Search This Blog

Tuesday, December 31, 2013

ஓ பக்கங்கள் - ஆம் ஆத்மியைப் பார்த்து மிரளும் பி.ஜே.பி. ஞாநி


தில்லியில் மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் அடுத்தடுத்து வென்று ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சி கூடத் தன்னை வீழ்த்திய ஆம் ஆத்மி கட்சியைக் கண்டு பயப்படுவதாகத் தெரியவில்லை. ஆனால் பி.ஜே.பி பேசுவதையும், செய்வதையும் பார்த்தால் அதுதான் ஆம் ஆத்மிக்கு அதிகம் நடுங்குவதாகத் தெரிகிறது.
தானாக முன்வந்து ஆதரவு அளிப்பதாகச் சொன்ன காங்கிரஸின் ஆதரவை ஏற்றுக்கொண்டு ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கடைசியில் ஒப்புக் கொண்டதை பி.ஜே.பி.யின் பல்வேறு தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆம் ஆத்மி மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டது என்கிறார்கள். முதலமைச்சர் கனவுடன் இருந்த பி.ஜே.பி. வேட்பாளர் ஹர்ஷ் வரதன், ஆட்சியை இழந்த ஷீலா தீட்சித்தை விடக் கோபமாகப் பேட்டிகள் அளிக்கிறார்.
அத்தனை பி.ஜே.பி.யினரும் ஆம் ஆத்மி காங்கிரஸுடன் கூட்டணி வைத்துவிட்டதே என்று புலம்பித் திட்டுகிறார்கள். இதைக் கூட்டணி என்று வேண்டுமென்றே திரும்பத் திரும்பச் சொல்லி பொய்யை நிஜமாக்கப் பார்க்கிறார்கள். இது கூட்டணி அல்ல என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் அறிவு நாணயம் இல்லாமல் அதைச் சொல்லி வருகிறார்கள்.
பி.ஜே.பி.யினரின் வாதத்தில் முக்கியமான அம்சம் என்ன என்று பார்ப்போம். ‘தில்லி மக்கள் தங்களுக்கும் ஆம் ஆத்மிக்கும் போட்ட வோட்டு எல்லாம் காங்கிரஸுக்கு எதிராக, காங்கிரசை அடியோடு அகற்றப் போட்ட வோட்டுதான்’ என்பது அவர்கள் வாதம். இது முழு உண்மையல்ல. ஆம் ஆத்மிக்கு விழுந்த வோட்டுக்களில் பி.ஜே.பி.க்கு எதிரான வோட்டும் கலந்தே இருப்பதாகவே பார்க்க வேண்டும். ஏனென்றால் ஆம் ஆத்மிதான் இரு கட்சிகளையுமே எதிர்ப்பதாகத்தான் கூறிப் பிரசாரம் செய்தது.
இருந்தாலும் ஒரு வாதத்துக்காக அத்தனை வோட்டும் காங்கிரஸை எதிர்ப்பதற்கானது என்றே வைத்துக்கொள்வோம். அப்படிப் பார்த்தால், மக்கள் நிராகரித்த காங்கிரஸின் ஆதரவைக் கொண்டு ஆம் ஆத்மி ஆட்சி அமைப்பது, நிராகரிக்கப்பட்ட காங்கிரஸுக்கு மறுபடியும் ஆட்சி மீது கட்டுப்பாடு செலுத்த பலம் கொடுப்பதாகிறதே என்பதுதான் பி.ஜே.பி.யின் கேள்வி.
இப்படி நடக்காமல் இருக்க பி.ஜே.பி. என்ன செய்திருக்க வேண்டும்? அதுதான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும். அதற்குத்தான் அதிக எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். ஆனால் போதுமான எண்ணிக்கை பலம் இல்லாததால் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்று சொல்லி நழுவியது. அதற்குப் பதில் அது என்ன செய்திருக்க வேண்டும்? நம் இருவருக்கும் விழுந்த வோட்டு எல்லாமே காங்கிரஸ் எதிர்ப்புதானே? அதனால் நீங்கள் எங்களை வெளியிலிருந்து ஆதரிக்க முடியுமா என்று ஏன் ஆம் ஆத்மியைக் கேட்டிருக்கக்கூடாது? அப்படி வெளி ஆதரவுடன் தான் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்று வைத்துக்கொள்வோம்.
அடுத்த வழி என்ன? ஆம் ஆத்மி ஆட்சியை அமையுங்கள். நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம் என்று பி.ஜே.பி. சொல்லியிருக்கலாமே. அப்படிச் செய்திருந்தால் காங்கிரஸுக்கு எந்தப் பிடிமானமும் கிட்டியிராதே. ஆனால் பி.ஜே.பி. என்ன செய்தது?
அருண் ஜெட்லிதான் முதன் முதலில் ஆம் ஆத்மி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம் என்ற யோசனையையே முன்வைத்தார்.
அது மட்டுமல்ல. அப்படிச் செய்யத் தயங்கிய ஆம் ஆத்மி கட்சியினரை ‘மக்கள் அளித்த பொறுப்பை ஏற்காமல் தட்டிக் கழித்து நழுவுபவர்கள்’ என்று கடுமையாகத் தொடர்ந்து விமர்சனம் செய்து கொண்டே இருந்தார்கள். அந்த வாரங்களின் தினசரி டி.வி.
சேனல் பேட்டிகளை எடுத்துத் திரும்ப ஓட்டினால், இது தெளிவாகத் தெரியும். அதே ஆசாமிகள்தான் இப்போது ஆம் ஆத்மி காங்கிரஸ் ஆதரவை ஏற்க முடிவு செய்த அடுத்த நிமிடத்திலிருந்து ‘இது மக்களுக்குத் துரோகம்’ என்றும் ‘இது கூட்டணி’ என்றும் அவதூறுப் பிரசாரம் செய்கிறார்கள்.
அதிக இடம் பெற்ற இவர்களும் ஆட்சி அமைக்க மாட்டார்கள். ஆட்சி அமைக்கும்படி இவர்களே தூண்டிய ஆம் ஆத்மி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தால் அதையும் தவறு என்பார்கள். அப்படியானால் என்னதான் தில்லியில் நடக்க வேண்டும்? ஆம் ஆத்மி முதலில் சொன்னது போல இன்னொரு தேர்தலா? அதுதான் பி.ஜே.பி.யின் நிலை என்றால், ஏன் பி.ஜே.பி. அதை அறிவித்துவிட்டு தங்கள் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பதவி ஏற்ற மறு நிமிடமே ராஜினாமா செய்துவிடுவார்கள் என்று அறிவித்து தேர்தலை நடத்த நிர்ப்பந்திக்கக்கூடாது?
அதையும் செய்ய பயம்தான். அதனால்தான் ஆம் ஆத்மி மீது அத்தனை கோபமும். ராகுல் காந்தி மட்டுமே எதிரியாக இருந்தால் பி.ஜே.பி.க்கு வசதி. முட்டாள், மடையன், உதவாக்கரை என்று ராகுலை வசைபாடி மோடி டயருக்குக் காற்றடிக்கலாம். ஆனால் அரவிந்த் கேஜரிவாலுக்கெதிராக அப்படி எதுவும் செய்தால் பருப்பு வேகாது.
ஏற்கெனவே பல மாநிலங்களில் பி.ஜே.பி.க்கு எந்தச் செல்வாக்கும் இல்லை; மோடிக்கு அங்கே அலை என்ன, சின்ன நீர்க்குமிழ் கூட இல்லை. மோடி அலையை மீடியா இயந்திரத்தைப் பயன்படுத்தி வீசச் செய்யும் மாநிலங்களிலும் தில்லியில் மோடி அலை இல்லாமற்போன செய்தி பரவும்போது மோடிக்கான ஈர்ப்பு கணிசமாகக் குறையவே செய்யும். இந்தக் கோபத்தில்தான் ஆம் ஆத்மி கட்சியையும் அரவிந்த் கேஜரிவாலையும் திட்டித் தீர்க்கிறார்கள். காங்கிரஸ் நூறாண்டுகளில் பல எதிர்ப்பு இயக்கங்களைக் கண்டு சமாளித்து அழித்து எதிர்நீச்சல் போட்ட கட்சி. அது நிதானமாகவே அழிவு நடவடிக்கைகளில் ஈடுபடும். இப்போது அதன் பலவீனத்தால் அதிகம் செய்ய முடியாவிட்டாலும் செய்யாமலும் இராது. பகையாளியை உறவாடிக் கெடுப்பதும் அரசியல் உத்திதான்.
தில்லியில் ஆம் ஆத்மி கட்சி நடந்துகொண்ட விதம் என்ன? பி.ஜே.பி. செயல்படும் முறை என்ன? ஆம் ஆத்மி காங்கிரஸுடன் எப்போதும் கூட்டணி அமைக்கவே இல்லை. ஊழலுக்குப் புகழ்பெற்ற அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளுடனும் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு சுகம் கண்ட கட்சிகள் பி.ஜே.பி.யும் காங்கிரஸும்தான். ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க யார் ஆதரவையும் கேட்கவே இல்லை. காங்கிரஸ் தானாகவேதான் முன்வந்து ஆதரவை அறிவித்தது. ஆம் ஆத்மி கட்சி தன் 18 கொள்கைகளைப் பற்றி இரு கட்சிகளின் கருத்து என்ன என்று இருவரையும்தான் கேட்டது. அதற்கு காங்கிரஸாவது பதில் அனுப்பியது. பி.ஜே.பி. பதிலே சொல்லவில்லை. அதன்பின்னரும் ஆம் ஆத்மி மக்களிடம் சென்று கருத்துக் கணிப்பு செய்த பின்னர்தான் ஆட்சி அமைக்க முன்வந்திருக்கிறது.
இந்தக் கருத்துக் கணிப்பையும் பி.ஜே.பி. கிண்டல் செய்தது. அதுதான் தில்லி மக்கள் முன்னரே கங்கிரஸை நிராகரித்து வோட்டுப் போட்டுவிட்டார்களே, திரும்ப எதற்குக் கருத்துக் கணிப்பு என்று. தனியே தாங்கள் மட்டுமாக ஆட்சி அமைப்போம் என்று சொல்லி ஆதரவு கேட்டுப் பிரசாரம் செய்த பின்னர் இப்போது வெளி ஆதரவுடன்தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை வந்ததும் அதற்கு மக்கள் ஆதரவு உண்டா, இல்லையா என்று ஆம் ஆத்மி கேட்டது ஆரோக்கியமான நடவடிக்கையே ஆகும்.
இப்படி எதற்கெடுத்தாலும் கருத்துக் கணிப்பு கேட்பீர்களா, எல்லையில் சீனா ஆக்ரமித்தால் அத்துடன் யுத்தம் நடத்தலாமா என்று கருத்துக் கேட்டுக் கொண்டிருப்பீர்களா என்று ஒரு பி.ஜே.பி. பிரகஸ்பதி கேட்டார். கேட்கலாம். தப்பில்லை. யுத்தம் நடத்தி ஆட்சேதம், பொருட்சேதம் செய்வதைவிடப் பேச்சு வார்த்தை நடத்தித் தீர்வுகாணுங்கள் என்று சொல்லும் உரிமை மக்களுக்கு எப்போதும் இருக்கிறது. ஆனால் அதை யாரும் மக்களிடம் வந்து கேட்பதுதான் இல்லை. ராஜபட்சே அரசுக்கு ஆயுத உதவி செய்யலாமா என்று இந்திய அரசு கருத்துக் கணிப்பு செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று யோசிப்பது நாட்டுக்கு நல்லது. அப்படிப்பட்ட நிலைகள் வர வேண்டும்.
முக்கியமான கொள்கைப் பிரச்னைகளிலும், புது நடவடிக்கைகளுக்கும் மக்கள் கருத்தைக் கேட்டு வோட்டெடுக்கும் ரெபரெண்டம் முறை ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் சட்டப் பூர்வமாகவே உள்ளது. இந்தியாவிலும் அப்படி ஒரு சட்ட நிலைமை வரவேண்டும். ஆம் ஆத்மி கட்சி அரசியலில் இப்படி மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிப்பதன் அடையாளமாகவே இந்தக் கருத்துக் கணிப்பைப் பார்க்கலாம்.
இதுவரை ஆம் ஆத்மி கட்சி எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் இந்திய அரசியலுக்குத் தேவையான ஆரோக்கியமான மாற்றங்கள்தான். பகிரங்கத்தன்மை, நேரடியாக மக்களுடன் உரையாடிக் கருத்துக் கேட்பது, அரசு நிர்வாக வீண் பந்தாக்களை (செக்யூரிட்டி, ரெட் லைட், சைரன்) ஒழிப்பது எல்லாம் இதரக் கட்சிகள் கற்க வேண்டிய பாடம்.
அடுத்த கட்டமாக ஆம் ஆத்மி கட்சி எப்படிப்பட்ட கட்சியாக மலரும் என்று இப்போது சொல்ல முடியாது. அசாம் கணபரீஷத் இயக்கமும் இளைஞர் இயக்கமாகத் தொடங்கி கேஜரிவால், சிசோடியா போல, மஹந்தா, புக்கான் தலைமையில் நடந்து கடைசியில் இரு தலைவர்களின் பிளவாலும் வேறு பல காரணங்களாலும் சிதைந்தது. கேஜரிவாலோ, ஆம் ஆத்மியினரோ இன்னும் நம் நாட்டின் பல முக்கிய பிரச்னைகளில் அவர்களின் நிலைப்பாடு என்ன என்று சொல்லவில்லை. ஊழல் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். தொழில்வளர்ச்சியில் அரசு பங்கு, தனியார் பங்கு, கூட்டுப் பொருளாதாரம், சந்தைப் பொருளாதாரம், விவசாயம், சுற்றுச்சூழல், இட ஒதுக்கீடு, வெளியுறவுக் கொள்கை, இலங்கைத் தமிழர் நிலை இதுபோன்ற பல விஷயங்களில் ஆம் ஆத்மியின் நிலைப்பாடு என்ன என்பது முக்கியமானது. அவையெல்லாம் தெரியவரும் போதுதான் அதன் வளர்ச்சியோ தளர்ச்சியோ உறுதி செய்யப்படும்.

No comments:

Post a Comment