Search This Blog

Saturday, May 30, 2015

ஐ.பி.எல் கோப்பை முயற்சிக்கு மகுடம்!

 
"காத்து காத்து எதிர்பார்த்த கஸ்தூரி மாம்பழத்தை காகம் கொத்திப் போய்விட்டதே” என்றொரு பழமொழி மலையாளத்தில் உண்டு. இவ்வருட ஐ.பி.எல்லின் மிகச் சிறந்த அணி இறுதிப் போட்டியில் தடுமாறி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்று கோப்பையை மும்பைக்கு தாரை வார்த்தபோது சென்னை அணி ரசிகர்களுக்கு இந்த பழமொழிதான் ஞாபகம் வந்திருக்கும். மும்பையை விட பல மடங்கு முதிர்ச்சியும் கூர்மையும் கொண்ட அணி சென்னை. நிச்சயம் இறுதிப் போட்டியை வென்றிருக்க வேண்டும். ஆனால் மோசமான திட்டமிடல் மற்றும் எதிர்மறை அணுகு முறையால் தோற்றது. ‘மும்பை இந்தியன்ஸ்’ விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது என்பதையும் மறுப்பதற்கில்லை.
 கொல்கொத்தா ஈடன் கார்டன்ஸ் ஆடுதளத்தில் எப்படி ஆட வேண்டும் என்பது ஆட்டத்தை பார்த்த ஒவ்வொரு பார்வையாளனுக்கும் தெரிந்தது. ஆனால் சென்னை அணி மட்டும் போன காங்கிரஸ் அரசாங்கம் போல் தன் தவறுகளை திருத்திக் கொள்ள மறுத்தது. இறுதி ஏழு ஓவர்களில் கிட்டத்தட்ட ஒரு ஓவருக்கு 15 ஓட்டங்கள் விதம் அடிக்க வேண்டி வந்தது. ஆனால் 8 விக்கெட்டுகள் இருந்தன. புலியின் முதுகில் அமர்ந்து கொண்டே அதிலிருந்து தப்பிப்பது போல் அந்நிலையில் இருந்து வெல்வது கிட்டத்தட்ட அசாத்தியமானது.

சென்னை அணிக்கு குறிப்பிடும்படியான பலவீனங்கள் ஏதும் இல்லை. இறுதி ஆட்டத்தில் 202 ஓட்டங்களை மும்பை அடிக்கவிட்டதால் மட்டும் நாம் சென்னையின் பந்து வீச்சில் ஓட்டைகளை தேடுவது நியாயமல்ல. இதே பந்து வீச்சுதான் இத்தொடரில் பல ஆட்டங்களைச் சென்னை வெல்ல காரணமாய் அமைந்தது. அஷ்வின், பிராவோ, நெஹ்ரா, ஜடேஜா ஆகியோர் இதுவரையிலும் சிறப்பாகவே வீசி வந்தனர்.

சென்னையின் பந்து வீச்சு எம்.ஏ சிதம்பரம் மைதானத்தின் மந்தமான ஆடுதளத்துக்கு மிக மிக தோதானது. பந்து ஓரளவுக்கு சுழன்ற ராஞ்சியில் நடந்த பங்களூருவுக்கு எதிரான தகுதி ஆட்டத்திலும் சென்னை அணியினர் நன்றாக பந்து வீசினர். ஆனால் இறுதிப் போட்டிக்கான ஈடன் கார்டன் ஆடுதளம் சற்று குழப்பமானது. ஏற்றத்தாழ்வாய், கொஞ்சம் மெத்தனமாய், வேகவீச்சுக்கு தோதாய் வித்தியாசமாய் அமைந்தது. இத்தளத்துக்கு ஏற்றபடி சென்னையினரால் போதுமானபடி தம்மை தகவமைக்க இயலவில்லை. ரோஹித், பொலார்ட், ராயுடு போன்றவர்கள் ஆறாவது கியரில் தம் ஆட்டத்தை பறக்க விடும் போது ஆடுதளம் பற்றியோ பந்து வீச்சு திட்டங்கள் பற்றியோ யோசிக்க யாருக்குத்தான் நேர மிருக்கும்?

ஆனால் மட்டையாடும் போது இன்னும் தெளிவான அணுகு முறை இருந்திருக்க வேண்டும். முதல் ஆறு ஓவர்கள் ஆக்ரோஷமாய் ஆடியிருக்க வேண்டும். ஆனால் சென்னை மந்தமாய் மட்டையாடி விக்கெட்டுகளை பாதுகாக்க முனைந்தது. சென்னை மட்டையினரின் மெத்தனமான, எதிர்மறையான மட்டையாட்டம் மலிங்கா மக்ளீகன், வினய் போன்ற மும்பை வேகவீச்சாளர்களை நிதானமாய் தம் தேவைக்கேற்றபடி வீச அனுமதித்தது. வீச்சாளர்களை எந்தவித நெருக்கடிக்கும் அவர்கள் ஆளாக்கவில்லை. இதற்கு தொடக்க மட்டையாளர் மெக்கெல்லம் இல்லாததும், மற்றொரு மட்டையாளர் ஸ்மித் சுமாரான ஆட்டநிலையில் இருந்ததும், புதிதாய் வந்த ஹஸ்ஸிக்கு வயதாகிவிட்டதும் ஒரு காரணம்.

பலரும் விமர்சிப்பது போல் சென்னை அணி நெருக்கடியில் ஆட முடியாது choke ஆகிவிட்டதாய் நாம் கருத வேண்டியதில்லை. டி20 ஆட்டத்தில் பூநாகம் தீண்டிக் கூட அரசன் சாகக்கூடும். அடுத்த ஐ.பி.எல் தொடரில் இதே சென்னை அணி மீண்டும் கோப்பையை வெல்லக்கூடும். அதற்கான அத்தனை தகுதிகளும் இவ்வணிக்கு உள்ளது.

இத்தொடரில் சோபித்ததன் மூலம் ஹர்பஜன் சிங் இந்திய டெஸ்ட் அணியில் தன் இடத்தை மீட்டுள்ளார். அவர் கடந்த ஒரு வருடமாகவே மிகச் சிறப்பாய் பந்து வீசித்தான் வருகிறார். 2000 தொடக்கத்தில் நாம் பார்த்த சரவெடி ஹர்பஜன் இவர் அல்லவென்றாலும், இப்போதும் ஹர்பஜனால் தன் அணியை தோல்வியின் விளிம்பில் இருந்து மீட்டு ஜெயிக்க வைக்க முடியும். ஆனால் தோனி மாற்றப்படாத அணியுடன் எப்போதும் ஆட விரும்புவதால் ஹர்பஜன் புறக்கணிக்கப்பட்டார். இப்போது டெஸ்ட் ஆட்ட அணித்தலைவராய் கோலி நியமிக்கப்பட்டு விட்ட நிலையில் புது மாற்றங்கள் பலவற்றை எதிர்பார்க்கலாம். தோனி முதலாவதாய் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாய் ரவீந்திர ஜடேஜா நீக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, உலகக் கோப்பை ஆகிய தொடர்களில் ஜடேஜாவின் ஆட்டம் மிகவும் ஏமாற்றமளித்தது. இங்கிலாந்தில் முதல் டெஸ்டை அவர் வெல்ல உதவினாலும் ஆண்டர்ஸனுடனான அவரது சர்ச்சை அணியின் கவனத்தை குலைத்து தொடர் தோல்வியை நோக்கி தள்ளியது. ஜடேஜா இதுவரை தோனி தமக்கு அளித்த மட்டற்ற ஆதரவை இனி கோலியின் தலைமையின் கீழ் எதிர்பார்க்க இயலாது.

இந்த ஐ.பி.எல் தொடரில் உமேஷ் யாதவ், நெஹ்ரா, அரவிந்த், ஹர்ஷல் படேல், பியுஷ் சாவ்லா, ஹர்பஜன், தாஹிர், அனிருத், சந்தீப் ஷர்மா, பிரேட் ஹோக், அங்கீத் ஷர்மா, புவனேஷ்வர் குமார், பிராவோ ஆகியோர் சிறப்பாய் பந்து வீசினர். இப்பட்டியலில் அதிகமான இந்தியர்கள் இடம்பெற்றிருப்பதைக் கவனிக்கலாம். ஆம் இவ்வருட ஐ.பி.எல்லில் இந்திய வீச்சாளர்கள் மிக முக்கிய பங்காற்றினர்.

ஆனால் மட்டையாட்டத்தில் நம்மவர்கள் அது போல் சோபிக்கவில்லை. ரோஹித் ஷர்மா, சிரேயாஸ் ஐயர் போன்ற மிகச்சிலர் மட்டுமே தொடர்ந்து நன்றாய் மட்டையாடினர். மற்ற படி எ.பி.டிவில்லியர்ஸ், கெய்ல், பொலார்ட், மெக்கல்லம், வார்னர் போன்றோர்தான் இவ்வருட மட்டையாட்ட நட்சத்திரங்கள்.

ஹர்திக் பாண்டியா எனும் பரோடா மாநில ஆல் ரவுண்டர் இம்முறை மும்பை அணிக்காய் களமிறங்கி சிறப்பாய் பந்து வீசவும் மட்டையாடவும் செய்தார். வேகவீச்சு ஆல் ரவுண்டர்கள் இந்தியாவில் மிக மிக அரிது என்பதால் எதிர்காலத்தில் பாண்டியாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளித்து இந்திய அணியில் இடமளிப்பது இங்கிலாந்தில் நடக்கும் அடுத்த உலகக் கோப்பையில் நாம் கலக்குவதற்கு அவசியம்.

1 comment:

  1. முதல் ஆறு ஓவர்கள் ஆக்ரோஷமாய் ஆடியிருக்க வேண்டும். // ஆம்

    ReplyDelete