Search This Blog

Tuesday, August 12, 2014

உடல் பருமனைத் தவிர்க்க

ரயில் நிலையம், பேருந்து நிலையம், ஹோட்டல் என எங்கு எடை பார்க்கும் மெஷின் இருந்தாலும் உடனே, உயரத்துக்கு ஏற்ற எடை இருக்கிறோமா என்று ஆர்வமாகப் பார்ப்போம். பார்த்த பிறகு, என்ன தோன்றும்?
 
சராசரியாக ஒரு நபருக்கு தினமும் 2,000 கலோரிகள் தேவைப்படுகிறது. அளவுக்கு அதிகமாக கலோரிகள் சேர்ந்து, அதை ஆரோக்கி யமான முறையில் செலவிடத் தவறும்போது உடல் பருமன் ஏற்படுகிறது.

 உடல் பருமன், அழகு சார்ந்த விஷயம் அல்ல, இது ஒரு நோய் என்பதை, முதலில் புரிந்துகொள்ள வேண்டும். வாரத்துக்கு ஒரு முறையேனும் உடல் எடையைப் பரிசோதிக்க வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமற்ற எடை அதிகரிப்பைக் கண்டறிய முடியும்.

 அவ்வப்போது உடலுக்குப் புத்துணர்வு அளிக்கும் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். காலை மாலை நேரத்தில் வாக்கிங் செல்லலாம். நீச்சல் பயிற்சி செய்யலாம்.

 அதிக அளவில் தண்ணீர் அருந்துவது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். சர்க்கரை கலந்த குளிர்பானங்கள், பழச்சாறுகள் அருந்துவதற்குப் பதில், வெதுவெதுப்பான நீர் அருந்தலாம். இதனால், உடலில் கூடுதல் கலோரிகள் சேருவது தவிர்க்கப்படும். வெந்நீரில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம். உடலின் வளர்சிதை மாற்றப் பணிகளைத் துரிதப்படுத்தும் திறன் தேனுக்கு உண்டு. இதனால் கூடுதல் அளவில் கொழுப்பு கரைக்கப்படுவது உறுதி.

 காலை, மதியம், இரவு மூன்று வேளை அதிக அளவில் உணவை உட்கொள்வதற்குப் பதில், இரண்டு முதல் மூன்று மணி நேர இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொள்ளலாம். காலை உணவை 8 மணிக்கும், மதிய உணவை 1 மணிக்கு முன்னதாகவும், இரவு உணவை 8 மணிக்கு முன்னதாகவும் எடுத்துக்கொள்வது அதிக அளவில் கலோரிகளை எரிக்க உதவும்.

 பசி இன்றி எதையும் சாப்பிட வேண்டாம். வயிறு நிரம்பிவிட்ட உணர்வு மூளைக்குப் போய்ச் சேர, சிறிது நேரம் பிடிக்கும். பொறுமையாகச் சாப்பிட வேண்டும். இரண்டு உணவு வேளைக்கு நடுவில், கலோரி நிறைந்த நொறுக்குத் தீனிகளை எடுக்கக் கூடாது.

 நாம் சாப்பிடும் உணவு சரிவிகித உணவாக இருக்க வேண்டும். தினசரி உணவுப் பட்டியலில் ஐந்து கப் காய்கறி, சர்க்கரை அளவு குறைவான பழம் இருக்க வேண்டும். இதில் ஒரு கப் பச்சையாகச் சாப்பிடக்கூடிய காய்கறிகளாக இருக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, வெள்ளரி, காரட் போன்ற காய்கறிகளை சாலட்டாகச் செய்து சாப்பிடலாம்.

 சில உளவியல் காரணங்கள் கூட அதிகம் சாப்பிடும் பழக்கத்தைத் தூண்டுகிறது. சோகம், துயரம், தனிமை போன்ற சூழ்நிலையில் பலரும் நாடுவது உணவுகளைத்தான். அதிகம் சாப்பிடுவதால், உடல் பருமன் ஏற்படும்.


 அனைத்துக்கும் மேல், மிக வேகமாக உடல் எடையைக் குறைக்கும் மருந்து, மாத்திரை, கருவிகளை நம்ப வேண்டாம். இதனால் பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்பு மிகமிக அதிகம். கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடையைக் குறைப்பதுதான் ஆரோக்கியம்.

குழந்தைகளின் உடல் பருமனைத் தவிர்க்க... 

 குழந்தைகளுக்குச் சுண்டல் போன்ற ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை அறிமுகப்படுத்துங்கள்.

 சரியான நேரத்துக்குச் சாப்பிடப் பழக்குங்கள்.

 சாப்பிடும்போது தொலைக்காட்சியை அணைத்துவிடுங்கள்.

 கம்ப்யூட்டர் கேம்ஸுக்குப் பதில் சக நண்பர்களுடன் விளையாட ஊக்கப்படுத்துங்கள்.

 பர்கர், பீட்சா போன்ற ஜங்க் உணவுகளின் தீமைகளைப் பற்றிச் சொல்லிப் புரியவையுங்கள். இதுபோன்ற உணவை உட்கொள்ளும்போது சற்று அதிக நேரம் விளையாடவிடுங்கள்.

 தேநீர், காபி, குளிர்பானங்கள் கொடுப்பதைத் தவிர்த்திடுங்கள் அல்லது குறைத்திடுங்கள்.
 

1 comment:

  1. வணக்கம்.
    அருமையான விளக்கமும் சிறப்பான வழி காட்டல் நன்று பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete