Search This Blog

Friday, December 21, 2012

ஓ பக்கங்கள் - காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்! - ஞாநி


தர்மபுரியில் தலித் குடியிருப்புகள் தலித்தல்லாத சாதியினரால் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவத்துக்கு காதல் காரணமா இல்லையா என்ற ஆராய்ச்சி அரசியல் களத்தில் நடந்து வருகிறது. இன்னும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாத ஒரே அம்சம், நடந்தது வன்முறையா இல்லையா என்ற அபத்தமான தலைப்பு மட்டும் தான்.

தலித் இளைஞனும் வன்னியப் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதாலும் அதில் விரக்தியடைந்த பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டதாலும்தான் இந்தத் தாக்குதல் நடந்தது என்று நானும் கருதவில்லை. தாக்குதல் நடத்து வதற்கான மனநிலை ஏற்கெனவே கனன்று கொண்டிருந்தது. அதற்கு ஒரு சாக்காக இந்தக் காதல் திருமணம் அமைந்தது என்றே தோன்றுகிறது. இது இல்லாவிட்டால், இன்னொரு சாக்கு கிடைத்திருக்கக் கூடும்.

காதல் திருமணம்தான் உண்மையான பிரச்னை என்றால், நடந்த வன்முறையில் காதலர்கள் தாக்கப்படவில்லை. அவ்வளவு ஏன், எந்த வீட்டிலும் எந்த நபரும் தாக்கப்படவில்லை. வீடுகளிலிருந்து ஆட்களை விரட்டிவிட்டு, வீடுகளையே தாக்கி அழித்திருக்கிறார்கள் தாக்கிய கும்பல்கள். தங்களைவிட மோசமான நிலையில் இருந்த தலித்துகளின் குடும்பங்களிலிருந்து பலர் படித்து வேலை வாய்ப்புகளை அடைந்து நகரங்களில் குடியேறி பொருள் சம்பாதித்து, கிராமத்தில் இருக்கும் குடும்பத்தின் நிலையை மேம்படுத்தி, தங்களை விட வசதியாக, தங்கள் கண்ணெதிரே வாழ்வது பற்றிய பொறாமையும் எரிச்சலுமே தாக்குதலின் பின்னால் இருப்பதாகவே தெரிகிறது. அந்தப் பொறாமைக்கும் எரிச்சலுக்கும் பின்னால் இருப்பது சுய சாதிப் பெருமையும் சாதிவெறியும்தான். பொருளாதாரத்தில் முன்னேறி சமூக அந்தஸ்தில் அடுத்த படிக்குச் சென்றால் தங்கள் சாதி மேலாண்மை பாதிக்கப்படும் என்ற கவலையில் தலித்துகளின் செல்வத்தை, வளத்தை அழித்திருப்பதாகவே தெரிகிறது.

நடந்த தாக்குதல் காதல் திருமணப் பிரச்னையால் நடக்கவில்லை என்று வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு சாதியினர் சொன்னபோதும், இந்தத் தாக்குதலையொட்டி, சமூக அரசியல் களத்தில், இன்று காதல் திருமணம் என்பது விவாதத்துக்குரிய விஷயமாக மாறியிருக்கிறது. இது இப்படி விவாதத்துக்கு உட்படுவது எனக்கு நல்லதாகவே படுகிறது. எது காதல், எப்படி காதலிப்பது, எப்போது காதலிக்கலாம், எந்தக் காதலை ஏற்கலாம், நிராகரிக்கலாம் என்றெல்லாம் அரசியல் தலைவர்களே பேசவேண்டிய கட்டாயம் வந்திருப்பது நல்லது.

மாற்று சாதிப் பெண்களை மயக்கி தங்களைக் காதலிக்க வைத்து, பின்னர் ஏமாற்றி பணம் பறிக்கும் வேலையில் தலித் இளைஞர்கள் ஈடுபடுவதாக டாக்டர் ராமதாஸ் பகிரங்கமாகவே புகார் சொல்கிறார். திட்டமிட்டு ஒரு பெண்ணை மயக்கிக் கவிழ்த்து பணம் பறிக்கும் கயமையுடையவர்கள் எல்லா சாதிகளிலும் இருக்கிறார்கள். பெண்ணை ஏமாற்றுவோர் இந்தக் குறிப்பிட்ட சாதியில்தான் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுச் சொல்வதுதான் சாதி வெறி. இந்தச் சாதியினரெல்லாம் குற்றம் செய்யக்கூடியவர்கள் என்று சில சாதிகளை ஆங்கில ஆட்சியில் வரையறுத்ததுபோல, இந்தச் சாதியினர் போலிக் காதலர்கள் என்று புதிய வரையறையை ராமதாசும் அவருடன் அணி சேர்ந்திருக்கும் இதர சாதித்தலைவர்களும் உருவாக்குகிறார்கள்.

எந்தப் புரிதலும் இல்லாமல், கண்டதும் காதல் என்று வெறும் பாலியல் கவர்ச்சியைக் காதல் என்று இன்று பல யுவன்களும் யுவதிகளும் குழப்பிக் கொள்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அது ராமதாஸ் சொல்வது போல தலித் இளைஞர்கள் மத்தியில் மட்டும் நடக்கும் விஷயமல்ல. எல்லா சாதிகளிலும் இருக்கும் ஆண்கள், பெண்கள் மத்தியில் காதலைப் பற்றிய சரியான புரிதலே இல்லாத விடலைத்தனம் இருக்கிறது.

காதல் பற்றிய அந்த விடலைத் தனத்துக்கு உரம் போட்டு நீர் ஊற்றி வளர்ப்பது யாரென்று அடையாளம் காணவேண்டும். அது சினிமாதான். அது காட்டி வருவது காதலே அல்ல. காமப் பசியைத்தான் காதல் என்று சித்திரித்துக் கொண்டிருக்கிறது. விடலை மனங்களுக்கு சினிமா கற்றுக் கொடுத்திருக்கும் ஈவ் டீசிங் கொஞ்சநஞ்ச மல்ல. பள்ளிக்கூடத்துக்குப் படிக்கப் போகும் மாணவியின் சைக்கிளை மடக்கிப் பிடித்து வைத்துக் கொண்டு என்னை லவ் பண்ணாதான் விடுவேன் என்று மிரட்டும் பொறுக்கியை ஹீரோவாகக் காட்டுகிறது தமிழ் சினிமா. சினிமாவில் அந்தப் பெண் ஏழெட்டு முறை மிரட்டலுக்குப் பின் அந்தக் ‘காதலை’ ஏற்றுக் கொண்டு விடுவாள். வாழ்க்கையில் என்ன நடக்கும்? ஒரே சாதிக்காரராயிருந்தால், முதல்முறை டீசிங்குக்குப் பிறகு அந்தப் பெண்ணை ஸ்கூலுக்குப் போகாதே என்று நிறுத்திவிடுவார்கள். எதிரெதிர் சாதியானால் இது சாதிக் கலவரமாக மாறிவிடும்.

கடந்த பத்தாண்டுகளில் வந்திருக்கும் தமிழ்ப்படங்களில் பெரும்பாலானவை, மீடியாவால், பத்திரிகைகளால் கொண்டாடப்பட்டவை, விருதுகள் பெற்றவை. பொறுக்கிகள், பொறுக்கித்தனம், பெண்ணை வலுக்கட்டாயமாகக் காதலிக்கவைத்தல் போன்ற அம்சங்களையே கதாநாயக அம்சங்களாக உயர்த்திப் பிடித்தவை. விதிவிலக்கான நல்ல படங்கள் மிகச் சில. பெண் உடலுக்கு ஆணும், ஆண் உடலுக்குப் பெண்ணும் ஆசைப்பட்டு ஏங்குவதும்; அதை அடைய விதவிதமான வன்முறையில் ஈடுபடுவதையுமே காதல் என்று வணிகப் படங்கள் நம்மை நம்பவைத்து வருகின்றன. இவற்றின் ஒட்டுமொத்த விளைவு என்ன? காம உணர்ச்சியால் மட்டும் உந்தப்பட்ட இளைஞர்கள், தன்னை காதலிக்காததும் தனக்குக் கிடைக்காத பெண்ணை அழித்துவிடும் வெற்றியுடன் ஆசிட் ஊற்றும்வரை போகிறது.

நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் சென்னையில் ஒரு மருத்துவ மனையில் இருக்கிறாள் காரைக்கால் விநோதினி. ஏழைப்பெண். படித்து வேலைக்குப் போய் தன் குடும்பத்தைக் காப்பாற்றும் கட்டத்துக்கு வந்த சமயத்தில் விடலை இளைஞன் செய்த ஆசிட் தாக்குதலினால் இரு கண் பார்வையையும் இழந்து அவள் உயிருக்குப் போராட, அவளைக் காப்பாற்ற தேவையான சிகிச்சைக்கு பல லட்சங்களையும் திரட்ட அவளுடைய ஏழைப் பெற்றோர் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த விடலை வக்கிரங்களின் ஊற்றுக் கண்ணான படங்களை எடுத்தவர்கள் - பணம் போட்டவர் முதல் எழுதி இயக்கி நடித்தவர் வரை - பல சாதிகளையும் சேர்ந்தவர்கள். இந்தப் படங்களால் மனம் பேதலிக்கும் விடலைகளும் பல சாதிகளிலும் இருப்பவர்கள்தான். இப்படிப்பட்ட படங்களுக்கெதிராக அனைத்து சாதியினரும் ஒன்று சேர்ந்துதான் எதிர்க்க வேண்டுமே தவிர, ‘உங்க சாதிப் பையன்கதான் மோசம் எங்க சாதிப் பொண்ணுங்க அப்பாவி’ என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பது அர்த்தமற்றது.

சிறு வயதிலிருந்தே ஆணும் பெண்ணும் சகஜமாகப் பழகி ஒருவரையொருவர் புரிந்து கொள்ள விடாமல் தடுக்கும் சமூகத்தில் எது காதல் என்ற குழப்பம் ஏற்படுவதே இயற்கை. தன் உடலில் ஏற்படும் மாற்றங்கள், மனத்தில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியெல்லாம் விடலை வயதில் அறிவுபூர்வமாகத் தெரிந்து கொள்ள வழியில்லாமல், வளரும் சிறுவரும் சிறுமியும் காம ஈர்ப்பை காதல் என்று மயங்குவதுதான் நடக்கும். படிப்பு, சொந்தக் காலில் நிற்பதற்கான வேலைவாய்ப்பு, சம்பளம் இவற்றையெல்லாம் இருவரும் அடைந்த பின்னர்தான் நாம் சேர்ந்து நமக்கான குடும்பத்தை உருவாக்க முடியும். ஒன்று சேர்ந்து வாழ்வதற்கான பரஸ்பர மதிப்பும் அன்பும் நம்மிடையே இருக்கிறதா என்ற அறிவு முதிர்ச்சி இல்லாமல் உருவாகும் எந்தக் காதலும் உடல்களைத் தாண்டி நீடிக்காது.

நம் சமூகப் பிணிகளில் ஒன்றான சாதியை ஒழிக்க காதல் திருமணங்கள் நிச்சயம் உதவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் சாதி கடந்த திருமணங்கள் எளிதானவை அல்ல.

சாதி, மதம் கடந்த கலப்புத் திருமணங்கள் வெற்றி பெற பல அம்சங்கள் முக்கியமானவை. உணவுப் பழக்கத்தில் அவரவர் விருப்பத்தை மற்றவர் மதிக்கும் அம்சம் அதில் ஒன்று. சாதி மதம் சார்ந்த குடும்பப் பழக்க வழக்கங்கள் அடுத்தவை. இருவருமே தங்கள் வாழ்க்கையின் இனிமைக்கு சாதியோ மதமோ பிரதானமானதல்ல / தேவையில்லை என்ற அறிவுடன் இருப்பது முக்கியம். இருபக்க உறவினர்களும் இழுக்கும் இழுப்புகளுக்கெல்லாம் ஆட்படாமல் சுயமாகச் சிந்திக்கவும் அதன்படி செயல்படுவதற்குமான ஆற்றல் தேவை. இதையெல்லாம் அவர்களுக்கு எது தரும்? சுயசார்பு இருக்க வேண்டும். அறிவு முதிர்ச்சி இருக்க வேண்டும். இருவருக்கும் ஒருவர் மீது மற்றவருக்கு அன்பும் மதிப்பும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட காதல், விடலை வயதில் எப்படி சாத்தியம்? அதுவும் காதல் என்றால் காமம் என்றே நம்பவைக்கும் சினிமா சூழலில்?

ஒரு சிறுவனும் சிறுமியும் பேசினாலே கற்பு பறிபோய்விடும் என்று அஞ்சும் சமூகச் சூழலில்? தன் உடலைத் தானே புரிந்து வசப்படுத்த இயலாத வாழ்க்கை முறையில்? இந்தச் சூழலை மாற்றினால்தான் மெய்யான காதல் தழைக்க முடியும். மெய்யான காதலே சாதி மதங்களைக் கடக்கும் வல்லமையுடையது. அப்படிப்பட்ட காதலர்களை எந்த வயதில் பார்த்தாலும் நம் மனத்திலும் காதல் ஊறும் என்பது என் அனுபவம். என் கண்ணெதிரே நான் பார்த்தவர்கள் பாப்பாவும் உமாநாத்தும். கிருஷ்ணம்மாளும் ஜெகந்நாதனும்!

இந்த வாரக் கேள்வி

ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்குவதை எதற்காக அரசு விழாவாகக் கொண்டாடவேண்டும்? அடுத்து சென்னையில் குவிந்து கிடக்கும் குப்பையை அள்ள துப்புரவாளர்களை நியமித்தால் அதற்கொரு விழா கொண்டாடுமா? கடும் மின் பற்றாக்குறை இருக்கும் நிலையில் எதற்காக இந்த விழாக்கள்- வீண் செலவுகள்?

இந்த வருட அதிர்ச்சி

கழிப்பறை இல்லாத வீடு

புத்தம் புதிதாகக் கோடிக் கணக்கான ரூபாய் செலவில் வீடு கட்டுகிறவர் அந்த வீட்டில் கழிப்பறையே வைத்துக் கட்டாமல் அதில் குடியேறினால், அவரை அதிபுத்தி சாலி என்போமா? படுமுட்டாள் என்போமா?

இந்திய அரசாங்கம் கூடங்குளத்தில் அதைத் தான் செய்திருக்கிறது. சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்துக் கட்டியிருக்கும் அணு உலையில் வரப்போகும் அணுக்கழிவுகளை எங்கே வைப்பதென்றே இன்னும் முடிவு செய்யவில்லை என்று நீதிமன்றத்தின் முன்பு ஒப்புக் கொண்டிருக்கிறது. அணுக்கழிவுகளுக்கான ஏற்பாடு என்ன என்ன என்று திரும்பத் திரும்ப எதிர்ப்பாளர்களும் நீதிபதிகளும் கேட்டதையடுத்து இந்த அதிர்ச்சியான தகவல் வெளிவந்திருக்கிறது. கைவிடப்பட்ட கோலார் தங்கச் சுரங்கத்துக்குள் வைக்கப்போவதாக முதலில் செய்தி வந்தது. கோலார் மக்கள் கடும் எதிர்ப்பைக் காட்டியதும் அப்படி ஒரு திட்டமே இல்லை என்று அரசு மறுத்தது. அப்படியானால் எங்கேதான் அணுக்கழிவை வைக்கப் போகிறீர்கள் என்று நீதிமன்றம் கடைசியாகக் கேட்டதும், இன்னும் எதுவும் முடிவு செய்யவில்லை என்று அரசு பதில் சொல்கிறது. அடுத்து தற்போது அணுஉலைக் கழிவுகளில் 3 சதவிகிதம் 7 ஆண்டுகளுக்கு கூடங்குளத்திலேயே வைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 7 ஆண்டுகளுக்குப் பின்னர் அணுக்கழிவுகளை எங்கே எடுத்துச் செல்வீர்கள்? என உச்ச நீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.
கூடங்குளம் அணுக்கழிவை எங்கே வைப்பதென்று இன்னும் தெரியாமலிருக்கும் அரசு, இதுவரை கல்பாக்கத்திலும் இதர அணு உலைகளிலும் உருவாக்கிய அணுக்கழிவுகளை எங்கே எப்படி வைத்திருக்கிறது என்ற உண்மைகளை உடனடியாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment