Search This Blog

Thursday, January 13, 2011

தோல்வியுற்ற கணம்.!!

இந்த கட்டுரையை எழுதியவன் என் நண்பன் மணிகண்டன்.. நாங்கள் ஒரே பள்ளியில் படிக்கும் போது அறிமுகம் இல்லை. ஆனால்,  மூன்று வருட டிப்ளோம படிக்கும் போது ஏற்பட்ட நட்ப்பு இன்றும் தொடர்கிறது. மிக சிலரிடம் மட்டுமே நான் இன்னும் தொடர்பில்  உள்ளேன். அதில் இவனும் ஒருவன். இவன் ஒரு புகை பட மேதை.. இவன் நன்றாக தான் எழுதுவான். அதுவும் அழுத்தமாக, இப்போ தம்பி வேலை மற்றும் மற்ற விசயங்களில் ரொம்ப பிஸி.. இன்மேல் இவனுடைய எழுத்துக்கள் என் வலைப்பூவில் எழுத்து  மழை பொழியும் என நம்புகிறேன்..   ( விருதுநகரில் மழை வருவதை போல்..)




 




உங்கள் தோல்வி அறிவிக்கப்பட்ட நிமிடங்களில் உங்களில் ஏற்படும் மாற்றங்களை உற்றுக் கவனித்திருக்கிறீர்களா? 

தோல்வியுற்ற சில கணங்களில் மனம் ஒரு மதம் பிடித்த யானையின் நடத்தைகளைக் கொண்டிருப்பதைப் பலமுறை உணந்திருக்கிறேன். அது யார் எதிரே வந்தாலும் அவர்களை கடுமையான சொற்களால் அடிக்கும். மதம் பிடித்த யானையைக் கட்டுப்படுத்த வரும் பாகனையே அந்த யானை தாக்குவதைப் போல நமக்கு ஆறுதல் 
சொல்லவரும் நபர்களைக் கூட சமயங்களில் அது திட்டித் தீர்க்கும்.

உங்கள் தோல்வி அறிவிக்கப்பட்ட நிமிடங்களில் உங்களில் ஏற்படும் மாற்றங்களை உற்றுக் கவனித்திருக்கிறீர்களா?

தோல்வியுற்ற சில கணங்களில் மனம் ஒரு மதம் பிடித்த யானையின் நடத்தைகளைக் கொண்டிருப்பதைப் பலமுறை உணந்திருக்கிறேன். அது யார் எதிரே வந்தாலும் அவர்களை கடுமையான சொற்களால் அடிக்கும். மதம் பிடித்த யானையைக் கட்டுப்படுத்த வரும் பாகனையே அந்த யானை தாக்குவதைப் போல நமக்கு ஆறுதல் சொல்லவரும் நபர்களைக் கூட சமயங்களில் அது திட்டித் தீர்க்கும்.

தோல்விகள் எப்பொழுதும் கசப்பைத் தருவனவாகவே இருக்கின்றன. தோல்வியை எப்பொழுதும் மனம் ஏற்க மறுக்கிறது. இந்தக் கணம் வரை தோல்வி என்பது அவமானத்தின் சின்னமாகவே கருதப்படுகிறது. தோல்வியினால் ஏற்படும் மன உளைச்சலை விட தோல்வியுற்ற கணம் வந்து விழும் சொற்களால் ஏற்படும் வலியே அதிகமாய் இருக்கின்றது.

தோல்வியின் அரவணைப்பால் சமயங்களில் கூனிக் குறுகிப் போகிறோம். நாம் முன் நாட்களில் பெற்ற வெற்றிகள் யாவும் அர்த்தமற்றதாய் ஆகி விடுகின்றன. சில சமயம் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மனநிலையை அடைந்துவிடுகிறோம். நம் மேல் படும் அனைவரின் பார்வைகளும் ஏளனத்தைப் பிரதிபலிப்பவையாகத் தெரிகின்றன. மனம் பசியை வெளியில் சொல்ல முடியாமல் அழும் குழந்தையாய் மாறி விடுகின்றது. நம்மை அரவணைக்க வரும் கைகளில் கூட ஏதாவது உள் அர்த்தம் இருக்கக்கூடும் என்று மனம் தேடத்துவங்குகிறது. 


நாம் பெரியவர்கள் ஆக ஆக தோல்வியினைத் தாங்கும் திறன் அற்றவர்களாக மாறிப்போகிறோம். சிறுவர்கள் எப்பொழுதும் தோல்வியைக் கண்டு அஞ்சுவதில்லை. கிடைத்த தோல்வியை விமர்சனம் செய்து சிரித்துக் கொள்கின்றனர். ஆனால் நாம் பெரியவர்கள் ஆன பின் விளையாட்டில் கூட தோல்வி என்பது நம்மால் ஏற்க முடியாத ஒன்றாக ஆகிவிடுகிறது. 

சில வாரங்களுக்கு முன் எனது அலுவலக நண்பர்களுடன் சதுர்ப்பலகை(carrom board) ஆட்டம் ஆடும் போது இடையில் வந்த ஒருவர் சொன்ன யோசனையின் பேரில் ஆடித் தோற்ற பிறகு தோல்வியடைந்த கோபத்தில் எனக்கும் அவருக்கும் நடந்த வாக்குவாதத்தில் அவரிடம் திரும்ப சகஜமாய்ப் பேசுவதற்கு எனக்கு சில நாட்கள் தேவைப்பட்டது. தோல்வியின் ஆளுமையால் தான் இப்படி ஆனது என்று சில நிமிடங்களில் உணர்ந்து விட்டாலும் உடனே அந்த நபரைத் தேடிப் போய் பேச ஏனோ மனம் ஒத்துழைக்கவில்லை. தோல்வியின் மூர்க்க கணங்கள் உறவுகளை ஒரு நீண்ட இடைவெளியில் தொலைத்து விடுகின்றன. தொலைந்த உறவுகளை மீட்டு வருவதென்பது எப்பொழுதாவது மட்டுமே சாத்தியமாகிறது. சில சமயம் மிக அருகில் இருந்தாலும் மீட்டு வர விருப்பம் இல்லாமலேயே செய்து விடுகிறது..

கல்லூரி நாட்களில் ஒரு பாடத்தில் தோற்றுவிட்டு மீண்டும் அந்த பாடத்தில் நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றி பெற ஒரு வருடம் காத்திருந்த எனக்கு இப்பொழுது சமுதாயத்தில் ஒரு அடையாளம் கிடைத்த பிறகு என் சகோதரியின் மகள் என் சொல்பேச்சைக் கேட்காமல் நான் தோற்றுப் போவது கூட சில நேரம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது மிகவும் விசித்திரமானதே.

தோல்விகள் சில நேரங்களில் நம் உயிரையே விலையாகக் கொடுக்கக் கூடிய அளவுக்கு ஒரு மாயையாய் சித்தரிக்கப்படுகின்றன. தோல்வியுற்ற மனிதன் வாழத் தகுதியற்றவன் என்ற ஒரு மாயை நம்மை ஆட்கொண்டிருக்கின்றது. தோல்வி என்பது ஒரு பூதத்தைப் போல், பேயைப் போல் நம்மை எப்பொழுதும் பயம் கொள்ளச் செய்வதாகவே இருக்கிறது.


தோல்விகள் உண்மையில் அரவணைக்கப்பட வேண்டியவை. தோல்விகள் வாழ்வின் எதார்த்ததைக் கற்றுக் கொடுப்பவை. ஒவ்வொருவரின் வெற்றியும் ஒரு தோல்வியை அடிப்படையாய்க் கொண்டு தான் அறிவிக்கப்படுகின்றது. நம் அனுபவங்களின் ஆதாரங்கள் நம் தோல்விகள்.

சமீபகாலத்தில் தோல்வியின் அரவணைப்பில் இருந்த பொழுது நான் எழுதிய சில வரிகள்:

"எங்கிருந்தோ வந்து
சட்டென சுட்டு விடுகிறது, தோல்வி
அறிவிக்கப்படும் கணம் கோபத்தில் வந்து விழும்
ஒரு வார்த்தை...


அக்கணம் முதல் அறிந்ததில்லை
அவ்வளவு வீரியம் அந்த வார்த்தைக்கு உண்டென்று..!!
மிகக் குறைந்த நேரத்தில் சொல்லப்படும்
ஒரு சொல்லானது ஒரு மீட்க முடியாத
தொலைவில் உறவுகளைத் தொலைத்து விடுகிறது...

என் தோல்விகள் அறிவிக்கப்பட்ட
நிமிடங்களைப் பத்திரமாய் சேகரிக்க விரும்புகின்றேன்,
என்றாவது ஒரு நாள் அவற்றை என் விருப்பம் போல்
வாழ்ந்து விட..."


Wednesday, January 12, 2011

தேசிய இளைஞர் தினம் - இன்று விவேகானந்தர் பிறந்தநாள்

கோல்கட்டாவில்,விஸ்வநாததத்தர்- புவனேஸ்வரி அம்மையாரின் தவப்புதல்வரறாக, 1863, ஜனவரி 12ல் அவதரித்தார். நரேந்திரன் என பெயர் இட்டனர். வடமொழி, ஆங்கில நூல்கள் பலவற்றைக் கற்று ஆன்மிக ஞானம் அடைந்தார். ராமகிருஷ்ண பரமஹம்சர் அவரைத் தனது சீடராக ஏற்றுக்கொண்டார். துறவியான பிறகு அவருக்கு வந்த பெயர் விவேகானந்தர். விவேகம் இருந்தால் தான் ஆனந்தம் பிறக்கும் என்பதைத் தன் பெயர் மூலம் இந்த உலகுக்கு சுட்டிக்காட்டினார்.இமயம் முதல் குமரி வரை பயணம் செய்து, ராமகிருஷ்ணரின் உபதேசங்களைப் போதித்தார். இந்து மதத்தின் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்ட, சிகாகோவில் நடந்த சர்வமத மகாசபை மாநாட்டில் பங்கேற்று, அரியதொரு சொற்பொழிவை நிகழ்த்தினார். 
 
மற்றவர்களெல்லாம் அங்குவந்திருந்தவர்களை "லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்' என அழைத்து பேச்சை ஆரம்பிக்க, விவேகானந்தர் தனக்கே உரிய தனித்துவத்துடன் "டியர் பிரதர்ஸ் அன்ட் சிஸ்டர்ஸ்' என ஆரம்பித்து, உலக மக்கள் யாவரும் இந்தியர்களின் சகோதர சகோதரிகள் என்ற கருத்தை ஆணித்தரமாகச் சொன்னார். அந்த ஒரு வார்த்தைக்கே அரங்கம் அதிர்ந்தது.
 
""கோழைகளுடனோ அல்லது அர்த்தமற்ற அரசியலுடனோ எனக்கு எந்த விதத்தொடர்பும் இல்லை. கடவுளும் உண்மையும் தான் இந்த உலகிலுள்ள ஒரே அரசியல். அது தான் எனக்கு மிகவும் பிடிக்கும். மற்றவை எல்லாம் வெறும் குப்பை,'' என்று முழங்கினார்.ஒருநாள், அவர் தற்செயலாகக் கைகட்டி கம்பீரமாக கூட்ட அரங்கின் முன் நின்றதை ஒரு போட்டோகிராபர் படமெடுத்தார். அதை சிகாகோவிலுள்ள "கோஸ்லித்தோ கிராபிக் கம்பெனி' போஸ்டராக அச்சடித்து நகர் முழுக்க தொங்க விட்டது. அந்தப் படம் தான் இன்றுவரை விவேகானந்தரின் கம்பீர தோற்றத்தை நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.
 
குரு ராமகிருஷ்ணர், தொண்டை புற்றுநோயால் சாப்பிட முடியாமல் சிரமப்பட்டார்.""நீங்கள் தான் காளி பக்தர் ஆயிற்றே! அவளிடம் நேரில் பேசுவீர்களே! போய் அவளிடம் குணமாக்க கேளுங்கள்,'' என்றார் விவேகானந்தர்.""கேவலம், இந்த உடலைக் குணமாக்குவதற்காக அவளிடம் நான் கையேந்தமாட்டேன்,' ' என உறுதியாகச் சொல்லிவிட்டார் குருநாதர். விவேகானந்தர் வற்புறுத்தவே, வேறு வழியின்றி காளியை வழிபட்டு வந்தார்.""அம்பாள் என்ன சொன்னாள், குணமாக்கி விடுவாளா?'' என்று விவேகானந்தர் ஆவலுடன் கேட்கவே,""இல்லை! நீ சாப்பிடாவிட்டால், உனக்காக பல வாய்கள் சாப்பிடுகிறதே! அந்த திருப்தி போதாதா!'' என அவள் திருப்பிக்கேட்டாள். நான் வந்துவிட்டேன்,'' என்றார்.மற்றவர்கள் சாப்பிட்டால் தான் சாப்பிட்டது போல என்று நினைத்த குருவின் சமரசப் பார்வை, விவேகானந்தரையும் ஒட்டிக்கொண்டது.
 
ஜெய்ப்பூர் மன்னர் அரண்மனைக்கு வந்தார் விவேகானந்தர். அங்கே இசைநிகழ்ச்சி நடந்தது. துறவி என்பதால் அதைக்காண செல்லாமல், தன் அறையில் இருந்தார். அப்போது, ஒரு பெண் பாடிய பாடல் அவருக்கு கேட்டது. அதில் சோகம் இழையோடியது. அதைக் கேட்டு மனம் இளகிய அவர் இசைநிகழ்ச்சி நடந்த இடத்துக்குச் சென்றார்.""இவள் நடனப்பெண். இழிந்த தொழில் செய்பவள். மற்றவர்கள் பார்வையில் இவள் இழிந்தவளாக இருக்கலாம். ஆனால், இவளது பாடல் எனக்கு புதிய பாடத்தைத் தந்தது. தன் வாழ்க்கை சிரமத்தை அவள் பாடலாகப் பாடினாள். அதைக் கேட்டுஉள்ளம் உருகினேன்,'' என்றார். அவளை அம்பாளாக பார்த்தார். அவரது உருக்கமான பேச்சைக்கேட்ட அவள், அவரது வருகை தன்னை ஆசிர்வதித்ததாகச் சொன்னாள். இழிந்த தொழில் செய்தவர் களையும் தெய்வமாகப் பார்த்தவர் விவேகானந்தர்.  

அலைகள் சீறும் கன்னியாகுமரி கடலில், அவர் நீச்சலடித்துச் சென்று நடுப்பாறையில் அமர்ந்து தியானம் செய்த வீர வரலாறை உலகம் மறக்காது. அந்த வீரத்துறவியின் இரக்கம் நம்மை ஆட்கொள்ளட்டும். அவரது வீரம் பொதிந்த வார்த்தைகள் நமக்கு துணிவைத்தரட்டும். அந்தத் துணிவு வெற்றிக் கனியை பறித்துத் தரும்.
 
இந்தியாவின் கலாச்சாரம், பண்பாட்டை உலகுக்கு எடுத்துக்காட்டியவர் விவேகானந்தனர். "நூறு இளைஞர்களை தாருங்கள், இந்த நாட்டையே மாற்றிக்காட்டுகிறேன் ' என்று அவர் கூறினார். இது இளைஞர்கள் மேல் அவர் வைத்த நம்பிக்கையை காட்டுகிறது. இளைஞர்கள் முன்மாதிரியாக ஒருவரைப் பின்பற்றும்போது முழுவதும் அவர்களாகவே மாறிவிடாமல், அவர்களிடமுள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்று விவேகானந்தர் வலியுறுத்துகிறார். 
 
""என் சிங்கக்குட்டிகளே! இந்த வாழ்வு வரும் போகும். செல்வமும் புகழும் போகமும் சில நாட்களுக்கே. நீங்கள் பெரும்பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில்நம்பிக்கைக் கொள்ளுங்கள். என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். கவலைப்படாதீர்கள். குட்டிநாய்களின் குரைப்புக்கும், வானத்தில் முழங்கும் இடியோசை கேட்டும் நடுங்காதீர்கள். நிமிர்ந்து நின்று வேலை செய்யுங்கள். இந்த தேசத்தில் பிறந்த புழு கூட உண்மைக்காகவே உயிர்விட வேண்டும்,'' என்று கூறினார்  விவேகானந்தர்.

தினமலர்

Tuesday, January 11, 2011

பொங்கல் படங்கள் ஒரு பார்வை



பொதுவாக நம் தமிழகத்தில் பொங்கல் அன்று ஏக்க சக்க திரை படங்கள் வரும். ஆனால், கடந்த ஐந்து வருடங்களில்  பொங்கல் அன்று வெளியாகும் படங்கள் எண்ணிக்கை மிக சொற்பமான அளவில் தான் உள்ளது. அதற்க்கு காரணம் அனைவரும் அறிவோம். 


நான் விருதுநகரில் படிந்து கொண்டு இருக்கும் போது நான் பொங்கல் அன்று எதாவது ஒரு படத்தை முதல்  ஷோபார்த்தால்  தான் பொங்கல் நிறைவு பெரும். சில சமயம் எதிர்பார்த்த படங்களின்  டிக்கெட் கிடைக்காமல் வேறு எதாவது படத்தை பார்த்து இரண்டாவது ஷோ படம் பார்த்த அனுபவம்  உண்டு. அப்படி நான் பார்த்த படம் வாஞ்சி நாதன் மற்றும் தீனா . சில படங்கள் பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வந்து விடும். பிரண்ட்ஸ் மற்றும் வானத்தை போல அந்த வகை..


சரி விசயத்திற்கு வருவோம்.. இந்த வருட பொங்கல் படம் ஒரு பார்வை 

மொத்தம் நான்கு அல்லது ஐந்து படங்கள் வருசையில் உள்ளது..

1 . காவலன்

விஜய் படத்தை ஒரு காலத்தில் அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் இருந்து உள்ளது. ஆனால் இப்போது எத்தனை பிரச்சனைகள்.. அண்ணாச்சிக்கு கட்டம் சரியில்லை.. ரீமேக் படங்களில் அவர் நடித்து உள்ள அனைத்து படங்களும் கையை கடிக்காமல் வசூல் செய்யும் படங்கள். இந்த படம் கண்டிப்பாக போட்ட பணத்தை எடுத்து விடும் என்ற மிக பெரிய நம்பிக்கை என் இடத்தில் உள்ளது. விஜய் படத்தில் எப்பொழுதும் உள்ள பாடல்கள் மெட்டு இதில் இல்லை.. ஆனால், இவரை ஒழித்து கட்ட வேண்டும் என பேரன்கள் முடிவு செய்து விட்டார்கள் என என்ன தோன்றுகிறது. 

காவலன் - அவர்க்கு யார் காவலனோ !

2 . இளைஞன்


நம் தமிழகத்தின் தாத்தா உயர் திரு கருணாநிதி கதை மற்றும் வசனம் எழுதி இருக்கும் படம். படத்தை நன்றாக ப்ரொமோட் செய்து உள்ளார்  கள்ள லாட்டரி புகழ் மார்டின். இது ருணாநிதி  அவர்களின் எழுபத்தி ஐந்தாவது ( திரைப்பட துறையில் ) இருக்கும் ஆண்டு. அனைத்து அமைச்சர் பெருமக்கள் தன் இடம் உள்ள திரை அரங்கு மற்றும் தான் பினாமிகளின் அரங்குகளில் இப்படம் வெளியிட பட உள்ளது. எதாவது ஒரு தியேட்டரில் கண்டிப்பாக நூறு நாட்கள் ஓடும்.. பா விஜய் நடித்து உள்ளார். எந்த பண் பலை வானொலி கேட்டாலும் கலைஞரின்  இளைஞன் என பேச்சாக உள்ளது..

இளைஞன் -
கருணாநிதி அல்ல..

3 .
சிறுத்தை :


இது ஒரு தெலுகு படத்தின் ரீமேக். விக்ரம்ர்குடு என்று சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னால் வந்த திரைபடம். செம மாஸ் படம். ஜின்த்தாக்கு...ஜின்த்தாக்கு... பாடல் நான் இதில் ரசித்தது ( தெலுங்கு ). பாடல் மற்றும் படத்தின் ப்ரோமோ பார்க்கையில் அக்மார்க் காப்பி என குறி விட முடியும்.   கார்த்திக் முதல் முதலில்  இரட்டை வேடங்களில் நடிக்கும் படம். கண்டிப்பாக முதல் பாதி இவரின் குறும்பு கலந்த வசனம் மற்றும் சந்தானத்தின் உதவி உடன் சிரிப்பு மழை பொழிய போகிறது. ஆனால், இரண்டாம் பாதி கண்டிப்பா தெலுங்கு படத்தை போல் சொதப்ப போவது உறுதி . ஹிட் கொடுக்கும்னு சொல்ல முடியாட்டியும் கையை கடிக்காமல் போட்ட பணத்தை எடுக்க உதவும்.

சிறுத்தை - கண்டிப்பாக கார்த்திக் ரசிகர்களை  காயபடுத்த போது..

4 . ஆடுகளம் : 



வெற்றிமாறன் இயக்கி இருக்கும் படம்.பொல்லாதவன் படத்திற்கு பிறகு அவர் இயக்கும் படம். மதுரையின் பக்கம்  நடக்கும் சேவல் சண்டை தான் படத்தின் மைய கரு.. ஒரு மாலை பொழுதில் விஜய் டிவீயில் நீயா? நானா ? பார்த்து கொண்டு இருக்கும் போது தான் அவரை பார்த்தேன்.. எதார்த்தமான சினிமா தான் ஜெயிக்கும்.. மசாலா சினிமா சில காலம் மட்டுமே நினைவில் நிற்கும் என சொன்னார் .மெய்யாலுமே நம் அனைவரும் ஒத்து கொள்ள வேண்டும். பாடல்கள் எல்லாம் சூப்பர்.. த்ரிஷா ஒத்து கொண்டு பின்னர் பிரச்சனை வந்ததால் புது முகம் அறிமுக மாகும் படம். எனக்கு தெரிஞ்சா வர நாயகி தான் மொக்க தனமா படத்துல இருபாங்க.. 
உன்ன வெள்ளாவியில் போட்டு வெளுத்தாங்களா.!!
இல்ல வெயிலுக்கே காட்டாம வளத்தாங்களா .!
!
செம  வரி பாட்டுல.. அப்புறம் மதுரை தொனியில் வருகிற கொன்னேபுடுவேன்.. செம செம ..

அநேகமா இது ஹிட் ஆகும் என எதிர்பார்கிறேன் ..

ஆடுகளம் - விளையாடி வெற்றி காணும் என நினைக்குறேன் 



இதை தவிர வேறு படங்கள் எதுவும் வருதானு சரியாய் தெரிய வில்லை....

'தமிழக பாசன வரலாறு'


தமிழகப் பொதுப்பணித் துறையில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஓய்வுபெற்றவர், சமீபத்தில் மறைந்த  பழ. கோமதிநாயகம். தமிழக நீர்ப்பாசனம் பற்றிய தொலைநோக்கு பார்வை கொண்ட அவருடைய எண்ணங்கள் 'தமிழக பாசன வரலாறு' எனும் தலைப்பில் சமீபத்தில் நூலாக வெளிவந்துள்ளது. 

அதிலிருந்து சில துளிகள் இங்கே...



கி.மு. 10 ஆயிரம் மற்றும் கி.மு. 4ஆயிரம் இந்த ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தை, 'புதிய கற்காலம்' என்று வரையறுத்துள்ளனர் வரலாற்று ஆய்வாளர்கள். புதிய கற்காலத்தின்போது, கால்நடை மேய்ச்சல் நாகரிகத்தைத் தாண்டி, வேளாண்மை செய்து வாழும் நாகரிகத்துக்கு வந்துவிட்டனர் தமிழர்கள். இதற்கு ஆதாரமான கருவிகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பெரிய பெரிய ஏரிகளை ஒட்டியே கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நாகரிகத்தின் வளர்ச்சிப் படிகளில் முதலில் மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்தனர். அதன் பிறகே மழைநீரைச் சேமிக்க நீர்நிலைகள் உருவாக்கப்பட்டன. மழை இல்லாத காலங்களில் அருகில் உள்ள ஆற்றிலிருந்து நீர் கொண்டு வந்தனர். ஆற்று வெள்ளத்தைத் தடுத்து சிறிய கால்வாய்கள் மூலமாக அருகில் உள்ள நிலங்களுக்குப் பாய்ச்சுவதற்காக கொரம்புகள் கட்டும் தொழில்நுட்பம் முதலில் தோன்றியது. வளர்ச்சியடைந்த நிலையில் பாசனக் கட்டுமானங்கள் அமைக்கப்பட்டுப் பெரிய அளவில் பாசனமும் வேளாண்மையும் நடைபெற்றன. அப்படி சங்க காலத்தில் கட்டப்பட்டது... கல்லணை!

குளம் தொட்டு, கோடு பதித்து, வழி சீத்து
உளம் தொட்டு, உழு வயல் ஆக்கி, வளம் தொட்டுப்
பாகுபடும் கிணற்றோடு என்று
இவை பாற்படுத்தான்
ஏகும் சுவர்க்கம் இனிது
- சிறுபஞ்சமூலம்


'குளம்; மிகை நீர் வழிந்து செல்ல கலிங்கு; குளத்துக்கு வரும் வரத்துக்கால்; விவசாயத்துக்குத் தண்ணீர் வழங்கும் மதகு, தூம்பு, கலிங்கிலிருந்து வெள்ளம் வெளியேறும் பாதை; பாசனம் பெறும் பகுதியை உழுது வயலாக்குதல்; தண்ணீர்க் குறைவின்போது பயன்படுத்த ஊர்ப் பொதுக் கிணறு அமைத்தல்... இதையெல்லாம் செய்பவன், சொர்க்கத்துக்குப் போவான்' என்பதுதான் இதன் பொருள். இது, ஏரிப் பாசன அமைப்பு குறித்த வரைபடத்தையே நமக்குத் தருவதாக அமைந்திருக்கிறது.


ஏரிப் பாசனத் தொழில்நுட்பம் தமிழர்களிடையே 2,000 ஆண்டுகளுக்கு முன்பே மிக வளர்ந்த நிலையில் இருந்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் தமிழீழத்திலும் இன்றும் பயன்படும் ஆயிரக்கணக்கான ஏரிகள் மற்றும் குளங்களே இதற்கு சாட்சி. இலங்கைத் தொல்லியல் அறிஞர்களின் கருத்துப்படி 'பசவக்குளம்’ கி.மு.300-ம் ஆண்டு கட்டப்பட்டது.

திண்டுக்கலிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஆத்தூர். அங்கு கருங்குளம், பகடைக்குளம், புல்வெட்டிக்குளம் என்று மூன்று அடுக்கில் குளங்கள் உள்ளன. ஒரே கண்மாயில் இரண்டு குறுக்குக் கரைகள் அமைத்து மூன்றாகப் பிரிக்கப்பட்ட இந்த கண்மாய், மிகச்சிறந்தத் தொழில்நுட்பம் கொண்டது.

மூன்று கண்மாய்களும் ஒன்றைவிட ஒன்று உயர்ந்த நீர்மட்டம் கொண்டவை. பாசனம் பெறும் ஆயக்கட்டுப் பகுதியின் நிலமட்டங்களுக்கு ஏற்ற வகையில் கண்மாயின் நீர்மட்டம் கொண்டவை. இந்தக் கண்மாய் இருக்குமிடத்துக்கு அருகில் முதுமக்கள்தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தக் கண்மாய்கள் 2,100 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்தவை எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதேநிலையில், தற்போதும் இந்தக் குளங்கள் பயன்பாட்டிலிருப்பது... அதன் தொழில்நுட்பச் சிறப்பைக் காட்டுகிறது.


தனியாக இருக்கும் குளங்களைவிட, சங்கிலித் தொடராக இருக்கும் குளங்களே மழைநீரைச் சேமிக்கப் பெரிதும் உதவும். இதுபோன்ற தொடர்களின் தொடக்கத்திலுள்ள குளம், மழை வடிமுகத்திலிருந்து வரும் நீரை ஏந்துவதால் 'ஏந்தல்’ எனப்பட்டது. அதைத் தொடர்ந்து பின்னுள்ள குளங்கள்... ஏந்தலிலிருந்து வடியும் வெள்ளம் மற்றும் கூடுதல் நீரைத் தாங்குவதால் 'தாங்கல்’ எனப்பட்டன. இன்றும் ஏந்தல், தாங்கல் என முடியும் ஊர்ப்பெயர்கள் தமிழகத்தில் வழக்கத்தில் உள்ளன.

ஏரிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடராக அமைந்திருப்பதால், இடைப்பட்ட நிலங்கள் பாசனம் செய்ய உதவுவதுடன், பாசன வயல்களிலிருந்து வடியும் நீரையும் தாங்குகின்றன. பாலாறு அணைக்கட்டிலிருந்து நான்கு கால்வாய்கள் மூலம் 318 குளங்கள் சங்கிலித் தொடராக உள்ளன. இதேபோன்று பல தொடர் குளங்கள் தமிழகமெங்கும் உள்ளன. கடைசிக் குளம் பெரும்பாலும் கோயில் குளமாக இருக்கும். அந்தக் குளம் நிரம்பி, அந்தத் தண்ணீரில் கோயில் தெய்வத் திருமேனிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பிறகே, தலைமடை முதல் கடைமடை வரை விவசாயப் பணிகளைத் தொடங்குவதென்பது நடைமுறையில் இருந்தது (பழையாற்றில் கடைசிக் குளம்... கன்னியாகுமரிக் குளம்; தாமிரவருணியின் கடைசிக் குளம்... திருச்செந்தூர்க் குளம்).


ஏரிப்பாசன அமைப்புகளை உருவாக்குவதில் மட்டுமன்றி நிர்வகிப்பதிலும் தமிழர்கள் சிறந்து விளங்கினர். ஏரிகளில் சேமிக்கப்படும் தண்ணீரை எல்லா நிலங்களுக்கும் பகிர்ந்தளிக்க; குறைவாக இருக்கும் சமயங்களில் பகிர்ந்து கொள்ள; ஏரிகளின் கரைகள், மதகுகள் மற்றும் கலிங்கு போன்ற கட்டுமானங்களைப் பராமரிக்க அமைப்புகள் இருந்தன. ஏரிப்பட்டி விளைச்சலில் வரும் வருமானத்தை ஏரிப் பராமரிப்பு தவிர வெறெதற்குப் பயன்படுத்தினாலும் ஏரி வாரியப் பெருமக்களாக இருந்தாலும், அபராதம் விதிக்கப்பட்டது.


ஆற்றிலிருந்து நீர் எடுத்து வரும் வாய்க்காலுக்கு மேல் பகுதியில் புதிதாக வேறொரு வாய்க்கால் வெட்டக் கூடாது என்பதை, 'காலுக்கு மேல் கால் கல்லலாகாது’ என்று ஸ்ரீவல்லப பாண்டியனின் பதினாறாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட குருவித்துறை பெருமாள் கோயில் கல்வெட்டு கூறுகிறது. மேல் பகுதியில் புதிய வாய்க்கால் வெட்டுவது, ஏற்கெனவே கீழேயுள்ள பழையப் பாசனதாரர்களின் உரிமையைப் பாதிக்கும் என்பதாலேயே இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் இன்று ஏற்றுக்கொள்ளப்படும் கீழமை பாசனதாரர்களின் 'முன்னுரிமை’ (Riparian right of lower down ayacut) என்ற உரிமை பற்றி அன்றே கூறியிருப்பது தமிழர்களின் தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது.

Monday, January 10, 2011

நெல்சன் ஒரு சாதனைப் பயணம்!

நெல்சன்

24 மணி நேரத்தில் 1000 மைல்களை அதாவது, 1,609 கி.மீ தூரத்தை மோட்டார் சைக்கிளில் கடந்தால், 'இரும்பு புட்டம்’ என்ற பொருள்படும்படி 'ஐயன் பட்’ என்று பாராட்டி, 'ஐயன் பட் அசோசியேஷனில்’ இணைத்துக் கொள்வார்கள். அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் இருக்கும் இந்த அமைப்பில் உறுப்பினராவதை, உலகெங்கும் இருக்கும் பயண ஆர்வலர்கள் பெரும் பாக்கியமாகக் கருதுகிறார்கள். நெல்சனும் இதற்கு விதிவிலக்கல்ல! 


நேரம் கிடைத்தால், தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தூத்துக்குடி-திருச்செந்தூர், தூத்துக்குடி -சென்னை என்று பறந்துகொண்டு இருந்த நெல்சன்தான், இப்போது துபாயின் ராயல் என்ஃபீல்டு டீலர். முயற்சி செய்தால் எட்டிவிடக் கூடிய சாதனையே என்று இதை நெல்சன் நினைத்ததால்... இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு கடந்த மே 28-ம் தேதி இரவு பன்னிரண்டு மணிக்குத் தனது பயணத்தைத் துவக்கினார். மணல் புயல், 47 டிகிரி அனல் காற்று என்று அனைத்தையும் தாக்குப் பிடித்து, சவுதி அரேபியாவின் பார்டரைத் தொட்டுவிட்டு, அதே பாதையின் வழியாக மீண்டும் அவர் துபாய் வந்து அடைந்தபோது, இரவு மணி 11 மணி.


சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு... அதாவது, ஜூன் 2008-ம் ஆண்டுதான் நெல்சன் அந்தச் சாதனையை நிகழ்த்தினார். தென் அமெரிக்காவில் ஆரம்பித்து மத்திய அமெரிக்கா வழியாக வட அமெரிக்காவின் உச்சியான அலாஸ்காவை அடைய வேண்டும். இந்தக் கனவுப் பயணத்துக்கு 15 நாடுகளையும் 28,500 கி.மீ தூரத்தையும் தனது ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கடந்திருக்கிறார் நெல்சன்!

 


பைக் பயணத்தை விரும்புகிறவர்களை ஒருங்கிணைத்து, பல சாகசப் பயணங்கள் அழைத்துச் செல்லும் ஒரு நிறுவனத்தை அவர் துபாயில் துவக்கி நடத்தி வருகிறார். பாலைவனத்தில் ஆல் டெரைய்ன் வாகனத்தில் பயணம் செய்ய விரும்பினால்... அதற்கான பேக்கேஜும் நெல்சனிடம் உண்டு!

குமுதம் 

Sunday, January 09, 2011

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்...ஓ பக்கங்கள்! ஞாநி


புது வருடக் கணக்கைத் தொடங்கிவிட்டார் கலைஞர் கருணாநிதி. இந்த வருடத்தின் முதல் பொய் - “முதலமைச்சரை விடப் பெருமைக்குரியவர் ஒரு புலவர் என்பதை இன்று நேற்றல்ல என்றைக்குமே நான் மதித்து அந்தத் தமிழுக்குப் பெருமையைத் தரக்கூடியவன்.”

பாடலாசிரியர் வைரமுத்துவின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வரும் பிரதமர் மன்மோகன்சிங்கை விமான நிலையத்தில் வரவேற்க வேண்டிய ‘முதலமைச்சரின் கடமையை’ செய்யாமல் வந்துவிட்டதாக கருணாநிதி பேசியிருக்கிறார். இது உண்மையென்றால் அடுத்த நாள் தமிழக அரசு சார்பில் முதல்வர், பிரதமரைச் சந்திக்கச் செல்லாதது ஏன் என்று அளித்த விளக்க அறிக்கையிலும் இதையேதானே சொல்ல வேண்டும்? அதில் “முன்கூட்டியே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிக்குச் செல்லவேண்டியதாயிற்று. அங்கே ஒளிவிளக்குகளால் கண்ணில் நீர் கசிந்தது. மருத்துவரைச் சந்தித்துவிட்டு பின்னர்தான் பிரதமரைக் காணச் செல்ல முடிந்தது” என்று விளக்கியிருக்கிறார்கள். “பிரதமரை வரவேற்பதை விட புலவரைக் கௌரவிப்பதே முதன்மையானது என்று முதலமைச்சர் கருதியதால் செல்லவில்லை” என்று தமிழக அரசு அறிக்கையிலும் சொல்ல வேண்டியதுதானே?
கிழிந்து கந்தலாகிக் கொண்டிருக்கும் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியில் ‘கெஞ்சினால் மிஞ்சுவது, மிஞ்சினால் கெஞ்சுவது’ என்ற உத்தியை எப்போதும் பிரயோகித்துவரும் கருணாநிதி, இப்போதும் அதே வேலையைச் செய்திருக்கிறார். அவ்வளவுதான். காங்கிரசுடன் உறவு எப்படியிருக்கிறது என்று நிருபர்கள் கேட்டபோது, “எனக்கும் உங்களுக்கும் (பத்திரிகையாளர்களுக்கும்) உள்ள அளவில் இருக்கிறது” என்று பதில் சொல்கிறார் கருணாநிதி. அவருக்கும் பத்திரிகையாளர் களுக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது? சங்கடமான கேள்விகளைத் தப்பித் தவறி ஏதேனும் ஒரு நிருபர் கேட்டால், “யார்யா நீ?”, “உனக்கு என்ன அதைப் பத்தி?”, “உங்க வீட்டுலயா ரெய்டு நடந்துது?” என்று எரிந்து விழும் உறவுதான் அவருடையது. தானே பதில் சொல்ல விரும்பும் கேள்விகளைக் கேட்பதற்கென்றே நிருபர்களில் ஒரு கோஷ்டியைத் தயார் செய்து வைத்திருப்பது அவரது உறவின் மறுபக்கம். இதே அணுகுமுறைதான் காங்கிரசுடனும் உள்ளது. ரெய்டு, ஸ்பெக்ட்ரம் போன்ற சங்கடமான பிரச் னைகளில் தம் எரிச்சலைக் காட்ட பிரதமரைப் புறக் கணிப்பது; தாம் விரும்பும் அறிக்கைகளை வெளியிட காங்கிரசுக்குள்ளே ஒரு தி.மு.க. - காங்கிரஸ் பிரிவை வைத்திருப்பது. இவைதான் அவரது கூட் டணி அணுகுமுறை.
புலவர்களை எப்போதும் மதிக்கும் ‘மன்னன்’ நான் என்று கருணாநிதி சொல்லியிருப்பது இன் னொரு பொய். தம்மை விமர்சிக்காமல் புகழ்ந்து கொண்டேயிருக்கும் புலவர்களை மதிப்பது என்று அதைத் திருத்தி வாசிப்பதே பொருத்தமாக இருக்கும். வைரமுத்து மட்டும் வேறொருவரைக் கொண்டு தம் நூலை வெளியிட்டிருந்தால், அடுத்த நிமிடமே வேண்டாத புலவராகியிருப்பார் என்பது இருவர் மனசாட்சிக்கும் தெரியும். வாலி புகழ்வதை நிறுத்தின அடுத்த நொடியில் ஆரிய நச்சுப் பாம்பாகிவிடுவார் என்பதும் அவருக்குத் தெரியும்.
ஓரிரு வாரங்கள் முன்பு தான் சாகித்ய அகாதமி பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பரிசு பெறும் நாஞ்சில் நாடனைப் பாராட்டி கருணாநிதியிடமிருந்து ஒரு அறிக்கை உண்டா? கேரளத்தில் இப்படிப்பட்ட பரிசுகள் அறிவிக்கப்பட்டால், உடனே முதலமைச்சர், எழுத்தாளர் வீடு தேடிப் போய் பாராட்டுகிறார். இங்கே “யாருய்யா அவன் நாஞ்சில்நாடன்? யாரு ஆளு? கனி(மொழி) கூப்பிட்டா சங்கமத்துக்கு வரமாட்டேங்கறானாமே?” என்றுதான் ‘அரண்மனை’ உரையாடல்கள் நிகழும் வாய்ப்பிருக்கிறது. நாஞ்சில்நாடன் கிண்டலாகச் சொல்வதுபோல, பரிசு பெறும் எழுத்தாளன் தானே ஒரு மஞ்சள் சால்வையும் சிவப்பு சால்வையும் வாங்கிக் கொண்டு தலைமைச் செயலகத்துக்குப் போய் பல மணி நேரம் காத்திருந்து ஒரு சால்வையைப் போர்த்தி இன்னொன்றைப் போர்த்தவைத்து, தன் செலவில் படமும் எடுத்து, பத்திரிகைகளுக்குத் தரவேண்டிய நிலை.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் சாகித்ய அகாதமி ஏராளமான தமிழ்ப் படைப்புகளைப் பிற இந்திய மொழிகளிலும் பிற மொழிப் படைப்புகளைத் தமிழிலும் வெளியிட்டிருக்கிறது. இது போல ஒரே ஒரு ஆக்கபூர்வமான வேலையையாவது தமிழக அரசு செய்ததுண்டா? எழுத்தாளர் படைப்புகளை நாட்டுடைமையாக்குகிறேன் என்ற பெயரில் தகுதியானவர்களுடன் சேர்த்து, கும்பலோடு கோவிந்தாவாக எந்தத் தகுதியும் இல்லாத வேண்டப்பட்டவர்களின் படைப்புகளுக்குக் காசு கொடுத்ததுதான் ஒரே சேவை. இயல் இசை நாடக மன்றத்தின் கலைமாமணி விருதுகளை 25 ஆயிரம் ரூபாய் ரேட்டுக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளர் பிரபஞ்சன் வாடகைக்குக் குடியிருக்கும் அரசுக் குடியிருப்பு ஒழுகுகிறது. வேறு வீடு மாற்றிக் கொடுங்கள் என்று மனுபோட்டு அலுத்துப் போய்விட்டார் என்று வேதனையுடன் நாஞ்சில் நாடன் ஒரு மேடையில் குறிப்பிட்டார். 

சாகித்ய அகாதமியின் தென் மண்டல அலுவலகம் - நான்கு தென் மாநிலங்களுக்குமானது, சென்னையில்தான் பல காலம் இயங்கி வந்தது. தங்களுக்கென்று தனியே நிலம் ஒதுக்கித் தரும்படி தமிழக அரசைக் கேட்டது சாகித்ய அகாதமி. புலவர்களை மதிக்கும் அரசு, முரசுக்கட்டிலில் புலவரோடு சேர்த்துக் கோப்புகளையும் தாலாட்டு பாடித் தூங்க வைத்துக் கொண்டிருந்த வேளையில், கர்நாடக அரசு முந்திக் கொண்டது. கன்னடப் படைப்பாளிகளும் அரசும் கை கோத்து நின்றதால், தென் மண்டல அலு வலகமே அங்கே போய்விட்டது. இங்கே எஞ்சியது சாகித்ய அகாதமியின் சென்னை அலுவலகம் எனப்படும் விற்பனை நிலையம்தான். அதற்கும் புலவர்களை மதிக்கும் அரசில் ஆபத்து வந்துவிட்டது. தரமணி உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் ஒதுக்கிய இடத்தைக் காலி செய்யச் சொல்கிறது தமிழக அரசு. சாகித்ய அகாதமிக்கு, சென்னையில் அலுவலகம் கூட இல்லாமல் போய்விடும் நிலை.
இலவசங்களை வழங்குவதையே அரசுக் கொள்கையாக வைத்திருக்கும் முதலமைச்சர், இலவசமாக இப்படி வழங்கும் பொய்களுக்கு நாம் தரும் விலை மிகப் பெரியது.
ஏழைகள் இருக்கும்வரை இலவசங்கள் தனது ஆட்சியில் தொடரும் என்று மிகுந்த பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறார் கருணாநிதி. எவ்வளவு காலத்துக்கு ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள்? அடுத்த தலைமுறையின் வாரி” அரசுக் கட்டிலில் அமரும்வரையா? அதற்கு அப்புறமுமா? தமிழ்நாட்டில் மொத்தம் ஆறு கோடி 65 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு இலவச வேட்டி சேலை அளிக்கப்படுகிறது. அதன் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? மக்கள் தொகையில் ஏறத்தாழ சரி பாதி. மூன்று கோடி 11 லட்சத்து 23 ஆயிரம்! ஐந்து முறை கருணாநிதி முதலமைச்சராக இருந்து சாதித்தது என்ன? தமிழர்களில் சரி பாதி பேரை வறுமைக் கோட்டுக்குக் கீழேயே வைத்திருப்பதுதானா?

சுமார் 15 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கொத்த மங்கலம் கிராமத்தில் இலவச டி.வி. பெட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தி.மு.க செயலாளர் தலைமையேற்று டி.வி.பெட்டிகளை வழங்கிக் கொண்டிருந்தார். அரசு விழாவில் ஏன் கட்சியின் மாவட்டச் செயலாளர் பெட்டிகளை வழங்குகிறார் என்றெல்லாம் நாம் அசட்டுத்தனமாகக் கேட்கப் போவதில்லை. அங்கே பெட்டி வாங்க வந்த விவசாயி விஜயகுமார் என்பவர் பெட்டியை வாங்கிக் கொண்டு திருப்பி அளித்து விட்டு கூடவே ஒரு கடிதத்தையும் கொடுத்தார். அந்தக் கடிதம் சாதாரணக் கடிதமல்ல; வரலாற்றில் இடம்பெற வேண்டிய கடிதம்.

“மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்துவிட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத் துறை தன்னிறைவு அடைந்துவிட்டதா? துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது? இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தைத் தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும். அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர்ப் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது. எனவே, இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன். அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகி விடும்” என்று அந்தக் கடிதத்தில் விஜயகுமார் சொல்லியிருக்கிறார்.

ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் சொல்கிறார் : “சாராயத்தைக் குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியைத் தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு. ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இரண்டாயிரம் கோடி செலவாகும். இதை வைத்துத் துறைகளைத் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.”

விஜயகுமாரின் கடிதம்... கடிதம் அல்ல; சவுக்கடி. அல்லற்பட்டு ஆற்றாது அழும் ஒருவர் கண்ணீர் விடாமல் ரௌத்ரம் பழகி அரசுக்குக் கொடுத்த சவுக்கடி.

கலைஞர் அவர்களே, நீங்கள் முதல்வராக இருக்கும் காலம் வரையில் “நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்”. குறைந்தபட்சம், ‘நான் ஒரு கம்யூனிஸ்ட்’, ‘நான் ஏழைகளுக்காகவே வாழ்கிறேன்’, ‘புலவர்களை மதிக்கும் மன்னன்’ மாதிரி பொய்களைச் சொல்லாமல் இருங்கள். 

இந்த வார திட்டு!

சி.பி.ஐ. ரெய்டு செய்த தமிழ் மையம் அமைப்புடன் சேர்ந்து சென்னை சங்கமம் திருவிழா நடத்த அரசுப் பணத்தை ஒதுக்கியிருக்கும் தமிழக அரசின் சுற்றுலாத் துறைக்கு இ.வா.திட்டு. ரெய்டுக்குள்ளான அமைப்பு தொடர்பான வழக்கு விசாரணை முடிந்து குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்படும்வரை அவற்றுடன் தொடர்பு கொள்ளாமல் ஒதுங்கியிருக்க வேண்டிய தார்மிகக் கடமையைச் செய்யத் தவறியதற்காக இ.வா.தி.

இந்த வாரப் பூச்செண்டு!

சென்ற 2009ல் 321 உடல் உறுப்புகள் மட்டுமே தானமாகக் கிடைத்தன. 2010ல் 523 என்று தமிழக அரசின் உறுப்பு மாற்று திட்ட அமைப்பாளர் டாக்டர் அமலோற்பவநாதன் அறிவித்திருக்கிறார். முன்பைவிட அதிகமாக உடல் (உறுப்பு) தானம் செய்ய முன் வரும் தமிழக மக்களுக்கு இ.வா.பூ.

கல்கி 

Saturday, January 08, 2011

2ஜி லைசென்ஸ் - உரிமையாளர்கள்

ஸ்பெக்ட்ரம் 2ஜி லைசென்ஸ் உரிமங்களைப் பெற்ற கம்பெனிகளின் உரிமையாளர்கள் பற்றிய விவரங்கள்

1.ஸ்வான்: சாகித் பல்வா குடும்பமும் வினோத் கோயங்கா குடும்பமும் இணைந்து நடத்தும் கம்பெனி. மும்பையில் ரியல் எஸ்டேட் துறையில் கொடிகட்டிப் பறக்கும் பலே கம்பெனி. ''இந்திய உளவுத் துறை எடுத்துவைத்திருக்கும் சான்றுகளின்படி இதன் முக்கியத் தொடர்பில் தற்போது கராச்சியில் வசிக்கும் - பகீர் மனிதர் ஒருவரும் இருக்கிறார்!'' என்றும் சொல்லப்படுகிறது. 

கம்பெனி உரிமையாளரான சாகித் உஸ்மான் பல்வா உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 937-வது நபராக இருக்கிறார். இவரது இருப்பிடம் மும்பை. இதே கம்பெனியின் இன்னொரு சேர்மனான வினோத் கே.கோயங்கா இருப்பதும் மும்பையில்தான். 

2.சிஸ்டமா ஷியாம் டெலிகாம்: எம்.டி.எஸ். குரூப்புடன் இணைந்த நிறுவனம் இது. டவர் 334, உதயோக்  பவன், குர்ஹான், ஹரியானா மாநிலம் என்ற முகவரியில் திடீரென முளைத்த நிறுவனம் இது. இதன் இயக்குநர்களில் இந்தியர்கள் யாரும் இல்லை!

3.லூப் டெலிகாம்: இதன் இந்திய இயக்கு நராக சந்தீப் பாசு என்பவரும் பங்குதாரராக அய்லோன் என்பவரும் இருக்கிறார்கள். மும்பை மாகிம் வெஸ்ட் பகுதியில் இவர்கள் இருந்திருக்கிறார்கள். 2ஜி விண்ணப்பத்தை உத்யோக் விஹார், குர்ஹான் பகுதியில் இருந்து அனுப்பியிருந்தார்கள். இதன் நிஜஉரிமை யாளர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாம்! 

4.யூனிடெக்: ஒன்பது உரிமையாளர்கள் கொண்ட நிறுவனமாக இது உள்ளது. ரமேஷ் சந்திரா (சேர்மன்), அஜய்சந்திரா (எம்.டி., எச்.ஆர்.டி), சஞ்சய் சந்திரா (எம்.டி., அட்மின்), சஞ்சய் பகதூர், அனில் ஹரீஸ், ரவீந்தர் சின்கானியா, அம்ப்வானி, மினோத் பாஷி, மகந்தி ஆகிய ஒன்பது பேர்தான் சூத்திரதாரிகள். ''இந்த நிறுவனத்துக்கு முழுக்க முழுக்க நீரா ராடியா ஏஜென்டாக செயல்பட்டுள்ளார். இதுதான் மிகப்பெரிய வெளிநாட்டு நிறுவனத்தின் துணைப் பெயரில் உருவானது!'' என்கிறது சி.பி.ஐ. 
 
5.எஸ்.டெல் நிறுவனம்: 'ஸ்டெர்லிங்' சிவசங்கரன் என்றால் முன்பு தமிழகம் நன்கு அறியும். முரசொலி மாறனின் நண்பராக இருந்தவர். மெர்கன்டைல் வங்கியை வாங்கிய பிரச்னையில் இவர் செம ஹாட்டாக நியூஸில் அடிபட்டார். இன்றைய 'கலைஞர்' டி.வி-யின் உருவாக்கத்திலும் இவரது பங்கு நிறைய இருந்ததாகச் சொல்வார்கள். நிலம் விவகாரம் ஒன்றில் புகார்கள் கிளம்பி அவர் தவிர மற்ற பல நிர்வாகிகளும் கைதான பழங்கதையும் உண்டு. அந்த சிவசங்கரனின் நிறுவனம்தான் இது.
சிவசங்கரன் (சேர்மன்), வி.சீனிவாசன் (சி.இ.ஓ), பி.சுவாமிநாதன் (தலைவர்)... மற்றும் இயக்குநர்களான பீட்டர் கலிபோல்ஸ், எஸ்.சரவணன், எஸ்.நடராஜன், அலி யூசுப், அப்துல் ரஹ்மான் ரஷிம், டாக்டர் காசன் முராத் ஆகியோர் அடங்கிய டீம் இந்த நிறுவனத்தை நடத்துகிறது. 

6.ஐடியா செல்லுலார்: இதன் இந்திய உரிமையாளர்களாக 12 பேரின் பெயர்கள் உள்ளன. குமாரமங்கலம் பிர்லா இதன் சேர்மனாக இருக்கிறார். ராகேஷ் ஜெயின், பிஸ்வாஜித் அன்னசுப்பிரமணியம், பிரகாஷ், தர்ஜானி வாகிப், பி.முராரி, ஜான் விட்டலங்க நவரோ, ராஜஸ்ரீ பிர்லா, சூரிபுத்த அன்ஸா, அருண் தியாகராஜன், சஞ்சய் அஹா, பார்கவா (இயக்குநர்கள்) ஆகியோர் பெயர்கள் உள்ளன. குஜராத் மாநிலம் காந்திநகர் முகவரியில் இருந்து இந்நிறுவனம் செயல்பட்டுள்ளது. இவர்கள் தங்களது பங்குகளை வெளிநாட்டுக்கு விற்றுள்ளனர். 

7. வீடியோகான்: வேணுகோபால் என்.தத் என்பவர் இதன் சேர்மன். பிரதீப் என்.தத், கே.சி.ஸ்ரீவத்சவா, சத்யபால் தல்வார், எஸ்.பத்மநாபன், மேஜர் ஜெனரல் எஸ்.சி.என். ஜட்டார், அருன் எல்.போங்னிவார், ராடி ஷியாம் அகர்வால், குனிலா நார்ஸம், பி.என்.சிங், அஜய் சாப் ஆகியோர் பெயர்கள் இதன் முக்கிய நிர்வாகிகள் பட்டியலில் உள்ளன. இதற்கான தலைமை அலுவலகம் டெல்லியில்! 

8. ரிலையன்ஸ் டெலிகாம்: அனில் அம்பானி - அதிகம் சொல்ல வேண்டியதில்லை! 

9. டாடா டெலிகாம்: ரத்தன் டாடா - தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.


Friday, January 07, 2011

புதியதோர் மாற்றம் காண்போம்..

இந்தியா மனிதவளம் மிகுந்த நாடு. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள்தொகை இருந்தாலும் விரைவில் அதையும் விஞ்சிவிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்குப் பாதி இளைஞர்கள் என்பது நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரும் மனித வளமாகும். இந்த வளத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிய வேண்டும். ஓர் அணுகுண்டை ஒரு குழந்தைகூட வைத்து விளையாடலாம். ஆனால், அதிலிருந்து எழும் ஆற்றல் அகில உலகத்தையும் அழித்துவிடும் அல்லவா! இந்த அணுவை ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தினால் இன்னொரு புதிய உலகத்தைக் கட்டி எழுப்ப முடியும்.

மலைப் பிரதேசத்தில் மழை பொழிந்து ஓடிவரும் காட்டாற்று வெள்ளம் மக்கள் வாழும் இருப்பிடங்களையும், வயல் வரப்புகளையும், வேளாண்மை செய்திருக்கும் பயிர்களையும், ஆடு மாடுகளையும் அழித்துவிட்டு வீணே கடலில் போய் கலப்பதால் பயன் என்ன? அந்தக் காட்டாற்று வெள்ளத்தைக் கரைகட்டித் தேக்கினால் அழிவையும் தடுக்கலாம்; உயிர்களையும், பயிர்களையும் வாழ வைக்கலாம் அல்லவா!

நம் நாட்டு இளைஞர்களின் ஆற்றலை நல்வழிக்குப் பயன்படுமாறு செய்ய வேண்டும். குடித்துவிட்டுக் கும்மாளம் அடிப்பதும், கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டுத் திரைப்படங்களுக்குப் போவதும், ஜாதி-சமயக் கலவரங்களுக்கு அடியாள்களாக மாறுவதும் தேவைதானா? திரைப்பட நாயகர்களுக்கு "ரசிகர் மன்றம்' அமைப்பதும், அவர்களது படங்கள் வெளிவந்துவிட்டால் பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் செய்வதும் அவர்களது சக்தியை வீணடிப்பதாகும்; விழலுக்கு இறைப்பதாகும்; இளைய சமுதாயத்துக்கே இழிவாகும். "காலம் கண் போன்றது; கடமை பொன் போன்றது' என்பது இவர்களுக்குத் தெரியவில்லை. இதனால்தான் கிடைத்தற்கரிய தங்களின் அருமையான இளமைப் பருவத்தைக் கேளிக்கைகளிலும், வீண் பொழுதுபோக்குகளிலும் செலவழிக்கின்றனர். இன்னும் சிலர் அடுத்தவர்களை - அதிலும் பெண்களையும், பெரியவர்களையும் கேலியும், கிண்டலும் செய்வதில் இன்பம் காண்கின்றனர். மற்றும் சிலரோ தேவையற்ற போதைப் பொருள்களுக்கு அடிமையாகித் தவிக்கின்றனர். இதுபற்றி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். ""இன்றைய இளைஞர்களை நினைத்து எனக்குக் கலக்கமாக இருக்கிறது. அவர்கள் போதைப் பழக்கத்துக்கு ஆளாகித் தவிக்கின்றனர். இந்தியாவின் எதிர்காலமே இதனால் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது...'' என்பதே அவர் கவலை. நேற்று என்பது இறந்தகாலமாகிவிட்டது. நாளை என்பது நமக்கு வராமலேயே போய்விடலாம். இன்று மட்டுமே நிச்சயம். அதனை வாழ்ந்து காட்ட வேண்டாமா? இன்றைய வாழ்க்கையே நாளைய வரலாறு. நாம் இதுவரை வரலாறு படித்தது போதும்; புதிய வரலாறு படைக்க வேண்டாமா?

விவேகானந்தர் தனது வெற்றிகரமான அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு, 1897 ஜனவரி 26 அன்று தாயகம் திரும்பினார். இந்திய இளைஞர்கள் உடல் பலமற்றவர்களாக இருப்பதைக் கண்டு வருந்தினார். அதனால் அவர்கள் சோர்வுமிக்கவர்களாக இருக்கின்றனர்; உழைக்க முடிவதில்லை. சோம்பலும், சுயநலமும் ஒழியாமல் மதநேயமும், மனிதநேயமும் எப்படி வளரும்? ""எனது இளைய நண்பர்களே! பலமுடையவர்களாக ஆகுங்கள். அதுதான் நான் உங்களுக்கு அளிக்கக்கூடிய அறிவுரை. நீங்கள் கீதையைப் படிப்பதைவிட கால்பந்து விளையாடுவதன் மூலம் சுவர்க்கத்துக்கு அருகில் செல்வீர்கள். உங்கள் கை கால் தசைகளில் இன்னும் கொஞ்சம் பலம் வந்தால், கீதையை நன்றாகப் பொருள்புரிந்து கொள்வீர்கள்...'' இவ்வாறு சென்னை வரவேற்பில் அவர் பேசினார்.

விவேகானந்தர், இளைஞர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். "சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும்' என்பதுபோல இளைஞர்களைக் கொண்டுதான் இந்தியாவை எழுப்ப வேண்டும் என்று எண்ணினார்; எதிர்காலம் என்பது இளைஞர்கள் கைகளில்தான் இருக்கிறது என்று நம்பினார். அதனால்தான் அவர் பிறந்தநாள், "தேசிய இளைஞர் தின'மாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மக்கள்தொகையில் 54 கோடிப் பேர் அதாவது சுமார் பாதிப்பேர் 25 வயதுக்கு உள்பட்ட இளைஞர்கள். ஆண்டுதோறும் நாட்டில் 30 லட்சம் பட்டதாரிகள் உருவாக்கப்படுகிறார்கள். 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்தவர்களில் சுமார் 70 லட்சம் பேர் ஆண்டுதோறும் வேலை தேடுகிறார்கள். இந்த இரு பிரிவினருமாக வேலைவாய்ப்புச் சந்தைக்கு ஆண்டுதோறும் 1.3 கோடி இளைஞர்கள் சேர்ந்துகொண்டே இருக்கின்றனர். எனினும், 21-ம் நூற்றாண்டைப் பொறுத்தவரை உயர் கல்வி பெற்ற ஏராளமான இளைஞர்கள் நாட்டுக்குத் தேவை. இத்தேவையைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களும், இதர கல்வி நிறுவனங்களும் இரண்டுவிதப் பிரிவினரை உருவாக்க வேண்டும். குறிப்பிட்ட அறிவுத் திறனும், திறமைகளும் உடைய இளைஞர்கள் ஒருவகை. உயர்கல்வி கற்ற இளைஞர்கள் இன்னொருவகை. இவர்களுக்கு நம் நாட்டில் மட்டுமன்றி, உலக அளவிலும் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

இன்றைய காலகட்டத்தில் நாட்டின் அனைத்துத் துறைகளிலும் இளைஞர்களின் பங்களிப்புத் தேவைப்படுகிறது. ஆனால், அவர்களை நாடு பயன்படுத்திக் கொள்கிறதா என்றால், "இல்லை' என்பதை வருத்தத்துடன் ஒத்துக்கொள்ள வேண்டும்.
 
கல்வி என்பது அறிவு வளர்ச்சிக்கான அடையாளம் என்பதுபோய், பணம் சம்பாதிப்பதற்கான "பட்டம்' என்றே எண்ணும் நிலை ஏற்பட்டுவிட்டது. உயர்கல்வி கற்பதே அமெரிக்கா முதலிய அயல்நாடுகளுக்கு அனுப்புவதற்காகத்தான் என்பதில் பெற்றோர்கள் தீர்மானமாக இருக்கின்றனர். இந்திய ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு, அயல்நாடுகளுக்குச் சேவை செய்ய இவர்கள் அனுப்பப்படுகின்றனர் என்பது எவ்வளவு பெரிய அவலம்! இந்த இளைஞர்களின் சேவை தாயகத்துக்குத் தேவையில்லையா?

இன்று அரசியல் லாபகரமான தொழிலாகத்தான் இருக்கிறது; குற்றவாளிகளின் கடைசிப் புகலிடமாக அல்ல, முதல் புகலிடமாகவே இருக்கிறது. அதனால்தான் நல்லவர்கள் அங்கு செல்லவே அஞ்சுகின்றனர். எனினும், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அரசியல்தான் நம்மை ஆள்கிறது. அதனைப் புறக்கணித்துவிட முடியாது. இந்திய அரசியல் எப்போதுமே இப்படி இருந்தது இல்லை. காந்திஜி, பெரியார், காமராஜ், அண்ணா, ஈ.எம்.எஸ். போன்ற எண்ணற்ற தியாகசீலர்கள் அரசியலில் இருந்திருக்கின்றனர். அந்தத் தூய அரசியலை மறுபடியும் கொண்டுவர வேண்டும். இளைஞர்கள் இதில் ஈடுபட்டு, எதிர்நீச்சல் போட்டு ஒரு புதிய வரலாறு படைப்பதை நாம் வரவேற்க வேண்டும்.

"இளங்கன்று பயமறியாது' என்பது பண்டைத்தமிழ் மக்களின் பழமொழி. பயமறியாத இளைஞர்களின் போராட்டமே உலகம் முழுவதும் வெற்றிக்கனியைப் பறித்துத் தந்துள்ளது. இந்திய விடுதலைப் போராட்டமும் அப்படித்தான். இன்னும் பறிக்க வேண்டிய கனிகள் ஏராளம். 
இளைஞர்களே! எழுந்து நில்லுங்கள். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

 நன்றி - விவேகந்தர் வரலாறு, அப்துல்கலாம் புத்தகங்கள், தி ஹிந்து, எக்ஸ்பிரஸ் நாளேடு



Thursday, January 06, 2011

ஒரு கை... ஒரு உயிர்... 'ஸ்லம்டாக் மில்லியனர்’ குழுவின் அடுத்த விருந்து.

மெரிக்காவின் உடா பகுதியில் அமைந்திருக்கும் இடுங்கிய இடுக்குகளைக்கொண்ட மலைப் பள்ளத்தாக்கு அது. வெட்ட வெளியில் இரண்டு கிலோ கேக்கை எடுத்துவைத்தால்கூட, ஓர் ஈ, எறும்பு, காக்காகூட மொய்க்காமல் கேட்பாரற்றுக்கிடக்கும் பிரதேசம். அந்தப் பிராந்தியத்தில் ஒற்றை ஆளாக மலையேறிக்கொண்டு இருக்கிறார் 28 வயது ஆரன் ரால்ஸ்டன். யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல், சட்டென்று கிளம்பிச் சென்று இப்படித்தான் எங்கேனும் மலை ஏறிக்கொண்டு இருப்பார் என னைவரும் கூறுகிறார்கள்.

ஒருநாள் அப்படித்தான் இரண்டு மலைத் தொடர்களுக்கு இடையிலான மிகக் குறுகலான ஓர் இடைவெளியில் ஊர்ந்து சென்றுகொண்டு இருந்தார். ஒரு திடுக் நிமிடத் தில் மேலே இருந்து ஒரு பாறை உருண்டு விழுந்தது. கடைசி நிமிடத்தில் சுதாரித்த ஆரன், தலையை விலக்கிக்கொண்டார். ஆனால், அந்தப் பாறை அவரது வலது கையில் நச்சென்று பதிந்து மலைச் சுவரோடு இறுக்கி அழுத்திச் சொருகிக்கொண்டது. ஓர் அங்குலம்கூட 'அங்கிட்டு இங்கிட்டு’ நகர முடியாத இறுக்கம். கை எலும்பு விரிசல் அடைந்ததில் வலி கிளம்பி உடல் முழுக்கப் பரவுகிறது.
 'ஹெல்ப் மீ... ஹெல்ப் மீ!’ என்று கூப்பாடு போடுவதன் மூலம் மிச்சம் இருக்கும் சக்திதான் வீணாகும். வலியைப் பொறுத்துக்கொண்டு பாறை இளகும் சமயம், கையை விடுவிப்பதற்காகப் பொறுமையாகக் காத்திருந்தார் ஆரன். ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம், ஐந்து மணி நேரம் அல்ல... முழுதாக ஐந்து நாட்கள்!

ஐந்து நாட்களும் ஒரு மில்லிமீட்டர்கூட அசைய முடியாமல் அங்கேயே இருந்தார் ஆரன். தோளில் மாட்டி இருந்த சின்ன தண்ணீர் பாட்டிலில் இருந்து அவ்வப்போது கொஞ்சம் தண்ணீர் குடித்துக்கொண்டார்.  ஐந்து முழு நாட்கள் கடந்த பிறகு, தீர்க்கமாக ஒரு முடிவு எடுக்கிறார்.

ஜெர்கின் கோட்டுக்குள் இருந்த ஒரு சின்ன கத்தியை எடுத்துத் தனது வலது கையைத் தானே அறுக்கத் தொடங்குகிறார். மிகவும் மொண்ணையான அந்தக் கத்தியால் ஒரு தர்பூசணிப் பழத்தையே வெட்ட முடியாது. ஆனால், வேறு வழி இல்லை. மெதுவாக, மிக மெதுவாக, வலியைப் பொறுத்துக்கொண்டு, சின்னச் சின்ன இளைப்பாறலுக்குப் பிறகு, சக்தியைத் திரட்டி கையை அறுத்துக்கொண்டே இருந்தார். வலித்து, வலியில் மரணித்து, வலி மரத்து... ஒருவழியாகப் பாறையில் இருந்து விடுதலை ஆனார் ஆரன். பள்ளத்தில் இருந்து மேலே ஏறிக் கீழே பார்த்தபோது... அந்த ஒற்¬றக் கையில் இருந்து இன்னும் ரத்தம் வடிந்துகொண்டு இருந்தது!

ஆரன் அந்த மலை இடுக்கில் சிக்கி இருந்த 127 மணி நேரங்களை ஒன்றரை மணி நேர சினிமா ஆக்கியிருக்கிறார்கள். படத்தின் பெயர் '127 Hours’! ஆஸ்கர் விருதுகள் அள்ளிய 'ஸ்லம்டாக் மில்லியனர்’ குழுவின் அடுத்த விருந்து. டேனி பாயிலின் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் அதிரடிக்கும் இசையில் அமெரிக்காவில் பாராட்டுக்களைக் குவித்துக்கொண்டு இருக்கிறது '127 Hours’! கையைத் துண்டித்துத் தப்பி வந்த ஆரன் ரால்ஸ்டனை அதற்குப் பிறகு தேடி வந்தது 'செலிபிரட்டி’ அந்தஸ்து. 'Between a Rock and a Hard Place’ என்ற தலைப்பில் வெளியான ஆரனின் வாழ்க்கை அனுபவத்தைத்தான் டேனி பாயில் படமாக இயக்கி இருக்கிறார். 'டொரன்டோ ஃபிலிம் ஃபெஸ்டிவல்’, 'கோல்டன் குளோப்’, 'லண்டன் திரைத் திருவிழா’ என்று படத்துக்கு வெகுவான வெகுமதிப் பாராட்டுக்கள்!  'ஏ.ஆர்... நம்ப முடியாத ஆச்சர்யமூட்டும் இசை அனுபவத்தை எனது வாழ்க்கைக் கதையில் சேர்த்ததற்கு நன்றி. உங்களுடைய சவுண்ட் ட்ராக் பின்னணியில் ஒலித்துக்கொண்டு இருந்தால், இன்னொரு 127 மணி நேரங்கள் நான் அந்த மலை இடுக்கில் கழிக்கும் தைரியம் வரப்பெற்றிருப்பேன் - ஆரன் ரால்ஸ்டன்’ - இது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆரன் எழுதி அனுப்பியிருந்த பாராட்டு வரி! 

ஆரன் வேடத்தில் நடித்த ஜேம்ஸ் ஃப்ரான்கோவும் புகழின் உச்சத்தில். 2003-ம் வருடம் தனது கையை இழந்தார் ஆரன். ஆனால், அதன் பிறகு கொலராடோ பகுதியில் இருக்கும் 14,000 அடி உயர சிகரங்கள் அனைத்திலும் ஏறிய முதல் மனிதன் என்ற சாதனையை 2005-ம் வருடம் படைத்துவிட்டார்.

நன்றி : விகடன் குழுமம் 

Wednesday, January 05, 2011

திருந்தாத தி.மு.க.! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிரடி!

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சில நாட்கள் அமைதிக்குப் பிறகு தி.மு.க.வை நோக்கித் தமது சர வெடிகளைக் கொளுத்திப் போடத் தொடங்கிவிட்டார். “தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்ந்தால் தோல்விதான்” என்பது அவரது சமீபத்திய அணுகுண்டு. “காங்கிரஸ் தலை மையையே மிரட்டுகிறார் இளங்கோவன்!” என்று பதிலடி கொடுத்திருக்கிறார் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். இளங்கோவன் சும்மா இருப்பாரா? இதோ சீறி எழுகிறார்...

சில நாட்கள் அமைதியாக இருந்த நீங்கள் ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்தவுடன் கணைகளை வீசத் தொடங்கியுள்ளீர்கள். மேலிடம் அமைதியாக இருக்கச் சொன்னதா?

“காங்கிரஸ் ஒரு ஜனநாயக இயக்கம். தொண்டர்களின் கருத்துகளுக்கு நான் ஒரு வடிகாலாக இருக்கிறேன். எனக்கு யாரும் வாய்ப்பூட்டு போட முடியாது. ‘மேலிடம் சொல்லித்தான் அமைதியாக இருந்தேன்’ என்று கருதும் நீங்கள், நான் கருத்துகளைச் சொல்லும்போது, ‘அவர்கள் சொல்லித்தான் பேசுகிறேன்’ என்பதையும் ஏற்றாக வேண்டும்!”

காங்கிரஸ் தலைமையை நீங்கள் மிரட்டுவதாக வீரபாண்டி ஆறுமுகம் சொல்கிறாரே?

“ஆறுமுகத்தைப் பொறுத்தமட்டில் தி.மு.க.வில் அவருக்கு இறங்கு முகம். எனவே தமது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள என் மீது பாய்கிறார். கொலைக் குற்றவாளியைச் சிறையில் சென்று பார்த்து ஆறுதல் சொல்லும் ஆறுமுகத்துக்கு நான் பதில் சொல்ல முடியாது.”

தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடந்தபோது, நீங்கள் உட்பட தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவைச் சந்தித்தீர்கள். கூட்டணி பற்றி ஏதேனும் சிக்னல் கிடைத்ததா?

“தொண்டர்களின் உணர்வுகளை எடுத்துச் சொன்னோம். கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டியது தலைமைதான். அதை ஏற்று நடப்போம். அதேசமயம் தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்ந்தால் தோல்வி என்பதுதான் தமிழகத்தின் இன்றைய யதார்த்த நிலை.”

தி.மு.க.வுக்கு ஸ்பெக்ட்ரம் ஒரு களங்கம் என்றால் காங்கிரஸ் மீதும் வரிசையாக ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளனவே?

“காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டவுடன் விசாரணைக்கு முன்னரே சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கிறோமே! ஐம்பது வருடங்களுக்கு முன் ‘முந்த்ரா’ விவகாரத்தில் விசாரணைக்கு முன்பே டி.டி.கிருஷ்ணமாச்சாரி ராஜினாமா செய்தார். சமீபத்திய கல்மாடி அசோக் சவாண் மீதும் நடவடிக்கை பாய்ந்ததே? ஆனால், அதேசமயம் கர்நாடக முதல்வர் மீது பா.ஜ.க. நடவடிக்கை எடுத்ததா? ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் ‘வெளியே போங்கள்’ என்று சொல்வதற்கு முன்பு ராசா ராஜினாமா செய்திருக்க வேண்டும். அது போல செய்திருந்தால் பெரிய சரிவை ஓரளவு தடுத்திருக்கலாம். இன்னமும் ராசாவைக் காப்பாற்ற முனைவதைப் பார்க்கும்போது திருந்தமாட்டார்கள் என்பது போலத்தான் தெரிகிறது.”

1.76 லட்சம் கோடி ரூபாய் தொகை வெறும் வருமான இழப்புதான் என்றும் அதை ஊழல் என்று சொல்வது தவறு என்றும் கருணாநிதி பேசுகிறாரே?

“ஊழல் நடந்திருக்கிறதா என்பது விசாரணையின் முடிவில் தெரியும். ஆனால், நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட கட்சி வோட்டுக்கு 3,000, 5,000 ரூபாய் கொடுத்ததாகச் செய்தி வரும்போது ஊழல் நடந்திருக்குமோ என்று மக்கள் சந்தேகிக்கிறார்கள்.”

ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் பல திருப்பங்களுக்குப் பிறகும் கருணாநிதியும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களும் ‘கூட்டணி தொடரும்’ என்றுதானே சொல்லி வருகின்றார்கள்?

“காங்கிரஸுடன் இருந்தால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரைத் துடைத்து விடலாம் என்று தி.மு.க. முயற்சி செய்கிறது. ஆனால், அதன் இரண்டாம் வரிசை பேச்சாளர்கள் அன்னை சோனியாவையும் ராகுலையும் தாக்கிப் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்கள்.”

தி.மு.க.வுடன் நாளை கூட்டணி தொடர்ந்தால் உங்களைப் போன்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுக்குச் சங்கடமாகாதா?

“தனிப்பட்ட முறையில் எங்களுக்கு ஏற்படும் சங்கடங்களை விடுங்கள். மேலிடம் அப்படி ஒரு முடிவு எடுக்குமானால் அதன் பாதிப்பு தமிழ்நாட்டு மக்களுக்கும் காங்கிரஸுக்கும்தான். எனவே அப்படி ஒரு முடிவு எடுக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.”


கருணாநிதியைச் சந்திக்க நீங்கள் நேரம் கேட்டும் பல மாதங்களாக அவர் உங்களைச் சந்திக்க மறுத்து வருவதால் கோபம் கொண்டுதான் தி.மு.க.வைத் தாக்குகிறீர்கள் என்கிறார்களே?

“உண்மைதான். ஏதோ என் தனிப்பட்ட விவகாரத்துக்கோ அல்லது பங்கு கேட்கவோ அவரைச் சந்திக்க முயற்சி செய்யவில்லை. தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க.வின் மீது எப்படிப்பட்ட அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதைச் சொல்லவே சந்திக்க விரும்பினேன். அதற்கு வாய்ப்பு கொடுக்காததால் வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய நிலை.”

நன்றி - தமிழ் வரை இதழ் 

Tuesday, January 04, 2011

இலவசங்களால் அழியும் என் தமிழகம்

இந்த நாட்டில் ஏழை, எளிய மக்கள் இருக்கும் வரை இலவச உதவிகள் வழங்கப்படும் என்ற தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் பேச்சு வரவேற்கத்தக்கதா அல்லது வருந்தத்தக்கதா என்று தெரியவில்லை. உழைப்புக்குப் பெயர் பெற்ற தமிழர்கள் தற்போது இலவசம் என்ற பெயரில் அரசிடம் கையேந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இலவசம் என்றால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கிடைப்பதை விடக் கூடாது என்ற நோக்கத்கோடு, அனைத்தையும் கைப்பற்ற வேண்டும் என்ற மனப்பான்மை தற்போது தமிழக மக்களிடம் அதிகரித்துவிட்டது.  

இந்த மனப்போக்கை மனதில் கொண்ட அரசியல் கட்சியினர் இலவசத் திட்டங்களை அறிவித்து, அதன்மூலமாக ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று கணக்கிடுகிறார்கள். அதற்கு முன்னோட்டமாகத்தான் முதல்வரின் இந்தப் பேச்சும் அமைந்திருக்கிறது.

இலவசங்களை வழங்கும் அரசுகள் இந்த இலவசங்கள் உண்மையில் மக்களுக்குப் பயன்படுகிறதா என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டத்தில், பலர் தங்களது வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்த போதிலும் அரசு கொடுத்த டி.வி.யை வாங்கி, அதைக் குறைந்த விலைக்கு விற்றுவிட்டனர். மேலும், சிலர் வீட்டினுள் பத்திரப்படுத்தியுள்ளனர்.

இதனால், யாருக்கு என்ன பயன் ஏற்பட்டுவிட்டது. மின்சாரச் செலவு கூடுதலானதும், கேபிள் இணைப்புக்குக் கட்டணம் செலுத்தியதோடு, குறிப்பிட்ட சில டி.வி. சானல்களின் ரேட்டிங் உயர்வுக்கு மட்டுமே இந்தத் திட்டம் உதவியுள்ளது. அதேநேரத்தில், இலவச டி.வி.க்காக வழங்கப்பட்ட தொகையைத் தொழிற்துறையில் செலவிட்டிருந்தால் பல குடும்பங்கள் வாழ்ந்திருக்கும்.    

 உதாரணமாக, 1,500 குடும்ப அட்டைகள் கொண்ட ஒரு கிராமத்தில் இலவச டி.வி.க்காக அரசு தோராயமாக ரூ. 37.50 லட்சம் செலவிடுகிறது. இந்தத் தொகையின் மூலமாக அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயப் பொருள்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றும் தொழிற்சாலைகளைத் தொடங்கும்பட்சத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்வதோடு, நூற்றுக்கணக்கானவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புக் கிடைத்திருக்கும். விவசாயிகளுக்கும் தங்கள் தொழில் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கும்.

இலவசமாகக் கொடுக்கப்படும் பொருள் நமது வரிப் பணத்திலிருந்தும், நமது தலையை அடமானமாக வைத்து நபார்டு வங்கி, உலக வங்கி மற்றும் தனியார் நிதிநிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தொகைதான் என்பது நமக்கு மறைக்கப்படுகிறது.

இதை உணர்ந்தவர்களும், பணக்காரர்களும் அரசின் இலவசங்கள் நமது பணம்தான் என்பதால் அதைப் பெறுவதிலும் தயக்கம் காட்டுவதில்லை. இதனால்தான் சென்னையில் சுனாமி தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையைப் பெறுவதற்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் உயிரிழந்தவர்களில் பணக்காரர்களும் இடம் பெற்றிருந்தனர்.

இலவசம் என்பது ஒரு நாட்டின் கெüரவக் குறைச்சல் என்பதை பள்ளியில் நாம் படிக்கும்போது பாட்டி கதை மூலமாக விளக்குவார்கள். அந்தக் கதை இப்போது நமக்குத் தேவையாக இருக்கிறது. ""ஒரு மன்னன், பக்கத்து நாட்டு மன்னனைச் சந்தித்தபோது, தனது நாட்டைப்பற்றிப் பெருமையாகக் கூறினான். தனது நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் அன்னசத்திரங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. அதில், தினமும் ஏராளமானவர்கள் உணவருந்துகிறார்கள். அதேபோல, என்னைப் பார்ப்பதற்காக தினமும் வரும் ஏழைகளுக்குப் பொன்னையும், பொருளையும் வாரி வழங்குகிறேன். அதை அவர்கள் தினமும் பெற்றுச் செல்கிறார்கள். இதைப் பெறுவதற்காக அவர்கள் என் அரண்மனை முன் தினமும் காத்திருப்பார்கள்'' என்று பெருமைப்பட்டான்.

அதற்கு மற்றொரு மன்னன், ""என் நாட்டில் பிச்சைக்காரர்கள் இல்லை. அவரவர்கள் உழைக்கிறார்கள், சாப்பிடுகிறார்கள். அதற்குத் தேவையானவற்றை அரசு செய்து கொடுக்கிறது என்றானாம். அதன்பிறகுதான், தற்பெருமை பேசிய அரசனுக்கு நமது குடியின் கீழிருக்கும் மக்களைப் பிச்சைக்காரர்களாக்கியது தனது தவறு என்பதை உணர்ந்தான்'' என்று பாட்டி கதை கேட்டிருக்கிறோம்.

இப்போது நமது நாட்டில் அன்னசத்திரங்களும், அரசின் இலவசத் திட்டங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இது அரசின் வளர்ச்சியல்ல. மக்களின் வறுமைக்கோடு உயர்ந்துகொண்டே செல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.     

தமிழகத்தில் 2010-ம் ஆண்டு கணக்கின்படி தோராயமாக 6.63 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களில், தற்போது தமிழக அரசு வழங்கும் இலவச, வேஷ்டி சேலை வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு வழங்கப்படுவதாகும். அந்தக் கணக்கின்படி பார்த்தால் தமிழகத்தில் 3 கோடியே 11 லட்சத்து 23 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன. இவ்வளவு மக்களும், அவர்களின் குடும்பங்களும் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பதாகத்தானே தமிழக அரசு கூறுகிறது. இவ்வாறு மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கும்போது, அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் திட்டங்களைத் தீட்டினால்தான் அவர்களின் வாழ்வு உயரும். அதைவிட்டு, இலவசத் திட்டங்கள் தீட்டப்பட்டு, அதற்காக வாங்கப்படும் கடன் தொகை அரசை நெருக்கும்போது அரசே திவாலாகும் நிலை ஏற்படும்.

இவ்வாறு திவாலாகும் நிலையைத் தடுக்க அரசு கையிலெடுத்திருக்கும் மதுபான விற்பனை, மணல் விற்பனை போன்றவற்றால் மக்களின் உடல்நலமும், இயற்கை வாழ்வாதாரமும் கெட்டு, தமிழக மக்கள் உண்மையில் இலவசங்களையும், அரசின் நிரந்தர உதவியையும் மட்டுமே எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.  கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தில் வழங்கப்படும் மானியத் தொகை குறைவால், ஒரு வேளை உணவாவது நிம்மதியாகச் சாப்பிட்ட ஏழைத் தொழிலாளிகூட, தான் வாங்கிய கடனுக்கு கந்து வட்டி கட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அதே நிலை தொடரும்போது, குடியிருக்கும் வீட்டை நிலத்துடன் விற்றுவிட்டு அரசின் இலவசத்தை மட்டுமே எதிர்பார்க்க வேண்டிய நிலைதான் ஏற்படும்.

 எனவே, ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்ற எண்ணத்தைத் தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கைவிட்டுவிட்டு, ஏழைகள் இலவசங்களைப் பெறுவதற்காகப் பிறந்தவர்கள் அல்லர் என்பதை உணர்ந்து அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் திட்டங்களைத் தீட்ட முன்வந்தால்தான் தமிழகம் உண்மையான வளர்ச்சியை எட்டும்.

நன்றி - தினமலர், தினத்தந்தி, தி ஹிந்து....

Monday, January 03, 2011

அதிசய தகவல்கள்





அனுமன் ஜெயந்தி

மனம் ஒரு குரங்கு; காரணம், அது நிலையாக இருப்பதில்லை. ஒன்றை நினைக்கும் போதே, "ஹும்... அப்படி செய்ய வேண்டாம்; இப்படி செய்தால் என்ன...' என்று கணக்குப் போடும். ஆனால், குரங்காகப் பிறந்த ஆஞ்சநேயரோ, மனதை தம் வசப்படுத்தும் முயற்சியில், மனிதனுக்கே எடுத்துக்காட்டாக விளங்கினார்.

அதனால், அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. வெற்றியின் நாயகனாக விளங்கினார். அவரது வெற்றிக்கு காரணம் திட்டமிட்ட செயல், கடலையும் தாண்டும் தைரியம், சமயோசிதம், பக்தி ஆகியவையே. அவர், மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தார்.  

வரலாறு :

புஞ்ஜிகஸ்தலை என்ற பெண்மணி, தேவலோகத்தில் வசித்தாள். மிகுந்த அழகியான அவள், தன்னை விட அழகி யாருமில்லை எனக் கருதி, ஆணவத்தால், ஒரு முனிவரின் தோற்றத்தை கேலி செய்து பேசினாள். கோபமடைந்த முனிவர், அவளது அழகு அழிந்து, குரங்காக மாற சாபமிட்டார். அவள், அவரிடம் மன்னிப்பு கேட்டு மன்றாடினாள். இரக்கப்பட்ட முனிவர், சாப காலம் முடியும் வரை நினைத்த நேரத்தில், நினைத்த வடிவம் எடுக்கும் வரம் தந்தார்.  

பூலோகத்தில் வசித்த குஞ்சரன் என்பவனுக்கு மகளாகப் பிறந்தாள். அவளுக்கு, "அஞ்சனை' என்று பெயரிட்டனர். ஒருமுறை, அவள் ஒரு மலையுச்சியில், மானிட வடிவில் மிகுந்த அழகுடன் நடமாடிக் கொண்டிருந்தாள். அவளது அழகில் மோகம் கொண்ட வாயு பகவான், அவள் முன் தோன்றி,ஆட்கொண்டான் அவளை. அவள் மிகுந்த கோபமடைந்து, "தேவனான நீ, மோசமான எண்ணத்துடன் அணுகியது முறையா?' என சப்தமிட்டாள். வாயு பகவான் அவளைச் சமாதானம் செய்து, "இந்த உலகிற்கு நம் மூலம் ஒரு உத்தமபுத்திரன் பிறக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. அதனாலேயே, இந்த சம்பவம் நிகழ்ந்தது. உன் மகன், என்னைப் போல் பராக்கிரமசாலியாக இருப்பான். அவனுக்கு பறக்கும் ஆற்றல் இருக்கும்...' என்று சொல்லி, மறைந்தான். அந்த மலையிலேயே தங்கி, புத்திரனைப் பெற்றாள் அஞ்சனை. அவனுக்கு, "ஆஞ்சநேயர்' என்ற பெயர் சூட்டப்பட்டது. 

குழந்தையான அஞ்சநேயர், ஒருமுறை, வானில் உதித்த சூரியனைப் பார்த்தான். அதைப் பழமென்று நினைத்து, பறிக்க வானில் பாய்ந்தான்; சூரியன் அவனை எரிக்கவில்லை. இதனால், சூரியனுக்கு ஏதும் ஆபத்து ஏற்படுமோ என்று பயந்த இந்திரன், தன் வஜ்ராயுதத்தால் ஆஞ்சநேயரின் தோளில் அடித்தார். அதனால், தாடை எலும்பு ஒடிந்து கீழே விழுந்தான் அஞ்சநேயர். தாடை எலும்பை, "ஹனு' என்பர். இதனால், அவருக்கு, "அனுமன்' என்ற பெயர் ஏற்பட்டது. மகன் தாக்கப்பட்டதைக் கண்ட வாயு பகவானுக்கு கோபம் ஏற்பட்டது; காற்றை நிறுத்தி விட்டார். உலக உயிர்கள் மூச்சு விட முடியாமல் தவித்தன. வாயுவை சமாதானம் செய்து, "உன் மகனுக்கு எந்த ஆயுதத்தாலும் மரணம் நிகழாது. அவன் எப்போது மரணமடைய நினைக்கிறானோ அப்போதே மரணம் வரும்...' என்று அருள்பாலித்தார் பிரம்மா. என்றும் அழியாதவனை, "சிரஞ்சீவி' என்பர். அனுமானும், சிரஞ்சீவியாக இன்றும் நம் உள்ளங்களில் கலந்திருக்கிறார். அந்த இனிய தெய்வத்தை, அவரது பிறந்தநாளில் வணங்கி, அவரது நல்லாசியைப் பெறுவோம்.

Sunday, January 02, 2011

நம்பிக்கை"கை'கள் நிறைய இருக்கிறது !

பரமேஸ்வரி - இரு கைகளையும் இழந்தவர்; ஆனால், நிறைய நம்பிக்"கை'களுடன் வாழ்பவர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா வி.கே.என். புரம், கண்டிகை கிராமத்தில் உள்ள நூறு வீடுகளில், எந்த வீட்டில் கேட்டாலும் பரமேஸ்வரியின் வீட்டில் கொண்டு போய் விடுவர். காரணம், அந்த அளவிற்கு அவர் மீது மரியாதை. இப்போது, 28 வயதாகும் பரமேஸ்வரி, பிறக்கும்போதே இரண்டு கைகளும் இல்லை. தன் குறை தெரிந்த போது கவலைப் பட்டார். பிறகு, கவலைப்பட்டு எதுவும் நடக்கப் போவது இல்லை என்ற எதார்த்தம் புரிந்து போனதும், பிறருக்கு பாரமாக இல்லாமல் இருப்பது மட்டுமின்றி, மற்றவருக்கு உதவியாகவும் இருப்பது என முடிவு செய்தார். ஐந்தாவது வரை படித்தவர். அதற்கு மேல் படிக்க வசதியும், வழியும் இல்லாததால், படிப்பை அத்துடன் முடித்துக் கொண்டார்.  

முதல் காரியமாக தனக்கான வேலைகளை தன் கால்களின் துணையோடு தானே செய்ய பழகிக் கொண்டார். ஆரம்பத்தில் பெரிதும் சிரமமாக இருந்தாலும், விடா முயற்சியால் பழகி விட்டார். பாத்திரம் தேய்ப்பது, காய்கறி வெட்டுவது, துணி துவைப்பது போன்ற விஷயங்களில் உதவியாக இருந்தார். தங்கைகளுக்கு தானே தலைசீவிவிட்டு, பூ வைத்து அழகு பார்ப்பார். தம்பிகளுக்கு புத்தகங்கள் எடுத்து கொடுத்து, படிக்க வைத்து நெகிழ்ந்து நிற்பார். அப்பாவின் சிறிய இட்லி கடையில், சகல உதவியும் செய்து மகிழ்ந்து இருப்பார். மொத்தத்தில் தானும் சுறுசுறுப்பாய் இருந்து, மற்றவர்களையும் சுறுசுறுப்பாக செயல்பட வைப்பார். இப்படி பரமேஸ்வரி தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் மட்டுமின்றி, தான் சார்ந்த கிராமத்து மக்களுக்கும் முடிந்தவரை சேவை செய்து வருகிறார். ஊரில் எந்த நல்லது, கெட்டது என்றாலும் முதல் ஆளாக போய் நிற்பார்.

யார் எந்த தப்பு செய்தாலும் துணிந்து தட்டிக் கேட்பார். இதனால், தனக்கு பாதகம் வரும் என்றாலும் பயப்பட மாட்டார். இதன் காரணமாக, "பரமேஸ்வரி சொன்னால் நியாயமாகத்தான் இருக்கும். ஆகவே, எந்த பிரச்னை என்றாலும் கூப்பிடு பரமேஸ்வரியை' என்றளவிற்கு இன்றைய நிலை உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக துளசி மகளிர் சுய உதவி குழு ஆரம்பித்து, சிரமப்படக்கூடிய பெண்கள் 12 பேருக்கு கடனுதவி வாங்கிக் கொடுத்துள்ளார்.
இவருக்கே என்று ஒரே ஒரு ஆசை உள்ளது. சின்னதாய் ஒரு ஓட்டல் வைத்து, அதன் மூலம் பலருக்கு வேலை கொடுக்க வேண்டும். வரும் வருமானத்தை தன்னைப் போன்ற எளியவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. "பிச்சை எடுத்து கூட வாழ்வோம். ஆனால், உழைக்க மாட்டோம்...' என, எல்லாம் சரியாக இருக்கும் முழு மனிதர்கள் கூட சோம்பேறித்தனத்துடன் வாழும் இந்த உலகில், ஊனமுற்றவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் தானும் வாழ்ந்து, மற்றவர்களையும் வாழ வைக்க நாளும் தன் சொந்த, "கால்களால்' மட்டுமே நின்று உழைக்கும் பரமேஸ்வரிக்கு, "கை' கொடுத்து உதவ விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 98438 62951.
நன்றி - தினமலர் மற்றும் எல்.முருகராஜ்

Saturday, January 01, 2011

நாளை நல்ல நாளே...

முடிந்துபோன 2010-ம் ஆண்டுக்கு இந்திய ஊடகங்கள் வைத்த பொதுப்பெயர் "ஊழல்' ஆண்டு. 

இந்தியாவில் எந்த ஆண்டில்தான் ஊழல் இல்லாமல் இருந்தது? விடுதலைபெற்ற பின்னர் பெரும்பாலான ஆண்டுகளை ஊழல் ஆண்டு என்று அறிவித்துவிடலாம் என்றாலும், 2010 போன்று உலக வரலாற்றில் மிகப்பெரிய ஊழலாக, ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு இந்திய அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ள ஸ்பெக்ட்ரம் ஊழல் நடைபெற்றுள்ளதால், இதை வேறுவகையில் பெயரிட்டு அழைக்க முடியாது என்பதால் ஊழல் ஆண்டு என்பது பொருத்தமானதே!ஸ்பெக்ட்ரம் ஊழல் மட்டுமல்ல; இன்னும் பல ஊழல்கள் ஒன்றன்பின் ஒன்றாக அம்பலப்பட்ட ஆண்டு 2010 என்றால் மிகையல்ல. ஐ.பி.எல். கொச்சி அணியில் முன்னாள் அமைச்சர் சசிதரூர் மீதான குற்றச்சாட்டு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பல கோடி ரூபாய் முறைகேடு, மகாராஷ்டிரத்தில் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு, கர்நாடகத்தில் முதலமைச்சரின் தனியாணை மூலம் குறைந்த விலைக்கு அரசு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல நூறு மடங்கு விலையில் வேறுநபர்களுக்கு விற்கப்பட்ட ஊழல் எல்லாமும் ஒன்றன்பின் ஒன்றாக அம்பலப்பட்டுக்கொண்டே இருந்தன. 

2010-ம் ஆண்டில் யாருக்காவது நாம் நன்றி சொல்ல வேண்டுமானால், அது நீதித் துறைக்கும், தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறைக்கும் மட்டுமே! லஞ்சஒழிப்புத் துறைக்குத்  தலைவராக, குற்றச்சாட்டில் உள்ள தாமஸ் நீடிக்கலாமா என்று நீதிமன்றம் கேட்டாலும், பதவிவிலக மாட்டேன் என்று சொல்லும் மோசமான நிலைமைக்கு இடையிலும்கூட, தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை அதிகாரிகள் எதையும் பொருள்படுத்தாமல் தங்கள் கருத்தைத் தெளிவாகப் பதிவுசெய்து, தங்கள் கடமையைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

இந்தத் தணிக்கைத் துறை அதிகாரிகள் மட்டும், இவ்வளவு துணிச்சலாக, நேர்மையாக, இந்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பையும், முன்னுரிமை அளிக்கப்பட்ட விதத்தில் பாரபட்சம் இருப்பதையும் வெளிப்படையாகச் சொல்லியிருக்காவிட்டால், இவ்வளவு பெரிய முறைகேடு அதிகாரப்பூர்வமாக வெளியே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எதிர்க்கட்சிகளும் பிரச்னையின் கௌரவத்தைப் புரிந்துகொண்டு வீறுகொண்டு எழுந்திருக்கவோ அதனால் நாடாளுமன்றம் ஸ்தம்பிக்கவோ வாய்ப்பில்லை. நீதிமன்றம் கேள்வி கேட்டிருக்க வாய்ப்பில்லை, முன்னாள் அமைச்சர் ஆ. ராசா பதவி விலகியிருக்க வாய்ப்பில்லை. நீரா ராடியா டேப் விவகாரம் வெளியே வந்திருக்காது. எல்லாமும் புதையுண்டு மறைந்து போயிருக்கும். எல்லா ஆண்டிலும் நடைபெற்றுவரும் பல ஊழல்களைப்போல இதுவும் வாடிக்கையான ஓர் ஊழலாக முடிந்து போயிருக்கும்.தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை அதிகாரிகளின் அறிக்கை காட்டிய நேர்மையின் வெளிச்சத்தை நீதி கையில் எடுத்துக்கொண்டு, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவுகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது. 

இந்த ஊழலில் சம்பந்தபட்டவர்களின் பெயர்கள் சரித்திரத்தில் நிச்சயமாக இருக்கும். ஆனால் இந்த நேர்மையான பதிவுகளை அறிக்கையில் எழுதிவைத்த தலைமைக் கணக்குத் தணிக்கைத்துறை அதிகாரிகளின் பெயர், நாளைய இந்தியர்களுக்கு, ஏன் இன்றைய இந்தியர்களுக்கேயும்கூடத் தெரியுமா என்பது கேள்விக்குறிதான். அந்த நேர்மையான அதிகாரிகளுக்கு நாம் தலைவணங்கி, நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் சுட்டிக்காட்டியதைச் சட்டப்படியாக நிலைநாட்ட முயன்ற நீதிமன்றத்துக்கும் நாம் பாராட்டுத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.அமைச்சர், பதவி விலகி, அதிகாரத்தின் பற்கள் பிடுங்கப்பட்ட பின்னர் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்று நிபந்தனைகளை நிறைவேற்றாத நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய தைரியமான அதிகாரிகளும் இருக்கும் இந்த நாட்டில்தான் இத்தகைய அரசு ஊழியர்களும் இருக்கிறார்கள் என்பதைக் காணும்போது "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை' என்பதன் உட்பொருள் தெளிவாகிறது.

போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் அதன் தலைவர் ஆண்டர்சன் தண்டிக்கப்படாமல், அதிகாரிகள் குறைந்தபட்சமாகத் தண்டனை பெறும் விதத்தில் அரசு வழக்குத் தொடுத்திருந்த மத்திய அரசை கடும் விமர்சனத்துக்கு ஆளாக்கிய பின்னர், இப்போது சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுவும் நீதித்துறையால் ஏற்பட்ட நன்மை!நீதியும் நேர்மையும் செத்துவிட்டதோ என்று கலங்கிக் கிடந்த இந்தியர்கள் நெஞ்சில், "உப்புத் தின்றவன் தண்ணி குடிப்பான், தப்பு செய்தவன் தண்டனை கொள்வான்' என்னும் நம்பிக்கையை விதைத்துள்ள ஆண்டும் 2010-தான்.

"எல்லாமே மோசம். இதிலிருந்து விமோசனமே கிடையாது. திருத்தவே முடியாது' என்று எதிர்மறைச் சிந்தனையுடன் இருப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். இது நமது நாடு. அரசும், ஆட்சியும், அதிகாரமும் நமக்காக ஏற்படுத்தப்பட்டிருப்பவை. அதில் தவறுகள் ஏற்படுவது இயற்கை. அதைத் திருத்தி, தவறுகளைத் தடுத்து, தேசத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உண்டு. எனென்றால். நமது நல்வாழ்வும் அதனுடன் இரண்டறப் பிணைந்து கிடக்கிறது. தன்னம்பிக்கையுடன் எதிர்மறைச் சிந்தனையைத் தூக்கி எறிந்துவிட்டு தவறுகளுக்கு எதிராகக் குரலெழுப்பத் தயாராகுங்கள்.  நம்பிக்கை ஸ்திரப்படும் ஆண்டாக, 2011-ல் இந்த ஊழல்களில் தொடர்புடையவர்கள் தண்டனைபெற வேண்டும். அமைச்சர் என்றாலும், பெருந்தொழிலதிபர் என்றாலும் தண்டனை தரப்பட வேண்டும். இதில் பாரபட்சம் இருக்காது என்பதைப் புரியவைக்கும்  ஆண்டாக 2011 அமைய வேண்டும். இந்தியாவில் மக்களாட்சித் தத்துவம் வெற்றிபெற்றதற்கான அடையாளம் அதுவாகத்தான் இருக்கும்.2010 ஊழல் ஆண்டு என்றால்...2011 தண்டனை ஆண்டு என்று பெயர் பெறட்டும்! நம்பிக்கையூட்டும் ஆண்டாக மலரட்டும். 

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!