Search This Blog

Sunday, December 12, 2010

ஏ.டி.எம்.-ல் தான் எவ்வளவு பிரச்னைகள்!

பணம் கையில் வராமல் கணக்கில் வந்தால்... 

பொதுவாக பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் பிரச்னை, 'பணத்தை எடுக்கப் போனேன். பணம் வர வில்லை. ஆனால் எனது கணக்கில் அந்தத் தொகை குறைந்திருக்கிறது’ என்பதுதான்.

இதுபோன்ற பிரச்னைக்கு விரைவாக உங்கள் கணக்கிருக்கும் வங்கிக்குச் சென்று புகார் தெரிவித்தால் உடனடியாக உங்கள் பணம் கணக்கில் வரவு வைக்கப்படும். இதுவே மற்ற வங்கி ஏ.டி.எம்-மாக இருந்தால் உங்கள் பணம் வந்துசேர தற்போது பத்து முதல் பதினைந்து நாட்கள் ஆகிறது. ஆனால் புகார் தெரிவித்த 12 நாட்களுக்குள் நமது பணத்தை கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்றும், அப்படி இல்லையெனில் வாடிக்கையாளருக்கு தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் வங்கி 100 ரூபாய் அபராதமாக வழங்கவேண்டும் என்றும் ஆர்.பி.ஐ. உத்தரவிட்டுள்ளது. இது 2009 ஆகஸ்ட் முதல் அமலில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு இந்த உத்தரவு பற்றி தெரியவில்லை. மேலும் புகார் தெரிவித்து 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் உங்கள் பகுதி வங்கி குறைத்தீர்ப்பு ஆணையத்திடம் சென்று முறையிடவும்.

பின் நம்பர் மறந்துவிட்டால்...
ஏ.டி.எம். கார்டின் பின் நம்பரை சிலர் மறந்துவிடு வார்கள். அப்படி மறந்துவிட்டால் இந்த நம்பராக இருக்குமோ அந்த நம்பராக இருக்குமோ என்று திரும்பத் திரும்ப கார்டை போட்டுப் பார்க்காதீர்கள். அப்படிச் செய்தால் கார்டு ப்ளாக் ஆகிவிடும்.

பின் நம்பர் மறந்துவிட்டால் வங்கிக்குச் சென்று அந்த கார்டைக் கொடுத்தால் அந்த கார்டின் செயல்பாட்டைத் துண்டிப்பதோடு அந்த கார்டை இரண்டு துண்டாகவும் உடைத்துவிட்டு, புது கார்டு கொடுப்பார்கள். பின் நம்பரைப் பொறுத்தவரை உங்களுடைய அல்லது உங்கள் உறவினர்களின் பிறந்த தேதி, திருமண தேதி போன்றவற்றை ரகசிய எண்ணாக வைக்காதீர்கள். அதேபோல் டைரியிலோ, செல்போனிலோ பின் நம்பரை குறித்து வைக்கும் வழக்கமும் வேண்டாம். மற்றவர்கள் உங்கள் பின் நம்பரை ஊகிக்கவோ தெரிந்து கொள்ளவோ வாய்ப்பளிக்காதீர்கள்!

கார்டு மாட்டிக்கொண்டால்...
பழைய சிஸ்டத்தைப் பின்பற்றும் ஏ.டி.எம்-களில் கார்டை உள்ளே இழுக்கும் முறைதான் இருக்கிறது. சில சமயம் உள்ளே போன கார்டு வெளியே வராமல் போய் விடுவதும் உண்டு!
ஏ.டி.எம்-ல் கார்டு மாட்டிக்கொண்டால் உடனே கஸ்டமர் கேர் நம்பருக்கு புகார் தெரிவிக்கவும் என்று ஏ.டி.எம். மையத்திலே அறிவித்திருப்பார்கள். அந்த எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வும். ஒருவேளை அந்த எண்ணில் தொடர்பு கொள்ள முடியாத பட்சத்தில் உங்கள் வங்கி கிளைக்குச் சென்று எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவித்து, உங்கள் அவசரத் தின் நிலையை வங்கியின் மேலாளரிடம் விளக்கினால் 24 மணி நேரத்தில் புதிய கார்டு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதுவே நீங்கள் வேறு ஊரில், வேறு வங்கி ஏ.டி.எம்-மை பயன்படுத்தி கார்டு உள்ளே போயிருந்தால் உங்கள் கணக்கிருக்கும் வங்கிக்கு உடனே தெரிவித்தால் முதற்கட்டமாக கார்டை ப்ளாக் செய்துவிடுவார்கள்.

தேய்ந்து போன மேக்னட்டிக் ஸ்டிரிப் 

ஏ.டி.எம். கார்டின் பின்பக்கம் இருக்கும் மேக்னட்டிக் ஸ்டிரிப் ( கறுப்பு நிறத்தில் இருக்கும் பட்டை) அடிக்கடி பயன்படுத்துவதன் மூலமும், உராய்வின் காரணமாகவும் செயலிழக்கும் வாய்ப்பு இருக்கிறது.

தேய்ந்துபோன ஸ்டிரிப்பால் கார்டின் பரிவர்த்தனையை ஏ.டி.எம். ஏற்றுக் கொள்ளாது. இரண்டு, மூன்று ஏ.டி.எம்.களுக்குச் சென்றபோதும் அக்கவுண்டில் பணம் இருந்தும் பணம் எடுக்க முடியவில்லை என்றாலோ, மற்றவர்களின் கார்டு வேலை செய்யும்போது உங்கள் கார்டு மூலம் மட்டும் பணம் எடுக்க முடியவில்லை என்றாலோ சுதாரித்துக் கொள்ளவும். உங்கள் வங்கிக்குச் சென்று புகார் தெரிவித்தால் புதிய கார்டை வழங்குவார்கள்.

அவரவர் வங்கி ஏ.டி.எம்-மே சிறந்தது
பெருந்தொகை எடுப்பதாக இருந்தால் கூடுமான வரை அவரவர் வங்கி ஏ.டி.எம்.களைப் பயன்படுத்துவதே நல்லது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கு பணம் எடுத்து பிரச்னை ஆனாலும் கணக்கிருக்கும் வங்கியின் ஏ.டி.எம். எனில் உடனடியாக பிரச்னை சரி செய்யப்பட்டு பணம் உடனே கணக்கில் வந்துவிடும். மற்ற வங்கி ஏ.டி.எம். எனில் பணம் வந்து சேர வாரக்கணக்காகும்.

வேண்டவே வேண்டாம் செல்போன் 

ஏ.டி.எம். பயன்படுத்தும் போது செல்போ னில் பேசுவதைத் தவிர்க்கவும். அப்படி பேசும்போது உங்களது கவனம் சிதறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது. அதனால் நீங்கள் எடுக்க நினைத்த பணத்தை விட அதிகமாகவோ, குறைவாகவோ குறிப்பிட வாய்ப்பு இருக்கிறது. உள்ளே போட்ட கார்டை எடுக்காமல் போகவும், பணத்தை எடுக்காமல் போகவும் வாய்ப்புகள் உண்டு.

- இங்கே குறிப்பிட்டுள்ளது போக அடிப்படை பாதுகாப்பு விஷயங்களைக் கடைப்பிடிப்பதன் மூலமும் பல பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.



1 comment:

  1. பதிவுகளை சுடுகிறார்கள்! உஷார் நண்பா!

    ReplyDelete