Search This Blog

Friday, October 25, 2013

வங்கிகளை இணைப்பாரா?

 
உலகின் பழைமையான முக்கியமான வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கிக்கு 206 வயதாகிறது. இந்தியாவின் வங்கிச் சேமிப்புகளில் 22 சதவிகிதமும் வங்கிக் கடன்களில் 23 சதவிகிதமும் இதனுடையது. 15000 கிளைகள், 3 இலட்சம் பணியாளர்கள் 160 வெளிநாட்டுக் கிளைகள் என்று உலகின் எந்த வங்கிக்கும் இல்லாத பல பெருமைகள் கொண்ட இந்த வங்கியின் தலைவராகப் பதவி ஏற்றிருப்பவர் ஒரு பெண். அருந்ததி பட்டாச்சார்யா.
 
நமது பொதுத்துறை நிதிநிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் பதவியை சில ஆண்டுகளாகப் பெண்கள் வகித்து வருகிறார்கள். ஆனால், பாரத ஸ்டேட் வங்கிக்கு இந்திய அரசில், உலக வங்கிகள் அரங்கில் இருக்கும் முக்கியமான இடத்தினால் இந்தத் தலைமைப் பதவி தனிச் சிறப்பு பெறுகிறது. ஸ்டேட் வங்கி அதன் வரலாற்றில் பல திருப்புமுனைகளைச் சந்தித்த ஒரு நிறுவனம். ரிசர்வ் வங்கியிடமிருந்த அதன் பங்குகளை மத்திய அரசு தன்வசம் எடுத்து கொண்டது அதில் மிக முக்கியமானது. இதன் பின்னர் இதன் தலைவர்கள் நிதி அமைச்சகம் அமைக்கும் ஒரு கமிட்டியினால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஸ்டேட் வங்கியின் ஜாம்பவான்களான 4 தலைமை ஜெனரல் மானேஜர்களுக்கிடையேயான கடும் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர். பதவிக்காலம் 3 ஆண்டுகளாக இருக்கும் இந்தப் பதவிக்கு இன்னும் இரண்டே ஆண்டுகள் மட்டுமே பதவிக்காலம் இருக்கும் இவருக்கு பதவி நீட்டிப்புடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இவர் திறமையைச் சுட்டிகாட்டும் அளவுகோல்.பாரத ஸ்டேட் வங்கி வெறும் வங்கித்தொழில் மட்டும் செய்யாமல் நிதி நிறுவனங்களின் பல்வேறு பரிமாணங்களில் வளர்ந்து கொண்டுவரும் ஒரு வங்கி. அவற்றில் சில பகுதிகளான எஸ்.பி.ஐ. பொது காப்பீடு, செக்யூரிட்டிஸ், புதிய துணை நிறுவனங்களை உருவாக்குவது போன்ற சவாலான பணிகளில் இவர் பங்களிப்பு கணிசமானது. உலக அளவில் வங்கியின் பலதரப்பட்ட புதிய பணிகளில் இத்தகைய அனுபவம் பெற்ற பெண் அதிகாரிகள் மிகச் சிலரே; இந்த வாய்ப்புகளினால் ஃபார்ச்யூன் 500 என்ற உலகளவில் பட்டியலிடப்படும் நிறுவனங்களில் இடம் பெற்றிருக்கும் ஒரே பெண் தலைமை அதிகாரியும் இவரே.அமெரிக்கக் கிளைகளின் தலைமை அதிகாரியாக பணியாற்றிய போது இவர் செய்த நிர்வாகச் சீர்த்திருத்தங்கள் அங்கு இயங்கும் பல வெளிநாட்டு வங்கிகளின் கவனத்தை ஈர்த்தவை.பொதுவாக பெண் அதிகாரிகள் பெண் ஊழியர்களிடையே பாப்புலராக இருக்க மாட்டார்கள். அருந்ததி அதிலும் மாறுபட்டவராக இருக்கிறார். நமது வங்கித் துறையில் திருமணம், குடும்பம், குழந்தைகள், கணவரின் பணி போன்ற வகைகளினால் பணியைத் தொடர முடியாமல், வேலையை ராஜினாமா செய்தவர்கள் பலர். தகுதியும், திறமையும், நீண்டகால அனுபவமும் பெற்ற இவர்களின் ராஜினாமாவால் வங்கிக்கும் இழப்பு. இதைத் தவிர்க்க இவர் எஸ்.பி.ஐ. கேப்டல் மார்க்கெட் நிறுவனத்தில் கொண்டுவந்த திட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதன்படி பெண் பணியாளர்கள் 6 ஆண்டுக் காலம் இடைக்கால ஓய்வு எடுத்துக் கொண்டு பின்னர் பணியில் தொடரலாம். இது இப்போது வங்கியில் தொடரும் என ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
 
லாபம் குறைந்து, சந்தையில் பங்குகளின் மதிப்பு விழுந்திருக்கும் ஸ்டேட் வங்கியை நிமிர்த்த இவர் செய்யப்போவதை காண முதலீட்டாளர்கள் ஆவலோடு இருக்கிறார்கள். ஸ்டேட் வங்கியின் 7 துணை வங்கிகளையும் ஒன்றாக இணைப்பது மத்திய நிதி அமைச்சகத்தின் திட்டம். தொழிற்சங்கங்களின் எதிர்ப்புகளினால் இதை முழுவதுமாகச் செயலாக்க முடியவில்லை. இவர் இதை எப்படிச் செய்யப் போகிறார் என்பதைப் பார்க்க இந்திய வங்கித் துறையினர் காத்திருக்கின்றனர்.  

ரமணன்

No comments:

Post a Comment