Search This Blog

Saturday, December 08, 2012

எனது இந்தியா (மொழியும், நிலமும் ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

வரலாறு திரிக்கப்படும், சிதைக்கப்படும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். ஆள்பவர்களும் ஆள விரும்புகிறவர்களும் வரலாற்றைத் தங்களின் சுயலாபங்களுக்காகத் திருத்தி எழுதுவதும், தங்களுக்குச் சாதகமாக உருவாக்கிக்கொள்வதும் தொடர்ச்சியாக நடக்கும் மோசடி. மற்ற அறிவுத் துறைகளைவிட வரலாறுதான் அதிக நெருக்கடிகளைச் சந்திக்கிறது. அதிக சர்ச்சைக்கும் சண்டைக்கும் காரணமாக இருக்கிறது. காலத்தின் மனசாட்சியாக வரலாறு இருப்பது அதிகாரத்தில் இருப்பவர்களில் பலருக்கு உறுத்தலாக இருக்கிறது. வரலாற்றை முற்றிலும் அழித்துவிட முடியாது என்பதால், அதை திரித்துக் கூறுவதில் அக்கறை காட்டுகிறார்கள்.

வரலாற்றைப் பாதுகாக்க முக்கியத் தேவை மொழியைப் பாதுகாப்பதே. மொழி என்பது வெறும் பரிவர்த்தனைக்கான வாகனம் மட்டும் அல்ல. அதுதான் வரலாற்றின் ஆதாரம். கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் சுவடிகளிலும் பதிவுசெய்யப்பட்ட வரலாறுகளே, கடந்த காலத்தை இன்று நாம் புரிந்துகொள்ள உதவுகின்றன. வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதில் எப்போதுமே நாம் அக்கறை இல்லாதவர்களாகவே இருக்கிறோம்.


இந்தியாவில் மொத்தம் 3,372 மொழிகள் பேசப்படுவதாக மத்திய அரசு கூறுகிறது. அவற்றில், 216 மொழிகளை 10 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே பேசுகின்றனர். 1,576 மொழிகள் வகுப்புவாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1,796 மொழிகள் இந்தப் பட்டியலுக்குள் இன்னும் கொண்டுவரப்படவில்லை. இவற்றில், 18 மொழிகள் அதிகாரப்பூர்வ அரசு மொழிகள். மீதம் உள்ள மொழி​கள் வெறும் பேச்சுவழக்கில் மட்டுமே இருக்கின்றன. அவற்றில் பெரும்​பாலான மொழிகளுக்குஎழுத்து வடிவமே கிடையாது. இந்தியாவின் சில மாநிலங்களில் அந்த மாநிலங்களின் முக்கிய மொழி​களைவிட பிறமொழி பேசு​பவர்​கள்தான் பெரும்பான்​மையாக வசிக்கின்றனர்.

சிக்கிம் மாநிலத்தில் பெரும்​பான்மையாகப் பேசப்படும் மொழி நேபாளி. 63 சதவிகித சிக்கிம் மக்கள் நேபாளிதான் பேசுகின்றனர். திரிபுராவில் அந்த மாநில மொழியான திரிபுரியைவிட, பெங்காலிதான் பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழியாகத் திகழ்கிறது. இங்கு, 68.9 சதவிகிதம் பேர் பெங்காலி பேசுகின்றனர். திரிபுரி பேசுபவர்கள் 23.5 சதவிகிதம் மட்டுமே. பஞ்சாப் மாநிலத் தலைநகராகவும், யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் சண்டிகரில், பஞ்சாபியைவிட இந்தி மொழிதான் பெரும்பான்மையினர் பேசும் மொழியாக உள்ளது.

61.1 சதவிகிதம் பேர் இந்தி பேசுகின்றனர். பஞ்சாபி பேசுவோர் 34.7 சதவிகிதம்தான். இந்தப் பிரச்னை இந்தியாவெங்கும் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்துவருகிறது. சமகாலப் பிரச்னைக்கானத் தீர்வை அறியவேண்டுமானால், அதன் வேரை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

இந்தியாவில் கோலோச்சிய பல மொழிகள் இன்று அடையாளம் இல்லாமல் அழிந்துபோய் விட்டன. ஒரு மொழி அழியும்போது அந்த மொழியில் பதிவாகியிருந்த மக்கள் வரலாறும் சேர்ந்தே அழிகிறது. 2010-ம் ஆண்டு அந்தமான் நிகோபார் தீவில் பேசப்பட்டுவந்த பழைமைவாய்ந்த 'போ’ என்ற மொழி மரணம் அடைந்தது. அந்த மொழியைப் பேசிவந்த 'போவா’ என்ற 80 வயதுப் பெண் இறந்ததும், அந்த மொழியும் அழிந்துவிட்டது.

அதுபோலவே, கொச்சியைச் சேர்ந்த வில்லியம் ரொசாரியா என்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன், மரணம் அடைந்தார். அவரோடு கேரளாவின் கொச்சிப் பகுதியில் பேசப்பட்டுவந்த 'க்ரியோல்’ என்ற மொழியும் இறந்துவிட்டது. இது, போர்த்துக்கீசிய மலையாளக் கலப்பு மொழி. 400 ஆண்டுகளுக்கும் மேலாக கொச்சிப் பகுதி கத்தோலிக்கர்களால் பேசப்பட்ட மொழி. அழிந்துவிடும் நிலையில் உள்ள மொழிகளின் விவரத்தை யுனெஸ்கோ நிறுவனம் 2009-ம் ஆண்டு வெளியிட்டுள்ளது. அதில், 2,473 மொழிகள் அழியும் அபாயத்தில் இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் ஐந்து மொழிகள் முற்றிலும் அழிந்துவிட்டன. 42 மொழிகள் கிட்டத்தட்ட அழியும் நிலையில் உள்ளன. 63 மொழிகள் நிச்சயம் அழிந்துவிடும், 82 மொழிகள் அழியும் அபாயம் உள்ளவை எனச் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது.

மைசூரில் உள்ள இந்திய மொழிகள் கழகம், 'உலக நாடுகளின் நிலையோடு ஒப்பிடுகையில் தாய்மொழி அழியும் அபாயம் இந்தியாவில் அதிகமாகவே இருக்கிறது. எனவே, போர்க்கால அடிப்படையில் மொழிகளைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’ என்று கூறுகிறது. மொழிகளைப் பாதுகாக்க அது, பாடமாகக் கற்பிக்கப்பட வேண்டும். கூடுதலாக, பேச்சுவழக்கில் தொடர்ந்து நடைமுறைபடுத்தப்பட்டும் எழுத்து வடிவில் புத்தகங்களாக வெளிவருவதும் அவசியம். இல்லாவிட்டால் ஆஸ்திரேலியப் பழங்குடிகளுக்கு நேர்ந்த கதிதான் இந்தியாவிலும் ஏற்படும். அதாவது, ஒரு காலத்தில் ஆஸ்திரேலியாவில் 250 மொழிகள் பழங்குடியினரால் பேசப்பட்டன. இன்று, அவற்றில் இரண்டு மட்டுமே இருக்கிறது. இந்தியாவில் இதுவரை 90 ஆயிரம் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக டி.சி. சர்கார் தமது நூலில் குறிப்பிட்டு உள்ளார். அவற்றில், மூன்றில் இரண்டு பகுதி தென்னிந்தியாவைச் சேர்ந்தது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களின் தன்மை குறித்து ஆய்வுசெய்த எ.சுப்பராயலு, தமிழ்க் கல்வெட்டுக்களை காலநிரல்படி பகுப்பாய்வுசெய்து கி.மு. 300 - கி.பி. 500-க்கு இடைப்பட்ட கல்வெட்டுக்களின் எண்ணிக்கை 400. கி.பி. 501 - கி.பி. 850-க்கு இடைப்பட்ட கல்வெட்டுக்களின் எண்ணிக்கை 900. கி.பி. 851- கி.பி. 1300-க்கு இடைப்பட்ட கல்வெட்டுக்களின் எண்ணிக்கை 19 ஆயிரம். கி.பி.1300 - கி.பி.1600-க்கு இடையில் உள்ளவை 6,000. கி.பி. 1600 - கி.பி.1900-க்கு இடைப்பட்டவை 2,000. வெளிநாட்டில் கிடைத்த கல்வெட்டுகளின் எண்ணிக்கை 300 என ஒரு பட்டியலைத் தந்திருக்கிறார். இந்தக் கல்வெட்டுக்களில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே பதிப்பித்து முறையாக வெளியிடப்பட்டு இருக்கின்றன. கல்வெட்டுக்களில் இருக்கும் பிராமி, வட்டெழுத்து, கிரந்தம் போன்றவற்றை இன்று நம்மால் எளிதாக வாசிக்க முடியாது. காரணம், அவை இன்று வழக்கில் இல்லை. இந்த எழுத்து வடிவங்களைப் பற்றி அறிந்துகொள்வது வரலாறு படிக்கிறவர்களுக்கு மிக அவசியம்.

பிராமி என்பது இந்தியாவில் இருந்த ஒரு பழங்கால எழுத்து முறை. அசோகரின் கல்வெட்டுக்கள் பிராமி எழுத்துக்களிலேயே எழுதப்பட்டுள்ளன. பௌத்த அறிஞரான ரீஸ் டேவிட், பிராமி எழுத்து முறையானது மத்திய ஆசிய வணிகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார். பிராமி, இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக எழுதப்பட்ட ஒரு அபுகிடா வகை எழுத்து முறை. பிராமி முறையில் மெய் எழுத்துக்களுக்கு தனி வடிவமும், உயிர் எழுத்துக்களுக்கு தனியான வடிவமும், உயிர்மெய் எழுத்துக்களை எழுத, மெய் எழுத்துக்களுக்கு சில உயிர்க்குறிகள் மாற்றப்படுகின்றன. கூட்டெழுத்துக்களை எழுதும்போது, ஓர் எழுத்துக்குக் கீழே இன்னோர் எழுத்து எழுவது இதன் இயல்பு. இந்த வகையில்தான், கல்வெட்டுக்களில் பிராமி எழுத்து வடிவங்கள் எழுதப்பட்டு இருக்கின்றன.

இன்னோர் எழுத்து முறை கரோஷ்டி. இது, வடமேற்கு இந்தியாவிலும் ஆப்கனிலும் பயன்​படுத்தப்​பட்டு வந்திருக்கிறது. பிராமி எழுத்து முறை இந்தியா முழுவதும் காணப்படுகிறது. தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் உள்ள பிராமியை 'தமிழ் பிராமி’ என்கிறார்கள். இதை, தமிழி என்றும் சில அறிஞர்கள் அழைக்கிறார்கள். ஆனால், வரலாற்று அறிஞர் ஐராவதம் மகாதேவன், தமிழ் பிராமி என்றே கூறுகிறார். ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள தமிழி எனப்படும் தமிழ் பிராமி எழுத்து கி.மு. 500-க்கு முற்பட்டது என்கிறார் டாக்டர் சத்தியமூர்த்தி.

திருநெல்வேலி மாவட்டத்தில் மருகால்தலை என்ற ஊருக்கு அருகில் உள்ள குன்றில் தமிழ் பிராமி வட்டெழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பிறகு அழகர்மலை, கழுகுமலை, நாகமலை, சித்தர்மலை, திருப்பரங்குன்றம், கொங்கர் புளியங்குளம், கீழவளவு, முத்துப்பட்டி, அரிட்டாபட்டி, கருங்காலக்குடி, வரிச்சியூர், மருகால்தலை, குன்னக்குடி, ஆறுநாட்டார்மலை பாண்டவமலை ஆகிய இடங்களில் உள்ள குகைகளில் பிராமி எழுத்துக்கள் கண்டு​பிடிக்கப்​பட்டன.

ஐராவதம் மகாதேவன், தமிழ் பிராமிக் கல்​வெட்டுக்கள் அனைத்தையும் நன்கு படித்து, எழுத்துக்களை வரிசைப்படுத்தி தெளிவான கருத்துக்களைக் கூறியுள்ளார். தமிழ் பிராமி எழுத்து​முறைக்கும் செமிட்டிக் எழுத்துமுறைக்கும் மிக நெருங்கிய தொடர்பும், எழுத்து ஒற்றுமையும் அதிகமாக இருப்பதால், செமிட்டிக் மொழியைக் கையாளும் பினீசியர்களுக்கும், தமிழ் பிராமி முறையைக் கையாளும் திராவிடர்களுக்கும் 4,000 ஆண்டுகளுக்கும் முன்பே வர்த்தகத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும் என, வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அசோகர் காலக் கல்வெட்டுக்களில் பிராமி எழுத்துக்கள் இருந்ததால் பிராமி எழுத்து வடிவம் அங்கிருந்தே தெற்குப் பகுதிக்குப் பரவி இருக்கலாம் எனக் கருதப்பட்டது. ஆனால், தமிழகத்தில் உள்ள கொடுமணல் ஆய்வு மூலம் தெற்கில் இருந்தே வடக்குக்குப் பிராமி எழுத்துக்கள் சென்று இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. பௌத்தர்களுக்கும் தமிழுக்குமான உறவை ஆராய்ந்த சீனி.வேங்கடசாமி, பேச்சுவழக்கில் இருந்த பிராகிருத மொழிகளிலேயே பௌத்தர்களும் ஜைனர்களும் தங்களது மதநூல்களை எழுதினர். பௌத்தர், மாகதி எனப்படும் பாலி மொழியையும் ஜைனர் அர்த்தமாகதி எனப்படும் சூரசேனியையும் மொழியாகக்கொண்டு எழுதி வைத்ததால், தமிழ்நாட்டிலே அந்த மதங்கள் பரவியபோது, தமிழரும் அந்த மதநூல்களைப் பயிலவேண்டியது ஆயிற்று. அந்தப் பிராகிருத மொழிகளிலே, சமஸ்கிருத மொழியில் உள்ளதுபோல நான்கு ககரங்களும் நான்கு டகரங்களும், இரண்டு சகரங்களும், இரண்டு ஜகரங்களும் ஷ, க்ஷ, ஸ, ஹ முதலிய எழுத்துக்களும் இருப்பதால், அந்த எழுத்துக்கள் இல்லாத தமிழ் மொழியிலே எளிதாக எழுதிப் படிக்க முடியவில்லை. ஆகவே, புதிதாக ஒருவகை எழுத்துக்கள் உருவாக்கப்படவேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படி உருவானதே கிரந்த எழுத்து.

No comments:

Post a Comment