Search This Blog

Wednesday, June 27, 2012

குடியரசுத் தலைவர் பாலிடிக்ஸ்

இந்திய அரசியலில் சிலர் நிரந்தரமாக இரண்டாம் இடத்தில் இருக்கும் பெருமையைப் பெற்றவர்கள். என்றாவது ஒரு நாள் பிரதமராவோம் என்ற கனவில், தொடர்ந்து எல்லா பிரதமர்களுக்கும் அடுத்த இடத்தில் இருந்து வந்த பிரணாப் இப்போது நாட்டின் ஜனாதிபதி ஆகப் போகிறார்.விரைவில் ராஷ்ட்ரபதிபவனுக்குக் குடியேறப்போகும் பிரணாப் முகர்ஜிக்கு அது மிக அதிர்ஷ்டமான இடம். 1973ல் ராஷ்ட்ர பதிபவனுக்கு அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவை வேடிக்கை பார்க்கப் போனவருக்கு அமைச்சராகும் அதிர்ஷ்டம் அடித்தது. அன்று பதவி ஏற்ற அமைச்சர்களின் எண்ணிக்கை அதிர்ஷ்டமில்லாத எண் என்று சொல்லப்பட்டதால் அதைச் சரி செய்ய ஓர் அமைச்சராக இவர் அழைக்கப்பட்டார். அன்று முதல் மத்திய அரசில் ஏதாவது ஒரு துறையின் அமைச்சராகத் தொடர்பவர். பலமுறை ராஜ்ய சபா வழியாக நுழைந்தவர் என்றாலும் கடந்த முறை ஜாங்கீப்பூர் தொகுதியிலிருந்து வென்று அந்தத் தொகுதிக்கு அடிக்கடி சென்று நிறையச் செய்து செழிக்க வைத்திருக்கிறார். தொகுதியில் இருக்கும் போது மக்கள் இவரைச் சாதாரணமாகச் சந்திக்க முடிவதால் அங்கு இவருக்கு மிகப்பெரிய இமேஜ்.

ஐம்பத்தைந்து வருடங்களாக அரசியலில் இருக்கும் இந்த எழுபத்தேழு வயது இளைஞரின் பலம், அபார ஞாபக சக்தி. சட்டப்பிரிவுகளை நாடாளுமன்ற நடைமுறைகளை விரல் நுனியில் வைத்திருக்கும் வித்தகர். எந்தப் பிரச்னைகளையும் நிதானத்துடன் பேசியே அது உள்கட்சி, கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகள்... என யாராக இருந்தாலும் சரிசெய்வதில் வல்லவர். அதனால் சோனியா எந்தப் பிரச்னைக்கும் முதலில் அழைப்பது இவரைத்தான். தன் பேச்சுவார்த்தைத் திறனில் இவர் கொண்ட நம்பிக்கைக்கு ஒரு சாம்பிள், போட்டி வேட்பாளரை அறிவித்து சவாலுக்கு அழைக்கும் மம்தாவை, ‘அவர் என் சகோதரி. நிச்சயம் மனம்மாறி எனக்கு ஆதரவு தருவார்’ என்ற அறிக்கை.
மத்திய அமைச்சரவைக்குப் போகும் முன் விஷயங்களைப் பரிசீலிக்க 35 அமைச்சர்கள் கொண்ட குழுக்கள் இயங்குகின்றன. அதில் 33க்கு இவர் தலைவர். தெரியாத துறையே இல்லை என போற்றப்படும் இந்த அனுபவ அரசியல்வாதியை, குடியரசுத் தலைவராக்குவதில் காங்கிரஸுக்குத்தான் இழப்பு. என்றாலும் சோனியா இந்த முடிவை எடுத்ததற்கு அரசியல் காரணங்களும் சொல்லப்படுகின்றன. 

இந்திரா காலத்திலிருந்தே கட்சிக்கும் ஆட்சித் தலைமைக்கும் நெருக்கமாக இருந்த பிரணாப், ராஜிவ் காலத்தில் ஓரம் கட்டப்பட்டார். பின்னர் நரசிம்மராவ் காலத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். ராஜிவ்க்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியவர் என்ற போதிலும், சோனியா இவரை நம்பியது இந்திய அரசியலின் ஆச்சர்யங்களில் ஒன்று. இவரது இரண்டு மகன்களில் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர். மகள் கதக் நாட்டியத் தாரகை. பிடித்தது மீன் குழம்பும், ரபீந்தர் சங்கீதமும்.

விரும்பியது விலகிப்போனால் தேடிவந்ததை விரும்பி ஏற்பது புத்திசாலித்தனம் என்பதை உணர்ந்து கொண்டதால், பிரதமர் கனவை மறந்த பிரணாப் முகர்ஜி, அடுத்த பிரதமருக்கு பதவிப் பிரமாணம் செய்யும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்.

No comments:

Post a Comment