Search This Blog

Tuesday, April 14, 2015

நெட் நியூட்ராலிட்டி

இனிமேல் நீங்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப்புக்கான கட்டணம் மாதமொன்றுக்கு 50 ரூபாய், கூகுளில் பல்வேறு விஷயங்களைத் தேட இனிமேல் ஒவ்வொரு மாதமும் 30 ரூபாய் கட்ட வேண்டும் என்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? ஏறக்குறைய இந்த நிலைக்கு நம்மை கொண்டுவந்துவிட்டன செல்போன் நிறுவனங்கள். பலவிதமான சேவைகளைத் தருகிறோம் என்று சொன்ன செல்போன் நிறுவனங்கள், இன்று கட்டணத்தை உயர்த்தி நம்மிடமிருந்து காசு பறிக்கத் தயாராகிவிட்டன. செல்போன் நிறுவனங்களின் இந்த காசு பறிக்கும் வேலைக்கு எதிராகக் கிளம்பி இருக்கிறது நெட் நியூட்ராலிட்டி என்கிற புதிய சர்ச்சை.
 
நெட் நியூட்ராலிட்டி என்றால்..?

இணையதளச் சேவையை வழங்கும் செல்போன் சேவை நிறுவனமும், அரசும் அனைத்து இணையதள டேட்டாக்களையும் சமநிலையில் வழங்கவேண்டும் என்பதே நெட் நியூட்ராலிட்டி என்னும் இணையதளச் சமநிலை. இன்டர்நெட் வசதியை பயன்படுத்தும் கட்டணத்தில் வாடிக்கையாளர்களிடையே வித்தியாசம்  காட்டக்கூடாது. அதேபோல், தகவல், இணையதளம், இயங்குதளம், ஆப்ஸ், தொலைதொடர்பு முறை ஆகிய வற்றிலும் சமநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே நெட் நியூட்ராலிட்டி. கொலம்பியா பல்கலையின் மீடியா சட்டப் பிரிவின் பேராசிரியர் டிம்வூ (TimWu) என்பவர் 2003-ல் இந்தக் கருத்தை உருவாக்கினார்

என்ன பிரச்னை?

கடந்த சில ஆண்டுகளாக செல்போன்கள் இந்தியாவில் வேகமான வளர்ச்சியைப் பெற்றுவந்தன. இதனால் செல்போன் சேவை தரும் நிறுவனங்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. இத்தனை நாளும் வசூல் ராஜாக்களாக விளங்கிய செல்போன் நிறுவனங்களின் வருமானம் சமீப காலமாக குறைய ஆரம்பித்திருக்கிறது. இதற்கு காரணம், தினம் தினம் புதிது புதிதாக முளைக்கும் ஆயிரமாயிரம் ஆப்ஸ்கள். இத்தனை நாளும் இணையதளங்கள் மூலம் செய்துவந்த வேலையை தற்போது பலரும் ஆப்ஸ் மூலம் செய்துவிடுவதால், செல்போன் நிறுவனங்களில் வருமானம் ஏகத்துக்கும் குறைந்திருக்கிறது.

அடுத்த முக்கியமான காரணம், வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால் (VOIP) எனும் இணையதள கால் வசதி அதிகரித்து வருவது. முன்பெல்லாம் செல்போன் நிறுவனங்களின் மூலம் பேசி வந்த பலரும் இன்றைக்கு வாட்ஸ்அப், ஸ்கைப், கூகுள் ஹேங்அவுட் ஆகியவற்றின் மூலம் எளிதாக பேசிவிடுகின்றனர். இதன் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர் களுடன் பலரும் தாராளமாகப் பேசுவதால், செல்போன் நிறுவனங்களின் வருமானம் குறைந்திருக்கிறது. இதுகுறித்து செல்போன் சேவையை நெறிமுறைப்படுத்தும் ட்ராய் அமைப்பிடம் ஏற்கெனவே செல்போன் சேவை நிறுவனங்கள் புகார் செய்துள்ளன.

இந்தப் பிரச்னைக்கான தீர்வைக் கண்டறியும்  முன் இதுபற்றி  மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பான ட்ராய், இருபது கேள்விகளை மக்கள்முன் வைத்துள்ளது. (ட்ராய் கேட்டிருக்கும் கேள்விகளைப் படிக்க பின்வரும் லிங்க்கை கிளிக் செய்க http://www.trai.gov.in/WriteReadData/WhatsNew/Documents/OTT-CP-27032015.pdf)

இரண்டு வாய்ப்புகள்!

பத்து ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் இதுபோன்ற பிரச்னை தலைதூக்கியபோது, இணையதள அரசு நெட் நியூட்ராலிட்டி பக்கமே இருந்துள்ளது. ஆப்ஸ்கள் தங்கள் வருமானத்தைக் கெடுக்கின்றன என்பதற்காக செல்போன் சேவை தரும் நிறுவனங்கள் எடுக்கும் முடிவு மக்களைப் பாதிக்கும் விதமாக உள்ளது. அதாவது, ஆப்ஸ் நிறுவனங்களிடம் இருந்து தப்பிக்க செல்போன் சேவை தரும் நிறுவனங்கள் இரண்டு உத்திகளை கையாள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒன்று, ஆப்ஸ் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு, அவர்களிடம் கணிசமான ஒரு தொகையைப் பெற்று குறைந்த விலையில் சேவையை வழங்குவது. இரண்டாவது, இணைய தளச் சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்து வது. இந்த இரண்டில் எந்த முடிவை செல்போன் சேவை தரும் நிறுவனங்கள் எடுத்தாலும் அதனால் மக்களுக்கு பாதிப்பே!

சிறிய மீனை விழுங்கும் பெரிய மீன்!

உதாரணமாக, ஆப்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, அவர்கள் தரும் பணத்தின் அடிப்படையில் அதை வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச் செல்ல செல்போன் நிறுவனங்கள் முடிவு செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். எல்லா ஆப்ஸ் நிறுவனங்களாலும் செல்போன் நிறுவனங்கள் கேட்கும் தொகையைத் தரமுடியாது. பல பில்லியன் டாலர் முதலீட்டில் இயங்கும் அமேசான் நிறுவனம் தனது ஆப்ஸை கொண்டு செல்ல செல்போன் சேவை நிறுவனங்கள் கேட்கும் தொகையை எளிதாகத் தந்துவிடலாம்.


ஆனால், குறைந்த முதலீட்டில் பல நிறுவனங்கள் தங்கள் ஆப்ஸை கொண்டு செல்ல செல்போன் நிறுவனங்கள் கேட்கும் தொகையைத் தரமுடியாது. இதனால் அந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் கவனத்துக்கு வராது. இதனால் பெரிய நிறுவனங்கள் இனி சிறிய நிறுவனங்களை வியாபாரப் போட்டியிலிருந்து எளிதாக ஓரங்கட்ட முடியும். பெரிய நிறுவனங்களுக்கும் சிறிய நிறுவனங்களுக்கும் இடையே சமச்சீரற்ற போட்டி உருவாகும். எனவே, ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குபவர்கள் ஒரு சில நிறுவனங்களின் பொருளை மட்டுமே வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

கட்டணத்தை உயர்த்தினால்..!

ஆப்ஸ் நிறுவனங்கள் அதிகப் பணத்தைச் செலவழிக்க முன்வராது என்பதால் இணையதளச் சேவைக் கட்டணங்களை உயர்த்த முடிவு செய் தாலும் மக்களுக்குத்தான் பாதிப்பு. அதாவது, இனி செல்போனை பயன்படுத்த மாதாந்திர சேவைக்காக அடிப்படை கட்டணம் 150 ரூபாய், கூகுள், யாகூ போன்ற தேடுதல் தளங்களுக்கு மாதமொன்றுக்கு 18 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கட்டணம், வாட்ஸ்அப், வீசாட் போன்ற உடனடி ஆப்ஸ்கள் 80 ரூபாய் என்கிற மாதிரி  கட்டணம் விதிக்கப்பட்டால் சாதாரண மனிதன் அதை கட்டித்தானே ஆகவேண்டும்? இவை தவிர, இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆப்ஸில் பர்சேஸ் செய்ய அனைவரையும் பழக்கிவிட்டன. அதன் கட்டணம் 50 ரூபாயைத் தாண்டும் என்றும் கூறப்படுகிறது. ஆக, மாதமொன்றுக்கு  800 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை செலவழிக்க வேண்டிய நிலைமை பலருக்கும் உருவாகலாம்.

ஒருவர் ஒரு மாதத்தில் ஒருசில முறை மட்டுமே யூ-டியூப் பார்க்கிறார். ஒரு சிலமுறையே மட்டுமே ஸ்கைப்பில் பேசுகிறார் எனில், அதற்காக ஏன் 1,000 ரூபாயை ஒவ்வொரு மாதமும் செலவழிக்க வேண்டும்? சாதாரணமாக 200 முதல் 300    ரூபாய்க்குள் இந்த அனைத்து சேவைகளையும் பயன்படுத்தி வந்த மக்களுக்கு 1,000 ரூபாய் பெரிய தொகையாக இருக்குமே என பலரும் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த விஷயத்தில் ட்ராய் அமைப்பானது உடனடியாக என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல், மக்களின் கருத்துக்களை அறிந்துகொண்டபிறகு ஒரு நல்ல முடிவை எடுக்க உத்தேசித்திருக்கிறது. ஆனால், ட்ராய் அமைப்பானது, இணையதள சமநிலையை வலியுறுத்தும் முடிவையே எடுக்க வேண்டும் என்றே மக்கள் நலனில் அக்கறை கொண்ட பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.  இணையதளச் சேவையானது எல்லோருக்கும் சமநிலையில் கிடைத்தால் மட்டுமே அதனைப் பயன்படுத்தி எல்லோரும் பொருளாதார ரீதியில் முன்னேற முடியும்.

எனவே, இந்த விஷயத்தில் செல்போன் சேவை தரும் நிறுவனங்களுக்கு ஆதரவான முடிவை எடுப்பதைவிட மக்கள் நலனுக்கு சாதகமான முடிவையே ட்ராயும் அரசாங்கமும் எடுக்க வேண்டும். டிஜிட்டல் இந்தியா, அனைவருக்கும் இணையதள சேவை என்று மார்தட்டி கொள்ளும் அரசு இந்த பிரச்னையை சரியாக கையாண்டால்தான் சமநிலை உண்டாகும் என்பதே நம் கருத்து.

இதுநாள் வரை நீங்கள் இலவசமாகப் பயன் படுத்திய ஆப்ஸ்களை இனி கட்டணம் செலுத்தி பயன்படுத்த வேண்டும் என்றால், அதனால் உங்களுக்குப் பாதிப்புதானே! இந்த கட்டணத்துக்கு எதிராக, அதாவது, நெட் நியூட்ராலிட்டிக்கு ஆதரவாக, ட்ராய் கேட்கும் 20 கேள்விகளுக்கும் உங்கள் பதிலைப் பதிவு செய்து advqos@trai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். இதனால் நெட் நியூட்ராலிட்டிக்கு ஆதரவு பெருகும். இல்லாவிட்டால் மிகச் சிலர்  சொல்லும் கருத்தை வைத்து ட்ராய் அமைப்பானது தவறான முடிவு எடுக்க வாய்ப்புள்ளது.

நெட் நியூட்ராலிட்டிக்காக ட்ராய் கேட்டுள்ள 20 கேள்விகளுக்கு நாணயம் விகடன் மூலமாகவும் நீங்கள் பதிலளிக்கலாம். http://bit.ly/WriteToTRAI என்ற இணையதள முகவரிக்கு சென்று உங்கள் பதில்களை பதிவு செய்யுங்கள்!

விதிமுறையை மீறியதா ஏர்டெல்?

நெட் நியூட்ராலிட்டி பற்றி சர்ச்சை மும்முரமாக நடந்துவரும் வேளையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் ‘ஏர்டெல் ஜீரோ’ திட்டத்தின் மூலம் ஆப்ஸ்களில் சிலவற்றை இலவசமாகப் பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளது. இந்த அறிவிப்பு நெட் நியூட்ராலிட்டிக்கு எதிரானது எனச் சேவை நிறுவனங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இ-காமர்ஸ் நிறுவனங்களுடன் ஏற்கெனவே ஒப்பந்த அடிப்படையில் குறைந்த விலையில் மார்க்கெட்டிங் வாய்ப்புகளை வழங்கியதன் மூலம் நெட் நியூட்ராலிட்டி விதிமுறையை மீறியுள்ளதாக அந்த நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இந்த பிரச்னையை பரிசீலனை செய்துவருவதாகவும், விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் ட்ராய் கூறியுள்ளது.
ச.ஸ்ரீராம்




 
 

No comments:

Post a Comment