Search This Blog

Sunday, December 09, 2012

உங்கள் தட்டில் உணவா...விஷமா ?

மருத்துவத்தில் இரண்டு வகைகள் உண்டு. வருமுன் காப்பது, வந்தபின் சிகிச்சை. சொல்லுங்கள்... இதில் முதல் வகை மருத்துவம்தானே சிறந்தது!
'ப்ரிவென்ஷன் ஈஸ் பெட்டர் தென் க்யூர்' (Prevention is better than cure)என்பது ஆங்கிலப் பழமொழி. இதைவிடக் கடுமையான சீனப்பழமொழி ஒன்று உண்டு.The superior doctor prevents sickness; The mediocre doctor attends to impending sickness; The inferior doctor treats actual sickness.அதாவது, உயர்தர மருத்துவர் வியாதி வராமல் தடுப்பார்; நடுத்தர மருத்துவர் வரப்போகும் நோய்க்கு வைத்தியம் செய்வார்; கீழ்த்தர மருத்துவர்தான் வந்துவிட்ட நோய்க்கு வைத்தியம் செய்வார்.

இதையேதான் தாமஸ் எடிசன் என்கிற பிரபல மருத்துவ அறிஞர் இப்படிக் கூறுகிறார்... The Doctor of the future will give no medicine - but will concentrate in diet and preventive aspects.'எதிர்கால மருத்துவர் மருந்துகள் கொடுக்கமாட்டார் - நோயைத் தடுப்பதிலும் உணவு முறைகளிலுமே கவனம் செலுத்துவார்’ என்கிறார்.
ஆக, வரும் முன் காப்பதே சிறந்த மருத்துவ முறை என்பதைத்தான் அறிஞர்கள் வலியுறுத்துகிறார்கள்.

வரும் முன் காப்பது என்றால்... எப்படி?!


அம்மை, காலரா போன்ற தொற்றுநோய்களைத் தடுப்பதற்கு தடுப்பூசி போட்டுக்கொள்வது அல்ல. இவற்றையெல்லாம்விட முக்கியமான தடுப்புமுறை ஒன்று உண்டு. அது... உணவு முறையிலும், வாழ்க்கை முறையிலும் உள்ள தவறுகளைச் சரிபடுத்திக்கொள்வது.

அப்படி என்ன தவறு செய்து கொண்டிருக்கிறோம் நாம்..?! சொல்கிறேன்..!

பண்டைய மனிதனின் வாழ்க்கை முறையும், இன்றைய மனிதனின் வாழ்க்கை முறையும் எல்லா விஷயங்களிலும் தலைகீழாக மாறியுள்ளன. இதைத்தான் வாழ்க்கை முறை மாற்றங்கள் என்று சொல்கிறோம். தடம்புரண்ட பல வாழ்க்கை முறைகளை மீண்டும் மாற்றியமைத்தால், பெரும்பாலான உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து நாம் தப்பிக்க முடியும்.


ஆதி மனிதன் உணவுக்காக விலங்குகளைப்போல் வேட்டையாடி வாழ்ந்துவந்தான். கடின உடல் உழைப்பையும், கலப்படமில்லாத காய், கனிகள், இறைச்சி என்ற உணவு முறையையும் அவன் பின்பற்றினான். அப்போதெல்லாம், விபத்துக்களால், கொடிய விலங்குகள் மற்றும் விஷப்பூச்சிகளால், தொற்று நோய்க்கிருமிகளால் மட்டுமே அவனுக்கு மரணம் நேர்ந்தது. அடிக்கடி மனிதர்கள் ஏற்படுத்திக் கொண்ட போர்களும் ஆயிரக்கணக்கில் உயிர்களைப் பலி வாங்கின. ஆனால், ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, சர்க்கரைநோய், புற்றுநோய் போன்ற வியாதிகளில் மடிந்த மனிதன் எவனும் கிடையாது.

வேட்டையாடுதலை நிறுத்தி, காடுகளைச் சீராக்கி, வயல்வெளிகளை உருவாக்கி, பயிர்த்தொழில் ஆரம்பித்த காலம் முதல் அவனுக்கு உடல் உழைப்பு குறைந்தது; ரத்தக்கொதிப்பு நோய் ஆரம்பித்தது. காலப்போக்கில், காய், கனிகள் என்கிற இயற்கை உணவு முறைக்கு மாறாக, உணவை சமைத்து உண்ண ஆரம்பித்தான் (விஞ்ஞான ஆராய்ச்சியில் மனிதன் பெரிய சாதனைகளைப் புரிந்தது முதலில் சமையலில்தான்!). சமைக்கும்போது, உடலுக்கு நலம் தரும் பல நல்ல சத்துப் பொருட்கள் அழிந்தன. இது போதாதென்று உடலுக்குக் கேடு விளைவிக்கும் பல பொருட்களை உணவில் சேர்த்தான். உதாரணமாக, பொட்டாசியம் எனும் உப்பு உடலுக்கு மிகவும் நல்லது. இதய பாதுகாப்புக்கும், ரத்தக் கொதிப்பைத் தடுப்பதற்கும் இந்த உப்பு அவசியம். சமையலில் இந்த பொட்டாசியம் வெளியேறிவிடுகிறது. ஆனால், உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கும் சோடியம் (சமையல் உப்பு) சேர்க்கப்படுகிறது. அந்த நாள் முதல்தான் மனிதனுக்கு எண்ணற்ற நோய்கள் தோன்ற ஆரம்பித்தன. ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, சிறுநீரக நோய்கள், ஈரல் சம்பந்தப்பட்ட நோய்கள், புற்றுநோய் என அவன் உடல் இருப்பிடமானது அதற்குப் பின்தான் (உப்பைப் பற்றி இன்னும் விரிவாக பிறகு விவாதிப்போம்).
அடுத்து அவன் சமையலில் சேர்க்க ஆரம் பித்தது... அதுதான் எண்ணெய். இறைச்சி, மீன், காய்கறிகளில் இருக்கும் கொழுப்பு போதாதென்று புதிதாக எண்ணெய் போன்ற கொழுப்புகளையும் சேர்த்துக்கொண்டே போனான். புளி, மிளகாய் போன்ற மசாலாக்களையும் கலந்தான். நல்ல நிறம் வேண்டும் என்று சிலவற்றையும், நல்ல மணம் வேண்டும் என்று சிலவற்றையும், நல்ல பளபளப்பு வேண்டும் என்று சிலவற்றையும், கெட்டுப்போகாமல் நீடித்துப் பாதுகாக்க என்று சிலவற்றையும் - இப்படியாக புதிது புதிதாக சேர்த்துக்கொண்டே போனான். நாளடைவில், வணிகர்கள் சிலரின் பேராசையால், கலப்படம் என்ற புதிய கலாசாரம் உருவாகியது. எண்ணற்ற நச்சுப்பொருட்கள் உணவில் கலந்தன.

இத்தனை வேதிப்பொருட்களும் உணவில் ஒன்று சேரும்போது, மனிதனுக்குப் புதுப்புது வியாதிகள் வருவதில் வியப்பு ஏது..?!

நாம் என்ன உணவு உண்ண வேண்டும் என்பதைப் போல், எவ்வளவு உணவு உண்ண வேண்டும் என்பதும் மிகமுக்கியம். அதிக உணவு ஆபத்து என்பதை உலகளவில் எல்லோரும் இப்போது உணரத் தொடங்கிவிட்டனர்.

''நாம் உண்ணும் உணவில் நான்கில் ஒரு பங்கில்தான் நாம் உயிர் வாழ்கிறோம் - மீதம் மூன்று பங்கில் டாக்டர்கள்தான் உயிர் வாழ்கிறார்கள் (We only live of a quarter of what we eat - the doctors live of the remaining)என்பது எகிப்திய பழமொழி.

'மூன்று வேளை உண்பவன் ரோகி
இரண்டு வேளை உண்பவன் போகி
ஒரு வேளை உண்பவன் யோகி’ என்பது நம்முடைய பழமொழி.


மனித உடம்பை, வெறும் காற்றடைத்த பை என்று இகழ்ந்து, தவமே சிறந்தது என்று தியான வாழ்க்கை வாழ்ந்த முனிவர்களுள் திருமூலர் முற்றிலும் மாறுபட்டவர். 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்பவர், அதற்கான முக்கிய வழியையும் கூறுகிறார்...

'அண்டம் சுருங்கில் அதற்கோர் அழிவில்லை
பிண்டம் சுருங்கின் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலவுள



கண்டம் கறுத்த கபாலியும் ஆமே’ என, 'குறைவான உணவே ஆரோக்கியத்தின் சூட்சமம்' என்று தெளிவுபடுத்துகிறார்  திருமூலர்.

அறம் - பொருள் - இன்பம் என மனிதனின் எந்தப் பிரச்னையையும் விட்டுவைக்காத திருவள்ளுவர், 'மருந்து’ என்கிற அதிகாரத்தின் 10 குறள்களில், 6 குறள்கள் சீரற்ற உணவு முறையே நோய்க்குக் காரணம் என்பதை ஆணித்தரமாகச் சொல்வதற்காக பயன்படுத்துகிறார் (மனிதனைக் கொல்லும் 10 முக்கிய வியாதிகளில் 6 வியாதிகள், உணவு சம்பந்தப்பட்டவை என்கிற இன்றைய ஆராய்ச்சியையும், இதையும் நான் வியந்து பொருந்திப் பார்த்துள்ளேன்!). குறிப்பாக,

'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு  
                               அருந்தியது
அற்றது போற்றி உணின்’ என்ற குறளில், ஒருவன் தான் முன்பு உண்ட உணவு செரித்ததை அறிந்து பின்பு உண்டானாயின், அவன் உடலுக்கு மருந்து என்று வேறு ஒன்று வேண்டுவதில்லை என்று மிகப்பெரும் ஃபார்முலாவை மிக எளிதாக எடுத்து வைக்கிறார் வள்ளுவர்.

ஒரு வேளை உணவாவது குறைத்தால், உடலுக்கு மிகவும் நல்லது என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. 'ஒரு வேளை உணவை இழத்தல், நூறு வைத்தியர்களை அழைப்பதைவிட மேலானது’ என்பது ஸ்பெயின் பழமொழி.

‘Eat your morning breakfast as a prince... Eat your dinner like a pauper’என்பது ஆங்கிலப் பழமொழி. 'காலை உணவை இளவரசன் மாதிரி சாப்பிடு, இரவு உணவை பிச்சைக்காரன் மாதிரி சாப்பிடு' என்பது அதன் அர்த்தம். நம் ஊரில் பிராமணர்களின் உணவுமுறை கிட்டத்தட்ட இதுமாதிரிதான். காலை உணவும், மதிய உணவும் கலந்த (breakfast + lunch = brunch) உணவை 9 மணிக்கு எடுத்துக் கொண்டு, ஆபீஸ் வேலைகளை முடித்து விட்டு, மாலையில் எளிய இரவு உணவு என்ற அவர்களின் உணவுமுறை அர்த்தமுடையதுதான்.

பொதுவாக, நம்மில் பெரும்பாலானவர்கள்... பசி எடுத்துச் சாப்பிடுவதில்லை. கடிகாரத்தைப் பார்த்து, 'ஆஹா, மணி 9 ஆகிவிட்டது...’ என்று வயிற்றுக்குப் போட்டுக் கொள்கிறோம். ஆனால், மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் எதுவும் அப்படியில்லை. பசித்தபோது மட்டுமே உணவு தேடுகின்றன, வேட்டையாடுகின்றன. டி.வி. சேனல்களில் (Discovery channel, Animal planet) பார்த்திருப்பீர்களே... சிங்கம் ஒன்று படுத்திருக்கும். அதற்கு வெகு அருகில் மான், குதிரை போன்ற மற்ற விலங்குகள் சர்வ சாதாரணமாக புல் மேய்ந்து கொண்டிருக்கும். சிங்கத்துக்கு எப்போது பசிக்கிறதோ, அப்போது மட்டும் பாய்ந்து சென்று ஒரு மானை அடித்துக் கொன்றுவிட்டு, கூட்டமாகச் சேர்ந்து சாப்பிடும். ஆனால், மனிதர்கள் பசித்தாலும், பசிக்காவிட்டாலும் மூன்று வேளை முழுச்சாப்பாடும், மற்ற வேளைகளில் நொறுக்குச் சாப்பாடும் சாப்பிடுகிறோம்.

மதுரை, காமராஜர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பிச்சப்பன் தலைமையில் ஓர் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. பாதாள அறை ஒன்றில் சகல வசதிகளுடன் ஒருவர், ஒரு வாரம் தங்குவார். அவருக்கு நாள், நேரம் குறித்த காலண்டர், கடிகாரம் போன்ற வசதிகள் கிடையாது. மற்றபடி, புத்தகங்கள், சங்கீதம் போன்ற வசதிகள் உண்டு. பசி எடுக்கும்போது போனை எடுத்து, என்ன வேண்டும் என்று சொல்ல வேண்டும். சற்று நேரத்தில் கேட்ட உணவு பக்கத்து அறையில் வைக்கப்படும். நினைத்தபோது தூங்கலாம், விழிக்கலாம். இப்படி ஒரு வாரம் ஆராய்ந்ததில், பலருக்கு மூன்று வேளை சாப்பாடு தேவையில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

தொன்மைப் பழமொழிகள் தொடங்கி, இன்றைய ஆராய்ச்சிகள் வரை இத்தனை விஷயங்களையும் குறிப்பிட்டு இங்கே பேசுவதற்குக் காரணம், நாமும் இனி கைக்கடிகாரத்தைப் பார்க்காமல், வயிற்றுக்குள் இருக்கும் உயிரியல் கடிகாரத்தை (biological clock) பார்த்து மட்டுமே சாப்பிட்டால், ஆரோக்கியம் வளர்பிறை என்பதை வலியுறுத்திச் சொல்வதற்காகத்தான்!

அதேபோல, விரதமும் முக்கியமான உணவுக் கட்டுப்பாட்டு முறையே! மனித உடலுக்கு நன்மை பயக்கும் பல நல்ல விஷயங்களை மருத்துவர்களோ மற்றவர்களோ சொல்வதைவிட, மதங்கள் மூலமாக - பக்தி மார்க்கத்தில் சொன்னால் நன்றாக எடுபடும் என்று நம் முன்னோர்கள் நினைத்தார்கள். அதன் விளைவுதான் நாம் உலகெங்கும் பார்க்கும் விரத முறைகள்.

ஈஸ்டர் என்றால் 40 நாட்கள் கடும்விரதம் எடுப்பது கிறிஸ்தவர்கள் வழக்கம். ரம்ஜான் என்றால் 30 நாட்கள் கடும்விரதம் அனுஷ்டிப்பது முகமதியர்களின் வழக்கம். இந்து மதம் இதையெல்லாம் தாண்டி பல்வேறு விரதங்களைப் புகுத்தியது. சபரி மலை செல்வோர், 48 நாட்கள் கடும்விரதம் இருப்பதையும் நாம் அறிவோம். இப்படியாக எல்லா மதத்தினரும் ஒரே மாதிரியாக ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதம் அனுஷ்டிப்பது ஆச்சர்யமாக இல்லையா?!

இந்த மாதிரி விரத காலங்களில், சர்க்கரை நோயாளிகள் பலருடைய சர்க்கரை அளவு வெகுவாகக் குறைவதையும், ரத்தக் கொதிப்பு நோயாளிகள் பலருடைய ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்புவதையும் மருத்துவர் என்கிற வகையில் நான் கண்கூடாகப் பார்த்து வியந்திருக்கிறேன். என்னிடம் வரும் நோயாளிகள் பலரிடம், 'பேசாம வருஷத்துக்கு மூணு தடவை நீ சபரிமலை போகலாமே!’ என்பேன் அடிக்கடி.

திங்கள் முதல் ஞாயிறு வரை ஒவ்வொரு நாளும் ஒரு கடவுளுக்கு என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ள விரத முறைகள்... மனித உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்ளவும், அதன் மூலம் உள்ளத்தையும் உயிரையும் தூய்மையாக வைத்துக் கொள்ளவும் வகுத்த வழிமுறைகளே என்று புரிகிறதுதானே!

திருமூலர் சொல்லும் 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்பதன் பொருளும் இதுதானே!

உண்டி சுருங்குவதும், பல்வேறு விரத முறைகளும் உடலுக்கு நல்லது என்று குறிப்பிட்டேன். இவை வெறும் மதரீதியான சம்பிரதாயங்களா அல்லது இவற்றுக்கு விஞ்ஞானபூர்வமான விளக்கங்கள் உண்டா என்பதைச் சற்று ஆராய்வோம்.

மருத்துவ முறைகளில் சிறந்தது உண்ணா நோன்பே என்று முன்னோர்கள் நினைத்தனர். 'லங்கணமே பரம ஒளஷதம்’ என்பது முதுமொழி. விரதத்தை முழு உண்ணா நோன்பு (Dry Fasting), நீர் உண்ணா நோன்பு (Water Fasting), சாறு உண்ணா நோன்பு (Juice Fasting) என்று மூன்று முறைகளில் நம்மை மேற்கொள்ள வைத்தனர் முன்னோர்.

தண்ணீர்கூட அருந்தாமல், காற்றை மட்டுமே சுவாசித்து வாழும் விரதம், முழு உண்ணா நோன்பு. இதனை ஒருநாள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். அதற்குமேல் மேற்கொண்டால் உயிருக்கு ஆபத்து நேரலாம்.

தேவைப்படும்போது தண்ணீர் மட்டும் அருந்துவது, நீர் உண்ணா நோன்பு. இதை 7 நாட்கள் கடைப்பிடிக்க முடியும். என்றாலும், 3 நாட்கள் மேற்கொண்டாலே போதுமானது.

தேவைப்படும்போது தண்ணீருக்குப் பதிலாக எலுமிச்சைப் பழச்சாறு, ஆரஞ்சுப் பழச்சாறு, திராட்சை, அன்னாசி, மாம்பழம், பப்பாளிச் சாறு போன்றவற்றை அருந்தி விரதம் இருப்பது, சாறு உண்ணா நோன்பு. 7 நாட்கள் இப்படி இருக்கலாம். அதற்கு மேலும் அவரவர்களின் சக்திக்கு ஏற்றவாறு இருப்பதுண்டு.

மகாத்மா காந்தி முதல் அன்னா ஹஜாரே வரை பல்வேறு தலைவர்கள் பல்வேறு நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததை நாம் அறிவோம். சமூக, அரசியல்ரீதியான விழிப்பு உணர்வை ஏற்படுத்த அவை மேற்கொள்ளப்பட்டன. நாள் கணக்கான இந்த விரதங்களைத் தவிர, சில மணிக்கணக்கான விரதங்களையும் நாம் பார்த்ததுண்டு. காலை முதல் மாலை வரை உண்ணாவிரதம் என்று பலர் இருப்பது, பெரிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை என்றாலும், விரதம் இருப்பவர்களின் உடல்நலத்துக்கு சிறிது நன்மை ஏற்படுத்தும். நம் உடல் நலத்துக்கு எந்த விரதம் உகந்தது, எப்படி உகந்தது என்று பார்ப்போம்.

வாரத்தில் ஒருநாள் விரதம் இருப்பது எல்லோருக்கும் மிகவும் சிறந்தது. அப்படி விரதம் இருக்கும்போது, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது. அப்போது கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கிளைக்கோஜன் (Glycogen) என்ற சர்க்கரையை உடல் பயன்படுத்திக் கொள்ளும். மேலும், உடலில் சேமித்து வைக்கப்பட்ட கொழுப்பும் எரிபொருள் சக்தியாக மாற்றப்பட்டு உடல் உறுப்புகளை இயங்க வைக்கும். இவற்றால், உடலின் அடிப்படை இயக்கக் கூறுபாடுகள் (Basal metabolic rate) குறைவாகிறது. இதன் நேரடி விளைவு... ரத்தத்தில் கொழுப்பின் (கொலஸ்ட்ரால்) அளவு குறைவதோடு, ரத்த அழுத்தமும் சீராகிறது.

இதனால் ஏற்படும் இன்னொரு சுவாரசியமான விளைவு - பல ஹார்மோன்கள் திறம்பட உற்பத்தியாகின்றன. அவற்றில் ஒரு ஹார்மோன், வயது முதிர்வைத் தடுக்க வல்லது. அந்த 'ஆன்டி ஏஜிங் ஹார்மோன்’, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, முதுமையில் வரும் பல்வேறு நோய்களையும் முறியடித்து ஆயுட்காலத்தை கணிசமாக நீட்டிக்க உதவும் என்பது தற்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

விரதம் இருக்கும் நேரத்தில் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களும், கழிவுப் பொருட்களும் நீக்கப்படுகின்றன. விஷத்தை முறியடிக்கும் முறை (Detoxification process) என்று இதை அழைப்போம். இந்த நச்சு, கழிவுப்பொருட்கள் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், சுரப்பிகள் மற்றும் சருமம் மூலம் வெளியேற்றப்படுகின்றன.

மொத்தத்தில் விரதத்தின் பலனால் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறுகின்றன. அஜீரணக் கோளாறுகள் சரியாகின்றன. மனமும் அமைதியாகி, இயற்கையான, இதமான தூக்கம் வரும். மருந்துகள் எடுத்துக்கொள்ளும் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு திடீரென வெகுவாகக் குறைவது நல்லதல்ல என்பதால், அவர்கள் உண்ணா நோன்பு மேற்கொள்வது ஆபத்தாகலாம். மற்றபடி எல்லா தரப்பினருக்குமே இது நல்ல வாழ்க்கை முறை.

நம்மில் பலரும் தற்போது ஒரு விசித்திரமான விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். அதாவது, அரிசிச் சோற்றை மட்டும் தவிர்த்து... இட்லி, தோசை, காபி போன்ற பலகாரங்களை உண்பது விரதமாகக் கருதப்படுகிறது. இது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதே தவிர, இதனால் வேறு ஒன்றும் பிரயோஜனமில்லை.

வாரம் ஒருமுறை விரதம் இருக்கலாம் என்று கூறினேன். இதைவிட நல்ல முறை ஒன்று உண்டு. அதுதான் தினமும் பட்டினி இருப்பது! அது எப்படி முடியும்? இதைக் கடைப்பிடிப்பதற்கு சுலபமான வழி, இரவுச் சாப்பாட்டை சீக்கிரமே முடிக்க வேண்டும். அதாவது மாலை 6 - 7 மணிக்கு. அதன் பிறகு 12 மணி நேரம் விரதம். காலைச் சிற்றுண்டியை 7 - 8 மணிக்குச் சாப்பிடலாம். காலை உணவுக்கு மேலை நாட்டவர்கள் என்ன பெயர் கொடுத்திருக்கிறார்கள் கவனியுங்கள்.அதாவது விரதத்தை முடித்தல்! எவ்வளவு பொருத்தமான வார்த்தை!

'ஐந்துக்கு எழுந்திரு - ஒன்பதுக்கு உணவருந்து. ஐந்துக்கு சாப்பிடு - ஒன்பதுக்கு உறங்கு’ என்ற பிரபல ஃபின்லாந்து பழமொழியும் இந்த தத்துவத்தையே வலியுறுத்துகிறது என்பதை நினைவுகொள்வோம்.

நச்சுப் பொருட்களை வெளியேற்றும் உபாயமாக விரதங்களைச் சுட்டிக் காட்டினேன். ஆனால், இதையெல்லாம் மீறி, நூற்றுக்கணக்கான நச்சுப்பொருட்களை உணவு என்ற ரூபத்தில் நாம் அன்றாடம் உண்டு வருகிறோம். அவற்றைத் தெரிந்துகொண்டால் தவிர, அவற்றிலிருந்து விடுபடுவது குறித்து நாம் நினைக்க மாட்டோம். நாம் உட்கொள்ளும் பல முக்கிய உணவுகள், தற்போது எவ்வாறெல்லாம் சிதைந் திருக்கின்றன?



No comments:

Post a Comment