Search This Blog

Wednesday, August 13, 2014

சாலையோரக் கடைகளில் சாப்பிடலாமா?


இன்றைய மாணவர்கள் வகுப்பு இடைவேளைகளிலும் சரி, பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும்போதும் சரி, சிற்றுண்டி மற்றும் குளிர்பானங்களைக் குடிப்பதற்காகச் சாலையோரக் கடைகளை மொய்க்கின்றனர். இந்தப் பழக்கம் ஆரோக்கியத்துக்கு ஆபத்து தருகிறது என்று எச்சரித்துள்ளது, உலக சுகாதார நிறுவனம்.

இந்தியாவில் அதிக அளவுக்கு டைபாய்டு காய்ச்சல், மஞ்சள்காமாலை, வயிற்றுப்போக்கு, காலரா, வாந்தி பேதி, சீதபேதி போன்ற தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கு சுத்தமும் சுகாதாரமும் குறைந்துள்ள சாலையோர உணவகங்களில் மக்கள் சாப்பிடுவதுதான் முக்கியக் காரணம் என்று அந்த நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.  

தள்ளு வண்டிகளில் உணவு வியாபாரம் செய்வோர் சமைத்த உணவுகளை மூடிப் பாதுகாப்பதில்லை; நுகர்வோரைக் கவர்வதற்காகத் திறந்த பாத்திரங்களில்தான் உணவுகளை வைத்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக மீன், இறைச்சி போன்றவற்றைப் பல துண்டுகளாக்கி, அவற்றில் மசாலாவைத் தடவி, சிவப்பு நிறத்தில் ஒரு செயற்கை நிறமூட்டியைப் பூசி, எண்ணெயில் வறுப்பதற்குத் தயாராக வைத்திருப்பார்கள். அப்போதுதான் அவர்கள் வியாபாரம் சூடு பிடிக்கும். அதேநேரத்தில் சாலைகளில் கிளம்பும் புழுதியும், வாகனங்கள் கக்கும் புகையும், மாசு நிறைந்த காற்றும் இந்த உணவுகளில் பட்டுப் புதைந்து, நச்சுக்கிருமிகளைத் தந்துவிடும். இவற்றில் ஈக்கள் மொய்க்கும். இது தொற்றுநோய்களுக்கு வழிவிடும்.

அடுத்து இந்த உணவகங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் தரம் குறைந்தவை; கலப்படம் மிகுந்தவை. உதாரணமாக, இவர்கள் சமையலுக்கு ஆகும் செலவைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, தேங்காய் எண்ணெயையும் அரிசித் தவிட்டிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயையும் கலந்து இறைச்சியை வறுக்கவும் பொரிக்கவும் பயன்படுத்துகிறார்கள். நெய்க்குப் பதிலாக டால்டாவையும், நல்லெண்ணெய்க்குப் பதிலாக பாமாயிலையும் பயன்படுத்துகிறார்கள். இவற்றில் ‘எல்.டி.எல்.’ எனும் கெட்ட கொழுப்பு அதிகம். இதன் காரணமாக சாலையோர உணவகங்களில் அடிக்கடி சாப்பிடுவோருக்கு உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் இளம் வயதிலேயே ஏற்படுகிற வாய்ப்பு பத்து மடங்கு அதிகரிக்கிறது என்று ‘இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம்’ ஒரு புள்ளிவிவரம் தந்துள்ளது.

இன்னொன்று, இம்மாதிரி உணவகங்களில் சமையல் எண்ணெயைச் சிக்கனப்படுத்துவதற்காக, ஏற்கெனவே பயன்படுத்திய எண்ணெயைத் திரும்பத் திரும்பக் கொதிக்க வைத்து உணவு தயாரிப்பார்கள்; பலகாரம் சுடுவார்கள். இதில் மிகப்பெரிய ஆபத்து உள்ளது. எண்ணெயைத் திரும்பத் திரும்பக் கொதிக்க வைக்கும்போது ‘டிரான்ஸ் கொழுப்பு அமிலம்’ உற்பத்தியாகிறது. இது தான் இருக்கிற கொழுப்புகளிலேயே மிகவும் கொடூரமானது. இதயத்தமனிக் குழாய்களை நேரடியாகவும் விரைவாகவும் அடைத்து, மாரடைப்பை உடனடியாக வரவழைக்கும் ஆபத்து நிறைந்தது.  

மேலும், இனிப்புப் பண்டங்களின் சுவையைக் கூட்டவும், அவற்றைக் கவர்ச்சிகரமாகக் காட்டவும் ‘தேசிய உணவு மற்றும் மருந்துத் தரக்கட்டுப்பாட்டுத் துறை’ அனுமதிக்காத செயற்கை நிறமூட்டிகளையும், தரமில்லாத எசன்ஸ், அஜினோமோட்டோ போன்றவற்றையும் கலப்பதுண்டு. இந்த வேதிப் பொருள்கள் கலந்த உணவைச் சாப்பிடும்போது அஜீரணம், வயிற்றுப்போக்கில் தொடங்கி, இரைப்பை, குடல், கணையப் புற்றுநோய் வரும் வாய்ப்பும் உண்டு.

ஆகவே, வீட்டில் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் சிற்றுண்டிகளையும் பள்ளிக்கு எடுத்துச் சென்று சாப்பிடுவதே ஆரோக்கியத்துக்குப் பாதுகாப்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

டாக்டர் கு.கணேசன்

2 comments:

  1. வணக்கம்
    சரியான விழிப்புணர்வுப்பதிவு பகிர்வுக்கு நன்றி
    என்பக்கம் கவிதையாக
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இதயத்தை திருடியது நீதானே.....:      

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete