Search This Blog

Saturday, September 21, 2013

அருள்வாக்கு - ஆசையும் ஆத்மாவும்!

 
நாம் அறிந்த ஆனந்தமெல்லாம் சின்ன ஜீவ நானான அகங்காரம் என்ற ஈகோவுடையதே. இது ஆசை பூர்த்தியாலேயே ஆனந்தமடைவது, ஆத்மாவோ ஆசையே இல்லாதது. அந்யமான இன்னொன்றைக் குறித்துத்தானே ஆசை ஏற்பட முடியும்? ஆத்மாவுக்கு அந்ய வஸ்து எதுவும் தெரியாதே! ஆனாலும், எப்படிச் சின்ன ஜீவநானின் சைதன்யமும் ஆத்ம சைதன்யத்திலிருந்து வந்ததுதானோ அப்படியே இந்த ஆசையும்கூட ஆத்மாவிடம் இதற்குள்ள ஆசையிலிருந்துதான் வந்தது. இப்படிச் சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும். தனியொன்றாக மாத்திரமே இருப்பது ஆத்மா. அதாவது, ஆத்மா அத்வைத வஸ்து. இது எப்படி த்வைத ரீதியில் மட்டுமே வைக்கக்கூடிய ஆசை என்பதற்கு ஆஸ்பதமாயிருக்க முடியும் என்று ஆச்சர்யமாயிருக்கலாம். ஆத்மாவைக் கொஞ்சம்கூட அறிந்து கொள்ளாத ஜீவ மனஸ் அதனிடம் எப்படி ஆசை வைக்க முடியும் என்றும் கேட்கலாம்.
 
ஆனாலும் உபநிஷத்திலே இப்படித்தான் சொல்லியிருக்கிறது. யாஜ்ஞவல்க்ய மஹரிஷி தம்முடைய பத்னி மைத்ரேயிக்கு உபதேசம் பண்ணுமிடத்தில் இவ்விஷயம் சொல்கிறார். ‘ஆசை’ என்ற வார்த்தையைச் சொல்லாமல் ‘ப்ரியம்’ என்று சொல்கிறார். இரண்டும் ஒன்றுக்கொன்று ரொம்ப நெருங்கிய சம்பந்தமுள்ளவைதான்; ஒன்றே கூட என்று சொல்லிவிடலாம். நாம் ஆசைப்படுகிற வஸ்துக்களிடமெல்லாம் நமக்கு ப்ரியம் இருக்கிறது. நமக்கு அப்ரியமானவற்றிடம் ஆசையில்லை. ‘பெண்டாட்டிக்கு அகமுடையானிடம் ப்ரியம் இருக்கிறதென்றால் அவனை முன்னிட்டே அவள் ப்ரியம் வைக்கிறாள் என்று அர்த்தமில்லை. ஆத்மாவை (தன்னை) முன்னிட்டே அவனிடம் இவள் ப்ரியம் வைக்கிறாள். இப்படியேதான் அவன் இவளிடம் ஆசை வைப்பதும். புத்ரபாசம் என்ற ப்ரியம் அந்தப் பிள்ளைகளையே முன்னிட்டு அல்ல, ஆத்மாவை முன்னிட்டுத்தான். வித்தம் (பொருள்) ப்ரியமாயிருப்பதும் இதே காரணத்துக்காகத்தான்’.  

ஆனால், முடிவிலே மனம் தன்னையும் விலக்கிக் கொண்டு உயிரை மாத்திரம் இருக்க விடும்போது, அதற்கே சரியாக விளங்காவிட்டாலும் அது ஆத்மாவிடம் கொண்டுள்ள ப்ரியத்தால்தான் இப்படிச் செய்கிறது என்று தெரிகிறது.
 
இப்படி இனம் தெரியாமல் இருக்கிற ப்ரியத்தை இனம் புரிவதாக ஆக்கிக் கொண்டால் இப்போதே மனஸை ஆத்மாவிலே ஒடுக்கி இல்லாமல் பண்ணிக்கொண்டு ஆத்மாவாக மட்டும் இருப்பதற்கு எண்ணம் வந்துவிடும். ‘ததஸ்ததோ நியம்யைதத் ஆத்மந்யேவ வசம் நயேத்’ என்று பகவான் உபதேசம் பண்ணியபடி செய்து பார்க்கத் தோன்றும்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
 

No comments:

Post a Comment