Search This Blog

Sunday, May 31, 2015

யூ யுபோரியா (Yu Yuphoria)

‘யூ’ என்பது மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம். மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஒரு பிரீமியம் பிராண்ட் இமேஜ்ஜை உருவாக்க யூ ஸ்மார்ட் போன் துணை நிறுவனத்தைத் தொடங்கியது. யூ நிறுவனத்தின் முதல் கேட்ஜெட் ‘யுரேகா’. குறைந்த விலையில் அதிகத் தொழில்நுட்பம் என்ற யுக்தியில் தயாரிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் போன், பல எல்லைகளைத் தொட்டது. இதன் தொடர்ச்சியாக யூ நிறுவனம், தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட் போனான  ‘யுபோரியா’-வை சமீபத்தில் வெளியிட்டது.

டிசைன்!

யுபோரியா ஸ்மார்ட் போன் பிளாஸ்டிக்கைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஓரங்கள் முழுவதும் மெட்டலைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட் போனை கவர்ச்சியாகக் காட்சியளிக்க உதவுகிறது. பின்புற கேமராவைச் சுற்றி ஒரு பெரிய உலோக வளையம் அமைந்துள்ளது. இதுவும் போனின் டிசைனுக்குப் புதுமையைத் தருகிறது. யுபோரியா ‘Buffed Steel’ மற்றும் ‘Champagne Gold’ ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த போனின் பரிமாணங்கள் 142.4x73x9.35 மி.மீ. எடை 143 கிராம்.

கேமரா!

யுபோரியா, 8MP பின்புற கேமராவையும் 5MP முன்புற கேமராவையும் கொண்டுள்ளது. பின்புற கேமரா சூரியவெளிச்சத்தில் கச்சிதமான படங்களை எடுக்கும் திறனைப் பெற்றுள்ளது. முன்புற கேமரா தனது 4P லென்ஸ்களைக் கொண்டு சிறப்பான செல்ஃபிகளை எடுக்க உதவுகிறது. ஆனால், பின்புற கேமரா மூலம் எடுக்கப்படும் 720P வீடியோ சுமாராகவே இருக்கிறது.

டிஸ்ப்ளே!
யுபோரியா, 5 இன்ச் 720*1280 பிக்சல்ஸ் 294 PPI 16.7M டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. பட்ஜெட் ஸ்மார்ட் போனில் இதுபோன்ற அதிக தொழில்நுட்ப டிஸ்ப்ளேக்கள் கிடைப்பதில்லை. மேலும், டிஸ்ப்ளேவின் பாதுகாப்புக்காக ‘Corning Gorilla Glass 3’-யும் இதில் அமைந்துள்ளது. இந்த டிஸ்ப்ளே மிருதுவாக இருக்கிறது. ஆனால், வெளிச்சத்தில் பயன்படுத்த இந்த டிஸ்ப்ளே சுமாராகவே உள்ளது.


தொழில்நுட்பம்!

யுபோரியா, Qualcomm’s 1.2GHz quad-core Snapdragon 410 SoC பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது. மேலும், பிரத்யேகமான Adreno 306 கிராபிக்ஸ் பிராசஸரும் அடங்கும். 2GB ரேம் மற்றும் 16GB இன்டர்னல் மெமரியை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போனின் மெமரியை 32GB வரை SD கார்டு மூலம் விரிவுபடுத்திக் கொள்ளலாம். டூயல் சிம் வசதிகளைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போனின் ஒரு சிம் மட்டும் 4G LTE வசதியைக் கொண்டுள்ளது
.
பேட்டரி!

யுபோரியா, 2230mAh பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது. அதிகப் பயன்பாட்டில் சுமார் 7.5 மணி நேரம் வரை உழைக்கும் இந்த பேட்டரி, வாடிக்கையாளர்களின் ஒருநாள் பயன்பாட்டுக்குப் போதுமானதாக இருக்கும்.

இயங்குதளம்!

இந்த போனின் சிறப்பம்சம், அதன் இயங்குதளம்தான். யுரேகா ஸ்மார்ட் போனை போலவே, யுபோரியா ஸ்மார்ட் போனிலும் ‘Cyanogen’ இயங்குதளமே பயன்படுத்தப்பட்டுள்ளது. Cyanogen இயங்குதளம் கூகுளின் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. யூபோரியாவில் அமைந்துள்ள ‘Cyanogen OS 12’ இயங்குதளம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் வசதிக்கேற்ப பல ஆப்ஷன்களை மாற்றிக் கொள்ளலாம். இந்த வசதி எந்த இயங்குதளத்திலும் கிடையாது.
யூ யுபோரியாவின் இந்திய விலை ரூபாய் 6,999.

பிளஸ்:  டிசைன்  ரேம்,  விலை

மைனஸ்:  பின்புற கேமரா,  சுமாரான செயல்பாடு.

செ.கிஸோர் பிரசாத் கிரண்

மின்சாரம் தரும் சூரியத் தகடுகள்!

மனித வரலாற்றில் அரிய கண்டுபிடிப்புகளின் வரிசையில் முக்கியமான இடத்தைப் பெறுவது மின்சாரம். இந்த மின்சாரத்தை மனிதன் ஆரம்பத்தில் தண்ணீரிலிருந்து, நெருப்பில் இருந்து உருவாக் கினான். ஆனால், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அதிலிருந்து மின்சாரம் தயாரிப்பது தடைபட்டது. நிலக்கரி, பெட்ரோல் தட்டுப்பாடு வந்தபோது மின்சார உற்பத்தி குறைந்தது.


எனவே, மின்சாரம் தயாரிக்க அள்ள அள்ளக் குறையாத சக்தி ஒன்று மனிதனுக்கு தேவைப்பட்டது. அதுதான் சூரிய சக்தி. 1897-ம் ஆண்டு பிரான்க் ஷூமேன் என்பவர் (Frank Shuman) சூரிய வெப்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கக்கூடிய நோக்கில் ஆராய்ச்சியைத் துவங்கினார். 1908-ல் சோலார் மின் நிலையங்களை உருவாக்கி மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்று ஒரு அமைப்பை வடிவமைத்துக் காட்டினார். பின்னர் 1912-ல் எகிப்தில் முதல் சோலார் மின் நிலையத்தை நிறுவி சூரிய சக்தியில் மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்பதை  நிரூபித்தார்.

சோலார் மின் நிலையங்கள் உருவாக்கப்பட்ட பின்பு, ஒவ்வொரு சாதனத்திலும் சோலார் பலகையைப் பொருத்துவதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தால் அந்த சாதனத்தை இயங்க வைக்க முடியும் என்று நிரூபித்தனர். உதாரணமாக, சோலார் தகடு பொருத்தப்பட்ட தெரு விளக்குகள், சூரிய ஒளியால் இயங்கும் மின்விசிறி என புதுமைகள் அரங்கேறின.


இதனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் விதமாக, விமானத்தில் சோலார் தகடுகள் பொருத்தப்பட்டு உலகம் முழுவதையும் சுற்றிய சோலார் இம்பல்ஸ் விமானத்தையும் வெற்றிகரமாக இயக்கியுள்ளனர். ஆறுகளை சோலார் தகடுகளால் மூடி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் குஜராத்தில் அறிமுகம் ஆகியுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு மாசு தராத வகையில் சோலார் மின் உற்பத்தி உள்ளது. வீட்டுக்கு தேவையான மின்சாரத்தை அரசிடம் இருந்து எதிர்பார்க்காமலும், நாட்டின் எரிபொருள் வளத்தைக் குறைக்காமலும் இருக்கும் விதத்தில் உள்ள சூரிய மின்சாரமே எதிர்கால மின்தேவைக்கு  ஆதாரம்!

ச.ஸ்ரீராம்

Saturday, May 30, 2015

ஐ.பி.எல் கோப்பை முயற்சிக்கு மகுடம்!

 
"காத்து காத்து எதிர்பார்த்த கஸ்தூரி மாம்பழத்தை காகம் கொத்திப் போய்விட்டதே” என்றொரு பழமொழி மலையாளத்தில் உண்டு. இவ்வருட ஐ.பி.எல்லின் மிகச் சிறந்த அணி இறுதிப் போட்டியில் தடுமாறி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்று கோப்பையை மும்பைக்கு தாரை வார்த்தபோது சென்னை அணி ரசிகர்களுக்கு இந்த பழமொழிதான் ஞாபகம் வந்திருக்கும். மும்பையை விட பல மடங்கு முதிர்ச்சியும் கூர்மையும் கொண்ட அணி சென்னை. நிச்சயம் இறுதிப் போட்டியை வென்றிருக்க வேண்டும். ஆனால் மோசமான திட்டமிடல் மற்றும் எதிர்மறை அணுகு முறையால் தோற்றது. ‘மும்பை இந்தியன்ஸ்’ விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது என்பதையும் மறுப்பதற்கில்லை.
 கொல்கொத்தா ஈடன் கார்டன்ஸ் ஆடுதளத்தில் எப்படி ஆட வேண்டும் என்பது ஆட்டத்தை பார்த்த ஒவ்வொரு பார்வையாளனுக்கும் தெரிந்தது. ஆனால் சென்னை அணி மட்டும் போன காங்கிரஸ் அரசாங்கம் போல் தன் தவறுகளை திருத்திக் கொள்ள மறுத்தது. இறுதி ஏழு ஓவர்களில் கிட்டத்தட்ட ஒரு ஓவருக்கு 15 ஓட்டங்கள் விதம் அடிக்க வேண்டி வந்தது. ஆனால் 8 விக்கெட்டுகள் இருந்தன. புலியின் முதுகில் அமர்ந்து கொண்டே அதிலிருந்து தப்பிப்பது போல் அந்நிலையில் இருந்து வெல்வது கிட்டத்தட்ட அசாத்தியமானது.

சென்னை அணிக்கு குறிப்பிடும்படியான பலவீனங்கள் ஏதும் இல்லை. இறுதி ஆட்டத்தில் 202 ஓட்டங்களை மும்பை அடிக்கவிட்டதால் மட்டும் நாம் சென்னையின் பந்து வீச்சில் ஓட்டைகளை தேடுவது நியாயமல்ல. இதே பந்து வீச்சுதான் இத்தொடரில் பல ஆட்டங்களைச் சென்னை வெல்ல காரணமாய் அமைந்தது. அஷ்வின், பிராவோ, நெஹ்ரா, ஜடேஜா ஆகியோர் இதுவரையிலும் சிறப்பாகவே வீசி வந்தனர்.

சென்னையின் பந்து வீச்சு எம்.ஏ சிதம்பரம் மைதானத்தின் மந்தமான ஆடுதளத்துக்கு மிக மிக தோதானது. பந்து ஓரளவுக்கு சுழன்ற ராஞ்சியில் நடந்த பங்களூருவுக்கு எதிரான தகுதி ஆட்டத்திலும் சென்னை அணியினர் நன்றாக பந்து வீசினர். ஆனால் இறுதிப் போட்டிக்கான ஈடன் கார்டன் ஆடுதளம் சற்று குழப்பமானது. ஏற்றத்தாழ்வாய், கொஞ்சம் மெத்தனமாய், வேகவீச்சுக்கு தோதாய் வித்தியாசமாய் அமைந்தது. இத்தளத்துக்கு ஏற்றபடி சென்னையினரால் போதுமானபடி தம்மை தகவமைக்க இயலவில்லை. ரோஹித், பொலார்ட், ராயுடு போன்றவர்கள் ஆறாவது கியரில் தம் ஆட்டத்தை பறக்க விடும் போது ஆடுதளம் பற்றியோ பந்து வீச்சு திட்டங்கள் பற்றியோ யோசிக்க யாருக்குத்தான் நேர மிருக்கும்?

ஆனால் மட்டையாடும் போது இன்னும் தெளிவான அணுகு முறை இருந்திருக்க வேண்டும். முதல் ஆறு ஓவர்கள் ஆக்ரோஷமாய் ஆடியிருக்க வேண்டும். ஆனால் சென்னை மந்தமாய் மட்டையாடி விக்கெட்டுகளை பாதுகாக்க முனைந்தது. சென்னை மட்டையினரின் மெத்தனமான, எதிர்மறையான மட்டையாட்டம் மலிங்கா மக்ளீகன், வினய் போன்ற மும்பை வேகவீச்சாளர்களை நிதானமாய் தம் தேவைக்கேற்றபடி வீச அனுமதித்தது. வீச்சாளர்களை எந்தவித நெருக்கடிக்கும் அவர்கள் ஆளாக்கவில்லை. இதற்கு தொடக்க மட்டையாளர் மெக்கெல்லம் இல்லாததும், மற்றொரு மட்டையாளர் ஸ்மித் சுமாரான ஆட்டநிலையில் இருந்ததும், புதிதாய் வந்த ஹஸ்ஸிக்கு வயதாகிவிட்டதும் ஒரு காரணம்.

பலரும் விமர்சிப்பது போல் சென்னை அணி நெருக்கடியில் ஆட முடியாது choke ஆகிவிட்டதாய் நாம் கருத வேண்டியதில்லை. டி20 ஆட்டத்தில் பூநாகம் தீண்டிக் கூட அரசன் சாகக்கூடும். அடுத்த ஐ.பி.எல் தொடரில் இதே சென்னை அணி மீண்டும் கோப்பையை வெல்லக்கூடும். அதற்கான அத்தனை தகுதிகளும் இவ்வணிக்கு உள்ளது.

இத்தொடரில் சோபித்ததன் மூலம் ஹர்பஜன் சிங் இந்திய டெஸ்ட் அணியில் தன் இடத்தை மீட்டுள்ளார். அவர் கடந்த ஒரு வருடமாகவே மிகச் சிறப்பாய் பந்து வீசித்தான் வருகிறார். 2000 தொடக்கத்தில் நாம் பார்த்த சரவெடி ஹர்பஜன் இவர் அல்லவென்றாலும், இப்போதும் ஹர்பஜனால் தன் அணியை தோல்வியின் விளிம்பில் இருந்து மீட்டு ஜெயிக்க வைக்க முடியும். ஆனால் தோனி மாற்றப்படாத அணியுடன் எப்போதும் ஆட விரும்புவதால் ஹர்பஜன் புறக்கணிக்கப்பட்டார். இப்போது டெஸ்ட் ஆட்ட அணித்தலைவராய் கோலி நியமிக்கப்பட்டு விட்ட நிலையில் புது மாற்றங்கள் பலவற்றை எதிர்பார்க்கலாம். தோனி முதலாவதாய் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாய் ரவீந்திர ஜடேஜா நீக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, உலகக் கோப்பை ஆகிய தொடர்களில் ஜடேஜாவின் ஆட்டம் மிகவும் ஏமாற்றமளித்தது. இங்கிலாந்தில் முதல் டெஸ்டை அவர் வெல்ல உதவினாலும் ஆண்டர்ஸனுடனான அவரது சர்ச்சை அணியின் கவனத்தை குலைத்து தொடர் தோல்வியை நோக்கி தள்ளியது. ஜடேஜா இதுவரை தோனி தமக்கு அளித்த மட்டற்ற ஆதரவை இனி கோலியின் தலைமையின் கீழ் எதிர்பார்க்க இயலாது.

இந்த ஐ.பி.எல் தொடரில் உமேஷ் யாதவ், நெஹ்ரா, அரவிந்த், ஹர்ஷல் படேல், பியுஷ் சாவ்லா, ஹர்பஜன், தாஹிர், அனிருத், சந்தீப் ஷர்மா, பிரேட் ஹோக், அங்கீத் ஷர்மா, புவனேஷ்வர் குமார், பிராவோ ஆகியோர் சிறப்பாய் பந்து வீசினர். இப்பட்டியலில் அதிகமான இந்தியர்கள் இடம்பெற்றிருப்பதைக் கவனிக்கலாம். ஆம் இவ்வருட ஐ.பி.எல்லில் இந்திய வீச்சாளர்கள் மிக முக்கிய பங்காற்றினர்.

ஆனால் மட்டையாட்டத்தில் நம்மவர்கள் அது போல் சோபிக்கவில்லை. ரோஹித் ஷர்மா, சிரேயாஸ் ஐயர் போன்ற மிகச்சிலர் மட்டுமே தொடர்ந்து நன்றாய் மட்டையாடினர். மற்ற படி எ.பி.டிவில்லியர்ஸ், கெய்ல், பொலார்ட், மெக்கல்லம், வார்னர் போன்றோர்தான் இவ்வருட மட்டையாட்ட நட்சத்திரங்கள்.

ஹர்திக் பாண்டியா எனும் பரோடா மாநில ஆல் ரவுண்டர் இம்முறை மும்பை அணிக்காய் களமிறங்கி சிறப்பாய் பந்து வீசவும் மட்டையாடவும் செய்தார். வேகவீச்சு ஆல் ரவுண்டர்கள் இந்தியாவில் மிக மிக அரிது என்பதால் எதிர்காலத்தில் பாண்டியாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளித்து இந்திய அணியில் இடமளிப்பது இங்கிலாந்தில் நடக்கும் அடுத்த உலகக் கோப்பையில் நாம் கலக்குவதற்கு அவசியம்.

ஜீவன்= ஹிருதயம் + மூளை


வித்யை என்பது ‘ஏதோ ஒரு துறையில் அறிவு’ என்றே ஆகிறது. அது எந்தத் துறையாக இருந்தாலும் சரி, அதற்கும் ‘ஸிஸ்டமாடிக்’காக ஒரு ‘முறை’ ஏற்படுத்திச் சொல்லிக் கொடுத்தால் அது வித்யா போதனையாகி விடுகிறது. அப்படிப் போதிப்பவர் குரு ஆகிவிடுகிறார். ஆனால் இது ஒரு ஜீவனை மூளை என்பதன் எல்லைக்குள் மட்டும் கொண்டு வந்து பின்னப்படுத்தி, குரு என்ற ஸ்தானத்தையும் ரொம்பக் குறைத்துவிடுகிற கார்யந்தான். 

அறிவு வளர்ச்சி என்ற ஒன்றை மட்டும் கவனித்து, எந்தத் துறையில் அறிவை வழங்குவதும் வித்யா போதனை என்னும்போது ஜீவனுடைய ஹ்ருதயத்தை ஒதுக்கிவிட்டதாக ஆகிறது. மூளை - ஹ்ருதயம் இரண்டும் சேர்ந்தே ஜீவன். ஒரு ஜீவன் உண்மையான ஜீவனாக வாழவும், ஜீவனே தேவனாகக் கூட உசரவும் மூளையைவிட ஹ்ருதய அபிவ்ருத்திதான் முக்யமானது. அதனால்தான் மூளைக்கு மாத்திரம் சரக்கு ஏற்றி அதை வ்ருத்தி செய்வதை ‘ஜீவனை பின்னப் படுத்துவது’ என்றது. ஜீவனை புத்திசாலியாக மாத்திரமில்லாமல் குண சாலியாகவும் ஆக்க வேண்டியதே நிஜகுருவின் கடமை. அப்படியில்லாமல் புத்திசாலியாய் மட்டுமே பண்ணும்போது குருவின் ஸ்தானத்தை ரொம்பவும் குறைத்து, குறுக்கி, இறக்கிவிடுவதாக ஆகிவிடுகிறது.

பகவத் ஸ்ருஷ்டியில் மநுஷ்ய மூளை என்பது ஒரு அற்புதமான கருவியாக இருப்பதைக் கவனித்து - அதை மாத்திரமே கவனித்து - வெறும் அறிவை மட்டுமே சார்ந்து ஒரு ஆர்ட்டாக, ஸயன்ஸாக ஸிஸ்டம் செய்யப்பட்ட எதையும் ‘வித்யை’ என்று வைத்து விட்டார்கள். அதன் போதகர் ‘குரு’ என்றும் சொல்லிவிட்டார்கள். ஆனால் இதுவே நம் பூர்விகர்களின் பூர்ணமான அபிப்ராயம் என்று நினைத்து விடக்கூடாது.

Wednesday, May 27, 2015

ஷியோமி எம்ஐ பேண்ட்(Xiaomi Mi Band)

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் ‘ஹெல்த்’ சம்பந்தமான கேட்ஜெட்டுகள் ஏராளமாக வெளிவர தொடங்கியுள்ளன. அந்தவகையில் ஷியோமி நிறுவனம் ‘ஷியோமி எம்ஐ பேண்ட்’ என்னும் கேட்ஜெட்டை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.  இந்த பேண்டின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.


டிசைன்!

இந்த பேண்ட் இரண்டு பாகங்களைக் கொண்டது. ஒன்று, பேண்ட். மற்றொன்று, ப்ளூ-டூத் கேப்சூல் (Bluetooth Capsule). இந்த கேட்ஜெட்டில் எந்த ஒரு ஸ்க்ரீனும் கிடையாது. ப்ளூ-டூத் கேப்சூலில் மட்டும் மூன்று எல்இடி   லைட்டுகள் உள்ளன. சிவப்பு, நீலம், பச்சை, ஆரஞ்சு என நான்கு வண்ணங்களில் ஒன்றை இந்த எல்இடி லைட்டாக செட் செய்துகொள்ளலாம். இந்த பேண்ட் தூசி மற்றும் மழையில் தாங்கும் தன்மையைப் பெற்றுள்ளது. இதனை அணியும்போது தோல் பிரச்னைகள் வராது என்று ஷியோமி நிறுவனம் உறுதியளித்துள்ளது. ப்ளூ-டூத் கேப்சூல் அலுமினியம் அலாய் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது.


பயன்கள்!

ஷியோமி எம்ஐ பேண்ட் நமது தூக்கத்தின் அளவை வகைப்படுத்திக் காண்பிக்கும் திறனைப் பெற்றுள்ளது. மேலும், நாம் எவ்வளவு தூரம் நடக்கிறோம் மற்றும் எவ்வளவு கலோரி செலவாகிறது என தெளிவாகக் கணக்கிட்டுக் காண்பிக்கிறது. இதைத் தவிர, இந்த பேண்ட் பக்கத்தில் இருக்கும்போது, அதோடு இணைக்கப்படுள்ள ஸ்மார்ட் போனை பாஸ்வேர்டு இல்லாமல் ஓப்பன் செய்யலாம்.  அலாரம் மற்றும் போன் கால்களுக்கு இந்த கேட்ஜெட் வைப்ரேட் ஆகும்.

பயன்படுத்தும் முறை!

இந்த பேண்ட்-ஐ பயன்படுத்த கண்டிப்பாக ஸ்மார்ட் போனில் ‘Mi Fit’ அப்ளிகேஷன் தேவை. இந்த அப்ளிகேஷன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளத்துக்கு கிடைக்கிறது. மற்றும் ப்ளூ-டூத் 4.0 ஸ்மார்ட் போனில் இருக்க வேண்டும். இந்த கேட்ஜெட்டை ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் அதற்குமேல் உள்ள வெர்ஷன்களிலும், ஐஓஎஸ் 7.0 மற்றும் அதற்குமேல் உள்ள வெர்ஷன்களிலும் மட்டுமே பயன்படுத்த முடியும்.


பேட்டரி!

இது 41mAh ‘Lithium Polymer’ பேட்டரியைக் கொண்டது. 8 மி.மீ அடர்த்தி உள்ள இந்த பேட்டரி 30 நாட்கள் வரை உழைக்கக்கூடும்.

அளவு!

இந்த பேண்ட் 36 மி.மீ நீளமும் 14 மி.மீ அகலமும் 9 மி.மீ அடர்த்தியும் கொண்டது. 5 கிராம் அளவுக்கும் குறைவான எடையைக் கொண்டுள்ள இந்த கேட்ஜெட், ஆறு வண்ணங்களில் கிடைக்கிறது. பேண்டின் அளவை வாடிக்கையாளர்கள் தங்களது வசதிக்கேற்ப 157 மி.மீ முதல் 205 மி.மீ வரை அட்ஜஸ்ட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.


விலை!

இந்த பேண்ட் 999 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது.

பிளஸ்: விலை, சிறந்த தொழில்நுட்பம், பேட்டரி

மைனஸ்: ஸ்க்ரீன் கிடையாது, குறைந்த சேவைகள்

செ.கிஸோர் பிரசாத் கிரண்

மின் விசிறிகள்!

ஆதிகாலத்து மனிதன் இயற்கையிலிருந்து பிரிக்க முடியாதபடிஇயைந்து வாழ்ந்தான். மரப்பொந்துகளிலும் பாறை இடுக்குகளிலும் பதுங்கி இருந்த அவனுக்கு வெக்கையோ, வியர்வையோ ஒரு பிரச்னையாக இருந்ததில்லை.
பிற்பாடு நாகரிகமடைந்த மனிதன் கற்களைக் கொண்டு வீடு கட்டி வசிக்க ஆரம்பித்தான். ஜன்னல்கள் வைக்கப்பட்டாலும் வீட்டுக்குள் காற்று வருவது குறைந்துபோனது. இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு என்று மனிதன் யோசித்தபோது உருவானதுதான் மின் விசிறிகள்!


17-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் காற்று மற்றும் வெற்றிடம் தொடர்பான ஆராய்ச்சிகள் ஆரம்பிக்க துவங்கின. 1727-ம் ஆண்டு கிரிஸ்டோபர் ரென் என்பவர் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மோட்டார் மூலம் இயங்கும் அமைப்பை நிறுவினார். பின்னர் பல மாறுதல்களுடன் பல இடங்களில் இந்த அமைப்பு பொருத்தப்பட்டது.

1882-ம் ஆண்டு நியூ ஆர்லண்ட்சை சேர்ந்த ஸ்க்யூலயர் ஸ்காட்ஸ் வீலர் என்பவர் மின்சாரம் மூலம் இயங்கும் மின் விசிறியைக் கண்டுபிடித்தார். இது க்ராக்கர் & குர்டிஸ் நிறுவனத்தால் முதல் முதலில் சந்தைப்படுத்தப்பட்டது. 1920-களில் பெரிய தொழிற் சாலைகளில் உள்ளே உள்ள காற்றை வெளியேற்றி, வெளியே உள்ள இயற்கை காற்றை உள்ளே இழுக்கும் விதத்திலான மின் விசிறிகள் பயன்பாட்டுக்கு வந்தன.


1970-களுக்குப் பிறகு உலகம் முழுக்க வீடுகளில் மின் விசிறிகள் பயன்படுத்துவது அதிகரித்தது. ஆறு இறக்கைகள் கொண்ட மின் விசிறி, நான்கு இறக்கைகள் கொண்ட மின் விசிறி ஆகிய வற்றை மக்கள் பயன்படுத்துவது அதிகரித்தது. இன்று சூரிய ஒளியில் இயங்கும் மின் விசிறி வரை இந்த கண்டுபிடிப்பு காலத்தின் தேவைக்கேற்ப வளர்ந்து வருகிறது.

கோடை காலத்தில் இன்று வீட்டுக்குள் நுழைந்தவுடன் முதலில் நாம் செய்யும் செயல் மின் விசிறியை ஓடவிடுவதுதான். அறையின் வெப்பத்தைத் தணிக்க இப்போது ஏசி மெஷின்கள் பயன்படுத்தப்பட்டாலும், அது அதிக  விலையுள்ள சாதனமாகவே உள்ளது. இன்றும் சாதாரண மக்கள் கொசுக்கடியில் இருந்தும் வெக்கையிலிருந்தும் தப்பித்து நிம்மதியாக தூங்குவதற்கு அடிப்படைத் தேவையாக இருப்பவை மின் விசிறிகள்!

ச.ஸ்ரீராம்

Tuesday, May 19, 2015

உலகை மாற்றிய புதுமைகள்! - செயற்கைக்கோள்

மனிதர்களால் செல்ல முடியாத இடத்தில் என்ன இருக்கும் என்ற ஆர்வம் மனிதர்களுக்கு எப்போதுமே இருந்து வந்தது. இதனை பற்றிய தேடல்களும் அதிகமாக மனிதனுக்கு இருந்துவந்தது.

இதற்கான ஆராய்ச்சி 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வேகமெடுத்தன. 1903-ம் ஆண்டு கான்ஸ்டனின் சையோகோவ்ஸ்கி (Konstantin Tsiolkovsky) முதன்முதலில் பூமியில் இருந்து 8 கி.மீ தொலைவில் வட்டமடித்து அங்குள்ள தகவல்களைப் பதிவு  செய்தார். ஆனால், அதன் மூலம் பெரிய அளவிலான தகவல்களைப் பெறமுடிய வில்லை. அதேசமயத்தில் ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்றன.

1957-ம் ஆண்டு சோவியத் யூனியன் விண்வெளிக்கு ராக்கெட் மூலம் ஸ்புட்னிக் 1 எனும் செயற்கைக்கோளை வெற்றிகரமாக அனுப்பியது.

ஸ்புட்னிக் 1 விண்வெளிக்கு அனுப்பப்பட்ட அடுத்த மாதமே ஸ்புட்னிக்-2 லைக்கா என்ற நாயுடன் விண்வெளிக்கு பாய்ந்தது. அதுதான் ஒரு உயிரினத்தோடு விண்வெளிக்கு சென்ற முதல் விண்கலம். இந்த விண்கலன்கள் வானில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களில் உயிர்்கள் வாழ்கின்றனவா, தட்பவெட்ப நிலை எப்படி உள்ளது என்பது போன்ற பல விவரங்களைத் தந்தன.


பிற்பாடு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்பி சாதனை படைத்தன. மனிதர் களும் விண்வெளிக்குச் செல்ல முடியும் என்பதை இந்த செயற்கைக்கோள்கள் நிரூபித்தன. விண்வெளியில் ஒரு நிலையத்தை அமைத்து, அங்கு ஆறு மாதம் தங்கிப் பணிபுரியும் அளவுக்கு செயற்கைக்கோள்கள் வளர்ந்து விட்டன.

செயற்கைக்கோள்கள் விண்வெளியில் உலா வரத் தொடங்கியபின்புதான் புயல் கொடுமைகளில் இருந்து காத்துக்கொள்ளும் வழிபிறந்தது. பூமியின் வளங்களை ஆராய்ந்தறிய முடிந்தது. தகவல் தொடர்பு பல மடங்கு வளர்ந்தது. உலகமே ஒரு கிராமமாக மாறியது.

இன்றைக்கு பூமிக்கு ஏற்படப் போகும் சிறு பாதிப்பையும் முன்கூட்டியே அறிவிக்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கும் இந்த செயற்கைக்கோள்கள் உலகை மாற்றிய புதுமைக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம்!

ஹுவாய் ஹானர் 4C(Huawei Honor 4C)

சமீபகாலமாக பட்ஜெட் ஸ்மார்ட் போன்களின் மார்க்கெட் பலத்த போட்டியுடன் காணப்படுகிறது. இந்த நிலையில் ஷியோமி, லெனோவோ, அசூஸ்,மைக்ரோமேக்ஸ் போன்ற நிறுவனங்கள் புதிய ஹேன்ட் செட்களைக் குறுகிய காலத்தில் வெளியிட்டு, தங்களது மார்க்கெட்டை தக்கவைத்து வருகின்றன. ஹுவாய் நிறுவனமும் இந்த பட்ஜெட் ஸ்மார்ட் போன் மார்க்கெட்டில் போட்டியிட்டு வருகிறது. அந்த வகையில், ஹுவாய் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் போனான ‘ஹுவாய் ஹானர் 4C’ என்ற ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது.


1. டிசைன்!

இந்த ஸ்மார்ட் போன் ஐரோப்பிய டிசைனர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாகக் காட்சியளிக்கும் இந்த ஸ்மார்ட் போன் வெள்ளை மட்டும் கறுப்பு என இரண்டு நிறங்களில் வருகின்றன. கறுப்பு நிற மாடலைவிட வெள்ளை நிற மாடலே பார்ப்பதற்குக் கவர்ச்சிகரமாக இருக்கிறது. பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் பயன்படுத்த எளிதாக இருக்கும். ஆனால், சராசரி பட்ஜெட் ஸ்மார்ட் போன்களைவிட இதன்  எடை அதிகம். (162 கிராம்)


2. டிஸ்ப்ளே!

இந்த ஸ்மார்ட் போன் 5 இன்ச் 720 x 1280 pixels (~294 ppi pixel density) 16M IPS LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே பிரகாசமாகவும் கச்சிதமாகவும் இருக்கிறது. ஆனால், சூரிய ஒளியில் பயன்படுத்தும்போது இந்த டிஸ்ப்ளே சற்று சுமாராகவே இருக்கிறது.

3. தொழில்நுட்பம்!

இந்த ஸ்மார்ட் போன் ஹுவாய் நிறுவனத்தின் பிரத்யேகமான ‘Kirin’ பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது. இந்த 64-பிட் 1.2GHz HiSilicon Kirin 620 பிராசஸர் மொத்தம் எட்டு Cortex-A53 கோர்களைக் கொண்டு செயல்படுகிறது. 2GB ரேமைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போனின் இன்டர்னல் மெமரி 8GB. மேலும், இதை 32 GB வரை SD கார்டு மூலம் விரிவுபடுத்திக் கொள்ளலாம்.


4. இயங்குதளம்!

இந்த ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்ட் கிட்-கேட் 4.4.2 இயங்குதளத்தைக் கொண்டு இயங்குகிறது. இதில் ஹுவாய் நிறுவனத்தின் பிரத்யேகமாக EMUI 3.0 டிசைன் மாற்றங்களும் இந்த ஸ்மார்ட் போனில் அடங்கும்.

5. கேமரா!

இந்த ஸ்மார்ட் போன் 13 மெகா பிக்ஸல் பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. இதில் சோனி நிறுவனத்தின் CMOS சென்ஸார் அடங்கும். Led பிளாஷ் வசதியைக் கொண்டுள்ள இந்த கேமராவில் எடுக்கப்படும் படங்கள் நன்றாக இருக்கின்றன. மேலும், 5 மெகா பிக்ஸல் முன்புற கேமராவும் இந்த ஸ்மார்ட் போனில் அடங்கும். 2550 mAh பேட்டரியைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், டூயல் சிம் வசதிகளைக் கொண்டுள்ளது.


6. விலை! 

Flipkart.com இணையதளத்தில்  ரூபாய் 8,999 என்ற விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

பிளஸ்:
இயங்குதளம்
பேட்டரி

மைனஸ்:
தொழில்நுட்பம்
டிசைன்

செ.கிஸோர் பிரசாத் கிரண்

கின்னஸ் 60

உலகின் மிக வித்தியாசமான, விறுவிறுப்பான, வியக்கவைக்கும் சாதனைகளை ஆவணப்படுத்தும் கின்னஸ் புத்தகத்துக்கு இது 60-வது ஆண்டு.
‘கின்னஸ்’ என்கிற வார்த்தைக்கு ‘அயர்லாந்தில் இருந்து மேற்கொள்ளப்படும் சிறந்த இறக்குமதி’ என்று பொருள். அயர்லாந்தைச் சேர்ந்த மது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர்தான், கின்னஸ். அதன் செயல் இயக்குநர், ஹியூ பீவர் (Hugh beaver) நண்பர்களோடு வேட்டையாடச் சென்றார். அங்கே, பறவைகளைச் சுடும் போட்டி நடந்தது. பீவர் எவ்வளவு சிறப்பாகச் சுட்டும், ஒரு குறிப்பிட்ட பறவையை வீழ்த்த முடியவில்லை. ‘இந்தப் பறவைதான் ஐரோப்பாவிலேயே வேகமான பறவை போல!’ என்றார்.


நண்பர்களோ, ‘இல்லை’ என்று மறுத்தார்கள். ஏதாவது புத்தகத்தில் தேடலாம் என்றால், ஒன்றுமே சிக்கவில்லை. பிரிட்டன்  கலைக்களஞ்சியங்கள், செய்தித்தாள்கள் என்று பலவற்றுக்கும் தகவல்களைத் தேடித்தரும் மெக்வைட்டர் (Mcwhirter) சகோதரர்களை அழைத்தார், ஹியூ பீவர். ‘உலகம் முழுக்க இருக்கும் சாதனைகளைத் தொகுத்துத் தர வேண்டும்’ என்றார்.

கிடைத்த தகவல்களை, 7 இன்ச் அகலம், 10 இன்ச் நீளத்தில் பச்சை மஞ்சள் வண்ணப் புத்தகமாக அச்சிட்டு, 1955-ம் ஆண்டு மதுக்கூடங்களில் மட்டும் இலவசமாகக் கொடுத்தார்கள். 198 பக்கங்கள் கொண்டிருந்த அந்தப் புத்தகம் ஹிட் ஆனது. அன்று தொடங்கி, சாதனைகளைச் சொல்வதில் சாதனை படைத்துக்கொண்டு இருக்கிறது கின்னஸ் புத்தகம். இன்று, உலகம் முழுக்க மிக அதிகமாக விற்கும் காப்பிரைட் செய்யப்பட்ட அச்சுப் புத்தகம், கின்னஸ் உலக சாதனைப் புத்தகம்தான்.

 

இந்த 60-வது இதழை, 3D Augmented reality முறையில் வெளியிட்டுள்ளது. உருவங்கள், சாதனை நிகழ்ச்சிகள் கண்களுக்கு அருகில் வரும். கேம் பிரியர்களுக்கான தனிப் பிரதிகளும் உண்டு.

60 வருடங்கள் ஆனதை ஒட்டி, சிறந்த 60 கின்னஸ் ஐகான்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. உசைன் போல்ட், எவரெஸ்ட் சிகரத்தில் முதலில் ஏறிய பெண்மணி ஜாங்கோ தைபே, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இதில் இடம்பெற்று உள்ளனர்.

தற்போது செல்ஃபியில் செய்யப்பட்ட சாதனைகளும் இடம்பெற்று உள்ளன.
ஒரே வருடத்தில் மிக அதிகமாக அச்சிடப்பட்ட வண்ண கெட்டி அட்டைப் புத்தகம் என்கிற சாதனையும் கின்னஸ் புத்தகத்துக்கே. 2000-ம் வருடம், ஒரே பதிப்பில் 24 லட்சத்து 2 ஆயிரம் பிரதிகள் விற்றன.


இந்தியாவைச் சேர்ந்த பலரின் சுவாரஸ்யமான கின்னஸ் சாதனைகள்... ராகேஷ் குமார் என்பவர் தன்னுடைய காதுகளால் தூக்கிய எடையின் அளவு, 82.60 கிலோ. ராம் சிங் சவுஹான் என்பவரின் மீசைதான், உலகிலேயே மிகவும் நீளமானது. மீசையின் நீளம், 4.29 மீட்டர். சௌடாம்பிகா பள்ளிகளின் 2,955 மாணவர்கள் இணைந்து, காந்தியடிகள் போல வேடமிட்டு கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர். தீபக் சர்மா பஜகைன், என்பவர் 113 மணி நேரம் 15 நிமிடங்களில் 17 புத்தகங்களை வாசித்தது கின்னஸ் சாதனை. ‘உலகின் மிகப் பெரிய மனிதர்களால் உருவாக்கப்பட்ட கொடி’ என்ற சாதனை, தமிழகத்தின் வசம் உள்ளது.
பூ.கொ.சரவணன்

கியாஸ் சிலிண்டர் விபத்து 50 லட்சம் வரை இழப்பீடு!

‘கியாஸ் சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்து விபத்து ஏற்பட்டால், பாதிக்கப் பட்டவர்/குடும்பத்தினருக்கு இன்ஷூரன்ஸ் மூலமாக நிவாரணம் பெற முடியும்’ என்பது உங்களுக்குத் தெரியுமா?


ஒருவர் எரிவாயு இணைப்பைப் பெற்றாலே, இந்த இன்ஷூரன்ஸ் தானாகவே அவருக்கு வந்துவிடும். கியாஸ் சிலிண்டர் வெடித்து உயிர் அல்லது பொருட்சேதம் ஏற்பட்டால், இதன் மூலமாக இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம்.
தனிநபருக்கான விபத்துக் காப்பீடு 5 லட்சம் வரை, மருத்துவச் செலவுகள் 15 லட்சம் வரை, உடைமைச் சேதாரம் 1 லட்சம் வரை உண்டு. எல்லா வகையிலும் சேர்த்து தனிநபருக்கு 10 லட்சம் வரை வழங்கப்படும். எப்படியாக இருந்தாலும், குறிப்பிட்ட ஒரு விபத்துக்கு மொத்தத்தில் 50 லட்சம் வரையே இழப்பீடு.

இழப்பீடு பெறுவது எப்படி?

விபத்து நடந்தால், உடனடியாக கியாஸ் ஏஜென்சியிடம் எழுத்துப்பூர்வ புகார் கொடுக்க வேண்டும். இன்ஷூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் குழு வந்து ஆய்வு செய்யும்வரை விபத்துக்கான தடயங்களை அப்படியே வைத்திருக்க வேண்டும்.

போலீஸ் ஸ்டேஷனில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும். உயிர் இழப்பு ஏற்பட்டிருந்தால், மரணச் சான்றிதழ், போஸ்ட்மார்ட்டம் அறிக்கை ஆகியவற்றை பெற வேண்டும். காயங்களுக்குச் சிகிச்சை எடுத்திருந்தால், மருத்துவ/மருந்து ரசீதுகளைப் பத்திரப்படுத்த வேண்டும். உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டிருந்தால், இன்ஷூரன்ஸ் நிறுவனமே ஒரு சர்வேயரை நியமித்து சேத மதிப்பைக் கணக்கிடும்.

இந்த இன்ஷூரன்ஸ் பலன்களை ஒருவர் அனுபவிக்க வேண்டுமானால், பின்பற்றவேண்டிய மிகமுக்கியமான விதிமுறைகள் சில உள்ளன.

பயன்படுத்தும் அடுப்பு, கியாஸ் டியூப், லைட்டர் உள்ளிட்ட பொருட்கள் ஐ.எஸ்.ஐ தரச்சான்று பெற்றவையாக இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் கியாஸ் ஏஜென்சியிடம் உரிய கட்டணம் செலுத்தி, தரத்தை உறுதிப்படுத்தி சான்றிதழ் வாங்கிக்கொள்ள வேண்டும். சமையல் அறை அல்லாத இடங்களில் கியாஸ் சிலிண்டரைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது. உங்கள் பெயரில் வாங்கிய கியாஸ் சிலிண்டர் மட்டுமே பயன்படுத்தியிருக்க வேண்டும்.

விதிகளைப் பின்பற்றுவோம்... இன்ஷூரன்ஸ் பாதுகாப்பை உறுதிபடுத்துவோம்!

சா.வடிவரசு

அறியப்படாத படிப்புகள்


பெட்ரோலியம் இன்ஜினீயரிங்

ப்ளஸ் டூ-வில் கணிதம், வேதியியல், இயற்பியல் போன்ற பாடங்களைப் படித்தவர்கள், பி.டெக்., பெட்ரோலியம் இன்ஜினீயரிங் படிக்கலாம். இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டட், பிரிட்டிஷ் பெட்ரோலியம், ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் போன்ற பெரிய நிறுவனங்களில் கெமிக்கல் இன்ஜினீயர், பிளாக் அனலிஸ்ட் போன்ற பணி வாய்ப்புகள் உண்டு. வெளிநாட்டு பெட்ரோலிய நிறுவனங்களிலும் வேலை பார்க்கலாம். 10,000 முதல் 2 லட்சம் வரை சம்பாதிக்கலாம். சாராசரியாக மாதம் 50,000 சம்பாதிக்க வைக்கும் துறை இது.

உணவுத் தொழில்நுட்பம்

ப்ளஸ் டூ-வில் அறிவியலை ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்கள், பி.எஸ்ஸி., ஃபுட் டெக்னாலஜி, பி.டெக்., ஃபுட் டெக்னாலஜி படிக்கலாம். இந்தத் துறையில் உணவுப் பாதுகாப்பு, பதப்படுத்துவது, விநியோகம், தரம் ஆராய்வது, பேக்கிங் என பல வேலைகள் உண்டு. தனியார், உள்நாட்டு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுடன்  உணவுப் பாதுகாப்புத் துறை, பால்வளத் துறை போன்ற அரசுத் துறைப் பணியும் பெறலாம். ஆராய்ச்சித் துறையிலும் செல்லலாம். மாதம் குறைந்தது 20,000 ரூபாய் முதல் சம்பாதிக்கலாம்.


கம்பெனி செக்ரட்டரி (சி.எஸ்)
அரசு, தனியார் நிறுவனங் களில் அட்வைஸர், மேலாண்மை என உயர் பொறுப்புகளுக்குத் தகுதிப்படுத்தும் படிப்பு, கம்பெனி செக்ரட்டரி! பி.காம், எம்.காம் படித்துக்கொண்டே எக்ஸிகியூடிவ்,  புரொஃபஷனல் தேர்வுகள் எழுதலாம். ப்ளஸ் டூ முடித்தவர்கள்கூட ஃபவுண்டேஷன் தேர்வுகள் எழுத முடியும். இவர்கள் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆஃப் இந்தியா (Institute of company secretaries of india) நடத்தும் தேர்வில் பாஸாக வேண்டும். இவர்களுக்கு ஆரம்பத்திலேயே 30,000 ரூபாய் முதல் சம்பளம் இருக்கும். சி. ஏ போல்தான் இந்த படிப்பும்.  இதற்கென இருக்கும் தனியார்  இன்ஸ்டிட்யூட்களில் படிக்க முடியும்.  இதைத் தவிர, எம்.காம் முடித்துவிட்டு கார்ப்பரேட் செக்ரட்டரி கோர்ஸ் படிப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் இருக்கிறது.
மருத்துவம்

மருத்துவர், செவிலியர் மட்டுமல்ல..., லேப் டெக்னாலஜி, ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, எக்கோ டெக்னாலஜி என இதில் பல நவீன தொழில்நுட்பப் பிரிவுகள் உள்ளன. எல்லா மருத்துவமனைகளிலும் இந்த வேலைவாய்ப்புகள் உண்டு. குறைந்தது 10,000 ஆயிரம் முதல் சம்பளம் இருக்கும். வெளிநாடுகளில் இதற்கு நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. குறைந்தது 50,000 முதல் சம்பளம் கிடைக்கும்.

ஜியாலஜிக்கல் சயின்ஸ்

ப்ளஸ் டூ-வில் அறிவியல் பிரிவுகள் படித்தவர்கள், பி.எஸ்ஸி., எம்.டெக். ஜியாலஜிக்கல் சயின்ஸ் படிக்கலாம். குறிப்பிட்ட பெரிய பல்கலைக்கழகங்களில் மட்டுமே வழங்கப்படும் இந்தப் படிப்பு. கடல், மலை, நிலம், பூகம்பம், நிலக்கரி போன்ற ஆராய்ச்சி, ஓர் இடத்தை பற்றிய டேட்டா சேகரிப்பது போன்றவை பணி இயல்பு. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உண்டு. சென்ட்ரல் கவர்ன்மென்ட் வாட்டர் போர்டு மற்றும் ஜியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா என மத்திய அரசு பணிகளில்கூட இடம் உண்டு.

Tuesday, May 12, 2015

கேட்ஜெட்: மைக்ரோமேக்ஸ் 50K2330UHD 4K TV

இந்திய ஸ்மார்ட் போன் மார்க்கெட்டில் தனக்கெனப் பிரத்யேகமான இடத்தைப் பிடித்துள்ள மைக்ரோமேக்ஸ் நிறுவனம், சமீபத்தில் ஸ்மார்ட் டிவி தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தற்போது தனது புதிய தயாரிப்பான 4K டிவியை வெளியிட்டுள்ளது.


டிசைன்!

மைக்ரோமேக்ஸ் 4K டிவி கவர்ச்சிகரமான டிசைனைக் கொண்டுள்ளது. இந்த டிவி முழுவதும் பிரீமியம் பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் ஓரங்கள் கோல்டு ஃபினிஷ்  செய்யப்பட்டுள்ளது. இதனால் இதன் தோற்றம் மேலும் அழகு பெறுகிறது. இந்த டிவியின் இரண்டு ஸ்டாண்டுகள் பயன்படுத்த சற்று கஷ்டமாகவே இருக்கிறது.

டிஸ்ப்ளே!

இந்த டிவி 49 இன்ச் 4K 3840x2160 டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இரண்டு HDMI போர்டு, ஒரு Ethernet, VGA, RCA போர்டுகள், SD கார்டு ஸ்லாட், மூன்று USB போர்டுகள் ஆகியவை இந்த டிவியில் அடங்கும். 720p மற்றும் 1080p வீடியோக்கள் சிறப்பாக இந்த டிவியில் இயங்குகிறது. HD சேனல்களும் இந்த டிஸ்ப்ளேவில் கச்சிதமாகக் காட்சியளிக்கிறது.

தொழில்நுட்பம்!

மைக்ரோமேக்ஸ் 4k டிவி இன்டர்நெட்டுடன் இணைத்துக் கொள்ளலாம். இதற்காக Ethernet போர்டு ஒன்று டிவியில் உள்ளது. மேலும், WiFi மூலமும் இணைத்துக் கொள்ளலாம். இந்த டிவி dual-core CPU கொண்டு இயங்குகிறது. 1GB ரேமும் இதில் அடங்கும். 2.5 GB இன்டர்னல் மெமரியை கொண்டுள்ள இந்த டிவி, 32GB வரை SD கார்டு மூலம் விரிவுபடுத்திக் கொள்ளலாம்.

இயங்குதளம்!

மைக்ரோமேக்ஸ் 4k டிவி ஆண்ட்ராய்ட் 4.4 கிட்-கேட் இயங்குதளத்தைக் கொண்டு இயங்குகிறது. பல தேவையான ஆப்ஸ்கள் இந்த டிவியில் அடங்கும். அதைத் தவிர, மற்ற ஆப்ஸ்களை ‘Google Play Store’யிலிருந்து டவுன்லோடு செய்துகொள்ளலாம். இந்த டிவியை ரிமோட்டால் மட்டுமன்றி, ஸ்மார்ட் போன்/டேப்லெட் ஆகியவற்றாலும் இயக்கலாம். USB அல்லது செட்-ஆப் பாக்ஸ் பயன்படுத்தும்போது இந்த டிவி சற்று மெதுவாகச் செயல்படுகிறது.

ரிமோட்!

மைக்ரோமேக்ஸ் 4K டிவி எளிமையான RF ரிமோட்டைக் கொண்டு இயங்குகிறது. ஒரு பட்டனை பிரஸ் செய்தால், ஸ்க்ரீனில் மவுஸ் கர்ஸர் ஒன்று தோன்றும். இதை ‘motion control’ மூலம் இயக்கலாம். மேலும், இந்த ரிமோட்டில் மைக்ரோபோன் ஒன்று இருக்கிறது. இதை skype கால்களுக்குப் பயன்படுத்தலாம்.

விலை!

சுமாரான ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ள இந்த மைக்ரோமேக்ஸ் 4K டிவியின் இந்திய விலை      49,990 ரூபாய்.

பிளஸ்: டிசைன், டிஸ்ப்ளே, இயங்குதளம், விலை.

மைனஸ்: மெதுவான start-up டைம், ஸ்டாண்ட்
செ.கிஸோர் பிரசாத் கிரண்

பிரதம மந்திரி இன்ஷீரன்ஸ் திட்டம்... என்ன சாதகம்?

பிரதமர் நரேந்திர மோடி, மே 9-ம் தேதி கொல்கத்தாவில் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) என்கிற விபத்துக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியையும், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்கிற ஆயுள் காப்பீட்டு பாலிசியையும் தொடங்கும் நிலையில், இந்த இரண்டு திட்டங்களிலும் யார் யார் சேரலாம், எப்படி விண்ணப்பிக்க வேண்டும், பிரீமியம் எப்படி வசூலிக்கப்படும், க்ளெய்ம் எப்படி கிடைக்கும்,?

 யார் இந்தத் திட்டங்களில் சேரலாம்?

‘‘இந்தத் திட்டங்களில் இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்துள்ள எல்லோரும்   விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிகளும்  விண்ணப்பிக்கலாம். இந்த இரண்டு திட்டங்களிலும் கவரேஜ் தொகை 2 லட்சம் ரூபாயாகும்.

பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்தில் (PMSBY)  இணைபவர்கள் 18 - 70 வயதுடையவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 70 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும்.
அதேபோல், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தில் இணைபவர்  18 - 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்த வராகவும் 50 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் மட்டும் 50 வயது பூர்த்தி அடையாதவர், தன் 50-வது வயதில் விண்ணப்பித்தால், அடுத்த 5 வருடங்களுக்கு இந்தத் திட்டத்தில் இருக்கலாம். இந்தச்  சலுகை, திட்டம் தொடங்கப்படுகிற   2015-ம் ஆண்டு மட்டுமே கிடைக்கும்.

 ஒருவர் மேற்கூறிய இரண்டு திட்டங்களிலும் இணையலாம். அல்லது ஒரே ஒரு திட்டத்தில்கூட சேரலாம்.  தனியாக வேறு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளவர்களும்கூட இந்தத் திட்டத்தில் இணையலாம்.

எப்போது சேரலாம்?

2015 மே மாதத்துக்குள் விண்ணப்பித்தால்  அனைத்து தரப்பு வயதினரும் எந்த ஹெல்த் டிக்ளரேஷனும் இன்றி இந்தத் திட்டங்களில்  இணையலாம். மே 2015-க்குப் பின் அதாவது, ஜூன் 1 (2015) முதல் ஆகஸ்ட் 31 (2015) வரை திட்டங்களில்  இணைபவர்கள் ஹெல்த் டிக்ளரேஷன் வழங்க வேண்டியிருக்கும்.

பொதுவாக,  இன்ஷூரன்ஸ் பாலிசிகளில்  45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஹெல்த் டிக்ளரேஷன் தர வேண்டியிருக்கும். ஆனால், இந்த அரசு திட்டத்தில் 2015 மே மாதத்துக்குள்  இணைபவர்கள் எந்த வயதினராக இருந்தாலும்,  எந்த ஹெல்த் டிக்ளரேஷனும் தரத் தேவையில்லை.

 என்ன வேண்டும்?

இந்தத் திட்டத்தில் இணைய வங்கி சேமிப்புக் கணக்கு அவசியம் வேண்டும். மற்றவகையான வங்கிக் கணக்கை வைத்து இந்த  இன்ஷூரன்ஸ் திட்டங்களில்  இணைய முடியாது. ஒருவர் ஒரு வங்கிக் கணக்கின் மூலம் ஒருமுறைதான் இந்தத் திட்டத்தில் இணைய முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு உள்ளவர்கள் ஏதாவது ஒரு வங்கிக் கணக்கு மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இரண்டாவதாக விண்ணப்பித்தால், அந்த மனு நிராகரிக்கப்படும்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் இந்தத் திட்டத்துக்கான சேவைகளை வழங்குகின்றன.  சில வங்கிகள் மட்டும் இந்தத் திட்டத்தில் இணையாமல் இருக்கின்றன.

 விண்ணப்பங்கள் எங்கே கிடைக்கும்? 

இந்தத் திட்டத்தை பெரும்பான்மையான அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், இதற்கான விண்ணப்பங்களை வழங்கத் தொடங்கி இருக்கின்றன. இந்த விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் சென்று சமர்பித்தால் போதுமானது.

 பிரீமியம் செலுத்துதல்! 

பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டத்தில் (விபத்து காப்பீடு)ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியமாக வசூலிக்கப்படும். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்துக்கு (ஆயுள் காப்பீடு)ஆண்டுக்கு 330 ரூபாய் பிரீமியமாக வசூலிக்கப்படும். இந்த பிரீமியம் க்ளெய்ம் தொகை வழங்கப்படுவதைப் பொறுத்து மாற வாய்ப்புள்ளது. அசாதாரண சூழ்நிலை எதுவும் ஏற்படாமல் இருந்தால், மூன்று வருடம் வரை பிரீமியம் உயர வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டுள்ளது. 


இந்த இரண்டு திட்டங்களுக் கும் ஆட்டோ டெபிட் என்கிற முறையில் வங்கிச் சேமிப்பு கணக்கிலிருந்து பிரீமியம் வசூலிக்கப்படும். விண்ணப்பத் திலேயே ஆட்டோ டெபிட் செய்ய சம்மதிப்பதாக ஒரு டிக்ளரேஷன் இருக்கும். எனவே, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தந்தாலே வங்கிச் சேமிப்புக் கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் செய்ய வங்கிக்கு அனுமதி அளித்தது போலதான்.

மே 31, 2015 வரை விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வங்கிகளில் சமர்பிக்கும் போது ஒரு ரசீது வழங்கப்படும். இது நீங்கள் திட்டத்தில் இணைந்ததற்கான ஆதாரம்.

ஆனால்  ஜுன் 1, 2015-ல் இருந்துதான் வங்கிக் கணக்கு களின் மூலம் பிரீமியம் ஆட்டோ டெபிட் செய்யப்படும். வங்கிக் கணக்கிலிருந்து பணம் பிரீமியமாகச் செலுத்தப்பட்ட பின் வங்கி, ரசீதை வழங்கும்.

இந்த ரசீதுதான் நீங்கள் பிரீமியம் செலுத்தியதற்கான ஒரே ஆதாரம். பிரீமியம் செலுத்திய ரசீதே இன்ஷூரன்ஸ் பாலிசியின் சான்றிதழாக கருதப்படும்.

 ரெனீவல் செய்வது!

நீங்கள் பூர்த்திச் செய்யும் விண்ணப்பத்தில் மின்னஞ்சல் முகவரி, செல்போன் நம்பர் போன்ற விவரங்கள் கேட்கப் பட்டிருக்கும். இந்த வருடம் விண்ணப்பத்தைக் கொடுத்துத் திட்டத்தில் இணைந்தபின், அடுத்த வருடத்திலிருந்து ஜூன் 1-ம் தேதிக்கு முன் வங்கிகள், சேமிப்புக் கணக்கில் உள்ள தொகையில் பிரீமியத்தை ஆட்டோ டெபிட் செய்து அதற்கான ரசீதை மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தியாக அனுப்பிவிடும்.

 யார் க்ளெய்ம் வழங்குவார்கள்?

இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் அரசு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்துத் தரப்பு வங்கிகளோடும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. உதாரணமாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, எல்ஐசி இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஐஓபி மூலம் ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்தால், அவர் எல்ஐசி இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தான் க்ளெய்ம் சார்ந்த விவரங்களைப் பெறமுடியும். அதுபோல், நீங்கள் எந்த வங்கிக் கணக்கை பயன்படுத்தி, இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்திருக்கிறீர்களோ, அந்த வங்கி எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய் திருக்கிறதோ, அந்த நிறுவனம் உங்களுக்கு க்ளெய்ம் வழங்கும்.

எவ்வளவு க்ளெய்ம்? 
 
இந்தத் திட்டம் 2015 ஜூன் மாதத்திலிருந்துதான் அமலுக்கு வருகிறது. எனவே, 2015 ஜூனிலிருந்துதான் க்ளெய்ம் கிடைக்கும். இந்தத் திட்டத்துக்கு எந்த காத்திருப்பு காலமும் கிடையாது என்பதே இதன் முக்கிய அம்சம்.

ஜீவன் ஜோதி திட்டத்தில் இணைந்த ஒருவர் எந்த வகையில் இறந்தாலும் அவருக்கு இன்ஷூரன்ஸ் திட்டத்தின் மூலம் முழுத் தொகையும் க்ளெய்மாகக் கிடைக்கும். இதற்கு இறந்தவர் பிரீமியம் செலுத்தியதற்கான ரசீது, அவரின் இறப்புச் சான்றிதழ் போன்றவைகளை நீங்கள் எந்த வங்கியின் கணக்கை வைத்து இந்தத் திட்டத்தில் இணைந்தீர்களோ, அந்த வங்கியில் சமர்பிக்க வேண்டும். அதாவது, நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களோ, அந்த வங்கிதான் மாஸ்டர் பாலிசி ஹோல்டராக கருதப்படும்.

விண்ணப்பத்திலேயே நாமினியின் பெயரையும், அவர் உங்களுக்கு என்ன உறவு என்பதையும் குறிப்பிட வேண்டும். நாமினிக்கு டிடி மூலம் க்ளெய்ம் தொகை அனுப்பப்படும்.  வங்கிக்கு உங்கள் முகவரி தெரியும் என்பதால், தனியாக எந்தக் கூடுதல் விவரங்களும் தரத் தேவை இல்லை.

சுரக்‌ஷா இன்ஷூரன்ஸ் திட்டத்தில் இணைந்தவர்கள் இறந்துவிட்டால் அல்லது விபத்தில் சிக்கி நிரந்தர ஊனம் (Full disailment), அதாவது இரண்டு கை அல்லது இரண்டு கால் அல்லது இரண்டு கண் முழுமை யாகச் செயல்படாமல் போனால் 2 லட்சம் ரூபாய் முழுமையாக க்ளெய்ம் கிடைக்கும். விபத்தில் சிக்கி பகுதி ஊனம் (Partial disailment) அதாவது, ஒரு கை அல்லது ஒரு கால் அல்லது ஒரு கண் முழுமையாகச் செயல்படாமல் போனால், ஒரு லட்சம் ரூபாய் வரை க்ளெய்ம் கிடைக்கும்.

இந்தத் திட்டத்தில் க்ளெய்ம் பெற காவல் துறையிலிருந்து முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்), போஸ்ட்மார்டம் அறிக்கை போன்றவைகளை வங்கியிடம் (மேற்கூறியது போல) சமர்பிக்க வேண்டும். மற்றபடி சட்டரீதியான விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். உதாரணமாக, வாகனம் ஓட்டும்போது, ஓட்டுநர் உரிமம் சரியாக இருக்க வேண்டும்; மது அருந்தி இருக்கக் கூடாது. இந்தத் திட்டத்தில் சுயமாக ஏற்படுத்திக் கொண்ட விபத்துக்களுக்கு (Self Injury) க்ளெய்ம் கிடைக்காது.

எப்போது காலாவதி?

கணக்கில் போதுமான பணம் இல்லாமல், இந்த திட்டத்துக்கான  பிரீமியம் ஆட்டோ டெபிட் செய்ய இயலவில்லை என்றால் பாலிசி காலாவதியாகும்.

நீங்கள் எந்த வங்கிக் கிளையின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைகிறீர்களோ, அதே வங்கியில்தான் திட்டத்தைத் தொடர வேண்டும். பிரீமியத்தைக் கட்டவில்லை என்றால் நீங்கள் இணைந்த திட்டம் ரத்துச் செய்யப்படும். தவிர, வயது வரம்பு கடந்தவுடன் திட்டம் காலாவதியாகிவிடும்'' என்றார் இந்திரா பத்மினி.

பொதுவாக, ஆக்ஸிடென்ட் பாலிசியை பொறுத்தவரை, ஒரு லட்சம் ரூபாய்க்கு மிக குறைந்த பட்சமாக 50 - 150 ரூபாய்    வரை (பாலிசிதாரரின் பணிச் சூழலை பொறுத்து) பிரீமியம் செலுத்த வேண்டும். ஆனால், மத்திய அரசு 6 ருபாய் பிரீமியத்துக்கு  ரூ.1  லட்சம் கவரேஜ் வழங்குகிறது.

பொதுவாக, டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு 18 வயதுள்ள ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கவரேஜ்க்கு 103 ரூபாய் பிரீமியமாக செலுத்த வேண்டும், ஆனால், இதற்கு காத்திருப்புக் காலம் இருக்கும். ஜீவன் ஜோதி திட்டத்தில் ஒரு லட்சத்துக்கு

165 ரூபாய் செலுத்தினாலும் காத்திருப்புக் காலம் கிடையாது.  அனைத்து வயது வரம்பினருக்கும் ஒரேமாதிரியான பிரீமியமே வசூலிக்கப்படுகின்றன.
மேலும், மெடிக்கல் டெஸ்ட் கிடையாது. ஏதாவது நோய் பாதிப்பு இருந்தாலும் பிரீமியம் அதிகரிக்காது.

எல்லாவற்றுக்கும் மேலாக, 5 லட்சம் ரூபாய்க்குக் கீழ் வேறு எந்த நிறுவனத்திலும் ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்க முடியாது. இந்தத் திட்டத்தில் 2 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு பாலிசி கிடைப்பது சிறப்பான விஷயம்.  குறைந்த பிரீமியத்தில் கூடுதல் பலன் தரும் இந்த இரு திட்டங்களிலும் அனைவரும் சேர்ந்து பயன் பெறலாம்!

மு.சா.கெளதமன்





 

லெனோவோ யோகா 3 ப்ரோ (Lenovo Yoga 3 Pro)

லேப்டாப்பை டேப்லெட்டாகவும் பயன்படுத்தும் தொழில்நுட்பம் இன்றைய டெக் உலகத்தில் வளர்ந்து வருகிறது. அந்த வகையில் லெனோவோ நிறுவனம் தனது புதிய லேப்டாப்பான ‘லெனோவோ யோகா 3 ப்ரோ’ லேப்டாப்பை சமீபத்தில் இந்தியாவில் வெளியிட்டது.

டிசைன்!

பார்ப்பதற்கு மெல்லியதாகவும் கவர்ச்சியாகவும் காட்சியளிக்கும் இந்த லேப்டாப் 800 மெட்டல் பீஸ்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ‘யோகா’ என்ற பெயருக்கு ஏற்றதுபோல இந்த லேப்டாப்பின் டிஸ்ப்ளேவை எந்த ஆங்கிளிலும் வைத்துப் பயன்படுத்தலாம். இந்த அல்ட்ரா புக்கின் ஸ்பீக்கர்கள் அடியில் அமைந்துள்ளதால், டேப்லெட்டாக பயன்படுத்தும்போது ஸ்பீக்கரின் ஒலி சற்று குறைவாக இருக்கிறது.


வசதிகள்!

USB 2.0 போர்டு, Micro-HDMI வீடியோ அவுட் போர்டு, 3.5mm ஹெட் செட் போர்டு ஆகியவற்றை கொண்டுள்ள இந்த அல்ட்ரா புக், USB 3.0 போர்டுகளையும் கொண்டுள்ளது. மேலும் USB 2.0 போர்டை கொண்டு சார்ஜ் செய்யும் இந்த அல்ட்ரா புக்கின் சார்ஜரை மற்ற ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட்களை சார்ஜ் செய்யவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


கீ-போர்டு!

இந்த அல்ட்ரா புக்கின் கீபோர்டு கறுப்பு ரப்பர் பொருளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு மட்டுமல்ல, பயன்படுத்துவதற்கும் இந்த கீ போர்டு சுமாராகத்தான் இருக்கும். அனைத்து விஷயங்க ளிலும் கவனம் செலுத்திய லெனோவோ நிறுவனம், கீ போர்டில் மட்டும் தனது கவனத்தைத் தவறவிட்டுள்ளது.

டிராக் பேட்!

இந்த லேப்டாப்பின் டிராக் பேட் சாதாரணப் பயன்பாட்டுக்கு போதுமானதாக இருக்கும்.‘Matte texture’ கொண்டுள்ளதால் இந்த டிராக் பேட் பயன்படுத்துவதற்கு சுலபமாக இருக்கும்.


தொழில்நுட்பம்!

இந்த லேப்டாப் Intel Core M-5Y70 பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது. இரண்டு கோர்களை கொண்டுள்ள இந்த பிராசஸரோடு Intel HD Graphics 5300 GPU கிராபிக்ஸ் பிராசஸரும் அடங்கும். இந்த லேப்டாப்பின் பிராசஸர் 1.1GHz முதல் 2.6GHz வரை இயங்கும் திறனைக் கொண்டுள்ளது. 8GB ரேம்மை கொண்டுள்ள லேப்டாப் 256GB Solid-state டிரைவ்வைக் கொண்டுள்ளது. இதில் 197.34 GB வரை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். மேலும், இந்த லேப்டாப்பின் 3200x1800 பிக்ஸல் ஸ்க்ரீன் தெளிவான மற்றும் சிறப்பான காட்சியளிக்கும் திறனைக் கொண்டுள்ளது.

பேட்டரி!

லெனோவோ யோகா 3 ப்ரோ அல்ட்ரா புக் 5,410 mAh பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது. இந்த பேட்டரி சாதாரண பயன்பாட்டுக்கு 6-8 மணி நேரம் வரை தாங்கும். அதிகமாக பயன்படுத்தும்போது சுமாராக 3.5 மணி நேரம் வரை தாங்கும்.


இயங்குதளம்!

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 8.1 ப்ரோ இயங்குதளத்தில் இயங்கும் இந்த லேப்டாப் லெனோவோ நிறுவனத்தின் பிரத்யேகமான பல சாஃப்ட்வேர்களோடு வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு தேவையான விண்டோஸ் ஆப்ஸ்களும் இந்த லேப்டாப்பில் அடங்கும்.

விலை:

இந்த அல்ட்ரா புக்கின் இந்திய விலை சுமார் ரூ. 1,14,990.

பிளஸ்:

எடை, டிசைன், பேட்டரி, பல்வேறு ஆங்கிளில் பயன்படும் டிஸ்ப்ளே

மைனஸ்:

கீ போர்டு. விலை, தொழில்நுட்பம்
செ.கிஸோர் பிரசாத் கிரண்

ஆன்லைன் ஷாப்பிங்

ரு பொருளை வாங்க வேண்டும் எனில், சந்தைகளில் அலைந்து திரிய வேண்டிய சூழலே முன்பு இருந்தது. பிறகு,  ஒவ்வொரு தெரு விலும் கடைகள் வரத் தொடங்கின. இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கிற மாதிரி சூப்பர் மார்க்கெட்டுகள் வந்தன.

ஆனால், கடந்த கால் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்களின் விளைவாக கடைக்குப் போய் பொருட்களை வாங்காமல், கடைகளையே வீட்டுக்குக் கொண்டு வந்தது ஆன்லைன் ஷாப்பிங்.


இந்த ஆன்லைன் ஷாப்பிங் உருவான வரலாறு சுவாரஸ்யமானது. 1979-ம் ஆண்டு மைக்கேல் ஆல்ட்ரிச் என்பவர் ஆன்லைன் வர்த்தகத்தை கண்டறிந்தார். வீடியோடெக்ஸ் என்ற முறையில் டிவியுடன் இணைக்கப்பட்டுள்ள சிறிய கணினி அமைப்பு மூலம் பொருட்களை விற்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.

1990-ம் ஆண்டு இணையம் (WWW, அதாவது World wide web) உருவான பின் ஆன்லைன் ஷாப்பிங் வேகமாக வளரத் தொடங்கியது. 1994-ம் ஆண்டு இன்டர்நெட் ஷாப்பிங் நெட்வொர்க் எனும் நிறுவனம் முதலில் பாதுகாப்பான ஆன்லைன் வர்த்த கத்தை துவங்கியது. பின்னர் அமேசான் 1995-லும்,  உலகின் மிகப் பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனம் 2003-லும் தொடங்கியது. இந்திய நிறுவனமான ஃப்ளிப்கார்ட் ‘பிக் பில்லியன் டே’ என்ற பெயரில் ஒரே நாளில் நாடு முழுக்க பிரபலமானது.

இன்றைக்கு இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆன்லைன் ஷாப்பிங்கை மக்களுக்கு நன்கு பழக்கப்படுத்திவிட்டன. என்ன வேண்டும் என்றாலும் இணையத்தில் தேடுகிற அளவுக்கு நிலைமை மாறி இருக்கிறது. பொருட்கள் மட்டுமல்ல, மதிய உணவைக்கூட ஆன்லைனில் ஆர்டர் செய்யும்  அளவுக்கு மாற்றங்கள் வந்திருக்கின்றன.

இருந்த இடத்தில் இருந்தபடி பொருட்களை வாங்க உதவும் இந்த ஆன்லைன் ஷாப்பிங் உண்மை யிலேயே ஆச்சரியம் தருபவைதான்!
ச.ஸ்ரீராம்