Search This Blog

Sunday, April 29, 2012

அருள் மழை ----------- 57


பிடிப்பைத் தந்த பிரான்!

பல வர்ஷங்களுக்கு முன் நடந்த சம்பவம். ஒருநாள் மடத்தில் பெரியவாளை தர்சனம் பண்ண "கியூ"வில் நின்றிருந்தனர் ஒரு வயஸான தம்பதி. அவர்கள் முறை வந்ததும், பெரியவாளை நமஸ்கரித்தனர்.

"பெரியவா...........நான் ஸர்வீஸ்லேர்ந்து ரிடையர் ஆய்ட்டேன்.........கொழந்தைகள்...ன்னு யாரும் கெடையாது. அதுனால, மடத்ல வந்து கைங்கர்யம் பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அனுக்ரகம் பண்ணணும்"

பேச்சில் உருக்கம், பணிவு. பக்கத்தில் வயஸான மனைவி. "வாழ்றதுக்கு ஒனக்கு பிடிப்பு எதுவும் இல்லேன்னுதானே கவலைப்படறே?"

"ஆமா........."

"எதாவுது கார்யம் குடுத்தா பண்ணுவியா?"

"உத்தரவிடுங்கோ பெரியவா! காத்துண்டிருக்கேன்"

அவரை அப்படியே விட்டுவிட்டு அடுத்து வந்த மற்றொரு தம்பதியிடம் குசலப்ரஸ்னம் பண்ண ஆரம்பித்தார். அவர்களும் வயசானவர்கள்தான். கூட அவர்களுடைய பெண்ணும் வந்திருந்தாள்.

"இவ எங்களோட ஒரே பொண்ணு. இவளுக்கு கல்யாணம் பண்ணணும். பெரியவாதான் ஆசீர்வாதம் பண்ணணும்..........."

கையை உயர்த்தி ஆசி கூறினார். பக்கத்தில் நின்று கொண்டிருந்த "பிடிப்பு" மாமா இதை பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது பெரியவா "பிடிப்பு" பக்கம் திரும்பி, "பிடிப்பு வேணும்...னியே! இதோ........இந்த பொண்ணுக்கு நீயே ஜாம்ஜாம்னு ஒன் சொந்த செலவுல கல்யாணம் பண்ணி வை! நீதான் கன்யாதானம் பண்ணணும்"

"செஞ்சுடறேன் செஞ்சுடறேன்" பிடிப்பு கீழே விழுந்து வணங்கினார். பெரியவா அவரைப் பார்த்து ரெண்டு விரலைக் காட்டி, அவர் மனைவியை பார்த்தார். அவருக்கு புரிந்தது........."ஆமா, இவ என் ரெண்டாவது சம்ஸாரம். மூத்தவ காலகதி அடைஞ்சதும் இவளை கல்யாணம் பண்ணிண்டேன்". பெரியவா முகத்தில் இப்போது ஒரு தீவ்ரமான மாறுதல்!

"சரி..........ஒனக்கு மூத்த தாரத்தோட பொண் கொழந்தை இருந்துதே! அது என்னாச்சு?............."

"இடி" தாக்கியது போல் அதிர்ந்தார் "பிடிப்பு". பெரியவாளுக்கு எப்டி தெரியும்?

ரொம்ப கூனிக்குறுகி, "இவ சித்தியா வந்ததும், அந்தக் கொழந்தையை படாதபாடு படுத்தினதால, அந்தக் குழந்தை சின்ன வயஸ்லேயே ஆத்தை விட்டு போய்ட்டா......நானும் தேடாத எடமில்லே! போனவ போனவதான்.............." துக்கத்தால் குரல் அடைத்தது.

"ம்ம்ம்ம் பிடிப்பு வேணும்னு சொன்னியோல்லியோ? இதோ.......ஒன்னோட காணாமப் போன பொண்ணு! இவதான்! போ! அழைச்சுண்டு போய் நல்லபடியா கல்யாணம் பண்ணிவை........." அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஆனால், இன்பமான அதிர்ச்சி!

என்னது? இது சத்யம் சத்யம்! பெண்ணின் கூட வந்த தம்பதிகளும் வாயை பிளந்தார்கள்! உண்மைதான்! பல வர்ஷங்களுக்கு முன் ஏதோ ஒரு ரயில்வே ஸ்டே ஷனில் இந்தக் குழந்தை அழுது கொண்டு நின்றதாகவும், விவரம் எதுவும் சொல்லத் தெரியாததால் அவளை தாங்களே வளர்த்து வருவதாக கூறினார்கள்.
பெற்றோர், வளர்த்தோர் ரெண்டு பேரும் சந்தோஷமாக அந்தப் பெண்ணின் கல்யாண ஏற்பாட்டை பண்ணினார்கள்.
-----------------------------------------------------------------------------------------

இப்போது அதிகமாக எல்லார் வாயிலும் அனுபவம் இல்லாமலே வரும் வாக்யம் "எல்லாமே pre planned " என்பது. மஹான்களின் சந்நிதியில் அது சஹஜமாக, அனுபவத்திலும் வரும். நம் வீடுகளில் கண்ணாடியை எங்கேயோ வைத்துவிட்டு, வீடு முழுக்க தேடியதும், வீட்டார் யாராவது "இதோ இருக்கு" என்று எங்கிருந்தோ கண்ணாடியை எடுத்துக் குடுப்பது போல், சர்வ சாதாரணமாக "cosmic level " ல் விளையாடக்கூடியவா பெரியவா மாதிரி அவதார புருஷர்கள்.

சோலார் பவர்! - கரண்ட் பிரச்னை


சூரியனைப் பார்த்து டைம் சொன்னது அந்தக் காலம்; கரன்ட் கட்டாவதைப் பார்த்து டைம் சொல்வது இந்தக் காலம் - இது சமீபத்தில் எஸ்.எம்.எஸ். மூலம் மொபைல் போனில் பரவிய ஜோக்.

நிமிஷத்திற்கு நிமிஷம் கரன்ட் கட்டாவதால் இன்றைக்குத் தமிழகமே இருளில் சிக்கித் தவிக்கிறது. இருளை விரட்டியடிக்க பல ஆயிரம் ரூபாயை செலவழித்து இன்வெர்ட்டரை வாங்கித் தள்ளுகிறார்கள் மக்கள். ஆனால், அந்த இன்வெர்ட்டர் இயங்கத் தேவையான மின்சாரம் இல்லாமல், பல வீடுகளில் அது வீணாகக் கிடக்கிறது. இந்நிலையில் அண்மைக் காலமாக எல்லோர் கவனமும் சூரியஒளி மின்சாரம் மீது குவிய ஆரம்பித்திருக்கிறது. பலரும் சூரியஒளி மின்சாரத்தை நோக்கி செல்லத் தொடங்கி இருப்பது ஆச்சரியமூட்டும் வளர்ச்சி. சூரியஒளி மின்சார உற்பத்தியில் தமிழக அரசாங்கமும் விரைவில் இறங்கப் போவது ஆரோக்கியமான விஷயம். ''மின் தட்டுப்பாடு அதிகரித்து வரும் இந்நேரத்தில் நமக்கான மின்சாரத்தை நம் வீடுகளிலேயே தயாரித்துக் கொள்ள வாய்ப்பு உருவாகி இருக்கிறது. மின் தட்டுப்பாட்டிற்கான நிரந்தரத் தீர்வாக சோலார் பவர் நிச்சயமாக இருக்கும்''. 

சோலார் பவர் மூலம் நமது அன்றாட மின் தேவைகளை நிறைவு செய்வதற்கான வாய்ப்புகள் உண்டா? 

''சோலார் பவர் மூலம் தொழிற்சாலைகளுக்கான மின் தேவைகளை மட்டுமல்ல, வீடுகளுக்கான மின் தேவை களையும் தீர்க்க முடியும். இதற்கான ஆரம்பச் செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், ஒருமுறை செலவு செய்தால் அது இருபது, இருபத்தைந்து ஆண்டுகள் வரை வரும். சில சின்னச் சின்ன பராமரிப்புச் செலவுகள் தவிர வேறு பெரிய செலவு எதுவும் கிடையாது. வீடு கட்டும்போதே இதற்கான செலவையும் செய்துவிட்டால், ஆயுசு முழுக்க மின் தட்டுப்பாடும் இருக்காது. மின் கட்டணம் கட்ட வேண்டிய அவசியமும் இருக்காது.  நாளன்றுக்கு மூன்று முதல் நான்கு யூனிட்கள் வரை மின்சாரத்தைச் செலவழிக்கிற வீடுகளுக்கு ஒரு கிலோவாட் திறன் கொண்ட ஒரு யூனிட் சோலார் பேனல் போதும். அதைவிட அதிகமாகப் பயன்படுத்தும் வீடுகளில் இரண்டு கிலோவாட் அல்லது அதற்கு மேலும் யூனிட்களை அமைத்துக் கொள்ளலாம். ஐந்து கிலோவாட் வரை யூனிட் அமைத்துக் கொண்டால், மோட்டார்கள், ஏசி, மிக்ஸி, கிரைண்டர் என அனைத்து சாதனங்களையும் இயக்க முடியும்.சூரியஒளி மின்சாரத்தை இரண்டு விதங்களில் பயன்படுத்தலாம். ஒன்று, சோலார் பேனலிலிருந்து நேரடியாக மின்சாரத்தை எடுத்து பயன் படுத்துவது. மற்றொன்று, பேட்டரியில் சேமித்து பயன்படுத்துவது. பகல் நேரங்களில் நேரடியாகவே பயன்படுத்திக்கொண்டு, இரவு நேரங்களில் பேட்டரி மூலம் பயன்படுத்திக் கொள்வது நல்லது. சோலார் பவரை இன்னும் அதிகமானவர்கள் பயன்படுத்தும்போது அதற்கான செலவு கணிசமாக குறைய வாய்ப்புண்டு.

 
இதில் முக்கியமான விஷயம், சூரியஒளி மின்சாரம் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்திற்கு மத்திய அரசின் மரபு சாரா எரிசக்தி துறை மானியம் அளிக்கிறது. வீடுகள், தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள், மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு கிலோவாட் யூனிட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கிறது. அதிகபட்சமாக 200 கிலோவாட் வரை அனுமதிக்கப்படுகிறது. மழைக் காலத்தில் சூரிய வெளிச்சம் இல்லாதபோது எப்படி மின்சாரம் தயாரிப்பது என்கிற சந்தேகம் மக்களிடம் இருக்கிறது. வெயில் அடித்தால் தான் சோலார் கருவி மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்பது தவறு. மைனஸ் 35 டிகிரியிலும் மின்சாரம் பெற முடியும். இந்த பேனல் மீது மழைத் தண்ணீர் விழுந்தாலும் எந்தவித பாதிப்பும் இருக்காது.500 வாட்ஸ் மூலம் இரண்டரை யூனிட் மின்சாரம் பெற முடியும். இதன் மூலம் அத்தியாவசிய வீட்டுத் தேவைகளை எளிதில் சமாளிக்க முடியும். இதற்கு 50,000 ரூபாய் செலவாகும்.மின்சாரப் பிரச்னைக்கு அரசாங்கம் தீர்வு காணும் வரை காத்திருக்காமல் நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே தயார் செய்து கொள்ள பெஸ்ட் வழி, சோலார் பவர்தான்!

-பானுமதி அருணாசலம், நீரை. மகேந்திரன்

அசத்தும் குஜராத்!

ஆசியாவிலே மிக அதிகமான மின்சாரத்தை சூரியஒளி சக்தியின் மூலம் தயாரிக்க சோலார் பார்க் ஒன்றை அமைத்துள்ளது குஜராத். 3,000 ஏக்கர் பரப்பளவில் ஸ்வாத் பாலைவனத்தில் அமைக்கப் பட்டுள்ள இந்த சோலார் பார்க்கிலிருந்து 214 மெகா வாட் மின்சாரம் பெற முடியும். சீனாவில் 200 மெகாவாட் உற்பத்தி செய்யும் திறனை கொண்ட சோலார் பார்க்-தான் உள்ளது.

செலவு மற்றும் பராமரிப்பு!

* ஒரு கிலோவாட் மின்சாரம் தயாரிக்க குறைந்தபட்சமாக 1 லட்சம் முதல் அதிகபட்சமாக சுமார் 3.5 லட்சம் வரை செலவாகும். ஆனால், ஐந்து கிலோவாட் யூனிட் அமைக்க அதிகபட்சமாக 12.5 லட்சத்துக்குள் முடித்துவிடலாம். இதற்கும் அரசு மானியம் உண்டு.  

* ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பேட்டரி மாற்ற வேண்டும். பேனல்களை துடைத்து சுத்தப்படுத்துவது, பேட்டரிக்குரிய டிஸ்டில்டு வாட்டர் மாற்றுவது தவிர வேறு செலவு இல்லை.

மின் சாதனங்களின் மின் பயன்பாடு!

டியூப் லைட்: 20 - 40 வாட்ஸ், சீலிங் ஃபேன்: 75 வாட்ஸ், டேபிள் ஃபேன்: 100 வாட்ஸ், டி.வி: 130 வாட்ஸ், எல்.சி.டி. டி.வி: 210 வாட்ஸ், டி.வி.டி: 20 வாட்ஸ், கம்ப்யூட்டர் சி.பி.யூ: 120 வாட்ஸ், மானிட்டர்: 150 வாட்ஸ், லேப்டாப்: 50 வாட்ஸ், செல்போன் சார்ஜர்: 4 வாட்ஸ், மியூசிக் சிஸ்டம்: 60 வாட்ஸ். சாதாரணமாக வீடுகளில் கரன்ட் மூலம் பயன்படுத்தப்படும் மின் பொருட்கள் எடுத்துக் கொள்ளும் மின் அளவு இது. இதில் நீங்கள் பயன்படுத்துவது எத்தனை வாட்ஸ் என கணக்கிட்டு அதற்கு தகுந்த சோலார் பேனல்களை அமைத்துக் கொள்ளலாம்.

விகடன் 

 

ஐ.பி.எல். ஆடுகளம்


முனாஃப் படேல் எப்போதும் இப்படித்தான். யாராவது அவருடைய பந்தை பவுண்டரிக்கோ, சிக்ஸருக்கோ விரட்டினால் உடனே பேட்ஸ் மேனை ‘ஸ்லெட்ஜ்’ பண்ண ஆரம்பித்துவிடுவார். எந்த பேட்ஸ்மேனும் சிக்ஸர் அடித்த பிறகோ விக்கெட்டைப் பறிகொடுத்தாலோ பௌலரை ஒன்றும் சொல்வதில்லை. ஆனால், முனாஃப் போன்ற பௌலர்கள், பேட்ஸ்மேனை வசைபாடுவதால் நெருக்கடிக்குள்ளாக்கி விக்கெட்டை வீழ்த்தி விடலாம் என்று எண்ணுகிறார்கள். டெக்கானுக்கு எதிரான மேட்சில், அம்பயரிடம் கடும் வாக்குவாதம் செய்ததால் முனாஃப் படேலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சென்ற ஞாயிறு அன்று நடந்த மேட்சில், பேட்ஸ்மேனைக் கண்டபடி திட்டி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார் முனாஃப். ‘நடுவர் முனவைக் கண்டிக்கவேண்டும். கட்டாயம் கடும் விளைவுகள் இருந்தால் தான் இது போன்ற வரம்புமீறல்கள் தடுக்கப்படும்’ என்று டி.வி . கமெண்ட்ரியில் கோபத்துடன் பேசினார் கவாஸ்கர். ஸ்ரீசாந்த் நிலைமை முனாஃப்புக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும். ஐ.பி.எல்.லில் சௌரவ் கங்குலி, ராகுல் திராவிடின் அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து மற்ற அணிகளுக்குக் கடும் சவாலைக் கொடுக்கும் என்று யாருமே நினைத்திருக்கமுடியாது. பீட்டர்சன் விக்கெட்டை வீழ்த்தி கைகளை விரித்துக்கொண்டு குதூகலமாக ஓடிய கங்குலி, ஐ.பி.எல்.லின் முதல் பாதியில் தோனி- சச்சினை விடவும் அதிக சிக்ஸர்கள் அடித்திருக்கும் திராவிட் என இருவருமே இந்த ஐ.பி.எல். லில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். 


ஒவ்வொரு வருட ஐ.பி.எல்.லிலும் ஓர் இந்திய வீரர் தம்மை முன்னிறுத்திக் கொள்வார். முதல் ஐ.பி.எல்.லில் யூசுப்பதான், இரண்டாவது ஐ.பி.எல்.லில் நெஹ்ரா, மூன்றாவது ஐ.பி.எல்.லில் அஸ்வின், நான்காவது ஐ.பி.எல்.லில் ராகுல் சர்மா... என பல வீரர்களுக்கு இந்திய அணிக்குள் நுழைவதற்கான கதவைத் திறந்து வைத்திருக்கிறது ஐ.பி.எல். இந்த வருடம், ரெஹனா. இவர் ஏற்கெனவே இந்திய அணியில் இடம் பிடித்துவிட்டாலும் நிரந்தமான ஓர் இடம் இன்னும் வாக்கவில்லை. இந்த ஐ.பி.எல்.ரெஹனாவின் முழுத் திறமையையும் காண்பித்துவிட்டது. புதிய தலைமுறையின் அடையாளமாக இருக்கிறார் ரெஹனா என்று கிரிக்கெட் நிபுணர்கள் புகழ்கிறார்கள்.இன்றைய மும்பை இண்டியன்ஸ் அணிபோல 2008ல் பீமபலம் கொண்ட அணியாக இருந்த டெக்கான் சார்ஜர்ஸா இது என்று கேட்கும் அளவுக்கு ஐ.பி.எல்.லில் மோசமான ஆட்டத்தை அவ்வணி வெளிப்படுத்தி வருகிறது. முதல் வருட ஐ.பி.எல்.லில், அணியில் இடம்பிடித்த கில்கிரிஸ்ட், ரோஹித் சர்மா, ஆர்.பி. சிங், ஓஜா, பீட்டர்சன், கிப்ஸ், ரைமண்ட்ஸ் போன்ற நட்சத்திர வீரர்களை மற்ற அணிக்குத் தாரை வார்த்துவிட்டு சங்ககரா, டுமினி, ஸ்டீன் என்று ஒரு குறுகிய நட்சத்திரக் கூட்டத்தை நம்பி டெக்கான், களத்தில் இறங்குவது எத்தகையை பரிதாபமான நிலைமை! டெக்கான் நிர்வாகம், ஏலத்தில் என்னதான் செய்துகொண்டிருந்ததோ! மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள், டெக்கான் ரசிகர்கள்தான். அவர்களுக்கு இந்த வருடம் ஐ.பி.எல். கிடையாது. 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தவர், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான டக் பொலிஞ்சர். 2010ல், இவர் சென்னை அணிக்குள் நுழைந்த பிறகுதான் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க ஆரம்பித்தது சி.எஸ்.கே. சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டுமுறை ஐ.பி.எல்.ஐ வென்றதிலும், ஒருமுறை சாம்பியன் லீக்கைக் கைப்பற்றியதிலும் பொலிஞ்சரின் பங்கு மிக அதிகம். ஆனால், 2010ல், ஆஸ்திரேலிய அணி இந்தியாவுடன் இரண்டு டெஸ்டுகள் ஆட இந்தியாவுக்கு வந்திறங்கியபோது, தென்ஆப்பிரிக்காவில் சி.எஸ்.கே. அணிக்காக சாம்பியன் லீக் போட்டியில் விளையாடிக்கொண்டிருந்தார் பொலிஞ்சர். இதனால், டெஸ்ட் போட்டிகளில் போதிய கவனம் செலுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு பொலிஞ்சர்மீது விழுந்தது. இதுவே ஆஸ்திரேலிய அணியிலிருந்து பொலிஞ்சரை மெல்ல மெல்ல விலக்கி வைத்தது. இப்போது, அவர் ஆஸ்திரேலிய அணியின் எந்த ஓர் எதிர்காலத் திட்டத்திலும் இல்லை. இதனால், இந்த ஐ.பி.எல்.லில் தம்மை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் பொலிஞ்சர்.  அவ்வப்போது தோற்றாலும், ஐ.பி.எல்.லில், சி.எஸ்.கே.வுக்கு நிகராக குழு மனப்பான்மை உள்ள அணி எதுவுமில்லை. சென்னை சூப்பர் கிங்ஸில் அதிக ரன்களை எடுத்திருக்கும் டுபிளஸி, ‘ஹஸ்ஸி சூப்பர் கிங்ஸ்க்குத் திரும்பி விட்டால் நான் விலகத் தயாராக இருக்கிறேன்’ என்று சொல்லுமளவுக்குச் செம்மையான குழு ஒன்றை உருவாக்கியிருக்கிறார் தோனி. இதனால் தான், கடந்த நான்கு ஐ.பி.எல்.களிலும் அரையிறுதிக்குச் சென்ற ஒரே அணி என்கிற பெருமை சி.எஸ்.கே.வுக்கு உண்டு.

Saturday, April 28, 2012

ஊழலுக்கு வெள்ளி விழா! - ஓ பக்கங்கள், ஞாநி


சரியாக 25 வருடங்களுக்கு முன்னால் ஏப்ரல் 16 அன்று ஸ்வீடன் வானொலி போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலை அம்பலப்படுத்தியது. இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் என்று வர்ணிக்கப்பட்ட ராஜீவ்காந்தியின் ஆட்சியைத் தூக்கி எறிந்தது போஃபர்ஸ் ஊழல். இந்தியாவில் இந்த ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் ஊழலின் வெள்ளி விழா ஆண்டில் தமக்கு ஊழல் தொடர்பான அத்தனை முக்கிய ஆவணங்களையும் கொடுத்த ரகசிய மனிதர் யார் என்பதை இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.ஸ்வீடன் நாட்டு போலீஸ் துறைத் தலைவரான ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம் தான் சித்ராவுக்கு முக்கியமான 350 ஆவணங்களின் பிரதிகளையும் கொடுத்தவர். 25 வருட காலமாக இதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்தவர், இப்போது பகிரங்கமாகத் தாமே முன்வந்து சித்ரா மூலமாக ஒரு பேட்டியில் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார். ஸ்டென் போன்ற அரசு, காவல்துறை சார்ந்த மனசாட்சியுள்ள அதிகாரிகள் ரகசியமாக தகவல் தருவதன் மூலம்தான் உலகில் பல ஊழல்கள், முறைகேடுகள் அம்பலத்துக்கு வருகின்றன. தகவல் தந்தவர் யார் என்பதை வெளிப்படுத்தாமல் ரகசியமாக வைத்துக் கொள்வது பத்திரிகையாளரின் முக்கியமான அறம். 

எழுபதுகளில் அமெரிக்க அதிபர் நிக்சன் ஆட்சி கவிழக் காரணமாக இருந்தது வாட்டர்கேட் ஊழல். நிக்சன் தன் எதிர்க் கட்சியான ஜனநாயகக் கட்சியின் தேர்தல் அலுவலகம் இருந்த வாட்டர்கேட் ஹோட்டல் அறைகளை ஒட்டுக் கேட்பதற்குக் கருவிகள் பொருத்த ஆட்களை அனுப்பியது தான் வாட்டர்கேட் ஊழல். அவர்கள் அறையை உடைத்து நுழைந்தபோது சிக்கிக் கொண்டார்கள். இவர்கள் வெறும் திருடர்கள் அல்ல, நிக்சனின் உளவாளிகள் என்பதை வாஷிங்டன் போஸ்ட் நிருபர்கள் பாப் உட்வர்ட், கார்ல் பெர்ன்ஸ்டென் தொடர்ந்து பல கட்டுரைகளின் மூலம் அம்பலப்படுத்தினார்கள். கடைசியில் நிக்சன் பதவி விலகவேண்டியதாயிற்று. அவருடைய அதிகாரிகள் பலர் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்.நிருபர் உட்வர்ட் தன் கட்டுரைகளில் இந்த விவகாரம் பற்றிய முழுத் தகவல்களைத் தனக்குக் கொடுத்தவருக்கு ‘டீப் த்ரோட்’ என்று பெயர் சூட்டி எழுதி வந்தார். அடித்தொண்டையிலிருந்து தகவல்களை ரகசியமாகக் கிசுகிசுத்து வந்ததால் இந்தப் பெயர் என்று வைத்துக் கொள்ளலாம். உட்வர்டின் டீப் த்ரோட் அமெரிக்க விசாரணை அமைப்பான எஃப்.பி.ஐ.யின் இணை இயக்குனராக இருந்த வில்லியம் மார்க் ஃபெல்ட். அவரைப் போலவே ஸ்வீடிஷ் காவல்துறையின் உயர் அதிகாரிதான் சித்ரா சுப்ரமணியத்தின் டீப் த்ரோட் ஸ்டென்.ஏன் ஸ்டென் இந்த ஊழலை அம்பலப்படுத்தினார்? ஸ்வீடன் நாட்டில் பொது வாழ்க்கையில் - அரசியலில், வர்த்தகத்தில்- பல உயர்ந்த தரமான அளவுகோல்களை நாங்கள் ஏற்படுத்தி, பல வருடங்களாகின்றன. ஊழல் என்றால் எங்கோ தொலைவில் ஆப்ரிக்கா, ஆசியாவில்தான் நடக்கும் என்ற நினைப்பில் இருந்த எங்களுக்கு ஸ்வீடன் அரசின், அரசியலின் உயர்நிலையிலேயே இப்படி ஊழல் நடப்பது தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்தேன். இதை மூடி மறைக்க எங்கள் நாட்டுத் தலைமை முயற்சித்ததும், எனக்கு இதை எப்படியாவது அம்பலப்படுத்துவதைத் தவிர வேறு நியாயமான வழி எதுவும் இல்லை" என்கிறார் ஸ்டென்.


இந்தியாவிலும் ஊழலை மூடி மறைக்க பெரும்முயற்சி நடந்ததை ஸ்டென் குறிப்பிடுகிறார். ராஜீவ்காந்தி, அருண் நேரு, இத்தாலிய தரகர் கொட்ரோச்சி மூவரின் பெயரும் வெளிவராமல் பார்க்க என்னென்னவோ செய்தார்கள் என்கிறார் ஸ்டென். குறிப்பாக அருண் நேரு பெயர் அம்பலமானாலும் பரவாயில்லை, கொட்ரோச்சி பெயர் வெளியாகக் கூடாது என்று கடுமையாக வேலை செய்தார்கள் என்று சொல்லும் ஸ்டென், ராஜீவ்காந்தி லஞ்சம் வாங்கியதற்கு எந்த சாட்சியமும் இல்லை,ஆனால், கொட்ரோச்சி குற்றவாளி என்பதற்கு பலமான சாட்சியம் உள்ளது என்கிறார். கொட்ரோச்சியைக் காப்பாற்ற ராஜீவ் ஆட்சி கடைசி வரை முயற்சி செய்ததையும் கடைசியில் கொட்ரோச்சி மீது ஒரு குற்றமும் இல்லை என்று இந்திய நீதிமன்றங்களிலேயே சொல்லப்பட்டதையும் ஸ்டென் சுட்டிக் காட்டுகிறார்.போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் ஊழல் நடந்தது எவ்வளவு நிஜமோ அவ்வளவு பொய் அந்த பீரங்கி தரமில்லாதது என்பது என்று ஸ்டென் சொல்கிறார். நல்ல சரக்கு. நல்ல கம்பெனி. வியாபார ஆசையில் ஊழலில் இறங்கிவிட்டதுதான் குற்றம் என்பது ஸ்டென் கருத்து. போஃபர்ஸ் பீரங்கிகள் தரமானவை என்பதை நானும் நேரில் கார்கில் யுத்த களத்தில் பார்த்தேன். அந்தப் போரில் இந்தியா வெல்ல, அவை முக்கிய பங்காற்றின.போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் தொகை அன்று பெரியது. கொட்ரோச்சி சுருட்டியது சுமார் 21 கோடி என்கிறார்கள். மொத்த ஊழல் தொகை 50 கோடி இருக்கலாம். இன்றைய மதிப்பில் அது அதிகபட்சம் 500 கோடி என்றே மிகைப்படுத்தினாலும் கூட, ஸ்பெக்ட்ரம் ஊழலுடன் ஒப்பிட்டால் ரொம்பச் சின்னது.ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழலை விடக் கூடுதலாக போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல், இந்திய அரசியலையும் பலருடைய வாழ்க்கையையும் புரட்டிப் போட்டிருக்கிறது.

ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழலை விடக் கூடுதலாக போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல், இந்திய அரசியலையும் பலருடைய வாழ்க்கையையும் புரட்டிப் போட்டிருக்கிறது.ஒற்றைப் பெரும் கட்சி ஆட்சி நடத்துவது என்ற நிலையில் இருந்த தில்லி அரசியல் இனி கூட்டணி அரசியல்தான், மாநிலக் கட்சிகளுக்கு தில்லியில் பங்கு கொடுத்தால் தான் ஆட்சி நடத்த முடியும் என்ற நிலையைத் தொடங்கி வைத்தது போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரம். அதை எதிர்த்து காங்கிரசிலிருந்து வெளியேறிய வி.பி.சிங், ஜன் மோர்ச்சாவை உருவாக்கி, பின்னர் அதை ஜனதா தளமாக்கினார். தி.மு.க., அசாம் கணபரீஷத் உள்ளிட்ட மாநிலக் கட்சிகளுடன் சேர்ந்து தேசிய முன்னணியைத் தொடங்கினார். அதன் பின்னர் இன்று வரை தில்லி அரசியல், மாநிலக் கட்சிகள் ஆதரவுடனான கூட்டணி அரசியல் பாதையை விட்டு பழைய பாதைக்குப் போகவே முடியாத நிலையை அடைந்துவிட்டது.இன்று போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் பற்றி இடதுசாரிகள் தவிர வேறு எந்தக் கட்சியும் பேச விரும்புவதில்லை. பாரதிய ஜனதா, சோனியாகாந்தியை எரிச்சலூட்டுவதற்காக அவ்வப்போது கொட்ரோச்சி பற்றிப் பேசும். ஆனால் கொட்ரோச்சி, ராஜீவுக்கு நிகராக போஃபர்ஸ் கம்பெனி தலைவர் அர்ட்போவின் டயரியில் குறிப்பிடப்பட்ட அருண் நேருவைப் பற்றி வாயைத் திறக்காது. காரணம் அருண் நேரு வி.பி. சிங்கிடமிருந்தும் விலகி பாரதிய ஜனதாவில் ஐக்கியமானவர். அயோத்தி பாபர் மசூதியில் 1948லிருந்து பூட்டி வைக்கப்பட்டிருந்த பகுதியை ஹிந்துக்கள் வழிபாட்டுக்குத் திறந்துவிடும்படி ராஜீவ் ஆட்சியில் உத்தரவிட்டு, பாபர் மசூதி இடிப்புக்கு வழிவகுத்துக் கொடுத்தவர் அருண் நேருதான்.தி.மு.க.வின் நிலை இன்னும் மோசம். 1975ல் இந்திராவின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி தமிழக ஆட்சியை இழந்த தி.மு.க. அதன்பின் 1989 வரை ஆட்சிக்கு வர முடியவே இல்லை. 1989ல் ஆட்சிக்கு வர உதவியது போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் எதிர்ப்புதான். தெருமுனைகளிலெல்லாம் பீரங்கி பொம்மை வைத்து பிரசாரம் செய்த தி.மு.க.வுக்காக ராஜீவ் ஊழல் எதிர்ப்பு நாயகன் வி.பி.சிங் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். இன்று ஸ்பெக்ட்ரம் ஊழலையடுத்து காங்கிரஸ் அணியை விட்டுவிட்டு வெளியேறவே முடியாமல் அதை ஆரக் கட்டித் தழுவிக் கொண்டிருக்கும் தி.மு.க.வால் நெருக்கடி காலம், போஃபர்ஸ் இரண்டைப் பற்றியும் பேசவே முடிவதில்லை.போஃபர்ஸ் ஊழல் பத்திரிகைத் துறைக்கு பெரும் ஊக்கத்தைக் கொடுத்தது. ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் இரண்டு பத்திரிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு ஊழலை அம்பலப்படுத்தின. உண்மையில் இதற்கான முழு பெருமை பத்திரிகைகளை விட நிருபர் சித்ரா சுப்ரமணியத்துக்கே உரியது. அவர் ஹிந்துவில் இருந்தபோது அது போஃபர்ஸ் பற்றி வெளியிட்டது. கருத்து வேறுபாட்டால் அவர் எக்ஸ்பிரஸுக்குச் சென்றதும் அங்கேயும் அவர் தம் புலனாவைத் தொடர்ந்தார். அவரை இரு ஏடுகளும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டன.


ஸ்வீடனில் இருந்தசித்ரா, போஃபர்ஸ் ஊழலைத் துப்பறிந்தபோது கருவுற்றிருந்தார். சில மாதங்களில் குழந்தை பிறந்தது. உடல் நிலையைப் பொருட்படுத்தாமல் சித்ரா தொடர்ந்து தீவிரமாகப் பணியாற்றினார். அவரையும் குழந்தைகளையும் கடத்தப் போவதாக மிரட்டல்கள் வந்தன. அவருக்கு அன்னிய நிதி உதவி வருவதாகக் காட்ட, அவரது வங்கிக் கணக்கில் அநாம தேயமாக பணம் போடும் முயற்சிகள் நடந்தன. அவர் அதையெல்லாம் முறியடித்தார்.சித்ராவுக்கும் ஹிந்துவுக்கும் இருந்த உறவு முறியக் காரணம் என்ன என்பதை இப்போது ஸ்டென் தெரிவிக்கும் தகவல் சொல்கிறது. முக்கியமான ஆவணங்கள் சிலவற்றை ஸ்டென் கொடுத்தும் கூட, அவற்றை ஹிந்து பல மாதங்கள் வெளியிடாமல் தாமதம் செய்தது. ஸ்டென்தான் லீக் செய்கிறார் என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் பரவியது. இது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியது. சித்ரா, ஹிந்துவை விட்டு எக்ஸ்பிரசுக்கு மாறினார். ஸ்டென் இப்போது சித்ராவுக்கு அளித்திருக்கும் பேட்டியில், ‘சித்ரா மீது இருந்த நம்பிக்கையால்தான் ஆவணங்களைக் கொடுத்ததாகவும்; பத்திரிகை பெயருக்காக அல்ல என்றும்; சித்ரா எந்தப் பத்திரிகையில் இருந்தாலும் கொடுத்திருப்பேன்’ என்றும் சொல்கிறார்.என் வாழ்க்கை திசையை மாற்றியதிலும் போஃபர்ஸ் ஊழலுக்கு ஒரு முக்கியமான பங்கு உள்ளது. கல்லூரி நாட்களுக்குப் பின் 16 வருடங்களாக நேரடி அரசியலில் பங்கேற்காத நான், வி.பி.சிங், ஜன் மோர்ச்சா, தேசிய முன்னணிகளைத் தொடங்கியதும் காங்கிரசுக்கு மாற்று அணி உருவாவதில் அக்கறையுடன் அவரை ஆதரித்து தமிழகத்தில் அவருடைய மேடைப்பேச்சு மொழி பெயர்ப்பாளனாக செயல்பட்டேன். 1988ல் மறைமலை நகரில் ராஜீவ் தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடந்தபோது, நானும் நண்பர் எழுத்தாளர் நாகார் ஜுனனும் அதைக் கிண்டல் செய்து அகில இந்திய போஃபர்ஸ் பீரங்கி ஊழல் ரசிகர் மன்ற மாநாட்டுச் சிறப்பு மலர் என்று ஒன்றை வெளியிட்டோம். அது முரசொலியின் இணைப்பாக வெளிவந்து பின்னர் அதுவே முரசொலியின் ‘புதையல்’ ஞாயிறு மலராயிற்று. ஓராண்டு காலம் அதில் காங்கிரஸ் எதிர்ப்புப் பிரசாரம் செய்தேன். தமிழகத்தில் தி.மு.க.வும் தில்லியில் வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணியும் ஆட்சிக்கு வந்ததும் நான் நேரடி அரசியலிலிருந்து விலகிக் கொண்டேன்.என்னைப் பொறுத்தமட்டில் போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் தொடர்புடையவர்கள் யாரும் தண்டிக்கப்படாமல் போய்விட்டது வருத்தமாக இருந்தாலும், இரு காரணங்களுக்காக அந்த நிகழ்வை முக்கியமானதாக என்றும் கருதுவேன். இந்தியாவில் தில்லி அரசியலில் ஃபெடரலிசம் கொஞ்சமேனும் ஏற்பட அதுவே தூண்டுதலாக இருந்தது முதல் அம்சம். இன்று போல அன்று டெலிவிஷன் சேனல்கள் இல்லை. ஆனால் அச்சு ஊடகங்களான பத்திரிகைகளின் சக்தி எத்தகையது என்பதை சுதந்திர இந்தியாவில் காட்டிய முதல் நிகழ்வு அதுதான். எமர்ஜென்சியில் களங்கத்துக்குள்ளான பத்திரிகைத்துறை அதைத் துடைத்தெறிந்து தன் அசல் வலிமையை கடமையை போஃபர்சில் செய்தது.

இதிலிருந்தெல்லாம் நாம் கற்ற பாடங்கள் என்ன என்பதன் அடையாளங்கள் ஏதேனும் 25 வருடம் கழித்து நிலவும் இன்றைய அரசியல் சூழலில் தெரிகிறதா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

எனது இந்தியா! (பிரிவினையின் பெயரால்... !) - எஸ். ராமகிருஷ்ணன்....


ஒரு குடும்பத்தின் சொத்துக்களை இரண்டாகப் பிரிப்பது என்றாலே, பல பிரச்னைகள் எழும். மனக் கசப்புகள் உருவாகிவிடும். ஒட்டுமொத்த இந்தியா​வை இரண்டாகப் பிரித்து ஒன்றை பாகிஸ்தானாகவும் மற்றதை இந்தியா​வாகவும் துண்டு போட்ட சம்பவம் இந்திய வரலாற்றில் என்றும் மறக்க முடியாத நிகழ்வு.இந்தியாவை இரண்டாகத் துண்டு போட்டவர் யார் தெரியுமா? சிரில் ஜான் ரெட் கிளிஃப் என்ற பிரிட்டிஷ் வழக்​கறிஞர். இந்தியாவைப் பற்றி துளியும் அறிந்​திராத 'ரெட் கிளிஃப்’தான், இந்தி​யாவை இரண்டாகப் பிரித்து எல்லைக் கோடு​களை வகுத்தார் என்பது ஆச்சர்யமாக இருக்​கிறதா? வரலாற்று விசித்திரங்களில் இப்படி எத்தனையோ முரண்கள் உண்டு.1947-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி, பிரிட்டிஷ் வழக்கறிஞரான சிரில் ஜான் ரெட் கிளிஃப், இந்தியாவுக்கு அவசரமாக வந்து சேர்ந்தபோது, எந்த வேலைக்காக தான் அழைக்​கப்பட்டு இருக்​கிறோம் என்பதுகூட அவருக்குத் தெரியாது. அவர் அதற்கு முன் ஒரு முறைகூட இந்தியாவுக்கு வந்தது இல்லை. பிரிட்டிஷ் விசுவாசியான அவர்,  தங்கள் ஆளுகையின் கீழ் இருந்த இந்தியாவின் அரசியல் செயல்பாடுபற்றியோ, இங்கு நடைபெற்று வந்த சுதந்திரப் போராட்டம் பற்றியோ எதுவும் அறியாதவர். இவ்வளவு ஏன், இந்தியாவில் எந்த நதி எந்த மாநிலத்தில் ஓடுகிறது, இந்தியாவில் எத்தனை மாகாணங்கள் இருக்​கின்றன என்பதுகூடத் தெரி​யாது. அவரது ஒரே தகுதி, பிரிட்டிஷ் விசுவாசி என்பது மட்டும்தான்.

இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் பிறந்து ஆக்ஸ்ஃபோர்டில் கல்வி கற்று வழக்கறிஞராகவும், பிரிட்டிஷ் தகவல் துறையின் டைரக்டர் ஜெனரலாகவும் பணியாற்றியவர் ரெட் கிளிஃப்.இந்தியாவின் புதிய வைஸ்ராயாக நியமிக்கப்பட்ட மௌன்ட் பேட்டன், இந்தியாவைப் பிரித்து பாகிஸ்தானை உருவாக்குவது என முடிவு செய்தார். 1947-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி அதற்கான தீர்மானம் முன்மொழியப்​பட்டது. பஞ்சாப் மற்றும் வங்காளம் ஆகிய மாகாணங்களில் இந்தியப் பிரிவினை குறித்து ஆதரவுத் தீர்மானங்​கள் நிறை​வேற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து லாகூரிலும் கல்கத்தாவிலும் கலவரம் ஏற்பட்டுப் பதற்றமான சூழல் நிலவியது.இந்தச் சூழலில், இந்தியாவை இரண்டாகப் பிரித்​தால் மிகப் பெரிய வன்முறை நடக்கும் என்பது மௌன்ட் பேட்​டனுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அதைப்பற்றிக்  கவலைப்படாமல் இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்குவதற்கு முன், ஜின்னாவின் விருப்பப்படி இந்தியாவை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 1947-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி, மௌன்ட் பேட்டன் ஓர் அறிவிப்பு வெளி​யிட்டார். அதன்படி, 'இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை குறித்து, பஞ்சாப் மற்றும் வங்காளத்தில் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்தியாவின் 40 சதவீத நிலப்பகுதி அப்போது மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. அந்தப் பகுதிகளில் பிரிட்டிஷ் அரசு எந்தத் தலையீடும் செய்யாது. அவர்கள், இந்தியா அல்லது பாகிஸ்தான் எதில் சேர வேண்டும் என்று விரும்புகிறார்களோ... அதில் இணைந்துகொள்ளலாம். சிந்துப் பகுதியைப் பொருத்தவரை, அவர்களின் தனித்த முடிவுக்கே அரசு விட்டுவிடுகிறது. இந்தியாவுக்கு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரம் வழங்கப்பட உள்ளது. இந்தியாவையும் பாகிஸ்தானையும் முறையாகப் பிரிப்பதற்கு  ஒரு கமிஷன் அமைக்கப்பட உள்ளது. அந்தக் கமிஷனில், நான்கு நீதிபதிகள் இருப்பார்கள். அதில் இரண்டு பேர் காங்கிரஸ் பிரதிநிதிகள். மற்ற இருவர், முஸ்லிம் லீக் பிரதிநிதிகள்’ என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.அப்போதே, லாகூர் யாருக்கு? கல்கத்தா யாருக்கு? ஓடும் ஆறுகளை எப்படிப் பிரிப்பது? மலைகளையும் வனங்களையும் எப்படித் துண்டு போட முடியும்? எனப் பலத்த வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன. அரசுத் தரப்பில், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதி மற்றும் முஸ்லிம் அல்லாதோர் வாழும் பகுதி என்ற அடிப்படையில்தான் நாடு பிரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்தியாவை இரண்டாகப் பிரிக்க யாரை நியமித்தாலும் பிரச்னையைச் சமாளிக்க முடியாது என்று நினைத்த மௌன்ட் பேட்டன், பிரிட்டனில் இருந்து ரெட் கிளிஃபை வரவழைப்பது என்று முடிவு செய்தார். மௌன்ட் பேட்டனுக்கு முன்னதாக, இந்தியாவைப் பிரிப்பது தொடர்பாக வைஸ்ராய் வேவல் பிரபு ஒரு திட்டத்தை முன்மொழிந்து இருந்தார். அது குளறுபடிகள் நிறைந்ததாக இருந்தது. எனவே, முறையாக ஒரு கமிஷனை நியமித்து இந்தியாவைப் பிரிப்பது என்று முடிவு செய்யப்​பட்டது.


இதற்காக, இரண்டு கமிஷன்கள் நியமிக்கப்பட்டன. ஒன்று, பெங்கால் கமிஷன் எனப்படும் வங்காளத்தின் எல்லைகளை நிர்ணயிக்கும் குழு. மற்றொன்று, பஞ்சாப் கமிஷன் எனப்படும் பஞ்சாப் மாகாணத்தை இரண்டாகப் பிரித்து எல்லைகளை நியமிக்கும் குழு. இந்த இரண்டு கமிஷன்களுக்கும் தலைவராக சிரில் ஜான் ரெட் கிளிஃப் நியமிக்கப்பட்டார். அவருக்கு  மாதச் சம்பளமாக ரூ. 40,000 அறிவிக்கப்பட்டது.அவரோடு மெகர்சந்த் மகாஜன், தேஜாசிங், தீன்முகமது, முகமது முனிர் ஆகிய நான்கு பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். 1947-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி, இந்தியாவுக்கு வந்து சேர்ந்த ரெட் கிளிஃப், இந்தப் பிரிவினையை செய்து முடிக்க எத்தனை நாள் அவகாசம் தரப்படும் என்று கேட்டார்.ஐந்து வாரங்களுக்குள் இந்தியாவை இரண்டாகப் பிரித்து, எல்லைக் கோடுகளை உருவாக்கித் தர வேண்டும் என்று, அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்​பட்டது. அது, மிகவும் குறைவான காலம். இந்தியாவின் நில வரைபடங்கள், மக்கள் தொகை, நீர்ப்பாசன முறைகள் போன்றவற்றை ஆராய்ந்து, அதில் இருந்துதான் எல்லைக் கோட்டை உருவாக்க முடியும். எனவே, அவகாசம் இன்னும் அதிகமாக வேண்டும் என்று கேட்டார்.ஆனால், முடியாது என்று கூறிய பிரிட்டிஷ் அதிகாரிகள், தேவையான அனைத்து விவரங்களையும் அரசே வழங்கி உதவி செய்யும் என்று, நிர்பந்தம் செய்தனர். அதன்படி, 1931-ல் தயாரிக்கப்பட்ட நில வரைபடங்கள் மற்றும் 1941-ல் எடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகியவை கிளிஃபிடம் தரப்பட்டன. பண்டைய இந்தியா தொடங்கி 19-ம் நூற்றாண்டு இந்தியா வரையிலான வரைபடங்கள் அவரது மேஜையில் குவிக்கப்பட்டன. ஆனால், அந்தப் புள்ளி விவரங்கள் முழுமையானவை இல்லை என்று அரசு அதிகாரிகளே கூறினர். மேலும், பதிவேடுகளில் உள்ள விவரங்களுக்கும் வரைபடத்தில் காணப்படும் நிலத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்தது. மிகவும் நெருக்கடியான நிலையில் கண்ணைக் கட்டிக் காட்டில்விட்டது போன்ற குழப்பமான மனநிலையில் தவித்தார் ரெட் கிளிஃப்.ரெட்கிளிஃபைச் சந்தித்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், அதைப்பற்றி தனது கட்டுரை ஒன்றில் மிக விரிவாகக் குறிப்பிட்டு இருக்கிறார். கமிஷன் அறிவிக்கப்பட்டபோது, சிம்லாவில் இருந்தார் ரெட் கிளிஃப். கடும் வெயில் வாட்டி வதைக்கும் ஜூன் மாதத்தில், களப் பணிகளைச் செய்வது மிகச் சிரமம். ஆகவே, ஜூலை மாதத்தில் பணியைத் தொடங்கலாம் என்று, அவர் கூறினார். ஆனால், மௌன்ட் பேட்டனோ ஒரு நாளைக்கூட வீணடிக்கக் கூடாது என்று சொல்லி, அவரை உடனே களப் பணியில் இறங்கச் செய்தார். இது, ரெட் கிளிஃபுக்கு கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது. மேலும், தனது குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களுக்கும் ரெட் கிளிஃபுக்கும் ஆரம்பத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டது.




ஒரு முஸ்லிம் லீக் உறுப்பினர், எப்படியாவது டார்ஜிலிங்கை பாகிஸ்தானோடு இணைத்துவிடுங்கள். ஆண்டுதோறும் அங்கே நான் குடும்பத்தோடு சுற்றுலா போய்க்கொண்டு இருக்கிறேன். அதை இந்தியாவுக்குத் தந்துவிட்டால், அங்கே சுற்றுலா போக சிரமம் ஆகிவிடும் என்ற கோரிக்கையை ரெட் கிளிஃபிடம் வைத்தார். அதைக் கேட்டு எரிச்சல் அடைந்த ரெட் கிளிஃப், அந்த உறுப்பினரோடு சண்டை போட்டார். அவர் உடனே, ரெட் கிளிஃப் இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டைக் கிளப்பினார்.இன்னொரு பக்கம், சட்ட வல்லுனராக இருந்த மெகர்சந்த் மகாஜனோடு, ரெட் கிளிஃப் மிக நெருக்கமாகப் பழகியது மற்ற உறுப்பினர்களுக்குப் பொறாமையை ஏற்படுத்தியது. அதனால், இந்தியாவுக்குச் சாதகமாக லாகூரை பிரித்துக் கொண்டுபோய்விடுவார் மகாஜன் என்ற பொய்ப் பிரசாரம் செய்யத் தொடங்கினர்.இன்னொரு பக்கம், சட்ட வல்லுனராக இருந்த மெகர்சந்த் மகாஜனோடு, ரெட் கிளிஃப் மிக நெருக்கமாகப் பழகியது மற்ற உறுப்பினர்களுக்குப் பொறாமையை ஏற்படுத்தியது. அதனால், இந்தியாவுக்குச் சாதகமாக லாகூரை பிரித்துக் கொண்டுபோய்விடுவார் மகாஜன் என்ற பொய்ப் பிரசாரம் செய்யத் தொடங்கினர்.ஆனால், இதில் நிறையப் பிரச்னைகள் இருந்தன. சீக்கியர்களின் புனித ஸ்தலமான நான்கானா சாகிப் கோவில், மேற்குப் பஞ்சாபில் இருந்தது. அது, முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதி என்றாலும், சீக்கியப் புனித ஸ்தலம் உள்ளதால் அதை இந்தியாவோடு இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

விகடன் 

அருள் மழை ----------- 56

சிவாஸ்தானத்தில் பெரியவா தங்கியிருந்தபோது, காட்டுப்புத்தூரை சேர்ந்த ஒரு பெரிய பணக்காரர் தர்சனம் பண்ண வந்தார். அவர் கொண்டு வந்த காணிக்கை என்ன தெரியுமா?  ரெண்டு ரஸ்தாளி வாழைப்பழத்தார்கள். ஒவ்வொன்றிலும் பத்து,பன்னெண்டு சீப்புகள் இருக்கும். ஒரு தாரையே ரெண்டு பேர் சுமக்க வேண்டியிருந்தது. அத்தனை பெரிய பழங்கள்! சீப்பு...... கனம் என்பதால் மட்டும் இல்லை, பெரியவாளுக்கு சமர்ப்பிக்கும்போது, பழங்கள் நசுங்காமல் இருக்கவே ரெண்டு பேர் தூக்கிக் கொண்டு வந்தனர்.

அன்போடு தன்னைக் காண வந்த பக்தருக்கு பிரசாதம் கொடுத்து அனுப்பிவிட்டு, சிஷ்யரைக் கூப்பிட்டார்.

"டேய்! அந்த ரெண்டு தார்களையும் ஜாக்ரதையா எடுத்து உள்ள வை ! பழத்த பாத்தியோ ! எவ்வளவு மொழு மொழுன்னு இருக்கு!........ஒரு பழம் சாப்ட்டாலே போறும் போலருக்கு. சாப்பாடே தேவையில்லே!....நாலு நாளைக்கு ஒங்களுக்கெல்லாம் கவலையே இல்லே!"

ம்ஹும் ! இது வெறும் சிஷ்யாளோட கல்பனை. ஏனென்றால்  பெரியவா இந்த மாதிரி உத்தரவிடவில்லை..........மாறாக,

"டேய்! இந்தா.......இந்த ரெண்டு தாரையும் கொண்டு போய், வாசல்ல ஒரு பெரிய புளியமரம் இருக்கோல்லியோ?........அதோட கெளைல [கிளை] கைக்கு எட்டறா...ப்ல கட்டி தொங்க விடுங்கோடா !" என்று சொன்னார்.

அந்யாயம்! அக்ரமம்!...பெரியவா இப்பிடி எல்லாம் எங்களுக்கு அநீதி இழைக்கக் கூடாது! நாங்கள் இதை பலமாக கண்டிக்கிறோம்......என்றெல்லாம் வாயால் சொல்லவே முடியாது என்பது மட்டுமில்லை...........மனசால் கூட நினைக்க முடியாது. 

சிவாஸ்தானம்-தேனம்பாக்கம் பகுதியை சேர்ந்த மக்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாடுபவர்கள். பொறுப்பில்லாத ஆண் 'குடி' மக்கள் நன்றாக குடித்து விட்டு, பசியோடு வீட்டுக்கு போய் அங்குள்ள பெண்கள், குழந்தைகளை அடித்து நொறுக்குவார்கள். இது அன்றாடம் வாடிக்கையாக நடப்பது! நம்முடைய கருணைக் கடலுக்கு இது தெரியாதா? ஏழை பங்காளன் இல்லையா?

வாழைத்தார் கட்டின அன்று இரவு அவ்வழியாக குடித்துவிட்டு வீட்டுக்கு போனவர்கள், வாழைதாரிலிருந்து பழத்தை பிய்த்து சாப்பிட்டுவிட்டு போனார்கள். பெரியவா 'ப்ளான்' படி, பசி வெகுவாக அடங்கியதால், வீட்டில் உள்ள பெண்களும், குழந்தைகளும் அடியிலிருந்து தப்பித்தனர். [பெரியவாளுக்கு தெரியாத சூக்ஷ்மமா?]

மறுநாள், நிரந்தர உத்தரவு வந்தது............."மடத்துக்கு வர்றவா குடுக்கற பழத்தையெல்லாம் புளியமரத்ல தொங்க விடுங்கோ !" அதிலிருந்து புளிய மரத்தில் தினமும் வாழைப்பழம் !!

சுமார் பதினைந்து நாட்களுக்குப்பின், அந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர் ஒருவர் வந்தார்........."ஸாமி, இப்போ ரொம்ப ஆளுங்க திருந்திட்டாங்க. 'தண்ணி' போடறதையே நிறுத்திட்டாங்க ஸாமி! குடிசைல பொம்பளைங்க, கொளந்தைங்க எல்லாம்  இப்போ சந்தோஷமா இருக்காங்க ஸாமி!..." வணங்கினார்.

மாற்றத்துக்கு காரணம்............வாழைப்பழமா? இல்லை. ஞானப்பழமாக பூமியில் உதித்த பெரியவாளின் பெரும் கருணை மட்டுமே இது!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்த பெரியவா, பழங்களில் [பழம்+கள்] உள்ள 'கள்ளை' ஒழித்து, பழத்தை மட்டும் தன் குழந்தைகளுக்கு ஊட்டினார்.
Courtesy:Sri.Mayavaram குரு 

Friday, April 27, 2012

'கலப்பட' டீ

நாம் குடிக்கும் ஒவ்வொரு கோப்பைத் தேநீருக்குப் பின்னாலும் முகம் தெரியாத மனிதர்களின் வியர்வையும் கண்ணீரும் ரத்தமும் இருக்கிறது’ - 40 ஆண்டுகளுக்கு முன் பி.எச்.டேனியல் எழுதிய 'எரியும் பனிக்காடு’ புத்தகத்தின் சாரம்சம் இது. தேநீரையும் இந்தியனையும் பிரிக்க முடியாதபடி, காலம் மா(ற்)றிவிட்டது. அடுத்த ஆண்டில், இந்தியாவின் தேசியப் பானமாக அறிவிக்கப்பட இருக்கிறது தேநீர்! தேசியத் திட்டக்குழுத் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, '83 சதவிகித இந்தியர் களின் வீடுகளில் தேநீர் நுகரப்படுகிறது. அதனால், தேநீர் தேசியப் பானமாக அறிவிக்கப்படும்’ என்று சொல்லி இருக்கிறார். அசாம் மாநிலத்தில் முதன் முதலாகத் தேயிலையைப் பயிரிட்டவர் மணிராம் திவான். இவர், சுதந்திரப் போராட்ட வீரரும்கூட. அவரது 212-வது பிறந்த நாள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி வருகிறது. அன்றைய தினம்தான் தேநீரைத் தேசியப் பானமாக அறிவிக்க திட்டமிட்டு உள்ளது மத்திய அரசு.தேசியப் பானம் என்ற அளவுக்குத் தேநீர் கருதப் பட்டாலும், இன்று பெரும்பாலான இந்தியர்கள் பயன்படுத்துவது கலப்படத் தேயிலையைத்தான். அது சரி, தேயிலைத் தூளில் எப்படிக் கலப்படம் செய்கிறார்கள்?

இலவம் பிஞ்சு: இலவம்பஞ்சுக் காயைப் பறித்து, காயவைத்து அரைத்து தேயிலைத் தூளுடன் கலந்து விடுகிறார்கள். இதில் தயாரிக்கப்படும் தேநீர் அடர்த்தியாக, படு ஸ்ட்ராங்காக இருக்கும். பால் எவ்வளவு தண்ணீராக இருந்தாலும் தேநீர் 'திக்’ காகவே இருக்குமாம்!

முந்திரிக் கொட்டை: முந்திரிக் கொட்டை பழமாகும் முன்னர் கடித்தால் வாய் புண்ணாகி விடும். அந்தக் கொட்டையின் தோலைக் காய வைத்து பொடியாக்கி, தேயிலைத் தூளுடன் கலக்கிறார்கள். நிறத்தைக் கூட்டுவதற்காக இதனுடன் சோடியம் கார்பனேட் ரசாயனத்தைச் சேர்க்கிறார்கள். சலவை சோப்புடன் சேர்க்கப்படும் ஆபத்தான ரசாயனம் இது!

மஞ்சனத்தி இலை - குதிரை சாணம்: மஞ்சனத்தி இலையைக் காய வைத்து அரைத்து, காய்ந்த குதிரைச் சாணத்துடன் கலந்து தேயிலையுடன் கலப்படம் செய்தால், மினுமினுக்கும் கலப்படத் தேயிலைத் தூள் ரெடி!

புளியங்கொட்டை: புளியங் கொட்​டையை லேசாக வறுத்து, ரொம்பவும் மிருதுவாக அரைக்காமல் தேயிலைத் தூள் பதத்தில் அரைத்து, தண்ணீர் சேர்த்துக் காய வைத்து (அப்போதுதான் துவர்ப்பு தெரியாமல் இருக்குமாம்) தேயிலைத் தூளுடன் கலந்து விடுகிறார்கள்!

மரத்தூள், தேங்காய் நார்: மலிவாக அல்லது இலவசமாக சில இடங்களில் கிடைக்கும் மரத் தூள்தான் கலப்படக்காரர்களின் முதல் சாய்ஸ். மரத் தூளுடன் சாயப்பட்டறைகளில் பயன்படுத்தும் ரசாயனத்தைச் சேர்த்து தேயிலைத் தூளுடன் கலக் கிறார்கள். இதுதவிர, டீக்கடைகளில் பயன்படுத்தி குப்பையில் போடும் தேயிலைத் தூளைச் சேகரித்தும் கலப்படத் தூளைத் தயாரிக்கிறார்கள்.

ஓரிஜினல் தேயிலைத் தூளின் விலை ஒரு கிலோ 270 முதல் 310 வரை விற்கப்படுகிறது. ஆனால், கலப்படத் தேயிலைத்தூள் கிலோ 60-க்கே கிடைக்கிறது. பெரும்பாலான ரோட்டோர டீக் கடைகளில் நாம் அருந்துவது கலப்படத் தேநீர்தான். இதை அருந்தினால் சில ஆண்டுகளில் தோல் ஒவ்வாமை, செரிமானக் கோளாறு, அல்சர், மூட்டு வலி, கிட்னி பாதிப்பு, புற்று நோய் போன்றவை ஏற்பட நிறையவே வாய்ப்பு இருக்கிறது.

எப்படிக் கண்டுபிடிப்பது? கண்ணாடி டம்ளரில் குளிர்ந்த நீரை ஊற்றி தேயிலைத் தூளை ஒரு சிட்டிகை விடுங்கள். உடனடியாகப் பொன் நிறமாக தண்ணீர் மாறினால் அது கலப்படத் தூள்!

எது ஒரிஜினல்? தேயிலைச் செடியின் நுனியில் இருக்கும் மென்மையான இரட்டை இலை, அதன் நடுவில் இருக்கும் ஒரு மொட்டு, இவற்றை ஒட்டிக் கீழே இருக்கும் லேசாக முற்றிய இலை ஒன்று... இதைப் பறித்து சுமார் எட்டு மணி நேரம் மிஷினில் வாட்டி, ரோலரில் அரைத்தால் அதுதான் ஒரிஜினல் தேயிலைத் தூள். இதைக் குளிர்ந்த நீரில் கொட்டினால், நீரின் நிறம் மாற 10 நிமிடங்களுக்கும் மேல் ஆகும்.

உணவுப் பொருளில் கலப்படம் செய்து விற்றால், ஆயுள் தண்டனை வழங்கலாம் என்கிறது சட்டம். தேசியப் பானம் ஆன பிறகாவது, தேயிலைக் கலப்​படத்தைத் தடுக்குமா அரசு?

விகடன் 

எனது இந்தியா! ('தமிழ்நாடு’ தியாகி!) - எஸ். ராமகிருஷ்ணன்....


கைதிகள் மோசமாக நடத்தப்படுவதை எதிர்த்து, 1933-ம் ஆண்டு மே 12-ம் தேதி, கைதிகள் உண்ணா​விரதப் போராட்டத்தைத் தொடங்கினர். அதை ஒடுக்குவதற்காக, முரட்டுக் கைதிகள் மூலம் உண்ணாவிரதம் இருப்பவர்களின் வாயில் வலுக்கட்டாயமாக உணவைத் திணிக்க முயன்றனர் சிறை அதிகாரிகள். இந்த வன்செயலில் மகாபீர் சிங், மொகித் மித்ரா மோகன், கிஷோர் நாம்தாஸ் ஆகிய மூவரும் பரிதாபமாக இறந்தனர். அதன் பிறகு, கைதிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட்டன. இதுபோலவே, 1937-ல் இரண்டாவது முறையாக, மாபெரும் உண்ணாவிரதம் அந்தமான் சிறையில் நடத்தப்பட்டது. இதை ஆதரித்து தாகூர், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் நேரு ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். 36 நாட்கள் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் முடிவில் அரசியல் கைதிகள் அங்கே இருந்து விடுவிக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.சுதந்திரப் போராட்டக் காலத்தில் நடந்த உண்ணாவிரதங்களின் நோக்கம் ஒரு விதம் என்றால், சுதந்திரத்துக்குப் பிறகு நடந்த உண்ணாவிரதங்களின் நோக்கம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தன.

1952-ம் ஆண்டு, சென்னையை ஆந்திராவின் தலைநகராக அறிவிக்கக் கோரி, பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் தொடங்கினார். காந்தியவாதியான பொட்டி ஸ்ரீராமுலு, சென்னையில் பிறந்தவர். தனது 20 வயது வரை சென்னையில் படித்த இவர், பிறகு மும்பையில் உள்ள விக்டோரியா ஜுபிலி டெக்னிகல் இன்ஸ்டிடியூட்டில் படித்தார். படிப்பு முடித்த பிறகு, கிரேட் இந்தியன் பெனிசுலார் ரயில்வேயில் வேலைக்குச் சேர்ந்தார். நான்கு ஆண்டு காலம் அங்கு பணியாற்றிய ஸ்ரீராமுலு, தனது 26-வது வயதில் மனைவியை இழந்தார். அதில் மனம் வெறுத்துப்போய் வேலையை உதறிவிட்டு, காந்தி நடத்தி வந்த சபர்மதி ஆசிரமத்தில் சேர்ந்தார். காந்திய வழியில் சுதந்திரப் போரில் தீவிரமாகப் பங்கு கொண்டு உப்பு சத்யாக்கிரகத்திலும், தனிநபர் சத்யாக்கிரகத்திலும் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார். 1946 முதல் 48 வரையிலான காலகட்டத்தில், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்குள் ஹரிஜனங்​களை அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, மூன்று முறை பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து இருக்கிறார்.அப்போதைய சென்னை மாகாணத்தில் தமிழ்​நாட்டு​டன் கர்நாடகா, கேரளாவின் ஒரு பகுதி, ஆந்திராவின் முக்கியப் பகுதிகள் இருந்தன. சென்னை மாகாணத்தில் வசிக்கும் தெலுங்கு பேசும் மக்களின் நலன்களைக் காப்பதற்காகவும், தெலுங்கு மக்களின் உரிமைகளை அரசாங்கம் கேட்க வேண்டும் என்றும், தனி ஆந்திர மாநிலத்தைப் பிரிக்க  வேண்டும் என்றும் பொட்டி ஸ்ரீராமுலு வலியுறுத்தினார். தனது கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார்.1952-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி சென்னை மகரிஷி புலுசு சாம்பமூர்த்தியின் இல்லத்தில் உண்ணாவிரதம் தொடங்கப்பட்டது. இதில் முக்கிய அம்சம் சென்னை மாநகரம் புதிதாக அமைய உள்ள ஆந்திராவின் தலைநகரமாக அமைய வேண்டும் என்பதே. சென்னை இல்லாத ஆந்திர மாநிலம் என்பது தலையில்லாத முண்டம் என்று அறிவித்தார் ஸ்ரீராமுலு.


ஆனால், மத்திய அரசு அவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. 1952-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி நள்ளிரவு பொட்டி ஸ்ரீராமுலு இறந்து போனார். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட அவரது இறுதி ஊர்வலம், மவுன்ட் ரோட்டை அடைந்தபோது, கலவரம் ஏற்பட்டது. பொதுச் சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. விஜயநகரம், தெனாலி, ஓங்கோல் விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமகேந்திரபுரம், எல்லூரு, குண்டூர், நெல்லூர் ஆகிய இடங்களுக்கும் கலவரம் பரவியது.அனகாப்பள்ளி என்ற ஊரிலும், விஜயவாடாவிலும் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் இறந்தனர். இந்தக் கலவரம் ஐந்து நாட்களுக்கு நீடித்தது. 1952-ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி, பிரதமர் நேரு சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா எனும் புதிய மாநிலம் பிரிக்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்துதான், கலவரங்கள் அடங்கின. 1953-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி கர்நூலைத் தலைநகராகக்கொண்டு ஆந்திர மாநிலம்  உருவானது. எனினும், ஹைதராபாத் சமஸ்தானத்துக்கு உட்பட்ட தெலுங்கானா பகுதிகள் 1956-ம் ஆண்டு வரை ஹைதராபாத் உடனேயே இருந்து வந்தது. 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி, தெலுங்கானா பகுதிகள் ஆந்திரத்துடன் சேர்க்கப்பட்டு ஆந்திரப் பிரதேசம் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசத்துக்கு ஹைதராபாத் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.இந்தத் தியாகத்தின் காரணமாக, பொட்டி ஸ்ரீராமுலுவை 'அமரஜீவி’ என்று, தெலுங்கு மக்கள் அழைக்கத் தொடங்கினர். ஆந்திர மாநிலம் உருவாக ஒரு பொட்டி ஸ்ரீராமுலு காரணமாக இருந்தது போல, மதராஸ் ராஜதானிக்கு 'தமிழ்நாடு’ என்று பெயர் வைக்க வேண்டும் என்று கோரி, விருதுநகரில் சங்கரலிங்க நாடார் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து கோரிக்கை நிறைவேறாமலேயே இறந்துபோனார். அவரது உயிர்த் தியாகம் தமிழ் மக்களால் நினைவுகொள்ளப்படாமல் இன்றும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்பதுதான் தாங்கிக்கொள்ள முடியாத துயரம்.தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் கொண்டுவரும்​போது ஏற்பட்ட நெருக்கடிகள் பற்றி, தமிழ் அறிஞர் மலர்​மன்னன் தனது கட்டுரை ஒன்றில் மிக விளக்கமாகத் தெரிவித்து இருக்கிறார். மதராஸ் ராஜதானி எனப்படும் மெட்ராஸ் ஸ்டேட்டுக்கு 'தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரும் தனிநபர் தீர்மானத்தை மாநிலங்கள் அவையில் கொண்டுவந்தவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பூபேஷ் குப்தா. இவர், மேற்கு வங்கத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர். இந்தத் தீர்மானம் 1963-ல் கொண்டுவரப்பட்டது. பூபேஷ் குப்தா அவையில் வைத்த தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய அண்ணா, 'கம்யூனிஸ்ட்டான எனது நண்பர் பூபேஷ் குப்தாவுடன் நான் எப்போதும் ஒத்துப்போவது இல்லை. ஆனால் இன்று, அவரை முழு மனதுடன் வரவேற்று ஆதரிக்கிறேன். இது, நான் கொண்டுவந்திருக்க வேண்டிய தீர்மானம். என்னை முந்திக்கொண்டு அவர் கொண்டுவந்துவிட்டதில்தான் எனக்கு ஆட்சேபம்’ என்று அண்ணா பேசியபோது அவையில் சிரிப்பலை எழுந்தது.

மெட்ராஸ் மாநிலத்துக்குத் 'தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற தீர்மானம் 1961-லேயே மதராஸ் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அதன் காரணமாக, அன்று காமராஜர் தலைமையில் இயங்கிய அரசு, அரசின் முக்கிய ஆவணங்கள் தமிழில் அளிக்கப்படும்போது 'தமிழ்நாடு அரசாங்கம்’ என்று குறிப்பிடப்படும் என்றும், ஆங்கில மொழியில் பயன்படுத்தும்போது 'மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரே தொடர்ந்து கையாளப்படும் என்றும் இரட்டை நிலையை அறிவித்தது.அதுவே தொடர்ந்து நடைமுறையிலும் இருந்தது. இந்த நிலையில்தான், சங்கரலிங்க நாடார் 'தமிழ்நாடு’ என்ற பெயர் சூட்டக் கோரி விருதுநகரில் உண்ணா​விரதம் தொடங்கினார்.'இப்படியான பெயர் மாற்றங்களால் ஒரு பயனும் இல்லை. மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிடுகிற சமாசாரம் இது’ என்று, காமராஜர் கூறினார். தொடர் உண்ணாவிரதம் காரணமாக உடல் நலிந்து சங்கர​லிங்க நாடார் பரிதாபமாக இறந்துபோனார். அதை, அன்றைய காங்கிரஸ்காரர்கள் கேலி செய்து எழுதினார்கள்.இது மட்டுமின்றி, தமிழ்நாட்டுக்கு பெயர் மாற்றம் கொண்டுவரும் தீர்மானம் ராஜ்ய சபாவில் கொண்டுவரப்பட்டபோது, ஒரு தமிழ் உறுப்பினர் எழுந்து, தமிழ்நாடு என்று பெயரை மாற்றுவதால் என்ன ஆதாயம் என்று கோபத்துடன் கேட்டு இருக்​கிறார்.''பாராளுமன்றத்தை ஏன் லோக்சபா என்கிறோம். அதில் நமக்கு என்ன ஆதாயம் கிடைத்து​விட்டது. பிரசிடென்டை, ராஷ்டிரபதி என்று அழைக்கிறோமே... அதில் என்ன ஆதாயம் கிடைத்து இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு, தமிழ்நாடு என்று பெயர் வைப்பது அதன் அடையாளத்தை குறிக்கும் செயல். பெயர் மாற்றத்தின் மூலம் உணர்வுபூர்வமான மனநிறைவு கிட்டும் என்பதுதான் உண்மையான ஆதாயம். ஒரு தொன்மையான பெயர் மீட்டு எடுக்கப்பட்டு, மக்கள் மனதில் பதியவைக்கப்படுவதுதான் ஆதாயம். பெயர் மாற்றம் என்ற ஒரு சிறிய சிரமத்தை மேற்கொள்வதற்கு இவ்வளவு சரியீடு போதாதா?'' என்று, பதில் அளித்த அண்ணா, தமிழ்நாட்டுக்கு 'சென்னை மாநிலம்’ என்ற பெயர்தான் இருக்கும் என்றால், கேரளத்துக்கு திருவனந்தபுரம், ஆந்திரத்துக்கு ஹைதராபாத், குஜராத்துக்கு ஆமதாபாத் என்றெல்லாம் பெயர் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும் என்று சொன்னபோதும், அவையில் பலத்த சிரிப்பலை ஏற்பட்டது. இறுதியில் அந்தத் தீர்மானத்தை காங்கிரஸ் உறுப்பினர்கள் தோற்​கடித்தார்கள்.சென்னை மாகானத்துக்கு 1967-ம் ஆண்டு அண்ணா முதல்அமைச்சர் ஆன பிறகே, ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலுமே ’தமிழ்நாடு’ என்ற பெயர் சூட்டப்பட்டது. ஆனால், தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் காரணமாக இருந்த சங்கரலிங்க நாடாரின் உயிர்த் தியாகம் இன்றுவரை முறையாக கௌரவிக்கப்படவே இல்லை.


சமகால இந்திய வரலாற்றில் தனது தொடர் உண்ணாவிரதம் மூலம் மகத்தான போராளியாக திகழ்கிறார் ஐரோம் ஷர்மிளா. கடந்த 10 ஆண்டு​களாக இவர், மணிப்பூரில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்திய ராணுவம், மணிப்பூரில் நடத்திய கொடுமைகளை எதிர்த்து அவர் போராடுகிறார். ஆனால், மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம், ஊழலுக்கு எதிராக அண்ணா ஹஜாரே  எழுச்சிமிக்க உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார். அதற்குப் பெரும் திரளான இளைஞர்கள் ஆதரவு தருகிறார்கள்.இன்று, உண்ணாவிரதம் என்பது வெறும் கவன ஈர்ப்பு நடவடிக்கையாக மட்டும் அல்ல... அதன் பின்னால், அரசியலும் ஒளிந்து இருக்கிறது. இந்தியா எதை தனது அற உணர்வின் வடிவமாக கைக்கொண்டதோ அதை இன்று எளிய தந்திரம் ஆக்கி​விட்டோம் என்பதுதான் வருந்தத்தக்க உண்மை.  

விகடன்

Wednesday, April 25, 2012

பட்ஜெட் டூர் !

கோடை விடுமுறை வந்து விட்டாலே... 'என்ன... ஊட்டி, கொடைக்கானல் கிளம்பலயா?' என்கிற விசாரிப்புகள்தான் முன்னே வந்து நிற்கும். ஆனால், சீஸன் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் அந்த இடங்களுக்கெல்லாம் சென்றால், 'சென்றோம்... வந்தோம்' என்று பேர் பண்ணுவதுதான் உண்மையாக இருக்கும். உண்மையிலேயே சுற்றுலாவில் மனம் நிறைய வேண்டும், அதேசமயம் பர்ஸுக்கும் பங்கம் வராதிருக்க வேண்டுமா?! இதோ... இந்த லிஸ்ட்டில் உங்களுக்கு விருப்பமானதை 'டிக்’ செய்யுங்கள்!பெரியவர், சிறியவர் தலா இருவர் கொண்ட குடும்பத்துக்கு இரு நாள் சுற்றுலாவாக குறைந்தது இரண்டாயிரம், அதிகபட்சம் நான்காயிரம் என்பதான வரையறைக்குள் அடங்கும் இந்த பட்ஜெட் சுற்றுலாவை, இந்த வருட ஸ்பெஷல் ஆக்குங்கள். பட்ஜெட் பணத்துக்கு மட்டுமே... சந்தோஷத்துக்கு அல்ல!

கலகல ஏலகிரி!  

மத்திய வர்க்கத்தினரின் ஊட்டி... ஏலகிரி. வேலூரிலிருந்து திருப்பத்தூர் சாலையில் பொன்னேரி வந்தால்... அங்கிருந்து 15 கி.மீ. மலைப்பாதையில் ஏலகிரி காத்திருக்கும். ரயில் மார்க்கம் எனில்... ஜோலார்பேட்டை வந்து அங்கிருந்து பஸ் பிடிக்கலாம். நடுவில் நீரூற்று, ஓரத்தில் சிறுவர் பூங்காவுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட பூங்கானூர் ஏரி, அதை ஒட்டி அமைந்திருக்கும் அரசு மூலிகைப் பண்ணை மற்றும் பழப்பண்ணை, வேலவன் கோயில், தொலைநோக்கி இல்லம், மூலிகை மணக்கும் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி... இவற்றோடு ஏலகிரியிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் இருக்கும் காவலூரில் இந்தியாவின் மிகப்பெரும் தொலை நோக்கியை குழந்தைகளுடன் காண மறக்காதீர்கள். சாகசப்பிரியர்களுக்கான பாரா கிளைடிங், பைக்கிங், ட்ரெக்கிங் போன்ற விளையாட்டுகள்... உள்ளூர் விளையாட்டு கழகத்தினரால் நடத்தப் படுகிறது.

அரசு வழங்கும் யாத்ரா நிவாஸ் தங்குமிட வாடகை ரூ.250-ல் துவங்குகிறது. குழுவாக செல்பவர்கள் தங்குவதற்கும் சிறப்பு வசதிகள் உண்டு. சொந்த வாகனம் இருந்தால்... கூடுதல் சௌகரியம்.

ஜில் ஜில்... ஏற்காடு! 

சேலத்தில் இருந்து 36 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. ஏராளமான கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து, மலையை அடையலாம். நடுவில் நீரூற்றுடன், அமைந்த ஏரிதான் ஏற்காட்டின் மையக் கவர்ச்சி. கண்கவர் பூங்காவில் ஜப்பான் தோட்டக்கலைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். மே மாதம் இங்கே நடக்கும் மலர் கண்காட்சி, ஹைலைட். தவிர தொலைநோக்கியுடன் கூடிய 'லேடீஸ் ஸீட்’, தொலை நோக்கி இல்லாமலேயே ரசிக்க வைக்கும் 'பலோடா பாயின்ட்’, கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, திகிலூட்டும் கரடி குகை, பக்தி மணம் கமழும் சேர்வராயன் மற்றும் ராஜேஸ்வரி அம்மன் கோயில்கள் என்று குடும்பத்தினர் அனைவரும் திருப்திபடலாம்!

கொல்லி ஃபால்ஸ்! 

பத்து வருடங்கள் முன்பு வரை மர்மம், அமானுஷ்யம், சித்தர்கள் என்றே வெளியுலகுக்கு அடையாளம் காட்டப்பட்ட கொல்லிமலை... இன்று வெகுஜனங்களை ஈர்க்கும் அள  வுக்கு மாறியிருக்கிறது. இதற்குக் காரணம், அதன் தூய்மை    மற்றும் கையைக் கடிக்காத செலவுகள்தான். 'எகோ டூரிசம்’ எனப்படும் சுற்றுச்சூழலுக்கான சிறப்பு சுற்றுலாத் தலமாக மாநில அரசு கொல்லிமலையை அங்கீகரித்துள்ளது. நாமக்கல்லில் இருந்து கொல்லிமலைக்கு தனிப்பேருந்து அல்லது வாடகை வாகனங்கள் கிடைக்கும். 26 கி.மீ. தூர மலைப்பாதை பயணத்      தில், கொல்லிமலை உங்களை வர வேற்கிறது.  600 அடி உயரத்திலிருந்து கொட்டும் 'ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி', அண்ணன் என்று வைத்துக் கொண்டால்... 'கொல்லி ஃபால்ஸ்' அதன் தம்பி மாதிரி. வாசலூர் பட்டி படகுத் துறையில் போட்டிங் போகலாம். சீக்குப்பாறை மற்றும் சேலூர் நாடு ஆகிய இடங்களில் அருமையான வியூ பாயின்ட்டுகள் உண்டு. கொல்லிப்பாவை, அரப்பளீஸ்வரர், சமணர் கோயில்கள் என ஆன்மிக வெரைட்டியும் விரிந் திருக்கிறது.கையைக் கடிக்காத வகையில்... மகளிர் சுய உதவிக்குழுக்களின் ஹோட்டல்கள் இருக்கின்றன. தனி வாகனம் இருந்தால்... நல்லது.

டாப்ஸ்லிப், வால்பாறை! 

சுற்றுலாவை காட்டு விலங்குகள், பறவைகள் என மறக்க முடியாத நினைவுகளால் நிறைக்க வேண்டுமா? ஒரு நடை பொள்ளாச்சி பக்கம் வாருங்கள்! பொள்ளாச்சியில் தங்கிக்கொண்டு அருகில் இருக்கும் ஆனைமலை சரணா லயம் (37 கி.மீ.), டாப்ஸ்லிப் (30 கி.மீ.),  வால்பாறை (64 கி.மீ.) போன்ற குளுமை தவழும் கானுயிர் மையங்களை தரிசிக்கலாம்.ஆனைமலை சரணாலயத்தில் புலி, சிறுத்தை, யானை, முள்ளம்பன்றி மற்றும் பெயர் தெரியா பறவையினங்களை அருகிலேயே பார்க்கலாம். காட்டெருமைகள், விதவிதமான மான்கள் மற்றும் யானைகள் டாப்ஸ்லிப்பின் ஸ்பெஷல்.மரகதப் பச்சை போல விரிந்திருக்கும் தேயிலைத் தோட்டங்கள், வால்பாறையின் ஸ்பெஷல். அருகிலிருக்கும் ஆழியாறு அணை, மங்கி ஃபால்ஸ், நல்லமுடி பூஞ்சோலை, நம்பர் பாறை போன்ற ஸ்பாட்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

பிச்சாவரம் த்ரில் போட்டிங்! 

உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநிலக் காடுகளை உள்ளடக்கியது, பிச்சாவரம். சிதம்பரத்திலிருந்து 16 கி.மீ. தூரத்தில் இருக்கும் இந்த ஸ்பாட்டுக்கு பேருந்து வசதிகள் உண்டு. சுனாமியையே எதிர்த்து நிற்கும் சுரபுன்னைக் காடுகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் படகு சவாரி... பிச்சாவரத்தின் தனிச்சிறப்பு. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பராமரிக்கும் விடுதியில் முன்பதிவின் பேரில் தங்கும் வசதி உண்டு.

குருசடை - ராமேஸ்வரம்! 

ராமேஸ்வரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் இருக்கும் குருசடைத்தீவு பிராந்தியம், கடல் வாழ் உயிரினங்களுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதி. கடல் வாழ் உயிரினங்களின் அதிசயம் மற்றும் வண்ணமயமான பவளப்பாறைகளின் அழகையும் கண்டு ரசிக்கலாம். மீன் வளத்துறை யின் முன் அனுமதி பெற்றே இங்கே செல்ல முடியும். தீவில் உணவு வசதி ஏதும் கிடையாது.1,212 தூண்கள் நிரம்பிய மண்டபம்... ராமேஸ்வரம் கோயிலில் இருக்கிறது. நாட்டின் மிக நீளமான பாலமான பாம்பன் பாலம், கப்பலுக்கு வழி விட்டு இரண்டாகப் பிரிவது... அவசியம் காண வேண்டிய காட்சி. இங்கிருந்து 18 கி.மீ. தூரத்தில், கடற்கோளால் அழிந்த தனுஷ்கோடியின் மிச்சங்களைப் பார்க்கலாம்.

தேக்கடி யானை சவாரி! 

தமிழகம்-கேரளத்துக்கு இடையே நீண்டகால பிரச்னையாக இருக்கும் முல்லை-பெரியாறு அணையின் நீர்பரப்புதான் இந்த தேக்கடி!  இதன் ஸ்பெஷலே... படகுப் பயணம்தான். அதை அடுத்து பூங்கா உலா மற்றும் காட்டுக்குள் யானை மீதான சவாரி போன்றவையும் உண்டு. குமுளி ஷாப்பிங்கில் இயற்கை வாசனை திரவியங்கள் கிடைக்கும். இரு மாநில மக்களால் வணங்கப்படும் மங்கலதேவி (கண்ணகி) கோயில்... தேக்கடியிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது.

எஸ்.கே.நிலா       

Tuesday, April 24, 2012

இது நியாயமா சச்சின்?


பி.சி.சி.ஐ.யின் தலைவர் ஸ்ரீனிவாசன்; தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த். இதனால் சென்னைக்கு அதிக லாபங்கள் என்றுதான் எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை நிலவரம் என்ன? கடைசியாக, 2008 டிசம்பரில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் மேட்ச் சென்னையில் நடந்தது. அதோடு அவ்வளவுதான். இன்று வரை சென்னையில் ஒரு டெஸ்ட் மேட்ச்கூட நடக்கவில்லை. பாரம்பரிய கிரிக்கெட் நகரமான சென்னைக்கு இப்படியொரு புறக்கணிப்பு! அடுத்த வருடம் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது. நான்கு டெஸ்ட் மேட்சுகள் ஆடவிருக்கிறது. அதிலொன்று, அதிசயமாக சேப்பாக்கத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி அல்லது மார்ச்சில் டெஸ்ட்மேட்ச் நடைபெறும். (இந்த ஆகஸ்ட்டில், நியூசிலாந்துக்கு எதிராக ஒரு டி20 மேட்சும் சென்னையில் நடக்கவுள்ளது.) சென்னையில் எப்போது டெஸ்ட் மேட்ச் நடந்தாலும் அது ஏதாவதொரு விதத்தில் வரலாற்றில் இடம்பிடிக்கும். அந்த வரலாற்று அனுபவத்தைப் பெற இன்னும் ஒரு வருடம் காத்திருங்கள்.

இந்திய கிரிக்கெட் வீரர்களில் இப்போது அதிக விளம்பர நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு, அதிகமாக சம்பாதிப்பவர் தோனி. அடுத்த இடத்தில் சச்சின். சச்சினுக்கு விளம்பரங்களால் வருடத்துக்கு 40 கோடி ரூபாய் கிடைக்கிறது. ஒரு விளம்பரத்தில் நடிக்க ஐந்தரை கோடி ரூபா சம்பளம். சச்சின், 100வது செஞ்சுரியை அடித்தபிறகு புதிய விளம்பர நிறுவனங்கள் எதுவும் சச்சினை அணுகவில்லை. இதனால் சச்சினின் மௌசு குறைந்துவிட்டதா? தொடர்ந்து பலரும் ஓய்வு பெறச் சொல்வதால் சச்சின் விரைவில் ஓய்வு பெற்றுவிடுவாரா என்று பயப்படுபவர்களுக்கு ஒரு தகவல்.‘எனக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது தான் ஓய்வு பெறுவேன்’ என்று சமீபத்தில் அறிவித்திருக்கிறார் சச்சின். நல்லவேளை, சச்சின் ஆஸ்திரேலியாவில் பிறக்கவில்லை. இரண்டு ஒருநாள் உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த ரிக்கி பாண்டிங்கை அந்நாடு சி.பி. முத்தரப்புப் போட்டியின் பாதியிலேயே தூக்கியது. திறமையை விடவும் பங்களிப்புக்கே ஆஸ்திரேலியாவில் மதிப்பு அதிகம். ஆனால், இந்தியாவில் சச்சினுக்கு அந்தளவுக்கு நெருக்கடியில்லை. சச்சினின் ஓய்வை விளம்பரங்கள் முடிவு செய்வதாக இருந்தால் சச்சின் 2014 ல்தான் ஓய்வு பெறுவார் என்கிறார்கள் விமர்சகர்கள். இப்போது டெண்டுல்கர் வசமுள்ள 17 விளம்பர நிறுவனங்களுடனான ஒப்பந்தம் 2014 வரை நீடிக்கிறது. இதனால்தான் டெண்டுல்கர் தம் ஓய்வு அறிவிப்பைத் தாமதப்படுத்தி வருகிறார் என்றொரு பேச்சு அடிபடுகிறது. எனவே, 2014வரை சச்சின் ஆட்டத்தை ரசிப்பதில் ஆபத்து எதுவும் நிகழாது என்று நம்பலாம்.  

சச்சின், உங்களுடைய 100 சதங்கள் சாதனை யாரால் முறியடிக்கப்படும் என்று நினைக்கிறீர்கள் என்கிற கேள்வி சச்சினிடம் கேட்கப்பட்டது. அதற்கு சச்சின் அளித்த பதில் - ‘என் சாதனையை விராட்கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் முறியடிக்க வாய்ப்புள்ளது. இந்தியர்களால் எனது சாதனை முறியடிக்கப்பட்டால் நான் கவலைப்பட மாட்டேன்.’ - கோலியின் பெயரை சச்சின் சொன்னதில் ஆச்சர்யமில்லை. இதுவரை 12 சர்வதேச செஞ்சுரிகள் அடித்திருக்கிறார் கோலி. ஆனால், ரோஹித் சர்மாவின் சாதனை என்ன? அவரின் பெயரை முன்வைக்க ஏதாவது அடிப்படைக் காரணங்கள் உண்டா என்றால் இல்லை என்றுதான் சொல்லமுடியும். இதுவரை 80 ஒருநாள் ஆட்டங்கள் ஆடி 2 செஞ்சுரிகள் மட்டுமே அடித்திருக்கிறார் ரோஹித். இவர் எப்படி சச்சினின் சாதனையைத் தாண்டப் போகிறார்? ஊர் பாசத்தில் (ரோஹித்தும் மும்பைக்காரர்தான்) சச்சின் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்பதைத் தவிர அதில் வேறொரு நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.

Monday, April 23, 2012

எம்.ஆர்.ராதாவுக்கு என் அஞ்சலி! - ஒ பக்கங்கள், ஞாநி


நான் பிறந்த 1954ஆம் வருடத்தில் பிறப்பிக்கப்பட்ட ஒரு சட்டத்தை நீக்கக் கோரி இந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் ஒரு வழக்கு தொடுத்திருக்கிறேன். நாடகங்களை அரசு முன்தணிக்கை செய்த பின்னர் தான் நடத்த முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கும் சட்டம் இது.சுமார் 32 வருடங்களாகவே பலமுறை இந்தச் சட்டத்தை விமர்சித்து எழுதியும் பேசியும் வந்திருக்கிறேன். நாடகத் துறையில் இருக்கும் பல நண்பர்களுடன் இதை எதிர்த்து வழக்கு தொடுப்பது பற்றிப் பேசியதுண்டு. இப்போதுதான் முடிந்திருக்கிறது. சென்னையில் நாடகம் போடுவதற்கு ஏற்ற பல அரங்கங்கள் உள்ளன. மியூசியம் தியேட்டர், மியூசிக் அகாதமி, நாரத கான சபா, கிருஷ்ண கான சபா, ஆர்.ஆர்.சபா, மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ், வாணி மஹால், தட்சிணாமூர்த்தி ஹால், ஆர்.கே. சுவாமி அரங்கு, ராணி சீதை அரங்கு, சிவகாமி பெத்தாச்சி அரங்கு என்று வகை வகையாக உள்ளன. ஆனால், இவை எதில் நாடகம் நடத்த அரங்கை வாடகைக்கு எடுப்பதாயிருந்தாலும், அரங்கின் நிர்வாகி முதலில் கேட்கும் கேள்வி போலீஸ் அனுமதி வாங்கிவிட்டீர்களா, லைசன்ஸ் நம்பர் என்ன என்பதுதான்.டிராமாடிக் பர்ஃபார்மன்சஸ் ஆக்ஸ்ட் 1954ன் படி இந்த லைசன்ஸ் தரப்படுவதாகக் கருதப்படுகிறது. லைசன்சுக்கு விண்ணப்பிக்க, நாடகம் நடத்தப்போகும் நாளுக்கு 21 நாட்கள் முன்பாக முழு நாடகத்தின் இரண்டு பிரதிகளை சென்னை நகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அதற்குரிய கட்டணத்துடன் தரவேண்டும். நாடகத்தை காவல்துறையின் ஓர் ஆய்வாளரோ, துணை ஆய்வாளரோ படித்துப் பார்த்து அதில் ஆட்சேபகரமான எதுவும் இல்லை என்று ஒவ்வொரு பக்கத்திலும் சீல் அடித்துக் கையெழுத்திட்டுக் கொடுத்தால்தான் நாடகத்தை அரங்கில் நடத்த முடியும்.

சென்னைக்கு வெளியே மாவட்டங்களில் இந்த அதிகாரம் கலெக்டருடையது. சென்னையில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் இதர ஊர்களில் கலெக்டர் அலுவலக குமாஸ்தாவும்தான் நாடகத்தைப் படித்துப் பார்த்து மதிப்பிடும் கலையறிவுக்குச் சொந்தக்காரர்கள்.  

இதில் விசித்திரம் என்னவென்றால் சட்டத்தின் எந்த இடத்திலும் முன்கூட்டியே நாடகப் பிரதியைக் கேட்டு வாங்கி தணிக்கை செய்ய வேண்டுமென்று சொல்லப்படவே இல்லை. ஒரு நாடகம் ஆட்சேபத்துக்குரியது என்று போலீஸ் கமிஷனருக்கோ கலெக்டருக்கோ தெரியவந்தால், அப்போது அதன் பிரதியைக் கேட்டுப் பெற்று ஆய்வு செயலாமென்றுதான் சட்டத்தில் இருக்கிறது. முன்தணிக்கை செய்யும்படி சொல்லவில்லை. ஆனால் நடைமுறையில் எல்லா நாடகங்களுக்கும் முன் தணிக்கை செய்து முன் அனுமதி, லைசன்ஸ் எண் பெறவில்லையென்றால் அரங்க நிர்வாகிகள் அனுமதிக்கமாட்டார்கள்.

போலீஸ் சொல்லும் வெட்டுகளை ஏற்றுக் கொண்டால்தான் லைசன்ஸ் கிடைக்கும். மறைந்த நாடகாசிரியரும் என் நண்பருமான கோமல் சுவாமிநாதனின் புகழ் பெற்ற நாடகமான ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகத்தில் பல இடங்கள் வெட்டப்பட்டன. அப்போது நான் எங்கள் பரீக்ஷா குழுவை நடத்த ஆரம்பித்து சுமார் மூன்று வருடங்கள் ஆகியிருந்தன. தணிக்கைச் சட்டத்தை எதிர்த்து வழக்கு போடும்படி கோமலை நான் கேட்டுக்கொண்டேன். சில நடைமுறை சிக்கல்களினால் அவரால் அதைச் செய்யமுடியாமல் போயிற்று. ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகத்துக்கு சுமார் 30 சபாக்களில் தேதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. லைசன்ஸ் பிரச்னையில் வழக்கு போட்டால், அந்தத் தேதிகள் எல்லாம் ரத்தாகி மாற்றப்பட வேண்டிவரும்.எனவே கோமல் போலீசார் தெரிவித்த வெட்டுகளை அவர்களுடன் விவாதித்து சில வெட்டுகளை ஏற்றுக்கொண்டு லைசன்ஸ் பெற்றார். அப்போது திருப்பத்தூர், வாணியம்பாடி பகுதிகளில் போலீசார் நக்சல் பாரி வேட்டைகளில் ஈடுபட்டிருந்தனர். நாடகத்தில் திருப்பத்தூர் பெயர், அதனருகே ஒரு கிராமம் என்றிருந்ததை மாற்றச் சொன்னார்கள். அப்படித்தான் அது தென்மாவட்ட கிராமமாக நாடகத்தில் மாறியது.அதே சமயம் எங்கள் பரீக்ஷா குழு என் ‘பலூன்’ நாடகத்தை நடத்த இருந்தது. அதற்கும் பல வெட்டுகள் விழலாம் என்று எதிர்பார்த்து நாடக தினத்தன்றே புத்தகத்தை வெளியிட ஏற்பாடு செய்திருந்தோம் (இன்னும் இந்தியாவில் புத்தகங்களுக்கு முன்தணிக்கை வரவில்லை).‘பலூன்’ நாடகத்துக்கு தணிக்கைப் பிரச்னைகள் வரவில்லை. ஆனால் நாடகம் முடிந்ததும் நாடகத்துக்கு வந்திருந்த காவல்துறை உளவுப் பிரிவின் அறிக்கை அடிப்படையில் நாடக அரங்கின் நிர்வாகி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து விசாரிக்கப்பட்டார். அதையடுத்து எங்கள் அடுத்த நாடகம் ‘கமலா’வுக்குச் சிக்கல் தரப்பட்டது. மராத்தி நாடகாசிரியர் விஜய் டெண்டுல்கர் எழுதியதன் தமிழ் வடிவம் கமலா. ராணி சீதை அரங்கினை நாடகத்துக்கு வாடகைக்கு எடுத்திருந்தோம். லைசன்ஸ் வராமல் நாடகம் நடத்த அனுமதிக்கமாட்டேன் என்று அரங்க நிர்வாகி சொல்லியிருந்தார். 21 நாட்கள் முன்பு விண்ணப்பித்திருந்தும் லைசன்ஸ் வரவில்லை. முன்தினம் கேட்டபோது நாடக தினத்தன்று காலை வரச்சொன்னார்கள். காலையில் சென்றபோது மதியம் வரச் சொன்னார்கள். மாலை 6.45க்கு நாடகம் தொடங்கவேண்டும். 
 
நான் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்று டி.சி.யைச் சந்தித்துக் கேட்டேன். எங்கள் நாடகப் பிரதியை எடுத்து வைத்துக் கொண்டு, நீங்கள்தானே ‘முட்டை’ நாடகம் போட்டது, நீங்கள்தானே ‘பலூன்’ நாடகம் போட்டது... இதில் நிறைய வெட்டவேண்டியிருக்கிறது," என்று ஆரம்பித்தார். அதிலெல்லாம் வெட்டவில்லையே," என்றேன். படிக்காமலே லைசன்ஸ் குடுத்துட்டாங்க," என்று சிரித்தார். இதை 21 நாள் முன்பே கொடுத்துவிட்டோமே, ஏன் முன்பே படித்து எங்களிடம் சொல்லவில்லை," என்று கேட்டேன். வேற வேலை இருக்கு இல்ல, மெதுவாத்தான் படிப்போம்," என்றார். இப்போது கமலாவில் பத்துப் பதினைந்து வெட்டுகளைச் சொன்னார். எல்லாம் சாதாரண வரிகள். வாதிட்டு அவற்றை மூன்றாகக் குறைத்தேன். அப்போது மாலை மணி 6.45. பின் நாளை காலை வந்து ரப்பர் ஸ்டாம்ப் சீல் போட்டு லைசன்ஸ் வாங்கிக்கொண்டு போங்கள். குமாஸ்தா வீட்டுக்குப் போய்விட்டார்," என்றார் அந்தக் காவல் அதிகாரி. இன்று நாடகம் நடத்த வேண்டுமே," என்றேன். அதைப் பற்றி தமக்குக் கவலையில்லை," என்றார். எனக்குப் பெரும் கோபம் வந்தது. ஸ்க்ரிப்ட்டை அவர் மேசை மீதே வீசிவிட்டு, இப்போதே சீல் போட்டுத் தருவது உங்கள் பொறுப்பு. இல்லாவிட்டாலும் நாடகம் நடக்கும்," என்று கடுமையாகச் சொன்னேன். அவரே வந்து சீல் எடுத்துப் போட்டுக் கொடுத்தார், நாங்கள் நாடகம் தொடங்கும் போது அன்று இரவு எட்டு மணி. பார்வையாளர்கள் 400 பேரும் காத்திருந்தார்கள். தாமதம் ஏன் என்று அவர்களுக்கு விளக்கிச் சொல்லிவிட்டு நாடகம் நடத்தினோம். இது போன்ற அனுபவங்கள் என் நண்பர்கள் சிலருக்கும் உண்டு.இவையெல்லாம் நாடக நடிகனாக இருந்து சினிமாவுக்குப் போய் முதலமைச்சரான எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடந்தவை.நம் நாடகத்தை முன் தணிக்கைக்கு உட்படுத்துவது என்பதே எங்களுக்குப் பிடிக்காத நிலையில் சென்னையில் எந்த முக்கிய நாடக அரங்கிலும் எங்களால் நாடகம் நடத்த முடியவில்லை. மாக்ஸ் முல்லர் பவன், பிரிட்டிஷ் கவுன்சில், அலையன்ஸ் பிரான்சேஸ் முதலிய ஜெர்மன், பிரிட்டிஷ், பிரெஞ்ச் நாட்டு கலாசார நிலையங்களின் அரங்கில் தான் லைசன்ஸ் பெறாமல் நாடகம் நடத்த முடியும். ஏனென்றால் அவை அன்னிய அரசுகளின் இடங்கள் என்பதால், நம் நாட்டு சட்டங்களிலிருந்து அவற்றுக்கு விலக்கு (டிப்ளமேட்டிக் இம்யூனிட்டி) உண்டு. எனவே, கடந்த சில வருடங்களாகவே அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் நாடகம் நடத்தி வந்திருக்கிறோம்.
 
சபாக்களில் எங்களை நாடகம் நடத்த அழைத்தாலும் இந்த முன்தணிக்கை லைசன்ஸ் முறைக்கு நாங்கள் உடன்பட விரும்பாததால் எந்த முக்கிய அரங்கிலும் நாடகம் போட முடிவதில்லை.இந்த நாடகத்துக்கான முன் தணிக்கைச் சட்டம் 1954ல் (காமராஜரின்) காங்கிரஸ் ஆட்சியால் கொண்டு வரப்பட்டதன் அசல் நோக்கம் அப்போது அந்த ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய எம்.ஆர்.ராதாவை ஒடுக்குவதுதான். ராதாவின் நாடகங்கள் மூட நம்பிக்கைகளை மட்டுமன்றி சமகால அரசியலை நையாண்டி செய்யும் விதத்திலும் இருந்தன.முன் தணிக்கையும் லைசன்ஸ் வாங்கும் முறையும் வந்ததும் ராதா அதைப் பல விதங்களில் சமாளித்தார். லைசன்ஸ் வாங்கி வைத்திருக்கும் நாடகத்தின் பெயரிலேயே வேறு நாடகத்தை நடத்தினார். உளவு பார்க்க வரும் போலீஸ் சி.ஐ.டி.கள் குறிப்பெடுக்க வசதியாக உட்கார விரும்பிய முன் வரிசை டிக்கட் விலையைப் பல மடங்கு உயர்த்தி அரசிடம் அபராதம் வசூலித்தார். இப்போதைய என் வழக்கு எம்.ஆர். ராதாவின் நூற்றாண்டில் அவருக்கு என் அஞ்சலி.காங்கிரஸ் ஆட்சி, சோவின் ‘சம்பவாமி யுகே யுகே’வுக்கு அனுமதி மறுத்தது. அவர் அதை எதிர்த்து வழக்குதொடுக்க முற்பட்ட போது, அட்வகேட் ஜெனரலின் ஆலோசனைப்படி தடையை நீக்கியது. திராவிட இயக்கமான தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நியாயப்படி நாடக நிகழ்ச்சிகள் சட்டத்தை ரத்து செய்திருக்க வேண்டும். செய்யவில்லை. சோவின் ‘துக்ளக்’ நாடகத்துக்கும் இன்னும் பல நாடகங்களுக்கும் எதிராகத் தொல்லை கொடுத்தது.இந்தச் சட்டம் சுதந்திர இந்தியாவின் கண்டுபிடிப்பு அல்ல. இது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்க எடுத்த பல நடவடிக்கைகளில் ஒன்று. பத்திரிகைகளை ஒடுக்குவதற்கான சட்டமும் நாடகத் தணிக்கைச் சட்டமும் அடுத்தடுத்து போடப்பட்டவை. இந்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியே இதைத் தமிழ்நாட்டில் புதுப்பித்தது. இதனால் பாதிக்கப்பட்ட திராவிட இயக்கமே இதை நீக்காமல் இன்னும் தொடர்கிறது. காரணம் அதிகாரத்துக்கு வந்ததும் தங்களுக்கு எதிராக எந்தக் கருத்தும் உருவாகி விடக்கூடாது என்ற பயம்தான்.இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் இந்தச் சட்டம் இப்போது இல்லை.
 
மக்கள் முன்னால் நேரடியாக நிகழ்த்தக் கூடிய கலைகள் பல. தெருக்கூத்து, பரதநாட்டியம், கர்நாடக இசைக் கச்சேரி முதல் மெல்லிசைக் கச்சேரிகள் வரை. இவற்றில் நாடகமும் ஒன்று. ஆனால், முன்தணிக்கை பாரபட்சமாக நாடகத்துக்கு மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சேபத்துக்குரியது என்று ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் ஒரு கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தாவும் கருதக் கூடியவை நாடகத்தில் மட்டும்தான் இருக்கமுடியுமா என்ன? கச்சேரிக்கு நடுவே அரசுக்குப் பிடிக்காத ஒரு சாகித்யத்தைப் பாட முடியாதா என்ன? நடன அபிநயத்தில் ஆபாசமாக என்னவெல்லாம் சாத்தியம் உண்டு என்பது சினிமா பார்க்கும் எல்லாருக்கும் தெரியுமே? மேடையில் இவற்றுக்கெல்லாம் முன் தணிக்கை லைசன்ஸ் விதிகள் இல்லாத போது ஏன் நாடகம் மட்டும் நசுக்கப்படுகிறது?உலகெங்கும் வீதி நாடகம் என்பது முன் கூட்டி எழுதிய அல்லது எழுதாத நாடகப் பிரதியைக் கொண்டு நடத்தப்படுவதாகும். பெரும்பாலும் அவை எழுதப்பட்டதில்லை. நடிகர்கள் கூடிப் பேசி அப்படியே மனோ தர்மப்படி நடத்தும் படைப்பாற்றல் உடையவை வீதி நாடகங்கள். அவ்வாறு நாங்கள் ‘வீதி’ என்ற இயக்கத்தை உருவாக்கி பல தெருநாடகங்களை 1978-79களில் சென்னை மெரீனா கடற்கரையில் நடத்தியிருக்கிறோம். இன்று அவ்வாறு எந்தக் கடற்கரையிலும் பூங்காவிலும் தெரு நாடகம் நடத்த இயலாது. போலீஸ் அனுமதிப்பதில்லை. கருணாநிதி ஆட்சியில் எல்லா பூங்காக்களும் சங்கமத்துக்காகத் திறந்து விடப்பட்டன. ஆனால் தெருநாடகம் நடத்துவோருக்கு அனுமதியில்லை.அண்மையில் 2000மாவது ஆண்டில் நாதுராம் கோட்சே நாடக வாசிப்புக்கு விதித்த தடையை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அளித்த தீர்ப்பில் - அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு உயிர் வாழ்வதற்கான உரிமையை மட்டும் அளிக்கவில்லை. அப்படி வாழ்வது என்பது உடலளவில் ஜீவித்திருப்பது மட்டுமாகாது. அர்த்தமுள்ள பூரண மகிழ்ச்சியுடனான வாழ்க்கைக்கே சட்டம் உறுதியளிக்கிறது. அதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் இந்தப் பிரிவு காப்பாற்றவேண்டும். கலை, இலக்கியச் செயல்பாடுகள் எல்லாம் அதற்கு உட்பட்டவை. தகவலறியும் உரிமையும் கருத்துச் சுதந்திரமும், மாறுபட்ட கருத்துகளைச் சொல்லவும் கேட்கவும் இருக்கும் உரிமையும் எல்லாமே இதே பிரிவினால் உறுதி செய்யப்பட்டுள்ளன. இவற்றைத் தடுத்தால் ஒரு படைப்பாளியின் படைப்பு சாரமிழந்து சக்கையாகிவிடும்" என்று கூறி தடையை ரத்து செய்தார். 
 
கருத்துச் சுதந்திரத்துக்கும் சிவில் அரசியல் உரிமைகளுக்கும் அரசியல் சட்டம் கொடுத்திருக்கும் உரிமைகளான பிரிவுகள் 14, 19 முதலியவற்றுக்கெல்லாம் விரோதமான நாடக நிகழ்ச்சிகள் சட்டத்தை ரத்து செய்யவேண்டுமென்று கோரி இப்போது வழக்கு தொடுத்திருக்கிறேன். முப்பதாண்டு காலக்கனவு இந்த முறை நனவாகும் என்று நம்புகிறேன்.

Sunday, April 22, 2012

எனது இந்தியா! ( உண்ணாவிரத அரசியல் ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

ரசியல் காரணங்களுக்காக உண்ணா​விரதம் இருப்பது வேறு எந்த நாட்டை​விடவும் இந்தியாவில்தான் அதிகம். வெள்ளைக்​காரர்களுக்கு எதிராக காந்தி தொடங்கிய உண்ணாவிரதம் முதல், ராணுவ ஒடுக்குமுறைகளுக்கு எதிராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக மணிப்பூரில் உண்ணாவிரதம் இருக்கும் ஐரோம் ஷர்மிளா வரை எத்தனையோ வலிமையான உண்ணா​விரதங்களை இந்தியா பார்த்து இருக்கிறது.உண்ணாவிரதத்தை கவனஈர்ப்புப் போராட்ட முறையாக மாற்றியதற்குப் பின்னால், சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது. ஐரீஷ்காரர்கள்தான் உண்ணா​விரதத்தை வலிமையான எதிர்ப்பு அடையாளமாக மாற்றியவர்கள். அயர்லாந்தில் ஒரு மனிதனுக்கு ஏதாவது அநியாயம் நடந்துவிட்டது என்றால், அதற்குக் காரணமானவரின் வீட்டுக்கு முன் உண்ணா​விரதம் இருப்பது தொன்று தொட்டு நிலவும் பழக்கம். அப்படி உண்ணாவிரதம் இருந்​தால், கட்டாயம் நீதி கிடைத்துவிடும். காரணம், ஐரீஷ்காரர்கள் மனசாட்சிக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர்கள். இது, அயர்லாந்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு போராட்ட முறை.பௌத்தம், சமணம், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் என சகல மதங்களிலும் உண்ணா​நோன்பு என்பது, துறவிகளுக்கான நெறியாகவும், இல்லறத்தோர் குறிப்பிட்ட சில தினங்களில் குறிப்பிட்ட காரணம் கருதி பின்பற்ற வேண்டிய சடங்​காகவும் இருக்கிறது.இது தவிர, 'சல்லேகனம்’ இருந்து உயிர் துறக்க முயலும் சமணத் துறவிகள், திட உணவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தவிர்த்து, திரவ உணவைக் குடித்து வாழ்ந்து, பிறகு அதையும் துறந்து காற்றைப் புசித்து உடல் மெலிந்து இறந்துபோவார்கள். இப்படி, அறிந்தே உணவை விலக்குவது உயர்ந்த நெறியாகவே இந்திய மரபில் இருந்து இருக்கிறது.

யுவான் சுவாங் இந்தியாவை நோக்கி நடந்து வந்தபோது, கோச்சாங் என்ற நகரை அடைந்தார். அங்கே ஆட்சி செய்த மன்னர் குவென்சி, யுவான் சுவாங்கை வரவேற்று தன்னோடு தங்கவைத்து ராஜ உபசாரம் செய்து இருக்கிறார். இருவரும் பல நாட்கள் கூடிப் பேசி, பல துறைகள் சார்ந்தும் விவாதித்து இருக்கிறார்கள். முடிவில் ஒரு நாள், யுவான் சுவாங் தனது பயணத்தைத் தொடர்வதற்காகக் கிளம்பியபோது, மன்னர் அனுமதிக்க மறுத்து தன்னோடு தங்கி இருந்தே ஆக வேண்டும் எனக் கட்டளை இட்டார். அதை யுவான் சுவாங் மறுக்கவே, அவரைக் கடுமையாகத் தண்டிக்கப்​போவதாக மன்னர் மிரட்டினார். மன்னருக்கு எதிராக யுவான் சுவாங் உண்ணாவிரதம் இருந்தார். நாலாவது நாளில் மயங்கி விழுந்தார். யுவான் சுவாங்கின் பிடிவாதத்தைக் கண்ட மன்னர், அவரது பயணத்துக்கு அனுமதி வழங்கினார். இது நடந்தது 629-ம் ஆண்டு. இதையே அதிகாரப்​பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட முதல் உண்ணா​விரதம் என்று, சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.அதிகாரத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பதை முதன்முதலாக தொடங்கியது ரஷ்யாதான். சைபீரியாவில் உள்ள சிறைச்சாலையில் பெண் கைதிகள் மிகவும் கொடுமைப்படுத்தப்படுவதை எதிர்த்து 1888-ம் ஆண்டு கைதிகள் உண்ணாவிரதம் தொடங்கினர். அந்த உண்ணாவிரதத்தை அரசு கண்டுகொள்ளவே இல்லை. உண்ணாவிரதம் இருந்த ஆறு கைதிகள் இறந்துபோனதால் போராட்டம் வலிமை அடைந்தது. அதைத் தொடர்ந்து, கைதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி சிறை அதிகாரியை இடமாற்றம் செய்ததோடு, அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தது. அமெரிக்​காவைப் பொறுத்த வரை, 'பெக்கி எடல்சோன்’ என்ற பெண்தான் அரசியல் காரணங்களுக்காக உண்ணாவிரதம் இருந்த முதல் போராளி. அவர், தனது கருத்து உரிமையை அரசு பறிப்பதாகச் சொல்லி அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். இங்கிலாந்திலும் முதல் உண்ணாவிரதம் இருந்தவர் ஓர் பெண் கைதியே!

இந்தியாவில் உண்ணாவிரதத்தைப் போராட்ட முறையாக்கி வெற்றி பெற்றவர் பகத்சிங். தன்னுடைய சிறை வாழ்வில் 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இருக்கிறார் பகத்சிங். சிறையில் தங்களை அரசியல் கைதிகளாக நடத்த வேண்டும் என உரிமை கோரியும், கைதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அவருக்கு முன்னோடியாக, சிறைச்சாலைக் கொடுமையை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர் பகத்சிங்கின் தோழர் ஜதீந்திரநாத் தாஸ். கல்கத்தாவைச் சேர்ந்த இவர், தனது கல்லூரிக் காலங்களில் ஆங்கிலேய அரசை எதிர்த்து சிறை சென்றார். சிறை அதிகாரி, கைதிகளை மோசமாக நடத்துவதைக் கண்டித்து 20 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அதைத் தொடர்ந்து, சிறை அதிகாரி மன்னிப்பு கேட்டார். இதை அடுத்தே, உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார். பின்னர், லாகூர் சதி வழக்கில் ஜதீந்திரநாத் தாஸ் கைது செய்யப்பட்டு லாகூர் சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்பட்டு, பகத்சிங்கோடு அடைக்கப்பட்டார். அந்தச் சிறைச்சாலையின் நிர்வாகம் மிகவும் மோசமாக இருந்தது. கைதிகளுக்குத் தரப்பட்ட உணவில் கரப்பான்பூச்சிகள் செத்துக்கிடந்தன. குடிநீரில் புழுக்கள் நெளிந்தன. வாசிப்பதற்கு புத்தகங்களும் பத்திரிகைகளும் தர மறுத்தனர். ஆகவே, சிறை அதிகாரிகளின் கொடுமையைக் கண்டித்து 1929-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி உண்ணாவிரதம் இருந்தார் பகத்சிங். பாது​கேஸ்வர் தத் உட்பட அவரது தோழர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்களது கோரிக்கையை ஆங்கிலேய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. பகத்சிங்குக்கு ஆதரவாக நிறையக் கைதிகள் உண்ணாவிரதம் தொடங்கினர். அவர்களைச் சிறைக் காவலர்கள் அடித்துத் துன்புறுத்தினர். இதுகுறித்து, சிறை அதிகாரிகளுக்கும் கவர்னருக்கும் விரிவான கடிதம் எழுதினார் பகத்சிங். அப்படியும் நியாயம் கிடைக்கவே இல்லை. 60 நாட்கள் உண்ணாவிரதத்துக்குப் பிறகு, ஜதீந்திரநாத் தாஸ் உடல்நலிவுற்று சிறைச்சாலையிலேயே இறந்து​போனார். அவரது உடல் கல்கத்தாவுக்கு ரயிலில் கொண்டு செல்லப்பட்டது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்த தனது உண்ணாவிரதத்தால் உடல்நலிவுற்ற பகத்சிங்கையும் அவரது தோழர்களையும் சாப்பிடவைக்க மோசமான வன்முறையைக் கையாண்டது ஆங்கிலேய அரசு. ஆனால், அவர்கள் பணிந்து போகவில்லை. அதன் பிறகு, பகத்சிங்கின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்​பட்டன. உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம், உரிமைகளை அடைந்தார் பகத்சிங். இதுதான் உண்ணாவிரத எதிர்ப்பு அரசியலின் தொடக்கப் புள்ளி.பகத்சிங்கின் உண்ணாவிரதம் ஒருவிதம் என்றால், காந்தியின் உண்ணாவிரதம் முற்றிலும் மாறுபட்ட கார​ணங்களும் வழிமுறைகளும்கொண்டது. தொழிலாளர் பிரச்னை முதல், மதக் கலவரத்தைத் தடுப்பதற்காக முனைந்தது வரை பல்வேறு வகையான உண்ணாவிரதப் போராட்டங்களைக் காந்தி நடத்தி இருக்கிறார். காந்தி எழுந்து நடந்தபோது உருவான எழுச்சியைவிட, அவர் உண்ணாவிரதப் படுக்கையில் கிடந்தபோது மக்கள் அடைந்த எழுச்சி மகத்தானது. அவர் உண்ணாவிரதத்தை ஒரு மொழி ஆக்கினார். அதன் மூலம், எளிய மக்களோடு நேரடியாக உரையாடினார். மனசாட்சி உள்ள ஒவ்வோர் இந்தியரும் காந்தியின் உண்ணாவிரதத்துக்குத் தார்மீக ஆதரவு கொடுத்தனர். இந்தியர்களின் கோபத்​தை​விடவும், உண்ணாவிரதத்தைக் கண்டே வெள்ளை அரசு அதிகம் பயந்தது என்கிறார் வரலாற்று ஆசிரியர் எப்.ஏ.மாத்தூர்.பகத்சிங்கின் உண்ணாவிரதம் போல, காந்தியின் உண்ணாவிரதம் ஆங்கிலேய அரசுக்கு எதிரானது அல்ல. மதக் கலவரம், வன்முறை, ஒழுக்க மீறல் போன்ற மக்களின் கொந்தளிப்புக்கு எதிராகவே, காந்தி உண்ணாவிரதத்தை மேற்கொண்டு இருக்​கிறார். காந்தியைப் பொறுத்த வரை அது சத்யாக்கிரகத்தின் ஒரு வழி. தன்னுடைய வாழ்வில் மொத்தம் 17 முறை காந்தி உண்ணாவிரதம் இருந்து இருக்கிறார். தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோதே அவர், உண்ணாவிரதத்தைக் கடைப்பிடித்து இருக்கிறார்.

பின்னர் அது, செழுமைப்படுத்தப்பட்டு சாத்வீகமான எதிர்ப்பு வடிவம் ஆனது. காந்தியின் உண்ணாவிரதம் நிறையக் கட்டுப்பாடுகள்கொண்டது. ஒருவர் மீது வெறுப்பையோ, கசப்பு உணர்வையோ காட்டுவதற்காக உண்ணாவிரதம் இருக்கக் கூடாது, எதிரியின் மனசாட்சியைத் தொட்டு உலுக்கி உண்மையை உணரச்செய்வதே அதன் முக்கிய நோக்கம். ஆகவே, நியாயமான குறிக்கோள் இல்லாமல் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது,சுயநலத்துக்காகவோ, சொந்த லாபத்துக்காகவோ உண்ணாவிரதம் இருப்பது மோசமான செயல். அதே நேரம், சாத்தியமே இல்லாத ஒன்றை அடைவதற்காக ஒருபோதும் உண்ணாவிரதம் மேற்கொள்ளக் கூடாது. உண்ணாவிரதத்தை வெற்று அரசியல் நடவடிக்கையாக மாற்றிவிடக் கூடாது என்பதில், காந்தி மிகவும் கவனமாக இருந்தார்.காந்தியின் உண்ணாவிரதங்கள் குறித்து கடுமை​யான வாதப்பிரதிவாதங்கள் நடந்து இருக்கின்றன. அது ஒரு வகையான எமோஷனல் பிளாக்மெயில். மக்களை மிரட்டும் உத்தி என்று எதிர்ப்புக் குரல் எழுந்து இருக்கிறது. உண்ணாவிரதம் என்பது சரியான போராட்ட வழி அல்ல என்று, பெரியாரும் அம்பேத்கரும் நேரடியாகவே கூறியிருக்கிறார்கள்.ஆனால் காந்தி, மன வலிமை ஏற்படுத்தும் செயலாகவே உண்ணாவிரதத்தைக் கருதினார். மக்களைத் திரட்டி ஒருமித்தக் கவனம் கொள்ளவைக்க அதை ஒரு வழிமுறையாகக் கை​யாண்டார். ஆயுதத்தைக்கொண்டு மக்களிடம் மன மாற்றத்தை உருவாக்க முடியாது. அதற்கு எளிய வழி உண்ணாவிரதம் இருப்பதே என்பதை காந்தி நிரூபித்து இருக்கிறார். இந்து - முஸ்லீம் கலவரத்தின்போது, அவர் உண்ணாவிரதம் இருந்து மக்களை ஒன்றுபடுத்தியதுதான் அதற்கான மகத்தான சாட்சி.சுதந்திரத்துக்கு முன், அந்தமான் சிறையில் 16,106 கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். அதில், 5,000-க்கும் மேற்பட்டோர் அரசியல் கைதிகள். அவர்களைத் தனிக்கொட்டடி அமைத்து பிரிக்கத் திட்டமிட்டனர். இதற்காக, பதிமூன்றரை அடி நீளமும் ஏழரை அடி அகலமும்கொண்ட கொட்​டடிகள் அமைக்கப்பட்டன. இந்தக் கொட்டடி, இரும்புக் கதவால் மூடப்பட்டு இருக்கும். அறையினுள் மூன்று அடி நீளமும், ஓர் அடி அகலமும்கொண்ட சிறிய ஜன்னல் அமைக்கப்பட்டு இருந்தது. கொட்டடியில் கைதிகள் விலங்குகளைப் போலத்தான் போல நடத்தப்பட்டனர். அசுத்தமான கழிவறைகள், குடிநீர்த் தட்டுப்பாடு என, கைதிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

விகடன்

Saturday, April 21, 2012

அருள் மழை ----------- 55

 
*வளைகுடா நாடொன்றில் நிறைய பணம் ஈட்டிய என் நண்பர் ஒருவர், காஞ்சி 
பெரியவரை வணங்கப் போயிருந்தார்.பெரும் தொகை ஒன்றை அவர்முன் 
வைத்து ஏதாவது தர்ம காரியத்துக்கு சுவாமிகள் பயன்படுத்திக் 
கொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
 
 வைதீக மரபில் வந்த அவரைப் பார்த்து மகா சுவாமிகள்,"கடல் கடக்கக்கூடாது என்கிற
தர்மத்தை மீறி நீ போய் சம்பாரிச்ச காசை வச்சு என்னை தர்மம் பண்ணச் சொல்றியா..
தர்மத்தை மீறி வந்த காசை வைச்சு தர்மம் பண்ண முடியுமா?" என்று 
கடுமையான குரலில் கேட்டார்கள்.
 
 காலில் விழுந்து கதறிய நண்பர் "இப்பவே பெரியவா உத்தரவுன்னா வளைகுடா நாட்டு
உத்தியோகத்தை விட்டுடறேன்"என்றார்.சிரித்தபடி பெரியவர்,உலகப் படத்தைக் 
கொண்டுவரச் சொல்லி தரை வழியாகவே அந்த நாட்டுக்கு தொடர் வழி உண்டு 
என்று விளக்கி,"அப்படி இருந்தால் போகலாம்குத்தமில்ல!" என்று சாஸ்திர 
விளக்கம் அளித்தார்கள்.
 
 "கடல்கடந்து போறதுன்னா..முன்னெல்லாம் கப்பல்தான்..குளிக்கிறது, அனுஷ்டானம் 
பண்ரது..இதெல்லாமவிட்டுப்போயிடும்.அதனால வேண்டாம்பா..
இப்ப என்ன மூணு மணிநேரம்தான்..போ..போ..தப்பில்ல" 
என்று சொல்லிச் சிரித்தார்கள்.அதற்குப் பிறகு சொன்ன விஷயம்தான் முக்கியம்.

"தர்மம் பண்றபோது காசைக் கொடுத்துட்டு ஒதுங்கிக்கிறேன்னா, அது தர்மம் இல்ல..
நாம கொடுத்த காசில தர்மம் நடந்தாத்தான் நல்லது. அதனால் நீயே முன்ன
 தர்மம் பண்றதுதான் ஒசத்தி.. ஒரு இன்வால்வ்மென்ட் வேண்டாமோ..
காசு குடுத்துடறேன் அப்படின்னா போதுமா...நீயே செய்..நன்னா தர்மம் 
நடக்றதான்னு பாத்துப் பாத்து செய்" என்றார்கள்.அந்த நண்பர் இன்னும்
செய்கிறார்.

-- 
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர

Friday, April 20, 2012

ஏப்ரல் 22. பூமி தினம்.


சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பூமியின் வெப்பம் உயர்ந்து வருகிறது. காலநிலைகள் மாறுகின்றன. பனிப்பிரதேசங்கள் வேகமாக உருகி வருகின்றன. அதனால் கடலில் நீர்மட்டம் உயர்கிறது. நீர் மட்டம் உயர்ந்தால் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். இந்தச் சூழல் கேடுக்கு முக்கியக் காரணம் மனிதர்கள் என்பதால், பூமியைக் காப்பாற்றும் பொறுப்பும் கடமையும் நமக்கே இருக்கிறது. அதற்காக உருவாக்கப்பட்டதுதான் பூமி தினம். 

இந்தப் பூமியைக் காப்பாற்றுவதற்கு நாமும் நம்மால் ஆன முயற்சிகளை மேற்கொள்ளலாம். எப்படி?

* வீடுகளில் குண்டு பல்புகளுக்குப் பதில் குழல் பல்புகளைப் பயன்படுத்தலாம்.
* தேவை இல்லாதபோது விளக்கு, மின் விசிறி போன்றவற்றை நிறுத்தி விடலாம்.
* வீடுகளில் மரங்கள், செடிகளை வளர்க்க வேண்டும்.
* தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
* பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
* காகிதங்களைச் சிக்கனமாகவும் முறையாகவும் பயன்படுத்த வேண்டும்.
* தனி வாகனங்களைத் தவிர்த்து பேருந்து, ரயில் போன்ற பொது வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும்.
* பிளாஸ்டிக் குப்பைகள், வாண வேடிக்கைகள் போன்றவற்றை கொளுத்தக்கூடாது.

இந்த விஷயங்களை நீங்களும் பயன்படுத்துங்கள். உங்கள் நண்பர்கள், உறவினர்களிடமும் எடுத்துச் சொல்லுங்கள்.

சூரியக் குடும்பத்தில் நம் பூமிதான் அற்புதமானது. பூமியில் மட்டும்தான் உயிரினங்கள் வாழ்கின்றன. நாம் வாழும் பூமி சூரியக் குடும்பத்தின் மூன்றாவது கோள். பாறைக் கோள்களில் மிகப் பெரியதும், 5வது பெரிய கோளும் பூமிதான்.பூமியின் வயது சுமார் 454 கோடி ஆண்டுகள். பூமிக்கும் சூரியனுக்கும், நமது துணைக்கோளான சந்திரனுக்கும் ஒரே வயதுதான். சூரிய நெபுலாவிலிருந்துதான் பூமி உருவானது. பூமி பிறந்து சுமார் 200 கோடி ஆண்டுகள் வரை எந்த உயிரினமும் உருவாகவில்லை. முதலில் உருவான உயிர்கள் ஆக்சிஜனை சுவாசித்து உயிர் வாழவில்லை. அப்போது இருந்த பாக்டிரியாக்கள், பாசிகள், ஒரு செல் உயிரிகள், ஆல்காக்கள் எல்லாம் ஹைடிரஜனை வெளியேற்றியே உயிர் வாழ்ந்தன. நம் புவிக் கோளில் தாவரங்கள் உருவான பின்புதான் வளி மண்டலத்தில் ஆக்சிஜன் வந்தது. பூமியில் தாவரங்கள் உருவான பிறகு, அவை வெளியிட்ட ஆக்சிஜன் தான் நமது வளிமண்டலத்தில் சேர்ந்தது. அதன் பின்னரே, உயிரிகள் ஆக்சிஜன் மூலம் சுவாசிக்கத் தொடங்கின. எனவே சுவாசிப்புக்கு ஆக்சிஜன் கை கொடுத்தது ஓர் எதிர்பாராத நிகழ்வு. மிகப் பெரிய பரிணாம நிகழ்வு. இப்போது நம் புவிக் கோளில் மனிதனையும் சேர்த்து சுமார் 10 கோடி வகை உயிரினங்கள் வாழ்கின்றன. பூமியின் உயிரின மண்டலம் வளி மண்டலம், பூமியின் காந்தப்புலன், சூரியக் கதிர் வீச்சு, புவியின் சீதோஷ்ண நிலை பொறுத்து பூமியின் நிலைப்பாடு மாறுகிறது. இப்படியே போனால், இந்தப் பூமி இன்னும் 230 கோடி ஆண்டுகள் வாழலாம். பூமி உருவானாதிலிருந்து இன்று வரை ஏராளமான மாற்றங்கள் பூமியில் நிகழ்ந்துள்ளன. பூமியின் முகத்தோற்றம் அவ்வப்போது இயற்கை நிகழ்வுகளால் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் சில நன்மைகளும், சில தீமைகளும் நமக்கு உண்டாகி இருக்கின்றன. மனிதன் உருவான பின்புதான் பூமியில் அழிவு ஆரம்பித்தது. முக்கியமாக நாம் பயன்படுத்தும் ஏராளமான பொருள்கள் பூமியின் இயல்பை, முகத் தோற்றத்தை அடியோடு மாற்றிப் போட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை, காடுகளை நமது பொருளாதார தேவைகளுக்காக அழிப்பதும், பூமியை நம் சுய லாபத்துக்காக அளவுக்கு அதிகமாக மாசுபடுத்துவதும்தான். உலகின் நுரையீரல்களான தாவரங்கள் மனிதனின் தேவைகளுக்காக ஏராளமாக அழிக்கப்படுகின்றன. இப்போதைய உடனடித் தேவை மனிதனால் பூமிக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அழிவை உடனடியாக நிறுத்த வேண்டியதுதான். பூமியைக் காக்க வேண்டும், அதன் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் பூமி தினம். உலகம் முழுவதும் பூமியின் சமன் நிலையைக் காப்பாற்றும் விதத்தில், புவி தினத்தை ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22-ம் நாள் அனுசரிக்கிறார்கள்.

1970, ஏப்ரல் 22-ல் 141 நாடுகளை ஒருங்கிணைத்து புவி தினத்துக்கான மாநாடு நடத்தப்பட்டது. புவியை நாம் எப்படிக் காப்பாற்றலாம் என்று திட்டமிட்டு, அதற்கான செயல்பாடுகள் உலக மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டது. முக்கியமாக வருங்காலச் சந்ததிக்கு, பூமியைப் பத்திரமாக, பாதுகாப்பாகக் கொடுத்துச் செல்லவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்று புவிதினத்தில் வலியுறுத்தி சொல்லப்படுகிறது. அது தொடர்பான நிகழ்வுகள் கொண்டாடப்படுகின்றன.சர்வதேச புவி நாள் கொண்டாடப்பட்ட பிறகே, சூழல் பாதுகாப்பு இயக்கமும், காற்றைச் சுத்தப்படுத்தும் சட்டமும் தொடங்கப்பட்டன. இந்தப் புவியில் பசுமையைத் தக்க வைக்க அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். இதுதான் புவி தினத்தின் முக்கிய நோக்கம். இன்று புவி தின செயல்பாடுகளில், சுமார் 175 நாடுகளும், 50 கோடிக்கு மேற்பட்ட மக்களும் பங்கேற்கின்றனர்.உலகம் முழுவதும் உள்ள சூழல் தொடர்பான அமைப்புகள் புவிதினத்திலும், அதையொட்டிய ஒரு வாரத்திலும், பூமியைப் பற்றிய விழிப்புணர்வு கருத்துகளை விதைத்து, மக்களிடையே அது தொடர்பான செயல்பாடுகளையும் செய்கின்றன. காற்றைச் சுத்தப்படுத்துதல், இருக்கிற மரங்களை வெட்டாமல் பாதுகாத்தல், புதிய மரங்களை நடுதல், அழிக்க முடியாத பிளாஸ்டிக் பொருள்களிலிருந்து பூமியைக் காப்பாற்றுதல், குறைவாக புதை படிம எரிபொருள்களைப் (Fossil fuel) பயன்படுத்துதல், குறைவாக ஆற்றல் வாகனங்களைப் பயன்படுத்துதல், பொது ஊர்திகளில் பயணம் செய்தல் போன்றவற்றை நாம் அனைவரும் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும். முக்கியமாக நமக்கு ஆக்சிஜன் தரும் தாவரங்களைப் பாதுகாக்க வேண்டும். புவி தினம் என்பது ஏதோ பூமியைக் காப்பாற்றத்தானே, நமக்கென்ன என்று எண்ணிவிட வேண்டாம். பூமியைப் பாதுகாத்தல் என்பது மனித இனத்தையும், பூமியில் வாழுகின்ற அனைத்து உயிரினங்களையும் காப்பாற்றும் செயல். பூமியைக் காப்பாற்றி, மனித சமுதாயத்தையும், மற்ற உயிரினங்களையும் கட்டாயம் காப்போம் என உறுதி ஏற்போம்.

மோகனா