Search This Blog

Tuesday, March 04, 2014

கனவுகள் பலிக்குமா?

கனவுகள் மனிதனோடு பின்னிப் பிணைந்தவை. மனத்தில் அமுக்கப்பட்ட ஆசைகள் கனவுகளாகப் பரிணமிக்கும் என்றும், ஆழ்மனத்தில் புதைந்திருக்கும் எண்ணங்களின் வாசனைகளே கனவுகளுக்குக் காரணம் என்றும் பல்வேறு கருத்துக்கள் உண்டு. முன்னேற வேண்டும் என்று கனவு காணுங்கள்; சாதிக்கலாம் என்றும் கூறிவைத்திருக்கிறார்கள் பெரியோர்கள்.

பொதுவாக கனவுகள் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் எனும் மூன்று தாதுக்களின் மாறுபாட்டால் ஏற்படுகின்றன என்பது ஆயுர்வேதத்தின் தீர்ப்பு. நிறைவேறாத ஆசைகளே கனவுகளாக வெளிப்படும் என்பது உலகத்தின் தலைசிறந்த மனோதத்துவ நிபுணர் சிக்மண்ட் ஃப்ராய்டின் கோட்பாடு.

ப்ரச்ன மார்க்கமும் (31-வது அத்தியாயம்) கனவுகள் குறித்து விளக்குகிறது. அதன் அடிப்படையில் சில தகவல்களை அறிவோம்.

கனவுகளுக்குக் காரணங்கள்... 

* உடலில் உள்ள பித்தம், வாதம், கபம் போன்ற தாதுக்கள் பாதிக்கப்படுதல்.
* தசை மற்றும் புக்தி காலங்கள்
* எந்தப் பொருளையாவது பற்றி அதிகமாக நினைத்துக்கொண்டு அல்லது கவலைப்பட்டுக்கொண்டு இருத்தல்
* எதிரிகளால் செய்யப்பட்ட செய்வினைகள்
* உடலில் உள்ள ரகசியமான உள்நோய்கள்.
* பிறருடன் முன்பு கொண்டுள்ள பழக்கம்.

கனவுகளும் திரிதோஷங்களும் 

திரிதோஷங்கள் அதிகமானாலும், பாதிக்கப்பட்டாலும் கீழ்க்காணும்படி கனவுகள் தோன்றும்.

வாதம்: மலை உச்சி அல்லது மரங்களில் ஏறுதல், ஆகாய மார்க்கமாகப் பயணங்கள்.

பித்தம்: தங்கம் போன்ற ஒளி வீசும் பளபளப்பான பொருட்களை காணுதல், இதே போல் சிவப்பு மலர்கள், நெருப்பு, சூரியன் போன்றவையும் கனவில் வரும்.

கபம்: சந்திரன், நட்சத்திரங்கள், வெண்ணிற மலர்கள், தாமரை மலர், நதிகளைக் காணுதல். ஆனால் இவற்றின் பாதிப்பினால் ஏற்படும் கனவுகளின் பலன்கள் சாதாரணமாகவே இருக்கும்.

கிரகங்களின் தசை, புக்திகளில் வரும் கனவுகள் அந்தந்த கிரகங்களோடு தொடர்புடையவையாக அமையும். அவற்றின் பலனும் குறைவு. இதேபோல் கவலையில் ஏற்படும் கனவுகளுக்கும் பலன் இல்லை. சிந்தா (சிந்தனை), திருஷ்டா (பார்வை) ஆகியவற்றால் ஏற்படும் கனவுகள் சிந்தனை, பார்வை இவற்றின் அடிப்படையில் அமையும்.


கனவுகளின் வகைகள்... 

திரிஷ்டம் : உலகில் பார்த்தவற்றை - சந்தித்த நிகழ்வுகளைக் கனவுகளில் காணுதல்

ஷ்ருதம் : தான் கேள்விப்பட்டவற்றை கனவில் காணுதல்

அனுபூதம் : தொடவும், முகரவும், ருசிக்கவும் கூடிய தன்மை கொண்டவற்றைக் காணுதல்

பிராதிதம் : ஆசைப்பட்டவற்றைக் காணுதல்

கல்பிதம் : கற்பனைப் பொருட்கள், நிகழ்வுகள்.

பாவிஜம் : மேலே உள்ள எதிலும் சேராதவை.

தோஷஜம் : திரிதோஷங்களின் பாதிப்பில் ஏற்படும் கனவுகள்

பகல் நேரத்தில் காணும் கனவுகளும், மேலே கூறியவற்றில் முதல் 5 வகை கனவுகளும் முக்கியத்துவம் இல்லாதவை என்பார்கள் பெரியோர்கள். பொதுவாக பகலில் காணும் கனவுகள் பலிக்காது என்பார்கள். பகலில் தூங்கக்கூடாது என்பது ஆயுர்வேதத்தின் அறிவுரை!

பலன் தராத கனவுகள்... 

1. பகல் நேரத்தில் காணும் கனவுகள்
2. காலை விழித்ததும் மறந்துபோகும் கனவுகள்.
3. நீண்ட நேரம் தொடர்ச்சியாக காணும் கனவுகள்.
4. நள்ளிரவுக்கு முன்னே காணும் கனவுகள்.
இப்படியான கனவுகள் பலிக்காது. அதேநேரம் அதிகாலைப் பொழுதில் காணும் கனவுகள் அடுத்து வரும் நாட்களில் பலிக்கும்.

கனவுகள் கண்டபிறகு, மறுபடியும் தூங்கிவிட்டால் கனவின் பலன் குறைவு. கெட்ட கனவுக்குப் பின்னர் நல்ல கனவு வந்தாலும்கூட கெட்ட கனவுகள் பலிக்கும். இப்படி, தீய கனவுகள் கண்டால் தானம், வழிபாடு, மந்திர ஜெபம், யாகம், தியானம் போன்றவற்றைச் செய்து, வரப்போகும் கெடுபலனைக் குறைக்கலாம்.

சுப சொப்பனங்கள்... 

தெய்வங்கள், அந்தணர்கள், பசுக்கள், எருதுகள், உயிருடன் உள்ள உறவினர்கள், அரசர்கள், நல்ல மனிதர்கள், எரியும் நெருப்பு, தூய்மையான நீர் நிரம்பிய குளம், நல்ல நீர் நிலைகள், திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள், வெண்ணிற ஆடையுடன் புன்னகை பூக்கும் அழகான சிறுவர்கள், உற்சாகமானவர்கள், புத்திமான்கள், குடைகள், முகம் பார்க்கும் கண்ணாடிகள், வெண்ணிற மலர்கள், வெண்ணிற ஆடைகள் ஆகியவற்றைக் கனவில் காண்பது சுபம்.

மேலும், உடலில் தடவப்படும் மருந்துக் களிம்புகள், பழங்கள், சிறு குன்றுகள், மாடி வீடுகள், வீட்டின் கூரை, பழங்கள் நிரம்பிய மரங்கள், ஆண்கள், சிங்கங்கள், யானைகள், குதிரைகள், பல்லக்கு போன்ற பிற வாகனங்கள், ஆறுகள், நடந்தோ, படகிலோ கடக்க எளிதான ஆழமில்லாத ஆற்றுப்பகுதி, சமுத்திரங்கள், கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கிய பயணங்கள், மரணம், ஆபத்துக்களிலிருந்து தப்பித்தல், பித்ருக்கள் எனப்படும் முன்னோர் மற்றும் மூத்தவர்களின் திருப்தியான நிலை, அழுதல், கீழே இருந்து மேலே எழுந்துகொள்ளல், எதிரிகளை வீழ்த்துதல் போன்ற காட்சிகளைக் கனவில் காண்பது நல்ல பலன் தரும்.

கனவுகள் பலனளிக்கும் காலங்கள்: 

ஓர் இரவு என்பது நான்கு யாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. இதில், முதலாம் யாமத்தில் கண்ட கனவு ஒரு வருடத்துக்குள்ளும்,
2-ம் யாமத்தில் கண்ட கனவு 8 மாதத்துக்குள்ளும்,
3-ம் யாமத்தில் கண்ட கனவு 3 மாதத்துக்குள்ளும்,
4-ம் யாமத்தில் கண்ட கனவு 10 நாட்களுக்குள்ளும்,
அதிகாலைக் கனவு உடனடியாகவும் பலிக்கும்.

கனவுகளின் பலன்கள் 

* அந்தணர் யாராவது மது அல்லது ரத்தம் அருந்துவதுபோல் கனவு கண்டால் அந்த அந்தணருக்கு அறிவு சேரும். இதே கனவை அந்தணரைத் தவிர வேறு நபர்கள் கண்டால், அவர்களுக்கு செல்வம் சேரும்.

* சாதாரண மனிதனின் கனவில் அரசன், யானைகள், குதிரைகள், எருதுகள், நோயாளி போன்றவற்றை கண்டால், அவனது ஆசைகள் யாவும் நிறைவேறும். உயர் குலத்தில் பிறந்தவன் இதே கனவைக் கண்டால் அவன் அரசன் ஆவான்.

* சந்தனக்குழம்பு, சங்கு, முத்துக்கள், தாம்பூலம், ஜாதி மல்லிகை, செல்வம் போன்றவற்றைப் பெற்றுக் கொள்வதுபோல் கனவுகண்டால், நல்லது விளையும்.

* பூச்சி மற்றும் அட்டை கடிப்பதுபோல் கண்டால், அவருக்குச் செல்வமோ, குழந்தைகளோ சேரும்.

* மாடி வீட்டில் நுழைவதுபோல் கனவு காண்பவன் சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அரசன் ஆவான்.

* பாயசம் போன்ற இனிப்பும் நெய்யும் சேர்ந்த உணவை, அழுக்கடைந்த தாமரை இலையில் வைத்துக்கொண்டு, ஒரு குளத்தின் மத்தியில் அமர்ந்து அருந்துவது போல் கனவு கண்டால், அவர் கற்றறிந்த அறிஞர் ஆவார்.

* இனிய குரல் எழுப்பிக் கூவும் குயிலை கனவில் கண்டு, ஒருவன் சட்டென விழித்து எழுந்தால், அதேபோல் இனியவளான பெண் மனைவியாவாள்.

* நோயாளி ஒருவன் சூரியனையோ அல்லது சந்திரனையோ பார்த்தால், அவர் விரைவில் குணமடைவார். நோயில்லாத ஒருவன் இதே கனவை கண்டால், அவருக்கு நல்ல உடல் நலமும், செல்வமும் சேரும். எரியும் நெருப்பு, பழங்கள், மலர்கள், ரத்தினங்கள், தயிர், பால், அரிசி நிரம்பிய பானைகள் போன்றவற்றை கனவில் காண்பவர் வளமான வாழ்வை விரைவில் அடைவார்.

தீய கனவுகள்... 

நாய், நரி, கருமை நிற விலங்குகளைக் கனவில் கண்டால், துக்கம் நேரிடும். காக்கை, கழுகு, கழுதை, ஒட்டகம், பருந்து, ஆண் எருமை, கருமையான பெண் - துக்கம், பயம் போன்றவை நேரிடும். ஓடுவதாக கனவு - இருக்கும் இடத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்றும், அங்கேயே தொடர்வது தீமை நேரிடும் என்பதையும் உணர்த்தும்.

சிவந்த உடை, கருமை நிற உடை, சிவந்த சந்தனம் பூசிய பெண், எள், பன்றி, பூனை - மரணத்தைக் குறிக்கும்.

சண்டாளர், மிலேச்சர், காகம், கருமை நிற பாம்பு, தேன், சர்க்கரை, மஞ்சள்நிற கூந்தல் உடைய பெண் - தன நாசம்.

சூரிய, சந்திர நட்சத்திரங்கள் போன்றவை விழுவது போன்ற காட்சிகள் - துக்கம், மரணபயம்; கடல், தாமரைப் பொய்கை, மணல் திட்டு - செல்வம் நாசம்.
எண்ணெய் தேய்த்து குளித்தல் - நோய் வாய்ப்பட நேரிடும்.

பல் விழுதல் - கஷ்டம், தனநாசம்

பெரிய மணி ஓசை - ஒரு துன்பத்திலிருந்து விலக இருக்கிறோம். அந்தத் துன்பத்தை ஏற்படுத்திய செயலை மீண்டும் செய்யக் கூடாது என எச்சரிக்கை.

காவல் நிலையம் - செய்கின்ற முயற்சியில் கவனம் தேவை.

பிச்சை எடுத்தல் - ஒரு எதிர்பாராச் சரிவு ஏற்பட உள்ளது.

கடிகாரம் - முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறீர்கள்.

சூரியன் - அவப்பெயர் நேரிடப் போகிறது.
 
நட்சத்திரங்கள் - பெயர் புகழ் கூடும்.

மழைத் தூறல் - உற்றார், உறவினரால் பிரச்னை.

நல்ல கனவுகள், சாதகமான கனவுகளைக் கண்டவர் உடனடியாக விழித்து எழுந்து, குளித்து இறைவனை வணங்கி, பின் அந்த இரவு முழுவதையும் தூங்காமலே கழிக்க வேண்டும்.

கெட்ட கனவுகளைக் காண நேரிட்டால் உடன் எழுந்து கை, கால்கள் சுத்தம் செய்து திருநீறு அணிந்து, தெய்வ நாமத்தை 12 முறை உச்சரித்து வணங்க வேண்டும்.

 வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

5 comments:

  1. enakku oru santhegam innakki kalaila ennoda love success aagura mathiri dream vanthuchi athu palikkuma.time 4.30 to 6.15

    ReplyDelete
  2. மிக்க நன்றி

    ReplyDelete
  3. மிக்க நன்றி

    ReplyDelete