Search This Blog

Monday, December 29, 2014

ஜிஎஸ்டி... - யாருக்கு என்ன நன்மை ?

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) தொடர்பான மசோதா கடந்த டிசம்பர் 19-ம் தேதி அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசும் இந்த மசோதாவை வரும் மார்ச் 2016-க்குள் நிறைவேற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இந்த ஜிஎஸ்டி மசோதா எப்படிப்பட்டது, இந்த மசோதாவைக் கொண்டுவருவதில் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும், இதனால் தொழில் துறையினருக்கு, மத்திய, மாநில அரசுகளுக்கு என்ன லாபம் கிடைக்கும், இந்தியாவின் ஜிடிபியில் இந்த மசோதா என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிற கேள்விகள் முக்கியமானவை. இந்த கேள்விகளுக் கான பதிலைப் பார்ப்போம்.
 
ஜிஎஸ்டி என்றால்..?
 
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு என்பது புரிந்துகொள்வதற்கு கொஞ்சம் சிக்கலானது. தற்போது ஒரு பொருளையோ அல்லது சேவையையோ தயாரித்து விற்கும்போது, அதற்கு கலால் வரி, சேவை வரி, ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு கொண்டு செல்ல நுழைவு வரி, மாநில அரசுக்கு கட்டவேண்டிய வாட் வரி என பல வரிகளைச் செலுத்த வேண்டியுள்ளது. ஒரே பொருளுக்கு பல இடங்களில் பலவகையான வரிகளைக் கட்டுவது சிரமம் தரும் விஷயமாகவே இருந்து வருகிறது. இப்படி பல இடங்களில் வரி கட்டுவதைவிட, இந்த அனைத்து வரிகளையும் ஒன்று சேர்த்து, சரக்கு மற்றும் சேவை வரி என்கிற பெயரில் ஒரே வரியாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு செலுத்துவதுதான் ஜிஎஸ்டி.

 


 யாருக்கு என்ன நன்மை?
 
1. மத்திய/மாநில அரசு:

மத்திய அரசுக்கு உற்பத்தியாளரிடம் இருந்து மட்டும் வந்த வரி என்பது தற்போது உற்பத்தி யாளர் துவங்கி டீலர், மொத்த விற்பனையாளர், அந்தப் பொருளை கடையில் விற்கும் சிறு கடைக்காரர் வரை அனைவரிடமிருந்தும் வரி கிடைக்கும். இதனால் மத்திய அரசின் வருவாய் அதிகரிக்கும். ஒரு சில துறைகள் தவிர அனைத்துத் துறைகளுக்கும் இது பொருந்தும் என்பதால், இதன்மூலம் கிடைக்கும் வருவாய் அரசுக்கு அதிக அளவில் இருக்கும்.

 

மாநில அரசுகளைப் பொறுத்தமட்டில், இதுவரை சரக்குகளுக்கான வரியை மட்டுமே வருமானமாக கொண்டிருந்தன. ஜிஎஸ்டி மூலம் சரக்கு மற்றும் சேவை இரண்டுக்குமே மாநில அரசுக்கு வரி மூலம் வருவாய் கிடைக்கும். இதில் சிலர், மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்கின்றனர். அது தவறான கருத்து. தவிர, ஆல்கஹால் மற்றும் பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு இன்னமும் மாநில அரசிடம் தான் உள்ளது. அதனால் மாநில அரசுக்கு எஸ்ஜிஎஸ்டி (மாநில சரக்கு மற்றும் சேவை வரி) மூலம் வருவாய் அதிகரிக்கும்.

2. தொழிற்துறை:

தொழில்துறையினர் நீண்ட காலமாகவே இதனை அறிமுகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தொழில் துறையினரைப் பொறுத்தமட்டில், இந்த வரி விதிப்பு என்பது அவர்களுக்கு அதிகம் பயனளிக்கக்கூடியதாகவே இருக்கும். நிறைய வரிகளுக்காக தனித்தனியே அதிக தொகையை வரியாகச் செலுத்த வேண்டிய சூழலில் இருந்து ஒரே வரியாகச் செலுத்தும் நிலை உருவாகியுள்ளதை நிச்சயம் வரவேற்பார்கள்.

இதனை ஒருங்கிணைப்பதில் குழப்பங்கள் இருந்தாலும், அதனை சரியாக ஒருங்கிணைத்து வரி விதிப்பை அறிமுகம் செய்யும்போது அவர்களது உற்பத்தித் துவங்கி அனைத்து நிலை களிலும் செலவுகள் குறையும். செலவுகள் குறையும்போது அந்தப் பணம் திரும்பவும் தொழிலில் முதலீடாக மாறுவதற்கு வாய்ப்பிருப் பதால், அவர்களது உற்பத்தித்திறன் அதிகரிக்கும். அப்போது உற்பத்தி அதிகரித்து பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்யும் சூழல் உருவாகும்.

3. பொதுமக்கள்:
 
இந்த வரி விதிப்பின் மூலம் நிறுவனங்களின் செலவு குறைவதால், அவர்கள் குறைந்த விலை யில்தான் பொருட்களை விற்பார்கள். அதற்கான வரியும் குறைவாகவே இருக்கும். எனவே, பொதுமக்களும் குறைந்த விலையில் அந்தப் பொருளை வாங்க முடியும். இதனால் பொருட்களை வாங்குபவரது எண்ணிக்கை அதிகமாகும்.

4.ஜிடிபி:

இந்த ஜிஎஸ்டி மூலம் பெரும்பாலானோரை வரி கட்டவைக்க முடியும். வரி ஏய்ப்பு செய்வது குறையும். வரி மூலம் வரும் வருவாய் கணிசமான அளவு உயரும். இதனை அறிமுகம் செய்தால், ஜிடிபியில் 2 சதவிகித வளர்ச்சி இருக்கும் என்று கூறுகின்றனர். அந்த அளவுக்கு வளர்ச்சி அடையும் என்று கூறாவிட் டாலும் தற்போது உள்ளதைவிட நல்ல வளர்ச்சி இருக்கும் என்று கூறலாம்.

தற்போதுள்ள நிலவரப்படி, மத்திய, மாநில ஜிஎஸ்டி சேர்த்து 27 சதவிகிதமாக இதனை நிர்ணயிக்கலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால், என்னை பொறுத்தவரை, மத்திய, மாநில ஜிஎஸ்டியை சேர்த்து 12 - 14 சதவிகிதம் வரி விதிப்பு என்பது சிறந்த விகிதமாக இருக்கும். தற்போதுள்ள மத்திய அரசின் 12%, மாநில அரசின் 14.5% ஆகிவற்றை சேர்த்து 27 சதவிகிதம் என்று வரி விதிக்காமல் மொத்த வருவாயைப் பொறுத்து 12-14 சதவிகிதமாக விதித்தாலே தற்போது உள்ளதைவிட அதிக வருவாயை அரசு ஈட்ட முடியும்.

ச.ஸ்ரீராம்


5 comments:

  1. சாதாரண மக்களுக்கும் புரியும் படி மிகவும் அழகாக உள்ள்து.நன்றி

    ReplyDelete
  2. சாதாரண மக்களுக்கும் புரியும் படி மிகவும் அழகாக உள்ள்து.நன்றி

    ReplyDelete
  3. //வரி விதிப்பின் மூலம் நிறுவனங்களின் செலவு குறைவதால், அவர்கள் குறைந்த விலை யில்தான் பொருட்களை விற்பார்கள். //

    nambikkai thaann vaazhkai...

    ReplyDelete
  4. வியாபாரிகள் என்ன தொகை அளவு வர்த்தகம் புரியலாம் ?

    ReplyDelete
  5. டீசல் பெட்ரோல்இதில்விலக்குஇருப்பாதல்பொருள்விலைஅதிக்கரிக்குமா?

    ReplyDelete