Search This Blog

Wednesday, December 08, 2010

அழிவை நோக்கி தமிழகம் !

தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் சதவிகிதம் 40 ஆகும். கல்வியறிவில்லாதவர்களின் சதவிகிதம் 43 ஆகும். இதோ இன்னொரு புள்ளிவிவரம். இந்தியாவின் மொத்த மது விற்பனையில் 40 சதவிகிதம் தமிழகத்தில் மட்டும் விற்பனையாகிறது.

வேலையில்லாத் திண்டாட்டத்திலும் அறியாமையிலும் இந்தியா உலகத்தில் முதன்மை வகிக்கிறது. தனிநபர் வருமானத்தில் இந்தியாவைவிடச் சிறிய நாடுகள் பலமடங்கு அதிகமான வருமானம் பெறுகின்றன. ஜப்பானில் 23,800 டாலர், சிங்கப்பூரில் 10,450 டாலர், தைவானில் 8,500 டாலர், மலேசியாவில் 2,160 டாலர். ஆனால், இந்தியாவில் வெறும் 340 டாலர் மட்டுமே. இயற்கை வளத்திலும் மனித எண்ணிக்கையிலும் இந்தியாவைவிட மிகச்சிறிய இந்த நாடுகள் எங்ஙனம் பொருளாதாரத்தில் நம்மைவிட வலிமை வாய்ந்த நாடுகளாக மாறின என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மக்களின் வறுமையையும் அறியாமையையும் போக்கும் வகையில் திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றுகிற பொறுப்பு அரசைச் சார்ந்தது. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதும் சுயசார்புடன் வாழ்வதற்கு வேண்டிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதும் அரசின் முக்கியக் கடமைகளாகும். கல்வி,மருத்துவம் போன்ற துறைகளில் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டிய பெருங்கடமை அரசைச் சார்ந்ததாகும். தனிநபர்களின் வருமானத்தைப் பெருக்குவதற்கான வழிவகைகளை அரசு செய்தால் அவரவர்களின் தேவைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப பொருள்களை வாங்கிக்கொள்ள முடியும். ஆனால், அரசோ இலவசம் என்ற பெயரில் மக்களைச் சோம்பேறிகளாகவும் பிச்சைக்காரர்களாகவும் மாற்றிக்கொண்டிருக்கிறது.

 இலவசச் சேலை, வேட்டி, இலவசச் சீருடை, இலவசப் பாடப்புத்தகம், இலவச சைக்கிள், எரிவாயு அடுப்பு, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, பெண்களுக்குத் திருமண உதவித் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச மருத்துவ வசதி, இலவச வீட்டுமனைத் திட்டம், இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், குடிசைகளைக் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என இலவசங்களை வாரி வாரி வழங்குவதில் தமிழக அரசு முனைந்திருக்கிறது. இத்தகைய இலவசங்களால் மக்களுக்குக் கிடைப்பது என்ன? ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இலவசத்தின் பின்னணியில் கிடைக்கும் ஆதாயம் என்ன என்பதை ஆராய்வோமானால் திடுக்கிடும் உண்மைகளை நாம் உணர்வோம்.

கல்வி:

காமராஜ் ஆட்சிக்காலத்தில் 12-ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. அடுத்தகட்டமாக கல்லூரிக் கல்வி வரை இதை நீடிக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது. ஆனால், இப்போது குற்றப்பின்னணியுள்ள அரசியல்வாதிகளின் சட்டத்துக்கு உள்பட்ட நூதன கொள்ளைத் தொழிலாக கல்வி மாற்றப்பட்டுவிட்டது. அரசு நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது கிராமப்புறப் பள்ளிகளே ஆகும். அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் ஆசிரியர் பற்றாக்குறையும், பெரும்பாலான கல்லூரிகளில் முதல்வர்கள் பற்றாக்குறையும் உள்ளன. பிற மாநிலங்களில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என்பதே கிடையாது. 1967-ம் ஆண்டுக்கு முன்பு ஆங்கிலோ-இந்தியக் குழந்தைகளுக்காக 3 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மட்டுமே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிறகு 1978-ம் ஆண்டு வரை இப்பள்ளிகளின் எண்ணிக்கை 34 ஆக மட்டுமே உயர்ந்தன.

ஆனால், இப்போது தமிழ்நாட்டில் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிகள் புற்றீசல் போலப் பெருகியுள்ளன.400-க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள், லட்சக்கணக்கில் பணம் கட்டிப் படிக்கிறார்கள். ஆனால்,  இந்தக் கல்லூரிகளில் போதுமான கட்டமைப்பு வசதிகளோ அல்லது ஆசிரியர்களோ இல்லை.
  புற்றீசல் போல தனியார் பள்ளிகளும், பொறியியல் கல்லூரிகளும் பெருகக் காரணம் என்ன? குறிப்பிட்ட கையூட்டுக் கிடைத்தால் யாருக்கு வேண்டுமானாலும் இதற்கான அனுமதி அளிக்கப்படுகிறது என்பது ஊரறிந்த ரகசியமாகும். இந்தப் பள்ளிகளும், கல்லூரிகளும் கல்வியை வணிகமாக்கிக் கொள்ளையடிக்கிறார்கள். இதன் விளைவாக, மத்திய அரசால் அங்கீகாரம் நீக்கப்பட்ட 44 பல்கலைக்கழகங்களில் 17 தமிழ்நாட்டைச் சேர்ந்தவை என்பது வெட்ககரமான உண்மையாகும். போதுமான ஆசிரியர்களும், கட்டமைப்புகளும் இல்லாமல், மாணவர்களின் கல்வி சீரழிந்து கொண்டிருக்கிறது. இந்த முக்கியப் பிரச்னை குறித்து அரசுக்குக் கொஞ்சமும் கவலையில்லை.

விவசாயிகளுக்கு இலவச மின்மோட்டார்:

1972-ம் ஆண்டில் விவசாயிகளின் போராட்டத்தை மிகக்கடுமையான முறையில் கருணாநிதி அரசு ஒடுக்கியது. பின்னர் 1990-ம் ஆண்டில் மீண்டும் பதவிக்கு வந்தவுடன் விவசாயிகளே கேட்காத சலுகையான இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். 5 ஏக்கருக்கு உள்பட்ட சிறு விவசாயிகளுக்கு மட்டுமல்ல, பெரும் விவசாயிகளுக்கும் இந்தச் சலுகை அளிக்கப்பட்டது. இலவச மின்திட்டம் வந்தபிறகு புதிய பம்புசெட்டுகளுக்கு மின்இணைப்பு கொடுப்பதையே அரசு நிறுத்திவிட்டது. விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் வழங்குவதுதான் உண்மையில் அவர்களுக்கு உதவுவதாகும். ஆனால், ஒருநாளில் சில மணி நேரங்கள் கூட அவர்களுக்கு மின்சாரம் வழங்கப்படுவதில்லை. இலவச மின்சாரம் என்பதற்கு அர்த்தம் இல்லாமலே போயிற்று. இந்த அழகில் சிறு, குறு விவசாயிகளுக்கு 14 லட்சத்து 67ஆயிரம் மின்மோட்டார்களை வழங்கப்போவதாகவும்  இந்த ஆண்டில் 2 லட்சம் மின் மோட்டார்கள் வழங்கப்படும் எனவும் தி.மு.க. அரசு அறிவித்துள்ளது.

இலவச மின்மோட்டார்கள் அளித்து என்ன பயன்? அவ்வளவுக்கும் மின்இணைப்புக் கொடுக்கும் வகையில் மின்சார உற்பத்தி இல்லை. மின்சாரம் அளிக்காமல் மின் மோட்டார்களைக் கொடுப்பது ஏமாற்றுவேலையாகும். மின்மோட்டார்களை வாங்குவதற்கு யாரோ சில உற்பத்தியாளர்களிடம் பேரம்பேசி உரிய கமிஷனைப் பெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. எனவே, இதைப் பகிர்ந்தளிக்க வேண்டுமென்று பம்புசெட், உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் வற்புறுத்தியிருக்கிறது.

இலவச தொலைக்காட்சிப்பெட்டித் திட்டம்:

 தமிழ்நாட்டில் அரசு 1 கோடியே 40 லட்சம் தொலைக்காட்சிப்பெட்டிகளை இலவசமாக வழங்கியுள்ளது.  இவ்வளவு பெருந்தொகையான தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கப்பட்டதில் பெறப்பட்ட கமிஷன் எவ்வளவு? தொலைக்காட்சிப் பெட்டியைக் கொடுத்தால் மட்டும் பெறுபவர்களுக்குப் பயனில்லை. அவர்கள் அதற்குக் கேபிள் இணைப்புப் பெற்றால்தான் விரும்பியவற்றைப் பார்க்க முடியும். அரசு கேபிள் நிறுவனம் மூலம் இலவசமாக இணைப்புக் கொடுக்கலாம். ஆனால், அரசு நிறுவனத்தைச் செயல்படவிடாமல் முடக்கிவிட்டார்கள். ஒரு தொலைக்காட்சிக்கு கேபிள் இணைப்புப் பெற மாதம்  100 முதல்  150 வரை கட்டணம் கட்டியாகவேண்டும். அரசு கொடுத்துள்ள இலவசத் தொலைக்காட்சிகளின் மூலம் மாதந்தோறும் சுமார் 250 கோடி ரூபாய் கேபிள் நிறுவனங்களுக்கு வசூலாகிறது. ஆண்டுக்குச்   சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகிறது. இந்தப் பணம் முதலமைச்சரின் பேரன்கள் நடத்தும் சுமங்கலி, ராயல் கேபிள் நிறுவனங்களுக்குப் போகிறது. மக்கள் வரிப்பணத்தில்  750 கோடிக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறோம் என்ற பெயரில் கொடுத்து அதன்மூலம் ஆண்டுக்கு  3 ஆயிரம் கோடிக்கு மேல் ஆதாயம் அடைகிறது முதலமைச்சரின் குடும்பம். இதைவிடப் பன்மடங்கு அதிகமான தொகை விளம்பரத்தின் மூலம் கிடைக்கிறது என்பது வேறு.


இலவச மருத்துவக் காப்பீடு:

தமிழக அரசின் இந்தத் திட்டத்துக்கு கடந்த ஆண்டு  501 கோடி ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் மாவட்டத் தலைநகரங்கள்தோறும் அரசு மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் பல மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரிகளோடு இணைந்த சிறந்த மருத்துவமனைகளாகும். ஆனால், தனிப்பட்ட மருத்துவமனைகளையே மக்கள் பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள். இந்த தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டும் இந்த ஆண்டு  415.43 கோடி காப்பீட்டு நிறுவனங்களின் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை அரசு மருத்துவமனைகளுக்குக் கிடைத்திருந்தால் அவைகள் மேலும் தங்களின் வசதிகளைப் பெருக்கிக்கொண்டிருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்ய அரசு விரும்பவில்லை. தனியார் மருத்துவமனைகளை இத்திட்டத்துக்குத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அரசாங்கத்தில் உள்ளவர்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்கும். அரசு மருத்துவமனைகளிலிருந்து அது கிடைக்காது.


தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்:

ஊரகப் பகுதிகளில் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மக்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு வகுத்த திட்டம் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டமாகும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு  100- ஊதியம் விகிதம் 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். விவசாய வேலைகள் இல்லாத காலத்தில் ஏழைக் குடும்பங்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். ஏரி, குளம், தூர் எடுத்தல், வாய்க்கால் புதுப்பித்தல், சாலைகளைச் செப்பனிடுதல் போன்றவற்றை மக்கள் சக்தியைக் கொண்டு செய்வித்து அவர்களுக்கு அடிப்படை உணவுக்காகவாவது ஊதியம் கிடைக்கச் செய்வதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும். ஆனால், விவசாய வேலைகள் இருக்கும் காலத்திலும் ஏரி, குளம், கால்வாய் ஆகியவற்றைத் தூர் எடுப்பது, சாலைகள் செப்பனிடுவது போன்றவற்றைச் செய்வதுபோன்ற பாவனைகாட்டி இந்தப் பணம் பங்கிடப்படுகிறது. வேலை செய்த ஏழைகளுக்கு  60 முதல் 80 வரை கொடுக்கப்படுகிறது. மீதம்  40 முதல் 20 வரை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பங்கிட்டுக்கொள்கிறார்கள். சில இடங்களில் வேலையே செய்யாமல் இந்தப் பணம் பங்கிடப்படுகிறது. இதன் விளைவாக, மக்களின் வரிப்பணம் சூறையாடப்படுவது மட்டுமல்ல, விவசாய வேலைக்கு ஆள்கிடைக்காமல் விவசாயமும் கெட்டுப்போகிறது.


மேற்கண்டவைகளைத் தவிர வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் விவசாயிகளுக்குப் பயனளிக்காத திட்டமாகும். மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் உதவப்படும் என அரசு அறிவித்திருப்பதற்கும் நடைமுறைக்கும் தொடர்பில்லை. ஏனெனில், இத்திட்டம் குறுவட்டம் அளவில் மட்டுமே செயற்படுத்தப்படுகிறது. கிராம அளவில் செயல்படுத்தப்பட்டால்தான் விவசாயிக்கு நஷ்ட ஈடு கிடைக்கும். திருமணமாகாத இளம் பெண்களுக்கு உதவி செய்வதற்காக வகுக்கப்பட்ட சுமங்கலித் திட்டத்தின்படி தொழிற்சாலைகளில் 3 ஆண்டுகள் இளம் பெண்கள் தொடர்ந்து வேலை செய்தால் முடிவில் அவர்களுக்குக் கணிசமான தொகை கிடைக்கும். அதன்மூலம் அவர்கள் திருமணம் செய்துகொள்ளலாம் என அரசு கூறுகிறது. ஆனால், நடைமுறையில் இத்திட்டம் சரிவரச் செயல்படுத்தப்படுவதில்லை. இதைப்போல கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச மருத்துவ வசதி, இலவச வீட்டுமனைத் திட்டம், குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் போன்ற பல திட்டங்கள் குறைபாடுகளுடனும், உரிய நபர்களுக்கு உதவும் வகையில் இல்லாமலும் அமைந்து ஊழலுக்கும் சீர்கேட்டுக்கும் வழிவகுக்கின்றன.

மக்களைப் பிச்சைக்காரர்களாக ஆக்கும் வகையில் இலவசங்களைத் தருவது எதற்காக? இலவசத் திட்டங்களின் விளைவாக மக்கள் சோம்பேறிகளாவதோடு உழைத்து உண்ண வேண்டும் என்ற எண்ணத்தையே மறக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் விளைவாக பொது ஒழுக்கமும் சமூகக் கட்டுப்பாடும் சீர்குலைந்து வருகின்றன.

தொலைநோக்குத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி அதன் அடிப்படையில் சிலவற்றை இலவசமாக வழங்குவதுதான் சிறப்பானதாகும். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் மக்கள் நல அரசின்  நோக்கமாகவும் கடமையாகவும் இருக்க வேண்டும். விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம் போன்றவற்றால் அரசுக்கு எதிராக மக்களிடையே வளர்ந்து வரும் அதிருப்தியை இலவசங்களின் மூலம் தி.மு.க. அரசு திசைதிருப்பவும் முடக்கவும் முயல்கிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக இலவசங்களைப் பயன்படுத்துவது காலப்போக்கில் நாட்டை மீளமுடியாத படுகுழியில் தள்ளிவிடும். ஒருவருக்கு இலவசமாக மீனைக் கொடுப்பதைவிட அவருக்கு மீன்பிடிக்கக் கற்றுக்கொடுப்பதுதான் சிறந்தது என்ற ஆங்கிலப் பழமொழியை பின்பற்றுவதுதான் சிறந்த அரசுக்குரிய இலக்கணமாக இருக்க முடியும்.


3 comments:

  1. romba nalla sonnenenga

    ReplyDelete
  2. நல்ல அருமையான அலசல்.

    ReplyDelete
  3. nice nanba. I agree with with you most of the issues.
    by
    Thaimozhi Tamil pesum Indian

    ReplyDelete