Search This Blog

Tuesday, December 03, 2013

தாக்குப்பிடிக்குமா தூத்துக்குடி அனல்மின் நிலையம்?

 
சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற நகரங்களில் ஆறு ஏழு மணி நேரம் மின்வெட்டு தொடர்கிறது. குறிப்பாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள அலகுகள் பழுதாவதும் பத்திரிகைகளில் செய்தியாக வெளிவருகின்றன. சமீபத்தில் மூன்று அலகுகள் பழுதாயின. பின்னர் சரி செய்யப்பட்டன. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் என்ன பிரச்னை?
 
தூத்துக்குடி அனல்மின் நிலையம் தமிழகத்தில் அரசுக்குச் சொந்தமான பெரிய அனல்மின் நிலையம். அதில் கடந்த இரு மாதங்களில் மட்டும் 10 முறைக்கு மேல் பழுதுகள் ஏற்பட்டதால் தென்மாவட்டங்கள் அடிக்கடி இருளில் மூழ்கின.தூத்துக்குடி அனல்மின் நிலையம் தென்மாவட்டங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்குவகித்தது. காலப்போக்கில் முறையான பராமரிப்பு இல்லாததால் மின் உற்பத்தி குறையத் தொடங்கியது.தூத்துக்குடி அனல்மின் நிலையமானது வங்காள விரிகுடா கடலோரம் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு மிக அருகே அமைந்துள்ளது. இங்கு 210 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலமாக நாள்தோறும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அனல்மின் நிலையத்தின் 5 அலகுகளில் ஏதாவது ஒரு அலகு தொடர்ந்து பழுதாவது வாடிக்கையாகிவிட்டது. அனல்மின் நிலையத்தின் ஐந்து யூனிட்டுகளில் உள்ள கொதிகலன்கள் அனைத்தும் 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமையைக் கருத்தில்கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும். தற்போது பயன்படுத்தப்படும் நிலக்கரியில் சாம்பல் அதிகமாக வெளியேறுவதால்தான் குழாய்களில் அடிக்கடி ஓட்டை ஏற்படுகிறது" என்கிறது ஒரு தரப்பு.தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்திக்கான கொதிகலன்கள் எல்லாம் இந்தியாவில் கிடைக்கும் நிலக்கரியை மட்டுமே பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது நமது நாட்டில் நிலக்கரி போதுமான அளவில் கிடைப்பதில்லை. இதனால் மின் உற்பத்திக்காக வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவது கட்டாயமாகியுள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின்சார உற்பத்திக்காக இந்திய நிலக்கரி 75 சதவிகிதத்துடன், வெளிநாட்டு நிலக்கரி 25 சதவிகிதம் கலக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலக்கரிகளிலிருந்து குறைந்தது 19 சதவிகிதத்துக்குப் பதிலாக 40 சதவிகிதத்துக்கும் அதிகமான அளவில் சாம்பல் வெளியாகிறது. இந்தச் சாம்பல் கழிவுகள் கொதிகலன்களைச் சுற்றிப் படிவதால் அதில் அரிப்பு ஏற்பட்டு ஓட்டை விழுகிறது. அதனால், கொதிகலன்கள் அடிக்கடி பழுதாகி மின்உற்பத்தி முடங்கி விடுகிறது. 
 
கடந்த 1980ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட 3வது மின்உற்பத்தி அலகின் கொதிகலன்தான் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இந்த அலகில் மின் உற்பத்தி பாதிக்கப்படுவது அடிக்கடி நடக்கும் சம்பவமாகி விட்டது.  இந்த யூனிட்டின் கொதிகலன் மட்டுமல்லாது கொதிகலனுக்குத் தண்ணீர் கொண்டுவரும் குழாய்களும் பழுதாகி விட்டன. கொதிகலனில் சுமார் 52 மீட்டர் உயரம் கொண்ட 600 குழாய்களில் 20 முதல் 40 மீட்டர் வரையிலான பகுதிகளில் குழாயின் தாங்கும் திறன் 5.2 மில்லி மீட்டர் தடிமனில் இருந்து 2.2 மில்லி மீட்டர் தடிமனாகக் குறைந்துவிட்டது. இதுவே 3வது அலகின் அடிக்கடி பழுதுக்குக் காரணம் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து கொதிகலனுக்குத் தண்ணீர் கொண்டு வரும் 600 குழாய்களையும் புதியதாக அமைத்தால் இதனை முறையாகப் பழுதில்லாமல் இயக்க முடியும்" என்கின்றனர் இத்துறை நிபுணர்கள்.தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. தொடர்ச்சியாக இயங்குவதால், அவ்வப்போது சிறு சிறு கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனைச் சரிசெய்திடும் பணிகளை விரைவாக மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நான்காண்டுக்கு ஒருமுறை பழுதான குழாய்கள் மாற்றப்படுகின்றன. ஆண்டுக்கு ஒருமுறை 40 நாட்கள் பராமரிப்புப் பணிகள் செய்யப்படுகின்றன. முன்பிருந்தது போலல்லாமல் தற்போது அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி முழுத்திறன் அளவுக்கு உள்ளது" என்கிறார்கள் அரசுத் தரப்பில்.
 
எம்.பார்த்தீபன் சங்கர்

No comments:

Post a Comment