Search This Blog

Monday, March 02, 2015

ரயில்வே பட்ஜெட்

எதிர்வரும் 2015-2016-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு. இந்த பட்ஜெட்டில் ரயில் பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்தாமல் விட்டதன் மூலம் நடுத்தர மற்றும் ஏழை மக்களிடம் பெரிய சபாஷ் வாங்கி இருக்கிறார்.

ரயில்வே துறையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 8.5 லட்சம் கோடி ரூபாயும், முதல்கட்டமாக வருகிற நிதியாண்டில் ஒரு லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்றும் அறிவித்திருக்கிறார் அமைச்சர். ரயில்வே துறையில் கட்டமைப்பு வசதிகள் பெருகுவதால், பிற துறைகள் வளர்ச்சி அடையும்.


ஏறக்குறைய 1,200 கி.மீ தூரத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கவும், 9,400 கி.மீ தூரத்துக்கு மீட்டர்கேஜ் பாதையை அகலப்பாதையாக மாற்றவும், 96,182 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார். சரக்குப் போக்குவரத்துக்காக தனியாக இரண்டு ரயில் பாதைகளை உருவாக்கவும் திட்டமிட்டிருக்கிறார். வரும் நிதியாண்டில் 6,608 கி.மீ தூரத்துக்கு மின்மயமாக்கவும் நிதி ஒதுக்கி இருக்கிறார்.

அதுமட்டுமல்ல, ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கா கவும், செளகரியமான பயணத்துக்காகவும் பல திட்டங்களை அறிவித்திருக்கிறார். முக்கிய ரயில் நிலையங்களில் வைஃபை இணைய வசதி, பெண்கள் பாதுகாப்புக்கு சிசிடிவி கேமாராக்கள் வசதி, பயணிகளின் வசதிக்காக 67 விழுக்காடு கூடுதல் நிதி ஒதுக்கீடு, ரயில் மற்றும் ரயில் நிலையங்களின் தூய்மைக்கென தனித் துறை அமைப்பு, 650 ரயில் நிலையங்களில் புதிய பசுமை கழிவறைகள் மற்றும் ஏற்கெனவே உள்ள 17,000 கழிப்பறைகள் சீரமைப்பு என சாதாரண மக்களுக்கு பல அறிவிப்புகளைச் செய்திருக்கிறார்.

ஆனால், சிற்சில விமர்சனங்கள் இந்த ரயில்வே பட்ஜெட்டில் எழாமல் இல்லை. புதிய ரயில்களுக்கான அறிவிப்புகள் எதுவும் இல்லாதது எல்லோருக்குமே ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. அதிலும், தமிழகத்தில் ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவுதான். கடந்த ஆட்சியிலேயே 90 நாட்கள் வரை முன்பதிவு செய்யும்படி நடைமுறையைக் கொண்டுவரப்பட்டது. அதற்கு மக்களிடம் சரியான வரவேற்பு கிடைக்காததால், மீண்டும் 60 நாட்களுக்கே மாற்றினார்கள். இப்போது இதை 120 நாட்களுக்கு அதிகரித்து இருக்கிறார் அமைச்சர். இந்தமுறையாவது மக்களிடம் இதற்கு வரவேற்பு கிடைக்கிறதா என்று பார்ப்போம்.

ஆகமொத்தத்தில், மோடி நினைக்கும் புல்லட் ரயில் வேகத்தில் இந்த பட்ஜெட் இல்லை என்றாலும், சாமானியர்களையும் ஏற்றிக்கொண்டு நிதானமான வேகத்தில் கிளம்பி இருக்கிறது. அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் (ஆண்டுகளில்) இந்த ரயிலின் வேகம் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

செ.கார்த்திகேயன்

No comments:

Post a Comment