Search This Blog

Monday, June 09, 2014

அருள்வாக்கு - நாமும் கூத்தர்கள்


ஆண்டாள் ‘திருப்பாவை’யில் ‘தூமலர் தூவித் தொழுது வாயினாற் பாடி மனத்தினால் சிந்திக்க’ என்று பாடியிருக்கிறாள்.

மனோ-வாக்-காயங்கள் என்ற த்ரிகரணங்களையும் பகவத்பரமாக்க வேண்டும் என்பதைத்தான் ஆர்டரை மாற்றி காயம்-வாக்-மனஸ் என்று இங்கே சொல்லியிருக்கிறாள். ‘வாயினால் பாடி’, ‘மனத்தினால் சிந்திக்க’ என்பதில் வாய், மனஸ் Plain -ஆகவே தெரிகிறது. அப்படியானால் ‘தூமலர் தூவித் தொழுது’ என்கிறது காயத்தை பகவ தர்ப்பணமாக்குவதே என்றும் ஆகிறது. அப்பர் சொன்ன ‘பூக் கையால் அட்டி’தான் ‘தூமலர் தூவி’; ‘தொழுது’ என்பது நமஸ்காரம். விழுந்து பண்ணுவதாகவே இருக்கலாம். அல்லது புஷ்பாஞ்ஜலியாகத் தூமலர் தூவிய கையாலேயே கும்பிடுவதாகவும் இருக்கலாம். ‘கைகாள் கூப்பித் தொழீர்’ என்று அப்பர் கைக்கே தொழும் க்ரியையைச் சொன்ன மாதிரியே ஆண்டாளும் சொன்னதாயிருக்கலாம்.

‘ஆக்கையாற் பயனென்?’ என்ற அப்பர் பாடலில் வரும் ப்ரதக்ஷிணம் ஆக்கையின் அடிப்பாகமாகவுள்ள பாதத்தால் பண்ணுவது. மத்ய பாகத்திலுள்ள கையால் அர்ச்சனை, புஷ்பத்தைப் போட்டு அர்ச்சனை பண்ண வேண்டும்.

‘போற்றி என்னாத’ - ஆக்கையின் முடி பாகத்திலுள்ள வாயால் ஈச்வரனைப் போற்றி ஸ்தோத்ராதிகள் சொல்ல வேண்டும்.

உச்சி ஸ்தானம் தலை -அதைச் சொல்லித்தான் பாட்டே ஆரம்பித்தார். ‘தலையே நீ வணங்காய்!’ என்று.

‘தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடிச் சங்கரா சய போற்றி போற்றி’ யென்றும் ‘ஜய ஜய சங்கர’ என்று இன்றைக்கு நாமெல்லோரும் கோஷிக் கிறதைத்தான் அன்றைக்கே ‘சங்கரா சய போற்றி போற்றி’ என்று சொல்லியிருக்கிறார். சொல்லிக் கொண்டே போனால் ஒரு ஆனந்த வெறியே பிறக்கிறதோல்லியோ, அதைத்தான் ‘கூத்துமாடி’ என்கிறார். அவனும் கூத்தன், அவனுடைய பக்தியிலே நாமும் கூத்தர்கள்.

தலையால் வணங்குவதற்காகச் சொன்னேன்.

தலையால் வணக்கம், கையால் அர்ச்சனை, வாயால் ஸ்தோத்ரம் என்று இருந்தால் அதுவே ஆக்கையின் பயன் என்று இங்கே சொல்கிறார்.

இன்னொன்றும் பார்க்கிறோம்; தலை, கை, கால் மூன்றுமே நமஸ்கார உறுப்புகளாக இருக்கின்றன. தலையைச் சாய்த்து நமஸ்காரம்; கையைக் கூப்பி நமஸ்காரம்; காலை மண்டி போட்டு நமஸ்காரம்.

பாதம் என்பது காலின் முடிவில் இருப்பது; Leg-ன் முடிவிலுள்ள Foot.ஹஸ்தம் என்பது புஜத்தின் முடிவில் இருப்பது; Arm-ன் முடிவிலுள்ள Hand. ஒரு மநுஷ்ய சரீரத்திலே Extremities என்று சொல்லும் சிறிய பாகங்கள் தான் இவை. வலம் வருவதும், பூ அட்டுவதும் இந்தச் சின்ன பாகங்கள்தான்.


ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment