Search This Blog

Wednesday, August 25, 2010

பிரபாகரன் இறந்தது வைகோக்கு தெரியும் - சொல்கிறார் கே.பி

விடுதலைப் புலிகளின் ஆயுத யுத்தம் நடக்கிறதோ இல்லையோ... அவர்களை முன்வைத்து காகித யுத்தம் அதிகமாகவே நடக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் விடுதலைப் புலிகளின் அனைத்து உலக செய்திப் பொறுப்பாளராக இருந்த கே.பி. எனப்படும் குமரன் பத்மநாபன் கொடுத்து வரும் பேட்டிகள் உலகத் தமிழர்கள் மத்தியில் அதிக சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன! 'இந்திய அரசு முன்மொழிந்த போர் நிறுத்தத்தைத் தன்னுடைய அரசியல் நோக்கங்களுக்காக வைகோவும் நெடுமாறனும் தடுத்துவிட்டார்கள்' என்று பகிரங்கமாகப் பேட்டி அளித்துள்ளார் கே.பி. 

இதோ  வைகோவின் பேட்டி : 

''கே.பி-யின் பேட்டி படித்தீர்களா?''

''இலங்கை அரசாங்கத்தின், ராணுவத் தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கே.பி. அளித்துள்ள பேட்டியைப் படித்தபோது, என்னைப்போலவே உலகத் தமிழர்கள் அத்தனை பேரும் கொதித்துப்போய் இருக்கிறார்கள். புலிகள் இயக்கத்தின் உலகத் தொடர்புப் பொறுப்பாளராக இருந்து, தலைவர் பிரபாகரனுக்கு ஏற்பட்ட அவநம்பிக்கை காரணமாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீக்கப்பட்டவர்தான் இந்த கே.பி. இறுதிப் போர் நடந்த காலத்தில் அவர் எதிரிகளின் கையாளாக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே, மீண்டும் அனைத்து உலகப் பொறுப்பாளர் பதவியை தலைவர் வழங்கினார். அதுவும் காஸ்ட்ரோவுக்கு கீழே இருந்து செயல்படவே அனுமதிக்கப்பட்டார். கே.பி. இன்று சொல்வது எல்லாம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, தன் உயிரைக் காப்பாற்ற உதிர்க்கும் தந்திரம். ஒரு கொத்தடிமையிடம் இருந்து உண்மையை எதிர்பார்க்க முடியாது!''

''மத்திய காங்கிரஸ் அரசு, ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தயாரித்ததாகவும் அதை நீங்கள் தடுத்துவிட்டதாகவும் சொல்கிறாரே கே.பி.?''

''போரை நடத்திய காங்கிரஸ் அரசாங்கமே போர் நிறுத்த ஒப்பந்தம் போட்டதாகச் சொல்வது கடைந்தெடுத்த பொய். இலங்கை ராணுவத்துக்கு காங்கிரஸ் அரசாங்கம் எந்த உதவியும் செய்யக் கூடாது என்று 16 முறை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து மன்றாடியவன் நான். அதையும் மீறி ராடார் கொடுத்தார்கள், ஆயுதங்கள் கொடுத்தார்கள், உளவு பார்த்து சொன்னார்கள். எல்லா உதவிகளும் செய்தார்கள். ஒரு முறையாவது மன்மோகன் சிங்கோ, சோனியா காந்தியோ, 'போரை நிறுத்துங்கள்' என்று வெளிப்படையாகச் சொன்னது உண்டா? உலக நாடுகள் எல்லாம் சொன்ன பிறகும் ஊமையாகத்தானே இந்த இரண்டு பேரும் இருந்தார்கள்.

முதல்வர் கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்த மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம், 'போர் நிறுத்தத்தை நீங்கள் வலியுறுத்துவீர்களா?' என்று கேட்டபோது, 'அது நமது வேலை இல்லை' என்றுதானே சொன்னார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து போர் நிறுத்தத் தீர்மானம் போட்டு அனுப்பிய மறுநாள், டெல்லிக்கு ராஜபக்ஷே வந்திருந்தார். மன்மோகனைச் சந்தித்தார். வெளியே வந்தவரை நிருபர்கள் கேட்டார்கள்... 'போர் நிறுத்தம் பற்றி பேசவில்லை. புலிகளை அழித்துவிட்டுத்தான் மறு வேலை' என்று கொக்கரித்தார் ராஜபக்ஷே. 'போர் நிறுத்தம் செய், அப்பாவிகள் மீது குண்டு வீசாதே' என்று வெளிப்படையாகச் சொல்லாத காங்கிரஸ் அரசாங்கம், ரகசியமாக இந்த வேலையைப் பார்த்தது என்று கே.பி. புதிதாகப் பூ சுற்றுகிறாரா?

'போரை நடத்த பசில் ராஜபக்ஷே, கோத்தபய ராஜபக்ஷே, லலித் வீரதுங்க ஆகியோரை நான் அனுப்புகிறேன். நீங்கள், எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், விஜய்சிங் ஆகியோரைத் தாருங்கள்' என்று ஒப்பந்தம் போட்டது உண்டா இல்லையா? கொழும்பில் இருந்து அவர்கள் மூவரும் டெல்லிக்கு ஐந்து முறை வந்தார்கள். இவர்கள் மூவரும் கொழும்புக்கு மூன்று முறை போனார்கள். இவர்களது நோக்கம் என்ன? சம்பந்தம் பேசப் போனார்களா? போரை எப்படி நடத்தலாம் என்றுதான் பேசப் போனார்கள். தினம் தினம் பேசி, வாரம்தோறும் எத்தனைத் தமிழன் செத்தான் என்று கணக்கெடுத்தவர்கள் போரை நிறுத்தத் துடித்ததாக சொல்வது போலித்தனம்.

உலகத்தின் முன்னால் ராஜபக்ஷேவுக்குப் பக்கத்தில் மன்மோகன் சிங்குக்கும் ஒரு கூண்டு தயாராகிக்கொண்டு இருப்பதைத் தெரிந்த பின்னால், 'நாங்கள் ஓர் ஒப்பந்தம் போடத் திட்டமிட்டோம். வைகோ தடுத்துவிட்டான்' என்று கதை கட்டுகிறார்கள்!''

''விடுதலைப் புலிகளின் தொடர்பாளர் நடேசனிடம், 'போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டால், திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு நற்பெயர் ஏற்பட்டுவிடும்' என்று சொல்லி நீங்கள் தடுத்தீர்களா? கே.பி குறிப்பிடும் இந்த சம்பவம் உண்மையா?''

''தமிழீழ விடுதலையை என் உயிருக்கும் மேலாக நேசிப்பவன் நான். விடுதலைப் புலிகளை என்னுடைய அரசியல் வளர்ச்சிக்கு, உள்நோக்கத்துக்கு நான் எந்தக் காலத்திலும் பயன்படுத்தியவன் அல்ல. என்னுடைய அரசியல் எதிரிகளும்கூட இதை ஏற்றுக் கொள்வார்கள். காயம்பட்ட புலிப் போராளிகள் 37 பேரை ஒன்றரை ஆண்டு காலம் நானும் என் தம்பியும் பாதுகாத்துக் காப்பாற்றினோம். இதனாலேயே ஓர் ஆண்டு காலம் என் தம்பி தடா கைதியாக இருந்தான். போர்க் களத்தில் உயிரைத் துச்சமென மதித்துச் செயல்படும் புலிகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை எப்போதும் செய்தேன். ஆனால், எந்தக் காலக்கட்டத்திலும் புலிகளிடம், இதைச் செய்யுங்கள் அதைச் செய்யுங்கள் என்று நான் சொன்னதே இல்லை.
'போர் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. தலைவர் பிரபாகரனின் உயிருக்கே ஆபத்து' என்று எனக்கு தொலைபேசித் தகவல் வந்தபோது, 'இந்தத் தகவலை முதல்வர் கலைஞரின் கவனத்துக்கும் கொண்டு போய்விட்டோம் அண்ணா' என்று சொன்னார்கள். 'கலைஞரிடம் சொன்னதுதான் சரி. இன்னும் முக்கியமானவர்களை அவரிடம் பேசச் சொல்லுங்கள்' என்றுதான் நான் சொன்னேன். என்ன செய்தாவது தாக்குதல் நின்றால் போதும் என்று நினைத்த என்னை, ராஜபக்ஷேவின் ரத்தச் சமையலைச் சாப்பிட்டு உயிர் வாழும் கே.பி-யா சந்தேகப்படுவது? கேவலம்!''

''நடேசன், அந்தக் காலகட்டத்தில் உங்களிடம் பேசினாரா?''

''கே.பி-யும், சில உளவு அதிகாரிகளும் ஒரு நாடகத்தை ஜோடிக்கிறார்கள். 'ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டுச் சரணடையத் தயார். தமிழீழ லட்சியத்தைக் கைவிட்டுவிட்டு வேறு வகையில் போராடத் தயார்' என்று புலிகள் எழுதிக் கொடுத்தால், போர் நிறுத்தம் செய்யலாம் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சொன்னதாகவும்... அதை நடேசன்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ-வான மகேந்திரனிடம் சொன்னதாகவும்... இதை என்னிடமும், நெடுமாறனிடமும் கூற வேண்டாம் என்று சொன்னதாகவும், அதை மீறி மகேந்திரன் என்னிடம் சொல்லிவிட்டதாகவும் போகிறது கே.பி-யின் திரைக்கதை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழீழ கொள்கையை ஏற்றுக் கொள்ளாதது. அக்கட்சியின் எம்.எல்.ஏ-விடம் நடேசன் எப்படி பேசியிருக்க முடியும்?

தொடக்கக் காலத்தில், பாலசிங்கம், அடுத்து தமிழ்ச்செல்வன் ஆகியோர் என்னிடம் தொடர்ந்து பேசுவார்கள். கடைசிக் கட்டத்தில் நடேசன் தொடர்பில் இருந்தார். 2009-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடேசன் என்னிடம் பேசினார். போர் கடுமையாக நடந்து வந்த சூழல் அது. அவராகவே அரசியல் நிலைமை குறித்துக் கேட்டார். 'எங்களுக்குத் தொகுதிகள் குறைவாகக் கிடைக்கும் நிலை இருப்பதால், நாங்கள் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுக்கலாம் என நினைக்கிறோம். அதற்காக அணி மாற முடியாது' என்று சொன்னேன். 'உங்களுக்கு சிவகாசி கிடைத்துவிட்டதா?' என்றார். 'ஆம்' என்றேன். 'நீங்கள் ஒருவர் போனால், 500 பேர் போவதற்கு சமம்' என்றார். மீண்டும் இரவு 7.30-க்கு பேசினார். 'நீங்கள் நிச்சயம் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று தலைவர் விரும்புகிறார். உங்களிடம் சொல்லச் சொன்னார்' என்றார். 'சரி' என்று சொன்னேன். 

மே 10-ம் தேதி இரவில், கடற்படைத் தளபதி சூசை என்னிடம் பேசினார். போர்ச் சூழல் குறித்துப் பேசிய சூசையிடம், 'நீங்களும் தலைவரும் பத்திரமாக இருக்க வேண்டும்' என்றேன். 'இத்தனை மக்கள் சாகிறார்கள். என்னையும் தலைவரையும் பத்திரமாக இருக்கச் சொல்கிறீர்களே' என்று கோபித்தார் சூசை. 'நான் எங்களது மனக் கஷ்டங்களைச் சொன்னேன்' என்றேன். இன்னும் நான்கு நாளில் கோரமான தாக்குதல் நடக்கப்போவதாக நான் சாத்தூர் கூட்டத்தில் பகிரங்கமாகவே தெரிவித்தேன்.

மே 13-ம் தேதி வாக்குப் பதிவு அன்று காலை 10.15 மணிக்கு நடேசன் பேசினார். 'நீங்க சிவகாசியில் ஜெயிச்சிடுவீங்களா?' என்று கேட்டார். 'கோடிக்கணக்கில் எனக்கு எதிராகப் பணம் செலவழிச்சிருக்காங்க. கொஞ்ச ஓட்டு வித்தியாசத்திலாவது ஜெயிச்சிடுவேன்' என்றதோடு, 'எனக்கு உங்களைப்பற்றியும் தலைவரைப்பற்றியும் போர்க் களத்தில் இருக்கும் மக்களைப்பற்றியும்தான் கவலை' என்று சொன்னேன். 'நாங்கள் வெல்வோம் அண்ணா' என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தார் நடேசன். இதுதான் அவர் என்னிடம் சொன்ன கடைசி வார்த்தை. வெள்ளைக் கொடி ஏந்திப் போன நடேசன், உலகம் விழித்திருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். போர் நிறுத்தத்தை வலியுறுத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் இதைக் கண்டித்தாரா?

'நாங்கள் ஆயுதத்தைக் மௌனிக்கச் செய்துவிட்டோம்' என்று விடுதலைப் புலிகள் பகிரங்கமாகவே அறிவித்த பிறகுதான் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப் பட்டார்கள் என்பதாவது கே.பி-க்குத் தெரியுமா?

கே.பி-யின் உடம்பில் தமிழீழ ரத்தம் ஓடுமானால், சிங்களவனால் பலாத்காரம் செய்த தமிழ்ப் பெண்களுக்கு அவர் சொல்லும் தீர்ப்பு என்ன? கண்ணை மூடிச் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞனுக்கு அவர் சொல்லும் காரணம் என்ன? இனத்தைக் கருவறுத்த கூட்டத்தின் கைப்பாவை ஒன்று, ராஜபக்ஷேவின் நாடகத்தில் நடிக்கிறது. போரை நிறுத்த இந்தியா முயற்சித்தது, இலங்கையும் சம்மதித்தது, ஆனால் வைகோ, நெடுமாறன் பேச்சைக் கேட்டு புலிகள் மறுத்ததால், வேறு வழி இல்லாமல் நாங்களும் போரைத் தொடர வேண்டியதாயிற்று என்று உலகத்தின் முன்னால் ஏமாற்ற நினைக்கிறார்கள்!''

''கே.பி-யைத் தலைவராகக் காட்டி ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறதே?''

''அதைச் சில ஆங்கில ஊடகங்களும், இனத் துரோகிகளும்தான் செய்கிறார்கள். உலகத் தமிழர் மத்தியில் கே.பி-யின் முகத்திரை 2009 மே இறுதியிலேயே கிழிந்துவிட்டது. 'தலைவர் இருக்கிறார்' என்று முதலிலும், 'அவர் இறந்து விட்டார்' என்று மூன்று நாட்கள் கழித்தும் அவர் சொல்லும்போதே டயலாக் ரைட்டர் பின்னால் இருக்கிறார் என்பதை உண்மைத் தமிழர்கள் உணர்ந்துவிட்டார்கள்.

இயேசுநாதரை எதிரிகளுக்குக் காட்டிக் கொடுத்த யூதாஸ்கூட 30 வெள்ளிக் காசுகளையும் வீசி எறிந்துவிட்டு உண்மையை உணர்ந்து தற்கொலை செய்துகொண்டான். உண்மையை உணர்ந்தாலும், யூதாஸை மன்னிக்க உலகம் தயாராக இல்லை. ஆனால், காட்டிக் கொடுத்தது மட்டும் இல்லாமல், தன் துரோகத்தை மறைக்க இன்னும் பல பொய்களை உதிர்க்கும் கே.பி. போன்றவர்களுக்கு மன்னிப்பே கிடையாது!''

''பிரபாகரன் இறந்துவிட்டார் என்று தெரிய வந்ததும் கதவை மூடிக் கொண்டு வைகோ கதறினார் என்றும்... ஆனால் அவரே வெளியில் வந்து பிரபாகரன் உயிரோடு இருப்பதாகச் சொல்கிறார் என்று குற்றம் சாட்டுகிறாரே கே.பி?''

''பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற தகவல் கிடைத் ததும் நான் தனியறையில் கண்ணீர் விட்டதும், கதறியதும், அன்று இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் தவித்ததும் உண்மை. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் இது இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட வதந்தி, சதி என்று 24 மணிநேரத்தில் உறுதியான தகவல் கிடைத்ததும் தலைவர் இருக்கிறார், நலமுடன் இருக்கிறார் என்று சொன்னோம். இதில் என்ன குற்றம் கண்டுபிடிக்கிறார் கே.பி.?

எதிர் கேள்வியுடன் முடிக்கிறார் வைகோ!

விகடன்  


No comments:

Post a Comment