Search This Blog

Tuesday, August 05, 2014

பொதிகை மலை குற்றால சீசன்


வழக்கமாக குற்றால சீசன் ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சீசன் தொடங்குவதில் கால தாமதம் ஏற்படுவதும், சீசன் தொடங்காமல் கண்ணாமூச்சி காட்டிப்போவதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த ஆண்டு குற்றால சீசன் கொஞ்சம் காலதாமதமாக ஜூன் 2வது வாரம் தொடங்கி அனைவரின் எதிர்பார்ப்பினையும் பூர்த்தி செய்துள்ளது. கடந்த சில வாரங்களாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தோடு குற்றாலத்துக்கு கார், வேன், பஸ்களில் படையெடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மணிநேரம் அல்ல ஒரு நாள் முழுவதும் குற்றால அருவிகளில் குளித்து மகிழ்ந்தாலும் களைப்பே தெரிவதில்லை. தண்ணீர் மேலிருந்து பொத் பொத்தென்று நம்மேல் விழுந்தாலும் உற்சாகமூட்டும் சுகம் தான் ஏற்படுகிறது. இதை அனுபவித்தால் மட்டுமே உணரமுடியும்.

குற்றாலத்தில் ஒன்பது அருவிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்த்துவரலாம்,
 
பேரருவி: பேரருவி எனப்படும் மெயின் அருவி குற்றாலம் பஸ் நிலையத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது. பேரருவியில் தண்ணீர், வெள்ளிக்கொலுசுகளின் முத்துக்கள் போன்று சடசடவென்று கொட்டுவதைக் காணவே கண்கள் ஆயிரம் வேண்டும்.

உச்சி மலையில் இருந்து வழிந்தோடி வரும் நீர் பால் அருவி, தேனருவி, செண்பகாதேவி அருவிகளைக் கடந்து, ஆபத்தான, அய்யோ நினைத்தாலே அச்ச மூட்டும் பொங்குமாகடலில் விழுந்து தரையை நோக்கிச் சீறிப்பாய்கிறது.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,200 அடி உயரத்திலிருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் பேரருவியின் நீர்த்துவாளைகள் வெண்மேகம் பனித்துளி போன்று சுற்றுலா பயணிகளைப் பன்னீர் தெளித்து வரவேற்கும்.

இந்த அருவியில் கட்டப்பட்டுள்ள ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்தால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருக்கும். அந்தச் சமயங்களில் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்படும்.

சிற்றருவி: மெயின் அருவிக்கு மேலே இருக்கும் சிற்றருவிக்கு மெயின் அருவியிலிருந்துதான் தண்ணீர் வருகிறது. பேரருவியைப் போன்று இங்கும் உற்சாகமாகக் குளித்து மகிழலாம்.

புலியருவி: ஐந்தருவிக்குச் செல்லும் வழியில் புலியருவி வழிந்தோடுகிறது. சிறுவர், சிறுமியர் அச்சமின்றி, ஆட்டம், பாட்டத்துடன் குளித்து மகிழும் இந்த அருவியை ‘சிறுவர் அருவி’ என்பார்கள்.

முன்காலத்தில் அடர்ந்த வனத்துக்குள் குடும்பத்தோடு வாழும் புலிகள் இங்கு வந்து தண்ணீர் குடித்துச் செல்வதால் இந்த அருவிக்குப் புலியருவி எனப் பெயர் வந்ததாம். ஆனால் இப்பவெல்லாம் புலி என்ன எலி கூட வருவதில்லை என்கிறார்கள்.

செண்பகாதேவி அருவி: மெயின் அருவியிலிருந்து சுமார் 600 அடி உயரத்தில் செண்பகாதேவி அருவி உள்ளது. இந்த அருவிக்கு, கற்கள் நிறைந்த கரடு முரடான மலைப்பாதை வழியாகச் சுமார் 2 கி.மீ. தூரம் கால்நடையாக நடந்துதான் செல்ல வேண்டும்.

இந்த அருவியின் தடாகத்தில் ஓவென்ற இரைச்சலுடன் கொட்டும் நீரில் உற்சாகமாகக் குளித்து மகிழலாம். இதில் மிகவும் கவனமாகக் குளிக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அருவிக்கு அருகில் உள்ள செண்பகாதேவி அம்மனையும் தரிசித்துவிட்டு வரலாம்.

தேனருவி: செண்பகாதேவி அருவியின் மேலுள்ள பாறைகளின்மேல், மரங்கள் அடர்ந்த பசுமை சூழ்ந்த வனத்துக்குள் அச்சமூட்டும் வகையில் செல்லும் ஒற்றையடிப்பாதை வழியாகச் சென்றால் தேன் அருவியை அடையலாம்.

இந்த அருவி வழிந்தோடும் பகுதியிலுள்ள பாறைகளில் தேன்கூடுகள் மிகுந்து காணப்படும். தேன்கூடுகள் வழியாக வழிந்தோடி வருவதால் இந்த அருவி தேனருவி என்ற பெயரைப் பெற்றது. பாதுகாப்பு கருதி இந்த அருவிக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாலருவி: அகத்திய முனிவரால் அடையாளம் காணப்பட்ட பொதிகை மலையின் உச்சியில் தோன்றும் அருவியே பாலருவி. இந்த அருவியில் தண்ணீரானது வெள்ளை வெளேரென்று பால் போன்ற நிறத்தில் உருவாகிக் கொட்டுவதால் இது பாலருவியானது.

ஐந்தருவி: குற்றாலம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளதுதான் ஐந்தருவி. மலையில் தவழ்ந்து, தரையை நோக்கிப் பாய்ந்தோடி வரும் நீர் ஐந்து கிளைகளாகப் பிரிந்து கொட்டுவதால் இது ஐந்தருவி எனப்படுகிறது. ஐந்தருவியின் மூன்று கிளைகளில் ஆண்களும், இரண்டு கிளைகளில் பெண்களும் குளிக்க இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பழத்தோட்ட அருவி: ஐந்தருவியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த அருவி பழ மரங்கள் நிறைந்த வனத்துக்குள்ளிருந்து பாய்ந்துவரும் வேளையில் பழங்களை அடித்து இழுத்து வருவதால் இதற்கு இந்தப் பெயர். இந்த அருவியில் குளிக்க வி.ஐ.பி.க்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதில் கொஞ்சமல்ல நிறைய வருத்தம் சுற்றுலாப் பயணிகளுக்கு.

பழைய குற்றால அருவி: குற்றாலத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் கடையம் செல்லும் வழியில் இருக்கிறது பழைய குற்றால அருவி. முதன்முதலாக இந்த அருவி தான் குற்றால அருவியாக இருந்து, பழையதாக மாறிவிட்டதால் இதற்கு இந்தப் பெயர்.

வெயில் இன்றி கருமேகமூட்டத்துடன் காட்சி அளிக்கும் வானம், கார் மேகத்துடன் உறவாடும் உயரமான மரங்கள், மூலிகைச் செடிகளுடன் கலந்து வீசும் சுகாந்த காற்று, ஆங்காங்கே வித்தியாசமான குரல் கொடுத்து அழைக்கும் அரிய வகைப் பறவைகள் என இயற்கை கொஞ்சி விளையாடும் இந்த அருவிகளில் குளிப்பது எதற்குமே ஈடாகாது.



 

No comments:

Post a Comment