Search This Blog

Tuesday, January 20, 2015

உறைய வைத்த ஃப்ரிட்ஜ்!

இயற்கையாக உள்ள விஷயத்தை எல்லாம் செயற்கையாக, தானும் உருவாக்க வேண்டும் என்ற முயற்சியை மனிதன் காலம் காலமாகச் செய்து வந்திருக்கிறான். அதில் முக்கியமான ஒன்று, இயற்கையில் உருவாகும் பனிக்கட்டியை ஏன் நாமும் உருவாக்கக்கூடாது என்ற எண்ணம். இந்த எண்ணம்தான் ஃப்ரிட்ஜ் எனும் குளிர்சாதனப் பெட்டியைக் கண்டுபிடிக்கக் காரணமாக அமைந்தது.

முதலில் 1750-களில் ரெஃப்ரிட்ஜிரேஷனுக்கான கண்டுபிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. வெற்றிடத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி ஐஸ்கட்டி உருவாக்கும் இயந்திரம் முதலில் 1854-ல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் மைகேல் பாரடேவின் விதிப்படி, அம்மோனியாவும், இதர சில வாயுக்களும் உயர் அழுத்ததில் வெப்பத்தைக் குறைத்து, குளிர்ச்சியை உண்டாக்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஃப்ரிட்ஜின் கண்டுபிடிப்பு வேகமெடுத்தது.


1930 வரை இந்தச் சோதனை ஐஸ் தயாரிக்கும் முயற்சியாகத்தான் இருந்தது. 1930-ம் ஆண்டு முதன்முதலில் மக்கள் உபயோகப்படுத்தும் ஃப்ரிட்ஜ் என்ற அமைப்பு உருவானது. உணவுப் பொருட்கள், மாமிசம் ஆகியவைக் கெடாமல் இருக்கவும், ஐஸ்கட்டி தயாரிக்கவும் உதவியாக இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டது.

பின்பு அதன் வடிவம் அமைப்பு, திறன் ஆகியவை மாற்றம் கண்டு, தற்போது தொழிற்சாலைகளும்கூட மிகப் பெரிய ஃப்ரிட்ஜ் அமைப்பைப் பயன்படுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இது மனிதர்களின் அன்றாட வாழ்வில் இன்றியமையாத கண்டுபிடிப்பாக மாறியுள்ளது. பல நிறுவனங்கள் எளிதில் கெடக்கூடிய பொருளை அதிக நாட்கள் வைத்திருக்க இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் உதவியாக மாறியுள்ளது.

அதைவிட முக்கியமாக, இன்று பல வீடுகளில் ஃப்ரிட்ஜ் இல்லை எனில், காலை உணவு இல்லை என்ற நிலைக்கு மாறியுள்ளது. காலை இட்லிக்கான மாவு முதல் இந்த வாரம் முழுவதுக்கும் வேண்டிய உணவுப் பொருட்கள் வரை சேமித்து வைத்துக் கொள்ளும் சேமிப்புக் கிடங்காகவே மாறியுள்ளது ஃப்ரிட்ஜ்.

ச.ஸ்ரீராம்

No comments:

Post a Comment