Search This Blog

Tuesday, December 03, 2013

அருள்வாக்கு - உபாயம் காண்க!


உலகியலில் செய்யும் எந்த அபிவிருத்தியும் நிலைத்து நிற்பதற்கான பயனும் பயனால் விளைவதான ஆனந்தமும் தரவில்லையென்பதைக் கண்கூடாகக் காண்கிறோம். இந்த அபிவிருத்தி தாற்காலிகமாகவே முடிவதாகவும் அதனைப் பெற மீண்டும் மீண்டும் போராடுவதாகவும் அப்போராட்டத்தில் பலவிதமான வார்க்க பேதப் போட்டி, பொறாமைகளும் சண்டைகளும் எழுவதாகவும் மொத்தத்தில் அமைதி குறைவதாகவே காண்கிறோம். 

இன்றையக் கண்டுபிடிப்புகளால் உலகியல் சுக சாதனங்கள் கணக்கின்றிப் பெருகிக் கொண்டே போவதில், எத்தனை பெற்றாலும் திருப்திப் பெறாமல் மேன்மேலும் அதே அறியாதவர்களாக இருக்கிறோம். ‘சுவரை வைத்தே சித்திரம்’ என்றபடி உடல்நலனை ஓம்பத்தான் வேண்டுமாயினும், ‘சித்திரம் தீட்டவே இச்சுவர்; உள்ளத்தின் உயர்வான உயிரின் நிறைவே அச்சித்திரம்’ என்பதையும் நாம் மறவாது பொன்னே போல் மனத்தில் பொதிந்து கொள்ள வேண்டும்.  மீண்டும் மீண்டும் நலிவும் அழுக்கும் உறும் உலகியல் சுவரைக் கெட்டிப்படுத்துவதும், அழகுபடுத்துவதுமான ஓய்யா முயற்சியிலேயே ஈடுபட்டு, அதோடு சேர்ந்துவரும் போட்டி, பொறாமைப் போராட்டத்தில் அமைதியிழந்து, மேன்மேலும் தேவை தேவையெனும் குறைவாழ்வில் வாணாளை வீணாளாக்குவதோடு முடிந்து விட்டோமாயின், நாம் ஆறறிவு பெற்றும் அறியாதாராகவே முடிந்த பரிதாபமாகத்தான் ஆகும்.குறைவாழ்வை நிறைவாழ்வாகவும், போராட்டப் பொறாமையை அன்பு வழியில் நின்று பெறும் அமைதியாகவும், வந்து வந்து மறையும் தாற்காலிக இன்பத்தை நிரந்தர ஆனந்தமாகவும் மாற்றும் உள்ளத்தின் உயர்வு என்ற சித்திரத்தைச் சுவரின் மீது தீட்டிக் கொள்வதற்கு உபாயம் காண்பதே நாம் செய்ய வேண்டுவது.

உள்ளவுயர்வை நல்கவல்ல அந்த உபாயம் நல்லொழுக்கமாம் தர்மமும், தெய்வ பக்தியும், ஆத்ம சிந்தனையும் திரிவேணியாகக் கலக்கும் மதவியலேயாகும்.

வலிவூட்டும் மூன்று மூலிகைச் சாறுகளின் கலவையான ‘திரிபலா’ என்றும் இம்மூன்று அங்கம் கொண்ட மதவியலைக் கூறலாம். அழியும் மூலிகைச் சாற்றினால் சித்திரம் தீட்டுவது போலன்றி, இந்த அழியாத சஞ்சீவினி மூலிகையால் மதவியல் சித்திரத்தை நாம் உலகியல் மீது தீட்டிக் கொண்டால், பிறவிப்பயன் பெற்று அமரமான பூரணவாழ்வின் பேரானந்தத்தைப் பெறுவோம்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment