் பாஸ் போர்ட் அலுவலகத்துக்கு அவர் ஆதரவாளர்கள் புடைசூழ ஏராளமான கார்களில் சென்று இறங்கினார். அலுவலக நேரம் முடிந்து விட்டது. ஆனால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இப்படிப்பட்ட சலுகை ஒரு சாதாரண மனிதனுக்கு ஒரு போதும் எந்த அரசு அலுவலகத்திலும் கிடைக்கவே கிடைக்காது. பத்துப் பதினைந்து கார்களில் கொடி பறக்க ஆதரவாளர்களின் முழக்கங்கள் ஒலிக்க வரும் செல்வாக்கு இருந்தால் மட்டுமே இத்தகைய விதி மீறல்கள் சாத்தியம். ஒரு திருமா அல்ல, ஒவ்வொரு அரசியல் பிரமுகரும் அப்படிப்பட்டவர்களாகவே இங்கே வார்க்கப்பட்டிருக்கிறார்கள். 

அமெரிக்காவிலோ, வேறு மேலை ஜனநாயக நாட்டிலோ இதெல்லாம் நடக்கவே நடக்காது. நடக்கவிடமாட்டார்கள். சின்ன அத்துமீறல்களை ஜான் காசிச் போன்றவர்கள் செய்தால் கூட உடனடியாக எதிர்ப்புக் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. மக்கள் சக்திக்கும் நியாயத்துக்கும் அடிபணியவேண்டியிருக்கிறது. 

இங்கே படித்த வர்க்கம் எல்லா முறைகேடுகளுக்கும் உடந்தையாகத் துணை போகிறது. மயிரைப் பிளக்கும் வாதங்கள் மூலம் ஊழல்களை நியாயப்படுத்த இங்கே அறிவுஜீவிகள் இருக்கிறார்கள். பள்ளிக் கூட நிர்வாகத்தின் ஆணவம் பற்றியோ, பாஸ்போர்ட் அலுவலகச் சம்பவம் பற்றியோ படித்த வர்க்கம் முணுமுணுப்பது கூட கிடையாது. வாய்ப்புக் கிடைத்தால் நீரா ராடியாவாக ஆவதற்குத் தயாரான மனநிலையிலேயே மெத்த படித்த பலரும் இருக்கிறார்கள். மாட்டினால் ராசாக்கள் மட்டும்தானே மாட்டுவார்கள். 


 நமக்குத் தலைமையேற்க காமராஜ்களும் கக்கன்களும் கிடைக்கமாட்டார்கள். காவலன் விஜய்தான் நம் தகுதிக்கேற்றத் தலைமை.  

ஓ பக்கங்கள்

Sunday, February 27, 2011

சீடன்


எதோ டப்பிங் படம் தான் என்று நினைத்தேன் இந்த படத்தின் பாடல் மட்டும் சில புகை படத்தை பார்த்து.. ஆனால், இது அக்மார்க் ஒரு தமிழ் படம் தான் .தனுஷ் இதில் நாயகன் இல்லை. இதை மனதில் வைத்து அனைவரும் படம் பார்க்க வேண்டும். இல்லையெனில் மிக பெரிய ஆப்பு... 

மலையாளத்தில் நந்தனம் என்ற பெயரில் 2002-ல் பிரித்விராஜ், நவ்யாநாயர் நடித்து வெளியான படத்தின் ரீமேக்.  திருடா திருடி என்ற மசாலா, பொறி என்ற படம், யோகி ஆகியவற்றைக் கொடுத்த சு.சிவா, ரீமேக் என்று சொல்லி எடுத்துள்ள படம் சீடன். 

பழனியில் இருக்கும் ஒரு பெரிய வீட்டு பாட்டிக்கு (ஷீலா) உதவியாக வேலைக்காரி அனன்யா) முருக பக்தையான அவள் கனவில் ஒரு கல்யாண மாப்பிள்ளை வர, ( நினைத்தேன் வந்தாய் போல கொஞ்சம் மாற்றி )  அவன்  பாட்டியின் பேரனாக வீட்டுக்குள் வர , காதல் பிறக்க, என நீட்டி..  கடவுளின் சீடனாய் தனுஷ் வர என்று இழுத்து பிடித்து  .நம் பொறுமையை சோதித்து    இருவரும் என்ன ஆனார்கள் என்பதே இந்த சீடன்..

அனன்யா நன்றாகவே நடித்திருக்கிறார்.  விவேக்கின் காமெடி சுத்தமாக எடுபடவில்லை..

மிக விரைவில் எதாவது தொலைகாட்சியில் இந்த படத்தை போடுவார்கள் என நம்புகிறேன்..

சீடன் - வேஸ்ட்

ஜி.டி.பி. என்றால்? - அடிப்படை...


''போன வருஷம் ஒரே ஒரு மாருதி கார்தான் வச்சிருந்தாரு. இப்ப ஸ்விஃப்ட், ஐ10, இண்டிகான்னு மூணு காரை வாங்கிட்டாரே...!''

''இரண்டு வருஷத்துக்கு முன்னாடிகூட வாடகை வீட்லதான் குடியிருந்தாரு. இப்ப பங்களா மாதிரி வீடு வாங்கிட்டாரே...!''

யாரைப் பற்றியாவது இப்படி பலரும் சொல்லி வியப்பதைக் கேட்டிருப்பீர்கள். இதற்கு என்ன அர்த்தம்? சம்பந்தப்பட்ட நபர் பொருளாதார ரீதியில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறார் என்று அர்த்தம்.

தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கையில் சொத்து பத்துகள் அதிகரித்திருப்பதை, வசதி வாய்ப்புகள் கூடியிருப்பதை அவர் களின் பொருளாதார முன்னேற்றத் துக்கான ஓர் அடையாளமாகச் சொல்கிறோம்.இது போல ஒரு நாடு முன்னேறுகிறதா, இல்லையா என்பதை எடுத்துச் சொல்லும் ஒரு எளிய அளவீடுதான் ஜி.டி.பி. அதாவது, (Gross Domestic Product.) தமிழில் இதை 'ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி’ என்கிறோம். 


இந்த ஜி.டி.பி-யை எப்படி அளவிடுகிறார்கள் என்பதை அவ்வளவு சுலபமாக விளக்கிவிட முடியாது. காரணம், உற்பத்தி, விற்பனை என பல விஷயங்களை உள்ளடக்கியது இது. ஜி.டி.பி. என்பது ஓர் ஆண்டின் அனைத்து சேவை மற்றும் உற்பத்தியான பொருட்களின் சந்தை மதிப்பை வைத்துக் கணக்கிடப்படுகிறது. உற்பத்தி முறை (Output approach), செலவீன முறை, வருமான முறை என பல முறைகளின் அடிப்படையில் இந்த ஜி.டி.பி. கணக்கிடப்படுகிறது.

வருமான முறை என்பது ஒரு பொருளை உற்பத்தி செய்த உற்பத்தியாளருக்குக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு கணக்கிடும் முறையாகும். செலவீன முறை என்பது தனிமனிதர்கள் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவது. இந்தியாவில் செலவீன முறையைக் கொண்டே மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிட்டு வருகின்றனர்.

செலவீன முறையின் அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இப்படித்தான் கணக்கிடுகிறார்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தி = நுகர்வு + முதலீடு + அரசு செலவினங்கள் + (ஏற்றுமதி - இறங்குமதி) . நுகர்வு என்பது தனிப்பட்ட மனிதனின் உணவு, பொழுதுபோக்கு, மருத்துவம் முதலான சொந்தச் செலவுகளைக் குறிக்கும்.

முதலீடு என்பது ஒரு புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான செலவைக் குறிக்கும். தொழிற்சாலைக்கு இடம் வாங்குதல், மென்பொருள் களுக்கு காப்புரிமை பெறுதல், உபகரணங்கள் வாங்குதல் போன்றவற்றைக் குறிக்கும்.அரசு செலவினங்கள் என்பது ஒரு நாட்டின் அரசு, அதன் மக்களுக்கும் ராணுவத்திற்கும் மற்றும் இதர அம்சங்களுக்கும் செய்யும் செலவின் மதிப்பீட்டைக் குறிக்கிறது. 

 ஏற்றுமதி, இறக்குமதி பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. பொதுவாக ஒரு நாட்டின் ஜி.டி.பி-யானது சென்ற ஆண்டு அல்லது கடைசியாக வெளியான காலாண்டு முடிவோடு ஒப்பிட்டுச் சொல்லப்படும். எடுத்துக் காட்டாக, ஒரு நாட்டின் ஜி.டி.பி. 5% உயர்கிறது எனில், அந்த நாடு கடந்த ஆண்டைவிட பொருளாதார ரீதியில் 5% வளர்ந்திருப்பதாக அர்த்தம்.


இப்படித்தான் ஆரம்பித்தது ஜி.டி.பி.! - வரலாறு
1930... அமெரிக்காவை மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஆட்கொண்ட காலம். இந்த காலகட் டத்தில் அமெரிக்கா முழுக்க பல ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப் பட்டு, மக்கள் வேலை இல்லாத் திண்டாட்டத்தினால் பெரும் அவதிப்பட்டனர். 


இந்தச் சூழலில் 1934-ல் அமெரிக்காவின் சைமன் குஸ்நெட்ஸ் (Simon Kuznets) என்பவர் ஜி.டி.பி. என்கிற கருத்தை முதன் முதலாக அமெரிக்க காங்கிரஸின் பொருளாதாரக் கூட்டத்தில் முன் வைத்தார். 'தனிநபர், நிறுவனம், அரசாங்கம் என அனைத்துத் தரப்பின் பொருளாதார உற்பத்தியையும் ஒற்றை குறிப்பில் கணக்கிட இந்த ஜி.டி.பி. உதவும்’ என்றார் சைமன். 


1944-ல் உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி ஆணையம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அளவிடும் முறையாக ஜி.டி.பி.யை ஏற்றுக் கொண்டன. 1962-ல் அமெரிக்க அதிபர் ஜான் கென்னடியின் பொருளாதார ஆலோசனை கமிட்டி யிலிருந்து ஆர்தர் ஆகன் (Arthur Okun) எழுப்பிய கேள்விகளை வைத்து 'ஆகன் விதி’ அமெரிக்காவில் உருவானது. இந்த விதி, ஜி.டி.பி. வீழ்ச்சிக்கும், வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் முடிச்சுப் போட்டது. இந்த 'ஆகன் விதி’யைத் தூசி தட்டி புதிய வேலைவாய்ப்புக் கொள்கையை வெளியிட முனைந்து வருகிறது தற்போதைய ஒபாமா நிர்வாகம். 


1947-2010 வரையிலான அமெரிக்காவின் காலாண்டு சராசரி ஜி.டி.பி. வளர்ச்சி 3.3% ஆகும். அதிகப்படியான காலாண்டு ஜி.டி.பி. வளர்ச்சியான 17.20% வளர்ச்சியை மார்ச், 1950-ல் சந்தித்தது. இன்றளவும் இதை ஒரு சாதனையாகச் சொல்லி மெச்சிக் கொள்கிறது அமெரிக்கா. 


பாய்ச்சலும் பதுங்கலும்... - இந்திய ஜி.டி.பி.  


 மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இன்று இந்தியாவுக்கு இரண்டாம் இடம்... அதுமட்டுமல்ல, உலக அளவில் நம் நாட்டின் பொருளாதார நிலை 11-வது இடத்திலும், வாங்கும் சக்தியில் 4-வது இடத்திலும் இருக்கிறது. இதையெல்லாம் கேட்கும்போது நமக்குப் பெருமையாக இருக்கிறது அல்லவா?

ஆனால், வரலாற்றின் ஆரம்ப கட்டத்தில் உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கையும் அதன் வலிமையையும் அறிந்தவர்களுக்கு இன்றைய நிலை அவ்வளவு சந்தோஷமளிப்பதாக இருக்காது. காரணம், அன்று உலகின் உச்சத்தில் இருந்தது நமது நாடு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மேற்கத்திய நாடுகளுடன் இந்தியாவிற்கு வணிகத் தொடர்புகள் இருந்திருக்கின்றன. குறிப்பாக, தென்னிந்தியாவுக்கு தென் கிழக்கு ஆசிய நாடுகளுடனும், சீனா உள்ளிட்ட கீழை தேசங் களுடனும் ரோம், அரபு நாடுகள் உள்ளிட்ட மேலை நாடுகளுடனும் கடல் மார்க்கமாக வணிகத் தொடர்புகள் இருந்து வந்தன. மிளகு, கிராம்பு, கசகசா உள்ளிட்ட வாசனைப் பொருட்கள், மசாலாப் பொருட்கள், பட்டுத்துணிகள், விவசாய விளைபொருட்கள், முத்துக்கற்கள் போன்றவை இந்திய வணிகர்களால் விற்கப்பட்டன. இதற்கு ஈடாக பெருமளவில் தங்கம், வெள்ளி போன்றவற்றை ஈட்டினர். இந்தியாவில் செல்வம் குவிய ஆரம்பித்தது. கி.பி.1500-களுக்குப் பிறகு தங்கக் காசுகள், வெள்ளிக்காசுகள், செப்புக் காசுகள் பெருமளவில் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. 



1700-களில் உலக நாடுகளின் ஒட்டுமொத்த வருவாயில் இந்தியாவின் பங்கு 22.6% என்ற அளவில் இருந்தது. அன்று ஒட்டு மொத்த ஐரோப்பாவின் பங்கே 23.3% சதவிகிதம்தான். இதன் பிறகுதான் இந்தியாவிற்கு சனி பிடித்தது, வெள்ளைக்காரர்களின் வருகை என்கிற பெயரில். 200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஆங்கிலேயர்களின் ஆட்சியால் இந்தியாவின் வளம் சுரண்டப்பட்டு, சுதந்திரம் பெற்றபோது இந்தியாவின் பங்கு வெறும் 3.8% என்ற பரிதாப மான நிலைக்குச் சென்றது. 

ஆங்கிலேயர்களின் ஆட்சி இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பையே முறித்துப் போட்டது. விவசாயத்தை ஆதாரத் தொழிலாகக் கொண்டிருந்த இந்திய மக்களை மூச்சு முட்ட வைக்கும் வரிச்சுமைகள், அடக்குமுறைகள் போன்றவற்றால் நிலைகுலைய வைத்தனர். போதாக்குறைக்கு இயற்கைப் பேரிடர்கள் வேறு.  

ஆங்கிலேய ஆட்சி முடிவடைந்த போது, நசுக்கப்பட்ட விவசாயத் தொழில், சுத்தமாக வளர்ச்சி அடையாத தொழிற்துறை, வேகமாக வளர்ந்து வந்த மக்கள் தொகைப் பெருக்கம், மிக மிக சொற்பமான அளவிலேயே கல்வியறிவு பெற்றிருந்த மக்கள், படுபாதாளத்தில் இருந்த அடிப் படைக் கட்டுமான வளர்ச்சி என்று கிட்டத்தட்ட மரணப்படுக் கையில்தான் இந்தியா இருந்தது.

ஆனால், பிரதமர் நேருவின் முயற்சியால்  எஃகுத்துறை, தகவல்தொடர்பு, அடிப்படைக் கட்டுமானம், இன்ஷூரன்ஸ், எரிசக்தித் துறை உள்ளிட்ட தொழிற் துறைகள் மட்டுமல்லாது, விவசாயத் துறையிலும் தெளிவான திட்டத் துடன் முன்னேறத் தொடங்கியது.

பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி போன்ற நீண்ட காலத் திட்டங்களால் உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டியது. கட்டுமானத்துறைகள் பெரும் வளர்ச்சியடைந்து சாலை வசதிகள், மிகப் பெரும் அணைகள், மின் உற்பத்தி நிலையங்கள் எல்லாம் அமைக்கப்பட, ஒருங்கிணைந்த முன்னேற்றம் சாத்தியமானது.குறிப்பாக, 1990-க்குப் பிறகு இந்தியா அதிவேகத்தில் வளர ஆரம் பித்தது. வளைகுடாப் போரினால் 1990-களின் ஆரம்பத்தில் எகிறியி ருந்த எண்ணெய் விலையும் தடுமாற்றத்தில் இருந்த உலகப் பொருளா தாரச்சூழலும் இந்தியாவின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. திவாலாகும் நிலையில் இருந்த இந்தியாவை மீட்டெடுக்க அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் மற்றும் நிதியமைச்சர் மன்மோகன் சிங் இருவரும் சேர்ந்து துணிச்சலாக பொருளாதார தாராளமயமாக்கலை அரங்கேற்றினர். 

 அதற்கேற்ப உலகளவில் தகவல் தொழில்நுட்பம், சாஃப்ட்வேர், பி.பி.ஓ. துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் இந்தியாவிற்குச் சாதகமாக அமைந்தன. 8 சதவிகித ஜி.டி.பி. வளர்ச்சியை அடைய முடியுமா என்பது 2004-ம் ஆண்டில்கூட சந்தேகமாக இருந்தது. ஆனால், 2008-லேயே இதை எட்டியது  இந்தியா. அடுத்து இரட்டை இலக்க ஜி.டி.பி. வளர்ச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது.  


முதலிடம் பெறுவது எப்போது? - தமிழகம்! 


ந்தியாவின் ஜி.டி.பி-யில் தமிழகத்தின் பங்கைத் தவிர்க்கவே முடியாது. தற்போது இந்தியாவிலேயே அதிக ஜி.டி.பி. இருக்கும் மாநிலங்களில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது நம் தமிழகம்.  2010-ம் ஆண்டு கணக்கின்படி மிகக் குறைந்த வித்தியாசத்தில் தமிழகத்தை முந்தியுள்ளது குஜராத். அதாவது, இந்த ஆண்டில் குஜராத்தின் ஜி.டி.பி. வளர்ச்சி 6.87%. தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியோ 6.86%. அடுத்து வரும் ஆண்டுகளில் தமிழகம், குஜராத்தைத் தாண்டிச் செல்லுமா என்பது பில்லியன் டாலர் கேள்வி என்றாலும் இது சாத்தியமான விஷயமே என்கி றார்கள் பலர்.


ஒரு மாநிலத்தில் தொழில் சிறந்து விளங்க அடிப்படையானது அரசின் ஆதரவு. தமிழகத்தில் அரசின் ஆதரவு இருந்தாலும் அரசு நடைமுறைகள் அதிகம் என்கிறார்கள் பன்னாட்டு ஐ.டி. நிறுவன உயரதிகாரிகள்.  ''நிலம் வாங்கி கம்பெனி கட்டுவதற்குள் இரண்டு வருடம் முடிந்துவிடுகிறது. காரணம் ஒவ் வொரு துறையும் ஒவ்வொரு இடத்தில் இருக்கிறது. இத்தனை பேரின் அனுமதி வாங்கி ஆரம்பிப் பதற்கே எங்களின் முழுசக்தியும் வீணாகிவிடுகிறது. தொழிற்துறை சம்பந்தப்பட்ட அத்தனை அதிகாரி களும் ஒரே இடத்தில் இருந்தால்தான் பல வேலைகளை விரைவாக முடிக்க முடியும்'' என்கிறார்கள் அவர்கள்.   


இதற்கடுத்து மின்சாரம். தமிழகத்தில் மின்சாரத்தின் நிலைமை அனைவரும் அறிந்ததே. கோவை மாவட்டத் தொழில் நிறுவனங்கள் இன்றும் போதிய அளவுக்கு மின்சாரம் கிடைக்காமல் தவிக்கின்றன. மின்சாரத்தோடு சாலை வசதிகளும்  மேம்பட்டால், தமிழகத்த்தைத் தேடி பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வர நிறையவே வாய்ப்புள்ளது. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி, நம்  ஜி.டி.பி.யும் உயரும்.  

Saturday, February 26, 2011

கடாஃபி- லிபியா

லிபியா நாட்டு சர்வாதிகாரி மம்மர் கடாஃபியின் மகுடம் சரிந்து​ கொண்டு இருக்கிறது. அவரது கழுத்தை, புரட்சி ரீங்காரம் நெருக்​கும் காலம் இன்னும் ஒரு சில நாட்களே இருக்கக்கூடும்! மன்னர் இண்டிரிசின் ஆட்சியைத் தனது அசைக்க முடியாத தைரியத்தாலும், படை பலத்தாலும், பேச்சுத் திறமையாலும் வீழ்த்தி, 42 ஆண்டுகளுக்கு முன்னால் வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் ஆட்சியைப் பிடித்தவர், மம்மர் கடாஃபி.

மன்னரை வீழ்த்திய கடாஃபிக்கு மக்களின் கஷ்டங்கள் தெரியும். சாதாரண மக்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது புரியும். அடிப்படைத் தேவைகளைக் கொடுத்து, சுதந்திரக் காற்றை சுவாசிக்கவைப்பார்’ என்ற நம்பிக்கையில்தான் முழுக்கவே அந்த நாட்​டில் இருந்த இஸ்லாமிய மக்கள் இவரை ஆதரித்தனர். 

ஆனால், மன்னர் ஆட்சிக் காலத்தில் அடக்குமுறையும் ஆணவமும் மட்டுமே இருந்தது என்றால், இவரது ஆட்சியில் மத மயக்கமும் கலந்தது. மக்களின் மத உணர்வுகளைத் தூண்டிவிட்டதால், கடாஃபி என்ன சொன்னாலும், எதைச் செய்தாலும் சகித்துக்கொண்டார்கள் லிபியர்கள். 

இன்னொரு பக்கம், உலகில் தலையெடுக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவும் உதவிகளும் பகிரங்கமாகவே செய்தார் கடாஃபி. அமெரிக்காவை எதிர்த்த ஓர் இயக்கத்துக்கு ஆதரவு காட்ட... அன்றைய அதிபர் ரொனால்டு ரீகன், கடாஃபி மீது கடுப்பாகி 'நாய்’ என்று பட்டம் சூட்டினார். பொதுவாகவே அமெரிக்காவை எதிர்க்கும் நாட்டின் அதிபர்கள் அளவுக்கு அதிகமாகக் கொச்சைப்படுத்தப்படுவார்கள் என்பது வேறு விஷயம்!

ஆயுதம், அதிகாரத்தைப் பெற்றுத் தரும். ஆனால், அதை மட்டுமே வைத்து ஆட்சி நடத்திவிட முடியாது என்பது கடாஃபிக்குப் புரியவில்லை. நாட்டின் தேசிய வருமானத்தில் 80 சதவிகிதத்துக்கும் மேல் ராணுவத்துக்கே செலவிட்டு, லிபியர்களை ரிங் மாஸ்டராக நின்று ஆட்டுவிக்க நினைத்தார். வெறுப்பை மனதுக்குள் அடக்கிக்கொண்டு வாழ்ந்தனர் லிபிய மக்கள். பெரிதாக கிளர்ச்சிகள் எதிலும் ஈடுபடவில்லை.

2009-ம் ஆண்டு, அவர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து 40 ஆண்டுகள் முடிந்திருந்தது. 'மிக நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் தலைவர்’ என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்டு கொண்டாட்டங்கள் நடத்தினார். ரஷிய அதிபர் வந்தார். இத்தாலிய பிரதமர் வந்தார். ஆப்பிரிக்கத் தலைவர்கள் எல்லோருமே லிபியத் தலைநகர் திரிபோலியில் கூடினார்கள். கடாஃபியை மதவாதி, பயங்கரவாதி என்று பட்டம் கொடுத்த நாட்டின் பிரதிநிதிகளும் வந்து வாழ்த்தினார்கள். இவர்களோடு சேர்ந்து லிபிய மக்களும்!


ஆனால், இவர்களின் மௌனத்தை அண்மையில் அடித்து உடைத்​தது எகிப்து. சர்வாதிகாரி முபாரக் ஆட்சியை 18 நாள் போராட்டத்தில் விரட்டிய எகிப்தின் எஃகு நிகழ்வுகள், லிபிய மக்களின் ரத்தத்தையும் சூடேற்ற... கொண்டாட்​டமும், குதூகலமும் இருந்த திரிப்போலி வீதிகளில் இளைஞர்கள் கூட ஆரம்பித்தார்கள். 'அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குங்கள்’ என்ற பொதுவான முழக்கம் முதலில் வந்தது. 'பொருளாதார சீர்திருத்தம் வேண்டும்’ என்று இன்னோர் இளைஞன் சொன்னான். பிப்ரவரி 20-ம் நாள் நிலவரம் இந்தளவே! 

இது மற்ற ஏரியாக்களுக்கும் பரவிவிடக் கூடாது என்று நினைத்த கடாஃபி, பத்திரிகைகளைத் தடை செய்தார். இணையதளங்களை முடக்கினார். மின்சாரத்தைத் தடை செய்தார். இதை அடுத்துதான், 'பத்திரிகைகளின் குரலை ஒடுக்காதே!’, 'உலகின் மோசமான அடக்குமுறையை செய்​யாதே’, 'எங்கே திரும்பினாலும் ஊழல்’, 'பெண் பித்தனுக்கு அதிகாரம் ஒரு கேடா’, 'குடும்ப ஆட்சி நடத்தாதே’ - என்ற ஐந்து முழக்கங்கள் உரக்கக் கிளம்பின. நாலா பக்கமும் பொதுமக்கள் திரள ஆரம்பித்து... தெருவை, நகரத்தை, தலைநகரை முற்றுகையிட்டார்கள்.


முதன் முறையாக கடாஃபியின் கண்களில் பய ரேகை!  'எகிப்து முபாரக்கைப்போல கடாஃபியும் நாட்டைவிட்டு ஓடிவிட்டார்’ என்று ஒரு தொலைக்காட்சியில் செய்தி ஓட... கடாஃபிக்குப் பைத்தியமே பிடித்துவிட்டது. 'நானா கோழை, நானா கோழை?’ என்று ராணுவ அதிகாரிகளைப் பார்த்து கத்த ஆரம்பித்தார். ''நான் திரிபோலியில் இல்லை என்றும், வெனிசூலாவுக்குத் தப்பி​விட்டேன் என்றும் சில நாய்கள் சொல்வதை நம்பாதீர்கள். இதோ திரிபோலியில்தான் இருக்கிறேன்...'' என்று டி.வி-யில் பேசியபடி மாளிகையைவிட்டு வெளியே வந்தார். சாலையில் இறங்கினார். ''இதோ பாருங்கள்... நான் நிற்பது திரிபோலிதானே!'' என்றார் கெத்தாக. இந்த காமெடியை மக்கள் ரசிக்கவில்லை. எதிர்ப்பு முழக்கங்கள் மேலும் வலுத்தன. இதில் இன்னும் எரிச்சலானார் கடாஃபி.

இருந்தாலும், 'அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இரண்டு மடங்கு சம்பளம்’ என்று அறிவித்தார். 'நாடு எப்படி நாசமானாலும் பரவாயில்லை. தங்களுக்கு சமபளம் கூட்டினால் ஆட்சியை ஆதரிப்பார்கள்’ என்று கடாஃபி போட்ட கணக்கும் தப்பாய்ப் போனது. ரோடு​களில் கூட்டம் மேலும் அதிகரித்தபடியே இருந்தது.

'போராடும் எவனைப் பார்த்தாலும் சுடுங்கள்’ என்பது அடுத்த உத்தரவு. தெருவில் நேருக்கு நேர் வந்து போராட்டக்காரர்களை எதிர்க்கொள்ளப் பயந்த ராணுவம், ஹெலிகாப்டரில் பறந்து குண்டுகள் வீசியது. லிபிய வீதிகளில் திரும்பிய பக்கமெல்லாம் பிணக் குவியல்கள்! 

''இப்போதாவது போராட்டத்தைக் கைவிடுங்கள். இல்லை​என்றால் தெருவில் உடல்களைத்தான் பொறுக்கவேண்டி இருக்கும்!'' என்று கொக்கரித்தார் கடாஃபி. அவரது மகன் சயீஃப் அல் இஸ்லாம் கடாஃபி அதை செயலாக்கினான். ''கடந்த நான்கைந்து நாட்களில் மட்டும் 2,000 பேர் கொல்லப்​பட்டு இருக்கலாம்'' என்று லிபியாவில் இருந்து வரும் தகவல்​கள் கூறுகின்றன. ''சர்வதேச மனித உரிமைப்படி, மக்கள் கருத்துகளைச் சுதந்திரமாகத் தெரிவிப்பதற்கும், பிரச்னைகள் தொடர்பாகப் போராடுவதற்கும் உரிமை உள்ளது. எனவே, போராட்டக்காரர்களுக்குப் பாதுகாப்புத் தர வேண்​டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்து தர வேண்டும். அமைதியாகப் போராட்டம் நடத்துபவர்கள் மீது அரசாங்கம் தாக்குதல் நடத்தினால், விளைவுகள் கடுமையாக இருக்கும்!'' என்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை செய்துள்ளது.  

'வட அமெரிக்க இஸ்லாமிய சமூகம்’ என்கிற அமைப்பு, அமெரிக்காவில் இருக்கிறது. அவர்கள் அதிபர் ஒபா​மாவுக்கு ஓர் அறிக்கையைக் கொடுத்திருக்கிறார்கள். ''லிபிய மக்களைக் காப்பாற்றும் காரியத்தை அமெரிக்கா உடனடியாகச் செய்ய வேண்டும். 1988-ல் ஈராக்கிலும், 1994-ம் ஆண்டு ருவாண்டாவிலும் 1996-ல் செர்பியாவிலும் நடந்ததைப் போன்ற பேரழிவு இன்று லிபியாவில் நடக்கப்போகிறது!'' என்று எச்சரிக்கை செய்துள்ளது. ஆனால், அதைப் பற்றி கடாஃபிக்கு கவலை இல்லை. பக்கத்து நாடுகளில் இருந்து கூலிப் படைகளை வரவழைத்து ஒடுக்குமுறை அட்டகாசங்களைத் தொடர்கிறார். ''நீங்கள் விரட்டி அடிப்பதற்கு நான் ஒன்றும் இந்த நாட்டின் அதிபர் அல்ல. நானே ஒரு போராளி. கூடாரத்தில் இருந்து கோட்டைக்கு வந்தவன். செத்தாலும் இந்த மண்ணில்தான் சாவேன்...'' என்று இல்லாத பொல்லாத வசனமெல்லாம் பேசிக்கொண்டே இருக்கிறார்.  

''எகிப்தில் முபாரக்கை விரட்டியதைப்போல, எங்களை விரட்டிவிடலாம் என்று நினைக்​காதீர்கள். லிபியா ஒன்றும் எகிப்து அல்ல. கடாஃபியை எதிர்க்கும் கடைசி ஆணும் கடைசிப் பெண்ணும் இருக்கும் வரை, எங்களிடம் கடைசிக் குண்டு இருக்கும் வரை போராடியே தீருவோம்!'' - இது கடாஃபியின் மகன் விடுக்கும் அறைகூவல்!  

பதிலுக்கு, ''எங்களின் கடைசி மூச்சு இருக்கும்வரை கடாஃபியை எதிர்த்துக்​கொண்டே இருப்போம்...'' என்கிறார்கள் போராட்டக்​காரர்கள்.  கடாஃபியின் கையிருப்​பில் ஆயுதங்கள் கரைந்துகொண்டே போகிறது. ஆனால், அவரை எதிர்க்கும் மக்களின் மூச்சுக் காற்றின் வெப்பம் நித்தம் கூடிக்கொண்டே இருக்கிறது!   


Friday, February 25, 2011

இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்.

டிஸ்க்: இது சொந்த ஊர் புராணம் மற்றும் புலம்பல். கொஞ்சம் போரடிக்கும்.

எனக்கு சிறு வயது முதலே என் சொந்த ஊர் விருதுநகர் மீது தனிப்பட்ட பிரியம் (சொந்த ஊரின் மீது யாருக்குத்தான் பாசம் இருக்காது?). எங்கள் ஊரை திரையில் காட்டிய இரண்டே படங்கள் ஒன்று வெயில்(வசந்தபாலன் விருதுநகர்காரர்), மற்றும் ரேணிகுண்டா(படத்தில் காட்டுவது ரேணிகுண்டாவே அல்ல). குறுகிய பரப்பளவு, தண்ணீர் பஞ்சம், குறுகிய தெருக்கள் என்று பல குறைகளை தாண்டி இந்த ஊருக்குள்ளே வரும்போதே தாயின் அரவணைப்பில் இருக்கும் குழந்தை போல மனம் குதூகலிக்கும். படிக்கும் காலத்தில் யாராவது இந்த ஊரை குறை கூறி விட்டால் உடனே கோபம் பொத்துக்கொண்டு வரும். கல்லூரியில் படிக்கும்போது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஒரு நண்பன், "இப்படி வறண்ட பாலைவனத்தில் எப்படித்தான் இந்த மனிதர்கள் இருக்கிறார்களோ?" என்று எகத்தாளமாக கூறினான். உடனே என்னிடம் பதில் வந்தது "நாளைக்கே எங்கள் ஊர் பசுமையாக மாறினாலும், இல்லை இப்படி வறண்டு போனாலும் அதை தாங்கும் சக்தி இந்த ஊர் மனிதர்களுக்கு இருக்கிறது. ஆனால் உங்கள் ஊர் ஒரு வருடம் மழை இல்லாமல் போனால் கூட உங்களால் தாங்க முடியாது!" என்று. எந்த ஒரு கணத்திலும் இதை நான் விட்டு கொடுத்ததில்லை. 

சுமார் 1 ஆண்டு சென்னையில் வேலை பார்த்துவிட்டு, ஊர் திரும்பி இருக்கிறேன். என்னுடன் படித்த நண்பர்கள் அனைவருமே பெரிய பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் பணி செய்து கொண்டிருப்பதால் ஊருக்குள் யாருமே இல்லை. எனக்கு கொண்டாட்டம் என்றால் பண்டிகை காலம்தான். அப்போதுதான் அனைத்து நண்பர்களும் ஊர் திரும்புவார்கள். தீபாவளி அன்று வ குவாட்டர் கட்டிங் படம் பார்ப்பதற்கு தியேட்டருக்கு வெளியே நின்று கொண்டிருந்தோம். நீண்ட நாள் கழித்து ஒரு நண்பனை சந்திக்க நேர்ந்தது. எல்லோரும் சேர்ந்து அரட்டை அடித்து கொண்டிருந்தோம். அந்த நண்பன் சொன்ன ஒரே வார்த்தை, "எனக்கு தெரிந்து இருபது வருடங்களாக மாறாமல் இருப்பது இந்த ஊரு ஒண்ணுதான்." அதாவது இருபது வருடங்களுக்கு முன்னால் இந்த ஊர் எப்படி இருந்ததோ அப்படியேதான் இப்பவும் இருக்கிறது. எந்த ஒரு வளர்ச்சியும் கிடையாது. நான் சிந்தித்து பார்த்தேன். நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது இருந்த ஊர் அப்படியே தான் இருக்கிறது. எந்த மாற்றத்தையும் காணோம். இன்னும் சொல்லப்போனால் சீர்கெட்டுத்தான் போயிருக்கிறது.

 எங்கள் ஊரில் தண்ணீர் பஞ்சம் மிக அதிகம். முன்பெல்லாம்  இரண்டு நாளைக்கு ஒரு தடவை முனிசிபல் குழாயில் குடிதண்ணீர் விநியோகிக்கப்படும். அதிகம் போனால் மூன்று நாளைக்கு ஒருமுறை. கடந்த சில ஆண்டுகளாக சுமார் இருபது நாளைக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க படுகிறது. இது எங்களுக்கு பழகி விட்டது. எப்படி இரண்டு மணி நேர மின்வெட்டு பழகி விட்டதோ அதுபோல. இந்த ஆண்டு விருதுநகரில் வரலாறு காணாத மழை. இப்போதும் வாரத்துக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்க படுகிறது. அதாவது நல்ல மழை பெய்தால் கூட சரிவர குடிநீர் விநியோகம் கிடையாது. ஊரை சுற்றி சிறு சிறு கண்மாய்கள், அணைகள் இருக்கின்றன. ஆனால் மதகுகள் தான் இல்லை. மழை பெய்தால் அனைத்து தண்ணீரும் வீணாக வெளியேறி விடும். இது குடிநீரில் உள்ள குழறுபடி. 

எங்கள் ஊருக்கு மிக அருகில் இருக்கும் இரண்டு பெரிய நகரங்கள் மதுரை மற்றும் சிவகாசி. இந்த இரண்டு ஊர்களில் இருந்தும் விருதுநகருக்கு என்று தனியாக மொபாசல் பேருந்துகள் கிடையாது. மதுரை டு சிவகாசி, மதுரை டு கோவில்பட்டி, மதுரை டு திருநெல்வேலி ஆகிய பேருந்துகள்தான் உண்டு. இவை விருதுநகர் வழியாகத்தான் செல்லும். ஆனால் பேருந்து நிலையத்தில் நிற்கும்போது விருதுநகர்காரன் யாரும் பேருந்தில் ஏறிவிட கூடாது. கண்டக்டர் பேருந்து அருகில் நின்று கொண்டு, "விருதுநகர் ஏறாதே!!" என்று கூவிக்கொண்டே இருப்பார். பேருந்து நிரம்பி கிளம்பும் நேரத்தில் போனால் போகட்டும் என்று ஏற்றி கொள்வார்கள். அதாவது விருதுநகர்காரன் ஏறி உட்கார்ந்து விட்டால் சிவகாசிகாரனுக்கோ கோவில்பட்டிகாரனுக்கோ சீட் கிடைக்காமல் போய்விடும் என்று இந்த திட்டம். இது தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் கடைபிடிக்கபடுகிறது. என்னை மாதிரி ஒரு சிலர் கண்டக்டரின் பேச்சை கேட்காமல் முன்னமே ஏறி உட்கார்ந்து கொண்டு, கண்டக்டரின் நெற்றிக்கண் பார்வையை கண்டுகொள்ளாமல், இருந்து விடுவோம். ஆனால் விபரம் புரியாத சிலர் குறிப்பாக பெண்கள் மிகவும் பாதிக்க படுகிறார்கள். இதில் திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் இன்னும் மோசம். எல்லா பேருந்துகளுமே ஊருக்குள் வருவதே இல்லை. ஏனென்று அடுத்த பத்தியில் சொல்கிறேன்.

தமிழ்நாட்டின் எல்லா ஊர்களின் தலைவிதிக்கு எங்கள் ஊர் மட்டும் என்ன விதி விலக்கா? எங்கள் ஊரிலும் இரண்டு பேருந்து நிலையங்கள் உண்டு. ஜன சந்தடி நிறைந்த இடத்தில் சிறிய பழைய பேருந்து நிலையம். ஆள் அரவமே இல்லாத இடத்தில் ஒரு புதிய பேருந்து நிலையம். இந்த புதிய பேருந்து நிலையம் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் பழைய பேருந்து நிலையத்தில் கடை வைத்திருந்த வியாபாரிகளின் எதிர்ப்பையும் மீறி அப்போதிருந்த எம்எல்எ வீம்புக்காக கட்டியது. ஆள் அரவமற்ற ஒரு இடத்தில் கட்டப்பட்ட அந்த பேருந்து நிலையம் தற்போது சீந்துவாரற்று கிடக்கிறது. எப்போதாவது சில சமயம் திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் ஊருக்குள் வராமலேயே புதியபேருந்து நிலையத்துக்கு வந்து அட்டெண்டன்ஸ் போட்டு விட்டு செல்லும். இந்த மாதிரி பல பேருந்துகள் ஊருக்குள் வராமல் போவதற்கும் காரணம் இருக்கிறது.

நகரின் பல்வேறு சாலைகளில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்




உலகத்தரமான சாலைகளை உடையது எங்கள் ஊர். மலைப்பாங்கான ஊராக இல்லாமல் சமவெளியில்தான் எங்கள் ஊர் அமைந்துள்ளது. ஆனால் ஒரு மலை பிரதேசத்தில் பயணம் செய்த அனுபவம் கிடைக்கும். ஆங்காங்கே சர்ப்ரைஸ் குழிகளும் உண்டு. வாகனத்தில் மணிக்கு பதினைந்து கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் உங்களால் செல்ல முடியாது. மீறினால் ஒன்று டயர் பஞ்சராகும், இல்லை ஷாக் அப்சார்பரின் சீன் முடிந்து விடும். எங்கள் ஊர் பக்கம் ஒரு சொல் வழக்கு உண்டு. "விருதுநகருக்குள் வண்டி ஒட்டி பழகி விட்டால். உலகத்தில் எந்த மூலையில் வேண்டுமானாலும் வண்டி ஒட்டி விடலாம்." ஊர் முழுக்க இதே நிலைதான். இதற்கு முக்கிய காரணம் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கபட்ட பாதாள சாக்கடை திட்டம். அதற்கு முன் மெயின் ரோடுகள் மட்டுமே குண்டும் குழியுமாக இருந்தன. தற்போது ஊரின் ஒவ்வொரு மூலை முடுக்கில் இருக்கும் சாலையும் நாசமாகி விட்டது. ஒட்டுமொத்ததில் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து விருதுநகரில் சாலை என்று ஒன்று இருந்ததாக நான் பார்த்ததே இல்லை.
இப்படி தொட்ட இடமெல்லாம் ஏதாவது ஒரு குறை இல்லை குழறுபடி. இதற்கு பாதி காரணம் அரசியல்வாதிகள் என்றால் மீதி காரணம் மக்கள். மக்கள் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர்கள். எனக்கு விபரம் தெரிந்து எம்எல்எ வாக இருந்தவர்கள் திரு ARR சீனிவாசன் (திமுக-1996), திரு தாமோதரன்(காங்கிரஸ்-2001), திரு வரதராஜன் (மதிமுக-2006). இவர்கள் யாரென்றே மக்களுக்கு தெரியாது. நான் ARR சீனிவாசன் அவர்களை வோட்டு கேட்டு வரும்போது பார்த்திருக்கிறேன். மேலும் எங்கள் பள்ளி ஆண்டுவிழாவில் ஒருதடவை பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான். மற்ற இருவரையும் வோட்டு கேட்டு வரும்போது பார்த்ததோடு சரி. இப்படி அரசியல்வாதிகள் எல்லாம் ஒரு கணக்குக்காக எங்கள் ஊரை வைத்திருக்கிறார்களே ஒழிய அதன் முன்னேற்றத்துக்கு எதுவும் செய்ததில்லை.
kk.jpg
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
எங்கள் ஊர் வியாபார தலமாக இப்போதும் சிறந்து விளங்குகிறது. கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த ஊர். அதனால்தான் என்னவோ இருபது வருடங்களுக்கும் மேலாக பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளில் முதலிடம் பெற்று வருகிறது. 120 ஆண்டுகளை கடந்த காமராசர் படித்த ஆண்கள் பள்ளி, 100 ஆண்டுகளை கடந்த பெண்கள் பள்ளி இன்னும் இயங்கி வருகிறது. இத்தனை சிறப்பம்சம் கொண்ட எங்கள் ஊர் எந்த வித முன்னேற்ற பாதையிலும் செல்லாததை நினைத்து வருத்தம் அடைகிறேன்.


சொல்ல மறந்துட்டேங்க. எங்க ஊர்தான் விருதுநகர் மாவட்டத்தின் தலைநகர். ஒரு மாவட்ட தலைநகருக்கே இந்த நிலைமை.
இது என் பள்ளி நண்பன் எழுதி அனுப்பியது. நண்பன் பாலா எழுத்துக்கள் போல்  உள்ளது.  விருதுநகர் மக்களின் எண்ணத்தை சொல்கிறது..

கோத்ரா ரயில் - தீர்ப்பும் தீர்வும்!


குஜராத் மாநிலத்தில், 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி கோத்ரா ரயில் நிலையத்தில் நின்ற சபர்மதி ரயிலின் பெட்டி எஸ்-6 எரிந்து அதில் இருந்த 59 கரசேவகர்கள் இறந்த சம்பவம் விபத்து அல்ல, திட்டமிட்ட சதி என்று சிறப்பு நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. 

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் நடந்த மதக்கலவரங்களும் அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதும் நாடறிந்த உண்மை. இதற்குக் காரணம், ரயில் எரிப்பு ஒரு திட்டமிட்ட சதி என்று பாஜக கூறியது. ஆனால், காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சிகளும், மதச்சார்பற்ற பிற கட்சிகளும் இந்த வாதத்தை மறுத்தன. ரயில் எரிந்தது வெறும் விபத்து மட்டுமே என்றன.  


இது தொடர்பாக, குஜராத் அரசு நியமித்த நானாவதி குழு அறிக்கை 2008-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டபோது, அந்த அறிக்கையிலும் இதே தகவல் - இது விபத்து அல்ல, திட்டமிட்ட சதி வேலை - என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும்கூட இந்த நானாவதி குழுவின் அறிக்கை நரேந்திர மோடி அரசு நியமித்தது என்பதால், அரசு சார்பான கருத்தாக பலரும் இதை விமர்சித்தனர். இப்போது நீதிமன்றத் தீர்ப்பு வந்த பின்னர் இந்த அமைப்புகள் இதற்குப் பெரிய அளவில் எதிர்வினை புரியவில்லை.

இந்த வழக்குத் தொடர்பாக 31 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 63 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் இத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வார்கள். வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களும் கடந்த 9 ஆண்டுகள் சிறையில் இருந்தமைக்காக மாநில அரசிடம் இழப்பீடு கோரி வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அது நியாயமும்கூட.


இருப்பினும், இந்த வழக்கில் மேலும் சிலர் குற்றவாளிகளாகத் தண்டிக்கப் போதுமான ஆதாரம் இல்லை என்று விடுவிக்கப்படலாமே தவிர, அல்லது இந்த சதித்திட்டம் குறித்த ஆதாரங்கள், அதற்கான நபர்கள் பெயர்கள் மறுக்கப்படலாம் என்றாலும்கூட, ரயில் பெட்டி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் போதுமானதாக இருப்பதால் இந்தத் தீர்ப்பு மேல்முறையீட்டிலும்கூட, விபத்து என்று மாறுகிற விபத்து ஏற்பட வாய்ப்பில்லை.

ஏனென்றால், கோத்ரா ரயில் நிலையத்தில் தேநீர் விற்கும் அஜய் பாரியா, ரயில் நிலையம் அருகே வசித்துவந்தவரும் சம்பவத்தின்போது நேரில் பார்த்த சாட்சியுமான சிக்கந்தர் முகம்மது ஆகியோர், எஸ்-6 பெட்டியில் சிலர் நுழைந்து, பெட்ரோல் ஊற்றித் தீ வைத்தனர் என்று கூறியுள்ளனர். மேலும், எரிந்து கிடக்கும் ரயில்பெட்டி எஸ்-6-ன் பல்வேறு மீதங்கள் தடய அறிவியல் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு, அவற்றின் கசடுகளில் உள்ள பெட்ரோலியப் பொருள்களின் எச்சங்களை வைத்து, இந்த விபத்துக்குக் காரணம் பெட்ரோல் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எரிந்த ரயில் பெட்டி குறித்து, அன்றைய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் அமைத்த யு.சி. பானர்ஜி குழு விசாரணை செய்து, இது வெறும் விபத்துதான் என்று அறிவித்தது. ஒரு ரயில்பெட்டி எப்படி எரிந்தது, எரிந்த மிச்சங்களில் மீதமாகிக் கிடக்கும் வேதியல் பொருள்கள் என்ன, அதில் பெட்ரோலியப் பொருள்கள் இருக்கின்றனவா என்கிற அறிவியல்பூர்வமான ஆய்வுகளுக்கு உள்படாமல், பானர்ஜி குழு இந்த முடிவுக்கு வந்தது என்பதைத்தான் தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு உணர்த்துகிறது. அன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக பானர்ஜி குழு செயல்பட்டதோ என்று இப்போது சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.


இந்தச் சம்பவம் நடைபெற்ற அந்த நேரத்தில் "இதைச் சதி என்றோ விபத்து என்று உடனடியாக முடிவு செய்ய முடியாது, அதற்கான அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் வரட்டும். பிறகு கருத்துச் சொல்கிறோம்' என்று பொறுமை காக்க பாஜகவும் காங்கிரஸ் மற்றும் பிற மதச்சார்பற்ற கட்சிகளும் பொறுமை காட்டியிருந்தால், மக்களிடம் ஆவேசம் ஏற்பட்டிருக்காது. கலவரம் நடந்திருக்காது. இதைச் செய்யத் தவறிய பழி எல்லா அரசியல் கட்சிகளையும் சேரும்.காங்கிரஸ் கோத்ரா சம்பவத்தை பாஜகவுக்கு எதிரான ஆயுதமாகக் கருதியது. பாஜகவோ, இதன்மூலம் தன் நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றது. கோத்ரா சம்பவத்தின் பின்னணி என்ன என்பதைப் பற்றியும், கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த கலவரம், அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு, பொருள் சேதம் பற்றியும் விவாதங்கள் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன. அடிப்படையில், ஏதோ ஒரு சிறிய பொறி, இதயத்தின் அடித்தளத்தில் இருந்த மனக்கசப்பு, சட்டென்று வெளிப்பட்டு கோரத்தாண்டவமாட வைத்துவிட்டது என்பதுதானே நிஜம்!


 அதிவிரைவு நீதிமன்றம் அமைத்து விசாரிக்கப்பட்ட வழக்குக்கு ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பெயரா அதிவிரைவு நீதிமன்றம்? சாதாரண நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தொடரப்பட்டிருக்குமேயானால், இப்போது நிரபராதிகள் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் 63 பேரின் ஆயுள்காலமும் கிலியில் கழிந்திருக்குமே?அது போகட்டும். கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு ஒரு திட்டமிட்ட சதி என்று தீர்ப்பளித்திருக்கிறது விரைவு நீதிமன்றம். ஆனால், சதித்திட்டம் தீட்டியவர் என்று குற்றம் சாட்டப்பட்ட, ஒலிபெருக்கியில் ரயிலைக் கொளுத்துங்கள் என்று அறைகூவல் விடுத்தவர் என்று கூறப்பட்ட மௌலானா உமர்ஜி, போதிய சாட்சியமில்லாமல் விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஏன் இந்த முரண்? அப்படியானால், சதித்திட்டம் தீட்டிய முக்கிய குற்றவாளி யார்?

இதுபோன்ற பிரச்னைகளையும், தீர்ப்புகளையும் மதமுலாம்பூசிய பூதக்கண்ணாடி மூலம் பார்க்கக்கூடாது. மதமோ, ஜாதியோ யாரும் விரும்பிப் பெற்றது அல்ல. சுதந்திரத்துக்காக நாம் கொடுத்த விலையே மிகமிக அதிகம். மத நல்லிணக்கத்துக்காக நமது "தேசப்பிதா' அண்ணல் காந்தியடிகளையே இழக்க நேர்ந்த துர்பாக்கியம் இந்தியாவுக்கு உண்டு. 64 ஆண்டுகளாகியும் சுதந்திர இந்தியா ஒற்றுமையாக இருக்கப் பழகாவிட்டால் எப்படி?

ஒரு சிலர் ஓரிடத்தில் செய்த குற்றத்துக்காக அவர்களை மட்டும் தண்டிக்காமல் மாநிலத்தையே ரத்த ஆறாக்கி, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பதற்றத்தை உருவாக்கிய அரசியல் கட்சிகளை யார் தண்டிப்பது? இந்தக் கட்சித் தலைவர்கள் உசுப்பேற்றிய அனல் கக்கும் வாதங்களுக்கு என்ன தண்டனை?

இனி இன்னொரு கோத்ரா உருவாகாமல் இருக்க வேண்டும். அதற்கு மக்கள் அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் நம்பாமல், நமது ஒற்றுமையில்தான் இந்த தேசத்தின் ஒற்றுமை அடங்கி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கோத்ராவிடமிருந்து நாம் படிக்க வேண்டிய பாடம் அதுதான்.

தினமணி          

Thursday, February 24, 2011

தமிழக தேர்தல் - கட்சிகள் கூட்டு கணக்கு

'அபாயகரமான வளைவு... கவனமாகப் பயணிக்கவும்!’ - அனைத்து அரசியல் தலைவர்களும் இப்போதைக்குப் படிக்க வேண்டிய ஒரே வாக்கியம் இதுதான்! அடுத்து வரப்போகும் இரண்டு வாரங்களில் தலைவர்கள் எப்படி நடந்துகொள்ளப்போகிறார்கள் என்பதை வைத்தே அவர்களின் தலைவிதிகள் தீர்மானிக்கப்படும். அதற்கான முன்னோட்டங்கள் இந்த வாரத்தில் நடக்க ஆரம்பித்துவிட்டன. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான க்ளைமாக்ஸ் நெருங்கிவிட்டதை இந்தக்கட்சிகளின் தலைமை நிலையக் காட்சிகள் நமக்குச் சொல்கின்றன! 

திணறும் தி.மு.க.  

ப்பத்தைப் பங்கிட்டுக் கொடுப்பதில் எப்போதும் சமர்த்தர் கருணாநிதி. அவருக்கே இடியாப்பச் சிக்கல் வந்தது இந்த முறைதான்! போட்ட பிஸ்கட்டுக்கு வால் ஆட்டி வந்த காங்கிரஸ், இந்த முறை கொஞ்சம் கோபத்தில் இருக்கிறது என்றுதான் கருணாநிதி நினைத்தார். ஆனால், அடங்காத சீற்றமும் 'ஆ.ராசா’வை முன்வைத்த அநியாய சீண்டலையும் காங்கிரஸ் கடைப்பிடிக்கும் என்பது யாரும் எதிர்பாராதது. 40 ஆண்டு காலக் கோபத்தை நான்கே மாதங்களில் தீர்த்துக்கொள்ளத் திரிகிறது காங்கிரஸ்.



'80 தொகுதிகள் வேண்டும், எட்டு மந்திரி கள் வேண்டும், துணை முதல்வர் பதவியும் வேண்டும்’ - இந்த மூன்றும்தான் ரிபெல் காங்கிரஸின் ரிங்டோன். கருணாநிதியைச் சட்டமன்றத்திலும் பொதுமேடைகளிலும் வானளாவப் புகழும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க் கள்கூட, டெல்லி தலைமை அமைத்த ஐவர் குழுவில், இதே கோரிக்கையை ரகசியமாக வைத்திருப்பதுதான் கருணாநிதிக்கு அதிர்ச்சி. காங்கிரஸுக்கு 50, பா.ம.க-வுக்கு 30, விடுதலைச் சிறுத்தைகளுக்கு 10. ஆக மொத்தம் 90 இடங் கள் போனால், மீதி உள்ள 144-ஐ தி.மு.க. எடுத்துக்கொள்ளலாம். உதிரிகள் சிலரை உதய சூரியனில் நிற்கச் சொல்லலாம் என்பதுதான் கருணாநிதி தனது டைரியில், பென்சிலால் எழுதிவைத்திருந்த முதல் கணக்கு. தீர்மான மான கணக்காக இருந்திருந்தால், அவரே பேனாவால் எழுதியிருப்பார். அழிக்க வசதி யாகவே பென்சில். 'கடந்த முறை 31 இடங்கள் நின்றோம். அதனால் 31-க்குக் குறைவாக வேண்டாம்’ என்று ராமதாஸ் சொன்னார். 'மருத்துவருக்கு எத்தனை தருகிறீர்களோ, அதில் பாதியாவது எங்களுக்கு வேண்டும்’ என்று சீறிக்கொண்டு இருக்கிறது சிறுத்தை. காங்கிரஸ் கட்சி 50-க்கு அடங்குவதாகத் தெரியவில்லை என்றதும், 56 இடங்கள் என்று தாராளம் காட்டினார் கருணாநிதி.

'75-க்குக் குறைவான இடங்களை வாங்கக் கூடாது’ என்று ராகுல் சொல்லிவிட்டதாக, இளைஞர் காங்கிரஸ் டென்ஷனைக் கூட்டி வருகிறது. இதை வைத்துப் பார்த்தால், 66 இடங்கள் வரை காங்கிரஸ் கறந்துவிடும் என்றே தெரிகிறது. '144 தொகுதிகளுக்குக் குறைவாக நிற்பது நமக்கு நல்லது அல்ல!’ என்கிறார் அழகிரி. 'நான் முதல்வராக வரப்போகும் நேரத்தில்தான் இந்த ஸ்பெக்ட்ரம் தொல்லை வரணுமா?’ என்பது ஸ்டாலினின் வருத்தம். 'கூடுதலாகக் கொடுத்தாலும்கஷ்டம், குறைவாகக் கொடுத்தாலும் கஷ்டம்’ என்று கலங்கினாராம் கருணாநிதி. மூன்றெழுத்துக் கட்சியை ராகுல் என்ற மூன்றெழுத்துதான் பிடித்து ஆட்டுகிறது!   

அவஸ்தையில் அ.தி.மு.க!  


யந்து இருப்பது தெரியக் கூடாது என்ப தற்காகச் சில அதைரியசாலிகள் ஆளுக்கு முன்னால் கிளம்புவார்கள். ஜெயலலிதாஅந்த வகையறா! எல்லாக் கட்சிகளுக்கும் முன்ன தாகவே, தன் கூட்டணியை அறிவிப்பார். தொகுதிகளைப் பிரிப்பார். வேட்பாளர்களை அறிவிப்பார். டூர் கிளம்பிவிடுவார். தேர்தல் தேதிக்கு முன்னதாக எல்லாமே பக்காவாகத் தீர்மானிக்கப்பட்டுவிடும். ஆனால், இந்த முறை அம்மா படும் அவஸ்தை சொல்ல முடியாதது. எதைப்பற்றியும் யாரைப்பற்றியும் கவலை இல்லை என்ற அவரது இமேஜ், கடுமையாகச் சரிந்து இருக்கிறது. சேதுராம னுக்கு ஒண்ணு, கிருஷ்ணசாமிக்கு ரெண்டு, ஜிவாஹிருல்லா வுக்கு மூணு... என்றுதான் அறிவிக்க முடிந்தது. இந்த ரீதியில் போனால், 234 அறிவிப்பதற்குள் எலெக்ஷன் முடிந்துவிடும். கூட்டணியில் ஆரம்பத்தில் இருந்தே இருக்கும் வைகோவுக் குக்கூட அவரால் எண்ணிக்கையைச் சொல்ல முடியவில்லை. கறார் கம்யூனிஸ்ட்டுகளும் கணக்குத் தெரியாமல் அலைகிறார்கள். அத்தனைக்கும் காரணம், விஜயகாந்த் விஷயத்தில் இன்னமும் முடிவெடுக்க முடியாததுதான். 

மாவட்டத்துக்கு இரண்டு தொகுதிகள் வீதம் வேண்டும் என்று 66-ல் விஜயகாந்த் தொடங்க... மாவட்டத்துக்கு ஒன்றுதான் என்று 33-ல் ஆரம்பித்தார் அம்மா. இரண்டு பேர் சொல்லும் எண்களும் பக்கத்தில் இல்லை. அதனால்தான் பேச்சுவார்த்தை பல நாட்கள் நீடித்தன. ஜனவரி 30-ம் தேதி இந்த நம்பரைச் சொன்னதும் விஜயகாந்த் சிரித்தது, கார்டனின் கோபத்தை அதிகப்படுத்தியது. 'முதலமைச்சர் நாற்காலியில் உட்காரப்போறது அந்த அம்மாதான். நான் இல்லை. அதனால, சரியான முடிவெடுக்க வேண்டியது அவங்கதான்’ என்று சொன்ன விஜயகாந்த், எந்த ரியாக்ஷ னையும் இதுவரை வெளியிடாதது ஜெயலலிதாவைத் தூக்கம் இல்லாமல் செய்துவிட்டது. 'விஜயகாந்த் வேணும். ஆனால், அவருக்கு வெளியே தெரியும்படி ரொம்ப முக்கியத்துவம் கொடுத்துடக் கூடாது’ என்ற மனோபாவம் பிடித்து ஆட்டுவதால் அவஸ்தையில் இருக்கிறார் ஜெ! 

கலக்கும் காங்கிரஸ்!  

காமராஜர் ஆட்சியைக் கொல்லைப்புறம் வழியாகப் போய் அமைக்க இப்படி ஒரு பாதை இருக்கிறதே என்று காங்கிரஸ் இப்போதுதான் கண்டுபிடித்து இருக்கிறது. எந்தக் கூட்டணி யில் இருந்தாலும், காங்கிரஸ் ஜெயிக்க வேண்டும் என்று, தேர்தலில் நிற்கும் அந்தக் கட்சி வேட்பாளர் மட்டும்தான் கடவுளை வேண்டிக்கொண்டு இருப்பார். மற்ற தொண்டர்கள் அதைப்பற்றிய கவலையே இல்லாமல்தான் இருப்பார்கள். ஆனால், இந்த முறைதான் காங்கிரஸின் அனைத்துத் தொண்டர்களும் துள்ளிக் குதிக்கிறார்கள். 

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கார்த்தி சிதம்பரம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா ஆகிய மூவர்தான் இதற்கான தூண்டுதல். காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று கிளம்பியது, கருணாநிதி ஆட்சியை அகற்றுவோம் என்றே அனைவர் காதிலும் விழுந்தது. காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி அமையப்போவதாகத்தான் தொண்டர்கள் நினைத்தார்கள். ராகுலும் அதற்கான வேலைகளில் இறங்கி னார். ஆனால் சோனியா, 'இந்த ஒரு தடவை கருணாநிதியுடன்தான் கூட்டணி’ என்று சொல்லிவிட்டார். 'கருணாநிதி யுடன் கூட்டணி ஓ.கே. ஆனால், நான் கேட்கும் சீட்டு களைத் தர வேண்டும்’ என்றார் ராகுல். 'மகனே, உன் சமர்த்து’ என்று சீட் விஷயத்தில் சோனியா ஒதுங்கிக்கொள்ள... ஆ.ராசாவை வைத்தே தி.மு.க-வின் தெம்பைப் பாதியாகக் குறைத்தது காங்கிரஸ். 

கேட்கும் தொகுதிகளைத் தரவில்லை என்றால், கம்பி எண்ண வேண்டியோர் எண்ணிக்கை கூடுதலாகும் என்று காங்கிரஸ் நடத்தும் பாலிடிக்ஸ்... தமிழ்நாட்டுக்கு ரொம்பவே புதுசு. 'காங்கிரஸைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்’ என்று மு.க. தங்கபாலுவாகத் தன்னுடைய முன்னெழுத்தை மாற்றிக் கொண்ட கே.வி.தங்கபாலுவே சொல்ல ஆரம்பித்த பிறகு, காங்கி ரஸைக் குறைத்து மதிப்பிட முடியாதுதான். அதுக்காக, 80 சீட் ரொம்ப ஜாஸ்தி சார்! 

விட்டுத்தராத விஜயகாந்த்!  


'விருதகிரி’க்கு அடுத்த சினிமா வாகத்தான் இதையும் நினைக்கிறார் விஜயகாந்த். இன்னும் ரெண்டு வாரம் கழித்துப் போய்க் கேட்டாலும், 'என்ன சார் அவசரம். இன்னும் தேர்தலுக்கு மூணு மாசம் இருக்கே’ என்று பதற்றம் இல்லாமல் சொல்வார். 'சேலம் மாநாட்டில் கூட்டணியை அறிவிப்பேன்’ என்று சொல்லி பரபரப்பைக் கிளப்பியவர், அநியாயத்துக்கு மௌன சாமியார் ஆகிவிட்டார். 'மனசுல உள்ளதை மறைக்காம சொல்லிடு வேன்’ என்ற விஜயகாந்த், என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பது அவர் அறிவிக்கும் வரை மர்ம மானதுதான். 

கார்டன் தரப்பு, காந்த் தரப்புடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வருகிறது. கடந்த வார நிலவரப்படி, 50 தொகுதிகளுக்குக் குறையாமல் நிற்கிறார் விஜயகாந்த். 'இன்னும் எத்தனையோ கட்சிகளுக்குத் தர வேண்டியிருக்கே’ என்று அ.தி.மு.க. மாஜிக்கள் சொல்லிப் பார்த்தார்கள். 'எங்களுக்கு 12 சதவிகித வாக்கு இருக்கிறதை மதித்தால், அதற்கான இடங்க ளைக் கொடுங்க’ என்று கேப்டன் ஆட்கள் சொல்லி வருகிறார்கள். 

'12 சதவிகித வாக்குகள் வைத்திருப்பவருக்கு, 50 தொகுதிகள் என்றால், மற்ற 35 சதவிகித வாக்குகள் உள்ள அ.தி.மு.க. எத்தனை தொகுதிகளில் போட்டிஇடுவது?’ என்கிறார்கள் அம்மா ஆட்கள். 'கருணாநிதி ஜெயிக்க ணுமா? ஜெயலலிதா ஜெயிக்க ணுமா? என்று தீர்மானிக்கப் போறதே எங்கள் கேப்டன்தான்’ என்று தே.மு.தி.க-வினர் சொல்கிறார்கள். 

இந்த இரண்டில் எது நடந்தாலும், விஜயகாந்த்துக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால், அவரது கட்சி சார்பாக தமிழ்நாடு சட்டமன்றத்துக்குள் கணிசமான உறுப்பினர்கள் செல்வது மட்டுமே அவரது எதிர்காலத்துக்கு நல்லது என்று பலரும் ஓதியதால் 'அ.தி.மு.க-வுடன் கூட்டணி’ என்பதில் உறுதியானார். ஆனால், சீட் இழுபறிகள் இன்னும் தொடரவே செய்கின்றன. 41 அவரது கடைசி இலக்காக இருக்கும்! (கூட்டுத்தொகை 5 ஆக இருக்கணும்).

பலித்தது பா.ம.க-வுக்கு! 

'நாங்கள் இருப்பதுதான் வெற்றிக் கூட்டணி’ என்பது ராமதாஸர் வாக்கு. ஆனால், இம்முறை அவரை தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் பாடாய்ப்படுத்தினார்கள். 25 இடங்களைத் தருவதாகச் சொன்னாராம் கருணாநிதி. 'விஜயகாந்த் வருவதால் உங்களுக்கு 17-தான் தர முடியும்’ என்றாராம் ஜெயலலிதா. இரண்டு தரப்புமே பெரிய மரியாதை எதையும் தந்துவிடவில்லை என்பதை ராமதாஸ் முதல்முறையாக உணர்ந்தார். தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் பா.ம.க. தரப்பில் இருந்து தனித்தனி தூதர்களை ராமதாஸ் அனுப்பினாரே தவிர, அவர்கள் இவருக்காகத் தூண்டில் போட்டுக் காத்திருக்கவில்லை என்பதுதான் நிஜம். இரண்டு பக்கமும் பேசுவதாகக் காட்டி, எண்ணிக்கையைக் கூட்டிப் பார்க்கலாம் என்றுகூட ராமதாஸ் நினைத்தார். ஆனாலும், எண்ணிக்கைகள் அவ்வளவாகக் கூடவில்லை. 

கடந்த புதன் கிழமை ஒரு தீர்மானமான முடிவுக்கு ராமதாஸ் வந்தார். 'அ.தி.மு.க. கூட்டணியில் நாம் இருந்தால், நம்முடைய பல தொகுதிகளை விஜயகாந்த்தும் கேட்பார். அவருக்கு விட்டுத்தர வேண்டி வரும். கருணாநிதியிடம் பேசி, வாக்குவாதம் செய்து, தொகுதிகளைப் பிரிப்பது மாதிரி ஜெயலலிதாவிடம் செய்ய முடியாது. எனவே, தி.மு.க. கூட்டணியே சரியானது’ என்று முடிவெடுத்தார். இந்தத் தகவலை அ.தி.மு.க. சார்பில் பேசியவர்களுக்கு பா.ம.க. தரப்பு சொல்லிவிட்ட பிறகு, மறுநாள் காலையில் கோபாலபுரம் போனதுதான் டாக்டர் நடத்திய நாகரிகமான அரசியல் .

25 என்று சொல்லிக்கொண்டு இருந்த கருணாநிதியிடம் 28 வாங்கிவிடலாம் என்றுதான் ராமதாஸ் போனார். 31 வந்து விழுந்ததில் ராமதாஸ் ஷாக்! லண்டனில் இருந்த ஸ்டாலின் தலையில் விழுந்தது இடி! 

மனம் வெம்பிய ம.தி.மு.க!  

 
டந்த தேர்தலில் வைகோவுக்கு 35 இடங்கள் தரப்பட்டன. ஆனால், இன்று விஜயகாந்த் வர இருக்கிறார், இரண்டு கம்யூனிஸ்ட்டுகள் வந்திருக்கிறார்கள், கொங்கு பேசிக்கொண்டு இருக்கிறது, கார்த்திக் இணைந்திருக்கிறார், சரத்குமார் வருகிறார், இதுவரை தியேட்டர் டிக்கெட் பறித்து வந்த விஜய் ரசிகர்கள், இம்முறை தேர்தல் டிக்கெட் கேட்கலாம்... இந்த நிலைமையில், ம.தி.மு.க. போட்டியிடப் போகும் இடங்கள் 18 முதல் 21 ஆக இருக்கலாம் என்று அ.தி.மு.க. வட்டாரம் சொல்கிறது. ம.தி.மு.க-வும் அதை மனதளவில் ஆமோதிப்பதற்கு ஆயத்தமாகிவிட்டது!

கட்சியின் பொதுக் குழுவில் பேசிய வைகோ, உணர்ச்சியை ஒதுக்கிவைத்துவிட்டு, யதார்த்த சூழ்நிலையை உணர்ந்து பேசியிருக்கிறார். ''கடந்த முறைபோல நமக்கு இடங்கள் கிடைக்காது. எதிர்பார்க்கவும் முடியாது. இதனால் பலரும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். ஆனால், நம்முடைய ஒரே லட்சி யம், கருணாநிதியை வீட்டுக்கு அனுப்புவது மட்டும்தான். அதற்காக எல்லாவற்றையும் சகித்துத்தான் தீர வேண்டும்!’ என்ற தொனியில் பேசி, தொண்டர்களை மனமாற்றம் செய்துஇருக்கிறார். 'உங்களைப்போலத் தொண்டன் எனக்கும் கிடைக்க மாட்டான். என்னைப்போலத் தலைவன் உங்களுக்கும் கிடைக்க மாட்டான்!’ என்றார் வைகோ. மேலும், 17 ஆண்டுகள் கட்சி நடத்தியதே பெரிய விஷயம் என்றும் சொன்னார். 'கடந்த தேர்தலில் 6 சதவிகித ஓட்டுகளை ம.தி.மு.க. வாங்கியது என்பதைவிட, 234 தொகுதிகளுக்கும் பிரசாரம் செய்யப்போகும் ஒரே தலைவர் வைகோதான். அந்த மரியாதையை ஜெயலலிதா நிச்சயம் தருவார்!’ என்கிறார்கள் வைகோ ஆட்கள். 39 தொகுதிகளுக்கான பட்டியலைக் கொடுத்துவிட்டுக் காத்திருக்கிறது ம.தி.மு.க! 

கலக்கத்தில் கம்யூனிஸ்ட்டுகள்!  

ரண்டு மாதங்களுக்கு முன்பு வரை சிறுதாவூர் விவகாரத்தை வைத்து ஜெயலலிதாவுக்கு கசப்பைக் கூட்டி வந்தவர்கள் மார்க்சிஸ்ட்டுகள். அதனால்தான் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு டெல்லியில் இருந்து பிரகாஷ் காரத்தை வரவைத்துப் பேசினார் ஜெ. அப்போதுகூட, மாநிலத் தலைமையான ஜி.ராமகிருஷ்ணனுக்குத் தடை. தனியாகவே காரத்துடன் பேசினார் ஜெ. 

இருவரும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்துப் பேசவில்லை. 'அளவுக்கு அதிகமான நம்பிக்கையில் ஜெயலலிதா இருக்கிறார்’ என்று சொல்லிப் போனார் காரத். ஆனால், அப்படி ஒரு நம்பிக்கை மார்க்சிஸ்ட்டுகளுக்கு இல்லை. 25 தொகுதிகளுக்கான பட்டியலைக் கொடுத்திருக்கும் சி.பி.எம். இதில் 15 இடங்கள் வேண்டும் என்கிறது. கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் கிடைத்த 13 இடங்களாவது கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால், 11 கொடுப்பது அ.தி.மு.க-வின் திட்டமாம். தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை 10 இடங்களில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6-ல் வென்றது. அதைவிடக் கூடுதலாகத் தேவை என்பது இவர்களது கோரிக்கை. 

இவர்கள் இருவருக்கும் முக்கியமான கலக்கம் என்ன தெரியுமா? 'சி.பி.ஐ-யைவிடக் கூடுதலாக ஒரு தொகுதியையாவது வாங்கிவிட வேண்டும்’ என்பதுதான் சி.பி.எம்-மின். லட்சியம். அவர்களுக்குச் சமமாகத்தான் நமக்கும் தர வேண்டும் என்பது சி.பி.ஐ-யின் லட்சியம்! 

திடுக்கிட்ட திருமா!  



டாக்டர் ராமதாஸுக்கு 31 இடங்கள் என்று அறிவித்ததும் திடுக்கிட்டவர் திருமா. 'நான்கு ஆண்டுகளாக நாம் தி.மு.க-வுடன் இருக்கிறோம். ராமதாஸைச் சேர்ப்பதா வேண்டாமா என்று நம்மிடம் தி.மு.க. ஆலோசனை செய்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. மேலும் 31 இடங்கள் பா.ம.க-வுக்குத் தந்திருக்கிறார்கள். அதில் பாதி இடங்களை யாவது எங்களுக்குத் தர வேண்டும்!’ என்று குமுறுகிறார்கள் விடுதலைச் சிறுத்தைகள். சிறுத்தைகளின் கோரிக்கை 15 ஆக இருந்தால், தி.மு.க. அவர்களுக்கு ஒதுக்க நினைப்பது 9-தான். இரண்டு இலக்கம் வேண்டும் என்பதும் சிறுத்தைகளின் ஆசை.

'பா.ம.க-வுக்கு எதிராக அரசியல் செய்தால் மட்டும்தான் தலித் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற முடியும். பா.ம.க-வுடன் இணைந்து போய் வாக்குக் கேட்டால், கட்சியை வளர்க்க முடியாது!’ என்ற ரீதியில் கொள்கை வாக்குவாதங்களும் திருமாவளவ னைச் சுற்றிலும் நடக்கின்றன. 15 தராவிட் டால் மாற்று அணியைத் தேட வேண்டியது தான் என்றும் சொல்கிறார்கள். இதை அ.தி.மு.க. கவனித்து, தூண்டிலைச் சரிசெய்து வருகிறது. 


Wednesday, February 23, 2011

புதிய கல்வித் தந்தைகள் -தமிழக அமைச்சரையில்

''தி.மு.க. இம்முறை ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கல்லூரி நடத்தியது  எ.வ.வேலு மட்டும்தான். ஆனால், இன்று பெரும்பாலான அமைச்சர்கள் கல்லூரிகள் ஆரம்பித்துவிட்டார்கள். இது கட்சிக்கு நல்லதல்ல. அனைவரும் அதைக் கட்சிக்கு எழுதிவைத்துவிடுங்கள்!'' என்று ஒரு நாள் அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி சீறினார். அவரே அதிர்ச்சியடையும் அளவுக்கு தமிழக அமைச்சரவையில் இப்போது கல்வித் தந்தைகள் அதிகம்!

 ஜெகத்ரட்சகன், ஜேப்பியார், ஏ.சி.சண்முகம், வேலூர் விஸ்வநாதன் போன்றவர்கள் எம்.ஜி.ஆரின் கடைக்கண் பார்வையால் கல்வி நிறுவனங்களை அமைத்து வளர்ந்தவர்கள் என்றால், கருணாநிதியின் ஆசீர்வாதம் காரணமாக... வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் பரிணமித்து இருக்கிறார்கள். சேலம், திருச்சி, விழுப்புரம், வேலூர், கடலூர், கோவை நகர்ப் பகுதியில் வலம் வந்தால், இவர்களது பிரமாண்டமான கல்லூரிக் கட்டடங்களைத் தரிசிக்கலாம்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள சிவரக்கோட்டையில் பிரமாண்டமாக உருவாகிறது தயா இன்ஜினீயரிங் கல்லூரி. மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு சொந்தமான இந்த கல்லூரி அடுத்த கல்வி ஆண்டில் இருந்து செயல்படத் துவங்குமாம்.

''அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மற்றும் நேருவின் மனைவி சாந்தா ஆகியோர் இணைந்து நாராயணா அறக்கட்டளை வைத்துள்ளனர். அதன் சார்பாக ஒரு கல்லூரி நடத்துகின்றனர். அந்தக் கல்லூரிக்காக ஏழை, எளிய விவசாயிகளிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு 100 ஏக்கர் நிலத்தை அபகரித்து உள்ளனர். தேசிய நெடுஞ்சாலைக்காக இந்த நிலங்கள் முன்பு தேர்வு செய்யப்பட்டது. ஆனால், அந்த நிலங்களுக்கு பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக, இப்போது புங்கனூரில் இருக்கும் ஏரியை வளைத்து தேசிய நெடுஞ்சாலைக்குப் பாதை அமைத்து வருகின்றனர். இது என்ன தர்மம்?'' என்று கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி திருச்சியில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டப் பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா முழங்கினார்.


ஜெயலலிதா குறிப்பட்டது திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தாயனூர் கிராமத்தில் இயங்கி வரும் கேர் இன்ஜினீயரிங் கல்லூரி பற்றித்தான். அந்தக் கல்லூரியின் சேர்மனாக இருப்பவர் நேருவின் தம்பி ராமஜெயம். நேருவின் அக்காள் மகனும், மாப்பிள்ளையுமான செந்தில் இதன் நிர்வாக அதிகாரி. இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த இன்ஜினீயரிங் கல்லூரி, நேருவின் தந்தை பெயரில் இயங்கி வரும் நாராயணா எஜுகேஷனல் டிரஸ்ட் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஜெயலலிதா குறிப்பிட்டதுபோல, நேருவின் மனைவி சாந்தாவும் சகோதரர் ரவிச்சந்திரனும் டிரஸ்ட்டை நடத்த, குடும்ப உறுப்பினர்கள் பலரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

ஊரகத் தொழில் மற்றும் கால்நடைத் துறை அமைச்சரான பொங்கலூர் பழனிச்சாமிக்கு சொந்தமான கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி, கோவை அருகே பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கல்லூரி, விஜயலட்சுமி பழனிச்சாமி சாரிடபிள் டிரஸ்ட் மூலமாக நடத்தப்படுகிறது. தங்களுக்கு சொந்தமான நிலத்தில் இந்தக் கல்லூரியைக் கட்டி இருக்கிறாராம் பழனிச்சாமி. இந்தக் கல்லூரியின் நிர்வாகத்தை அமைச்சரின் மகளும், நிர்வாக அறங்காவலருமான வித்யா கோகுல் கவனித்து வருகிறார். ''கருணாநிதிக்கு மிக நெருங்கிய வட்டத்தில் இருந்துகொண்டு, அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி வரும் அமைச்சர்கள் யாரும், நன்றிக்கடனாகக்கூட கருணாநிதியின் பெயரை வைக்கவில்லை. ஆனால், பொங்கலூரார்தான் தலை​வரின் பெயரைச் சூட்டி தன்னுடைய நன்றி உணர்ச்சி​யைக் காட்டி இருக்கிறார்...'' என்று பொங்கலூராரின் கோஷ்டி பெருமை அடித்துக்கொள்கிறது.  


'கனிமொழிக்கு சொந்தமானது இந்தக் கல்லூரி. பொங்கலூர் பழனிச்சாமியின் பெயரை இதற்குப் பயன்படுத்திக்கொண்டார்கள்!’ என்று சொல்பவர்களும் உண்டு. நீலகிரி தொகுதியின் எம்.பி-யாக ஆ.ராசா வந்து உட்கார்ந்த சில காலங்களிலே, இந்தக் கல்லூரி அவரது பெயருக்கு மாற்றப்பட்டுவிட்டது என்ற லெவலுக்குக்கூட லோக்கல் தி.மு.க-வுக்குள் புகைந்தது. ஆனால், பொங்கலூரார் தரப்போ... எல்லாவற்றையும் அடியோடு மறுத்துச் சிரிக்கிறது.


வேளாண் துறை அமைச்சரான வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சொந்தமாக உத்தம சோழபுரத்தில் வி.எஸ்.ஏ. குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன் (இன்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ.) இருக்கிறது. வி.எஸ்.ஏ. என்றால் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் என்று அர்த்தம். அமைச்சரின் மகனான எம்.எல்.ஏ.ராஜா இதன் சேர்மன். இந்தக் கல்லூரியைக் கட்டுவதற்காக அருகில் இருந்த கஞ்ச மலையை சேதம் செய்தார்கள் என்றொரு புகார் எழுந்து அடங்கியது. இந்தக் கல்லூரி தவிர ஆட்டையாம்பட்டியில் பழைய ஸ்கூல் ஒன்றை சில மாதங்களுக்கு முன் விலைக்கு வாங்கி, வி.எஸ்.ஏ. மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் என்ற பெயரில் நடத்தி வருகிறார்கள்.


தி.மு.க-வின் கடலூர் மாவட்டச் செயலாளராகவும் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருக்கிறார் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். அவருடைய சித்தப்பா தெய்வ​சிகாமணி, நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஸ்டோர் கீப்பராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதாவது 2008-ல் காட்டுமன்னார்கோவிலில், சந்திரவதனம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மற்றும் சந்திரவதனம் ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனம் என்ற பெயரில் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அவரே சேர்மனாகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.  

2008-ம் ஆண்டு மேல​பழஞ்சநல்லூர் என்ற இடத்தில் எம்.ஆர்.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரி சுமார் மூன்று ஏக்கரிலும், 2009-ம் ஆண்டு வீராணம் நல்லூர் என்ற இடத்தில் எம்.ஆர்.கே இன்ஜினீயரிங் கல்லூரி ஒன்றை சுமார் 20 ஏக்கரிலும் நடத்தி வருகிறார். இதை பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் நிர்வகித்து வருகிறார். கதிரவன்தான் சேர்மன். நாட்டார்மங்கலம் கிராமத்தில் கல்வி நிறுவனத்துக்காக கட்டடம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். எம்.ஆர்.கே. கல்வி அறக்கட்டளைக்கு பன்னீர்செல்வத்தின் சித்தப்பா தெய்வசிகாமணி சேர்மனாக இருக்கிறார்.



சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் துரைமுருகன், தனது மகன் கதிர்ஆனந்த் பெயரில் கிங்ஸ்டன் கலை மற்றும் பொறியியல் கல்லூரியை நடத்தி வருகிறார். காட்பாடியில் இருந்து சித்தூர் போகும் வழியில் சுமார் 6 கி.மீ தொலைவில், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தக் கல்வி நிறுவனம் நடந்து வருகிறது. இந்தக் கல்லூரிக்கு அருகில்தான் அரசின் வெடி மருந்துத் தொழிற்சாலை நடந்து வருகிறது. இதன் அருகில் எந்தவொரு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தக் கூடாது என்பது அரசு விதி. அதையும் மீறி இந்தக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அதனால், 'அரசு வெடி மருந்துத் தொழிற்சாலையை வேறு இடத்துக்கு மாற்றலாமா...’ என்ற அளவுக்கு ஆலோசனைகள் நடக்கிறது.


விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலா​ளரும், அமைச்சருமான பொன்முடி, சிகா என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி இருக்கிறார். அதன் மூலம், சிகா மேலாண்​மைக் கல்லூரி, மற்றும் சிகா டீச்சர் டிரெயினிங் கல்லூரி ஆகிய​வற்றை கப்பியாம்புலியூர் என்ற இடத்தில் நான்கு ஆண்டு காலமாக நடத்தி வருகிறார். மேலும் விக்கிரவாண்டி அருகே சூர்யா பொறியியல் கல்லூரி ஒன்றையும் மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சூர்யா பொறியியல் கல்லூரி பொன்முடியின் மகன்களான பொன்.கௌதமசிகாமணி, அசோக் சிகாமணி ஆகியோர் பெயரில் நடத்தப்படுகிறது.


முன்னரே சொன்னது மாதிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் எ.வ.வேலுவின் கல்வி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் பொறியியல் கல்லூரி, கம்பன் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி, குமரன் பாலிடெக்னிக், கம்பன் ஐ.டி.ஐ., ஜீவா வேலு உறைவிடப் பள்ளி ஆகியவற்றை வேலு நடத்தி வருகிறார்.

ஆகமொத்தம், தமிழக அமைச்சரையில் நான்கில் ஒரு பங்கு மந்திரிகள் கல்வித் தந்தையராக வளர்ந்திருக்​கிறார்கள்.

''இது பொற்கால ஆட்சி!'' என்று சமீபத்தில் நடந்த ஒரு பரிசளிப்பு விழாவில் எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்னார். அதற்கு பதில் அளித்த கருணாநிதி, ''பொற்காலம் என்பது கலைஞர்களுக்கு, நடிகர்களுக்கு என்று மாத்திரம் இல்லாமல், ஏழை எளியவர்களுக்கு என்றைக்கு நற்காலம் பிறக்கிறதோ, என்றைக்கும் அந்த நற்காலம் நீடிக்கிற நிலைமை ஏற்படுகிறதோ, அதுதான் பொற்காலமாகும்!'' என்று சொன்னார்.

இந்தக் கட்டடங்களை எல்லாம் பார்த்தால் யாருக்குப் பொற்காலம் என்பது சொல்லாமலே புரிகிறது!


நன்றி:விகடன்