Search This Blog

Wednesday, March 04, 2015

மார்ச் மாதம் 8-ம் நாள் உலக மகளிர் தினம்

இன்று, உலகெங்கும் கொண்டாட்டமாக மாறியிருக்கும் இந்த மகளிர் தினம் உருவான தற்குப் பிந்தைய வரலாறு, போராட்டமயமானது!

1789-ம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சி நடந்தபோது, பெண்களும் போராட்டக் களத்தில் நின்று சமத்துவ உரிமை, எட்டு மணி நேர வேலை, வேலைக்கு ஏற்ற ஊதியம், வாக்குரிமை, பெண்கள் இனி அடிமைகளாக நடத்தப்படக் கூடாது என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்துப் போராடினர். அதை நசுக்க நினைத்தார் மன்னர் லூயி ஃபிலிப். ஆனால், பெண்களின் போராட்ட வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், தோல்வியுற்றார். இதனால் மன்னர் பதவியையும் துறந்தார்.


இந்த வெற்றி, ஐரோப்பா முழுவதும் பெண் கள் போராட்டம் நடத்த உத்வேகம் ஊட்டியது. ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்களின் தொடர் போராட்டங்களைப் பார்த்து, அந்நாடுகளின் அரசாங்கங்கள் ஆடிப்போயின. அதைத் தொடர்ந்து இத்தாலியப் பெண்கள், தங்களுக்கு வாக்குரிமை கோரிப் போராடினர். பிரான்ஸில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயி பிளாங், பெண்களின் போராட்ட உறுதியைப் பார்த்து, அவர்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் சேர்க்கவும், வாக்குரிமை அளிக்கவும் 1848-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி ஒப்புக்கொண்டார். அது முதல், மார்ச் 8-ம் தேதியை 'பெண்கள் உரிமை தினமாக’ உலகம் முழுக்க உள்ள பெண்கள் கொண்டாடத் தொடங்கினர்.

இதற்கிடையே, பெண்களின் போராட்டம், உலகம் முழுக்கக் கிளர்ந்தபடி இருந்தது. 1908-ம் ஆண்டு அமெரிக்கப் பெண்கள், வாக்குரிமைக்காக நடத்திய போராட்டம், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டுக்கு அச்சம் கொடுத்தது. தொடர்ந்து நியூயார்க் நகரில், பஞ்சாலை பெண் தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் குறைப்பது, வேலைக்கு ஏற்ற சூழல், வயது வந்த பெண்களுக்கு வாக்குரிமை போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி, 1908-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ம் நாள், போராட்டங்கள் நடந்தன.

இந்த நேரத்தில்தான், மாதர் பொதுநல வாதியான இட்லாரா சிட்சின் என்பவர், மார்ச் 8-ம் தேதியை 'உலக மாதர் தினமா’க கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தினார். முதன் முதலாக, 1911-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ம் நாள் உலக மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் 1950-ம் ஆண்டு முதல் இக்கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

1 comment:

  1. மகளிர் தினம் பற்றி தெரியாத தகவலை கூறியுள்ளிர்கள் நன்றி

    ReplyDelete