Search This Blog

Tuesday, November 03, 2015

குப்புற விழுவது ஏன்?


ஒருமுகமாக இந்தக் கார்யத்தைப் பண்ண வேண்டும், அப்போது பராக்குப் பார்க்கப்படாது என்பதால்தான் வெளியிலே ஒன்றையும் பார்க்காமல் பூமிப் பக்கமாகத் தலையைக் குனிந்துகொண்டு குப்புற வாக்கில் நமஸ்கரிப்பது, மற்றவர்களால் தலைகுனிவு ஏற்படுவது அவமானம். நாமே குனிவது பஹுமானம்!

பஹிர்முகமாக (வெளிமுகமாக) ஒரு ஜீவனை இழுக்கிற இந்தக் காரியங்களெல்லாமே மல்லாக்குப் பக்கத்தில்தானே இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் லோகத்தின் திசையிலிருந்து திருப்பவே குப்புற நமஸ்கரிப்பது.

குப்புற விழுகிறது, முதுகு காட்டுகிறது - ‘புற முதுகு காட்டுவது’ என்கிறது - இதெல்லாம் அவமானம். ஆனால் மானம் என்பது ‘நான்’ என்கிற அஹம்பாவம் இருக்கிறபோதுதானே முக்கியம்? மநுஷ்ய வாழ்க்கையிலே ‘நான்’-பாவமும் மானமும், அதோடேயே அவமானமும் - அபிமானமுந்தான்! இந்த எல்லாமும் இல்லாமலிருக்க முடியாதுதான். (இவை) இல்லாமல் மட்டுமிருந்தால் நாமே ராஜா தான். என்ன ராஜா? ஆத்மாவை ஜயித்த ராஜா. ஜீவன் முக்தன் என்னும் ராஜா. அப்போது நமஸ்காரமே இல்லை. ஆனால் நம் மாதிரி நிலையிலே வாழ்க்கை நடத்துகிறதற்கு மானாவமானங்களை அவச்யமான இடங்களில் வைத்துக்கொண்டே இருப்போம். ரொம்பவும் அதைக் கொண்டாடிக் கொண்டில்லாமல் கொஞ்சம் அடக்கி வைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அதை வைத்துக் கொள்ளாமலே இருக்கிற இடங்களும் உண்டு என்று அறிவு பெற்று அங்கே மட்டும் தூக்கிப் போடுவோம். அந்த இடங்கள் என்ன? ஈச்வர ஸந்நிதானம், மஹான்கள், பெரியவர்களின் ஸந்நிதானம்தான். அங்கே மானமே வேண்டாம்! குப்புற விழுவோம்! புறமுதுகு காட்டுவோம்! ஆத்ம ஜயம் என்று சொன்னேனே, அந்த வெற்றிக்கு ஏற்றுகிற முதல் சின்னப் படியாக இங்கே இப்படிப் புறமுதுகு காட்டுவோம். பிற இடங்களிலும் ரொம்பவும் மானாவமானம் கொண்டாடிக் கொண்டில்லாமல் கொஞ்சமாவது அடங்குவதற்கு இதுவே ஸஹாயம் செய்யும்.

No comments:

Post a Comment