Search This Blog

Sunday, October 20, 2013

கார்ப்பரேட் விவசாயம் - ஜேக் ஹின்மேன் (Jack Heinemann).

''மரபணு மாற்று விதைகள்தான், எதிர்கால மனித இனத்துக்கு முழுமையாகச் சோறிடும். அதை விட்டால், நமக்கு வேறு வழியே இல்லை. அதை எதிர்ப்பவர்கள், முட்டாள்கள்'' -இப்படி அமெரிக்காவின் ஊதுகுழலாக உளறிக் கொட்டியபடியே இருக்கிறார்... பாரம்பரியம் மிக்க பாரத கண்டத்தின் வேளாண்மைத் துறை அமைச்சர் சரத் பவார். இதற்கு, எப்போதும் தன் ஆசிகளை அள்ளி வழங்கியபடியே இருக்கிறார்... அமெரிக்காவின் நட்டுவாங்கத்துக்கு ஏற்ப, நடனமாடிக் கொண்டிருக்கும் நம் பிரதமர் மன்மோகன் சிங். அமெரிக்க தயாரிப்பான மரபணு மாற்று விதைகளுக்கு எதிராக, கொஞ்சம்போல எதிர்ப்புக் காட்டிய காரணத்தால், சுற்றுச்சூழல் துறையின் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், அதிலிருந்து வேறு துறைக்கு விரட்டி அடிக்கப்பட்டதே இதற்கு சரியான சாட்சி!
 
இப்படி அமெரிக்காவின் அடிவருடிகளாக மாறி, இங்கிருக்கும் சில விஞ்ஞானிகளும்... பல அரசியல்வாதிகளும் அந்த அடாவடி மரபணு மாற்றுத் தொழில்நுடபத்துக்கு வால் பிடித்தபடியே இருக்கும் சூழலில்... அத்தனை பேருக்கும் 'சம்மட்டி அடி' கொடுப்பதுபோல.. தன்னுடைய ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டு, இயற்கை விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் தன்னம்பிக்கை வெள்ளத்தைப் பாய்ச்சியிருக்கிறார்... நியூசிலாந்து நாட்டின் பேராசிரியர் ஜேக் ஹின்மேன் (Jack Heinemann).
 
''உலக உணவுத் தேவையை உள்ளூர் விதைகளில் உருவான தானியங்கள் மட்டும்தான் எப்போதும் தீர்த்து வைக்க முடியும். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகளை மட்டுமே நம்பி நடைபெறும் கார்ப்பரேட் கம்பெனி விவசாயம், மனிதர்களின் உடல் நலனுக்கு கெடுதலைத்தான் செய்து கொண்டிருக்கிறது. மரபணு மாற்று விதைகளின் பிதாமகன்களான அமெரிக்க கம்பெனி விவசாய முறையில், ஆண்டுக்காண்டு ரசாயன உரத்துக்கான செலவு கூடுகிறது. பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகளின் பயன்பாடும் அதிகரித்து, ஒட்டுமொத்தத்தில் செலவு அதிகரிப்பதுடன், உணவுப் பொருட்களில் விஷத்தன்மையும் கூடிக்கொண்டே போகிறது. ஆனால், விளைச்சல் திறன் மட்டும் ஒரே இடத்தில் உட்கார்ந்து விட்டது. மாறாக, ஐரோப்பாவில், பாரம்பரிய விதைகளைக் கொண்டு, இயற்கை முறையில் செய்து வரும் விவசாயத்தில், செலவு குறைந்து, விளைச்சல் பெருகி வருகிறது'' என்று நியூசிலாந்து நாட்டில், கேன்டர்பரி (Canterbury) பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதம்  நடைபெற்ற ஆய்வரங்க மாநாட்டில்,  தன்னுடைய ஆய்வு முடிவுகளை எடுத்து வைத்திருக்கிறார் ஜேக் ஹின்மேன்.

ஜேக், தன்னுடைய ஆய்வில் கண்டறிந்த விஷயங்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறது.... 'நிலைத்த, நீடித்த வேளாண்மைக்கான அகில உலக இதழ்' (International Journal of Agricultural Sustainability).
 
'புதிய உயிரியல் தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பின் மூலாதாரத்தை அழித்துவிடும் என்பதுதான் உண்மை. உதாரணமாக... 1949-ம் ஆண்டு, சீனாவில் 10 ஆயிரம் கோதுமை ரகங்கள் இருந்தன. 1970-ம் ஆண்டு 1,000 ரகங்கள் மட்டுமே மிஞ்சின. கடந்த நூற்றாண்டில் இருந்த முட்டைகோஸ் ரகங்களில் 95%; மக்காச்சோளத்தில் 91%; துவரையில் 94%; தக்காளியில் 81% ரகங்கள் அழிந்து விட்டன. இதெல்லாம், புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்ட பிறகு ஏற்பட்ட பரிதாப நிலை.

விதை, விவசாயிகளின் சொத்து. ஆனால், மரபணுமாற்றுத் தொழில்நுட்ப விதைகள் வந்த பிறகு, விதைகள் தனியுடமை ஆகிவிட்டன. இது விவசாயிகளை விதைச் சேமிப்பிலிருந்து விரட்டியடித்து விட்டது. உலக உணவு உற்பத்திக் கொள்கை, பசியைப் போக்குவதாக இருக்க வேண்டும். ஆனால், அது தற்போது லாப நோக்கம் கொண்ட கொள்கையாக மாறி, அதில் வணிக வெறி புகுந்து விட்டது. இதனால், தனிப்பயிர் (Monoculture) விவசாயம் என்பதே தற்போது முன்னெடுக்கப்படுகிறது. அதாவது, ஒரேமாதிரியான பயிரையே பெரும்பாலான விவசாயிகளும் விளைவிக்க வற்புறுத்தப்படுகிறார்கள். ஆனால், ஏழை, பணக்காரன் என்று இல்லாமல், எல்லா தரப்பினரையும், எல்லா நாட்டினரையும் பல் பயிர் கலப்பு விவசாயம்தான் (Bio-diversity) காப்பாற்றும். பாரம்பரிய இயற்கை விவசாயம்தான் நிலைத்து நின்று நீடித்த விளைச்சலைக் கொடுக்கும் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும்' என்று நெற்றிப்பொட்டில் அடித்தது போல தன் ஆய்வு மூலம் புரிய வைத்திருக்கிறார் ஜேக்.

ஜேக் மற்றும் அவருடைய குழுவின் ஆய்வறிக்கை, செப்டம்பர் 2013-ல் நடைபெற்ற ஐ.நா. வணிக மேம்பாட்டு கருத்தரங்கில் (United Nation Conference on Trade and development) முன் வைக்கப்பட்டு கவலையோடு விவாதிக்கப்பட்டுள்ளது.

பிறக்கப்போகும் குழந்தையின் கண்கள், முடி இவற்றையெல்லாம்கூட விரும்பிய நிறத்திலும், வடிவத்திலும் மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் மூலமாக மாற்றியமைத்துக் கொள்ளும் அளவுக்கு 'அழிவியல் போதை'யில் வெறி கொண்டு அலையும் அமெரிக்காவுக்கு... இதெல்லாம் உறைக்குமா என்ன?

கம்பெனிகளின் இயந்திர விவசாயம், விவசாயிகளை அழிக்கிறது என்பதற்காக ஆதாரம் தேடி அலைய வேண்டியது இல்லை... இந்தியாவே சாட்சி. 1970-களில் பெரிதாகப் பேசப்பட்ட 'பசுமைப் புரட்சி' தோற்றுப்போய், விவசாயிகளைக் கடனில் தள்ளியது. தற்கொலைக்கு விரட்டுகிறது. அழிவிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல், ஆட்சியாளர்கள் இன்று இரண்டாம் பசுமைப் புரட்சியை (GMO) கையில் எடுத்துள்ளனர். பசுமைப் புரட்சியின் முதல் களமான பஞ்சாப், புற்றுநோய்களின் பிறப்பிடமாகி விட்டது இன்று. ஐந்து நதிகள் பாய்ந்த பஞ்சாப்பில் நீர் பற்றாக்குறை நிலவுகிறது. நிலம், நீர் அனைத்தும் நஞ்சாகி விட்டது. மண் மலடாகி விட்டது. இதுதான் அந்த மாநிலத்துக்கு பசுமைப் புரட்சி கொடுத்த பரிசு.

 
ஆட்சியாளர்களே... அதிகார வர்க்கங்களே... அமெரிக்கா என்பது பெரு வியாபாரிகள் நிறைந்த நாடு. அவர்கள் ஆயுதங்கள், தொழில்நுட்பங்கள், உணவுகள் என்று தங்களின் கண்டுபிடிப்புகளையும், உற்பத்தியையும் உலகம் பூராவும் கூவிக் கூவி விற்கத்தான் பார்ப்பார்கள். வியாபாரி, அதைத்தானே செய்ய முடியும். அதற்காக, உலக நாட்டு மக்கள் மீது அக்கறை இருப்பதுபோலவும்... அந்தந்த நாடுகளின் விவசாயத்தின் மீது ஆர்வம் இருப்பது போலவும்... நடிக்கத்தான் செய்வார்கள். இதுவும் ஒரு வகை விளம்பர யுக்தியே! விளம்பரத்தைப் பார்ப்பதில் தவறில்லை. ஆனால், ஆராய்ந்து பார்க்காமல், அந்த விளம்பரம் முழுக்க முழுக்க உண்மை என்று நம்பி, அதன் பிடியில் வீழ்வதுதான் ஆபத்து. இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.... நம் ஆட்சியாளர்கள். ஓட்டுப்போட்டு உட்கார வைத்த ஒரே காரணத்துக்காக... நாட்டின் விவசாயத்தையும், மக்களையும் அமெரிக்க நிறுவனங்களிடம் அடகு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உணவு என்பது தொழிலாக மாற்றப்பட்டு, கார்ப்பரேட் உணவுத் தொழிற்சாலைகள் பெருகிவிட்ட நிலையில், இதன் எதிர்விளைவாக, எதிர்காலத்தில் உணவுத் தேவைக்காக... நாம் ஒவ்வொருவரும் கம்பெனிகளின் காலடியில் விழுவது ஒன்றுதான் வழி என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நிலைமை இப்படியே நீடித்தால்... இந்த உலகத்தை அந்த ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது!

தூரன் நம்பி 

 

No comments:

Post a Comment