Search This Blog

Thursday, October 17, 2013

தெலங்கானா - அலறும் ஆந்திரா

'சமைக்கியாந்திரா... ஜெய் சமைக்கியாந்திரா’ என்ற கோஷங்களால் அதிர்ந்து கிடக்கிறது தெலுங்கு தேசம். எல்லாவற்றிலும் காரம் கூடுதலாகச் சேர்க்கும் ஆந்திர வாசிகள் போராட்டத்திலும் அந்தக் காரம் இன்னும் தூக்கல்! ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது’ என்று தெருவில் இறங்கியுள்ள மக்களின் போராட்டங்களால், காவல் துறையின் கண்ணீர்புகைக் குண்டுகளால், தடியடி, கல்வீச்சு, தீ வைப்புச் சம்பவங்களால் பெரும் ரணகளமாக மாறி இருக்கிறது ஆந்திரா. 'தெலங்கானா’ என தனி மாநிலம் அமைக்க வேண்டும்’ என்று இன்னொரு பகுதியினர் போராடியபோதும் இப்படித்தான் இருந்தது. 'வேண்டும்’, 'வேண்டாம்’ என்று ஆந்திரா மாநிலமே இரண்டுபட்டுக் கிடக்கிறது.1969-ம் ஆண்டில்தான் தெலங்கானா கோரிக்கை எழுந்தது. அந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் மட்டும் மாணவர்கள், இளைஞர்கள் என சுமார் 370 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். இதுவரை 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள்.2006-ம் ஆண்டு உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் தெலங்கானா போராட்டத்தை தீவிரமாக முன்னெடுக்கத் தொடங்கியதும் ஆந்திரா அலறத் தொடங்கியது. போராட்டத்தின் தீவிரம் உணர்ந்த மத்திய அரசு, தனித் தெலங்கானாவை அமைக்கும் முடிவுக்கு வந்திருக்கிறது. இப்போது ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது என்று தெலங்கானா தவிர்த்த மற்ற பகுதி மக்கள் போராடுகின்றனர். 'ஹைதராபாத் நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிடுமோ?’ என்ற பதற்றம் பரவிக்கிடக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு பறிபோய்விடும் என்ற பதற்றத்தில் மாணவர்களும், தங்களின் தொழில் முதலீடுகளுக்கு பங்கம் வந்து விடுமோ என்ற கவலையில் முதலாளிகளும் கொந்தளிக்கிறார்கள்.

எரியும் நெருப்பில் பெட்ரோல் குண்டு போட்ட கதையாக 'தெலங்கானா அமைந்ததும் ஆந்திராவில் இருந்து வந்து பணிபுரியும் அரசு ஊழியர்கள், தெலங்கானாவை விட்டு காலி செய்துவிட வேண்டும்!’ என்று தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் அறிக்கை ஒன்றை வெளியிட, அரசு ஊழியர்களும் பொங்கிவிட்டார்கள். அவர்களுக்கு ஆதரவாக மின்வாரிய ஊழியர்கள், 'பவர்கட்’ போராட்டத்தில் ஈடுபட ஐந்து நாட்களாக இருளில் மூழ்கிக்கிடந்தது ஆந்திரா. மருத்துவமனைகள், மின்சார ரயில்... என எதுவும் இயங்கவில்லை.விஜயன்நகரம்தான் ஒன்றுபட்ட ஆந்திராவுக்காக தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்தது. அந்தப் பகுதி முழுவதும், சுமார் ஐந்து நாட்கள் 144 தடை உத்தரவின் கீழ் இருந்தது. அந்தப் பகுதியில் உள்ள ஆந்திர காங்கிரஸ் காரியக் கமிட்டித் தலைவரும், விஜயன்நகர எம்.எல்.ஏ-வுமான 'போட்சா சத்திய நாராயணா’வின் வீடு மற்றும் கல்லூரிகள் தாக்கப்பட்டன. ஒரு வங்கியும், சீக்கியர்களின் குருத்துவாராவும் எரிக்கப்பட்டன. இறுதியில் ஆந்திர முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, தற்போது நிலைமை ஓரளவுக்குச் சீரடைந்துள்ளது. அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்பியுள்ளனர். ஆனால், போராட்டங்கள் ஓயவில்லை.




தெலங்கானா முன்கதைச் சுருக்கம்

இந்தியாவை வெள்ளையர்கள் நேரடியாக ஆட்சி செய்ததுபோல், ஹைதராபாத்தை ஆட்சி செய்யவில்லை. ஹைதராபாத் சமஸ்தானம், நிஜாம் மன்னர்களின் நேரடி நிர்வாகத்தில்தான் இருந்தது. நிஜாம் மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஹைதராபாத்தும் அதையட்டிய ரங்கா ரெட்டி, வாரங்கால், மகபூப் நகர், கம்மம், அதிலாபாத், கரீம் நகர், நல்கொட்டா, மெதக் பகுதிகள்தான் தெலங்கானா. இந்தப் பகுதிகளைத் தவிர்த்து, தெலுங்கு பேசும் மக்கள் உள்ள மற்ற பகுதிதான் ஆந்திரா. இது, வெள்ளையர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தது. அதனால், ஆந்திர மக்கள் கல்வி, தொழில், கட்டமைப்பு, மொழி, பண்பாடு போன்றவற்றில் முன்னேற்றம் கண்டனர். ஆனால், 500 ஆண்டுகளாக நிஜாம்களின் கட்டுப்பாட்டில் அடக்குமுறை ஆட்சியில் இருந்த தெலங்கானா மக்களுக்கு, அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.

இதனால், நிஜாம் மன்னர்களுக்கு எதிராக தெலுங்கானா மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன் விளைவாக, நிஜாம் மன்னரும் அவருடைய ராசாக்கர் படைகளும் கதிகலங்கிப்போனார்கள். அந்த நேரத்தில், சமஸ்தானங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நேருவும் வல்லபாய் படேலும், படைகளை அனுப்பி ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைத்துக்கொண்டனர். அப்படி இணைக்கப்பட்ட மாநிலம்தான் 'ஹைதராபாத்’. 1956-ம் ஆண்டு வரை ஹைதராபாத்தை தலைநகராகக்கொண்டு தெலங்கானா தனி மாநிலமாகவும், கர்னூலைத் தலைநகராகக் கொண்டு ஆந்திரா தனி மாநிலமாகவும்தான் இருந்தன. 'தெலுங்கு மொழி பேசும் பகுதிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து 'ஆந்திரா’ என்ற ஒரே மாநிலமாக உருவாக்க வேண்டும்’ என்ற கோரிக்கை தெலுங்கு மக்களிடம் பரவலாக எழுந்தது. அதனுடன், சென்னையை இணைக்கக் கோரி பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் உண்ணாவிரதம் இருந்து உயிரைவிட்டார். 'ஒரே மொழி பேசும் மக்களுக்கு இரண்டு மாநிலங்கள் தேவையற்றது’ என்று கூறி, தெலங்கானா ஆந்திராவுடன் இணைக்கப்பட்டு ஒரே மாநிலமாக ஆனது. 'ஒரே மொழி பேசும் ஒரே மாநில மக்கள்’ என்ற அடையாளத்துடன் ஆந்திர மக்கள் அறியப்பட்டாலும், உள்ளுக்குள் பிளவு இருந்துகொண்டேதான் இருந்தது.

முல்க்கி என்றால் என்ன?
முல்க்கி’ என்பது உருதுச் சொல். இந்தச் சொல்லுக்கான அர்த்தம், உள்ளூர்வாசி. தமிழகத்தில் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதுபோல், அங்கு உள்ளூர்வாசி (தெலங்கானாவாசி) வெளியூர்வாசி (ஆந்திரப் பகுதியைச் சேர்ந்தவர்கள்) என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதுதான் முல்க்கி சட்டம். நிஜாம் மன்னர்கள் காலத்தில் பழக்கத்தில் இருந்த இந்தச் சட்டத்தின்படி, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி போன்றவற்றில் 'முல்க்கி’க்குத்தான் முதல் இடம். ஒருவர் முல்க்கி அந்தஸ்தைப் பெற, உள்ளூரில் (ஹைதராபாத்தில்) 15 வருடங்கள் வசித்திருக்க வேண்டும் என்று இருந்தது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, முல்க்கி சட்டம் தெலங்கானாவில் இல்லை. ஆனால், தெலங்கானாவும் ஆந்திராவும் இணைந்து ஒரே மாநிலமாக உருவானபோது, தெலங்கானா மக்கள் 'முல்க்கி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று கேட்டனர். அதன்படி தெலங்கானாவுக்கு முல்க்கி சட்டம் கொண்டுவரப்பட்டு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் அவர்களுக்கு முன்னுரிமை கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. ஆனால், ஆந்திராவைச் சேர்ந்தவர்களே அதிகாரத்தில் தொடர்ந்து இருந்ததால், அவர்கள் 'முல்க்கி’க்கான காலக்கெடுவை குறைத்து ஏழு ஆண்டுகள் ஆக்கினர். தற்போது அதை நான்கு ஆண்டுகளாகக் குறைக்கும் முயற்சி நடக்கிறது. இதைப் பயன்படுத்தி, ஆந்திராவில் இருந்து ஹைதராபாத்தில் குடியேறுபவர்கள், ஏழு ஆண்டுகளில் முல்க்கி அந்தஸ்தை பெற்று, வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி வாய்ப்புகளைப் பறித்துக்கொள்கின்றனர் என்பது தெலங்கானா பகுதி மக்களின் குற்றச்சாட்டு. அதை நிரூபிப்பதுபோல், 45 ஆயிரம் முல்க்கிப் பணியிடங்களை ஆந்திர மாநிலத்தவர் ஆக்கிரமித்து இருந்தனர். இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது, மேல்முறையீடு வரை சென்று போராட வேண்டி இருந்தது. வழக்கில் வெற்றி கிடைத்தாலும், இந்த ஆக்கிரமிப்பு ஓயவில்லை.

கவனிக்கப்படாத ஜென்டில்மேன்

1956-ம் ஆண்டு ஒன்றுபட்ட ஆந்திரா உருவானபோது, ஆந்திர முதலமைச்சர் கோபால் ரெட்டியும், தெலங்கானா முதலமைச்சர் ராமகிருஷ்ண ராவும் உடன்படிக்கை ஒன்றை செய்துகொண்டனர். இதை ஜென்டில்மேன் அக்ரிமென்ட் என்று கூறுகின்றனர். இதன்படி, தெலுங்கானாப் பகுதிகளின் முன்னேற்றங்களைக் கண்காணிக்க மண்டல நிலைக்குழு ஒன்றை ஏற்படுத்துவது. அந்த நிலைக் குழுவின் உறுப்பினர்களாக தெலங்கானா சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்தக் குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்க்கி சட்டம் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். மாநிலத்தின் மொத்த வரவு செலவுகளை மக்கள் தொகை அடிப்படையில் இரு பகுதிகளும் பிரித்துக்கொள்ளவேண்டும். ஒரு பகுதியைச் சேர்ந்தவர் முதலமைச்சராக இருந்தால், மற்றொரு பகுதியைச் சேர்ந்தவர் துணை முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 சாரங்கள் வாக்குறுதிகளாக அளிக்கப்பட்டன. ஆனால் 1956-க்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்த நிலைக்குழுவின் அதிகாரம் பறிக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

கதாநாயகன்  வில்லன்

தெலங்கானா குறித்தும் தெலங்கானா மக்கள் குறித்தும் ஆந்திர மக்களுக்கு எப்போதும் சில கருத்துகள் உள்ளன. சாதாரண பொதுஜனத்தில் இருந்து இந்தக் கருத்துருவாக்கம், அரசியல், சினிமா, அன்றாட வாழ்க்கை முறை வரை அனைத்திலும் நீடிக்கிறது.தெலங்கானாக்காரர்கள் பேசுவது தெலுங்கு மொழியே கிடையாது. தெலங்கானாக்காரர்கள் சோம்பேறிகள், குற்றவாளிகள், முட்டாள்கள் என்பது போன்ற நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துகள். தெலுங்குத் திரைப்படங்களை சற்று கவனித்தாலே இந்தச் சித்திரிப்புகள் தெளிவாக விளங்கும். தெலுங்குப் படங்களில் கதாநாயகனாக இருப்பவர் ஆந்திராவைச் சேர்ந்தவராகவும், வில்லன்கள் குற்றவாளிகள் தெலங்கானாப் பகுதி ஆட்களாகவும் காண்பிக்கப்படுவர்.



No comments:

Post a Comment