Search This Blog

Saturday, September 05, 2015

இந்தியா 22 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது

இந்தியா 22 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. நாம் கங்குலியின் தலைமையில் பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளோம். இங்கிலாந்திலும் மேற்கிந்திய தீவுகளிலும் நியுசிலாந்திலும் வென்றுள்ளோம். ஆனால், இலங்கையில் இவ்வளவு காலம் வென்றதில்லை.

ஏனென்றால் தொண்ணூறுகளில் நாம் இலங்கையை ஒரு அணியாகவே பொருட்படுத்தவில்லை. 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜெயவர்த்தனே, சங்கக்காரா போன்ற அற்புத மட்டையாளர்களும், முரளிதரன் எனும் ஒரு சாதனையாளரும் சேர்ந்து இலங்கையை தரமான டெஸ்ட் அணியாக மாற்றினார்கள்.

ஆனால், சமீபமாக இலங்கை அணியில் சிறந்த சுழல்பந்து வீச்சாளர்கள் இல்லை. அவர்கள் அதனால் தம் பாரம்பரியமான வலிமையான சுழலைத் துறந்து விட்டு வேகபந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுதளங்களை அமைக்கத் தொடங்கினர். இதனால் நியுசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளிடம் தொடர்களை இழந்தனர். இந்தியாவுக்கு எதிராகச் சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இலங்கை பழைய வியூகத்துக்குத் திரும்பியது. மீண்டும் சுழலும் ஆடு தளத்தை அமைத்தனர்.

ஆனால் முதல் போட்டியில் இந்தியச் சுழலர்களான அஷ்வின், மிஷ்ராவின் அபாரமான வீச்சுக்கு முன் இலங்கை மட்டையாளர்களால் தாக்குப்பிடிக்க இயலவில்லை. இந்த ஆட்டத்தை இந்தியா இறுதி நாளில் மோசமாய் ஆடி இழந்தாலும் 90 சதவிகிதத்துக்கு மேல் ஆதிக்கம் செலுத்தியது. இதை உணர்ந்த இலங்கை இரண்டாவது டெஸ்டில் சற்றே வேகவீச்சுக்கு ஆதரவான ஆடுதளத்தை அமைத்தனர். அப்போது நம் சுழலர்களுடன் சேர்ந்து வேகவீச்சாளர்களும் இலங்கைக்குத் தலைவலி கொடுக்க அந்த ஆட்டத்தை இலங்கை இழந்தது.

மூன்றாவது டெஸ்டில் முழுக்க வேகவீச்சுக்கான ஆடுதளம். சுத்தமாய் பந்து சுழலவில்லை. இது இத்தொடரில் இலங்கை வீரர்களுக்கு அச்சுறுத்தலாய் விளங்கியது. அஷ்வினை மழுங்கடிப்பதற்காக அவர்கள் வகுத்த வியூகம். ஆனால் எதிரணியினரைப் பற்றிக் கவலைப்பட்டு அதற்கு ஏற்றபடி ஆடுதளம் தயாரித்த இலங்கையினர் தம் சொந்த வீச்சாளர்களின் நிலை பற்றி யோசிக்கவில்லை. இலங்கை வேகவீச்சாளர்களான பிரசாத் மற்றும் பிரதீப் முழுமையான உடற்தகுதியுடன் இல்லை.

ஆல்ரவுண்டர் மேத்யுவுசுக்கு முதுகு வலி; ஐந்து ஓவர்களுக்கு மேல் வீச முடியாத சிக்கல். இந்நிலையில் இந்த ஆடுதளத்தை இந்திய அணியின் வேகவீச்சாளர் இஷாந்த் ஷர்மாவும் உமேஷ் யாதவும் அபாரமாகப் பயன்படுத்தி இத்தொடரை இந்தியாவுக்கு வென்றளித்தனர்.

இத்தொடரை இந்தியா வென்றதற்கு முதன்மைக் காரணம், தொடக்கத்தில் இருந்தே கோலி வெற்றி நோக்கில் செயல்பட்டது. இலங்கையோ தோல்வியைத் தவிர்க்கும் எதிர்மறை, சுயபாதுகாப்பு நோக்கிலேயே இயங்கியது. இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க, இலங்கை ஏழு மட்டையாளர்களைத் தேர்ந்தது. ஆனால் ஏழு மட்டையாளர்களாலும் தொடர்ந்து நன்றாக ஆட இயலவில்லை.

இந்தியா ஆறு மட்டையாளர்களுடன் ஆடும்போது அனைவருக்கும் பொறுப்புணர்வு கூடுகிறது. உதாரணமாக தொடக்க மட்டையாளர்கள் மற்றும் 3, 4 இடங்களில் ஆடின ரஹானே, கோலி ஆகியோர் மிகுந்த கவனம் மற்றும் பொறுப்புடன் ஆடினர். இதற்குமுன்பு 7 மட்டையாளர்கள் இருக்கையில் இவர்கள் சற்று மனம்போன போக்கில் ஆடி ஆட்டம் இழப்பதுண்டு. இம்முறை ஒரு மட்டையாளர் குறைவு எனும் எண்ணம் நம் மட்டையாட்டத்துக்கு உதவியது.

அதேபோல 5 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும்போது நிச்சயம் “வெற்றி ஒன்றே நோக்கம், டிரா அல்ல” எனும் சேதியை கோலி வலுவாக உணர்த்தினார். முன்பு தோனியின் கீழ் இஷாந்த் போன்றோ 130 கி.மீ.க்கும் குறைவான வேகத்தில் ஒரே ஸ்பெல்லில் 8 ஓவர்கள் வீசுவார்கள். விக்கெட் வீழ்த்துவதைவிட ஓட்டங்களை கட்டுப்படுத்துவதே நோக்கமாய் இருக்கும். ஆனால் கோலி ஒரு ஸ்பெல்லி 4 ஓவர்கள் மட்டுமே முழு ஈடுபாட்டுடன் வீசக் கேட்க இஷாந்தின் வேகம் அதிகரித்தது. அதுவரை மெத்தனமாய் வீசி வந்த இஷாந்த் திடீரென 142 கிலோமீட்டர் வேகத்தில் ஒவ்வொரு பந்தையும் ஆவேசமாய் வீசினார். ஏனென்றால் நிறைய ஓவர்கள் வீசும் அவசியம் இப்போது இல்லை என்பதால் வீச்சாளர்கள் தம்மை பாதுகாக்கும் மனப்பான்மையுடன் ஆடுவதில்லை. ஐந்து வீச்சாளர் கொண்ட வியூகத்தின் சிறப்பு இதுதான்.

அதேபோல் கோலி அஷ்வினைப் பயன்படுத்திய விதமும் சிறப்பானது. அவர் ஹர்பஜனைத் தேர்ந்தெடுத்து அஷ்வினுடன் ஆட வைத்ததும் ஒரு மறைமுகச் செய்தியை அஷ்வினுக்கு உணர வைத்தது. முன்பு ஜடேஜாவும் ஓஜாவும் கூட ஆடும்போது அஷ்வின் மட்டுமே ஆதிக்கம் செலுத்தக்கூடிய சுழலராக இருப்பார். பிறர் ஓட்டங்களைக் கட்டுப்படுத்த, அஷ்வின் பெரும்பாலான விக்கெட்டுகளை எடுப்பார்.

ஆனால் கோலியோ தான் அஷ்வினை மட்டுமே நம்பி இருக்கப் போவதில்லை என உணர்த்தினார். முதல் டெஸ்டில் அஷ்வினுடன் ஹர்பஜன் களமிறக்கப்பட்டார். அவரது இருப்பே அஷ்வினை இன்னும் சிறப்பாய் வீசச் செய்தது. ஆனால் ஹர்பஜன் தன்னளவில் சொதப்ப, கோலி அடுத்த டெஸ்டில் மற்றொரு அதிரடிச் சுழலரான மிஷ்ராவைத் தேர்ந்தெடுத்தார். அஷ்வினுடன் அவருக்கு இணையாக பந்து வீசக் கூடியவர் என்பது அவரது போட்டியுணர்வை தூண்டியது.

கோலியின் கீழ் அஷ்வின் உன்னதமான ஆட்ட நிலையில் இருப்பதற்கு அவருக்கு கோலி ஒரு சின்ன அளவில் நெருக்கடி கொடுத்ததும் ஒரு காரணம்.
கடந்த பத்து வருடங்களாய் இந்திய அணி டெஸ்டில் ஆடும்போது சற்று அலுப்பாய் செயல்படும். குறிப்பாக வெளிநாடுகளில் ஆடும்போது வேகவீச்சாளர்கள் திங்கட்கிழமை பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைப்போல் தோன்றுவார்கள். காரணம் தலைவர் தோனி டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தியதில்லை. ஆனால் இம்முறை முதன்முறையாய் ஐந்து நாட் களில் ஒருமுறை கூட இந்திய அணி மெத்தனமாய் ஆடவில்லை. ஆர்வமின்றி மனம் போன போக்கில் செயல்படவில்லை.

எப்படியாவது தொடரை வெல்ல வேண்டும் எனும் வெறியை கோலி ஒவ்வொரு வீரருக்குள்ளும் சுடர்விட்டு எரியச் செய்தார். இத்தொடர் வெற்றி ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருக்கப் போகிறது.

ஆர்.அபிலாஷ்

No comments:

Post a Comment