Search This Blog

Monday, November 18, 2013

படேல் ஒரு மதவாதியா?


அமெரிக்காவிலிருக்கும் சுதந்திர தேவியின் சிலையை விடவும் பிரமாண்டமாக சர்தார் படேலுக்கு ஒரு சிலையை நிறுவத் திட்டமிட்டு வருகிறது குஜராத் அரசு. அதன் ஆரம்ப விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அதே மேடையில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பேசும்போது நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவை மறைமுகமாகத் தாக்கினார்.

சர்தார் வல்லபாய் படேல் முதல் இந்தியப் பிரதமராக வரவில்லையே என்று ஒவ்வொரு இந்தியரும் இன்றும் வருந்துகின்றனர். அவர் அன்று மட்டும் பிரதமராகியிருந்தால், இன்று நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும்" என்ற அவரது பேச்சு நேருவின் கொள்கைகளினால் தான் மதவாதம் வளர்ந்தது என்ற தொனியில் இருந்தது.  பிரதமர் மன்மோகன்சிங் பேசும் போது, படேல் உண்மையான மதச்சார்பற்றவர். வல்லபபாய் படேல் இருந்த கட்சியில் நான் இப்போது இருப்பதற்காகப் பெருமைப்படுகிறேன்" என்று கூறிப் பதிலடி கொடுத்தார். இதைத் தொடர்ந்து அத்வானி, முழுமையான மதவாதி என படேலை வர்ணித்தவர் நேரு" என்றும், படேலை மதவாதி என்று கூறியவர்கள், இப்போது அவரை மதச்சார்பற்றவர் என்றும், தங்கள் கட்சியைச் சேர்ந்தவர் என்றும் காங்கிரஸ் காரர்கள் சொல்லிக் கொள்கிறார்கள்" என்று தன் ‘பிளாக்’கில் தாக்கியிருக்கிறார்.

உண்மையில் அதுதான் நேருவின் கருத்தா? படேல் மதவாதியா? படேலின் செயலராக இருந்த எம்.கே.கே நாயர் ஐ.ஏ.எஸ். தமது "The story of an era told without ill will" என்ற தம் புத்தகத்தில் அன்று நடந்ததைப் பதிவு செய்திருக்கிறார். அந்தப் பக்கங்களிலிருந்து, சுதந்திரம் அடைந்தபோது இந்தியா முழுவதும் தனித்தனியாக இருந்த சமஸ்தானங்களை இந்தியப் பேரரசுடன் இணைக்கும் முயற்சியில் உள்துறை அமைச்சராக இருந்த படேல் ஈடுபட்டார். ஐதராபாத் நிஜாம் தமது சமஸ்தானத்தை பாகிஸ்தானுடன் சேர்க்க விருப்பம் கொண்டிருந்தார். இதற்காக, பாகிஸ்தானுக்குத் தமது தூதரை அனுப்பினார். பாகிஸ்தானுக்குப் பெருமளவில் பணமும் அளித்தார். நிஜாமின் ஆதரவாளர்களும் அவரது படையினரும் மக்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தனர். அப்போது நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில், ஐதராபாத்தில் நடந்த சம்பவங்களை விளக்கிய படேல், அங்கு ராணுவத்தை அனுப்பி அதை இந்தியாவுடன் சேர்க்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.

வழக்கமாக அமைதியாக, கண்ணியமாகப் பேசக்கூடிய பிரதமர் நேரு, இதனால், கோபமடைந்து படேலைப் பார்த்து, நீங்கள் ஒரு முழுமையான மதவாதி. உங்கள் பரிந்துரையை ஏற்கமாட்டேன்" என்று சத்தமாகப் பேசினார். அதைக் கேட்டு படேல் அமைதியாக இருந்தாலும் அமைச்சரவைக் கூட்டத்தை விட்டு வெளியேறினார். இந்த விஷயம் அப்போதைய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியின் கவனத்துக்குச் சென்றது. அவர் நேருவையும், படேலையும் ஜனாதிபதி மாளிகைக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார்.  அப்போது ‘ஐதராபாத்தில் கன்னியாஸ்திரிகள் சிலரை நிஜாமின் படையினர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், உரிய நடவடிக்கை எடுக்குமாறும் இங்கிலாந்து தூதரிடமிருந்து ராஜாஜிக்குக் கடிதம் வந்ததைக் காட்டினார். அதைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டு அழுத நேரு, இனி ஒருகணம் கூட தாமதிக்கக் கூடாது. அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும்" என்றார். சொந்த நாட்டிலேயே ராணுவத்தால் ஒரு இனம் தாக்கப்பட்டு விடக்கூடாது என்ற ஆதங்கத்தில், உணர்ச்சி வேகத்தில் நேரு சொன்ன வார்த்தைகள் அவை. ராஜாஜி தந்த அறிவுரையில் உண்மை நிலையை உணர்ந்து உடனடியாக மாற்றிக் கொண்ட கருத்து அது.நம் அரசியல்வாதிகள் தலைவர்களின் வார்த்தைகளைத் தங்கள் வசதிக்கேற்பப் பயன்படுத்திக் கொள்ளும் நிலை எப்போதுதான் மாறுமோ?

ரமணன்

No comments:

Post a Comment