Search This Blog

Saturday, November 28, 2015

மரத்தை வளர்ப்பதால்

முன்பெல்லாம் மழைக்காலத்தில் மழை பெய்தது. கடும் வெயிலால் மக்கள் அவதியுற்று நீர் நிலைகள் அனைத்தும் வற்றி தண்ணீருக்காக திண்டாடும் தமிழ்நாட்டில் அதுவும் அக்னி நட்சத்திரம் தொடங்கும் சமயத்தில் மழை பெய்து பூமியை குளிரச் செய்து மக்களின் மனமும் மகிழ்ச்சியடைந்தது. வரவேற்கத்தக்கதே. ஆனால் ஒரு புயல் உருவாகி அதன் மூலம்தான் மழைநீர் நமக்கு கிடைக்கும் காலமாகிவிட்டது. கண் மூடித்தனமாக காடுகளிலுள்ள மரங்களை வெட்டி வீழ்த்தி நமக்கு நாமே ஆபத்தை விலை கொடுத்து வாங்கி விட்டோம். மரங்கள் குறைவதால் பூமியில் சூடு அதிகரிக்கிறது. Ozone படலத்தில் ஓட்டை வீழ்ந்து விட்டதால் சூரியனின் ultra violet கதிர்கள் பூமியில் இறங்குகின்றன. இவ்வகைக் கதிர்கள் கடலில் மிதக்கும் ஐஸ் பாறைகளில் படுவதால் அவை கரைந்து நீரின் அளவு கடலில் அதிகரிக்கிறது. தண்ணீரின் அளவு கூடுவதால் நிலத்தை தண்ணீர் ஆக்கிரமிப்பு செய்து நிலத்தை விழுங்கி வருகிறது. மரத்தை வளர்ப்பதால் மட்டுமே நம்மால் இனி நிலத்தை பாதுகாத்து போதிய அளவு மழையும் பெற இயலும். அகால மழையினால் பல ஆபத்துக்களும் நிறைந்துள்ளன. cervical spondylitis, lumbar spondylitis, lordosis போன்ற நோயுள்ளவர்கள் அகால மழையில் அதிக வலியை உணருவார்கள். விளக்கெண்ணையை சூடு செய்து பஞ்சில் நனைத்து வலி உள்ள இடங்களில் சிறிது நேரம் வைத்திருந்து பிறகு வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். தணலில் வறுத்த பண்டங்களைத் தவிர்த்து உணவை சூடாக சாப்பிட வேண்டும்.


அகால மழையினால் குளம்போல மழைத்தண்ணீர் ரோடுகளில் தேங்கி நிற்கக்கூடும். அவைகளில் காலை வைப்பதால் நுண்கிருமிகள் பித்த வெடிப்புகளிலும் கால்நகத்தின் இடுக்குகளிலும் நுழைந்து பேராபத்தை தோற்றுவிக்கும். அதனால் வீட்டுக்குச் சென்றவுடன் வெந்நீரில் காலை நன்றாக அலம்ப வேண்டும். முகத்தை பாதுகாப்பது போல கால்களையும் அகால மழையில் மிகவும் சிரத்தையுடன் பாதுகாக்க வேண்டும்.

Sunday, November 22, 2015

(Oppo R7 Lite) - (Lenovo Phab Plus)-(Asus Zenfone 2 Deluxe )

ஓப்போ ஆர்7 லைட் (Oppo R7 Lite)


டிஸ்ப்ளே – 5 இன்ச் 720x1280 பிக்ஸல் 294PPI.
பின்புற கேமரா – 13 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 8 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.5 GHz Octo-Core Qualcomm Snapdragon 615.
ரேம் – 2 GB.
பேட்டரி – 2320 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 (Color OS 2.1)
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 16 GB.
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 128 GB வரை.
எடை – 147 கிராம்.
டூயல் சிம் வசதி உண்டு.
சிம் 1, சிம் 2 – 4G நேனோ சிம்.
பிளஸ்:
டிசைன்.
பேட்டரி.
செயல்பாடு.
கேமரா அப்ளிகேஷன்.
மைனஸ்:
குறைந்த வெளிச்சத்தில் கேமரா செயல்பாடு.
FM, NFC கிடையாது.
விலை:  ரூ.18,000.

லெனோவோ பேப் பிளஸ் (Lenovo Phab Plus)

டிஸ்ப்ளே – 6.80 இன்ச் 1080x1920 பிக்ஸல் 326PPI.
பின்புற கேமரா – 13 மெகா பிக்ஸல்
முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்
பிராசஸர் – 1.5 GHz Octo-Core Qualcomm Snapdragon 615
ரேம் – 2 GB
பேட்டரி – 3500 mAh
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு  லாலிபாப் 5.0 (Vibe UI)
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 32 GB
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 64 GB வரை
எடை – 220 கிராம்
டூயல் சிம் வசதி உண்டு
சிம் 1 – 4G மைக்ரோ சிம்
சிம் 2 – 4G நேனோ சிம்
பிளஸ்: மெட்டல் பாடி, கேமரா, செயல்பாடு
மைனஸ்: பயன்படுத்த பெரிதாக கடினமாக இருக்கிறது, இயங்குதள கோளாறுகள், மைக்ரோ SD கார்ட் மற்றும் இரண்டாவது சிம் ஒரே ஸ்லாட்டை பயன்படுத்துகிறது.
விலை:  ரூ.20,990.


ஏசஸ் ஜென்போன் 2 டீலக்ஸ் (Asus Zenfone 2 Deluxe )

டிஸ்ப்ளே – 5.5 இன்ச் 1080x1920 பிக்ஸல் 401PPI
பின்புற கேமரா – 13 மெகா பிக்ஸல்
முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்
பிராசஸர் – 2.3 GHz Quad-Core Intel Atom Z3580
ரேம் – 4 GB
பேட்டரி – 3000 mAh
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 (Zen UI)
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 64 GB
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 128 GB வரை
எடை – 170 கிராம்.
டூயல் சிம் வசதி உண்டு.
சிம் 1 – 4G மைக்ரோ சிம்
சிம் 2 – 2G மைக்ரோ சிம்
பிளஸ்: டிசைன், செயல்பாடு, டிஸ்ப்ளே
மைனஸ்: கேமரா, விலை
விலை:  ரூ.22,999.


சவுண்ட் மேஜிக் வென்டோ பி55 (SoundMagic vento P55)
சீனாவின் ஹெட்போன் நிறுவனமான சவுண்ட் மேஜிக், தனது சிறப்பான பட்ஜெட் ஹெட்போன்களுக்கு பெயர் போனது.
சமீபத்தில் தனது புதிய ‘வென்டோ பி55’ அதி நவீன ஹெட்போனை வெளியிட்டு, அதிக விலை ஹெட் போன் மார்க்கெட்டில் நுழைந்துள்ளது.
ஸ்டைய்ன்லெஸ் ஸ்டீல் ஹெட்பேண்ட், அலுமினியம் இயர்கப்ஸ் (Earcups), மென்மையான லெதர் இயர்பேட்ஸ் (Earpads) ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த ஹெட் போன்.
1.2m கழற்றிக்கொள்ளும் கேபிளை கொண்டுள்ள இந்த ஹெட்போன் ஒரு மைக்ரோ போனையும் கொண்டுள்ளது. விலை: ரூ.15,100.

செ.கிஸோர் பிரசாத் கிரண்

Saturday, November 21, 2015

அஷ்வின்

 
இந்தியாவின் தலைசிறந்த ஆப் ஸ்பின்னராக கருதப்படும் எரப்பள்ளி பிரசன்னா 20 டெஸ்டுகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி ஒரு இந்திய சாதனை புரிந்தார். அஷ்வின் தன் முதல் இருபது ஆட்டங்களில் இச்சாதனையை முறியடிக்கும் வண்ணம் நெருங்கி வந்தார். ஆனால் ஒரு சின்ன இடைவெளியில் தவற விட்டார். ஆனால் இப்போது அவர் தனது 29வது ஆட்டத்தில் 153 விக்கெட்டுகள் வீழ்த்தி பிரசன்னாவையும் கடந்து சென்று விட்டார். அஷ்வினின் பந்து வீச்சு தரம் கடந்த சில மாதங்களில் பல படிகள் மேலே உயர்ந்து விட்டது. இன்று உலகின் தலைசிறந்த ஆப் சுழலர் அவர்தான். அவரால் எந்த ஆடு தளத்திலும் தனது பிளைட், வேக மாறுபாடு, ஆர்ம் பந்து, கேரம் பந்து உள்ளிட்ட மாறுபட்ட தன்மை, நீளத்தை கட்டுப்படுத்தும் பாங்கு, புத்திசாலித்தனம் ஆகியவை கொண்டு ஆதிக்கம் செலுத்த முடியும். இத்தனை திறமைகளையும் அஷ்வின் இயல்பிலேயே பெற்றிருக்கவில்லை. அவர் தன்னைத் தானே உருவாக்கிக் கொண்ட ஒரு சாதனையாளர். அவரது ‘நமக்கு நாமே’ பயணம் பற்றி பார்ப்போம்.
 
அஷ்வின் உள்ளூர் கிரிக்கெட்டில் ஒரு தொடக்க நிலை மட்டையாளராகவே அறிமுகமாகி ஆடி வந்தார். பந்து வீச்சு அவருக்கு இரண்டாம் பட்சமே. ஒரு முறை விபத்து காரணமாய் அவரால் தமிழக அணிக்காக சற்று காலம் ஆட முடியாமல் போயிற்று. காயத்தில் இருந்து மீண்டு வந்த அஷ்வின் தன் ஆப் ஸ்பின் பந்து வீச்சில் கவனம் செலுத்த தொடங்கினார். 2006இல் அவரைப் பற்றி ஹிந்துவின் விளையாட்டு பக்க அறிக்கையில் படித்தது நினைவுள்ளது. அஷ்வின் உயரமான சுழலர். கட்டுப்பாடாக வீசக் கூடியவர். அதிகமான பவுன்ஸ் காரணமாய் அவருக்கு நிறைய விக்கெட்டுகள் விழுகின்றன என்று அவரைப் பற்றி சில தகவல்கள் கிடைத்தன. சேலஞ்சர் கோப்பையில் தான் முதன்முதலில் அஷ்வின் பந்து வீசுவதை கவனித்தேன். அப்போது அஷ்வின் உள்ளூர் அளவில் கூட முன்னணி வீச்சாளராக இல்லை. ஐ.பி.எல்லிலும் அறிமுகமாகவில்லை. முதல் பார்வையில் அவர் ஒரு வழக்கமான சுழலர் இல்லை எனப் பட்டது. பெரும்பாலான இந்திய சுழலர்கள் குள்ளமானவர்கள். அதனால் அவர்கள் பந்தை காற்றில் மிதக்கும்படி பிளைட் செய்வார்கள். பிளைட் சிறப்பாய் இருக்கையில் பந்து விழும் நீளம் குறித்து மட்டையாளனுக்கு குழப்பம் ஏற்படும். இப்படி ஏமாறும் மட்டையாளர்கள் சுலபத்தில் அவுட் ஆவார்கள். ஆனால் உயரமான சுழலர்கள் மட்டையாளனுக்கு மேலிருந்து கீழாய் பந்து வரும் படி வீச முடிவதால் அவ்வளவாய் பிளைட் செய்யாமலே நீளம் குறித்து குழப்பம் உண்டாக்க முடியும். அனில் கும்பிளேவும் அஷ்வினும் பந்தை பிளைட் செய்வதற்கு அதிகம் மெனக்கெடாதவர்கள். இருவருமே பவுன்ஸை நம்பி விக்கெட் எடுப்பவர்கள். அதனாலே இருவரையும் முதலில் பார்க்க குறைபட்ட சுழலர்கள் எனத் தோன்றும். ஆனால் இருவரும் மாறுபட்ட வீச்சாளர்களே அன்றி தரம் குறைந்தவர்கள் அல்ல.
 
அஷ்வின் முதல் பார்வையில் பந்தை அதிகம் சுழற்றவோ பிளைட் செய்யவோ செய்யாத, வேகமாக நேராய் வீசும் ஒரு சாதாரண வீரராகவே எனக்குத் தோன்றினார். ஹர்பஜன் சிங்கிடம் அவர் அறிமுகமான புதிதிலேயே ஒரு சுழலருக்கான அத்தனை திறன்களும் வெளிப்பட்டன. ஹர்பஜனிடம் இயல்பிலேயே லூப் இருந்தது. லூப் என்பது பந்தை அதிகமாய் சுழற்றி பார்வையாளனின் பார்வை மட்டத்துக்கு மேலாக கொண்டு செல்வது. லூப் உள்ள பந்து தன்னை நோக்கி வருகிறது என மட்டையாளன் எண்ணி இருக்க அது கடைசி நொடியில் அவனை விட்டு விலகி செல்லும். ஹர்பஜனின் பந்து அதிகமாய் சுழன்று திரும்பியது. ஆனால் அஷ்வின் அந்தளவுக்கு வசீகரமாய் தோன்றவில்லை. இதனாலேயே அஷ்வின் அறிமுகமான புதிதில் தோனி அவர் ஒரு “சாமர்த்தியமான சுழலர். பார்க்க ரொம்ப வசீகரமானவர் அல்ல” என்றார்.  

ஆனால் இந்த செலஞ்சர் கோப்பை தொடரில் அஷ்வினின் மாறுபட்ட பந்துகள் என்னை மிகவும் கவர்ந்தன. குறிப்பாக அஜெந்தா மெண்டிஸைக் கண்டு தூண்டுதல் பெற்று அவர் தனக்கென கேரம் பந்து எனும் ஒரு சொடுக்கி வீசும் பந்தை உருவாக்கிக் கொண்டார். அப்பந்தை கணித்து ஆட மட்டையாளர்கள் திணறினர். பின்னர் ஐ.பி.எல் அறிமுகமாக சென்னைக்காக ஆடத் தொடங்கிய அஷ்வின் இது போன்ற மாறுபட்ட பந்துகளாலும் கட்டுப்பட்டாலும் தான் மிகவும் அறியப்பட்டார். எந்த பதற்றமான சூழலி லும் நிதானமாய் வீசும் மன உறுதி அவருக்கு இருந்தது. இக்குணங்கள் தாம் தோனியை கவர்ந்திருக்க வேண்டும். 2011 உலகக்கோப்பைக்கு பின் அவர் ஹர்பஜன் இடத்துக்கு அஷ்வினைக் கொண்டு வந்தார். இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் மிகவும் ஆபத்தான வீச்சாளராக தோன்றினார். தன் முதல் டெஸ்டிலேயே ஒன்பது விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவரது மாறுபட்ட பந்துகளை கணிக்கவோ பவுன்சை சமாளிக்கவோ முடியாமல் மட்டையாளர்கள் திணறினர். ஆனால் 2012இல் இந்தியா வந்த இங்கிலாந்து மட்டையாளர்கள் அஷ்வினை சிறப்பாக கையாண்டனர். அதன் பின்னர் வெளிநாடுகளில் ஆட ஆரம்பித்த அஷ்வின் அங்கும் திணறினார். அவரது பந்து நேராய் அதிக சுழல் இன்றி வந்தன. மட்டையாளர்கள் அவரை நேராய் ஆடத் தொடங்க அவர் பொறுமை இழந்து வைடாய் குறைநீளத்தில் வீசினார். அவர்கள் அவரை வெட்டவோ புல் செய்யவோ செய்தனர். இக்கட்டம் அவரது ஆட்டவாழ்வில் ஒரு தளர்ச்சி காலம்.
 
இதனை அடுத்து ஊருக்கு திரும்பின அஷ்வின் தனது இளம் வயது பயிற்சியாளருடன் பயிற்சி எடுத்து தன் குறைகளை களைந்தார். இடுப்பு மற்றும் மேலுடலை அதிகமாய் ஒவ்வொரு பந்து வீசும் போதும் பயன்படுத்தி பந்துக்கு அதிக ஆற்றல் அளித்தார். விளைவாக அடுத்து இங்கு ஆட வந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் வீசிய பந்துகள் புற்றிலிருந்து வெளிப்படும் பாம்பு போல் சீறின. அவரை ஆட முடியாது ஆஸ்திரேலிய அணியினர் திணறினர். ஆனாலும் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி.20 ஆட்டங்களில் ஆடியதால் அவரது பந்து வீச்சு மீண்டும் கோளாறானது. ஒரே ஓவரில் பலவித பந்துகளை வீச முயன்று கட்டுப்பாட்டை இழந்தார். விரைவில் அணியில் அவருக்கு பதில் ரவீந்திர ஜடேஜா ஆடினார். ஆட முடியாத காலத்தில் அஷ்வின் தன் தொழில்நுட்ப பிசிறுகளை சரி செய்தார். 2015 உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராய் நியமனமான ஸ்ரீதர் தனது பல தொழில்நுட்ப ஐயங்களுக்கு விளக்கம் தந்ததே தன் முன்னேற்றத்துக்கு பிரதான காரணம் என அஷ்வின் தெரிவித்தார்.  

பால்யத்தில் இருந்தே முறையாக சுழல் பந்து வீசி பழகாத அஷ்வின் ஆட ஆடத் தான் பந்து வீச்சின் அடிப்படைகளை மெல்ல மெல்ல கற்று வளர்ந்தவராக உள்ளார். தன்னுடைய கலை குறித்து தீவிரமாய் யோசித்து புரிந்து கொண்டு அதை தன் வீச்சில் முயன்று பார்த்து சுயமாய் முன்னேறி இருக்கிறார். முயன்றால் யாரும் ஹர்பஜனோ முரளிதரனோ ஆக முடியாமல் போகலாம். ஆனால் அஷ்வின் ஆகலாம்.
 
ஆர். அபிலாஷ்

யமனும் அஞ்சினான்!



அதிதியை தெய்வமாக நினைப்பது, அவனைக் கவனிக்காவிட்டால் தெய்வக் குற்றம் செய்த மாதிரி பயப்படுவது, இதெல்லாம் நம் மதத்தின் முக்கியமான அம்சங்களாகும். யமன் என்றால் நாம் எல்லோரும் கதி கலங்குகிறோம். அப்படிப்பட்ட யமனே கதிகலங்கி விட்டதாகக் கடோபநிஷத்தில் ஒரு கதையில் வருகிறது. அவன் யாரிடம் பயப்பட்டான்? ஒரு சின்ன பிராம்மணப் பிள்ளையிடம் தான் பயப்பட்டான்! ஏன் பயப்பட்டான்? இந்தப் பையன் யமனுடைய க்ருஹத்துக்கு வந்து மூன்று நாட்கள் எதுவும் சாப்பிடாமல் பட்டினி கிடந்துவிட்டான்! (அவன் ஏன் வந்தான் என்பது வேறு கதை) அதிதி ஒருவனின் வயிற்றுக்குப் போடாவிட்டால் அது மஹா அபசாரமாகுமே என்றுதான் ஸாக்ஷாத் யமனே பயந்து விட்டான். ஸர்வ லோகத்தையும் நடுங்கச் செய்கிறவன் இந்த வாண்டுப் பயலிடம் நடுங்கிக் கொண்டு வந்து, “என் க்ருஹத்தில் ராத்திரி சாப்பிடாமல் இருந்து விட்டாய். இதனால் எனக்கு தோஷம் உண்டாகாமல் இருக்க உனக்கு நமஸ்காரம் பண்ணுகிறேன் அப்பா. ஒவ்வொரு நாள் பட்டினி இருந்ததற்கும் ஈடாக ஒவ்வொரு வரம் வீதம் என்னிடம் மூன்று வரம் வாங்கிக் கொள்” என்று ப்ரார்த்தித்ததாக உபநிஷத் சொல்கிறது.

இங்கெல்லாம் ‘பரோபகாரம்’என்று செய்கிறபோது இருக்கக்கூடிய ‘ஸுபீரியாரிடி’ மனப்பான்மை இல்லாமல், உபகாரத்துக்குப் பாத்திரனாகிறவனிடம் பயந்து பயந்து தாழ்ந்து, தெய்வத்துக்குப் பூஜை செய்கிற மாதிரி அவனுக்கானதைச் செய்வதையே பார்க்கிறோம். பரோபகாரத்தில் ஒரு முக்யமான அங்கமான ஈகையில் சிறந்தவர்களை நம் தர்மத்தில் தலைக்குமேல் வைத்துக் கொண்டு கொண்டாடுகிறோம். எத்தனையோ துர்குணங்கள் இருந்தால்கூட கர்ணன் போன்றவர்களைக் கொடைக்காகவே போற்றுகிறோம்.

நவரசமும் சாந்தமும்!



ஒரு காவியம் அல்லது நாடகம் என்றால் அதில் ஒரு கதை, Plot இருக்கிறது. அநேக ஸம்பவங்கள் வருகின்றன. இயற்கை வர்ணனைகள் இருக்கின்றன. உவமை போன்ற அணிகள், எதுகை, மோனை போன்ற சொல் ஜாலம் எல்லாம் இருக்கின்றன. ஆனால் இதெல்லாம் அதற்கு உயிர் இல்லை. ‘ரஸம்’ என்ற உணர்ச்சி அநுபவம்தான் உயிர் என்று வைத்தார்கள். ஒரு வாக்கியத்தில் எத்தனை சொல்லழகு இருந்தாலும் அது கவிதையாகிவிடாது, ‘ரஸம்’ இருந்தால்தான் அது கவித் தன்மை பெறும் - ‘வாக்யம் ரஸாத்மகம் காவ்யம்’ என்று ஒரு பெரிய ‘கிரிடிக்’ சொல்லியிருக்கிறார். இந்த ரஸங்களின் கணக்கில் இரண்டு தினுசான அபிப்பிராயங்கள் உண்டு. ஒரு சாரார் எட்டு ரஸம் என்பார்கள். இன்னொரு சாரார் ஒன்பது ரஸம் (நவரஸம்) என்பார்கள். சிருங்காரம், ஹாஸ்யம், கருண (சோகம்), ரௌத்திரம் (கோபம்), வீரம், பயானகம் (அச்சம்), பீபத்ஸம் (அருவறுப்பு), அத்புதம் (அற்புதம்) என்ற எட்டும் ரஸங்கள் என்பது ஒரு கட்சி. இவற்றோடு ‘சாந்தம்’ என்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது நவரஸக்காரர்களின் வாதம்.

சாந்தத்தை ரஸமாகச் சேர்க்காத ஆலங்காரிகர்கள் அதை மட்டமாக நினைத்தார்கள் என்று அர்த்தமில்லை. பார்க்கப் போனால் அவர்கள் தான் நவரஸக்காரர்களை விட அதை உயர்த்தியாக மதித்தார்கள். நம் பண்பாடே சாந்தத்தில் நிறைந்து போவதுதான். “சாந்தி: சாந்தி : சாந்தி:” என்று மூன்று முறை சொல்லியே எந்த வைதிக காரியத்தையும் நாம் பூர்த்தி செய்கிறோம். அந்த சாந்த நிலையில், உணருகிறவன் - உணரப்படுவது என்ற பேதமில்லாமல் எல்லாம் அடங்கிப் போகிறது.

24வது 007!


ஆங்கிலம் மற்றும் தமிழிலும் 1962-ஆம் ஆண்டு தொடங்கி, 2015 வரை, மொத்தம் 23 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வெளிவந்துள்ளன. 'Spectre' இவ்வாண்டு வெளியாகியுள்ள 24வது படம். காஸினோ ராயல் ‘க்வான்டம் அப் சோலாஸ்’, ‘ஸ்கைபால்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து டேனியல் க்ரேக் 4வது முறையாக இதிலும் ஜேம்ஸ் பாண்டாகத் தோன்றுகிறார். ‘அமெரிக்கன் பியூட்டி’ மற்றும் ‘ரோட் டு பெர்ஷன்’ போன்ற விருதுகளைப் பெற்ற படங்களை இயக்கியுள்ள சேம்மென்டிஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் தொடர்ச்சியாக இரு ஜேம்ஸ் பாண்ட் படங்களை இயக்கியுள்ளவர்.

‘ஸ்பெக்ட்ரா’ என்கிற உலக அளவில் பிரபலமான சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் ஒரு நிறுவனம், ஸீன் கானெரி இறுதி முறையாக ஜேம்ஸ் பாண்டாக நடித்த ‘டைமன்ஸ் ஆர் ஃபாரெவர்’ படத்தில்தான் முதன்முதலாக இடம்பெற்றது. ‘ஸ்பெக்ட்ரா’ என்கிற இப்படத்திலும் அந்நிறுவனம் பற்றி நிகழ்வுகளும், அவற்றை மையமாக வைத்து, ஜேம்ஸ்பாண்ட் 007 அதன் பின்னணியில் நிற்கும் வில்லனைத் தேடிப் புறப்பட்டுச் சென்று, மோதி வெற்றி கொள்வதே இப்படக் கதையின் சாரம். நாவலாசிரியர் ஐயன் ப்ளெமிங்கின் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்துத் தான் இதன் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.

‘பேஸ்புக்’


நாற்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு இவரை நன்றாகத் தெரியும். 30 வயதுக்குக்கீழ் இருப்பவர்களுக்குப் பெயர் சொல்லி அழைக்குமளவுக்கு மானசீகத் தோழர். 20 வயதுக்காரர்களுக்கோ இவர் கடவுள். அவர் மார்க் எலியட் சர்கர்பெர்க். சர்ச்சைக்குரிய ‘பேஸ்புக்’ நிறுவனர். இந்த ‘சர்ச்சைக்குரிய’ என்ற முன்னொட்டு பேஸ் புக்கைக் குறிக்கிறதா, அல்லது அதன் நிறுவனர் மார்க்கைக் குறிக்கிறதா எனக் கேட்பவர்களுக்கு எனது பதில்: இரண்டையும்தான்.

பேஸ்புக் தொடங்கப்பட்ட நாளிலேயே சர்ச்சை முகிழ்த்துவிட்டது. அவரது கல்லூரி சீனியர்கள் தங்களுடைய ஐடியாக்களை மார்க் திருடிவிட்டதாக வழக்குத் தொடுத்தார்கள். (அவர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திவ்ய நரேந்திரா) 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகள் கொடுத்து அவர்களுடன் சமரசம் செய்து கொள்ளப்பட்டது. மார்க்கும் சர்ச்சைகளுக்குத் தப்பவில்லை. அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய படத்திலிருந்து - (தி சோஷியல் நெட்ஒர்க் - கோல்டன் குளோப் விருது பெற்றது) யாரோ ஒரு ஜெர்மானியப் பெண்மணி முகமது நபியின் படத்தை வரையும் போட்டியை பேஸ்புக்கில் அறிவித்ததற்காக பாகிஸ்தான் அரசு அவர் மீது குற்ற வழக்குத் தொடர்ந்தது வரை அவர் எதிர் கொண்ட சர்ச்சைகள் ஏராளம்.

இளைஞர்களின் இந்தக் கடவுள் அண்மையில் இந்தியா வந்திருந்தார். தில்லி ஐ.ஐ.டி.யில் பேசும் போது ஒரு சர்ச்சைக்கு அல்ல அல்ல விவாதத்துக்கு விதை போட்டிருக்கிறார். கொஞ்சநாளாக வலைவாசிகளிடம் நடந்து கொண்டிருக்கும் பட்டிமன்றம் நெட் நியூட்ராலிட்டியா? ஜீரோ ரேட்டிங்கா? அதாவது கைபேசி மூலம் இணையத்தில் (இன்டர்நெட்) உலாவ காசு ‘அழ’ வேண்டுமா? அல்லது அது இலவசமாக இருக்க வேண்டுமா?  

குறிப்பிட்ட சில இணைய தளங்களை (உதாரணமாக விக்கிபீடியா, பேஸ்புக், கூகுள்) சில குறிப்பிட்ட மொபைல் நிறுவனங்கள் வழியாக இலவசமாகப் பெற வகை செய்வது ஜீரோ ரேட்டிங். இதற்காகும் செலவைப் பயனாளர்களிடமிருந்து கட்டணமாகப் பெறாமல் இணையதள நிறுவனங்களும், மொபைல் நிறுவனங்களும் தங்களுக்குள் பேசி முடித்துக் கொள்வார்கள். இதன் மூலம் வளரும் நாடுகளில் இருக்கும் ஏராளமானோர் இணையத்தைப் பயன்படுத்துவார்கள். அவர்களது படிப்புக்கு இது உதவியாக இருக்கும் என்பது இதனை ஆதரிப்பவர்களது வாதம். இது ஒரு சில இணைய தளங்களுக்கும், சில மொபைல் நிறுவனங்களுக்கும் சாதகமாகவும் மற்ற வர்களுக்கு, குறிப்பாக, சிறு நிறுவனங்களுக்கு எதிராகவும் அமைந்துவிடும். மொபைல் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் கொட்டி அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கியுள்ளன. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பலருக்கு வேலை வாய்ப்பளிக்கின்றன. எல்லாம் இலவசம் என்றால் வருவாய்க்கு எங்கு போவது? வருவாய் இல்லாமல் வளர்ச்சி இல்லை என்பது நியூட்ராலிட்டிக்காரர்கள் வாதம். 

மார்க் இலவச கட்சியை ஆதரிக்கிறார். (அவரது நிறுவனம் ரிலையன்ஸோடு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது) ஆனால் நெட் நியூட்ராலிட்டியை எதிர்க்க வில்லை. அது இருந்து விட்டுப் போகட்டும், ஆனால் இலவசத்துக்கு முன்னுரிமை கொடுங்கள் என்கிறார் ஐரோப்பிய ஒன்றியத்தை உதாரணம் காட்டி. இணையத்தைப் பயன்படுத்தினால், மின்னஞ்சலோ, பத்திரிகையோ, புத்தகமோ, பாட்டோ, சினிமாவோ, தொலைபேசி அழைப்போ, வெற்று அரட்டையோ எதற்கும் பைசா கொடுக்க வேண்டியதில்லை என்பதால் ஆரம்பத்திலிருந்தே இணையம் என்றால் இலவசம் என்று மனத்தில் விழுந்து விட்டது. கிடக்கட்டும். இந்த இணையம் மட்டும் இலவசமாக இல்லையென்றால் அரசாங்கம் கொடுக்கும் இலவசங்களை எதிர்த்து நம் அறச் சீற்றங்களை எப்படித்தான் வெளிப்படுத்துவதாம்?

மாலன்

குழந்தைகளுக்கான பல் பராமரிப்பு!


பொதுவாக குழந்தைகளுக்குப் பால் பற்கள் 6 மாதங்களில் முளைக்கும், ஆனால் சில குழந்தைகளுக்கு இதில் தாமதமும் ஏற்படலாம். பெரும்பாலான பெற்றோர்கள், பல் முளைப்பதில் தாமதம் ஏற்படின் அதே வயதுடைய மற்ற குழந்தைகளை ஒப்பிட்டு கவலை கொள்வார்கள், ஆனால் பல் முளைப்பதில் வேறுபாடுகளும், மாறுபாடுகளும் உள்ளன.

பற்கள் முளைக்கும்போது ஏற்படும் உறுத்தலினால் குழந்தைகள் எதையாவது வாயில் போட்டுக் கடிக்கும். எனவே சத்துக் குறைபாடு காரணமாக வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை ஏற்படலாம். எனவே பெற்றோர்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

பல் முளைக்கும் நேரத்தில் குழந்தைகளின் ஈறுகள் சிவந்தும் வீங்கியும் காணப்படும். சில குழந்தைகளுக்கு ஜுரம், வலி போன்றவைகூட ஏற்பட வாய்ப்புண்டு. இது பொதுவாக உள்ள பிரச்னை என்பதால், பெற்றோர்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. முடியாத பட்சத்தில் பல் மருத்துவரிடம் காண்பித்துக் கொள்வது நல்லது.

பால் பற்கள் நிரந்தரப் பற்களைக் காட்டிலும் வெண்மையாகவும் மிக அழகாகவும் காணப்படும்.

பால் குடிக்கும் குழந்தைகளை அப்படியே தூங்க, கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது. இதனால் பால் பற்களில் சொத்தை ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கு ‘நர்ஸிங் பாட்டில் கேரிஸ்’ என்று பெயர், இது அவர்களின் பற்களில் அதிக பாதிப்பை உண்டாக்கும்.

எனவே இரவில் பால் குடித்த பின்பு, அவர்களின் வாயைச் சுத்தம் செய்வது அவசியம். பாலுக்குப் பின் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தோ, அல்லது ஈரப் பஞ்சினால் அவர்களின் வாயையும், பற்களையும் துடைத்துவிட்டோ, சுத்தம் செய்யலாம். இதனால் பற்சிதைவு தடுக்கப்படும்.

குழந்தைகளுக்கு இனிப்பு உணவுகளை, கூடுமான வரை குறைந்த அளவே கொடுப்பது நல்லது. அவர்களுக்கு காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்ற உணவுகளை அதிக அளவு கொடுத்து பழக்கப்படுத்துவது. அவர்களின் உடல்நலத்திற்கும் பற்களின் பாதுகாப்பிற்கும் மிகவும் நல்லது.

பால் பற்களின் வேருக்கு அடியில்தான், நிரந்தர பற்களின் ‘பல் மொட்டு’ (Tooth bud) உள்ளது. அது வளர வளர பால் பற்களின் வேர் அரிக்கப்பட்டு, பால் பல் அடி, விழுந்துவிடும், அந்த இடத்தில் நிரந்தரப் பல் வளரும்.

டாக்டர் கோபாலகிருஷ்ணன்

நல்ல பிள்ளை ஆக வேண்டும்!




கெட்ட பிள்ளையாவது எளிது. ஆனால் அந்தப் பெயர் எடுத்து விட்டால் அப்புறம் நமக்கு எத்தனை அவமானம், கஷ்டம்! வாழ்க்கையில் முன்னுக்கு வரவே முடியாது. நல்ல பிள்ளையாவது கடினம் என்று தோன்றலாம். ஆனால் கடவுளின் அருளைத் துணைகொண்டால் இதையும் எளிதாகச் சாதித்து விடலாம். நல்ல பிள்ளை என்று பெயர் வாங்கினால்தான் வாழ்க்கையில் முன்னேற நல்ல நல்ல வாய்ப்புக்கள் வரும். ஒருநாள் இல்லாவிட்டால் ஒரு நாள் கெட்டவன் தண்டனை பெறத்தான் செய்வான்.

ஸ்வாமியின் பாதக் கமலங்களை விடாமல் பிடித்துக்கொண்டு, “எனக்கு வேறு கதியில்லை; நீதான் நல்ல வழிகாட்ட வேண்டும்” என்று வேண்டிக்கொள்ள வேண்டும். பிஞ்சான உங்கள் குழந்தை உள்ளத்திலிருந்து உண்டாகிற வேண்டுகோளுக்கு ஸ்வாமி நிச்சயம் பலன் தருவார். உள்ளத் தூய்மையை இவ்வாறு இளவயதிலேயே பெறுவதுதான் எளிது. பிற்பாடு அழுக்கு ரொம்பவும் தடித்துப் போக விட்டால் நல்ல வழி தேட வேண்டும் என்ற எண்ணம்கூடப் போய்விடும். எனவே, இன்றிலிருந்து பகவானைப் பிரார்த்தியுங்கள். உங்களை அழுக்கேயில்லாமல் பளிச்சென்று வைத்து உங்களுக்கு ஒரு குறைவும் வராமல் ஸ்வாமி காப்பாற்றுவார்!

Tuesday, November 03, 2015

அடங்காத டெங்கு! எச்சரிக்கை ரிப்போர்ட்!

“தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்குன் குனியா மற்றும் டெங்கு நோயால் பாதிக்கப்படு வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்று மதுரையில் தொடரப்பட்ட வழக்கில், “டெங்குவை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என உயர் நீதிமன்றம் உத்தரவிடும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது டெங்கு. சுகாதாரத் துறைக்குப் பெரும் சவாலாக உள்ள இந்தக் காய்ச்சலின் பாதிப்பு காரணமாகப் பலர் பலியாகி வருகின்றனர். இதன் தீவிரத்திலிருந்து தப்பிப்பது எப்படி?
 
டெங்கு காய்ச்சல் வருவதற்கான காரணம் என்ன?

“டெங்கு காய்ச்சல் என்பது திடீரென தோன்றும் வைரஸ் நோயாகும். இது நான்கு வகை வைரஸ்களால் ஏற்படுகிறது. வெப்ப மண்டலம் மற்றும் வெப்ப மண்டல அணிமையிடம் சார்ந்த நாடுகளில் காணப் படும் ஏடிஸ் ஏஜிப்டி (Aedes aegypti) என்ற ஒரு வகை கொசுவால் இது பரவுகிறது.”

நோய்க்கான அறிகுறிகள் என்ன?

“திடீரென காய்ச்சல் ஏற்பட்டு, 40-40.5 டிகிரி செல்சியஸ் வரை உடல் உஷ்ணம் அதிகரிக்கும். சருமத்தில் வேனிற்கட்டிகள், வெடிப்புகள், நோய் தொற்றிய 3-4 நாட்களில் உடலின் நடுப்பகுதியில் தோன்றி, முகம், கை, கால்கள் என்று பரவத் தொடங்கும். இதனுடன் தசைவலி, மூட்டுவலி, தலைவலி ஏற்படும்.”

எப்படிக் கண்டறிவது?

“வெள்ளை அணுக்களின் மொத்த அளவைப் பரிசோதனை செய்தல், அதாவது ரத்தத்தில் சாதாரணமாக இருக்க வேண்டிய லியூகோசைட்ஸ் என்ற வெள்ளை ரத்த அணுக்களின் அளவு (4000-10,000 சி.எம்.) எவ்வளவு குறைந் திருக்கிறது என்பதைப் பரிசோதனை செய்து தெரிந்து கொள்வது அவசியம். டெங்கு காய்ச்சலின்போது ரத்தத்தில் உள்ள ரத்த வட்டுக்களின் (Platelets) எண்ணிக்கை குறைவாகக் காணப்படும். டெங்கு வைரஸுக்கு எதிராக உடல் உற்பத்தி செய்யும் ஆன்ட்டி-பயாடிக் என்று அழைக்கப்படும் எதிர்ப்புச் சக்தியை பரிசோதனை செய்யும் ரத்த நிணநீர் பரிசோதனை ஆகியவை இந்த நோயைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்படும்.”

இதற்கான மருத்துவம் என்ன?

“டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை ஓய்வும், திரவ வகை உணவு அதிகம் உடலில் ஏற்றப்படு வதும், உடல் உஷ்ணத்தைக் குறைக்க அசிட்டா மினோஃபென் மாத்திரைகளும் அவசியம். ரத்த வட்டுக்களை கண்காணிக்கும் அளவுக்கு சீரியஸாகப் போகும்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அவசியம். இதற்கான தகுந்த ஆலோசனைகளை உங்கள் மருத்துவர் வழங்கக்கூடும். ரத்த வட்டுக்கள் அளவு 40,000-த்துக்கும் குறைவாக இறங்கும் போது புதிய ரத்தமோ அல்லது ரத்தவட்டுக்கள் நிறைந்த ஊனீர் (பிளாஸ்மா), அதாவது பி.ஆர்.பி. ஏற்றப்படும்.”

டெங்கு காய்ச்சலின் போது சாப்பிடவேண்டிய உணவுகள் என்ன?

“ஆரஞ்சுப் பழத்தில் நிறைய வைட்டமின்களும், இதரச் சத்துக்களும் காணப்படுகின்றன. செரிமானத்துக்கும், நன்றாகச் சிறுநீர் போவதற்கும் ஆரஞ்சு உதவுவதால் டெங்கு காய்ச்சலிலிருந்து விரைவில் விடுபட முடியும். டெங்கு காய்ச்சலால் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு கஞ்சிதான் மிகமிகச் சிறந்த உணவாகும். கஞ்சி குடிப்பதால் உடலுக்கு நிறைய சக்தி கிடைக்கும். அதைக் குடிப்பதும் மிகவும் எளிது. இளநீரை நிறைய குடிப்பதாலும் டெங்கு காய்ச்சல் விரைவில் குணமாகும். கனிமச்சத்துக்கள், எலெக்ட்ரோ லைட்டுகள் உள்ளிட்ட நீர்ச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. கேரட், வெள்ளரி மற்றும் காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சுத்தமான ஜூஸ்களைக் குடிப்பதால் டெங்கு காய்ச்சல் குணமாகும்.

நிறைய பழச்சாறுகளைக் குடிப்பதாலும் டெங்கு காய்ச்சலிலிருந்து தப்பிக்கலாம். அதிலும் வைட்டமின் சி அதிகமுள்ள ஸ்ட்ரா பெர்ரி, கொய்யா, கிவி, பப்பாளி உள்ளிட்ட பழங்களின் சாற்றைக் குடிக்கலாம். இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை உண்பதாலும் டெங்கு காய்ச்சலை விரட்டலாம். பால், முட்டை, மீன், சிக்கன் ஆகியவற்றைச் சாப்பிடுவது நலம்.

பல வகையான சூப்புகளைச் சாப்பிடுவது டெங்கு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடம்புக்குத் தெம்பு கிடைக்கவும், எலும்புகள் வலுப்பெறவும் சூப்புகள் உதவுகின்றன. அவை பசியைப் போக்குவதோடு, நாவுக்குச் சுவையையும் தருகின்றன. சிட்ரிக் அமிலம் நிறைந்திருப்பதால், எலுமிச்சையும் டெங்கு காய்ச்சலை விரட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையில்லாத விஷத்தை முறிக்கும் தன்மை எலுமிச்சைக்கு உண்டு. ஆரஞ்சுப் பழத்தைப் போலவே எலுமிச்சையும் செரிமானத்துக்கும் நிறைய சிறுநீர் வெளியேறுவதற்கும் உதவுகிறது.”

டெங்கு காய்ச்சலைத் தடுப்பது எப்படி?

“நல்ல தண்ணீரில் உருவாகும் கொசுக்களினால்தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இதனை மருந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம். வீடுகளுக்கு முன் தேங்கி நிற்கும் நீரை, அப்புறப்படுத்துதல் அவசியம். பயன்படுத்தப்படாத டயர், அம்மி, உரல் போன்றவற்றில் தேங்கி நிற்கும் நீரை அப்புறப்படுத்த வேண்டும். திறந்தவெளி தொட்டியில் உள்ள தண்ணீரைக் கீழே கொட்டிவிட்டு தூய்மைப்படுத்த வேண்டும். காய்ச்சல் வந்தால் அருகில் உள்ள மருத்துவமனையை உடனே அணுகவேண்டும்.”

 
 வனராஜன்

 

‘அமராவதி’ தமிழகத்துக்கு பாதிப்பா?


தெலங்கானா தனது தலைநகராக ஐதராபாத்தைத் தக்க வைத்துக்கொள்ள, ஆந்திராவின் புதிய தலை நகருக்கான தேடல் ஆரம்பமானது. இதற்கென அமைக்கப்பட்ட சிவராமகிருஷ்ணன் குழு விசாகப் பட்டினம், விஜயவாடா, திருப்பதி, குண்டூர் எனப் பல நகரங்களைப் பரிந்துரைத்தாலும், ஆந்திராவின் தலைநகரம் ‘அமராவதி’ என்பதில் மாநில முதல்வர் சந்திரபாபு உறுதியாக இருந்தார்.

நாடாளுமன்ற வளாக மண் மற்றும் கங்கை, யமுனை ஆறுகளின் புனித நீர் அடங்கிய கலசங்கங்களைப் பிரதமர் மோடி முதல்வர் சந்திரபாபுவிடம் ஒப்படைத்தார். இவற்றுடன் ஆந்திராவில் ஓடும் ஆறுகளின் தண்ணீர், ஆந்திராவின் 16,000 கிராம / நகரங்கள், மானசரோவர், வாரணாசி, ஆஜ்மீர் தர்கா, மெக்கா, ஜெரூசலம், அமிர்த்சரஸ் தங்கக் கோயில், மேடக் சர்ச், மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல், அம்பேத்கர், அப்துல்கலாம் ஆகியோர் பிறந்த இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட மண் ஆகிய அனைத்தும் அமராவதி நகரக் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படவுள்ளது. 

புதிய தலைநகருக்கான மாஸ்டர் பிளானை சிங்கப் பூரைச் சேர்ந்த சர்பனா ஜுராங்க் நிறுவனம் வடிவமைத்துள்ளது. சட்டமன்றம், உயர் நீதிமன்றம், தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை, அரசு அலுவலகங்கள், குடியிருப்புப் பகுதிகள் ஆகியவை 55,000 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைநகரம் அமைய உள்ளது. இதற்கான உத்தேச செலவு ரூ 4 லட்சம் கோடிகள் (முதற்கட்டமாக 32,000 ஏக்கர் செலவு ரூ 20,000 கோடிகள்). 17 சதுர கி.மீ. சுற்றளவில் நிறுவப்பட உள்ள குடியிருப்புப் பகுதியில் 3 லட்சம் மக்களைக் குடியமர்த்தவும் 7 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.  

நிர்வாகக் கட்டமைப்புக்கு மலேசியாவின் புத்ர ஜயா நகர், ஆற்றின் முகப்புப் பகுதிக்கு லண்டன் தேம்ஸ் நதிக்கரை, நகரக் கட்டமைப்புக்கு துபாய், துறைமுக முன்மாதிரிக்கு சிங்கப்பூர், வானளாவிய கட்டடங்களுக்கு நியூயார்க் எனப் பல நகரங்களின் கலவையாகத் தலைநகர் அமராவதி நிர்மாணிக்கப்படும். அமராவதி அருகே மங்களகிரியில் 5000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம், சென்னை - பெங்களூரு - ஐதராபாத் - விசாகப்பட்டினம் ஆகியவற்றுடன் அமராவதியை இணைக்க உலகத் தரம் வாய்ந்த சாலைகள், 12 கி.மீ. தூர மெட்ரோ ரயில், 15 கி.மீ. தூர அதிவேகப் பேருந்து, 26 ச.கி.மீ. வட்ட - உள்வட்டச் சாலைகள், சிகாகோவில் உள்ளது போன்று கிருஷ்ணா நதியில் ‘வாட்டர் டாக்ஸி’ மற்றும் தீம் பார்க் ஆகியவை இடம்பெறும். 

அறிவுசார் நகரம், நிதி நகரம், சுகாதார நகரம், சுற்றுலா நகரம், அரசு நகரம், விளையாட்டு நகரம், மின்னணு நகரம், நீதி நகரம், கல்வி நகரம் என ஒன்பது நகரங்களை உள்ளடக்கிய ‘நவரத்ன’ நகரமாக அமராவதி விளங்க வேண்டும் என்பதே சந்திரபாபுவின் கனவு. அமராவதி ‘மக்கள் தலைநகரம்’ என்பதால் முதலீடுகளைத் திரட்ட ஒவ்வொரு ஆந்திரரும் குறைந்தபட்சம் ஒரு செங்கல் செலவாக ரூ 10/- அரசுக்கு வழங்க வேண்டுமென முதல்வர் விடுத்த வேண்டுகோளுக்கு தெலுங்கர்களிடையே மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது.  

புதிய தலைநகருக்கான சிறந்த செயல்திட்டங்களுக்குப் பாராட்டுகள் குவிந்தாலும் விமர்சனங்களும், கண்டனங்களுக்கும் தப்பவில்லை. 58 தாலுக்காக்களைச் சேர்ந்த 500 மக்களை வெளியேற்றியதற்கும், ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டதற்கும், நான்கு போகம் காணும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பறிக்கப்பட்டதற்கும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம், விவசாயிகள், சமூக ஆர்வலர் மேதா பட்கர், இடதுசாரிகள், காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகியவை கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. “புதிய தலைநகர் அமைய 1000 ஏக்கர் தரிசு நிலம் போதும் என்பதால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்ட பசுமை நிலங்கள் அனைத்தையும் திருப்பித் தருவோம்” என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் உறுதி அளித்துள்ளார். 

புதிய தலைநகரத்துக்கான மிகப்பெரிய பிரச்னை சுமார் ரூ 4 லட்சம் கோடிகளைத் திரட்டும் பொருளாதாரச் சிக்கல்தான். குறிப்பாகத் தெலங்கானா பிரிவினை காரணமாக ஆந்திராவுக்கு ஏற்பட்டுள்ள ரூ 17,000 கோடிகள் நிதிப் பற்றாக்குறை. அடுத்தது அரசு நிர்வாகத்துக்கான தலைநகரமாக உருவாக்காமல் மேற்கூறிய நவரத்ன நகரமாகச் சந்திரபாபு உருவாக்க முனைந்தது கடுமையான நிதி நெருக்கடியுடன், நிர்வாகக் கோளாறுகளுக்கும் வழிவகுக்குமென எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.  

இவற்றுடன் இந்த இடம் நிலநடுக்கம் மண்டலம் 3-இன் கீழ் வருவதாலும், கருப்புப் பருத்தி மண் நிறைந்த பகுதி என்பதாலும், 70-80 அடுக்கு மாடிக் கட்டுமானங்களோ, மேம்பால / பாதாள மெட்ரோ ரயில்களோ ஆபத்தானவை என்பதால், தலைநகராக உருவாவதற்கான எந்தத் தகுதியும் அமராவதிக்கு இல்லை என்ற சில நிபுணர்களின் அறிக்கைகளையும் புறந்தள்ள முடியாது. 

ஆவலுடன் ‘எதிர்பார்த்த’ ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து என்ற அறிவிப்பு பிரதமரிடமிருந்து கடைசி வரை வராததும், யாருமே ‘எதிர்பார்க்காத’ வகையில் தெலங்கானா முதலவர் சந்திரசேகர ராவ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும். தெலங்கானாவுக்கு சந்திரசேகர ராவும், ஆந்திராவுக்கு சந்திரபாபு நாயுடுவும் முன்னுரிமை தர, வறண்ட பகுதிகளைக் கொண்ட ராயலசீமா மீண்டும் சீந்துவார் இல்லாத சவலைக் குழந்தையானது. செழிப்பான விவசாய நிலங்களை அழித்து அமராவதியைத் தலைநகராக மாற்றுவதை விட, வானம் பார்த்த பூமியான ராயலசீமாவில் குறிப்பாக பிரகாசம் ஜில்லாவில் ஏதேனும் ஒரு பகுதியைத் தலைநகராக மேம்படுத்தி இருக்கலாம் என்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகனின் கருத்தும் கவனிக்கத்தக்கது.  

ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி உருவாவது மகிழ்ச்சியான விஷயம் என்றாலும், இதில் தமிழகத்துக்கு ஓர் ஆபத்து காத்திருப்பதை யாருமே உணர்ந்ததாகத் தெரியவில்லை. சென்னையின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்து வரும் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள அமராவதியின் கட்டுமானப் பணிகளுக்கு கிருஷ்ணா தண்ணீர் அதிக அளவில் பயன்படுத்தப்படும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஏற்கெனவே கேரளம் (முல்லைப் பெரியாறு), கர்நாடகம் (காவிரி) தண்ணீர் வழங்குவதில் பிடிவாதம் காட்டும் நிலையில், ஆந்திராவிலிருந்து (கிருஷ்ணா) மட்டுமே ஓரளவு பிரச்னை இல்லாமல் தண்ணீர் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அமராவதி கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட பிறகு வரும் காலங்களில் கிருஷ்ணா நதி நீர் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு முழுமையாகக் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. 

இது வாழ்வாதாரப் பிரச்னை என்பதால் தமிழக அரசு விழித்துக்கொண்டு கிருஷ்ணா நதிநீர் தடையின்றிக் கிடைப்பதற்கான உத்தரவாதத்தை ஆந்திர அரசிடமிருந்து பெறவேண்டியது கட்டாயமாகும். 

ஜனனி ரமேஷ்

குப்புற விழுவது ஏன்?


ஒருமுகமாக இந்தக் கார்யத்தைப் பண்ண வேண்டும், அப்போது பராக்குப் பார்க்கப்படாது என்பதால்தான் வெளியிலே ஒன்றையும் பார்க்காமல் பூமிப் பக்கமாகத் தலையைக் குனிந்துகொண்டு குப்புற வாக்கில் நமஸ்கரிப்பது, மற்றவர்களால் தலைகுனிவு ஏற்படுவது அவமானம். நாமே குனிவது பஹுமானம்!

பஹிர்முகமாக (வெளிமுகமாக) ஒரு ஜீவனை இழுக்கிற இந்தக் காரியங்களெல்லாமே மல்லாக்குப் பக்கத்தில்தானே இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் லோகத்தின் திசையிலிருந்து திருப்பவே குப்புற நமஸ்கரிப்பது.

குப்புற விழுகிறது, முதுகு காட்டுகிறது - ‘புற முதுகு காட்டுவது’ என்கிறது - இதெல்லாம் அவமானம். ஆனால் மானம் என்பது ‘நான்’ என்கிற அஹம்பாவம் இருக்கிறபோதுதானே முக்கியம்? மநுஷ்ய வாழ்க்கையிலே ‘நான்’-பாவமும் மானமும், அதோடேயே அவமானமும் - அபிமானமுந்தான்! இந்த எல்லாமும் இல்லாமலிருக்க முடியாதுதான். (இவை) இல்லாமல் மட்டுமிருந்தால் நாமே ராஜா தான். என்ன ராஜா? ஆத்மாவை ஜயித்த ராஜா. ஜீவன் முக்தன் என்னும் ராஜா. அப்போது நமஸ்காரமே இல்லை. ஆனால் நம் மாதிரி நிலையிலே வாழ்க்கை நடத்துகிறதற்கு மானாவமானங்களை அவச்யமான இடங்களில் வைத்துக்கொண்டே இருப்போம். ரொம்பவும் அதைக் கொண்டாடிக் கொண்டில்லாமல் கொஞ்சம் அடக்கி வைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அதை வைத்துக் கொள்ளாமலே இருக்கிற இடங்களும் உண்டு என்று அறிவு பெற்று அங்கே மட்டும் தூக்கிப் போடுவோம். அந்த இடங்கள் என்ன? ஈச்வர ஸந்நிதானம், மஹான்கள், பெரியவர்களின் ஸந்நிதானம்தான். அங்கே மானமே வேண்டாம்! குப்புற விழுவோம்! புறமுதுகு காட்டுவோம்! ஆத்ம ஜயம் என்று சொன்னேனே, அந்த வெற்றிக்கு ஏற்றுகிற முதல் சின்னப் படியாக இங்கே இப்படிப் புறமுதுகு காட்டுவோம். பிற இடங்களிலும் ரொம்பவும் மானாவமானம் கொண்டாடிக் கொண்டில்லாமல் கொஞ்சமாவது அடங்குவதற்கு இதுவே ஸஹாயம் செய்யும்.

Monday, November 02, 2015

ஜியோனி ஈலைப் ஈ8 (Gionee Elife E8)

ஜியோனி ஈலைப் ஈ8 (Gionee Elife E8)



* டிஸ்ப்ளே – 6 இன்ச் 1440x2560 பிக்ஸல் 490PPI.
* பின்புற கேமரா – 24 மெகா பிக்ஸல்.
* முன்புற கேமரா – 8 மெகா பிக்ஸல்.
* பிராசஸர் – 2 GHz Octo-Core MediaTek Helio X10 MT6795.
* ரேம் – 3 GB.
* பேட்டரி – 3500 mAh.
* இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 (Amigo 3.1)
* இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 64 GB.
* எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 128 GB வரை.
* எடை – 210 கிராம்.
* சிம் 1 – 4G மைக்ரோ சிம்; சிம் 2 – 3G மைக்ரோ சிம்.
* பிளஸ்: ஃபிங்கர் பிரின்ட் ஸ்கேனர், செயல்பாடு, டிஸ்ப்ளே, பேட்டரி.
* மைனஸ்: டிசைன், எடை, விலை.
விலை: ரூ.34,999.
(இந்த ஸ்மார்ட் போன் ஸ்நாப்டீல் இணையதளத்தில் பிரத்யேகமாக விற்கப்படுகிறது.)
Snapdeal: http://bit.ly/1ki0dwC


அமேசான் ஃபயர் டேப்லெட்: (Amazon Fire Tablet)


* இது ஒரு பட்ஜெட் டேப்லெட்.
* டிஸ்ப்ளே – 7 இன்ச் 1024x600 பிக்ஸல் 171 PPI.
* பின்புற கேமரா – 2 மெகா பிக்ஸல்.
* முன்புற கேமரா – 0.3 மெகா பிக்ஸல்.
* பிராசஸர் – 1.3GHz Quad-Core.
* ரேம் – 1 GB
* இயங்குதளம் – Fire OS.
* இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 8 GB.
* எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 128 GB வரை.
* எடை – 313 கிராம்.
* சிம் வசதி கிடையாது.
* பிளஸ்:  விலை,  இயங்குதளம்.
* மைனஸ்: எடை, டிஸ்ப்ளே.
விலை: $49.99

ஃபாஸில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் வாட்ச் (Fossil Android Smart Watch)


* இது இன்டெல் பிராசஸரைக் கொண்டு இயங்கும் ஸ்மார்ட் வாட்ச்.
* ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் மற்றும் அதற்கு மேல் உள்ள ஆண்ட்ராய்டு வெர்ஷன்கள், ஐ ஓஎஸ் 8.2 மற்றும் அதற்கு மேல் உள்ள வெர்ஷன்களைக் கொண்டுள்ள கேட்ஜெட்டுகளோடு இந்த ஸ்மார்ட் வாட்ச்சை இணைத்துப் பயன்படுத்தலாம்.
* ப்ளூ-டூத் மூலம் இணைக்கப்படும் இந்த ஸ்மார்ட் வாட்ச், கூகுள் Fit, ஹெல்த், Jawbone UP, Under Armour UA Record ஆகிய பிட்நெஸ் அப்ளிகேஷன்களோடு வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட் வாட்சைப் பயன்படுத்தலாம்.
* பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருப்பது  இந்த ஸ்மார்ட் வாட்சின் பிளஸ்.
விலை: ரூ.18,000.


மோட்டோ எக்ஸ் ஸ்டைல்: (Moto X Style)

* டிஸ்ப்ளே – 5.7 இன்ச் 1440x2560 பிக்ஸல் 520PPI.
* பின்புற கேமரா – 21 மெகா பிக்ஸல்.
* முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
* பிராசஸர் – 1.7 GHz Hexa-core      Qualcomm Snapdragon 808 MSM8992.
* ரேம் – 3 GB
* பேட்டரி – 3000 mAh.
* இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1.1
* இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 16 GB.
* எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 128 GB வரை.
* சிம் 1 & சிம் 2 – 4G GSM நானோ சிம்.
* பிளஸ்: எடை – 179 கிராம், டிஸ்ப்ளே, இயங்குதளம், எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், தரம்.
* மைனஸ்: சுமாரான கேமரா, பேட்டரி.
விலை: ரூ.31,999.
Flipkart: http://bit.ly/1GQW2lM

செ.கிஸோர் பிரசாத் கிரண்