Search This Blog

Tuesday, October 23, 2012

நல்ல மாணவன்... ஆசிரியர் பொறுப்பா... பெற்றோர் வளர்ப்பா..?


வீட்டில் ஒழுங்காக படித்துக் கொண்டு வராவிட்டால்... பெற்றோரிடம் சொல்வேன்' என்று கண்டித்த ஆசிரியையை, வகுப்பறையிலேயே கத்தியால் குத்திக் கொன்றான் ஒரு மாணவன்.
 நன்றாகப் படித்து நேர்மையான ராணுவ அதிகாரியாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டு கண்டிப்புக் காட்டிய தந்தையை, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் அளவுக்கு மனதில் வெறியேறிப் போயிருக்கிறான் ஒரு மகன்.

இதையெல்லாம் பார்த்துவிட்டு, 'இன்றைய மாணவ சமூகத்தின் போக்கு சொல்லிக் கொள்ளும்படி இல்லை' என்ற விரக்தி பேச்சுகளே எங்கும் எதிரொலிக்கின்றன. 'இதற்குக் காரணம், மாணவர்கள் மட்டுமல்ல... அவர்கள் உலகத்துக்கு மிக நெருக்கமாக இருக்கும் ஆசிரியர், பெற்றோர் இருதரப்பும் காட்ட வேண்டிய கண்டிப்பிலும் கனிவிலும்   ஏற்பட்டிருக்கும் பழுதும்தான்’ என்பது கல்வியாளர்களின் கணிப்பாக இருக்கிறது.

''இன்றைய ஆசிரியர் பயிற்சிக் கூடங்கள் பதிவேடுகள், துணைக் கருவிகள், பாடத்திட்டம் என்று ஒரு குறுகிய வட்டத்தில் செயல்பட்டு, புத்திசாலியான மற்றும் எந்திரத்தனமான ஆசிரியர்களைத்தான் உருவாக்குகின்றன. சமூக மதிப்பீடுகள், அதை மாணவர்களிடம் போதிக்க வேண்டிய ஆசிரியரின் கடமைகள் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல், கலைப்பாடங்கள் போலவே ஆசிரியர் கல்வியும் கற்பிக்கப்படுகிறது. கற்பவர்களும் தங்களை ஆசானாக உணராமல், கல்லூரி மாணவர்களாகவே உணர்கிறார்கள்.

ஆசிரியர் வேலை பெற்ற பலரும் மிகப்பெரிய சவாலாக நினைப்பது... வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களையும் எல்லா பாடத்திலும் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆசிரியர்களும் நல்லாசிரியராக  முடிவதில்லை, மாணவனையும் குணநலம் மற்றும் சமூக அக்கறையுள்ளவனாக உருவாக்க முடியவில்லை.

சாப்பிடும், தூங்கும் நேரம் போக மீதமுள்ளதில் அதிக நேரம் ஆசிரியரிடம்தான் குழந்தை இருக்கிறது. அதைப் பயன்படுத்தி, மாணவனை சாதாரணமாக கவனித்தாலே, வகுப்புக்கு ஒவ்வாத அவனுடைய சூழல் ஆசிரியருக்குத் தெரிந்துவிடும். அவனை அழைத்து கனிவாக பேசினாலே... தீர்ந்தது பிரச்னை.

மாணவர்களின் மனநிலை என்ன என்பதை ஆசிரியர் அறிந்து கொண்டு விட்டாலே மிகத் தெளிவான மாணவர்களை உருவாக்கிவிட முடியும்

1 comment:

  1. நீங்கள் சொல்வது நடக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்...

    சில / பல பேர்கள் கல்வியை தொழிலாக நினைப்பதை மாற வேண்டும்...

    நன்றி...

    ReplyDelete