Search This Blog

Friday, December 07, 2012

ஓ பக்கங்கள்- கை மேல காசு! ஞாநி


மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறிய வேண்டியது தான். அல்லது வருகிற பொங்கல் சமயத்தில் போகியன்று தீக்கிரையாக்கிக் குளிர் காயலாம்.

அரசு மான்ய விலையில் மக்களுக்கு அளித்து வரும் எல்லா பொருட்களையும் இனி மக்கள் தனியாரிடம்தான் வாங்க வேண்டும் என்றும், விலை குறைத்தோ விலை இல்லாமலோ தரப்பட்ட பொருட்களுக்கான அரசு மான்யம் இனிமேல் ரொக்கப் பணமாகவே மக்களுக்குத் தரப்படும் என்றும் மன்மோகன் அரசு அறிவித்திருக்கிறது. 

இதை உடனடியாக இந்தியாவில் 51 மாவட்டங்களில் செயல்படுத்தப் போகிறது. பின்னர் படிப்படியாக செய்வதே திட்டம். இதில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், புதிய ‘கை மேல காசு’ திட்டத்தின் கீழ் யார் யாருக்கு மான்யம் தரப்படவேண்டும் என்பதைத் தீர்மானிக்கப் போவது ஆதார் அடையாள அட்டைதான். 

ஏன் இந்தத் திட்டம்? இதுவரை அரசு மக்களுக்கு மான்ய விலையில் தரும் பல பொருட்கள் தகுதியானவர்களுக்கு மட்டும் போகாமல், வசதியானவர்களுக்கும் போவதைத் தடுப்பது ஒரு நோக்கம். இந்த நோக்கம் என்னவோ நல்ல நோக்கம்தான். 

யார் தகுதியானவர், யார் தகுதியில்லாதவர் என்பதை இனி ஆதார் அட்டைதான் தீர்மானிக்கும். ஆதார் அட்டை தரும்போது ஒருவரிடம் பெற்ற விவரங்களின் அடிப்படையில் அவர் மான்யத்துக்கு உரியவரா இல்லையா என்பது முடிவு செய்யப்படும். இதற்கு ஏன் தனியே ஆதார் அட்டை? இதைத் தரும்போது ஒருவரின் சமூகப் பொருளாதார நிலையைக் கணக்கிடுவது போல, ரேஷன் அட்டை வைத்திருப்பவரின் தகுதியையே விசாரித்து தகுதியற்றவரை நீக்கியிருக்கலாமே? கூடாது என்கிறது அரசு. ஆதார் அட்டை என்பது ஒரு பிரஜையின் அடையாளத்தைக் கொண்டு, ஏழைமைக்கான சாட்சியம், வெவ்வேறு திட்டங்களின் கீழ் பெறும் கூலியின் பதிவுகள், மான்யங்களின் அளவுகள், அரசிடமோ, வங்கியிடமோ கேட்கும் கடன், பெற்ற கடன், கட்டிய கடன் விவரங்கள் என்று எல்லாவற்றையும் கணினி வழியே பதிந்து வைக்க வசதியான ஒற்றைப் பதிவு முறை என்கிறது அரசு.  கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், ஆதார் அட்டை என்பதற்கு இன்னமும் சட்டப்படியான சம்மதமே வரவில்லை. ஒவ்வொரு பிரஜையும் இந்த அட்டை வைத்திருக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் இயற்றப்படவில்லை. விரும்பினால் இந்த அட்டையைப் பெறலாம் என்றே இப்போதைய நிலை உள்ளது. மொத்த மக்கள் தொகையில் இதுவரை வெறும் 22 கோடி பேர் மட்டுமே ஆதார் அட்டைக்காகப் பதிவு செய்துள்ளனர் (தமிழ்நாட்டில் 69 லட்சம் பேர்தான்.) ஆதார் அட்டையை பிரஜா உரிமை அட்டை போல அரசு ஆக்கப்பார்ப்பதில், ஒரு தனி நபரின் அந்தரங்க உரிமைகளில் அரசு கண்காணிப்புக்கு இடம் இருப்பதாக ஏற்கெனவே எதிர்ப்பு கிளம்பியது. எனவே ஆதார் அட்டையை அனைவருக்குமானதாக ஆக்கும் சட்டம் இன்னும் நிறைவேற்றப் படாமல் இருக்கிறது.ஆனால் இப்போது அவசர அவசரமாக மன்மோகன் அரசு ஆதார் அட்டை அடிப்படையில் இனி மான்யம் எல்லாம் ரொக்கமாக மட்டுமே தரப்படும் என்று அறிவிப்பதன் ரகசியம் என்ன? பல வருடங்களாகவே உலக வங்கியும் அமெரிக்க அரசின் தனியார் சார்பு பிரசாரகர்களும் இந்தியாவில் உணவு உட்பட எதற்கும் அரசு மான்யம் கொடுக்கப்படக் கூடாது என்று வற்புறுத்தி வருகிறார்கள். எல்லாவற்றையும் மார்க்கெட்டே தீர்மானிக்க விடவேண்டும் என்பதே அவர்கள் நிலை. ஆனால் இதைச் செயல்படுத்த விரும்பியும் முடியாமல் மன்மோகன் இதுவரை திணறி வந்தார். இப்போது தம் பதவிக்காலம் முடியும் வேளையில் உலக முதலாளிகள் சார்பான எல்லா முடிவுகளையும் செயல்படுத்திவிட்டே போவது என்ற பிடிவாதத்துக்கு வந்துவிட்டார்.

மான்யங்களை ஒழிப்பதுதான் அவரது இறுதி நோக்கம். முதல் கட்டத்தில் மான்யமாகப் பொருட்களைத் தருவதை நிறுத்தி காசாகக் கொடுக்க ஆரம்பித்தால், அந்தக் காசைக் கொண்டு தனியாரிடம்தான் மக்கள் எதையும் வாங்கும் நிலை உருவாகும். அடுத்த கட்டமாக, காசாகத் தரும் மான்ய அளவைப் படிப்படியாகக் குறைத்து நீக்கிவிடலாம் என்பதே தொலைநோக்குத் திட்டம்.  இதன் உடனடி விளைவு என்ன என்று பார்க்கலாம். அரசு நடத்தி வரும் ரேஷன் கடைகளை எல்லாம் மூடவேண்டி வரும். லட்சக்கணக்கான ஊழியர்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான ரேஷன் கடைகள், இதர தனியார் கடைகள் போல இயங்கமுடியாமல் மூடப்படும். ரேஷன் கடை மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரை போன்றவற்றை அரசு விற்கப்போவதில்லை என்றால், அடுத்த கட்டமாக அவை எதையும் அரசு விவசாயிகளிடம் இருந்து வாங்கத் தேவையில்லை. குறைந்தபட்ச கொள்முதல் விலையின் மூலம் அரசு இதுவரை விவசாயிகளுக்கு ஓரளவு வாழ்க்கை உத்தரவாதம் தருவது அடியோடு கைவிடப்படும். எல்லா விவசாயிகளும் தங்கள் பொருட்களை, தனியாருக்கு மட்டுமே விற்கும் நிலை ஏற்படும். தனியார் கொள்முதல் செய்து வைத்துக் கொண்டு பதுக்கலாம். செயற்கையான பொருள் பஞ்சத்தை ஏற்படுத்தி விலையை உயரச் செயலாம். ஆனால் அரசு தன்வசம் இருக்கும் ஸ்டாக்கை பயன்படுத்தி விலையைச் சரி செய்ய வைக்க முடியாது. ஏனென்றால் அதனிடம் ஸ்டாக்கோ ரேஷன் கடையோ இருக்காது. அரசு காசாகக் கொடுத்த மான்யத்தைக் கொண்டு தனியார் கடையில் மட்டும்தான் மக்கள் பொருள் வாங்கும் நிலை என்றால் விலைகளை மார்க்கெட்தான் தீர்மானிக்கும். அரசு பொருளுக்குப் பதில் கொடுக்கும் மான்யக் காசை ஆதார் அட்டைதாரரின் வங்கிக்கணக்கில் செலுத்தும் என்று அறிவித்திருக்கிறது. இந்தியாவில் வறுமையிலும் வறுமைக்கோட்டுக்குக் கீழேயும் இருப்போர் இதற்காக வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும். கிராமப் புற மக்கள் தொகையில் வெறும் 54 சதவிகிதம் பேருக்குத்தான் வங்கிக் கணக்கு இருக்கிறது. ஆதார் அட்டை இருப்போருக்கெல்லாம் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்குவது என்றால் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்த பட்சம் ஒரு வங்கிக் கிளை திறக்க வேண்டும். அல்லது ஏ.டி.எம். திறக்க வேண்டும். அது வங்கிக்கே கட்டுப்படியாகாது. இதற்குப் பதிலாக நடமாடும் ஏஜென்ட்டுகளை ஒவ்வொரு கிராமத்திலும் நியமித்து அவர் கைமெஷின் மூலம் ஒவ்வொருவர் கணக்கிலும் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்துச் சொல்லும் வசதியை உருவாக்க ஒரு யோசனை இருக்கிறது. இதுவும் நடைமுறையில் சிக்கல்தான். பொருள் வாங்க மான்யப் பணத்தை எடுக்க வங்கிக்குத்தான் போயாகவேண்டும்.வங்கிக் கணக்கு யார் பெயரில் இருக்கும்? ரேஷன் அட்டையில் அப்பா பெயர் இருக்கலாம். ஆதார் அட்டை வைத்திருக்கும் மகனோ, மகளோ கூலியோ மான்யமோ பெறுவதானால் அவர்கள் பெயரில் வங்கிக் கணக்கு தேவை. குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கும் தேவை. ஆதார் அட்டையும் தேவை என்று ஆகிவிடும். ரேஷன் அட்டைக்கும் ஆதார் அட்டைக்கும் இடையே முரண்பாடு இருந்தால் தீர்ப்பது இன்னும் சிக்கலை ஏற்படுத்தும்.

இந்த ஓட்டையான திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தியே தீரப் போவதாக மன்மோகன் அரசு பிடிவாதமாக அறிவித்திருக்கிறது. இந்தத் திட்டம் எப்படி செயல்படும் என்பதற்கு முன்னோடியாக ஓர் இடத்தில் செயல்படுத்திப் பார்த்தார்கள். ராஜஸ்தானில் ஆல்வார் மாவட்டத்தில் கோட் காசிம் கிராமத்தில் இது எப்படி செயல்பட்டது என்பதை அவுட்லுக் இதழ் அம்பலப்படுத்தியிருக்கிறது. கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரை இங்குள்ள ரேஷன் கடையில், மண்ணெண்ணெய் மான்ய விலைக்கு பதில் மார்க்கெட் விலையில் விற்கப்பட்டது. மான்ய விலை லிட்டருக்கு 15 ரூ. மார்க்கெட் விலை 50 ரூபாய். மக்களிடம் 35 ரூபாய் உங்கள் கணக்கில் அரசு போடும் என்று சொல்லப்பட்டது. மக்கள் கடையில் போய் 50 ரூபாய்க்கு வாங்கியாக வேண்டிய நிலை. வாங்கினார்கள். ஆனால் மூன்று நான்கு மாதங்களாகியும் வங்கிக்கணக்கில் மான்யம் வந்து சேரவில்லை. எப்போது வங்கிக் கணக்கில் வரும்? மாநில அரசுக்கு வந்து விட்டது. சிக்கிரமே அனுப்புவோம் என்கிறார் கலெக்டர். அதுவரை முன்பணம் போட்டு கிரசின் வாங்க, வறுமைக் கோட்டில் இருப்பவர்களால் எப்படி முடியும்? திட்டத்தின் கீழ் பதிவு செய்த 350 பேரில் இப்போது 30 பேர்தான் கடைக்கு வந்து வாங்குகிறார்கள். கிரசின் உபயோகிக்கவே முடியாமல் போய் சுள்ளி, விறகு என்று தேடப் போய்விட்டார்கள். இதுதான் சோதனை முயற்சியின் நிலை.பணத்தை முன்கூட்டியே கொடுக்கும் ஏற்பாடு வந்துவிடுவதாகவே வைத்துக் கொள்வோம். தமிழ் நாட்டில் இப்போது விலையில்லாத அரிசி 20 கிலோ தரப்படுகிறது. இது திரும்ப கடைக்குப் போய் மார்க்கெட்டில் இட்லி மாவுக்காக விற்கப்படும்போது கிலோ நான்கு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த அரிசியின் மார்க்கெட் மதிப்பு நான்கு ரூபாய்தான். என்னைப் போன்ற வசதியானவர்கள் கிலோ 30 முதல் 40 ரூபாய் வரையிலான அரிசியை உபயோகிக்கிறோம். இப்போது 20 கிலோ இலவச, மன்னிக்கவும் விலையில்லாத அரிசி பெறுவோர் இனி மார்க்கெட்டில்தான் அரிசி வாங்கிச் சோறு சமைக்க வேண்டுமென்றால், நிச்சயம் நான்கு ரூபாய் அரிசியை வாங்கமாட்டார்கள். குறைந்தபட்சம் கிலோ 15 ரூபாய் அரிசியாவது தேவை. அரசு மான்யமாக எதைக் கொடுக்கும்? இப்போது தரும் நான்கு ரூபாய் மதிப்புள்ள அரிசியானால் எவ்வளவு மான்யம்? 15 ரூபாய் அரிசியென்றால் எவ்வளவு மான்யம்? இந்தக் குழப்பங்கள் தவிர வேறு ஓர் அடிப்படை பிரச்னை ரொக்க மான்யத்தில் இருக்கிறது.

காசாக ஏழை மக்கள் கையில் தரும் பணம், எந்த நோக்கத்துக்காகத் தரப்படுகிறதோ அதே நோக்கத்துக்காகச் செலவழிக்கப்படும் வாய்ப்பு நம் சமூகச் சூழலில் மிக மிகக் குறைவு. உணவுப் பொருளாகத் தரும் போது நிச்சயம் அது வீட்டுக் குழந்தைகள் வரையில் உணவாகவே போய்ச் சேரும் வாய்ப்பு இருக்கிறது. காசாகக் கொடுத்தால், நமது டாஸ்மாக் கல்ச்சரில், நிச்சயம் வீணாகிப் போகும். வீட்டுப் பெண்கள் பெயருக்கே வங்கிக் கணக்கு வைத்து பணத்தைக் கொடுத்தால் கூட, இன்று ஏராளமான ஏழைமக்கள் வீடுகளில், பெண்ணை மிரட்டி, அடித்து உதைத்து, கொஞ்சி, கெஞ்சி, மிஞ்சி பணத்தைப் பறிக்கும் கணவன்கள், பிள்ளைகள் எனக்குத் தெரிந்தே பலர் உள்ளனர்.  இன்னொரு பக்கம், ஏழைமை அதிகமாக அதிகமாக, மத, சாதிச் சடங்குகளில் சாங்கியங்களில் பணத்தை வீணடிக்கும் விகிதமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. எனக்குத் தெரிந்த ஒரு வீட்டுப் பணியாளரான விதவைத் தாய் தம் மகன் திருமணத்துக்காக ஐந்து வட்டியில் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறார். அண்மைக் காலங்களில் நகரங்களையொட்டிய பகுதிகளில் பல விவசாயிகள் லட்சக்கணக்கான ரூபாய்களுக்குத் தங்கள் நிலத்தை விற்று விட்டு, சில மாதங்களிலேயே ஓட்டாண்டி களான நிகழ்ச்சிகள் கணிசமாக உள்ளன.ஆனால் மன்மோகன் அரசுக்கு இதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லை. இந்தியாவில் தனியார் பெரு முதலாளிகளின் வணிக வாய்ப்பைப் பெருக்குவது, அந்நிய வங்கிகளுக்கு புது வாய்ப்புகளை ஏற்படுத்துவது, இந்தியாவில் ஈட்டிய பணத்தை தம் நாடுகளுக்கு எடுத்துச் செல்ல அந்நிய கம்பெனிகளுக்கு உதவுவது, அவர்களுக்கெல்லாம் மின்சாரம் முதல் நிலம் வரை மான்யங்களை அள்ளித் தருவது என்ற அவரது கொள்கையை எதைப் பற்றியும் கவலைப்படாமல் செய்து முடிக்கத் துடிப்பவராக அவர் இருக்கிறார். இதுவரையில் அவரைத் தடுக்க எந்தச் சக்தியாலும் முடியவில்லை. ஆனால் ஆதார் முதல் முட்டுக்கட்டையாக அமையலாம். ஏனென்றால் அதைச் செய்து முடிக்க இன்னும் ஓரிரு வருடம் தேவை. அதற்குள் வரும் தேர்தலில் அவர் ஆட்சியை முடித்து வைக்கும், ஒட்டகத்தின் முதுகை முறித்த கடைசிப் பொட்டலமாக ஆதார் அமையலாம்.

1 comment:

  1. ஞாநி ஒரு தீர்க்கதரிசி.

    ReplyDelete