Search This Blog

Monday, July 21, 2014

பட்ஜெட் 2014 வருமான வரியை மிச்சப்படுத்தித் தரும் சலுகைகள்

மத்திய பட்ஜெட்டில் பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் அறிவிப்புகள் இல்லை என்றாலும், நடுத்தர மக்களுக்கு வருமான வரியை மிச்சப்படுத்தித் தரும் சலுகைகள் நிறையவே இருக்கின்றன.

அடிப்படை வருமானவரி வரம்பு, வீட்டுக் கடன் வட்டி, வருமான வரிவிலக்கு முதலீடு போன்றவற்றில் தலா ரூ.50,000 சலுகை அளிக்கப்பட்டு இருக்கிறது.

பட்ஜெட்டில் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான வருமான உச்ச வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் குறைந்தபட்சம் ரூ.5000 முதல் அதிகபட்சமாக ரூ.15,000 வரியில் மிச்சமாகும்.

மேலும், கடந்த ஆண்டு 5 லட்ச ரூபாய்க்குள் வருமானம் உள்ளவர்களுக்கு அளிக்கப்பட்ட ரூ.2000 வரித் தள்ளுபடிஇந்த ஆண்டும் தொடரும். இதெல்லாம் மாதச் சம்பளக்காரர்களுக்கு சந்தோஷமான செய்தியே.

  எதில் முதலீடு செய்யலாம்?
அதிகரித்து வழங்கப்பட்டிருக்கும் 50,000 ரூபாய் எதில் லாபகரமாக முதலீடு செய்யலாம் என்று பார்ப்போம்.

ஏற்கெனவே 80சி பிரிவு முதலீட்டு வரம்பான 1 லட்சம் ரூபாயைத் தாண்டி, வருமான வரி கட்டிக் கொண்டிருப்பவர் களுக்கு அரசின் இந்தச் சலுகை நிச்சயம் லாபகரமாக இருக்கும். இந்த ஆண்டில் உங்களின் வருமானம் அதிகரிக்காது. கடந்த ஆண்டு வரி எதுவும் கட்டவில்லை என்கிறபோது, அரசின் புதிய சலுகையால் பலன் எதுவும் இல்லை. நடப்பு ஆண்டில் உங்களின் வருமான அதிகரிப்பைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, கூடுதல் வரிச் சலுகை ரூ.50,000க்கான முதலீட்டை மேற்கொள்ளவும்.  நீங்கள் வீட்டுக் கடன் வாங்கியிருந்து, அதற்கான திரும்பச் செலுத்தும் அசலில் 80சி பிரிவில் வரிச் சலுகை பெற்றுவருகிறீர்கள் என்றால், நடப்பு ஆண்டில் கூடுதலாக 50,000 ரூபாய்க்கு வரிச் சலுகை பெற முடியும். அப்படி வாய்ப்பு இருப்பவர்கள் அதனை முதலில் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்.

இப்படி கழிக்க வழியில்லை என்கிற நிலையில் முதலீட்டை தேர்வு செய்யும் போது, இந்தத் தொகை உங்களுக்கு எவ்வளவு நாட்கள் கழித்து தேவை, உங்களின் வயது, ரிஸ்க் எடுக்கும் திறன், பங்குச் சந்தையைப் புரிந்து கொண்டிருக்கும் அளவு போன்றவற்றின் அடிப்படையில் முதலீட்டை மேற்கொள்ளவும்.

   விபிஎஃப் 

சம்பளத்தில் பிடிக்கப்படும் பிஎஃப் தொகையுடன் விபிஎஃப்ல் முதலீடு செய்வதன் மூலம் 50,000 ரூபாய் வரிச் சலுகையை பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விபிஎஃப் என்பது அதிகபட்சம் சம்பளத்தில் பிடிக்கப் படும் பிஎஃப் தொகை அளவுக்கு இருக்கும். பிஎஃப்க்கு உள்ள  8.5% வட்டி இதற்கும் அளிக்கப்படும். வட்டிக்கும் வரி கிடையாது என்பது கூடுதல் லாபம்.

ஒருவர் 50,000 ரூபாயை (மாதம் சுமார் ரூ.4,165) விபிஎஃப்ல் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். அவர் மொத்தம் 7.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பார். இது வட்டியுடன் 15 லட்சம் ரூபாயை தாண்டி இருக்கும்.

   பிபிஎஃப் 

தற்போதைய நிலை யில் பிஎஃப்ஐவிட பிபிஎஃப்க்கு அதிக வட்டி (8.7%) கிடைக்கிறது. மேலும், பட்ஜெட்டில் பிபிஎஃப் முதலீட்டு வரம்பு ரூ.1.5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருப்பதால், இதனை முதலீட்டுகாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


இந்த முதலீடு 15 ஆண்டுகளுக்கானது என்பதை மனத்தில் கொண்டு முதலீட்டை ஆரம்பிக்கவும். இடையில் தேவைப்பட்டால் கடன் வாங்கிக்கொள்ள முடியும்.  சம்பளத்தில் பிஎஃப் பிடிக்காமல் இருப்பவர்கள் அல்லது குறைவாக பிடிக்கப்படு பவர்கள், சுயதொழில் செய்பவர்கள் இதில் முதலீட்டை அதிகரித்து வருமான வரியை மிச்சப்படுத்தலாம்.

இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு வரி கிடையாது. விபிஎஃப் போலவே, இதில் முதலீட்டை மேற்கொண்டால் 15 ஆண்டுகள் கழித்து ரூ.15.36 லட்சம் கிடைக்கும்.  

  இஎல்எஸ்எஸ் 

அடுத்துவரும் ஆண்டுகளில் பங்குச் சந்தை சிறப்பாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப் படுவதால், பங்குச் சந்தை சார்ந்த சேமிப்பு திட்டமான இஎல்எஸ்எஸ்ல் முதலீட்டை அதிகரிப்பது லாபகரமாக இருக்கும். இந்த முதலீடு மூலம் கிடைக்கும் டிவிடெண்ட்டுக்கு வரி கிடையாது. மேலும், குரோத் ஆப்ஷனை தேர்வு செய்திருக்கும்பட்சத்தில் மூன்றாண்டு கழித்து யூனிட்களை விற்று லாபம் பார்க்கும்போது, அந்த லாபத்துக்கு வரி கிடையாது. இதில் குறைந்தபட்சம் எஸ்ஐபி மூலம் ரூ.500 கூட முதலீடு செய்ய முடியும்.

ரிஸ்க் எடுக்க தயாராக இருப்பவர்கள் இதில் முதலீட்டை மேற்கொள்ளலாம். கடந்த 3 , 5 ஆண்டுகளில் டாப் ஃபண்டுகள் ஏறக்குறைய 20% வருமானத்தைத் தந்திருக்கின்றன.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்! 

60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்கள், இதில் முதலீடு செய்யப்படும் முதலீட்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை பெற முடியும். தற்போதைய நிலையில் ஆண்டுக்கு 9.2% வட்டி கிடைக்கும். ஐந்தாண்டு லாகின் காலம் இருக்கிறது. வட்டி வருமானத்துக்கு வரி கட்டவேண்டி இருக்கும்.  
  
   என்பிஎஸ் 

ஓய்வூதியம் வேண்டும் என்று நினைக்கிறவர்கள், தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேரலாம். இதில் ஆண்டுக்கு குறைந்தபட்ச முதலீடு 6,000 ரூபாய். இதிலிருந்து முதலீட்டை பணி ஓய்வுக்குப் பிறகுதான் எடுத்துக்கொள்ள முடியும். முதலீடு ஒருவரின் வயதுக்கேற்ப ஈக்விட்டி, கடன் பத்திரங்களில் பிரித்து முதலீடு செய்யப்படும் என்பதால் நீண்ட காலத்தில் ரிஸ்க் குறைந்து நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

  வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் 

ஐந்தாண்டுகள் முதிர்வை கொண்ட வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீட்டை அதிகமாக் குவதன் மூலமும் வரிச் சலுகை பெற முடியும். ஐந்தாண்டு முதலீட்டுக் காலத்தைக் கொண்ட இதற்கு 8.75  9% வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 0.25  0.5% கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. முதலீட்டில் ரிஸ்க் இல்லை. அதேநேரத்தில் வட்டி வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும். இது அவரவரின் வருமான வரம்புக்கேற்ப 10%, 20%, 30% என இருக்கும். அதிக வருமான வரம்பில் இருப்பவர்கள் அதிக வரி கட்ட வேண்டி இருக்கும் என்பதால் அவர்கள் இந்த முதலீட்டை தவிர்ப்பது நல்லது.

லைஃப்  இன்ஷூரன்ஸ்  பாலிசிகள் ஆயுள் காப்பீடு பாலிசிகளில் (யூலிப் மற்றும் எண்டோவ் மென்ட் பாலிசிகள்), வரிச் சேமிப்புக்காக முதலீடு செய்வது லாபகரமாக இருக்க வாய்ப்பு இல்லை. ஐஆர்டிஏன் புதிய விதிமுறைப்படி, யூலிப் பாலிசிகள் மற்றும் எண்டோவ்மென்ட் பாலிசிகளில் இன்ஷூரன்ஸ் கவரேஜ் அதிகரிக்கப் பட்டுள்ளதால் 56% வருமானம் கிடைத்தாலே பெரிய விஷயம்.  

ரிஸ்கை பரவலாக்க நினைப்பவர்கள், கூடுதலாகத் தரப்பட்டிருக்கும் 50,000 ரூபாய்க்கான முதலீட்டை விபிஎஃப், இஎல்எஸ்எஸ், என்பிஎஸ், பேங்க் எஃப்டி போன்றவற்றில் பிரித்து மேற்கொள்ளலாம்.

வீட்டுக் கடன் வட்டியில் சலுகை 

குடியிருக்கும் வீட்டை வீட்டுக் கடனில் வாங்கி யிருந்தால் திரும்பச் செலுத்தும் வட்டியில் அளிக்கப்படும் சலுகை ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையால் யாருக்கு லாபம் என்று பார்ப்போம்.

சென்னை, கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி போன்ற நகரங்களை யொட்டி இருக்கும் புறநகரங்களில் ரூ.25  40 லட்சம் ரூபாய்க்குள் வீடு வாங்குபவர்களுக்கு இதனால் லாபகரமாக இருக்கும்.

இந்தச் சலுகையை முதல் ஆண்டில் முழுமையாகப் பெற, ஒருவர் குறைந்தது ரூ.20 லட்சம் வீட்டுக் கடன் வாங்கி இருப்பது அவசியம்.

அதாவது, ஒருவர் ரூ.20 லட்சம் வீட்டுக் கடனை 20 ஆண்டுகளில் திரும்பச் செலுத்தும்விதமாக 10.50% வட்டியில் வாங்கியிருந்தால், முதல் ஆண்டில் வட்டிக்கு மட்டும் செல்லும் தொகை ரூ.2,01,520. அந்த வகையில் ரூ.2 லட்சம் வட்டிக்கான வரிச் சலுகையை முழுமையாக பெற முடியும்.

அடுத்துவரும் ஆண்டுகளில் வட்டிக்குச் செல்லும் தொகை குறையும்போது, இந்தச் சலுகையை முழுமையாகப் பெற முடியாமல் போகும்.

அதுவே, கடன் தொகை ரூ.25 லட்சம், ரூ.30 லட்சம், ரூ.40 லட்சம் என்கிறபோது தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு இந்தச் சலுகையைத் தொடர்ந்து பெற முடியும்.
மத்திய பட்ஜெட்டில் தனிநபர்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டிருக்கும் அதேநேரத்தில், அவர்களின் முதலீட்டின் வருமானத்தை பாதிக்கும் சில மாற்றங் களும் செய்யப்பட்டிருக்கின்றன.

கடன் ஃபண்டுகளுக்கு மூலதன ஆதாய சலுகை குறைப்பு 

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் கடன் ஃபண்டு களின் யூனிட்களை ஓராண்டுக்குமேல் வைத்திருந்து விற்றால், அது நீண்ட கால முதலீடாகவும் அதற்கு 10 சதவிகிதம் அல்லது பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு 20 சதவிகிதம், இதில் எது குறைவோ அதை வரியாகக் கட்டினால் போதும் என்று இருந்தது.  
இப்போது இது மாற்றப்பட்டுள்ளது நீண்ட காலம் என்பது  36 மாதங்களாகவும், பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு 20% வரி கட்ட வேண்டும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த  பட்ஜெட் அறிவிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான் (எஃப்எம்பி) திட்டங்கள்தான். இந்த முதலீட்டில், 366 நாட்களுக்கு மேற்பட்ட முதிர்வுக்கு இரண்டு ஆண்டுகளின் பணவீக்க விகித சரிக்கட்டலை மேற்கொண்டு, அதன்பிறகு 20% வரி கட்டினால் போதும் என்று இருந்தது. இப்போது மூன்று ஆண்டுகள் முதிர்வுக்கு மட்டுமே நீண்ட கால மூலதன ஆதாயம் அனுமதிக்கப்படுகிறது.

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டை விட  எஃப்எம்பி வருமானம் அதிகமாக கிடைக்கவே பெரும் பணக்காரர்கள், அதில் அதிகமாக  முதலீட்டை மேற்கொண்ட னர். இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை மொத்தம் ரூ.9.74 லட்சம் கோடியை நிர்வகித்து வருகிறது. இதில் ரூ.6.95 லட்சம் கோடி கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள். அதாவது, சுமார் 70% கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களாக இருக்கின்றன.

கடன் சார்ந்த ஃபண்ட் முதலீட்டில் சுமார் ரூ. 2 லட்சம் கோடி எஃப்எம்பி முதலீடு ஆகும். இந்த முதலீட்டுக்கு வரிச் சலுகை குறையும்போது இந்த முதலீடு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டாக மாறும். அந்தத் தொகையைக் கொண்டு வங்கிகள் தாராளமாக கடன் வழங்கும் என்பது நிதி அமைச்சரின் திட்டம். அப்போது பொருளாதாரம் வளரும் என்பது அவரின் கணிப்பு.


எஃப்எம்பி திட்டத்தில் முன்போல் வரிச் சலுகை இல்லை என்பதால் ஓரிரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், அண்மைக்காலத்தில் இந்தத் திட்டத்தின் மூலம் திரட்டிய தொகையை முதலீட்டாளர்களுக்கு திருப்பி அளித்துள்ளதாக தகவல்.

 இனி இவற்றை பின்பற்றவேண்டியது நீங்கள்தான்!

No comments:

Post a Comment