Search This Blog

Friday, September 05, 2014

திட்டக் கமிஷனைக் கலைப்பது சரியா?

 
பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்று தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் திட்டக் கமிஷனைக் கலைத்துவிட அரசு முடிவு செய்துவிட்டது என்பதான அறிவிப்பு. அதற்கு அடுத்த நாள் திட்டக் கமிஷனுக்குப் பதிலாக வேறு எந்த மாதிரி அமைப்பை ஏற்படுத்தலாம் என்பது பற்றி பொது மக்களின் கருத்தை வரவேற்பதாக அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டது. திட்டக் கமிஷனுக்கு என்ன வந்தது? 
 
1950-ல் தான் பிரதமர் நேரு திட்டக் கமிஷன் என்ற அமைப்பை உருவாக்கி அதன் நோக்கங்கள் என்ன என்பதையும் அறிவித்தார். இந்தியாவின் முன்னேற்றத்துக்குப் பொருளாதார வளர்ச்சி அவசியம் என்றும் அந்தப் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பெருக்க வேண்டும் என்றும் நேரு தெரிவித்தார். அதன்படி சாலை வசதிகள், போக்குவரத்துத் துறையில் முன்னேற்றம், இந்தியாவிலுள்ள அனைத்துத் துறைமுகங்களிலும் மேம்பாடுகள், தொழில் துறைக்குத் தேவையான மின்சார உற்பத்தியை அதிகப்படுத்துவது, விவசாய அபிவிருத்திக்கு நதிநீரின் வளத்தை முற்றிலுமாகப் பயன்படுத்தத் தேவையான இடங்களில் அணைகள் கட்டுதல் - இந்த மாதிரி பல அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் குறிக்கோளுடன் திட்டங்கள் தீட்டி அந்தத் திட்டங்களை நிறைவேற்றும் பணிகளைத் தொய்வில்லாமல் செயல்படுத்துதல் - இவை திட்டக் கமிஷனின் முக்கியமான பொறுப்புகள். இந்தத் திட்டத்தின்படி பஞ்சாபில் கட்டி முடிக்கப்பட்ட பக்ராநங்கல் அணையைப் பார்த்துவிட்டு நேரு இவைதான் நான் வணங்கும் தெய்வம்" என்று பெருமிதப்பட்டார்.
 
சென்ற 64 ஆண்டுகளில் இதுவரை 12 ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இப்போது 13வது ஐந்தாண்டுத் திட்டத்தின் மத்தியில் நாம் இருக்கிறோம். இந்தத் திட்டக் கமிஷன் உறுப்பினர்களாக கடந்த காலங்களில் பல பொருளாதார வல்லுநர்களும், பொறியாளர்களும், விவசாயத் துறையைப் பற்றி நன்கு அறிந்த பல அறிஞர்களும் இருந்திருக்கிறார்கள்.
 
முன்னாள் பிரதம மந்திரி மன்மோகன் சிங்கும் ஒரு காலகட்டத்தில் திட்டக் கமிஷன் அங்கத்தினராக இருந்தார். திட்டக் கமிஷனின் செயல்பாடுகளில் இதுவரையில் பெரும் குறைகள் இருந்ததாகச் சொல்ல முடியாது. அதற்கு மாறாக திட்டக் கமிஷன் வகுத்த பல முன்னேற்றத் திட்டங்களினால்தான் இந்தியப் பொருளாதார அடிப்படையிலும் தொழில் மற்றும் விவசாய வளர்ச்சியிலும் நல்ல முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது. நாட்டில் மின்சார உற்பத்தி அதிகமாக இருக்கிறது. பல துறைமுகங்கள் நல்ல முறையில் சீர்படுத்தப்பட்டுச் செயல்படுகின்றன. தகவல், தொழில் நுட்பம், சட்டத் துறை நல்ல முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது.இந்த 64 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட 12 ஐந்தாண்டு திட்டங்களுக்கான செலவு செய்யப்பட்ட தொகை சுமார் 200 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம். திட்டங்களை நிறைவேற்றும்போது ஏற்படும் சேதாரங்களைத் தள்ளிவிட்டுப் பார்க்கும் போது நம் நாட்டின் செல்வம் சுமார் 150 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.திட்டக் கமிஷனைக் கலைக்கும் முடிவு சரியான தல்ல. இன்றைய அரசு பழைய ஆட்சியின் ஒரு அம்சம் என்று திட்டக் கமிஷனைக் கருதினால் புதிய அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அதன் அங்கத்தினர்களாக அரசியல்வாதிகள் யாரும் இருக்கக்கூடாது. தொழில்துறையின் முன்னேற்றத்தில் சாதித்தவர்கள், பொருளாதார நிபுணர்கள், வெவ்வேறு துறைகளில் திறன் பெற்ற பொறியாளர்கள், விஞ்ஞானிகள் இப்புதிய அமைப்பில் இடம்பெற வேண்டும். ஐந்து ஆண்டு காலம் என்பதற்குப் பதில் ஒவ்வொரு ஆண்டுக்கான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த வேண்டும். எந்த மாதிரி திட்டங்கள்? அதற்கான மதிப்பு என்ன? எந்தக் காலகட்டத்துக்குள் அவை நிறைவேற்றப்படும் என்பதையெல்லாம் தெளிவாகத் தெரியப்படுத்த வேண்டும். ஆண்டின் இறுதியில் இதைப் பற்றிய ஒரு நிறைவேற்ற அறிக்கை வெளியிட வேண்டும். குறைகள் இருந்தால் அதற்கான காரணங்களைத் தெரியப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment